இதயம் 9.1

இதயம் 9:

பன்னீரை தூவுதே
ஒரு பார்வை…
விண்மீனை தூவுதே
ஒரு பார்வை…

ரிஷியை அங்கு எதிர்பாராத மலரும் ஒரு கணம் திகைத்துத்தான் நின்றுவிட்டாள். ஆனால், அடுத்த நொடியே சுதாரித்தவள், “ரிஷி சார், இது உங்களோட கம்பெனியா எனக்கு தெரியாது சார். உங்க கம்பெனிலயே வேலை இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, நான் நேரா உங்ககிட்டயே கேட்டு இருப்பேன் சார்,” என்று மகிழ்வுடன் கூற,

“நீ இங்க என்ன பண்ற மலர்? அதுவும் ஸ்வீப்பிங் டியூட்டி யூனிஃபார்ம் போட்டுட்டு?” என்று ரிஷி அதிர்ச்சியைத் தாங்கிய குரலில் வினவினான்.

“நான் இங்க வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகுது சார். நீங்கதான் எனக்கு வேலைக்கு சேர லெட்டர் சைன் பண்ணிக் கொடுத்தீங்க,” என்று மலர் கூற, ரிஷி போன வாரம் தன் கையெழுத்திட்ட பணி நியமன ஆணையை நினைவுகூர்ந்தான்.

அதில் பெயர் கருணைமலர் என்று போடப்பட்டிருந்ததை நினைவுபடுத்தியவன், “ஆஃபர் லெட்டர்ல நேம் கருணைமலர்னு இருந்துச்சே?” என்று சந்தேகத்துடன் வினவினான்.

“ரிஷி சார், என்னோட பேருதான் கருணை மலர். நான் உங்ககிட்ட ஸ்டார்டிங்ல சொன்னேனே! மறந்துட்டீங்களா?” என்று மலர் புரியாமல் கேட்க, ரிஷி அவள் முதல்நாள் பெயர் கூறியதை நினைவுகூர முயற்சித்தான். ஆனால், முடியவில்லை.

அதனை ஒதுக்கித்தள்ளியவன், “நீ எதுக்கு ஸ்வீப்பிங் டியூட்டி பாக்குற?” என்று வினாவைத் தொடுக்க,

“இந்த வேலைக்குத்தானே சார் சேர்ந்திருக்கேன். அப்போ இதைத்தான் பாக்கணும்,” என்று மலர் பதில்மொழிந்தாள்.

“ஸ்வீப்பிங் டியூட்டி படிக்காதவங்களுக்கு. நீதான் டிகிரி கம்ப்ளீட் பண்ணி இருக்கியே?” என்று ரிஷி ஐயத்துடன் கேட்க,

“டிகிரி முடிச்சிட்டேன்தான் சார். ஆனா, எனக்கு வேற எந்த வேலையும் கிடைக்கல. நான் நிறைய இடத்துல கேட்டு பார்த்தேன் சார். அதுக்கப்புறம்தான் கிடைக்கிற வேலைக்கு போகலாம்னு இங்க வந்து சேர்ந்துட்டேன்,” என்று விளக்கம் அளித்தாள்.

“இப்பத்தானே காலேஜ் முடிச்ச? பிப்டீன் டேஸ் தேடிட்டு கிடைக்கலைன்னு ஸ்வீப்பிங் டியூட்டிக்கு வந்துருவியா?” என்று ரிஷி கோபமாக கேட்க,

“இன்னும் ஒரு மாசம் போனாலும் எவனும் எனக்கு வேலை கொடுப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை, ரிஷி சார். அதுவும் பதினைஞ்சாயிரம் சம்பளம் ஸ்டார்டிங்லே கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் சார்,” என்று மலர் பதில்மொழிந்தாள்.

“சம்பளம் கொடுத்தா யோசிக்காம ஸ்வீப்பிங் வேலைக்கு வந்திடுவியா? படிப்புக்கேத்த வேலைக்கு போகணும்ன்ற ஐடியா இல்லையா?” என்று ரிஷி விடாது வினா எழுப்ப,

“எல்லாமே வேலைதானே, ரிஷி சார். எனக்கு காசு தேவைப்படுது; அதான் வேலைக்கு வந்தேன். இன்னும் கொஞ்சம் வருஷம் இங்கயே கண்டினியூ பண்ணலாம்னு இருக்கேன்,” என்று அலட்டாது பதில் அளித்தாள்.

“லைஃப்ல டெவலப் ஆகணும்ன்ற ஐடியாவே இல்லையா? இந்த ஸ்வீப்பிங் டியூட்டிலேயே செட்டில் ஆகப் போறியா?” என்று ரிஷி லேசான எரிச்சலுடன் கேட்க,

“ஐயோ சார்! இங்கேயே செட்டில் ஆகுற ஐடியாலாம் இல்ல. இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம்தான் சார். என் தம்பியும் தங்கச்சியும் படிச்சு முடிச்சுட்டாங்கன்னா, எனக்கேத்த மாதிரி ஒரு மளிகைக் கடைக்காரனையோ, கறிக்கடைக்காரனையோ பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடுவேன்,” என்றவளது பதிலில் அவனுக்கு சலிப்பானது.

சில நிமிடங்கள் சிந்தித்தவன், பின், “மலர், உனக்கு சிஸ்டம் ஒர்க் பார்க்க தெரியுமா?” என்று வினாவைத் தொடுக்க,

“தெரியும் சார். என் காலேஜ்ல CLP கிளாஸ்ல சொல்லிக் கொடுத்திருக்காங்க,” என்று ஆர்வமாக பதில் இயம்பினாள்.

“ஓகே. அப்ப இன்ஷூரன்ஸ் டீம்ல வேக்கன்சி இருக்கு. உன்ன அங்க போடுறேன். நீ ஜாயின் பண்ணிக்கோ,” என்று ரிஷி மொழிய,

“ஐயோ சார்! எனக்கு அந்த வேலையெல்லாம் தெரியாதே,” என்று பதறினாள் மலர்.

“எல்லாரும் எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு வேலைக்கு வர்றதில்ல, மலர். உனக்கு இங்க சொல்லிக் கொடுப்பாங்க. நீ இன்ஷூரன்ஸ் டீம்ல நாளையிலிருந்து ஜாயின் பண்ற,” என்று ரிஷி கட்டளையிட,

“சரிங்க சார்,” என்று அரை மனதாக தலையசைத்தாள்.

ஆனால், மனதிற்குள் சிறிதான பயம் இருந்தது. தன்னால் அந்த வேலையெல்லாம் செய்ய முடியுமா? அப்படி தனக்கு அந்த வேலை சரியாக வரவில்லை என்றால், வேலையை விட்டு அனுப்பிவிடுவார்களோ என்று வேறு எண்ணம் எழுந்தது.

ரிஷி தனது அலைபேசியில் அலுவலக உதவியாளரை அழைத்து, மலரை காப்பீட்டுக் குழுவில் போடுவதற்கான ஏற்பாட்டை செய்யக் கூறினான்.

மேலும், ஒருவரை அழைத்து மலருக்கு ஒரு மாதம் வேலை கற்றுத்தரக் கூறியிருந்தான். இவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மலர்.

அவர்கள் இருவரும் அகன்றதும், ரிஷியிடம் மெல்லிய குரலில், “சார்… ஒரு வேலை எனக்கு அந்த வேலை செய்ய வரலைன்னா, வேலையை விட்டு அனுப்பிட மாட்டீங்களே?” என்று கவலை அப்பிய குரலில் வினவிட,

“நீ பஸ்ட் போய் ஜாயின் பண்ணு. உனக்கு வேலை சொல்லித்தர ஆள் இருக்காங்க. அதுக்கு முன்னாடியே இப்படி நெகட்டிவா பேசாத,” என்று அவளது வாயை அடைத்துவிட்டான்.

மேலும் சில நொடிகள் அமைதியாகக் கழிய,

“சார்… ஒரு வாரம் கூட்டி தொடைக்கிற வேலை பார்த்துட்டு, திடீர்னு ஆபீஸ் ஒர்க்ல ஜாயின் பண்ணா, இங்க இருக்கறவங்க எல்லாம் என்ன வித்தியாசமா பார்க்க மாட்டாங்களா? ஏதாவது கேட்டா, நான் என்ன பதில் சொல்றது?” என்று வருத்தம் இழையோடிய குரலில் மொழிய,

“அதெல்லாம் யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க,” என்றவன், “உனக்கு இன்ஷூரன்ஸ் டீம்லதான் வேலை. உனக்கு இந்த வேலை செய்ய பிடிக்கலன்னா, you can leave now,” என்றவன் சலனமின்றி அவளை கண்டான்.

“இல்ல சார்… அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நான் இந்த வேலையை பார்க்கிறேன்,” என்றவள் முயன்று வருவித்த புன்னகையுடன் கூற,

அவளுடைய பணி நியமன ஆணை வந்தது.

ரிஷி அதனை வாங்கி கையெழுத்திட்டு, பின், “ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் படிச்சு பாத்துட்டு சைன் பண்ணு, மலர்,” என்று அவரிடம் நீட்டினான்.

சுத்தம் செய்யும் வேலைக்கு இதுபோன்ற எந்த விதிமுறைகளும் இல்லை. ஆதலால், எதையும் வாசிக்காமல் கையெழுத்து போட்டுவிட்டாள். ஆனால், இப்போது நிறைய விதிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வாங்கி ஒருமுறை வாசித்தால், பாதிக்குப் பாதி புரியவில்லை.

மலருக்கு பள்ளிக் காலத்தில் இருந்தே ஆங்கிலம் கொஞ்சம் தடுமாற்றம்தான். அதுவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது நல்ல ஆங்கிலத்தில் இருக்க, மீண்டும் ஒருமுறை வாசித்தாள். இருந்தும் பாதிதான் புரிந்தது.

நிமிர்ந்து அவனைப் பாவமாக நோக்கியவள், “எனக்கு இதுல இருக்கிறது பாதிதான் புரியுது சார்,” என்று கூற,

பெருவிரலால் தனது நெற்றியை கீறியவன், அவளிடம் இருந்த பணி ஆணையை வாங்கி ஓரமாய் வைத்துவிட்டு, தனது நிறுவனத்தின் விதிமுறைகளை விளக்கினான்.

தலையை அசைத்து மிகக் கவனமாய் கேட்டுக்கொண்டவள், “சரிங்க சார், கையெழுத்து போடுறேன்,” என்று அந்தக் கடிதத்தில் கையெழுத்து போட்டவள், அப்போதுதான் அவளது ஊதியத்தை கவனித்தாள்.

மாதம் இருபதாயிரம் சம்பளம் என்று போடப்பட்டிருக்க, “இருபதாயிரமா?” என்று அவளது விழிகள் பெரிதாய் விரிந்துகொண்டது.

“நெஜமாவே இருபதாயிரம் சம்பளம் தருவீங்களா, ரிஷி சார்?” என்று ஆச்சரியக் குரலில் அவனை காண,

அவனது தலை ஆமாம் எனும் விதமாய் அசைந்தது.

அதில் எதிரில் இருந்தவளது முகத்தில் மத்தாப்பாய் புன்னகை பூக்க, “ரொம்ப தாங்க்ஸ் ரிஷி சார். இவ்வளவு சம்பளம் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலை சார். கண்டிப்பா வேலையை கத்துக்கிட்டு நல்லா செய்றேன் சார்,” என்று ஆர்ப்பரித்தாள்.

ரிஷி, “தட்ஸ் குட்,” என்று முடித்துவிட, மலர் மறுநாள் வந்து பணிக்கு சேர்வதாக முடிவு செய்யப்பட்டது.

மலருக்கு அலுவலக வேலை கிடைத்ததில் அவளது குடும்பத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் துப்புரவு வேலைக்கு செல்வதில் துளியும் உடன்பாடு இல்லாதவர்களுக்கு இந்த விடயம் வெகுவாய் நிம்மதியைத் தந்தது.

மறுநாள் மலர் அலுவலக வேலைக்கு சேர்ந்துகொள்ள, பலர் வித்தியாசமாக பார்த்தாலும் யாரும் எதுவும் நேரடியாக கேட்டுக்கொள்ளவில்லை. மல்லிகாவிற்கு விடயம் தெரிந்ததும் அவளும் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். படித்த பெண் தன்னுடன் துப்புரவுப் பணிக்கு வருகிறாள் என்று மல்லிகாவிற்கும் மன வருத்தம் இருந்தது.

error: Content is protected !!
Scroll to Top