இதயம் 8.2

“இப்போதைக்கு அந்த வீட்ல மட்டும்தான் ஆள் கேக்குறாங்க, மலர். வேற எங்கேயும் ஆள் தேவைப்படல…” என்று தேவி பதில் கூற,

“வேற ஏதாவது கம்பெனில கூட்டிப் பெருக்கிற வேலை, சுத்தம் பண்ற வேலை எதுவும் கிடைக்காதா, க்கா?” என்று மலர் வினவினாள்.

“ஒரு கம்பெனியில கூட்டிப் பெருக்கி, கழுவிவிடுற வேலைக்கு ஆள் கேட்டு இருக்காங்க, மலரு. ஆனா, நீ காலேஜ் எல்லாம் போய் படிச்சிட்டு வந்து இருக்க. அந்த வேலையை எப்படி பார்ப்ப?” என்று தேவி தயங்க, “அக்கா, நான் காலேஜ் எல்லாம் சும்மா பேருக்குத்தான் போய் படிச்சிட்டு வந்தேன். சம்பளம் கொடுத்தா எந்த வேலைன்னாலும் பார்ப்பேன், அக்கா. அந்த வேலைக்கு என்னை சேர்த்து விடுக்கா. ப்ளீஸ், க்கா…” என்று மலர் வேண்டினாள்.

“ஒன்னுக்கு ரெண்டு தடவை யோசிச்சு சொல்லு, மலர்…” என்று தேவி கூற, “இதுல யோசிக்க எதுவுமே இல்ல, க்கா. இன்னும் நாலு மாசத்துல முரளி ஸ்கூல் முடிச்சிடுவான். அவன காலேஜ்ல சேர்க்க காசு வேணும், க்கா. அதுவும் அவன் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படுறான். கவர்மெண்ட் காலேஜ்ல கிடைச்சா ஓகே. இல்ல, பிரைவேட்ல கிடைச்சா கண்டிப்பா ஒரு லட்சம் கிட்ட கட்ட வேண்டியது வரும், க்கா. அதான் இப்ப இருந்தே காசு சேர்த்து வைக்கணும்னு வேலை தேடுறேன்…” என்று மலர் தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

“அதான் கடன் எல்லாம் அடைச்சிட்டேன்னு சொன்னியே, மலரு. மீன் வியாபாரத்திலிருந்து காசு பெருசா வர்றது இல்லையா?” என்று தேவி கேள்வி தொடுக்க, “அதுல ஓரளவுக்கு வருமானம் வருதுதான், க்கா. இருந்தாலும் லட்சக்கணக்குல கட்டணும்னா, கொஞ்சம் முன்னாடியே சேர்த்து வைக்கணும்ல்ல. அவ்வளவு பெரிய அமௌன்டை கடனா கொடுக்கக்கூட நமக்கு யாரும் இல்லை…” என்று மலர் விளக்கினாள்.

“அதுவும் சரிதான், மலரு. நம்மள நம்பி அவ்வளவு காசு எல்லாம் யார் கொடுப்பா? நம்மளே சேர்த்து வச்சாத்தான் உண்டு…” என்றவள், “சரி, நான் என் நாத்தனார் கிட்ட பேசிட்டு சொல்றேன். அவங்கதான் அந்த கம்பெனியில வேலை பாக்குறாங்க. என்கிட்ட வந்து கேட்டாங்க. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வீட்ல வேற வேலை பார்க்கணும்ல, எனக்கு ஒத்து வராதுன்னு சொல்லிட்டேன். நான் பேசிட்டு உன் கிட்ட சொல்றேன், மலர்…” என்று தேவி அழைப்பைத் துண்டித்தார்.

தேவியிடம் பேசிய பிறகு மலருக்கு புதிதான நம்பிக்கை பிறந்தது. கண்டிப்பாக தனக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்று நம்பினாள். அப்படி கிடைத்துவிட்டால், இன்னும் நான்கு மாதத்தில் முரளிக்குக் கல்லூரியில் கட்ட வேண்டிய கட்டணத்தை சேர்த்து வைத்துவிடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போட்டாள்.

மலர் எதிர்பார்த்தது போலவே அன்று இரவே தேவியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. மறுநாள் தனது நாத்தனாருடன் அவள் வேலை பார்க்கும் நிறுவனத்திற்குச் சென்று நேரில் பேசக் கூறினாள். அங்கு காலிப் பணியிடம் உள்ளது, நிச்சயமாக மலரை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கையாகக் கூற, மலருக்கு பதினைந்து நாட்களாய் அவளை அரித்துக்கொண்டிருந்த கவலை நீங்கியது.

மறுநாள் ரிஷியின் வீட்டில் வேலையை முடித்துவிட்டு, தேவியின் நாத்தனார் மல்லிகாவுடன் அவள் பணிபுரியும் நிறுவனத்திற்குச் சென்றாள். அந்த நிறுவனமும் அண்ணா நகரின் பிரதான சாலையில்தான் இருந்தது.

தன் முன்னே உயர்ந்து நின்ற கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தவள், “மல்லியக்கா, இந்த பில்டிங் என்ன இவ்ளோ பெருசா இருக்கு?” என்று ஆச்சரியமாய் கேட்டாள்.

“உள்ள போய்ப் பார்த்தா இன்னும் பெருசா இருக்கும், மலரே. இது ஒரு கார் விக்கிற கம்பெனி. இங்க நிறைய பேர் வேலை பாக்குறாங்க. கிட்டத்தட்ட முந்நூறு பேர் இருப்பாங்க, வேலை பாக்குறவங்க மட்டும்…” என்று மல்லிகா கூற,

“அவ்வளவு பேர் வேலை பார்ப்பாங்களா, க்கா?” என்று ஆச்சரியமாய் மலர் பதில் வினவினாள்.

“ஆமா, மலரு. மூணு ப்ளோர் இருக்கு. அதைக் கூட்டிப் பெருக்கி துடைக்கிறதுதான் நம்ம வேலை. காலையில் பத்து மணிக்கு வந்தா, சாயந்திரம் ஆறு மணிக்கு கரெக்டா விட்ருவாங்க. நான் வீட்டு வேலை எல்லாம் விட்டுட்டு இங்க வந்ததுக்கு காரணம் இந்த டைமிங், அப்புறம் சம்பளம்தான். பதினைஞ்சாயிரம் சம்பளம் தராங்க, மலரே. நம்ம ரெண்டு வீட்ல வேலை பார்த்தா கூட இவ்வளவு சம்பளம் கிடைக்காது…” என்று மல்லிகா கூற, “அவ்வளவு சம்பளம் தருவாங்களா, க்கா?” என்று மலர் வியப்பு நீங்காது வினா தொடுத்தாள்.

“கொடுப்பாங்க, மலரு. ஓனர் சாரு ரொம்ப நல்லவரு. அவர் பேரு ஆர்.கே. அவருக்கு இது மாதிரி இன்னும் நாலஞ்சு கம்பெனி இருக்காம். அதெல்லாம் அவங்க வீட்ல இருக்க மத்தவங்க பாத்துக்கிறாங்க போல. இதை இவர் பாத்துக்குறாரு. இந்த ஜி.எம்., மேனேஜர் கூட அப்பப்ப சிடுசிடுன்னு பேசுவானுங்க. ஆனா, ஆர்.கே. சார் ஒரு தடவை கூட எங்ககிட்ட கோவமா பேசினதில்லை. அவ்வளவு நல்ல மனுஷன்…” என்று மல்லிகா முதலாளியைப் புகழ்ந்து கூற,
“அப்போ கண்டிப்பா எனக்கு இங்க வேலை கிடைச்சிரும்ல, க்கா?” என்று மலர் நம்பிக்கையுடன் கேட்டாள்.

“நிச்சயமா கிடைக்கும், மலரே. ஹெச்.ஆர். போன வாரமே என்கிட்ட சொல்லி வச்சாங்க, ஒரு ஆள் வேணும்னு. நானும் நேத்தே அவங்க கிட்ட பேசிட்டேன். அவங்க கூட்டிட்டு வர சொன்னதுனாலதான் உன்னை அழைச்சிட்டு போறேன்…” என்றவள், மலருடன் உள்ளே நுழைந்தாள்.

நுழைந்ததும் குளிர்காற்று சிலுசிலுவென மேனியைத் தழுவிச் செல்ல, “வெயிலுக்கு நல்ல குளுகுளுன்னு இருக்கு, க்கா…” என்று மலர் அந்த நிறுவனத்தை விழிகளால் அளந்தபடி கூறினாள்.

மல்லிகா அங்கிருந்த வரவேற்பாளியிடம் மலர் வந்த காரணத்தைக் கூறி, அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

“மலரு, நீ இங்கேயே உட்கார்ந்திரு. நான் போய் ஹெச்.ஆர். மேடம் கிட்ட பேசிட்டு வரேன்…” என்று மல்லிகா அவளுக்கு ஒரு நாற்காலியைக் காண்பித்துவிட்டு அகன்றாள்.

‘இந்த வேலை நல்ல வேலையா இருக்கும் போல. கடவுளே, எனக்கு கண்டிப்பா கிடைக்கணும்…’ என்று மனதிற்குள் வேண்டியபடி மலர் அமர்ந்திருக்க, “மலரு, உன்னை ஹெச்.ஆர். பார்க்கணும்னு சொன்னாங்க. வா…” என்று அழைத்துப் போனாள் மல்லிகா.

உள்ளே நுழைந்ததும் மலர் எதிரில் இருந்த பெண்மணியிடம், “வணக்கம், மேடம்…” என்று மரியாதை நிமித்தமாகக் கூற, எதிரில் இருந்தவர் புன்னகையுடன் மலரை அமரக் கூறினார்.

பின் அவளிடம் வழக்கமாகக் கேட்பது போல, அவளைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துவிட்டு, அவளுக்கு வேலை கிடைத்துவிட்டதை உறுதி செய்தார்.

அதனை அவர் கூறியதும்தான் மலரின் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி மலர்ந்தது.

‘இப்போதைக்கு ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்தது…’ என ஆசுவாசம் பிறந்தது. அவரிடம் நன்றி கூறி வெளியே வந்தவள், மல்லிகாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“ரொம்ப நன்றி, மல்லிக்கா. நீங்க மட்டும் உதவி செயலைனா இந்த வேலை எனக்கு கிடைச்சிருக்காது…” என்று மனமுவந்து நன்றி கூற,

“அட, இதுல என்ன இருக்கு, மலரே? வேலைக்கு ஆள் கேட்டாங்க. நான் கூட்டிட்டு வந்தேன். அவ்வளவுதான். சரி வா, உனக்கு யூனிபார்ம் வாங்கித் தரேன்…” என்று மல்லிகா மலரை அழைத்துச் சென்றாள்.

மலருக்கு அவளது அளவிற்கு ஏற்றது போல சீருடை வழங்கப்பட, அதனைப் பெற்றுக்கொண்டதும் பணி நியமன ஆணையும் வந்தது. அதில் கையெழுத்து இட்டவள், “நாளைக்கு காலையில வந்து வேலையில சேர்ந்துக்கிறேன்…” என்று கூறி வீடு வந்து சேர்ந்தாள்.

மலருக்கு வேலை கிடைத்ததில் வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், படித்து முடித்த பிறகும் அவள் சுத்தம் செய்யும் வேலைக்குச் செல்வதில் சிறிதளவும் உடன்பாடு இல்லை.

ஆனால் மலர்தான், “இப்போதைக்கு வேலை கிடைத்ததே பெரிய விஷயம். வேற ஏதாவது நல்ல வேலை கிடைத்தால் இதை விட்டுவிட்டு மாறிக்கொள்ளலாம்…” என்று அவர்களை சமாளித்து வைத்தாள்.

அடுத்த நாளிலிருந்து அந்த நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லத் துவங்கினாள் மலர். காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரைதான் வேலை என்பதால், அவளுக்கு நேரம் மிகவும் வசதியாக இருந்தது. இது ஓரளவிற்கு கல்லூரி நேரத்திற்கு ஒத்துப்போவதால், முன்புபோலவே வாழ்க்கை அமைதியாகச் சென்றது.

மலர் பணிக்குச் சேர்ந்து அன்றோடு ஒரு வாரம் முடிந்திருந்தது. காலை வந்ததும் மல்லிகாவுடன் சுத்தம் செய்யும் வேலையைச் செய்யத் துவங்கினாள். அப்போது அங்கு மேற்பார்வை செய்பவர் வந்து, மலரிடம் முதலாளியின் அறையை சுத்தம் செய்துவிட்டு வரக் கூற, சரியென தலையசைத்தவள் அவரது அறையை நோக்கிச் சென்றாள்.

வெளியே நின்று, “உள்ள வரலாமா, சார்?” என்று மலர் அனுமதி வேண்ட, சில கோப்புகளை கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டிருந்த ரிஷி நிமிர்ந்தான்.

தன்னிடம் அனுமதி வேண்டிய குரல் மிகவும் பரிச்சயமாக உள்ளதை உணர்ந்தவன், “எஸ்… கம் இன்…” என்று அனுமதி வழங்கினான்.

அடுத்த கணம், கையில் துடைப்பம் மற்றும் வாளியுடன் உள்ளே நுழைந்தாள் மலர்.
தன்னறையில் மலரைக் கண்டதும் ரிஷி திகைத்துப் பார்க்க, அதுவும் அவளது கையில் இருந்த துடைப்பமும், அவள் அணிந்திருந்த சீருடையும் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

error: Content is protected !!
Scroll to Top