இதயம் 8:
வழக்கம்போல பணியை முடித்துவிட்டு கிளம்பும் சமயம், “ரிஷி சார்…” என்றவாறு வந்து நின்றாள் மலர்.
தன் முன்னே இருந்த மடிக்கணினியில் விழிகளைப் பதித்திருந்தவன் நிமிர்ந்து எதிரில் இருந்தவளைக் காண, “எனக்கு ஒரு வாரம் லீவு வேணும், சார்…” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“ஒன் வீக்கா?” என்று புருவம் சுருக்கிய ரிஷி அவளை கேள்வியாய் காண, “ஆமா, சார். எனக்கு செமஸ்டர் எக்ஸாம் வருது. காலையில் எட்டு முப்பதுக்கு எக்ஸாம் ஹாலுக்குள்ள இருக்கணும். அதான், சார்…” என்று மெதுவாய் அவனது முகம் கண்டாள்.
“ஓகே, எடுத்துக்கோ…” என்றவன் எளிதாக முடித்துவிட, “காலையில மட்டும் தான், சார், வர முடியாது. நைட் வழக்கம் போல வந்து சமைச்சு வச்சுருவேன்…” என்று மலர் பதில்மொழிந்தாள்.
“நோ நீட். நான் பாத்துக்குறேன்…” என்று ரிஷி மறுக்க, “இல்ல, சார். ஆல்ரெடி எல்லாமே படிச்சு வச்சுட்டேன். நான் வந்து சமைத்து வச்சுட்டு போறேன்…” என்று மலர் இயம்பினாள்.
“வேண்டாம்னு சொன்னேன், மலர்…” என்று ரிஷி அழுத்தமாகக் கூற,
“இல்ல, சார். ஒரு வாரம் லீவு ரொம்ப அதிகம். வாங்குற சம்பளத்துக்கு சரியா வேலை பார்க்கணுமே. மறுக்காதீங்க, ப்ளீஸ்…” என்று கெஞ்சலுடன் அவனை நோக்கினாள்.
ஒரு சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு, ரிஷி சம்மதமாய் தலையசைக்க, இவளது முகத்தில் நிம்மதி படர்ந்தது.
“ரொம்ப தேங்க்ஸ், சார். திங்கள் டு வெள்ளி அஞ்சு நாள் எக்ஸாம், சார். அதுவரைக்கும் காலையில வர முடியாது. சனிக்கிழமையிலிருந்து வழக்கம் போல வர ஆரம்பிச்சிடுவேன், சார்…” என்றவள் அவனிடம் விடைபெற்று கிளம்பினாள்.
தன்னுடைய வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவளை, ‘இன்னும் பத்து நாட்களில் கல்லூரி முடிந்துவிடும். அடுத்து என்ன செய்யப் போகிறோம்? எங்கு வேலைக்குச் செல்லப் போகிறோம்?’ என்று பலவாறான சிந்தனைகள் ஆக்கிரமித்தன.
மலருக்கு சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது பெரிதான ஆர்வம் எதுவுமில்லை. அதுவுமின்றி, அவளுக்கு படிப்பு வரவும் இல்லை. முதல் மதிப்பெண் வாங்கும் அளவுக்குப் படிப்பாளி அல்ல. அதற்காக, தேர்வில் தோல்வி பெறுமளவு மந்தமும் இல்லை. தன்னால் முடிந்தளவு படித்து, எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுவிடுவாள்.
இப்போது அவளுக்கு பெரிதான சந்தேகம், தன்னுடைய படிப்பை மதித்து தனக்கு யார் வேலை தருவார்கள் என்பது தான். அதுவும், தான் படித்த விலங்கியல் பிரிவுக்கு என்ன வேலை கிடைக்கும்? எங்கு சென்று தேட வேண்டும்? என்று அவளுக்கு பெரிதான அறிவும் இல்லை.
பள்ளி முடித்ததும், பெற்றோரின் விருப்பத்திற்காகத்தான் கல்லூரியில் சேர்ந்தாள். அவளுக்கு சமையலில்தான் ஆர்வம் இருந்தது. தந்தையைப் போல தானும் சமையல் கலையில் சிறந்து விளங்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாள். தந்தை இருந்தபோது, பேருக்கு ஒரு படிப்பைப் படித்துவிட்டு அவரோடே பணிக்குச் செல்லலாம் என்றுதான் விலங்கியல் பிரிவைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.
ஆனால், இப்போது சூழ்நிலை அப்படி இல்லையே! என்ன செய்வது? பேசாமல் ரிஷியிடம் உதவி கேட்கலாமா? என்று தன் போக்கில் சிந்தித்தவாறு வீட்டை அடைந்தாள்.
ரிஷியின் குடும்பத்தினர் வந்து சென்று கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் கடந்து இருந்தது. மறுநாள் பூஜையில், ராதாவும் தூரிகாவும் சேர்ந்து மலரை எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கிக் கொண்டனர். மலரும், ‘ஒரு நாள் தானே…’ என்று அவர்கள் கூறிய வேலை அனைத்தையும் சிறு சுணக்கமின்றி செய்து முடித்திருந்தாள். அதுவும் ரிஷி உடன் இருந்ததால், அவர்கள் பெரிதாக எதுவும் மலரைக் காயப்படுத்தவில்லை.
அதுவுமின்றி, அந்த பூஜை ரிஷியின் திருமணம் விரைவில் நடக்க வேண்டுமென்று செய்யப்பட்டிருக்க, மலரும் ரிஷிக்காக வேண்டிக் கொண்டு, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தாள்.
அவர்கள் கிளம்பியதும்தான் மலருக்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அதன் பின்னர் நாட்கள் வழக்கம் போல நகர, இவளது இறுதி வருடத் தேர்வும் வந்திருந்தது.
வீட்டிற்குச் சென்றதும் முகம், கை, கால் கழுவியவள், உண்டுவிட்டு படிக்க அமர்ந்தாள். ஏற்கனவே கல்லூரியில் ஓரளவு படித்து முடித்திருந்ததால், மலருக்கு இப்போது சிரமம் ஏதுமில்லை.
ஐந்து நாட்களுக்கு மீன் வியாபாரத்தை மணியைப் பார்த்துக்கொள்ளக் கூறியிருந்தாள். ஏற்கனவே ஒருமுறை மீன் வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டு தேர்விற்குச் சென்றவள், இரவும் படித்துவிட்டு தாமதமாக உறங்கியிருந்தாள். அதன் விளைவு, தேர்வை எழுதவே முடியவில்லை. தூக்கம் விழிகளைச் சுழற்றியது. அதனால்தான் இப்போது இந்த முடிவு.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்தவள், ஒரு மணி நேரம் படித்து முடித்துவிட்டு தேர்விற்குப் புறப்பட்டுச் சென்றாள். தேர்வு முடிந்ததும் வீட்டிற்கு மதியம் போல வந்தவள், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் படிக்கத் துவங்கியவள், சரியாக ஆறு முப்பது மணிக்கு ரிஷியின் வீட்டிற்குக் கிளம்பினாள்.
மனதிற்குள், ‘காலை உணவிற்கு சார் என்ன செஞ்சாரோ? வெளியில வாங்கினாரா? இல்ல, வீட்டிலேயே சமைச்சு சாப்பிட்டாரா?’ என்று சிந்தித்தவாறே சென்றவள், ரிஷிக்கு மாலை வணக்கம் தெரிவித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
காலையில் சமையல் செய்ததற்கான அறிகுறியாக, பாத்திரங்கள் எல்லாம் கழுவி கவிழ்த்துப் பட்டிருந்தது.
‘சாரே சமைச்சு சாப்பிட்டு இருக்காரு போல. சம்பளத்தை வாங்கிட்டு இப்படி அவரையே வேலை பார்க்க விடுறோமே! அவர் வீட்டில சமையல் கட்டு பக்கம் எட்டிக்கூட பார்த்திருக்க மாட்டாரு. ராதா மேடம்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா, அவ்வளவுதான் என்னோட கதி…’ என்று மனதிற்குள் புலம்பியவள், அவனுக்குக் காபியைத் தயாரித்துக் கொடுத்துவிட்டு சமையலைச் செய்யத் துவங்கினாள்.
மளமளவென அனைத்து வேலையும் செய்து முடித்தவள், ரிஷியை உணவுண்ண அழைக்க, அவன் பத்து நிமிடங்கள் கழித்து வருவதாகக் கூறினான். சமையலறையில் இருந்த ஒரு சிறிய முக்காலியை எடுத்துப் போட்டவள், அமர்ந்து புத்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினாள்.
ரிஷி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்ததும் கண்டது, சமையலறையின் ஓரத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த மலரைத்தான்.
ரிஷியைக் கண்டதும் மலர் எழுந்துகொள்ள,
“குக் பண்ணி முடிச்சிட்டல்ல. நீ கிளம்பு, மலர். நான் பாத்துக்குறேன்…” என்று அவள் மறுக்க முடியாத குரலில் ரிஷி கூற, “சரிங்க, சார்…” என்று தலையசைத்தவள், தனது பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
ஐந்து நாட்களும் நல்லபடியாகக் கூடிய மலர், கல்லூரியில் இறுதித் தேர்வை முடித்திருந்தாள். இனி கல்லூரிக்குச் சான்றிதழ்களை வாங்க மட்டும்தான் போக வேண்டும்.
கடந்த மாதமே ஒரு சில இடங்களில் வேலைக்குக் கேட்டிருந்தாள். அருகிலிருந்த பல்பொருள் அங்காடியில் கூட பில் போடுவதற்கான வேலையைக் கேட்டிருந்தாள். அவர்கள் அழைப்பதாகக் கூறி அலைபேசி எண்ணை வாங்கியிருந்தார்கள். ஆனால் யாரும் அழைக்கவில்லை.
அதோ இதோவென்று பதினைந்து நாட்கள் கழிந்திட, மலர் வேலை கேட்டு சென்ற எந்த இடத்திலிருந்தும் அவளுக்கு அழைப்பு வரவில்லை. பலவாறாகச் சிந்தித்து, பெரிய இடங்களில் வேலைக்குச் செல்ல தனக்குத் தகுதி இல்லை. தனக்கு வரும் வேலையைச் செய்யலாம் என்று முடிவு செய்தவள், தங்கள் தெருவில் உள்ளவர்கள், தெரிந்தவர்கள் என அனைவரிடமும் வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்பட்டால் கூறுமாறு சொல்லியிருந்தாள்.
அன்று ரிஷி வீட்டில் எப்போதும் போல தன்னுடைய வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க, அவளது தெருவில் வசிக்கும் தேவியிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க, தேவியக்கா…” என்று மொழிய,
“மலரு, ஒரு வீட்ல சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஆள் கேட்டிருக்காங்க…” என்று மறுமுனையில் இருந்து பதில் வந்தது.
“அப்படியாக்கா? எந்த ஏரியால வேலை?” என்று மலர் வினவ,
“நீ வேலை பாக்குற இடம் பக்கத்துலதான், மலரு. அந்தத் தெருவுலேயே கடைசி வீடு…” என்று தேவி பதில்மொழிந்தார்.
“ஐயோ! அந்த வீடா?” என்று மலர் மெலிதாய் அலறினாள்.
இது கூடத்தில் அமர்ந்திருந்த ரிஷியின் செவியை அடைந்துவிட, திரும்பி அவளைப் பார்த்தான்.
“சாரி, சார்…” என்று அவனிடம் விழிசுருக்கிக் கூறியவள், அலைபேசியில் மெதுவான குரலில்,
“அந்த வீடு வேண்டாம்க்கா. ஏற்கனவே தேனக்கா அங்கதான் வேலை பார்த்தாங்க. அந்த வீட்டம்மா ரொம்ப நொச்சுன்னு சொல்லி இருக்காங்க. அதுவும் இல்லாம, தினமும் வீட்டைப் பெருக்கி தொடைக்கணுமாம். நான் ஏற்கனவே ஒரு வீட்டுல வேலை பார்த்துட்டு இருக்கேன். இங்கேயும் பெருக்கி துடைச்சிட்டு, அங்கேயும் துடைச்சா என் முதுகு உடைஞ்சு போயிடும், க்கா. வேற ஏதாவது நல்ல வேலை இருந்தா சொல்லுங்க, க்கா…” என்று மலர் மொழிந்தாள்.