• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

வேந்தன்... 4

New member
Messages
21
Reaction score
1
Points
3
வேந்தன்… 4

“அக்கா அக்கா. பார்க் போகலாமா? வீட்டுக்குள்ளயே இருக்க போர் அடிக்குது எனக்கு. ப்ளீஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்க்கா” சைத்ராவின் கன்னம் கிள்ளி முத்தமிட்டுக் கொஞ்சினாள் ஆர்த்தி.

“இதுக்கு மட்டும் அக்கா லொக்கான்னு கொஞ்சிகிட்டு தாஜா பண்ணுவாக்கா. இவளை நம்பவே நம்பாதக்கா. ஏமாத்துக்காரி” நளிரா தன் மருதாணி ஓவியத்தில் அழகாய் வளையும் மெல்லிய கோட்டை வேணும்னே தடுக்காட்டிக் கோணலாக்கி விட்ட கோபத்தில் தங்கைகிட்டே சண்டைக்கு நின்றாள்.

நளிராவுக்கு கைகளில் மருதாணி வைப்பது என்பது அத்தனை பிடித்தமானது. இரு கை விரல்களிலும் செந்தாமரை மொக்குகளைப் போல செக்கச் சிவந்தும், உள்ளங்கையில் அக்காவின் கைவண்ணத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் பார்க்கையிலேயே அத்தனை உற்சாகம் உள்ளத்தில் எழும்.

மனம் சோர்வுறும் நேரங்களில் உள்ளங்கைகளை விரித்துப் பார்த்திட, அதிலுள்ள பூக்களும் முயல்களும் உயிர்பெற்று ஓடியாடி விளையாடுவதைப் போலவே அவள் கண்களுக்குத் தென்படும். முகத்தில் பதித்து, மூச்சை இழுத்து சுவாசிக்கும் பொழுது, அதிலிருந்து வரும் நறுமணத்திற்கு ஈடு இணையே இவ்வுலகில் இல்லையென எளிதாக சொல்லிடுவாள் நளிரா.

“ஆமாமா. நீ மட்டும் தங்கக்கட்டியாக்கும். ஐஸ் வச்சு வச்சே காரியம் சாதிக்கிற பிசாசுடி. நடுராத்திரி உலாவும் பேயே. நெளிரா நொளிரா மிளிரா” ஆர்த்தியும் உனக்கு சளைத்தவளா நான்னு சள்ளுன்னு சினந்து நிற்க.

“ஒழுங்கா அக்கான்னு சொல்லுடி. பேர் சொல்லிக் கூப்பிட்டா வாயிலேயே போடுவேன் பாத்துக்க” நளிரா கோபத்தின் உச்சிக்கே போக.

“அமைதியா இருங்களேண்டி. மண்டை உடையுது உங்க கூச்சல்ல” சைத்ரா கத்தும் சப்தம் பெண்களின் காதுகளில் விழவே இல்லை.

வாசலில் அமர்ந்திருந்த தாம்பதிகளுக்கு, வீட்டுக்குள் கேட்ட சப்தத்தில் காதே வலியெடுக்கவும் “ஆம்பளை பையன் வேணும் வேணும்னு இதுங்களை வரிசையா பெத்தாச்சு. எப்பப் பாரு சண்டையே போட்டுக்கிட்டு ஒரே கூச்சலா இருக்கு வீடே. பக்கத்து தெரு கட்டி நம்ம வீட்டுப் பொண்ணுங்களோட சத்தம் கேக்குதுன்னு சொல்லுறாங்க. பொண்ணுங்களை அடக்கி வைக்க முடியலை உங்களுக்கு. நான் பேசினாலும் உங்களுக்கு கோவம் மூக்குக்கு மேல வந்துருது” மலர்விழி கணவரை முறைத்தார்.

“தங்கம் கொஞ்சம் அமைதியா இருங்கம்மா. உங்கம்மா எங்கிட்ட வருத்தப்படுறா” தந்தையாய் அவர் புத்திமதி சொல்ல.

“ஆஹாஹா அருமை போங்க. உங்ககிட்டப் போய் மகள்களை மிரட்டி வைக்கச் சொல்றேன் பாருங்க என்னைய சொல்லணும். இதுக்கு நானே அவங்ககிட்ட கத்திச் சொல்லியிருப்பேன்” மலர்விழி கணவரை மேலும் கீழும் பார்த்தார்.

“எனக்குந்தான் அவங்க சத்தம் காதைப் பிளக்குது. ஆனா காதுல வாங்கிட்டேனா? சின்னப்பிள்ளைங்க அப்படித்தான், நம்ம வீட்டுல இருக்க வரைக்கும் சுதந்திரமா இருக்கட்டுமே” அவர் மகள்களுக்கு பரிந்து பேச.

“அம்மா இந்தக் குட்டிபிசாசை பாரும்மா” நளிராவின் கூச்சலில் மலர்விழியின் ரத்த அழுத்தம் எகிற.

“நளிராப்பொண்ணு வீட்டுக்கு வெளியதான் சமர்த்து. இவ போடுற ஆட்டத்தை வெளிய சொன்னா யாரும் நம்பவே மாட்டிங்குறாங்க” பெருமையாக சலித்தவர்.

“இப்ப நா வரட்டுமா? இல்ல நீங்களே இங்க வரீங்களாடி?” ஒரு நொடியில் கூச்சல் அடங்க, பெண்கள் மூவரும் தாயிடம் வந்தார்கள்.

“அம்மாகிட்ட போய் நீ பண்ணிவச்ச வேலையை சொல்லி வைக்கறேன் இருடி” ஆர்த்தியை நிப்பாட்டிட்டு நளிரா ஓடிவர, அவளுக்கு முன் ஆர்த்தி தாயைக் கட்டிக்கொண்டாள்.

செல்லச் சண்டைகளுக்கு நடுவே மூவரின் கைகளும் காய்ந்து போயிருக்க,

அவர்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும் பொருட்டு, “கையைக் கழுவிட்டு வாங்க. எப்படி சிவந்திருக்குன்னு பார்ப்போம்” மலர்விழி சொல்ல.

அதற்கும் நான் முதல் நீ முதல்ன்னு அடிபிடி போட்டுக்கிட்டும், கைகளை சுத்தம் பண்ணிக்கிட்டும் வந்தவர்கள் தாயிடம் கைகளை நீட்டிட.

“அடடே அழகுதான். மூணு பேருக்குமே நல்லா சிவந்திருச்சு” மலர் அவர்களுக்கு நெட்டிமுறித்தார் யார் கண்ணும் பெண்கள் மீது பட்டுவிடக் கூடாதேன்னு.

“அம்மா நாங்க பார்க்குக்கு போயிட்டு வரோம்மா. வாக்கிங் மாதிரி போனா கொஞ்சம் நல்லாருக்கும்னு தோணுது நீயும் அப்பாவும் வரதுன்னா வாங்க” நளிரா தாய் தந்தையை அழைக்க.

“இல்லம்மா. நீங்களே போங்க. அப்பாவுக்கும் எனக்கும் வேலை இருக்கு. செஞ்சதெல்லாம் பாங்கா எடுத்து வைக்கணும் டப்பாவுல. இல்லன்னா எறும்பு தின்னுடும். காஞ்சு வர வரன்னு திங்க முடியாம கெட்டியா போயிடும்” அவர்களை அனுப்பி வைத்தார் மலர்விழி.

பார்க் சென்ற பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்தனர், “அக்கா பார்த்தியா என் கைதான் சிவந்திருக்கு” நளிரா கைகளை விரித்துக் காட்ட, ஆர்த்தியும் பதிலுக்கு என கைதானே ன்னு கேட்டிட, சைத்ரா பஞ்சாயத்து ஆரம்பம் ஆனது.

இங்கே துருவ் ஆத்மா ரவிக் மூவரும் அதே பார்க்கில் சுற்றிக்கொண்டிருந்தனர்.

“நம்ம ஊர்ல கிடைக்காத பொருளாடா இது? முட்டாப்பய வாங்கியே தீருவேன்னு ஒத்தக் கால்ல நிக்கறான்” ரவிக் ஆத்மாவின் முதுகில் அடித்தான்.

வேடிக்கை பார்த்துகிட்டே நடந்தவனை ரவிக் அடிக்கவும், தடுமாறிக் கீழே விழப்போனவன் சமாளித்து நேராக நின்றவனை பார்த்து, எதிரே சென்ற இளம் பெண்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்சுக்கிட்டே என்னாச்சுன்னு பார்க்க.

“ஹீஹீஹீ நத்திங் பியூட்டீஸ். சும்மா விழுந்து பார்த்தேன்” அவர்களை சமாளித்து அனுப்பி வைத்தவன், ரவிக் மீது பாய்ந்தான்.

“எதுக்குடா அடிச்ச. காட்டுப்பன்னி” ஆத்மா ரவிக்கை அடிக்கப்போக, அவனை துருவ் பிடிச்சு நிப்பாட்டி வைத்தான்.

“சரிடா விட்டுத் தொலை. பையன் பொழைச்சுப் போகட்டும்” துருவ் ஆத்மாவை இழுத்துப் பிடிக்க முடியாமல் பிடித்து வைக்க.

“நீ சொல்லுவடா நாயே. போட்டுக்க ஜட்டி கூட வைக்காம சேல்ஸ்ல போடப் போனவனுக்கு முழுசா பத்தாயிரம் அழுதது நாங்கதானே. வாய் கிழியப் பேசுவ தாராளமா” ஆத்மா ரவிக் இருவருமே சேர்ந்து துருவ் மீது பாய.

“பாய்டா மச்சான். நான் எஸ்கேப்” துருவ் அவர்கள் கைக்கு சிக்காமல் ஓடினான்.

காற்றில் அலைபாயும் கேசத்தை, இரு கைகளாலும் கோதி, பின் அதைக் கலைத்து விட்டவாறே வேகநடையில் சென்றவனின் விழிகளில் அலட்சியமும், குறும்புத்தனம் கூத்தாடும் கூர்விழிப் பார்வையும் “அச்சோ!” என அள்ளிக் கொள்ளும் இதயத்தை.

அம்மாடியோவ் எவ்ளோ அழகு? சொக்க வைக்கறான்டி பெண்கள் அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.

“இவன் சிரிப்புக்கே ஹார்ட் பீட் இன்க்ரீஸ் ஆகுதே…”

“கண்ணத்துல விழுற குழில மொத்தமா விழுந்தாச்சுடி நான்”

என பெண்களை ரகசியமாய் புலம்பிட வைத்தவனைத், துரத்திய நண்பர்கள் அவனை நெருங்கி அவன் தோளில் கைபோட்டு வளைத்து ஒருசேர முதுகில் குத்திட.

“டேய் விடுங்கடா” என இருகரங்களையும் மேல் நோக்கி உயர்த்தி சரணடைந்தான் அவர்களிடம்.

துருவ்வின் சிரிப்பு ஆளுமையாய் கவர்ந்திட, பார்க்கில் இருந்த அனைவரின் பார்வையும் துருவ் மீதுதான் இருந்தது.

ஒருவருக்கொருவர் கிண்டல் செய்து சிரித்தபடி, கலாட்டாவோடும், அவ்வப்போது ஒருவரை ஒருவர் அடித்து விளையாடிக்கிட்டும் வலம் வந்தனர் பார்க் முழுவதும்.

“லைட்டா பசிக்குதுடா” ரவிக் ஆரம்பிக்க.

“ஒருமணி நேரம் போகட்டும்டா. இப்பவே சாப்பிட்டா சுத்த முடியாது” ஆத்மா மறுத்துவிட்டான்.

“சமோசா கண்ணைப் பறிக்குதுடா” ரவிக் அங்கே ஸ்டாலில் ஆவிபறக்க சூடாக வைத்து விற்கப்பட்ட சமோசாவை பார்த்து எச்சில் விழுங்க.

“எப்பப் பாரு தின்னுகிட்டே இருக்கணும்னுங்கிறாண்டா” துருவ் ரவிக் மீது கல்லை வீசி வம்புக்கு இழுக்க.

“மூடிட்டு போயிக்கடா. பசியில இருக்கேன். கடிச்சு வச்சிருவேன்” ரவிக் அச்சுறுத்தலில் ஆத்மாவின் மறுபக்கம் நகர்ந்துவிட்டான் துருவ். ரவிக் சொல்வதும் சரிதான். பசி வந்துவிட்டால் அவனுக்கு மூளை மங்கிவிடும். எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கும் கேட்டகிரி அவன்.

மூன்று பேரில் மற்ற இருவரும் தந்தையின் தொழிலில் சிறு சிறு பொறுப்புகளை ஏற்று செய்கின்றனர். அதனால் அவர்கள் முகத்தில் விளையாட்டுத்தனம் தாண்டி பொறுப்புணர்வு அதிகம் இருக்கும்.

ஆனால் துருவ்க்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. அவனை நெருங்கிட வேண்டுமெனில் அவனுடைய தாய்மாமனை முதலில் அணுகிட வேண்டும்.

அதனால் அந்த வயதிற்கே உரிய கலகலப்பும் துடுக்கும் மிதமிஞ்சியே இருந்தது. அகத்தின் புன்னகை முகத்தில் சுதந்திரமாய் ஒளிர்ந்தது.

“டேய் கட்டை நல்லாருக்குடா. நீ வேணா தொட்டுப் பாரேன். வாசனை கையிலேயே நிக்கும்” கையில் இருக்கும் சிறிய சந்தனக்கட்டையை துருவ் கையில் கொடுக்க முயன்றான் ஆத்மா.

“டேய் எனக்கு அந்த ஸ்மெல் பிடிக்காதுடா வேண்டாம்” துருவ் அவனை மறுத்து, மொபைலைப் பார்த்தவாறே நடந்தான்.

“டேய் பிடிடான்னா” துருவ் கைவசம் கட்டாயப்படுத்தி தந்தான் ஆத்மா.

“டேய் அவனை விடுடா. அதான் பிடிக்கலைன்னு சொல்றான்ல” ரவிக் ஆத்மாவைத் தடுத்தான்.

அதற்குள் துருவ் கையில் கட்டை வந்துவிட, “நாயே நாட்டுக் கட்டை இல்லைடா இது. ஸ்மெல் வரவே இல்லை. இது கலப்படமா இருக்குமோ?” துருவ் கையில் இருந்ததை திருப்பித் திருப்பிப் பார்த்து ஆராய்ச்சி பண்ண.

யாருமே சற்றும் எதிர்பாராமல், அவன் கன்னத்தில் செருப்படி விழுந்தது பளாரென.

அதுவரை அவர்கள் உரையாடலைக் கவனித்தவாறே எதிரில் சகோதரிகளுடன் நடந்து வந்த நளிராவுக்கு அவன் மீது தப்பில்லை என்பது புரிய, “அக்கா என்ன பண்ணுற நீ?” என சைத்ரா கையில் இருந்த செருப்பைப் பிடுங்கியவாறே அக்காவை இழுத்தாள் வேறு பக்கம்.

துருவ் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்து பார்க்கையில் சரியாக நளிரா கையில் செருப்போடு நின்று கொண்டிருந்தாள்.

“நீ வா போலாம்” ஆர்த்தி சைத்ராவை இழுத்துக்கொண்டு போய்விட்டாள் வேறு பக்கம்.

துருவ் அவளையும் அவள் கையில் இருக்கும் செருப்பையும் ஆத்திரமாய்ப் பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்தவள் ‘அய்யய்யோ நானில்லைங்க’ எனப் மனசுக்குள் பதறி கையில் இருக்கும் செருப்பைக் கிழே போட்டாள் நெருப்பைத் தொட்டது போல.

செருப்போ மீண்டும் துருவ் பாதத்திலேயே, நச்சுன்னு ஹீல்ஸ் நறுக்குன்னு குத்திட விழுந்து வைக்க.

‘ஸ்ஸ்ஸ்ஸ்…யப்பா’ துருவ்க்கோ வலி உசுர் போக, கண்களை மூடித்திறந்து மறைத்தான் பிறர் அறியாமல்.

“மச்சான் உனக்கு செருப்புல கண்டம்டா. தெரிஞ்சுக்கிட்டோம் இப்ப” ரவிக் சமயசந்தர்ப்பம் புரியாமல் கலாய்க்க.

“துருவ் அவனை பார்த்த பார்வையில் நிச்சயம் நட்புணர்வு இல்லை. “கைல சிக்குன நாயே செத்தடான்னு” செய்தி இருந்தது அதில்.

“சாரி நாங்கதான் தப்பா புரிஞ்சுக்கிட்டோம். உங்க மேல எந்த தப்பும் இல்லை. அடிச்சதுக்கு மன்னிச்சுடுங்க” இரு கைகளையும் கூப்பி மன்னிப்புக் கேட்டாள் நளிரா.

கூப்பிய கரங்களின் பத்துவிரல்களும் கிடுகிடுன்னு நடுங்கிட, கால்கள் தந்தியடிக்க, தனக்கு சகோதரிகள் பலமாக இருப்பார்கள் என வலதும் புறமும் கடைக்கண் பார்வையை ஓட விட்டவளுக்கு பக்கென்றானது.

‘அடிப்பாவிங்களா, கோர்த்துவிட்டுட்டு போயிட்டாளுங்களே’ மனதிற்குள் கதறியபடி எதிரில் நிற்பவனை நிமிர்ந்து பார்த்தாள்.
 
Top