• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 10
அன்பழகனின் இருசக்கர வாகன சத்தம் செவியைத் தொடவும், விழிகளைத் துடைத்துக் கொண்டே எழுந்த வேதவள்ளி உடையை சரிசெய்து கொண்டாள். அலைப்பேசியையும் கைப்பையையும் மட்டும் எடுத்துக் கொண்டவள் கூடத்திற்கு வர, முருகையாவும் அம்சவேணியும் ஆளுக்கொரு புறம் அமர்ந்திருந்தனர்.
முருகையா முன்பு சென்று நின்றவள், வலுக்கட்டாயமாக புன்னகைத்துவிட்டு, “நான் போய்ட்டு வரேன் பெரியப்பா...” என்று விழியோரம் துளிர்த்த நீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
அவளது குரலில் பதறி எழுந்த முருகையா, “வேதா மா... இந்தப் பெரியப்பா சொல்றதை கேட்க மாட்டீயா?” எனத் தவிப்பாக வினவினார்.
தலையைக் குனிந்தவள், “என்னை மன்னிச்சுடுங்க பெரியப்பா. இத்தனை நாள் உங்க எல்லாருக்கும் நான் பாரமாதான் இருந்திருக்கேன். இனிமேலும் கஷ்டத்தை தர விரும்பலை. என் முடிவை என்னால மாத்திக்க முடியாது...” என்று நலிந்த குரலில் பேசிய வேதவள்ளி, அம்சவேணியிடம் சென்றாள்.
அவளைப் பார்த்து முகத்தை திருப்பினார் பெண்மணி. வேதாவின் இதழ்களில் கசப்பான புன்னகை ஜனித்தன. “பெரியம்மா, என் அம்மாவுக்குப் பிறகு அந்த ஸ்தானத்துலதான் உங்களை வச்சிருந்தேன்...” என்றவள், மேலும் பேச வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டாள். தன் தாயைப் பற்றி அவதூறாகப் பேசிய அம்சவேணியை மனம் மன்னிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் ஒரு நொடி கூடத் தயாராகவில்லை. எங்கே எதுவும் பேசிவிடுவோமா? என அஞ்சியவள், “இவ்வளோ நாள் என்னை உங்கப் பொண்ணா பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி. இங்க இருந்த இத்தனை வருஷத்துல என்னால உங்களுக்கும் பெரியப்பாவுக்கும் சண்டைதான் அதிகமா வந்திருக்கு. இனிமே அந்த மாதிரி எந்த சண்டையும் வராது...” என்றவள் விழிகளிலிருந்து ஒரு சொட்டு நீர் கீழிறங்கியது.
“ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லணும்னு நினைக்கிறேன் பெரியம்மா. என் அம்மா, தப்பானவங்க இல்லை. அவங்க ரொம்ப நல்லவங்க...” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது.
“வேதா மா...” என அவளருகே வந்த முருகையாவிடமிருந்து இரண்டடி தள்ளி நின்றவள், “நான் வரேன் பெரியப்பா...” என்றுவிட்டு எழில் புறம் திரும்பி, “வரேன் எழில், அம்மா, அப்பாவை நல்லா பார்த்துக்கோ...” என்றுவிட்டு வேகமாக வெளியே சென்றாள். மனம் முழுவதும் அத்தனை ரணம். நிறையவே காயப்பட்டுவிட்டாள் பெண். இதற்கு மேலும் முடியாது என்ற கடைசிக்கட்டத்தில்தான், வீட்டைவிட்டு செல்லும் முடிவை எடுத்திருந்தாள். இத்தனை வருடங்கள் தன்னை அன்னையாய் மடிதாங்கிய வீட்டில் இனிமேல் தனக்கு இடமில்லை என்று தோன்ற, அழுகை தொண்டையை அடைத்தது.
வேதா வெளியே வரவும் சரியாய் அதேநேரம் அன்பழகன் உள்ளே நுழைந்திருந்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவளின் இதழ்கள் புன்னகைக்க முயன்று தோற்றன. இத்தனை நேரமிருந்த திடமெல்லாம் ஆடவன் முன்னே வடிந்திருக்க, விழிகள் உடைப்பெடுக்க தயாரானது பெண்ணுக்கு. தனக்கென யாருமே இல்லை என்ற எண்ணம் இந்த நொடி மறைந்திருந்தது. மனம் அத்தனையாய் அவனை தேடியிருந்தது. பெண் தேடினாள், அவனை. அவன் அருகாமையை, தனக்கென வரும்போது யாரையும் சட்டை செய்யாத அந்த திமிரை, அதிகம் தேடினாள்.
தலையைக் குனிந்து
கொண்டாள்.
இமைகள் எல்லாம் தடித்து வீங்கி, சிவந்த முகத்துடன் நின்றிருந்தவளைப் பார்த்து துடித்துப் போனான் அன்பழகன். அவள் நிலை கண்டு உயிரே போய்விட்டது அவனுக்கு. காலையில் கொள்ளை அழகாய் இருந்தவளை, அணுஅணுவாய் ரசித்திருந்தான். அத்தனை நேர்த்தியாய் இருந்தவள், இப்போது வாடிப்போயிருந்தாள்.

முகம் மொத்தமும் பொலிவிழந்து கிடந்தது. கசங்கிய புடவையில் வாடிய கொடியாயிருந்தாள். விழிகளில் ஏதோ தன்னிடம் கூற விழைந்தது‌. தலையெல்லாம் கலைந்து, எதையோ பரிகொடுத்த உணர்வில் நின்றிருந்தவளின் அருகே இரண்டெட்டில் சென்றவன், “என்னாச்சு வேதா?” என தவிப்புடன் வினவினான். கரங்கள் அவளைத் தன்னுடன் அணைத்துக் கொள்ள விழைய, சூழ்நிலை கருதி அமைதியாகிவிட்டான்.
உதட்டைக் கடித்து பொங்கிய அழுகையைக் கட்டுபடுத்தியவளுக்கு அவன் தோள் சாய்ந்து நடந்ததை கூறி கதற வேண்டும் என்று மனது துடிக்க, விழியோரம் ஈரம் கசிந்தது. வார்த்தைகள் வர மறுக்க, ‘ஒன்றும் இல்லை’ என்பது போல தலையை அசைத்தாள் பெண். ஆனால், மனம் ஆரவாரமின்றி கத்தி கூச்சலிட்டது.
“எனக்குத் தெரியும். உன் வீட்டாளுங்க எதுவும் சொன்னாங்களா?” என்றவன் வார்த்தைகள் கோபமாய் வெளிவந்ததன‌.
“நீ தள்ளுடி, நான் போய் பேசிக்கிறேன்...” வாசலைத் தாண்டி உள்ளே நுழைய முயன்றவன், கோபத்தில் கை சட்டையை மேலேற்றினான்.
அவன் கையை பிடித்திருந்தாள் பெண். முதல் தொடுகை இருவருக்கும். சிலிர்க்க வேண்டிய கணங்கள் கனமாய் மாறியிருந்தன. “ப்ளீஸ், வேணாம்... போகலாம் வாங்க...” என்றவளின் கெஞ்சலில், பனித்த விழிகளில், சிவந்த வதனத்தில் அவனின் கோபம் அமிழ்ந்து போனது.
“சரி, கையை விடுடி. சண்டை போட மாட்டேன். என்னென்னு பொறுமையா கேட்டுட்டு வரேன்” என்றவன் உள்ளே சென்று என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள விழைந்தான்.
“வேணாம். எங்கேயும் போய், யார்க்கிட்டேயும் பேச வேணாம்...” அவனை மறைத்தவாறு நின்றவளின் கைகள் அவனது மார்பில் பதிந்தன.
“போகலாம் வாங்க. இங்கிருந்து கிளம்பலாம்...” என்றவளுக்கு அழுகைப் பொங்க, “சரி... சரி. அழாதடி. போகலாம் வா...” என அவள் கையைப் பிடித்துக்கொண்டு வெளியேற முனைந்தான் அன்பழகன்.
பேச்சு சத்தம் கேட்டு முருகையா வெளியே வர, அம்சவேணியும் வந்துவிட்டார். “நான் சொன்னப்ப நம்புனீங்களா பா? பாருங்க இவ பண்ற காரியத்தை. ஓடுகாலி...” எழில் கூற, அதைக் கேட்ட அன்பழகனின் கரங்கள் இறுகின. அவனது முகத்தைப் பார்த்து பயந்த வேதவள்ளி, ஆடவன் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டாள்.
“கையை விடுடி... அவனுக்கு நாலு குடுத்துட்டு வர்றேன். அப்போவாது அடங்குறானா பார்ப்போம்...” என்றவன், அவளின் கையை உதறி திரும்பி நடக்கத் துவங்க,
“அன்பு...” என அழைத்த வேதவள்ளி கண்கள் சொருகி கீழே விழப்போக, அவளது விளிப்பில் திரும்பியவன், ஓடிச் சென்று பெண்ணைத் தாங்கியிருந்தான்.
“ஹே... வேதா, இங்க பாரு டி. என்னாச்சு...” என அவள் கன்னத்தில் அன்பு தட்ட, “ப்ளீஸ், சண்டை வேணாம். கிளம்பலாங்க...” என்றவளின் விழிகளில் கண்ணீர் சரசரவென இறங்கியது. அவளைப் பிடித்து கைத்தாங்கலாக அவன் நிற்க வைக்க, “வேதா மா...” எனப் பதறியபடியே அவர்கள் அருகில் வந்திருந்தார் முருகையா.
பெண்ணை தொடச் சென்றவரை கை நீட்டித் தடுத்தவன், “அங்கே நில்லுங்க, கிட்ட வந்தா, நடக்குறதே வேற...” என்று ஆங்கில கெட்ட வார்த்தை ஒன்றை முணுமுணுத்தவாறே தெருவில் செல்லும் தானியைக் கையைக்காட்டி அவளை ஏற்றிக்கொண்டு தானும் ஏறினான்.
அப்படியே அவன் மேலே மயங்கியிருந்தாள் வேதவள்ளி. அவளைத் தோளோடு அணைத்தவனின் மனம் அருகிலிருந்தவளின் நிலை கண்டு துடித்துப் போக, “சீக்கிரம் ஒரு ஹாஸ்பிடலா பார்த்து நிறுத்துங்க...” என்று படபடத்தான்.
வீட்டிற்குள்ளே நுழைந்த நொடி தன்னைக் கண்டதும் தாயைக் கண்ட சேயைப் போல ஆசுவாசம் கொண்ட பெண்ணின் விழிகளில் எத்தனை பதைபதைப்பு, அதில் ஆடவன் உயிரே போய்விட்டது. என்ன நடந்தது எனத் தெரியாவிடினும், கண்டிப்பாக வேதவள்ளியின் மீது தவறிருக்காது என மனம் அடித்துக் கூறியது.
ஐந்தே நிமிடத்தில் ஓட்டுநர் மருத்துவமனையின் முன்பு வாகனத்தை நிறுத்த, அவரிடம் நன்றி கூறிவிட்டு வேதவள்ளியைக் கைத்தாங்கலாக அழைத்து சென்றான்.
“வெயிட் பண்ணுங்க சார்...” என்ற செவிலியர் மருத்துவருடன் சென்றுவிட, பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தார் மருத்துவர்.
“ஒன்னும் இல்லை, சாப்பிடாததால வந்த மயக்கம்தான். எனர்ஜி சுத்தமா இல்லை, ட்ரீப்ஸ் போட்டுருக்கு. ஒரு மணி நேரம் கழிச்சு அவங்களை கூட்டீட்டுப் போங்க. சாப்பிட எதுவும் வாங்கிக் கொடுங்க...” என்றுவிட்டு அடுத்த நோயாளியைக் கவனிக்க சென்றுவிட்டார்.
சிறிய மருத்துவமனை அது. மொத்தமே இரண்டு மூன்று அறைகள் தானிருந்தன. ஆட்கள் வருவதும் போவதுமாய் இருக்க, வெளியே சென்று உணவை வாங்கிவிட்டு வேதா இருக்கும் அறைக்குள் நுழைந்தான். கையில் ஊசி குத்தப்பட்டு, குளுகோஸ் ஏறிக்கொண்டிருந்தது.
விழித்துதான் இருந்தாள் பெண். லேசாக கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவளின் விழிகளிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. அவள் அழுகையை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நெற்றியை சொரிந்தவன், “ப்ம்ச்... அழாத வேதா...” என்றான். குரல் முழுவதும் அவளுக்கான தவிப்பும் மன்றாடலும் மட்டும்தான்‌.
அவனைத்தான் பார்த்திருந்தாள் வேதவள்ளி. அவளருகே சென்றவன், “என்னாச்சுன்னு எனக்குத் தெரியாது. ஆனால், கண்டிப்பா உன் மேல தப்பு இருக்காது டி. உனக்கு சொல்லணும்னா சொல்லு. இல்லைன்னா வேண்டாம். அழாம இரு போதும்...” என்றவனின் வார்த்தைகளில் பெண் நெஞ்சம் துடித்துப் போனது.
இவனுக்கு என் மீது
எத்தனை நம்பிக்கை. 'வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே எனக்குப் பரிட்சயமானவன். இதுவரை அவனிடம் தான் பேசிய வார்த்தைகள் எல்லாம் சொற்பமே. அப்படிபட்டவனுக்கு இருக்கும் நம்பிக்கைக் கூட இத்தனை வருடம் தன்னை வளர்த்தவர்களுக்கு தன் மீது இல்லையே!’ என நினைக்க நினைக்க மனம் விம்மித் தவித்தது. முகத்தை முட்டியில் புதைத்துக் கொண்டவள், தேம்ப ஆரம்பித்தாள். அழுதாள், கதறவில்லை. அமைதியான அழுகை. மனம் கத்திக் கூச்சலிட்டது. ஆனால், பெண் அதை வெளிப்படுத்தவில்லை.
வேதாவின் அழுகைப் பொறுக்க முடியாதவனுக்கு கோபம் அத்தனையாய் வந்தது. முருகையா மீதும், அவருடைய குடும்பத்தின் மீதும். தான் வந்தும், பற்றுக்கோலின்றி நிராதரவாய் நின்றிருந்தவளின் தோற்றம் இந்நொடி கூட அவனில் கோபத்தை அதிகரிக்கச் செய்தது.
“ப்ம்ச்...” என்றவன் அவளருகேச் சென்று முகத்தைத் திருப்பவும், அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் பார்வையைப் பதித்தவனின் உயிரை ஊடுருவியது பெண்ணின் பார்வை. “வேதா...” என்றவன் எதையும் யோசிக்காது அவளை வயிற்றோடு கட்டிக் கொண்டான்.
‘இதற்குத்தான் காத்திருந்தேன். எனக்காக, என்னை நம்பி அன்பு செய்ய ஒரு உள்ளம். எனக்குத் தோள் கொடுக்க ஒரு ஜீவன் வேண்டுமே’ என எண்ணியிருந்தவளின் கரங்கள் அவனை இறுக்கிக் கொள்ள, தேம்பி அழத்துவங்கினாள் பெண். அவளது கண்ணீர் ஆடவன் உடையை நனைத்தது. சிலிர்த்தது அன்பழகனின் உடல். நடுங்கிய கரங்களைக் கொண்டு அவள் முதுகை ஆதரவாகத் தடவியவன் விழிகள் கூட அவளுக்காக லேசாய் பனித்துப் போயின. உடலையும் உயிரையும் பெண் நொடியில் உருக்கியிருந்தாள். உருகித்தான் போனான் அன்பழகன் அவளின் அழுகையில்.
சில நிமிடங்கள் கடக்க, அவனிடமிருந்து பிரிந்து அமர்ந்தவள், புறங்கையால் விழிநீரைத் துடைத்துக்கொண்டாள்.
‘என்ன பேசுவது? என்ன கேட்பது? எதற்காக இத்தனை அழுகை? எப்போதும் முகத்திலிருக்கும் திமிர், அலட்சியமெல்லாம் எங்கே போனது?’ என ஆயிரம் கேள்வியை மனது தொடுக்க, எதையும் வாய் மொழியாக ஆடவன் கேட்கவில்லை.
சில நொடிகளில் அமைதியாய் கழிய, தன்னை திடப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தாள் வேதவள்ளி. மனது அவனருகில், அந்த வார்த்தையில் கொஞ்சம் சமன்பட்டிருந்தது. எழுந்து சென்று முகத்தைக் கழுவி வரலாம் என்றால், கையில் ஊசி குத்தியிருந்ததால், அப்படியே அமர்ந்துவிட்டாள்.
தான் வாங்கி வந்த உணவை அவளிடம் நீட்டியவன், “முதல்ல இதை சாப்பிட்டு முடி...” என்றான். அவனையும் உணவையும் மாறி மாறி பார்த்தவள், “எனக்கு எதுவும் வேணாம்...” என பதில் இயம்பினாள்.
“உனக்கு வேணுமா, வேணாமான்னு நான் கேட்கலை‌. சாப்பிடுன்னு சொன்னேன்...” அதட்டலாய் வந்த குரலில், அவனை நிமிர்ந்து முறைத்தாள் வேதவள்ளி. அதில் பெண் ஓரளவுக்கு சமாதானம் அடைந்துவிட்டாள் என உணர்ந்தவன், “நீ சாப்பிடலைன்னா, ஹாஸ்பிட்டலைவிட்டு போக முடியாது. ஒழுங்கா சாப்பிடு...” அழுத்தமாக கூறிய அன்பழகன், அவ்வளவுதான் தன் பேச்சு என்பது போல இருக்கையில் அமர, குரலில் அத்தனை பிடிவாதமிருந்தது.
எதுவும் பேசாதவள், உணவைப் பிரித்து உண்ண, தண்ணீர் பொத்தலின் மூடியைத் திறந்து அவளருகே வைத்தான். இரண்டு வாய்க் கூட உள்ளே இறங்கவில்லை வேதாவிற்கு. பல்லைக் கடித்துக்கொண்டு பாதி உணவை உண்டுவிட்டு மூடி வைத்துவிட்டாள். அன்பழகன் எதுவும் பேசவில்லை. இந்தளவிற்கு உண்டதே போதும் என விட்டுவிட்டான்.
சில நிமிடங்கள் கழிய, அவன் தன்னிடம் எதுவும் கேட்க விழைவான் என பெண் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க, அன்புவிடம் எந்த பாவனையும் இல்லை. ‘நீ விரும்பினால் சொல்லலாம். மற்றபடி கட்டாயப்படுத்த மாட்டேன்’ என்பது போல பார்வையை வைத்திருந்தான்.
காலையில் நடந்ததை விவரிக்கலாம் என நினைத்த வேதாவின் விழிகள் மீண்டும் கலங்கின. அமைதியான உள்ளிறங்கிய குரலில் பேசினாள் பாவை. “காலைல மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு. அதனால ஓனர் வீட்டுக்கு கிளம்ப சொல்லிட்டாரு. பஸ் வராததால, தெரிஞ்ச ஒருத்தர் கார்ல வீட்டுக்கு வந்து இறங்குனேன்...” என்றவள், பாதியை மென்று முழுங்கி என விவரித்தாள்.
அனைத்தையும் அமைதியாகக் கேட்டவன், “ஓ...” என்றுவிட்டு இருக்கையிலிருந்து எழுந்தான். அவனது முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியாதவள், பதறிப்போய் அவனது வலக்கரத்தை தன் இடது கையால் பிடித்திருந்தாள். அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகம், கலங்கிய விழிகளில் நிலைத்தன.
“பிரச்சனை எதுவும் வேணாம். விட்றலாம், நீங்க எனக்காக சண்டை எதுவும் போடக் கூடாது...” கெஞ்சவில்லை பெண். முகத்திலிருந்த பாவனையில் துளிகூட குரலோடு ஒத்து வரவில்லை. லேசாக மிரட்டும் தொனிதான். அழுத்தமாக கூறினாள் வேதவள்ளி. அதில் ஆடவன் இதழ்களில் புன்னகை முகிழ்த்தது. அதை அவளறியாது மறைத்தவன், பெண்ணின் கையை தன் கரத்திலிருந்து விடுவித்தான்.
“சண்டையெல்லாம் போடலை. என் பைக் அங்க இருக்கு மா. இன்னும் பிப்டின் மினிட்ஸ்ல ட்ரிப்ஸ் முடிஞ்சுடும். அதுக்குள்ளே போய் நான் பைக்கை எடுத்துட்டு வந்துட்றேன்...” இயல்பாக கூறினான் அன்பழகன். துளிகூட வேதாவால் அவனை சந்தேகிக்க முடியவில்லை. சரியென்பதாய் தலையை அசைத்தாள்.
“ஹ்ம்ம்...” பெருமூச்சை வெளிவிட்டவன், “போனை கைல வச்சுக்கோ. நான் ஹாஃப் அன் ஹவர்ல வந்துடுவேன். எதாவது வேணும்னா, கால் பண்ணு வேதா...” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறிவனின் உதடுகள் ஆங்கிலத்திலிருக்கும் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் உதிர்க்க, இரண்டு பக்கமும் முழுதாய் இருந்த சட்டைக்கையின் பொத்தானை அவிழ்த்து, முழங்கைக்கு மேலே ஏற்றியவன், தன் அலைபேசியை எடுத்து முகிலனுக்கு அழைத்து எதையோ கூறிவிட்டு, முருகையா வீட்டை நோக்கிச் சென்றான்.
















































 
Well-known member
Messages
1,049
Reaction score
758
Points
113
Nalla vaangi Vida poraan vedha familya👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
 
Top