Active member
- Messages
- 108
- Reaction score
- 58
- Points
- 28
ஒரு குட்டி டீசர் :
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”
மடிக்கணினியில் பதித்திருந்த விழிகளை அகற்றாது, “ம்ம்!” என்ற ஆமோதிப்புடன் அவள் பேசுவதை கேட்க தயாரானான் திகழ் வருணன்.
“இல்ல… முக்கியமான விஷயம்” தன்னை நிமிர்ந்துக் கூட பார்த்திராதவனின் மேல் லேசான கோபம் ஒன்று துளிர்த்தது.
“ஹ்ம்ம் சொல்லு…” என்றவன் இப்போதும் தன் வேலையில் தான் கவனமாய் இருந்தான்.
“பச்” சலித்தபடியே தன் கைகளை மார்பிற்குக் குறுக்காகக் கட்டிக் கொண்ட யாழ்நிலா, “முதல்ல என்னை நிமிர்ந்து பாருங்க…” என்று அதட்டலிடும் குரலில் கூறியதற்கு உடனே அவனிடமிருந்து அவள் எதிர்பார்த்த எதிர்வினை கிடைத்தது.
குறுகுறுப்பான விழிகளோடு இரண்டு நிமிடங்கள் விடாது அவளையே துளைத்தெடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் விழிகள் அவள் முகபாவனைகளில் லேசாய் புன்னகைத்தன.
“சொல்லு… கேட்டுட்டு தான் இருக்கேன்…” அவளுடைய கோபம் படர்ந்த வதனத்தை அதற்குமேல் தன் மனதிற்குள் நிந்திக்க முடியாமல் முகம் கவிழ்ந்தான்.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் அவன் கைகளிலிருந்தவைகளை பிடுங்காத குறையாக வாங்கி அருகிலிருந்த மேஜையின் ஓரமாய் வைத்துவிட்டு அவனுக்கு முன்பாக முழங்காலிட்டு அமர்ந்தாள்.
“ஹோய்… என்ன இது? என்ன விஷயம்னு சொல்லு… நான் கண்டிப்பா கவனிக்கிறேன்…” அவளின் செய்கையை அவசரமாக தடுத்தவாறு எடுத்துரைத்தான்.
'ஆமா ஆமா… நல்லா கவனிப்ப… என்னை கவனிக்கவே உனக்கு நேரம் இல்ல. இதுல நான் சொல்ல வரதை ரொம்ப நல்லாவே கவனிப்ப போ' எப்போதும் போல அவன் பெயரில் உள்ளுக்குள் அவசர அர்ச்சனை நடந்தேறியது.
அவனுடைய பதட்டத்தில் தன் மனதிற்குள் தயார் செய்து வந்திருந்த அனைத்தும் மறந்தே போனது பெண்ணவளுக்கு. தன்னை ஒருவாறு மீட்டுக் கொண்டு அவள் நிமிரவும் அவன் பார்வையில் தன்னாலே மெல்லிய ரசனை வந்து குடியேறியது.
“திகழ்… எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்…”
“ஹ்ம்ம்… என்னது?”
“நம்ப ரிலேஷன்ஷிப் எப்படிபட்டதா இருந்துச்சு?” சடாரென்று தன் மனதிலிருந்ததை போட்டுடைத்தாள் யாழ்நிலா.
“புரியல எனக்கு…” புருவங்கள் இடுங்க குழப்பமான முகத்தை கண்ணாடியாய் பிரதிபளித்தான்.
புடவை தலைப்பின் முடிச்சினை விரல்களின் இடுக்கில் சுற்றிக் கொண்டபடியே, “இல்ல… நம்ப பாஸ்ட் லைஃப்ல… நாம எப்படி இருந்தோம்…” தயக்கத்தோடு மென்று விழுங்கியபடியே மெல்ல அவன் முகத்தை ஏறிட்டாள்.
“எப்படி இருந்தோம்னா?” நெற்றி கோடுகள் சுருங்க, “நீ எதை மீன் பண்ற?” என்று அவளையே திருப்பி கேள்வி கேட்டான் வருணன்.
“அது… நம்ப மேரேஜ் லைஃப் எப்படி…”
“யா… குட்… நீ தான் இப்ப பாக்குறல. இதே மாதிரி தான் நாம முன்னாடியும் இருந்தோம்” நெற்றி வருடிய விரல்களோடு தோள்களை மெல்ல குலுக்கினான்.
தான் கேட்க வந்ததை எப்படி கேட்பது என்று தெரியாமல், “இல்ல அது… நம்பளோட… நாம ஒண்ணா இருந்தோமா… ஐ மீன் க்ளோஸா…” அவனை ஏறிட்டு காண முடியாமல் அவனுடைய சட்டையின் முதலிரு பொத்தான்களை வருடி சென்றது யாழின் பார்வை தீற்றல்கள்.
பக்கவாட்டாக திரும்பியவன் மெல்லிய சிரிப்பை உதிர்த்தவாறு, “இப்ப எதுக்காம் இந்த கேள்வி?” இதழ்களில் தவழ்ந்த ஏதோ ஒன்றினை முறுவலோடு சுவைத்து அதக்கியவாறே திரும்பினான்.
“வந்து… அது வனிதா தான்… உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்க சொன்னாங்க…”
“ஓஹோ…” மீண்டும் வருணனிடம் சிரிப்பலை பொங்கியது.
“ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்யோட ரிலேஷன்ஷிப் எப்படி இருக்குமோ அப்படி தான் நம்பலோடையதும் இருந்தது” இமைசிமிட்டாமல் அவள் பக்கமாய் முகத்தை சாய்த்து அவள் விழிகளை கூர்ந்துப் பார்த்தபடியே மொழிந்தான்.
அவன் பதிலில் மனமெங்கும் பரவிய நிம்மதியோடு எங்கோ குழப்பத்தில் தொக்கி நின்ற கேள்வியாய், “அப்பறம் ஏன் இப்ப…” வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை தனக்குள் விழுங்கிக் கொண்டாள்.
“ஏன் இப்ப? என்ன கேட்க வந்தியோ அதை ஃப்னிஷ் பண்ணு…”
அதற்கு எந்த பதிலும் இன்றி மௌனமாய் திகழ் வருணனின் முத்தாய்ப்பான விழிகளோடு கலந்து நின்றாள் யாழ்நிலா.
அவளுடைய அமைதியில், “இப்ப ஏன் நாம அப்படி இல்லனு தானே கேட்க வந்த?” மேலும் அவள் முகம் நோக்கி குனிந்து அவளை ஊடுருவினான். என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் எல்லாப் பக்கமும் தலையாட்டி வைத்தாள் பெண்.
புன்முறுவலோடு தன் வலது கையால் மெல்ல அவள் கன்னம் ஏந்தினான். அவன் விரல்களின் இஸ்பரிசம் அவளிடம் ஏதோ மாய வலையை பிண்ணி சென்றது. அதற்குள் விரும்பியே விழுந்தவளின் இதழ்கள் மெல்ல தளர்ந்து தத்தளிக்க துவங்கியது.
“யாழ்… நீ ஏன் இவ்வளவு யோசிக்கற? நாம முன்னாடி எப்படி வேணாலும் இருந்திருக்கலாம். இப்ப எப்படி இருக்கோம்னு மட்டும் திங்க் பண்ணு. அதை மட்டும் நினை. பாஸ்ட்க்கும் ப்ரெசென்ட்க்கும் இடையில எப்பவும் மாட்டிக்காத…” என நிதானமாய் கூறினான்.
“நா..நான் ப்ரெசென்ட் பத்தி தான் யோசிக்கிறேன். பாஸ்ட்ல நாம எப்படி இருந்தோம்னு எனக்கு தெரிய வேண்டாம். ஆனா, அதோட இம்பேக்ட் இப்ப இருக்க தானே செய்யுது. முக்கியமா உங்ககிட்ட…”
“என்கிட்டையா? நான் அப்படி என்ன பண்ணேன்… நான் பாஸ்ட் லைஃப்ல நடந்ததை எல்லாம்…” அவனை மேலும் பேசவிடாமல் குறுக்கிட்டவள்,
“நீங்கதான் இன்னும் பாஸ்ட்ல இருந்து வெளிய வராம இருக்கறது. நான் உங்க வைஃப்னு ஞாபகம் இருக்கா இல்லையா உங்களுக்கு?” சட்டென தன் மனதிலிருந்த சுனக்கத்தை அவனிடம் கொட்டிவிட்டாள்.
கன்னங்கள் வரை விரிந்த கண்ணோர சிரிப்புடன், “ஓ நல்லாவே ஞாபகம் இருக்கே மேடம். எதுக்கு உங்களுக்கு இந்த டவுட்?” சின்னக் குறும்புக் குரலில் வினவிய திகழ் வருணனிடம்,
“அப்பறம்… ஏன் நீங்க…” தவிப்போடு அவள் நிறுத்த, இரண்டு கைகளாலும் அவள் முகத்தை தனக்குள் ஏந்திக் கொண்டவன்,
“காமான்டா… வாட் இஸ் ஈட்டிங் யூ? ஸ்பீக் அவுட்… நீ சொன்னா தானே எனக்கு தெரியும்” பொறுமையாக அவளை விட்டு அகலாத பாவனையில் நெருக்கமாய் வினவினான்.
எப்படி கேட்பது என தெரியாமல் குழம்பிப் போனவள் யோசித்துக் கொண்டே இருக்க, அவனுடைய பூக்களை வருடும் பார்வையில் என்ன கிடைத்ததோ முழங்காலிட்டு அமர்ந்திருந்த யாழ்நிலா சற்றே நிமிர்ந்து அவன் கழுத்தினை சுற்றிக் கொண்டபடியே அவன் இதழ்களில் தன்னை பதித்தாள்.
பூவும் விரலும் ஆழமாய் உரசிக் கொண்டதைப் போல மெல்லிய குறுகுறுப்போடு அவளின் முத்தச் சிதறலை மொத்தமாய் வாங்கிக் கொண்டு அவள் கன்னங்களில் தன் விரல்கள் பதிய மெதுவாய் அழுத்தினான் திகழ் வருணன்.
அவனுடைய வன்னிதழ்கள் மீசை முடிகள் என மயக்கமாய் படர்ந்தன அவள் மெல்லிய அதரங்கள். வன்மையும் மென்மையும் இணைந்து தவித்தது. சூடான மூச்சுக் காற்றும் சந்தனக் கீற்றாய் புன்னகையும் பகிரப்பட்டது.
அவள் கன்னங்களிலிருந்து நழுவியவனின் கரங்கள் மெல்ல தன் மார்பில் படர்ந்திருந்தவளின் கரங்களை பற்றிக் கொள்ள இதழ்களின் மின்னூட்டம் விரல்களுக்கும் கடத்தப்பட்டது.
வலுவிழந்தப் பொழுதும் இருவருக்கும் பிரிய மனமில்லை. நான் நீயென்ற போட்டியில்லை. வேண்டும் என்ற வல்லின வற்புறுத்தலில்லை. யார் தந்தார்கள் யார் வாங்கினார்கள் என்ற கணக்குகளும் இல்லை. பிரிந்து பிரிந்து தழுவிய முத்தச் சத்தங்கள் மட்டுமே அங்கே சிதறலாய் நிறைந்தது.
மழைச் சாரலாய் வந்து மோதிய யாழின் தேன்துளிகளை ரசித்து பருகினான் திகழ். அவனுடைய ரசனையில் அவள் துவண்டு உருகினாள். மார்பிலிருந்து பெருகிய உணர்வுகளை இருவரும் மற்றவர்களுக்கு உதடுகள் வழி கடத்திக் கொண்டிருந்தனர்.
நிமிடங்கள் நொடிகளாய் கழிய, மனமே இல்லாமல் பிரிந்தன இதழ்களின் ஜோடிகள். தலை குனிந்தவாறு அவளும் பக்கவாட்டாக முகத்தை திருப்பியவாறு அவனும் உள்ளுக்குள் பரபரத்த நினைவுகளின் மீட்சியை மெல்ல மனதிற்குள் மிச்சங்களாய் கடத்தினர். ஒருவாறு தங்களைத் தேற்றிக் கொண்டு தெளிந்த இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்று உரசி செல்ல, புதுவித மின்சாரம் ஒன்று பெருகிப் பாய்ந்தது இருவருக்குள்ளும்.
சில நொடி பரிமாற்றங்களுக்குள் தன் விழிகளை மூடிக்கொண்டு நீள்விருக்கையின் மேல்பகுதியில் முகம் சாய்த்துக் கொண்டான் திகழ் வருணன். அவனுடைய ஏறி இறங்கிய தொண்டை குழி அவள் பார்வைக்குள் விழ, என்ன செய்வதென்ன தெரியாமல் அவனையே பார்த்திருந்தவள் தள்ளாடிய கால்களோடு எழுந்து நின்று, “ஸா…ஸாரி… அது… தெரியாம… ஸாரி…” என்று வார்த்தைக் கோர்வைக்குள் தன்னை சேர்க்க முடியாது தவித்து அங்கிருந்து செல்ல முயன்றாள்.
சட்டென அவள் கையினைப் பிடித்து நிறுத்தினான் திகழ் வருணன். “ஜாவா” என புன்சிரிப்புடன் மயக்கமாய் அழைத்தவன் அவளை தன்னருகிலேயே அமர்த்தினான். தன் தொடை மீதிருந்த மற்றொரு கையால் தாளமிட்டபடியே அவளை ஏறிட்டவன் அவள் முகத்தில் விரவியிருந்த பாவனையில் பேச்சின்றி சிலையானான்.
அவளை உணர்ந்திட சொல்லி உந்தித் தள்ளிய மனதை அடக்கியபடியே தன் வலது கையினை உயர்த்தி அவள் நெற்றிப் பொட்டினை ஆள்காட்டி விரலால் வருடினான். ஒரு விரலில் துவங்கியது புருவங்களை கடக்கும்போது நடுவிரலோடு இரண்டாகி, கொவ்வைபழத்தில் குழைத்த கன்னக் கதுப்புகளை தாண்டும்போது படிப்படியாக உயர்ந்து முந்திய இரண்டோடு மோதிர விரலும் இணைய மூன்றானது.
அத்தோடாவது முடிந்துவிடும் என அவள் பரிதவிப்போடு எதிர்பார்க்க, முகவாயை பற்றி நிமிர்த்தியது பெருவிரல். நான்கு விரலும் அவள் முகவாயினை தாங்கிப் பிடிக்க தன் சுட்டு விரலால் மெல்ல அவள் இதழ்களின் வடிவங்களை அளந்தான் அந்த ரசிகன். ஏறி இறங்கிய மார்போடு படபடக்கும் இதயத்தை அடக்கிக் கொண்டு இமை அணைத்த விழிகளை தட்டி எழுப்பினாள் யாழ்நிலா.
'மயங்காதே இவனிடம் மயங்கித் தொலைக்காதே' என பிரம்பப் பிரியத்தனம் செய்து உறுதி ஏற்றது எல்லாம் காற்றோடு கலந்தது.
முழுதாய் தன்னை அவனிடம் தொலைத்துவிட்டு மீட்க முடியாமல் தவித்தாள் பெண்ணவள். அவளுடைய கனி இதழ்களின் மென்மையில் தொலைந்துக் கொண்டிருந்தவனுக்கு சுட்டு விரல் போதவில்லை போலும் அதனோடு மற்றவையையும் துணைக்கு அழைத்து அதன் அளவை தனக்குள் குறித்துக் கொண்டிருந்தான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப் பின் முடியாமல், “திகழ்” என அவள் தன்னியல்பில்லாத குரலோடு உருக, “ம்ம்?” புருவங்களை ஏற்றி இறக்கி அவளை விழிகளை நிமிர்ந்துப் பார்த்தான். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு அவள் மீண்டும் அங்கிருந்து நழுவ முயல, அவள் கரத்தினை மீண்டும் பற்றிக் கொண்டு அமைதியாக அவளையே ஊடுருவியது அவன் மனம்.
மீண்டும் தன் பெரு விரலால் அவளுடைய கீழ் இதழில் வர்ணம் பூசியவன், “எனக்கு ரொம்ப… பிடிச்சுதுடா…” என அழுத்தமாய் கூறிட நிலாவிற்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
அதற்குள் அவனே, “தேங்க்ஸ் ஜாவா….” என நிறுத்தி அவளை நோக்கி மேலும் குனிந்து, “தேங்க்ஸ் ஃபார் த கிஃப்ட்…” என்றான் சத்தமில்லாமல் காற்றோடு.
அவன் சத்தமாக சொல்லி இருந்தாலே படபடப்பாக தான் இருந்திருக்கும். கிசுகிசுத்த அந்த வசீகர குரலில் சிலிர்த்தெழுந்த காதோர முடிகளையும் துடித்தடங்கிய இதழ்களையும் அவனிடமிருந்து மறைப்பதற்குள் பெரும் பதட்டம் தலைக்கேறியது.
“இல்ல… நமக்குள்ள இருக்கற இடைவேளைய குறைக்க…” என்று சட்டென சொல்லிவிட்டவள் பின் அவன் முறுவலில் வேகமாக நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“ஹோய்” அதட்டலிடும் குரலோடு அவள் இதழ்களையும் நாக்கையும் ஆராய்ந்தான் திகழ் வருணன்.
“இல்ல… ஒண்ணுமில்ல…” சமாளித்தவள் பின் யோசித்து, “நீ..நீங்க ஒன்னும் என்னை… தப்பா நினைக்கலையே…” என்று வேறு கேட்க,
அவள் கேட்பது புரியாமல் அரை நிமிடம் சிந்தித்தவன், “அம்மாடியோய்…” என கூச்சலோடு எழுந்துக் கொண்டான். மெல்ல அவள் விழிகளை நெருங்கியவன்,
“தப்பா தான்… ரொம்பவே தப்பா தான் நினைக்கறேன்…” மென்மையான கிண்டலோடு நிலாவின் இந்த பேச்சையும் அருகாமையையும் ரசித்தான்.
“யாழ்… உன்னோட பரிதவிப்பும் உன்னோட குழப்பமும் எனக்கு நல்லாவே புரியுது. நமக்கு கல்யாணமாகி இரண்டு வருஷமாகிடுச்சு. அந்த இரண்டு வருஷத்தோட நினைவுகள் உனக்கு இல்லன்னா உன்னோட எண்ணங்கள் எப்படியெல்லாம் இருக்கும், எதையெல்லாம் உன்னால ஏத்துக்க முடியாதுனு என்னால புரிஞ்சிக்க முடியுது.
மத்த உறவுகளை சொல்ல முடியுற மாதிரி நான் உன்னோட ஹஸ்பண்ட்னு என்னால சொல்ல முடியாது தான். அப்படியே சொன்னாலும் அதை உன்னால எந்த அளவுக்கு அக்செப்ட் பண்ண முடியும்னு எனக்கு தெரியல. நிச்சயமா ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் உறவு அப்படியானது இல்லை. இரண்டு வருஷத்தோட நினைவுகள் உனக்கு வருமா வராதானு எனக்கு தெரியல… ஆனா, சீக்கிரமே வரணும்னு தான் நானும் ஆசைப்படுறேன்” என நெடிய பெருமூச்சொன்றை வெளியிட்டான் திகழ் வருணன்.
“பட், அதெல்லாம் இல்லாமலும் என்னால உன்னை காதலிக்க முடியும். அதே மாதிரி நீயும் தெளிவான மனநிலையோட என்னை முழுசா ஏத்துக்க தயாரானதும் நாம… நம்ப லைஃப்ப லீட் பண்ணுவோம். அதுவரைக்கும் நான் உனக்காக இப்படியே காத்திருப்பேன் ஜாவா…” இதழ்களின் வடிவங்களை மாற்றிய புன்னகையோடு அவள் முகத்தில் விழுந்திருந்த குழலை மெல்ல காதுக்கு பின்னால் ஒதுக்கினான்.
மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றிருந்தவளின் அசையாத பார்வையில் வாய்விட்டு சிரித்தவன் அவள் இடையை சுற்றிக்கொண்டு அவளை தன்புறமாய் இழுத்தணைத்தான்.
ஹாய் பூக்களே,
பூக்களை விரும்பா வேர்களில்லை கதையை தொடர்ந்து முத்தத் தீற்றல்கள் கதையோடு உங்களை சந்திக்க ஓடி வந்துட்டேன். கதையோட முன்னோட்டத்தை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
மே 1 - ஆம் தேதியில் இருந்து கதையில் சந்திப்போம்.
- அபிராமி இளவரசன்
