• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,336
Reaction score
3,980
Points
113
நேரம் – 47 💜

“பரிதி... எழுந்திரி. அத்தை அங்க எல்லாரையும் வர சொல்றாங்க!” வாணி பரிதியின் தோள் தொட்டு உசுப்ப, “ஹம்ம்...” என்ற முனகல் மட்டுமே அவனிடம்.

“இன்னும் ஃபீவர் சரியாகலையா உனக்கு?” காலை, மதியம் என இரண்டு வேளை சாப்பிட்டுவிட்டு மாத்திரையை விழுங்கி உறங்கியிருந்தான் பரிதி. இருந்தும் அவன் உடல் வெப்பநிலை குறையவில்லையா என்ற கவலையோடு அவன் கழுத்தில் கை வைத்தாள். அவள் கரத்தை அப்படியே பிடித்தவன், கன்னத்தோடு அழுத்தினான். அவன் முகத்தையே பார்த்தாள் வாணி. அழுதிருக்கிறான் போல. மிக லேசாய் கண்ணீர் தடயங்கள் கன்னத்தில் தெரிந்தன. இவளுக்கு மனத்தில் பாரமேறியது.

“பரிதி!” மெல்லிய குரலில் அவன் செவியருகே குனிந்து அழைத்தாள் வாணி.

“சாரி வாணி... என்னால எழவே முடியலை. ரொம்ப வலிக்குது டீ. நான் கண்டிப்பா வரணுமா?” என தீனமானக் குரலில் கேட்டான் அவன். இவள் சில நொடிகள் யோசித்தாள்.

“நீ அங்க வர வேணாம். எழுந்து ரெப்ரெஷாகி ஹால்ல வந்து உக்காரு. அத்தை, மாமா, சரோ எல்லாரும் வர்றாங்களாம். இங்கதான் வருவாங்க. உன் அம்மா, அப்பாவையும் இங்கயே வர சொல்றேன் நான்!” என்றாள். அவன் எரிந்த கண்களை மெல்ல தேய்த்துவிட்டுக் கொண்டே எழுந்தமர்ந்தவன், வாணியின் கைகளை விடவில்லை.

“ரொம்ப தலை வலிக்குது வாணி. ஸ்ட்ராங்கா ஒரு காஃபி போட்டு தரீயா?” என சோம்பலோடு கட்டிலிலிருந்து இறங்கி நின்றான். இவள் மெதுவாய் பார்வையை அவன் கை, கழுத்து, முதுகு என படரவிட்டாள். சிவந்து செவ்வரியோடியிருந்தது புண்கள். பின்னர் தயங்கி அவன் முதுகைத் தொட்டாள்.

“ச்சு...” என முகத்தைச் சுளித்தவன், “மறுபடியும் ஆயின்மெண்ட் போட்டு விடுறீயா வானு? அது போட்டா கொஞ்சம் ஜில்லுன்னு இருக்கு!” என கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான். வாணி மீண்டும் களிம்பை எடுத்து வந்து காயமிருந்த இடத்திலெல்லாம் பூசிவிட்டாள்.

“ரெப்ரஷாகி வா. காபி தரேன்..” என இவள் அகன்றாள். எப்படியும் காமராஜ் குடும்பமும் வந்துவிடுவார்கள் என்பதால் எல்லோருக்கும் சேர்த்து குளம்பி தயாரித்தாள். சிந்தாமணிக்கு அழைத்து பரிதிக்கு காய்ச்சல் சரியாகவில்லை என்பதால் அவரை இங்கே அழைக்க, அவருக்கும் சின்னவர்கள் முன்னிலையில் இந்தப் பிரச்சனையை பேச விருப்பமில்லை. மருமகள் அங்கு அழைக்க, சரியென்றுவிட்டார்.

வந்ததும் நடந்த அனைத்தையும் சிந்தாமணி கணவரிடம் பகிரவில்லை. முதலில் அவருக்கு என்ன நடந்தது என முழுதாகத் தெரியவில்லை. யார் உண்மை விளம்பி, யார் பொய்யுரைக்கிறார்கள் என அவராலே இனம் கண்டறிய முடியவில்லை. மாற்றி மாற்றி பழியைப் போட்டுக்கொண்டு, இப்போது அதை ஒப்பும் கொள்கிறார்கள். பெற்றவராக பிள்ளைகளின் வாழ்க்கையை சீராக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தவர், பின்னர் மார்த்தாண்டத்தை அமர்த்தி மெதுவாக நடந்த அனைத்தையும் கூறினார். மார்த்தாண்டத்திற்கு மகன் செயலில் முகம் சிவந்தது. கட்டிய மனைவியை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணின் பின்னே அவன் சென்றான் என்பதை அவரால் ஏற்கவே முடியவில்லை. எத்தனைக் கண்டிப்பும் ஒழுக்கமாய் வளர்த்தும், அவன் இப்படி செய்ததை எண்ணி மனத்திற்குள் கோபம் கனன்றது.

அவரைப் பார்த்த சிந்தாமணி ஏற்கனவே தான் அடித்ததில் மகனால் ஒருவாரம் எழ முடியாமல் போகலாம். நீங்கள் கோபப்படாமல் இதை எப்படி சரி செய்வது என்பதை யோசிக்க வேண்டுமென வலியுறுத்தியவர், அப்போதே காமராஜ், அம்சவல்லிக்கும் அழைத்து பக்குவமாய் நடந்ததை விவரித்துவிட்டார். அவர்களுக்கு கேட்டதும், அதிர்ச்சி, கோபம், ஆற்றாமை என பொங்கிற்று. அவர்கள் உடனே கிளம்பி வருகிறேன் என்றுவிட்டனர்.

சரியாய் அவர்கள் மூவரும் வந்திறங்க, இவர்கள் இருவரும் இணைந்து கொண்டனர். அம்சவல்லி முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடித்தது. சரவணன் நடந்ததைக் கேட்டு கொதித்துப் போனான். எப்படி பரிதி வாணிக்கு துரோகம் செய்யலாம் என அவனது கோபம் கரைக் கடந்தது. பரிதியை பார்த்ததும் அவன் முகத்திலே ஓங்கிக் குத்தி மூக்கு, முகத்தையெல்லாம் உடைத்துவிடும் வேகத்தோடு நடந்தான்.

வாணி பரிதிக்கு குளம்பியை சூடு குறைய ஆற்றிக் கொடுக்க, அவன் நீள்விருக்கையில் அமர்ந்து மெதுவாக குடித்துக் கொண்டிருந்தான். கால்சராய் மட்டும் அணிந்திருந்ததால், மேலே ஒரு துண்டு போர்த்தியிருந்தான். அவனைப் பார்த்ததும் விறுவிறுவென உள்ளே நுழைந்த சரவணன், அவன் கையிலிருந்த குவளைத் தள்ளிவிட்டு அடிக்கப் பாய, “ஏய்... சரோ... என்ன பண்ற நீ?” என வாணி அவனைப் பதறி தடுத்திருந்தாள். அவள் கவனிக்காமல் விட்டிருந்தால், இந்நேரம் பரிதியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியிருக்கும். அவளுக்கு நெஞ்சு படபடத்தது. ஒரு நொடி பரிதி நன்றாக இருக்கிறானா என அவசர அவசரமாக அவன் மீது பார்வையை ஓட்டினாள்.

“தம்பி... பொறுமை அவசியம். என் முன்னாடியே என் புள்ளை மேல கை நீட்டுவியா நீ?” மார்த்தாண்டத்திற்கு மகன் சோர்வாக அமர்ந்திருந்த விதத்திலே கோபம் பின்னகர்ந்திருந்தது. அவன் மீது அவருக்கு கோபம் என்றாலும், மூன்றாம் மனிதனை அடிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்க அவர் மனம் ஒத்துக் கொள்ளாது.

சரவணன் தட்டிவிட்ட குளம்பி பரிதியின் மேலே கொட்டி, தொடை, கால் என படர்ந்ததும் பரிதிக்கு புண்ணெல்லாம் எரிந்தது. அவன் முகத்தைச் சுளித்து வலியைப் பொறுத்துக் கொண்டான்.

“உங்கப் பையன் பண்ண வேலைக்கு பொறுமையா இருக்குறது ரொம்ப அவசியம்? என்ன புள்ளையை வளர்த்திருக்கீங்க? வசதி இல்லைன்னாலும் நல்ல குடும்பம்னு நினைச்சுதானே பொண்ணுக் கொடுத்தோம். ஆனால் உங்க மகன் என்ன பண்ணிட்டு வந்திருக்கான்?” அம்சவல்லி சப்தமிட, வாணி அவரைக் கெஞ்சலாகப் பார்த்து கையை அழுத்திப் பிடித்தாள். வேறு எதுவும் பேசாதீர்கள் என அவள் முகம் அவரிடம் கெஞ்சிற்று. அவரது பேச்சில் சிந்தாமணியும், மார்த்தாண்டமும் முகம் கறுக்க நின்றிருந்தனர். பரிதிக்கு அதைப் பார்த்து கோபம் வந்தது.

“அத்தை... ப்ளீஸ்... கொஞ்சம் பொறுமையா பேசலாம். நீங்க... அவங்களை எதுவும் பேசாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கும். அம்மாவுக்கு அப்புறம் என்னை மக மாதிரி பார்த்துக்கிட்டவங்க என் அத்தை. மாமாவும் இதுவரைக்கும் என்கிட்டே ஒரு வார்த்தை அதட்டிப் பேசுனதில்லை. எனக்கும் பரிதிக்கும்தான் பிராப்ளம்.‌ மத்தபடி நடந்தது உங்களை மாதிரி இப்போதான் அவங்களுக்கே தெரியும். அவங்களை நீங்க எதுவும் குறை சொல்லாதீங்க” என அம்சாவிடம் அவள் கெஞ்ச, சரவணன் அவளை உறுத்துப் பார்த்தான். அவன் கைகளை இறுக்கிப் பிடித்தபடியே பரிதியை பார்வையால் எரிக்க முயன்றான். வாணிக்குப் போய் எப்படி துரோகம் செய்ய அவனுக்கு மனம் வந்தது என இவனுக்குள் பெரும் சீற்றம் வெடிக்க காத்திருந்தது. தந்தையின் கண்டிப்பான பார்வைக்கும், வாணியின் அதட்டலுக்கும் அடங்கித்தான் பொறுமை காத்தான்.

“ஃபைவ் மினிட்ஸ்... எல்லாரும் உக்காருங்க. காபியைக் குடிங்க!” என்ற வாணி, “மாமா, அத்தை... நீங்ஙளும் உக்காருங்க...” என மாமனார் மாமியாரை அமைதிப்படுத்தி குளம்பியைக் கொடுத்தாள். மார்த்தாண்டமும் சிந்தாமணியும் மகன் செயலில் கூனிக் குறுகி அமர்ந்திருந்தனர். அவர்கள் அம்சவல்லியின் பேச்சை எதிர்த்துப் பேச‌ முடியவில்லை. பரிதி நடந்ததை ஒப்புக் கொள்வது போல அமர்ந்திருந்தது அவர்களை ஈட்டியாய் குத்திற்று.


“பரிதி... எழுந்து ரூம்க்குள்ளே வா நீ...” வாணி அவனை அழைத்தாள்.

அவன் கோபத்தோடு முடியாது என்பதாக இறுகிப் போய் அமர்ந்திருக்க, “உன்னை ரூம்க்குள்ள வர சொன்னேன் நான்...” என அவள் அதட்டலாய் அழைக்க, மறுக்க முடியாமல் எழுந்து நடந்தான். உள்ளே சென்றதும் வாணி அவன் மேலிருந்த துண்டை அகற்றினாள். குளம்பி மிதமான சூடு என்றாலும் கூட அவன் தோள், தொடை மேலும் சிவந்தது.

ஒரு பருத்தி துணியை எடுத்து குளம்பியைத் துடைத்தாள். ஈரம் பட்டால் புண் சீழ் வைக்கலாம் அல்லது ஆற நேரமெடுக்கும் என செவிலியர் அறிவுறுத்தியது நினைவு வர, அவள் தொட்டு அழுத்தி துடைத்ததும் பரிதி வலியில் முகம் சுளித்தான். வாணியின் கண்களில் கண்ணீர் பெருகிற்று. ஏற்கனவே அவன் வலி தாளாமல் முனக, சரவணன் வேறு அவன் வேதனையை அதிப்படுத்திவிட்டான். தன் விழி நீரைத் துடைத்துக்கொண்டே அவனுக்கு மீண்டும் களிம்பை பூசினாள்.

கால்சராயை மெல்ல உயர்த்தி அவன் தொடையில் களிம்பை வாணி தடவ, பரிதி சங்கடத்துடன் அவள் கையைப் பற்றினான். அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவனுக்கு வலிக்காதவாறு மெல்ல களிம்பை தடவினாள்.

பின்னர் கண்ணை சிமிட்டி அவனை நிமிர்ந்து நோக்கியவள், “ரொம்ப எரியுதா பரிதி? சாரி அவன்... அவன் என் மேலருக்க பாசத்துல இப்படி பண்ணிட்டான். சாரி!” என்றாள் முகம் கசங்க. அவள் கண்ணீர் தனக்காக என்ற போது பரிதிக்கு மனமெல்லாம் வேதனை நிரம்பிற்று. இதற்கு முன்னேயும் நிறைய முறை அவளை அழ வைத்திருக்கிறான். ஆனால் இப்போது அவள் விழிநீர் கண்டு மனம் தவித்துப் போனது. தாலியைக் கழற்றும்போது இப்படித்தான் அழுதாள். அந்தக் கண்ணீர் முழுவதும் தனக்கான அன்புதான் நிறைந்து கிடந்ததை இப்போதுதான் இவன் காண்கிறான். கண்ணிருந்தும் குருடனாக இருந்துவிட்டோம் என காலம் கடந்து மனம் சுணங்கியது.
 
Administrator
Staff member
Messages
1,336
Reaction score
3,980
Points
113
அவளையே சில நொடிகள் இமையசையாமல் பார்த்த பரிதி, “உனக்கு என்னைவிட்டு போறதுதான் நிம்மதின்னா நீ தாராளமா போ வாணி!” என்றான் தொண்டையைச் செருமி சரிசெய்து. பேச முடியாமல் என்னவோ குரல்வளையை இறுக்கிப் பிடித்தது. அவள் கண்ணீரோடு அவனை சலனமில்லாமல் பார்க்க, தயங்கியபடியே மெல்ல கரத்தை உயர்த்தி அவள் தலையைத் தடவியவன், ஒற்றைக் கன்னத்தைப் பற்றினான்.

“நான் உன்னை இனிமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் வாணி. வெளிய போய் ம்யூட்சுவலா பிரிஞ்சிடுறோம்னு சொல்லிடலாம். நானும் சரின்னு சொல்றேன். உன் மாமா, அத்தை, சரோ... யாரும் என் அம்மா, அப்பாவை பேசக் கூடாது வாணி. நான்தான் தப்பு பண்ணேன். என்னை அடிக்க, திட்ட அவங்களுக்கு உரிமை இருக்கு. மத்தபடி என் பேரண்ட்ஸை பேசக் கூடாது. அவங்களை இப்படி பார்க்க எனக்கு கூசுது!”‌ என்றவன்,

“ஆனாலும் நீ அவங்களைக் கஷ்டப்படுத்தியிருக்க வேணாம் வாணி. உன்னைக் கன்வின்ஸ் பண்ணத்தான் அம்மாவைக் கூப்பிட்டு வந்தேன். பட், என்னென்னமோ நடந்து போச்சு. எல்லாரும் என்னைப் பொறுக்கி மாதிரி பார்க்குறது கூடப் பிரச்சனையில்ல. உன் அத்தை, மாமா முன்னாடி என் பேரண்ட்ஸ் தலை குனியிறது எனக்குப் பிடிக்கலை‌. இப்போ கூட அக்ரீமெண்ட் விஷயத்தைக் சொல்லிடலாம்னு தோணுது. ஆனால், இதுக்கும் மேல உன்னைக் கஷ்டப்படுத்த வேணாம்னு அமைதியா இருக்கேன்!” என சில நொடிகள் நிறுத்தியவன்,

“நான் உனக்குத் துரோகம் பண்ணிட்டேனா வாணி? உன்கிட்டே நான் நடந்துகிட்டே‌ முறை தப்புதான். உன்னைத் திட்டி அழ வச்சிருக்கேன். பட், நம்ப மேரேஜ் உண்மையில்லதானே?
அக்ரீமெண்ட் மேரேஜ்னு அதை ப்ரேக் பண்ணிட்டு எனக்குப் பிடிச்ச பொண்ணா தேடிப் போனேன். பட், அது செட்டாகலை. என்னமோ உன்னை மிஸ் பண்ணக் கூடாதுன்னு திரும்பி வந்து கெஞ்சிட்டிருக்கேன். இதுல என் அப்பாம்மா மேல என்ன தப்பிருக்கு வாணி?” ஆற்றாமையுடன் கேட்டான் பரிதி. அம்சவல்லியின் ஒரே ஒரு சுடு வார்த்தைக்கு பெற்றவர்கள் முகம் குனிந்ததும் இவனுக்கு சினம் மிகுந்தது. அவனளவில் இந்த ஒப்பந்த திருமணத்திற்கு சரியாகத்தான் இருந்திருக்கிறான். என்ன அவர்களே எதிர்பாராமல் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பை வைத்துவிட்டிருந்தனர். அப்படி மட்டும் நடக்காமல் போயிருந்தால், வாணியே மதியுடனான தன் திருமணத்தை எடுத்து நடத்தியிருக்க கூடும் என எண்ணம் சென்றது. தன்னை எத்தனை கீழ்மை படுத்தினாலும் அவனால் பொறுக்க முடியும். தன்னால், தன்பொருட்டு பெற்றவர்கள் தலைகுனிவதை ஒரு மகனாக அவன் பெரிய அவமானமாக எண்ணினான்.

சில நொடிகள் அவனையே பார்த்திருந்த வாணி, “சாரி பரிதி, நீ சொல்றதா சரிதான். அக்ரீமெண்ட் படி நீ கரெக்டா நடந்திருக்க. பட், நான்தான் ரொம்ப சொதப்பிட்டேன். அது... அத்தை...” என்றவள் பின்னர் அதை திருத்தி, “உங்கம்மா கேட்கும்போது உன் மேல எனக்கு கோபம். அதான் என்ன செய்றேன்னு தெரியாம நடந்த எதையும் முழுசா சொல்லாம உன் மேல தப்பிருக்க மாதிரி சொல்லிட்டேன். உண்மையிலே இந்த விஷயத்துல நான்தான் தப்பு. ஒன்னு நடந்ததை முழுசா சொல்லிருக்கணும். இல்ல, உனக்கும் எனக்கும் செட்டாகலைன்னு முடிச்சிருக்கணும். தேவையில்லாம மதியை இழுத்து உன் கேரக்டரை ஸ்பாயில் பண்ணிட்டேன். சாரி!” கண்ணோரம் அரும்பிய நீரை இமை சிமிட்டி தடுத்து அவனைப் பார்த்தாள்.

பின்னர், “அக்ரீமெண்ட் பத்தி எல்லார்கிட்டயும் சொல்லுறது பிரச்சனை இல்ல பரிதி. இப்போ பெரியவங்க கோபம், நம்ப ஒழுங்கா வாழ்க்கையை வாழலைன்னுதான். பட், அதைப் பத்தி சொன்னா ரொம்ப உடைஞ்சு போய்டுவாங்க. ஊரைக் கூட்டி எல்லாரையும் ஏமாத்திட்டோம்னு அவங்க வருத்தப்படுவாங்க. அதுக்கு இப்படி நம்ப சண்டை போட்டு சிரிச்சா கூட புருஷன், பொண்டாட்டி சண்டைன்னு முடிஞ்சிடும். எல்லாத்தையும் சொல்லிட்டு நான் கிளம்பி போய்டுவேன். என் அத்தை, மாமா கோப்பபடுவாங்கதான். ஆனால் அக்செப்ட் பண்ணிப்பாங்க. அப்படியே இல்லைனாலும் கொஞ்ச நாள்ல ஏத்துப்பாங்க‌. ஆனால் உங்க வீட்ல... நீ இன்னும் வாழவே ஆரம்பிக்கலை பரிதி. அடுத்து உனக்கு யாராவது பிடிச்சுப் போய் வீட்ல சொன்னா கூட எந்த விஷயத்துக்கும் உன்னை அவங்க நம்ப மாட்டாங்க. அது உனக்கு ஹேர்டாகும். எல்லாரையும் யோசிச்சுத்தான் நான் மறைக்கலாம்னு டிசைட் பண்ணேன்!” என்றவள்,

“இப்போ உனக்கு அக்ரீமெண்ட் பத்தி எல்லார்கிட்டயும் சொல்லணும்னு தோணுச்சா நீ சொல்லு. நான்தானே எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணேன். நான் மன்னிப்பு கேட்டு முடிச்சி விடுறேன். நீ உன் வாழ்க்கையைப் பார்த்துக்கோ. எனக்கு... நான்...இது பெருசா என்னைப் பாதிக்காது. என்னைக் கேள்வி கேட்க அம்மாப்பாவா இருக்கா? சோ, சொல்லிடலாம்!” என எழுந்து நின்று முறுவலித்தாள். இத்தனைப் பெரிய பிரச்சினையின் அடிநாதமே அவள் தானே? அப்போது யோசிக்கும்போது சுந்தரியின் உடல்நிலையை மட்டும்தான் எண்ணி செயல்பட்டாள். ஆனால் அவள் செயல் எத்தனை அபத்தம் என இப்போது ஒவ்வொரு முறை அடிவாங்கும்போது உணர முடிந்தது. பரிதி அவள் கையைப் பிடித்து, வேண்டாம் என்பதாகத் தலையை அசைத்தான்.

“வேணாம் வாணி. நடந்தது அப்படியே இருக்கட்டும். இதோட முடிச்சுப்போம். மேலும் பிராப்ளத்தை காம்ப்ளிகேட் பண்ண வேணாம்!” அழுத்தம் திருத்தமாக அவன் உரைக்க, இவளும் தலையை அசைத்தாள். வெளியே சென்றதும் முதலில் அம்சவல்லியைப் பேச விடாது செய்ய வேண்டும். என்ன சொல்ல, எப்படி பேச என மனதிற்குள்ளே ஓட்டிப் பார்த்தாள். இன்னையோடு அனைத்தையும் முடித்துவிட்டு இதன் எச்சத்தை தொடராது ஊர் செல்ல வேண்டும் என மனம் கண்டித்தது.

“சரி... நீ எதுவும் பேச வேணாம் பரிதி. அத்தை உங்கம்மாப்பாவை எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கிறேன்‌!” என்றவள், “அகைன் சாரி. நானே சரி பண்றேன்!” என்றாள் அவள். பரிதி அவளையே பார்த்தான். இத்தோடு அவளுக்கும் அவனுக்குமான உறவிற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறாள். அவனுக்கும் அது புரிந்தே இருந்தது. இந்த ஒரு விஷயத்தை தவிர்த்து பார்த்தால், தவறு முழுவதும் அவனுடையதுதான். ஆனாலும் அதைச் சொல்லிக் காண்பிக்காமல் பிரச்சனையை தீர்க்க நினைக்கும் வாணியை மனம் மதியோடு ஒரு நிமிடம் ஒப்பிட்டுப் பார்த்ததும், அந்த நினைவு பிடிக்காதவனாக முகம் சுளித்து, மூச்சை இழுத்துவிட்டான். பிரிவுதான் இறுதி‌ முடிவு என்றானப் பின்னே அவளிடம் மனத்திலிருப்பதைக் கொட்டிவிட‌ முனைந்தான்.

“சாரி வாணி... இதை நான் இப்போ சொல்லக் கூடாதுதான். பட், இப்போ சொல்லைன்னா வேற எப்போ சொல்ல முடியும்னு தோணலை எனக்கு!” என்று முயன்று குரலை சரிசெய்தவன்,

“மதியைவிட்டுட்டு வந்தப்போ அவ இல்லாம என்னால வாழ முடியும்னு தோணுச்சு. அப்போ ஏதோ ப்ரீடம் கிடைச்ச ஃபீல். பட், நீ போனப்போ ஐ ஃபீல் வெரி லோன்லி. என்கிட்டே பேசலைன்னா கூட உன்னோட ப்ரசென்ஸை நான் எப்பவுமே உணருவேன் வாணி‌. நீ இல்லாதப்போதான் உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன். நீ எனக்கொரு குட் கம்பேனியன். நீ இல்லாம வாழ முடியாதுன்னு ஒரு நொடி தோணுச்சுன்னு கிளம்பி வந்தேன். பட், உனக்கு விருப்பம் இல்லைன்னு புரியது வாணி. ஏற்கனவே உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் நான். இதுக்கும் மேல வேணாம். நீ நிம்மதியா இருந்தா அதுவே எனக்குப் போதும்!” என்றவனை அவள் சலனமற்றுப் பார்த்தாள்.

“நீ... நீ எனக்கு ஒரு அம்மா ஃபீல் தந்த வாணி. என்னைக் கேர் பண்ண, கைட் பண்ண, தப்பு செஞ்சா திட்டுன. அதான் உன்னைவிட்டுக் கொடுக்க முடியாம கிடந்து தவிக்கிறேன் போல. சாரி ஃபார் எவ்ரிதிங்க். நீ உன் இஷ்டப்படி வாழ்ந்துக்கோ. இனிமேல் என்னாலயோ, என் குடும்பத்தாலயோ உனக்கு எந்தக் கஷ்டமும் வராது. இதுதான் நம்ப கடைசி சந்திப்பா இருக்கும். ஐ வோன்ட் டிஸ்டர்ப் யூ எனி மோர்!” என்றவன், உதட்டைக் கடித்துவிட்டு, “ஐ லவ் யூ வாணி. இது உன் முகத்தைப் பார்த்து வரலை‌. நீ வெள்ளையா, கருப்பா, ஒல்லியா இந்த மாதிரி எந்த மெஷர்மெண்டும் பார்க்காம மனசுலருந்து சொல்றேன். ஆமா, உனக்கு ஏன் என்னைப் பிடிச்சதுன்னு தெரியலை. பட், நான் உனக்காகத்தான் உன்னை லவ் பண்றேன். நீ ரொம்ப நல்லவ வாணி. ஆனால் என்கிட்டே வந்து கஷ்டப்பட்டிருக்க வேணாம். விக்னேஷ் சொன்னப்போ புரியலை. இப்போதான் அதை உணர்றேன். வாட் எவர், யூ டிசர்வ் பெஸ்ட் பார்ட்னர். நான்லாம் சுத்த செல்ஃபிஷ். அதை ஒத்துக்குறதுல எனக்கு இப்போ எந்த அப்ஜெக்சனும் இல்ல. தேங்க் யூ ஃபார் மேக்கிங் மீ எக்ஸ்பீரியன்ஸ் த ரியல் மீனிங் ஆப் லவ்!” என புன்னகைத்தவன்,
‌நெஞ்சை அடைத்த துக்கத்தை விழுங்கினான். அவள் வேண்டும் தான். ஆனாலும் அது அவள் பூரண மனத்தோடும் வர வேண்டும். உடைத்து அனுப்பியவளை, உடனே ஒட்ட வைத்து தன்னோடு தக்க வைக்க முடியாது என பரிதிக்குப் புரிந்தது. இருவரும் வெளியே வந்தனர். வாணியின் மனம் மூளை அனைத்தும் பரிதியின் பேச்சுத்தான் நிரம்பி கிடந்தது. எதையும் சிந்திக்கும் திராணியற்றவள் போல, அவரருகே நின்றாள். அவள் அமைதியைப் பயன்படுத்திக் கொண்ட பரிதி முந்திக் கொண்டான்.

“அம்மா, அப்பா... அங்கிள், ஆன்ட்டி... எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. நாங்க பண்ணது தப்புதான். ஆரம்பத்துல நல்லா இருந்த வாழ்க்கை போக போக சலிச்சிடுச்சு. என்னாலயும் அவளோட வாழ முடியலை. அவளுக்கும் நான் வேணாம்னு தோணுச்சு. சோ, நாங்க பிரியுற முடிவை எடுத்திருக்கோம். உங்ககிட்டே இதை இன்பர்மேஷனா கொடுக்குறது எங்க தப்புதான். அங்க இருந்ததால் எதையும் நாங்க ஷேர் பண்ண முடியலை. வீ ஆர் சாரி ஃபார் தட்!” என்றான். வாணி சிலை போல நின்றிருந்தாள்.

“அங்கிள், ஆன்ட்டி. உங்களுக்கு என் மேல கோபம் இருந்தா என்னைத் திட்டுங்க. என் அம்மா, அப்பாவை எதுவும் பேசக் கூடாது நீங்க. என்னைக் கேள்வி கேளுங்க. தப்பு பண்ணவன் நான்தான்!” என்றான் அவர்களிடம்.

“இதுக்கும் மேல கேட்க என்ன இருக்கு? உன்னோட லட்சணம்தான் தெரிஞ்சு போச்சே. கண் காணாத இடத்துலருந்து தப்பு செஞ்சா தெரியாதுன்னு நினைச்சுட்டீயா நீ. நல்ல பையன்னு நம்பி எங்கப் பொண்ணைக் கொடுத்து மோசம் போய்ட்டோம். பணமும் இல்ல, ஒழுக்கமும் இல்ல!” அம்சா வெடுக்கென பேச, “அத்தை...” என வாணி குரலை உயர்த்தாது அவரை அடக்க முயன்றாள்.

“வாணிமா... உன்னோட முடிவு என்ன?” எனக் கேட்ட காமராஜ் அவளை அழைக்க,

அவரருகில் சென்றவள், “நாங்க பிரியுறதுதான் சரியா இருக்கும் மாமா. யாருக்கும் என்னால எந்தக் கஷ்டமும் வேணாம். உங்களையும் நான் கஷ்டப்படுத்தியிருந்தா மன்னிச்சிடுங்க. நான்...நான் தனியாவே இருந்துடுறேன். அதுதான் எனக்கு ஒத்து வரும்!” என்றாள் கேவி வரத் துடித்த அழுகையை விழுங்கி யாரையும் பார்க்காமல்.

அவள் தோளோடு அணைத்த காமராஜ், “வாணியோட முடிவுதான் எங்க முடிவும். உங்கப் பையனோட அப்படியொன்னும் கஷ்டப்பட்டு அவ வாழ வேணாம். அவளுக்கு நல்ல வாழ்க்கையா நாங்க அமைச்சு தரோம். என் அக்கா இருந்தாலும் இந்த முடிவுதான் எடுத்திருப்பாங்க!” என்றவரின் முகத்தில் அதிருப்தி, வாணியின் வாழ்க்கை மீதான கவலையும் தெரிந்தது. பரிதியின் செயலை அவர்கள் மன்னிக்க தயாராகவில்லை.

“பரிதி... வீட்டுக்கு கிளம்பு நீ!” மார்த்தாண்டம் மகனிடம் கடுமையாகப் பேச, வாணி பயத்துடன் அவரைப் பார்த்தாள். அவரும் கை நீட்டி விடுவாரோ என அவளுக்கு பெருந்தயக்கமாகிற்று.

“மாமா... அவருக்கு உடம்பு சரியானதும் வரட்டும். ரெண்டு நாள்ல நான் கிளம்பிடுவேன். ப்ளீஸ் நீங்க அவரைத் திட்டாதீங்க, அடிக்காதீங்க!” என்றாள் கெஞ்சலுடன். அனைவரும் அவளைப் புரியாது கவலையுடன் பார்த்தனர். பரிதி மட்டும் நெஞ்சு முட்டும் வேதனையுடன் அவளைப் பார்த்திருந்தான். எவ்வளவு அருமையான பெண். அவள் தன்னருகே இருக்கும்போது அவளைத் தான் உணராமல் போய்விட்டோம் என அடைத்த மனத்தோடு அவளைப் பார்த்தான்.

“ஆமா டீ... அவன் உன்னை வேணாம்னு வேறொருத்திப் பின்னாடி போவான். நீ அவனுக்கு சேவகம் பண்ணு!” அம்சவல்லி வாணியின் முதுகில் அடிக்க வர, பரிதி அவரது கையைப் பிடித்து தடுத்துவிட்டான்.

“என் முன்னாடி நீங்க அவளை அடிக்க கூடாது...” என்றான் கண்டிப்பான குரலில். சரவணனுக்கு கோபம் வந்தது. அவன் முன்னே எட்டுகள் வைக்க, வாணி பார்வையாலே அவனை அடக்கிவிட்டாள்.

“வாணி... கிளம்பு நீ. இங்க இருக்க வேணாம்!” அம்சவல்லி அவளைக் கையோடு அழைத்துச் செல்லப் பார்த்தார்.

“அத்தை.‌.‌. நீங்க போங்க. நான் நாளைக்கு வரேன்‌. ட்ராவல் பண்ணது டையர்டா இருக்கு!” என்றவள், அவர்களைப் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள். மூவரும் மனத்தாங்கலுடன் செல்ல, இவள் சென்று சிந்தாமணி காலருகே அமர்ந்து அவர் மடியில் முகம் புதைத்தாள்‌. பரிதி அமைதியாகப் பார்த்திருந்தான். அவள் விசும்பல் இவனுக்கு கேட்டது.

“சாரி அத்தை‌.. உங்க எல்லாரையும் நாங்க கஷ்டப்படுத்திட்டோம்!” என அவள் கூறவும், பெரியவர் அவளை எழுப்பி அருகே அமர்த்தினார்.

“யார்‌ மேல சரி தப்புன்னு நான் கேட்கப் போறதில்லை வாணி. ஆனால், ரெண்டு வருஷமா உன்னைப் பார்த்திருக்கேன். என்‌ மருமக தப்பு பண்ணிருக்க மாட்டா. நீ என்னை முடிவெடுத்தாலும் நான் உனக்கு ஆதரவாதான் நிப்பேன். உனக்கு என் மகனோட வாழப் பிடிக்கலைன்னா வேணாம். அதுக்காக உடனே எதையும் முடிவெடுக்காத ஆத்தா. கொஞ்சம் பொறுமையா யோசி. பேப்பர்ல கையெழுத்துப் போட்டுட்டா முடிஞ்சு போற உறவில்ல இது!” என்றார் அவள் தலைக் கோதி. அவள் மெதுவாய் தலையை அசைத்தாள்.

மார்த்தாண்டத்திற்கு மகனையும், மருமகளையும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒருவரால் மற்றவர் பாதிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் சண்டை போட்டு பிரிந்திருக்க வேண்டும். ஆனால் இங்கோ பிரிய முடிவெடுத்தப் பின்னரும் ஒருவரையொருவர் ஆதரிப்பதை புரியாது பார்த்தார்.

அவர் காலத்தில் பெற்றவர்கள் எடுப்பதுதான் இறுதி முடிவு. அவரும் அவர்கள் பேச்சை மீறாது வாழ்ந்து வந்தவர். ஆனால் இந்தக் காலத்து பிள்ளைகள் அனைத்தையும் எளிதாக முடிவெடுத்து தூக்கி வீசிவிடுகின்றனர். ஒரு உறவிற்குள்ளே நிலைத்து நிற்கும் திராணியற்று அடுத்த உறவை நோக்கி நகர்கின்றனர். எப்படி அவர்களால் மனத்தை எளிதில் மாற்றிக் கொள்ள முடிகிறது. அதுவும் பரிதி இப்போது நன்றாகயிருந்தால் இடுப்பில் அணிந்திருக்கும் வாரை எடுத்து அவன் உடம்பில் இரத்தம் வரும்வரை விளாசியிருப்பார். அவன் செய்த செயல் அவரைப் பொறுத்தவரை மிகப் பெரிய தவறு. ஆனால் அவன் இப்போது சோர்ந்து உடலில் ஆங்காங்கே காயத்துடனிருக்க, மகனை முறைக்க மட்டுமே அவரால் முடிந்தது.

‘உடம்பு சரியாகட்டும். காலை உடைத்து வீட்டில் அமர வைத்து விடுவோம். இவன் வெளிநாடு சென்று வேலை பார்த்தது போதும்!’ என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது.

சிந்தாமணி எழுந்து வந்து பரிதி போர்த்தியிருந்த துண்டை விலக்கிவிட்டுப் பார்த்தார். கொஞ்சம் அடி பலமாகப் பட்டிருந்ததை உணர்ந்தாலும், வாணியின் கண்ணீர் அவரை ஏதோ செய்தது. அவள் தவறு செய்திருக்க மாட்டாள். பரிதிதான் ஏதோ செய்திருக்கிறான் என்றெண்ணம் அவருள் வலுப்பெற்றது.

தாயின் கையைத் தட்டிவிட்ட பரிதி, “அதான் ரூம்க்குள்ளே விட்டு வெளுத்து வாங்கிட்டீயே. அப்புறம் இப்போ என்ன நலம் விசாரிப்பு!” என சிடுசிடுத்தான் அவன். மார்த்தாண்டம் கோபமாக அவனை நோக்கி வர, வாணி படக்கென பரிதியருகே வந்து அவனுக்கு அரவணைப்பாக நின்றாள்.

மார்த்தாண்டம் அவர்கள் இருவரையும் பார்த்தவர், “அந்தப் பொண்ணு முகத்துக்காகத்தான் நான் இவ்ளோ தூரம் அமைதியா இருந்தேன். இல்ல, வந்ததும் பெல்டை எடுத்து விளாசிருப்பேன்...” என சினந்துவிட்டு செல்ல, சிந்தாமணி மகனை வா என்பது போல பார்த்தார்.

“உங்க வீட்டுக்கு வந்தா என் உயிருக்கு உத்திரவாதம் இல்லம்மா. நீ போய் உன் புருஷனை சாந்தப்படுத்தி வை. நான் இங்கருந்து புண்ணை ஆத்திட்டு வரேன். அப்போதான் அவர் அடிக்கும்போது வாங்க கொஞ்சமாச்சும் என் உடம்புல தெம்பிருக்கும்!” என இவன் கேலியாக கூற, அவர் முறைத்துவிட்டு சென்றார்.

வாணி விறுவிறுவென அறைக்குள் நுழைந்து பொத்தென தரையில் விழுந்தவள், கால்களைக் கட்டிக்கொண்டு முகத்தைப் புதைத்து சத்தமில்லாமல் விசும்பினாள். என்னவோ அவள் ஒருத்தியால்தான் இத்தனைப் பேர் இன்று காயப்பட்டு நிற்கின்றனர்.

அவள் ஒப்பந்த திருமணம் எனப் பரிதியை அணுகியிருக்கவே கூடாது. அப்படியே திருமணம் செய்திருந்தாலும் அவனைப் போலவே இந்த திருமணத்தை வெறும் காகிதமாகப் பார்த்திருக்க வேண்டும். அவன் இந்த விஷயத்தில் வெகு சரியாய் இருந்திருக்கிறான். அதனால்தான் ஒப்பந்த முடிந்ததும் அவனுக்கான வாழ்க்கையை பார்த்துவிட்டான். தானும் அவனை போலவே இதை கையாண்டிருக்க வேண்டும்.

தாயும் தந்தையும் இல்லாமல் அநாதையாக போய்விட்ட காரணத்தினால் உடன் ஒருவன் வந்து கொஞ்சமாக பாசம் காண்பிக்கவும் பாழாய் போன மனது அவனை விரும்பித் தொலைத்துவிட்டது. அதுதான் அவளது மகாத்தவறு. கையெழுத்திட்டது போலவே சுமூகமாக பிரிந்திருந்தால்,‌ யாருக்காகவும் அவள் யோசித்து தன்னையே குற்றவாளியாக்கும் நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது.

எந்தப் புள்ளியில் அவன் மீதான
நேசம் துளிர்த்தது எனத் தெரியவில்லை. ஆனாலும் மதியோடு அவனைக் காண்கையில் எல்லாம் இவள் தன்னைத் தானே வெறுத்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் மனத்திற்குள்ளே அழுது அரற்றியிருக்கிறாள். கேட்பாரற்று தலையணையை நனைந்திருக்கிறாள். தன்னை மதிக்காத இடத்தில் அன்பு செலுத்துவது பெரிய இழிநிலை. அந்த அன்பை திருப்பி எதிர்பார்க்கவில்லை என வாணி எள்ளவும் பொய்யுரைக்க மனம் வரவில்லை. எதிர்பார்த்தாள், இன்றளவும் கூட அவளுக்கு ஒரு துணை தேவைப்பட்டது. மனத்தளவில் எதையோ தேடுகிறாள். தனக்கென பெற்றவர்கள் யாராவது ஒருவராவது இருந்திருக்கலாம். தன் நிலைமை இத்தனை சிறுமைப்பட்டிருக்காது என எண்ணித் தேம்பியழுதாள்.

“வாணி!” பரிதி அவள் அழுகை பொறுக்காமல் அவள் தோள் தொட்டு உலுக்கினான்.

“பரிதி ப்ளீஸ்...‌ என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடு!” என்றாள் தேம்பியபடியே.

“முடியாது... எதுக்கு இப்படி அழுற? அதான் நீ உன் இஷ்டப்படி இருந்துக்கோன்னு எல்லாரும் உனக்குத்தானே சப்போர்ட் பண்ணாங்க. அப்புறம் ஏன் இப்படி அழுற நீ. எனக்கு கஷ்டமா இருக்கு உன்னைப் இப்படி பார்க்க. பழையபடி நீ என்னை திட்டி, முறைச்சா கூட பரவாயில்லை. இப்படி அழாத!” என்றவனை இடையோடு அணைத்துக்கொண்டு அவன்‌ வயிற்றில் முகம் புதைத்த வாணி, “எனக்கு என் அம்மாவும், அப்பாவும் வேணும் பரிதி. அவங்க இருந்தா நான் இப்படியெல்லாம் இருந்திருக்கவே மாட்டேன்!” என்றாள் கேவியபடியே. அவன் கண்களிலும் கண்ணீர் இறங்கிற்று. எதுவும் பேசாமல் அவளை அணைத்துக் கொண்டான். சில பல நிமிடங்களில் அவளது அழுகை மெல்ல குறைந்து மெல்லிய விசும்பலானது.

பின்னர் அவனிடமிருந்து பிரிந்தவள், “நீ உங்க வீட்டுக்குப் போறதுன்னா போ. ஐ வில் பீ ஓகே!” என்றாள் அவன் முகம் பார்க்காமல் குரலை சரிசெய்து. அவள் கண்ணில் நீர் நின்றிருக்கவில்லை. அவன் அசையாது அமர்ந்திருந்தான். அவள் அவனை கண்டிப்புடன் பார்த்தாள்.

“அடி வாங்கி உடம்பெல்லாம் வீங்க வச்சுட்ட. நீதான் இதெல்லாம் ஆறுறவரை என்னைப் பார்த்துக்கணும். ஊருக்கு ஓடிடலாம்னு நினைக்காத!” என அவன் சின்ன குரலில் கடுகடுக்க, இப்போது அவள் முகத்தில் மெல்ல முறைப்பு கூடிற்று. அதில்தான் இவன் மனம் அமைதியானது.

தொடரும்...



 
Active member
Messages
264
Reaction score
215
Points
43
Idhulla periyavanga dhan romba hurt agaranga avangaluku marriage ra vishyam perusu adhai evalo easy ah break pannaradha avangloda society family respect nu papanga 😟😟😟😟
 
New member
Messages
15
Reaction score
14
Points
3
vaani realise her mistakes in this agreement marriage,,but she get bbetter oerson than parithi...
 
Top