• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,282
Reaction score
3,768
Points
113
நேரம் – 4 💜

பொள்ளாச்சி பேருந்து நிலையம் மாலை நேரத்தில் ஜனத்திரளோடு காணப்பட்டது. அப்பகுதிக்குள் நுழைந்து ஒரு ஓரத்தில் தன் மகிழுந்தை நிறுத்திய வாணி கீழே இறங்கவும், “அங்கனயே ஒரு பஸ்ஸேத்தி விட்டா நான் ஊருக்குப் போய்ருக்க மாட்டேனா பாப்பா? இவ்வளோ தூரம் வரணுமா?” என கமலா அலுத்துக்கொண்டே தன் கைப் பையைத் தூக்கி தோளில் மாட்டினார்.

“ம்ப்ச்... ஹாஃப் அன் அவர் ட்ராவல். கார்தானே உங்களை சுமந்துச்சு கமலாமா? நானா தலைல தூக்கிட்டு வந்தேன்?” அவரை மென்மையாய் முறைத்தவள், இரவு உணவு, தண்ணீர் போத்தல்கள் என வாங்கிக் கொடுத்து முன்பதிவு செய்திருந்த பேருந்தில் ஏற்றிவிட்டாள்.

“பத்திரம் வாணிமா... அம்மாவைப் பார்த்துக்கோ. கல்யாண நேரத்துல உங்க கூட ஒத்தாசையா இல்லாம கிளம்புறேன்னு சங்கடமா இருக்குடா...” என்றவர் குரலில் உண்மையான அக்கறை வெளிப்பட்டது. இத்தோடு பத்து முறையாவது இதையே கூறியிருப்பார்.

“கமலாம்மா... உங்களுக்கு டேப்ரிகார்டர்னு பேர் வைக்கப் போறேன் பாருங்க. ஒழுங்கா கிளம்பி போங்க. அக்கா உடம்பு சரியானதும் வந்தா போதும். அவதி அவதியா ஓடி வராதீங்க. கல்யாணத்துக்கு இன்னும் நாள் கிடக்கு!” என்ற உரிமையான கண்டிப்போடு இவள் அகன்றாள்.

கமலாவிற்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவருமே திருமணம் முடிந்து சென்னையில் வசிக்கின்றனர். இசைவாணியின் தந்தை சென்னையில்தான் தொழில் செய்து வந்தார். கமலா இவர்கள் வீட்டில் பத்து வருடத்திற்கும் மேலாக வேலை பார்க்கிறார். அதனாலே அவரை வேற்று ஆளாக ஒருவரும் நடத்தியது இல்லை. அவருமே வாணியிடமும் சுந்தரியிடமும் உள்ளார்ந்த அன்போடுதான் பழகுவார். அப்படித்தான் கமலா இவர்கள் வீட்டில் ஒருவராகிப் போனார்.

வாணியின் தந்தை இறந்து இவர்கள் நொடிந்து விழுந்த போது துணையாய் நின்று, அனைத்தையும் பார்த்து செய்திருந்தார். கடந்த நான்கு வருடங்களாக சுந்தரிக்கு அவர் அத்துணை ஆதரவாக இருந்திருந்தார். இவர்கள் சென்னையைவிட்டு பொள்ளாச்சியில் குடிவரும் முடிவை எடுத்தப்போது அவரும் உடன் வருவதாக கூறினார்.

“கமலாம்மா.. அக்காங்க ரெண்டு பேரும் இங்க இருக்கும்போது நீங்க அங்க வந்து என்ன பண்ண போறீங்க? பேசாம அக்கா கூடவே போய்ருங்க நீங்க. எங்களுக்காக அலையாதீங்க!” இசைவாணிக்கு கமலாவை அவரது குடும்பத்திலிருந்து பிரித்துச் செல்வதில் சற்றும் உடன்பாடில்லை. அதை வார்த்தைகளில் தெரிவித்தாள். ஆனால் கமலா அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.

இரண்டு பெண் பிள்ளைகளையும் நன்கு படித்த பையனாகப் பார்த்து மணம் முடித்து வைத்தார். அவர்கள் படிப்பு முதல் திருமணம் வரை அனைத்திலும் இசைவாணி குடும்பத்தின் பங்கு அளப்பரியது. அந்த நன்றி இவருக்கு எப்போதும் உண்டு.

“ரெண்டு புள்ளைகளையும் கட்டிக் கொடுத்து பேரன் பேத்திகளைப் பார்த்துட்டேன். அவங்கவங்க வாழ்க்கையைப் பார்த்துப்பாங்க பாப்பா. இங்க எனக்குன்னு வேற யாரு இருக்கா. பொண்ணைக் கட்டிக் குடுத்த இடத்துல போய் தங்குறது, சாப்பிட்றது எல்லாம் சரிபட்டு வருமா சொல்லு? நான் உங்களோடவே வரேன்!” என்றவரை அதற்கு மேலும் இவர்கள் வற்புறுத்தாது தங்களுடனே அழைத்துக் கொண்டனர்.

இசைவாணி என்னதான் கமலாவை வர வேண்டாம் என்று ஆரம்பத்தில் தடுத்தாலும் அவரில்லாது அவரது இடத்தில் வேறொருவரைப் பொருத்திப் பார்க்கவே முடியவில்லை. கமலா தன் தாயின் மீது வைத்திருக்கும் மரியாதையும் அன்பையும் வேறொருவர் செலுத்திவிட முடியுமா என்ன? புதிதாய் வேலைக்கு வருபவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு அமைய வேண்டுமே எனக் கவலைக் கொண்டாள். ஆனால் கமலா வந்ததும் அதற்கெல்லாம் அர்த்தமற்றுப் போனது.
அவர் இருந்தால் இவளுக்கு சுந்தரியைப் பற்றிய கவலையே தேவையிராது. இவளைவிட அவர் தன் தாயை நன்றாய்ப் பார்த்துக்கொள்வார் என அத்தனையாய் மனம் நம்ப, இன்றுவரை கமலாவும் அதைக் காப்பாற்றினார்.

வாணியின் திருமணம் முடிந்தப் பிறகுதான் கமலா தனது இரண்டு மகள்களையும் பேரப்பிள்ளைகளையும் பார்த்துவிட்டு வரலாம் எனத் திட்டமிட்டிருந்தார். ஆனால் மூத்த பெண்ணிற்கு குடலிறக்கம் ஏற்பட்டு சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறிவிட, இவரது இருப்பு அங்கே இன்றியமையாததாகிப் போனது. மனத்தாங்கலுடன்தான் கிளம்பிச் சென்றார் பெண்மணி.

இசைவாணி அவரை பேருந்தில் ஏற்றிவிட்டு வழியிலிருக்கும் பல்பொருள் அங்காடியில் தேவையானப் பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்குச் சென்றாள். காய்கறிகள் மட்டும் தினமும் மார்த்தாண்டத்தின் கடையில் வாங்கிக்கொள்வாள். இங்கே பல்பொருள் அங்காடியில் கிடைப்பதை விட மார்த்தாண்டம் தினமும் வாங்கி வரும் காய்கள் புதியவையாக மற்றும் பசுமை மாறாது இருந்தன.‌ கடந்த சில வருடங்களாக தாயின் மீதான அக்கறை உணவு வடிவில் வெளிப்பட்டது.

மருத்துவர் கொடுத்த உணவு அட்டவணையின்படி நார் சத்துள்ள காய்கறிகள், பழங்கள் அனைத்தையும் அதிகமாய் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டாள். அவரது உடலைத் தேற்றி நல்லபடியாக சிகிச்சையை முடித்து இன்னும் நீண்ட காலம் அவரைக் காலனின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என மகளாய் அவளது எண்ணம் சுந்தரியை பாதுகாத்தது.

இவள் வீட்டிற்குள்ளே நுழைய, சுந்தரி அலைபேசியில் யாருடனோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். இவள் அவரருகே சென்றதும், “காமராஜ் தான்!” என கிசுகிசுத்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார். இவள் வாங்கி வந்தப் பொருட்களை சமையலறையில் அதனதன் இடத்தில் பொருத்திவிட்டு உடை மாற்றி முகம் கழுவி வந்தாள். இன்னும் அவளது தாய் பேச்சிலே மும்மரமாக இருக்க, இருவருக்கும் தேநீரைக் கலந்தாள்.

தனக்கு மட்டும் சர்க்கரையை இட்டு கலக்கியவள், அவருக்கு இனிப்பில்லாத தேநீரைக் கலந்து அவரது கரத்தில் திணித்தாள்.‌‌ மகளை மென்மையாய் முறைத்தவாறே அதைப் பருகிக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார் பெரியவர்.

இவள் கூடத்திலிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து தேநீரை சுவைத்துக் கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். அலைபாயுதே படம் ஒளிபரப்பாகியது. சட்டென அதை மாற்ற சென்றவள், பின்னர் நிதானித்தாள். அக்காவைப் பெண் பார்க்க வந்து மாப்பிள்ளையின் தம்பிக்கு ஷாலினியை மணக்க கேட்கும் காட்சி அது.

“இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்ல. எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு!” ஷாலினி மறுத்துக் கூறியதும் இவளுக்கு மனதில் பிரதீப் மீதான நெருடல் பிரவாகமாக உயர்ந்தது. கடந்த நான்கு நாட்களாக அவன் மரியாதைக்காகவாது தன்னுடைய இலக்கத்தை வாங்கி குறுஞ்செய்தி அனுப்புவான் என எதிர்பார்த்தாள். ஆனால் இந்நொடி வரை அவனிடமிருந்து எவ்வித செய்தியும் கிட்டவில்லை. என்னவோ ஓர் அபாயமணி ஒலித்து அவளைப்
கவனமாய் இருக்கச் சொல்லி முடுக்கியது. அவனை நேரில் சென்று பார்த்துப் பேசினால் மனம் தெளியும் என யோசித்தாள்.

“வாணி... கூப்பிட்றது காதுல விழலையா? அப்படி என்னடி யோசனை?” அவள் தோளை உலுக்கிய சுந்தரியைப் பார்த்தவள், “ஆஃபிஸ் டென்ஷன் மா!” என்றாள்.

“என்ன டென்ஷனோ போ, கல்யாண பொண்ணா சந்தோஷமா இருக்க வேணாமா டீ?” அங்கலாய்த்தவர், “பத்திரிகை டிசைன் செலக்ட் பண்ணணும். மாப்பிள்ளையோட அம்மா கால் பண்ணாங்க. நாளைக்கு நீயும் அந்த தம்பியும் போய் சேர்ந்து செலக்ட் பண்ணிட்டு வாங்க. அப்படியே வெளிய போய் பேசிட்டு வாங்க. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்ட மாதிரியும் இருக்கும்!” என்றார் மகள் முகத்தை ஆர்வமாகப் பார்த்து.


அவளுக்கும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அவனை அடுத்து சந்திப்பது கடினம் எனத் தோன்ற, “சரிமா.. நான் அவரோட போறேன்!” என்றாள் புன்னகைத்து.

“சரி.. சரி. உன்கிட்டே மாப்பிள்ளை ஃபோன் நம்பர் இருக்கு தானே? அவர்கிட்ட மத்ததைப் பேசிக்கோ. அவரே ஆஃபிஸ்ல வந்து உன்னை பிக்கப் பண்ணிப்பாரு!” என்றவரிடம் தலையை அசைத்தாள். பிரதீப் எண் தன்னிடம் இல்லையென்றால் தாயின் முகம் வாடக் கூடுமென எண்ணி அதைப் பற்றி அவரிடம் மகள் பகிரவில்லை.

மறுநாள் காலையில் அலுவலகம் கிளம்பு முன்னே சுந்தரியை காலை உணவு உண்ண வைத்து, மாத்திரைகளைப் போடச் செய்து நூறு பத்திரங்களோடே விடை பெற்றாள்.

காலையில் அவள் குளித்து முடித்து எப்போதும் அலுவலகம் செல்ல அணியும் உடையை உடுத்த, “என்ன வாணி இது? எத்தனை புது ட்ரெஸ் வச்சிருக்க? மாப்பிள்ளையோட முதமுதல்ல வெளியப் போற? நல்லதா போட்டுட்டு போ!” என்றார் பெரியவர்.

“ம்மா... புது ட்ரெஸ் எதுவும் ஃபிட் பண்ணலைம்மா!” மகள் அலுத்துக்கொள்ள,

கண்ணைப் பறிக்கும் வகையிலிருந்த மயில் வண்ண சுடிதாரை எடுத்த சுந்தரி, “இதைப் போட்டுட்டு போ வாணி. பளிச்சின்னு தெரிவ!” என அவள் அதை உடுத்தியப் பிறகே வேலைக்குச் செல்ல அனுமதித்தார்.

வாணி மாலை வேலை முடிந்ததும் வெளியே வந்தவள், பிரதீப் எங்கே காத்திருக்கிறானோ எனக் கண்களை சுழற்றினாள். கீழே வாகனத் தரிப்பிடத்தில் இருக்கிறானோ என யோசித்து அங்குச் சென்று பார்த்தாள்.‌ பத்து நிமிடங்கள் வாயிலிலே நின்றாள்.

வேலை முடிந்து சென்றவர்கள் எல்லாம் இவளை வேடிக்கைப் பார்த்தவாறே செல்ல, முகத்தில் எரிச்சல் படர்ந்தது. தான் கேட்டபோதே அவனுடைய அலைபேசி இலக்கத்தைக் கொடுத்திருந்தாள், இப்போது தொடர்புகொள்ள வசதியாய் இருந்திருக்கும் என அவள் அவனை மனதில் அர்ச்சித்த நொடி, அவள் முன்னே ஒரு இருசக்கர வாகனம் வந்து நின்றது.

இவள் அனிச்சையாய் பின்னே நகர, முகக்கவசத்தை அகற்றினான் பிரதீப். அவனைப் பார்த்ததும் மூச்சை வெளிவிட்டவள், “ஹாய் பிரதீப்!” என்றாள் எரிச்சலை வெளிக்காட்டாது.

“ஹாய்! போகலாமா?” அவன் கேட்டதும், இவள் தயக்கத்துடன் அவள் பின்னே ஏறினாள். மிதமான வேகத்தில் அவன் சென்றான்.

“பிரதீப்... அந்த காஃபி ஷாப்ல நிறுத்துறீங்களா? எனக்கு உங்ககிட்டே பேசணும்!” இவள் கூறியதும் நெற்றியை சுருக்கியவன், அவள் குறிப்பிட்ட தேநீர் விடுதியின் முன்னே வாகனத்தை நிறுத்தினான். இருவரும் தங்களுக்கு வேண்டியதை ஊழியரிடம் கூறவும், பிரதீப் வாணியைப் பார்த்தான்.

“என்ன பேசணும் இசைவாணி?” அவன் கேட்டதும்,

பெருமூச்சை வெளிவிட்டவள், “உங்களுக்கு இந்த மேரேஜ்ல உண்மையிலேயே சம்மதமா பிரதீப்?” எனத் தயக்கத்துடன் கேட்டாள். ஒருவேளை அவன் இயல்பே இதுதானோ? தான்தான் அவனைத் தவறாக எண்ணிவிட்டோமோ? என அவள் முகத்தில் சின்னதாய் ஒரு சங்கடம்.

பார்வையைச் சுற்றியிருந்த கூட்டத்தில் அலையவிட்டிருந்தவன், அவள் கேள்வியில் நெற்றி‌ சுருங்கத் திரும்பினான்.

“சம்மதம் இல்லாமையா இன்விடேஷன் செலக்ட் பண்ண வந்திருக்கேன்?” இப்போதும் அதே அலட்சியதொனி. இசைவாணி பொறுமையை இழுத்துப் பிடித்தாள்.

“உங்க பேச்சுக்கும் உங்க ஆட்டிட்யூட்க்கும் சம்பந்தமே இல்ல பிரதீப். உங்களுக்கு இந்த மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இருக்க மாதிரி எனக்குத் தோணலை?” என்றாள் எரிச்சலை மறைத்து.

“என் கேரக்டரே இப்படித்தான்!” அவன் தோளைக் குலுக்கினான்.

“பிரதீப்... என்னைப் பார்த்து பதில் சொல்லுங்க. எதுவா இருந்தாலும் பிராங்கா பேசிடலாம். ஏன்னா இது என்னோட வாழ்க்கை!” என்றாள் அழுத்தமாய்.

அவளது முகத்தை ஆழப் பார்த்தவன், “இப்போ உனக்கு என்னத் தெரியணும்?” எனக் கேட்டான்.

“முழு மனசா இந்த மேரேஜ்க்கு நீங்க ஓகே சொன்னீங்களான்னு எனக்குத் தெரியணும்!” அவன் முகத்தைப் பதிலுக்காகப் பார்த்தாள்.

“ஆமா... எனக்குப் பிடிக்கலை. உன்னைப் பிடிக்கலை. இந்த மேரேஜ் ப்ரபோசல் பிடிக்கலை. எதையுமே பிடிக்கலை. என் தலையெழுத்தேன்னு உன்கிட்ட பதில் சொல்றேன்!” அவன் குரலின் டெசிபல் உயர, இவளது இதயம் அவன்‌ பேச்சின் சாராம்சத்தை உள்வாங்கியதும் அதிர்ந்தது.

“அப்புறம் ஏன் சம்மதம் சொன்னீங்க?” அதிர்ச்சியுடன் கேட்டாள் அவள்.

“உன்னைக் கல்யாணம் பண்ணலைன்னா என் அப்பா, அம்மா தூக்குல தொங்கிடுவேன்னு மிரட்டுனாங்க. அதான் சம்மதிச்சேன்!” அவன் விரக்தியாக சிரித்தான்.

“யாரையும் லவ் பண்ணீங்களா?” தயங்கிய குரலுடன் கேட்டாள்.

“பண்ணேன்... ஸ்டில் பண்றேன். எப்பவும் பண்ணுவேன்!” என்றான் கண்ணை மூடித் திறந்து.

“உங்க வீட்ல ஒத்துக்கலையா?”

“ஆமா.. அவ கிறிஸ்டின். நான் இந்து. ஐஞ்சு வருஷமா உயிருக்குயிரா அவளைக் காதலிச்சேன் நான். லாஸ்ட் ஒன் இயரா என் பேரண்ட்ஸை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணி முடியாம தோத்துட்டேன். நான் எப்போ இதைப் பத்திப் பேசுனாலும் செத்துடுவேன்னு ப்ளாக்மெயில் பண்றாங்க. என்னால எந்தப் பக்கமும் போக முடியலை?” என்றான் முன்னெற்றியைக் கோதி. அவன் குரல் முழுவதும் வேதனை தெறித்தது.

“சோ... அவங்க மிரட்டலுக்குப் பயந்துதான் இந்தக் கல்யாணம்? ரைட்?” என அழுத்தமாய் கேட்டாள் இவள். அவன் தலை அசைந்து ஆமோதித்தது.

“ஹம்ம்... உங்க லவ்வரை மறந்துட்டு இந்த லைஃப்குள்ளே வர்ற எண்ணமா? இல்ல கல்யாணத்துக்குப் பிறகும் அவளை மறக்க முடியலை, பிரிஞ்சுடலாம் ப்ளா ப்ளான்னு ஏதாவது என்கிட்ட சொல்ற ப்ளானா?” என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டாள். அவன் சில நொடிகள் அமைதியாய் இருந்தான். என்னவோ தன் வாழ்க்கையைக் கையிலெடுத்துப் பொம்மை போல இவன் விளையாடுகிறானா என்ற சினம் அவள் முகத்தில்.

“எனக்குத் தெரியலை. அவளை இந்த ஜென்மத்துல என்னால மறக்க முடியாது!” என்றவன் குரல் பொய் சொல்லவில்லை. அவன் முகத்தையும் விழிகளையும் பார்த்தாள். பரிதாபம் ஒரு பக்கம் வந்ததாலும் மறுபக்கம் கோபமாய் வந்து தொலைத்தது.

“அப்போ மேரேஜ் பண்ணிட்ட பிறகு என்னை என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” என எள்ளலாகக் கேட்டாள். அவனிடம் மௌனம். அது இவளைக் சினப்படுத்தியது.

“லுக் மிஸ்டர் பிரதீப். ஒன்னு காதலிச்ச பொண்ணுக்கு உண்மையா இருக்கணும். உங்க பேரண்ட்ஸை கன்வின்ஸ் பண்ணி, தைரியமா அவளைக் கல்யாணம் பண்ணணும். இல்லை பேரண்ட்ஸ் முக்கியம்னு தோணுனா உங்க காதலியை மறந்துட்டு மூவ் ஆன் பண்ணி இந்த மேரேஜ் லைஃபை அப்செப்ட் பண்ணிக்கணும். ரெண்டும் இல்லாம அவளையும் மறக்க முடியாது, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்ற மாதிரி பேசுனா என்னால சும்மா இருக்க முடியாது. என்னதான் நான் அம்மாவுக்காக இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருந்தாலும் உங்களோட சேர்ந்து வாழ்ற முடிவோடத்தான் இருக்கேன்!” என்றாள் அழுத்தமாய்.

“அவளை மறந்து என்னால மூவ் ஆன் பண்ண முடியாது!” அவனும் அழுத்தம் திருத்தமாகக் கூற,

“ஃபைன்... அப்போ எல்லாத்தையும் இப்பவே ஸ்டாப் பண்ணிடலாம். போய் உங்க வீட்ல பேசுங்க!” என்றாள்.

“என்னால முடியாது... என் பேரண்ட்ஸ் உயிரோட விளையாட முடியாது!” அவன் சின்ன குரலில் கூறியதும் இவளது பொறுமை முற்றிலும் பறந்தது. அவன் தாய் தந்தைக்காக என் வாழ்க்கையை பாழாக்க எண்ணுவானா இவன்? அந்த உரிமையை இவனுக்கு யார் கொடுத்தது? எனக் கடுப்பாய் வந்தது.

“சோ.... உங்கப்பாம்மா உயிருக்காக என் வாழ்க்கையை அடமானம் வைக்கணும் நான்? ஹம்ம்... என் வாழ்க்கையோட விளையாட்ற உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தா? நான் என்ன மாதிரி சிட்சுவேஷன்ல இந்தக் கல்யாணம் பண்றேன்னு உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?” அப்பட்டமான எரிச்சலோடு கேட்டாள். அவன் தலை தெரியுமென அசைந்தது.

“உங்கப்பாம்மா உயிர் உசத்தி? எங்கம்மா சீப்பா போய்ட்டாங்களா? மிஸ்டர் பிரதீப். எனக்கு எல்லாரையும் விட என் அம்மா ரொம்ப முக்கியம். அவங்களுக்கு நான் நல்லபடியா கல்யாணம் பண்ணி வாழணும். அப்போதான் ஆப்ரேஷன் பண்ணிப்பாங்க. அவங்க ஹெல்த்தும் நல்லா இருக்கும். என் அம்மா ஹெல்த விஷயத்துல என்னால ரிஸ்க் எடுக்க முடியாது!” என சினந்தவள், வெடுக்கென எழுந்து வெளியே சென்றாள். இவன் குடிக்காத குளம்பிக்கு காசு கொடுத்துவிட்டு
அவள் பின்னே சென்றான்.

அவனது இருசக்கர வாகனத்தின் அருகேதான் இசைவாணி நின்றிருந்தாள். அவன் பெருமூச்சுடன் வாகனத்தை இயக்கினான். அவள் ஏறி அமர, பத்திரிகை கடை முன்பு வாகனத்தை நிறுத்தினான். இவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. கோபம் ஆற்றாமை எனப் பொங்கிற்று. இருவரும் கடமைக்கு ஒரு வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துக் கடைக்காரரிடம் கொடுத்தனர். அவளது வீடுவரை வந்து பத்திரமாய் இறக்கவிட்டான் பிரதீப்.

“ஒரு நிமிஷம் நில்லுங்க!” அவள் அழைக்கவும், அவன் நிமிர்ந்து பார்த்தான்.

“இன்னும் ரெண்டு நாள் உங்களுக்கு டைம் பிரதீப். நீங்க ஸ்ட்ராங்கா இருந்தா இந்த மேரேஜை கண்டினியூ பண்ணலாம். இல்லை உங்க லவ்வரை மறக்க முடியாதுன்னு பழைய பல்லவியைப் பாடுனீங்கன்னா இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க. அட்லீஸ்ட் என் நிம்மதியாவது மிஞ்சும்!” என்றாள் கண்டிப்பான குரலில்.

அவளைத் தயக்கத்துடன் பார்த்தவன், “இசைவாணி, உங்கம்மாகிட்டே பேசி என்னைப் பிடிக்கலைன்னு நீயே இந்த மேரேஜை ஸ்டாப் பண்ணிடு!” என்றான் சின்ன குரலில். இவளது தலை மாட்டேன் என அழுத்தமாய் அசைந்தது.

“உங்க இடத்துல யாரைக் கூட்டிட்டு வந்து என் அம்மா நிறுத்தியிருந்தாலும் நான் ஓகே சொல்லி இருப்பேன். ஏன்னா என் அம்மா எனக்கு முக்கியம். இப்போ போய் என்னால உங்களைப் பிடிக்கலைன்னு சொல்ல முடியாது. என் சிட்சுவேஷன் என்னை அலோவ் பண்ணாது. முடிவெடுக்க வேண்டியது நீங்கதான். மூவ் ஆன் பண்ண ட்ரை பண்றேன்னு நீங்க ஒரு வார்த்தை சொன்னா கூட, எனக்கு உங்களைக் கல்யாணம் பண்றதுல ப்ராப்ளம் இல்ல. இட்ஸ் அப் டூ யூ. பத்திரிகை அடிச்சு வந்து கொடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டா விஷயம் கை மீறிப் போய்டும். எதுவா இருந்தாலும் சீக்கிரம் ஒரு முடிவெடுங்க!” என்றுவிட்டு,

“காதலிச்ச பொண்ணைத் தைரியமா கல்யாணம் பண்ண முடியாத உங்களுக்கு எல்லாம் லவ் எதுக்குங்க?” மனதில் தோன்றியதை சுள்ளென கேட்டாள். அவன் முகம் அவமானத்தில் சிவந்தது.

“போதும் இசைவாணி, ரொம்ப பேசுற நீ?” அவன் சீறினான்.

“குட்... ஒன்னு இதே கோபத்தோட போய் உங்க வீட்ல மேரேஜ் வேணாம்னு பேசுங்க. இல்ல பொறுமையா யோசிச்சு என்னை ஏத்துக்க முயற்சி பண்ணுங்க. அதுவும் ரெண்டு நாள்தான் உங்களுக்கு டைம். யார் வாழ்க்கைலயும் விளையாட்ற உரிமை உங்களுக்கு இல்ல. அதை மனசுல வச்சுக்கிட்டு யோசிங்க!” அவளும் பதிலுக்கு சீறிவிட்டு செல்ல, அவன் அகன்றான்.

அவனிடம் கோபாவேசமாக பேசிவிட்டாலும் இசைவாணிக்கு பயம் தொண்டையைக் கவ்வியது. எளிதாகத் திருமணத்தை நிறுத்திவிடு என்று கூறிவிட்டாள். இந்த திருமணம் நின்றால் சுந்தரி எப்படி எதிர்வினையாற்றுவார் என நினைக்கும்போதே உள்ளங்கை வியர்த்தது.

‘எனக்கு மட்டும் ஏன் காட் இப்படியெல்லாம் பிராப்ளம்ஸ் தரீங்க?’ மனதிற்குள் கடவுளை நொந்தபடியே முகத்தை சீர் செய்து வீட்டினுள்ளே சென்றாள்.

தந்தையை சாப்பிட அனுப்பிவிட்டு கடையைப் பார்த்துக் கொண்டிருந்தான் பரிதி. அவன் கண்களுக்கு இவர்கள் இருவரும் முட்டிக்கொள்வது தெரிந்தது.

‘ஆளு பார்க்க ஆழாக்கு சைஸ்ல இருந்தாலும் அவனை ரைட் அண்ட் லெஃப்ட் வாங்கிட்டா போல. பாவம் அந்தப் பையன், இவகிட்டே மாட்டி என்னாகப் போறானோ!’ என அந்தப் பையனுக்காக வருத்தப்பட்டான். அவர்கள் பேசியது இவன் செவிகளை எட்டியிருக்கவில்லை. பார்த்ததை மட்டும் வைத்து அவனாக ஏதோ யூகித்தான்.

“அண்ணா... கடையடைச்சுட்டு வருவீயாம்.
அம்மா அவசரமா கூப்பிட்டுச்சு!” கீர்த்தி வந்து அழைத்ததும், என்னவென்ற பதற்றத்துடன் இவன் கடையைப் பூட்டிவிட்டு அவளோடு விரைந்தான்.

தொடரும்...

 
Active member
Messages
226
Reaction score
178
Points
43
Isaivani perfect
Pradeep
Love panna adhai veetala accept panna vaikkara poruppu irukku
Adhai vittu rendu kattaan velai yedhuku🤔🤔🤔🤔
 
Well-known member
Messages
499
Reaction score
358
Points
63
Isai keta thu correct than ah pradeep unna ah la love panna ponnu ah marriage panna mudiyala ne kadamai kalyanam panna ok solluva athuku vani ava vazhkai ah bali kuduka ma ah enna
 
Well-known member
Messages
1,085
Reaction score
774
Points
113
Isai superrrrrrrrr
Nalla vaangi vittaa, pradeep enna decision edukka poraan nu theriyala

Parithi veetla ennachu nu theriyala
 
Well-known member
Messages
580
Reaction score
393
Points
63
அவ கேட்டது கரெக்ட், இரண்டு நாளில் என்ன முடிவு சொல்லப் போறான்?
 
Top