• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,311
Reaction score
3,895
Points
113
நேரம் – 32 💜

இசைவாணி சோர்வு அப்பிய முகத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். நேற்றிலிருந்தே அவளுக்கு உடல் அசதியாய் இருந்தது. மாதவிடாய் நாட்கள் என்பதால் இப்படி இருக்கிறது அவளுக்கும் புரிந்தது. வீட்டில் ஓய்வெடுக்கலாம் என எண்ணினாலும் வேலை நிறையக் கிடந்தன. மனத்தைப் போட்டு அழுத்திய பாரம் அவளை இயல்பாக இருக்க விடவில்லை. எப்போதும் ஏதோ ஒரு சிந்தனையிலே சுற்றினாள். அதனாலே மூளை தன் சுறுசுறுப்பை இழந்திருந்தது.

இந்த மாதத்திற்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்று வந்தவள், அதை தனியே பிரித்தெடுக்கும் தெம்பு கூட இல்லாமல் அப்படியே படுத்துவிட்டாள். பரிதி வாரவாரம் மதி மற்றும் அவளது நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாய் வைத்திருக்க, அந்த வாரயிறுதியில் இந்திய திரைப்படம் ஒன்றின் இரவுக் காட்சிக்கு சென்று தாமதமாகத்தான் வந்தான்.

வாணியின் அறைக் கதவு மூடியிருந்தது. நள்ளிரவைத் தொட்டுவிட்டதால் அவள் உறங்கியிருப்பாள் என தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டான். ஆனாலும் அவள் சாப்பிட்டாளா? இல்லையா? என்ற கேள்வி மனதைக் குடைந்தது.

அன்றைய சம்பவத்திற்குப் பின்னே வாணி இவனிடம் பேச்சை முற்றிலும் குறைத்துக் கொண்டாள். இரண்டு முறை அவனாக சென்று பேசிய பரிதி, அவள் முகம் கொடுத்து பேசாததில் கடுப்பாகி சரிதான் போ என விட்டுவிட்டான்.

ஆனாலும் மனத்தில் ஒரு சின்ன உறுத்தல். அற்புதாவும் சரவணனனும் இவனுக்கு அழைத்து அவளைப் பற்றி அடிக்கடி விசாரித்தனர். அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படி உரைத்தனர்.
இவனும் அவள் நன்றாய் இருக்கிறாள், தேறிவிட்டாள் என்று சமாளித்தான். ஆனால் அடிக்கடி அவள் வீட்டிற்கு பின்புறம் கொட்டும் பனியையைப் பொருட்படுத்தாமல் தனியே அமர்ந்து வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதைக் கவனித்தான். என்னவோ இழந்ததைப் போன்ற அவளுடைய தோற்றம் இவன் மனத்தைப் போட்டு அழுத்திற்று.

தினமும் நேரத்திற்கு சமைத்து வைத்தாள். ஆனால் அவள் உண்டாளா என இவனுக்கு சரியாய் தெரியவில்லை. சில நேரம் நள்ளிரவு வரை தனியாய் வீட்டின் பின்புறம் அமர்ந்திருப்பாள். வெகு சிலநேரம் பக்கத்து வீட்டு முதியவரிடம் பேசச் செல்வாள். இப்படி ஏதோ ஒரு வகையில் அவள் இயல்பாக இருக்க முனைய, இவனுக்கு அவள் நிலையைப் பார்த்து ஒரு மாதிரி மனம் பிசைந்தது. ஒவ்வொரு முறையும் அவளின் நிராதரவான தோற்றம் பரிதியை அசைத்துப் பார்த்தது‌.

ஒருநாள் மனம் கேட்காமல் வழியச் சென்று, “வாணி... ஆர் யூ ஓகே. ஏன் இப்படி இருக்க? ஏதாவது பேசு. எப்பவும் போல என்னை மிரட்டி வேலை வாங்கு. தனியாவே உக்கார்ந்திருக்காதே!” என்றான் அக்கறையான குரலில். அவளிடம் எதிர்வினையே இல்லை. இரண்டு நாட்கள் தொடர்ந்து கவனித்ததில் அவள் நேரத்திற்கு உண்பதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அரைகுறையாக உண்கிறாள் என அறிந்தவன், விக்னேஷிற்கு அழைத்துப் புலம்பினான்.

“என்ன பிரச்சனை, அன்னைக்கு நீ என்ன பேசுன? வாணி என்ன பேசுனாங்கன்னு தெளிவா சொல்லு!” எனக் கேட்டான் அவன். பரிதி அன்றைக்கு நடந்த உரையாடலை தனக்கு நினைவிருக்கும் வரைப் பகிர்ந்தான்.

“இல்லையே... ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுதே. இந்த இடத்துல நீ ஏதாவது ராங்கா பேசிருப்பீயே. அன்னைக்கு என்ன பேசுனேன்னு ஒரு வார்த்தை விடாம ஒப்பி!” என ஆதி முதல் அந்தம் வரைக் கேட்டறிந்த விக்னேஷ்,

“நான் ஒன்னு சொல்லவா பரிதி?” என அமைதியாய் கேட்டான்.

“வாணி... நல்லா இருக்கணும்னா நீ அவங்களை விட்டுட்டு வேற வீட்டுக்குப் போய்டு. ஷீ வில் பீ பைன்!” என்றான் கோபக் குரலில்‌

“லூசு மாதிரி பேசாத விக்கி. அவ ஏற்கனவே டிப்ரஷன் வந்த மாதிரி இருக்கா. இதுல தனியா விட்டுட்டுப் போனா அவளுக்குப் பைத்தியம் பிடிச்சிடும்!” இவனும் எரிந்து விழுந்தான்.

“நான் பார்த்த வரைக்கும் வாணி ரொம்ப ஸ்ட்ராங்க் கேர்ள். அவங்களை அவங்களே கேர் பண்ணிப்பாங்க‌. நீ ஒன்னும் கிழிக்கத் தேவையில்லை. ஒன்னும் உண்மையா அவங்க மேல அன்பிருந்தா அக்கறையா நடந்துக்கோ‌. இல்லை கண்டுக்காம விட்ரு. அம்மாப்பா இல்லாத அனாதை நீ. போனா போகுதுன்னு பாவம் பார்த்து அக்கறைப்படுறேன்னு மனசைக் கஷ்டப்படுத்தாத. பாவம் அந்தப் பொண்ணு. உன்கிட்டே வந்து கஷ்டப்படுது!” என்றான் கடுப்போடு.

“அறிவுக்கெட்டத்தனமா பேசாத விக்கி. அவ ஒன்னும் அனாதை கிடையாது. அவளுக்கும் குடும்பம் இருக்கு. அவளுக்கு ஒன்னுன்னா நான் வருவேன்!” விக்னேஷ் அவளை அனாதை என்றதில் பரிதிக்கு கோபம் வந்தது. ஆனால், அவன் அன்று பேசிய வார்த்தையின் மறை பொருளை வசதியாய் மறந்து போனான்.

“கிழிச்ச... நீ அவங்ககிட்டே அன்பை பிச்சையா போட்றேன்னு சொல்லிருக்க‌. அப்புறம் எப்படி உன்கிட்டேருந்து வர்ற கன்சர்னை அவங்க ஏத்துப்பாங்க‌ நீ முதல்ல என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசு!” என அவன் அழைப்பைத் துண்டிக்க, இவனிடம் அதிர்ச்சி.

இரண்டு நாட்களாக தான் பேசியதை யோசித்து தனக்குள்ளேயே உழன்றான் பரிதி. கடைசியில் தான் உபயோகித்த வார்த்தைகள் தவறு என உணர்ந்து அவளிடம் மன்னிப்பை யாசிக்க, வாணி எதிர்வினையே ஆற்றவில்லை. ஒரு மாதமாக அவள் பின்னே சுற்றி இப்போதுதான் ஓரிரு வார்த்தையாக அவன் கேள்விக்குப் பதில் சொல்ல தொடங்கியிருந்தாள் வாணி. இப்படியே பட்டும் படாமலும் அவர்கள் உறவு நகர்ந்தது.

எப்படியாவது அவளை இயல்பாக்கிவிட வேண்டும் என்று அவள் மறுத்தாலும் வார வாரம் அவளுடன் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்க உதவினான்‌ பரிதி. காலையில் எழுந்து சமைக்க உதவினான். தினமும் வீட்டை சுத்தம் செய்தான். இப்படி ஏதோவொரு வகையில் தன்னிருப்பை அவளிடம் உணர்த்திக் கொண்டே அவளது தனிமையைப் போக்க முயன்றான்.

இசைவாணி அவளை அவளே சரி செய்யும் முயற்சியில் இருந்தாள்‌. எங்கே தனிமையிலே உழன்று மனவழுத்தம் அதிகமாகிவிடுமோ எனப் பயந்தவள், இங்கு வந்ததும் ஒரு மனநல மருத்துவரைப் பார்க்க முன்பதிவு செய்து வைத்தாள். நம் நாட்டைப் போல அங்கே உடனடியாக மருத்துவரைப் பார்க்க முடியாதே. இரண்டு மாதங்களுக்குப் பின்னரே அவளுக்கு அவரைப் பார்க்க அனுமதி கிடைத்தது.

சென்ற வாரம்தான் அவரை சந்தித்துவிட்டு வந்தாள். நாற்பதின் துவக்கதிலிருந்த மருத்துவர் ஒரு இந்தியர், மலையாளி. அதனாலே அவரிடம் இவளால் எளிதில் பேச முடிந்தது. பொறுமையாக இவளது பிரச்சனை என்னவென்பதை விசாரித்தவர், அப்பிரச்சனையைத் தொடாமலே தீர்வு கூறினார். எதிர்பாராத நேரத்தில் நேர்ந்த இழப்பை அவளால் கடந்து வர முடியவில்லை என்றணர்ந்தவர், இறப்பு என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது என அவளுக்குப் புரிய வைத்தார்.

ரொம்பவும் அவளை வற்புறுத்தாமல் அவளுக்கு என்ன செய்ய பிடிக்கும் எனக் கேட்டறிந்தார். புத்தகங்கள் வாசிப்பு அவளுடைய பழக்கம் என அறிந்ததும், அவளை ஊக்கப்படுத்தினார். தன்னிடமிருந்த இரண்டு மூன்று ஆங்கில நாவல்களை அவளிடம் கொடுத்தார். பாடல் கேட்கப் பிடிக்கும் என்றால் வேலை செய்யும்போது ஏதாவது பாடலை ஓலிக்கவிடச் சொன்னார்.

பிடித்ததை சமைத்து சாப்பிட வலியுறுத்தியவர், லண்டனில் வசிக்கும் இந்திய கம்யூனிட்டியில் அவளை சேர்த்துவிட்டார். அங்கே அவளுக்கு பலதரப்பட்ட மொழி பேசும், பல்வேறு வயதினர் நண்பர்களாக கிடைத்தனர். மருத்துவரின் மனைவியும் அங்கிருந்ததால், அந்தப் பெண்மணி இவளையும் சேர்த்துக் கொண்டார். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இந்தியர்கள் ஒன்று கூடி பிரபலமான சுற்றுலா தளத்திலோ, பூங்காவிலோ சந்தித்து பேசி மகிழ்ந்தனர்.

முதலில் வாணி அங்கு செல்ல மறுக்க, “வாணி... முதல்ல வீட்டுக்குள்ளே இருக்கதை அவாய்ட் பண்ணுங்க. அடிக்கடி வெளிய போய் ஃப்ரெண்ட்ஸை மீட் பண்ணுங்க. என்ஜாய் பண்ணுங்க!” என அப்பெண்மணி இவளை விடாது உடன் அழைத்துச் சென்றார். பரிதி முதல்முறை அவள் சென்றதைக் கவனிக்கவில்லை.

இரண்டாம் முறையாக அவள் செல்லும்போது பார்த்துவிட்டான். “ஏய் வாணி... எங்கப் போற? என்னைக் கூப்பிடலாம்ல. தனியா ஏன் போற?” என அவளைக் கடிந்த பரிதி, தானும் உடன் சென்றான். அவனுக்கு அந்த அனுபவம் பிடித்திருந்தது. மதி இது போல நண்பர்களை சந்திக்கவெல்லலாம் அழைத்துச் செல்லவே மாட்டாள்.

எப்போதும் ஷாப்பிங் என்ற பெயரில் பணத்தை செலவழிப்பது, கடையைப் சுற்றிப் பார்த்து, அதைக் காணொளியாய் எடுத்து இணையத்தில் பரப்புவது,
பார்ட்டி என்ற பெயரில் மூச்சு முட்ட குடிப்பது, புதிதாக எந்த மதுபானம் விற்பனைக்கு வந்தாலும் முதல் ஆளாக அதை முயற்சிப்பது, பப்பில் சென்று நடனமாடுவது என அவள் வாழ்க்கை முறையே முற்றிலும் வேறாக இருந்தது. முதலில் பரிதிக்கு அதெல்லாம் புதிதாய் இருக்கவும், ஆர்வமாய் செய்தான். ஆனால் இப்போதெல்லாம் சற்றே சலிப்பு ஏற்பட்டது.

“வீக்லி பப்புக்கு போறது போரிங்கா இருக்கு மதி. நம்ப வேற எங்கேயாவது போகலாம்!” என இவன் கூற, அவளுக்குப் பெரிதாய் விருப்பமில்லை.

“வீக் டேய்ஸ் ஃபுல்லா வொர்க் பண்றோம் மேன். வீக் எண்ட்ல என்ஜாய் பண்ணாதான் ப்ரெய்ன் ப்ரெஷ்ஷா இருக்கும்!” என அவள் இஷ்டத்திற்கே இவனை வளைத்தாள். சமீபகாலமாக பரிதி தன்னைத் தானே உற்று நோக்கி சுய அலசல் செய்த போதுதான் அவனது சுயமே மாறியிருப்பது புரிந்தது.

வருடத்திற்கு ஓரிருமுறை மட்டும் மது என்ற அவன் கொள்கை எப்போதோ அழிந்து போயிற்று. வாரத்தில் நான்கு நாட்கள் குடித்தான், புகைப்பிடித்தான்.‌ சம்பளத்தில் பாதியை மட்டும்தான் வீட்டிற்கு அனுப்பினான். வீட்டு வாடகை, உணவிற்குப் போக பெரும் பணத்தை ஊர்சுற்றுவதிலே கரைத்தான். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டுமென அவன் மதியுடன் பேசினான். ஆனால் அவன் இவன் பேச்சை அவள் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. அதனாலே போ என விட்டுவிட்டான்.

அப்படி சலித்துப் போன மனத்திற்கு இங்கே பூங்காவில் ஒரு அமைதி கிட்டியது. ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கூடியிருந்தனர். ஆளாளுக்கு எதையோ சமைத்தும், வாங்கியும் வந்து பகிர்ந்து உண்டனர். குழந்தைகள் ஒருபுறம் விளையாட, பெற்றவர்கள் பேசி சிரிக்க என பரிதிக்குத் தன் ஊர் ஞாபகம் வந்தது.

“ஹாய் வாணி... யாரிந்தப் பையன், உன் ஹஸ்பண்டா?” என ஒரு பெண்மணி வினவ, இவள் மறுத்து தலையசைத்து நண்பன் என அறிமுகம் செய்தாள். பரிதியையும் அவர்கள் இயல்பாக ஏற்றுக் கொண்டனர். மதுரையிலிருந்து வந்த இளம் பெண் ஒருவர் சுய்யம் செய்திருப்பதாக கூறி அனைவரிடமும் பகிர்ந்து உண்டார்.

அவர் கொடுத்த சுய்யத்தைப் பிய்த்து வாயிலிட்டவனுக்குத் தாயின் நினைவு வந்தது போல. பேசாமல் எல்லாவற்றையும் விட்டுட்டு அங்கே சென்றுவிடலாம் எனக் கூட எண்ணி, தன் போக்கில் திடுக்கிட்டான். இப்போதுதான் வங்கிக் கடனை முக்கால்வாசி அடைந்திருக்கிறான்‌. அடுத்ததாக வீட்டைப் புதுப்பித்து பெரிதாக கட்ட வேண்டும், மார்த்தாண்டத்திற்கு ஊரின் பிரதான சாலையில் பெரிய பல்பொருள் அங்காடி வைத்து தர வேண்டும், தம்பி, தங்கைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற நினைவு வரவும், மனம் தன்னையே தேற்றியது. அன்றைய பொழுது அப்படியே கழிந்தது.

இப்போதுதான் பரிதி வாணியை நன்றாக கவனிக்க ஆரம்பித்தான். அவள் முன்பு போல தாயை நினைத்து தனியே அமர்ந்து வருந்துவதில்லை‌. அவள் முகத்திலிருந்த குழப்பம் விடை பெற்றிருக்க, தெளிவாய் இருந்தாள். உண்மையில் அவளை போட்டு அழுத்திய குற்றவுணர்வு எப்போதோ விடை பெற்றிருந்தது.

யாரிடமும் சொல்ல முடியாமல் மனத்திற்குள்ளே போட்டு அழுத்திய விஷயத்தை இரண்டாம் முறையாக மனநல மருத்துவரை சந்திக்க சென்ற போது போட்டு உடைத்திருந்தாள்.

“உங்கம்மாகிட்டே நீங்க பெரிய பொய்யை சொல்லிருக்கீங்க. அவங்க இறக்கும்போது அவங்களுக்கு உண்மை தெரியாது. அதனால கடைசிவரைக்கும் அம்மாகிட்ட உண்மையா இல்லைன்னு உங்களுக்குள்ள ஒரு கில்ட் இருக்கா வாணி?” எனக் கேட்டவர், சின்னதாய் சிரித்தார்.

“உண்மையை சொல்லப் போனா உங்கம்மாவுக்கு நீங்க நிம்மதியான சாவைக் கொடுத்திருக்கீங்க. ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி உண்மை தெரிஞ்சு பொண்ணைத் தனியா விட்டுட்டுப் போறோம்னு அவங்க கவலையோட இறந்திருந்தா என்ன பண்ணிருப்பீங்க? ஒரு மனுஷனுக்கு நிம்மதியா கவலை இல்லாத சாவைக் கொடுக்குறது எவ்ளோ பெரிய விஷயம்? நீங்களே சொன்னீங்களே! முதல் நாள் வரை உங்கம்மா சிரிச்சுட்டு இருந்தாங்கன்னு. ஒரு பொய்னால அவங்க சந்தோஷமா இறந்திருக்காங்கன்னா அது தப்பு கிடையாது வாணி. அதுவும் இல்லாம நீங்க கல்யாணமே பண்ணிக்காம இருக்கப் போறதில்லையே. உங்களுக்கு யாரையும் பிடிச்சா மேரேஜ் பத்தி யோசிப்பீங்க தானே? சோ, டோன்ட் கில்ட்!” என அரைமணி நேரம் பேசி அவளது குற்றவுணர்வை முழுவதும் மீட்டெடுத்தப் பின்னரே அவளை விட்டார் மருத்துவர். அப்போதுதான் எதோ தன்னைக் கட்டி வைத்திருந்த தளைகளிலிருந்து இசைவாணி விடுதலை பெற்றது போலுணர்ந்தாள்.

ஒருமாதிரி அவளுக்கு நாட்கள் அமைதியாய் கழியத் தொடங்கியது. மனத்தை திசை திருப்ப, புத்தகங்கள், இசை, இதுபோல சமூக கூட்டம் என செல்ல செல்ல, இழப்பிலிருந்து முழுவதுமாய் மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குள் திரும்பியிருந்தாள். இடைப்பட்ட நாளில் ஒருமுறை அவர்கள் விவாகரத்து வழக்கு சம்பந்தமாக காணொளி அழைப்பில் குடும்ப நல நீதிபதியிடம் இருவரும் மனமொத்து விவாகரத்து வேண்டுமென கோரிக்கை வைக்க, அவர் இரண்டு முறை ஆலோசனை சென்று வாருங்கள் என அவர்கள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

மனநல ஆலோசகரிடமும் காணொளி அழைப்பிலே பெயரளவில் ஆலோசனை கேட்டுக் கொண்டனர்‌. அவர்கள் வழக்கிற்கு அடுத்த முறை இறுதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

“மேடம், நெக்ஸ்ட் ஹியரிங்ல டைவர்ஸ் கன்பார்மாகிடும் மேடம்!” என வழக்கறிஞர் உறுதி கூற, இவளுக்கும் நிம்மதி பிறந்தது. இப்படியே மாதங்கள் உருண்டோடி எட்டு மாதங்கள் கடந்து போயிருந்தன.

பரிதி முன்பு போல அவளிடம் சண்டையிடவோ காயப்படுத்தவோ இல்லை. அவளிடம் இணக்கமாக நடக்க முயன்றான். அக்கறையும் அன்பும் காண்பித்தான். ஆனால் வாணி அதை சுலபமாக தவிர்த்துவிட்டாள். என்றைக்கு பாவம் பார்த்து அன்பைக் காண்பிக்கிறேன் எனக் கூறினானோ, அன்றிலிருந்தே அவனிடமிருந்து வரும் அன்பை நிராகரித்தாள்.

அவனுக்குப் புரிந்தே இருந்தது. தன் செயல்தான் காரணமென நொந்து கொண்டான். கண்ணுக்குத் தெரியாத வகையில் ஒரு கோடிட்டு தன்னை அவனிடமிருந்து தூர நிறுத்திக் கொண்டாள் வாணி. எந்த வகையிலும் அவனை சார்ந்திருக்கவில்லை அவள். அதிலே அவளது குணம் அவனுக்குப் புரிந்தது.

“ரொம்ப பண்ற வாணி, என்கிட்டே அநியாயத்துக்கு டிஸ்டன்ஸ் கீப் பண்ற நீ!” அவன் ஆற்றாமையுடன் கூற,

“நீதானே சொன்ன பரிதி. நான் உன்கிட்டே நார்மலா பேசுனா கூட ஜவ்வு மிட்டாய் மாதிரி ஒட்டிக்கிட்டுப் போகாம, தங்கிடுவேன்னு. அதான் உனக்கு அந்தப் பயம் வேணாம்னு நான் தள்ளியே நிக்கிறேன். இன்னும் நாலு மாசத்துல அக்ரீமெண்ட் ஓவர். அதுக்குள்ளேயும் டைவர்ஸும் கன்பார்மாகிடும். தென் வாட்?” என அசட்டையாக அவள் கடந்து சொல்ல, இவனுக்கும் அவள் சொல்வதன் நியாயம் புரிந்தது. மறுத்துப் பேசாமல் அமைதியாய் கடந்தான்.

செப்டம்பர் மாதத்தின் இளம் வெப்பமும் குளிர்ச்சியுமாக அந்த மாதம் துவங்கியிருந்தது. எப்போதும் போல வாணிக்கு அலுவலகம், வீடு, புதிதாய் கிடைத்த தோழிகளுடன் அவ்வப்போது வெளியே சுற்றுவது என நேரம் கடந்தது. பரிதி ஒருவித குழப்பத்திலே சுற்றிக் கொண்டிருந்தான்.
அவனைக் கவனித்தவள், இரவு உணவு உண்ணும்போது என்னவென விசாரித்தாள்.

“அது... அது வந்து வாணி, ஐ லவ் மதி!” என்றான் தயங்கியபடியே.

அவனை சில நொடிகள் பார்த்தவள், “அதான் தெரிஞ்ச விஷயமாச்சே பரிதி. அதுக்கென்ன இப்போ? டைவர்ஸ் கிடைச்சதும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போற. அவள் எதுவும் வேணாம்னு சொல்றாளா?” என இயல்பாக கேட்டுக் கொண்டே சப்பாத்தி மேலே தக்காளி குருமாவை ஊற்றினாள்.

“இல்ல... இல்ல... இன்பேஃக்ட் அவதான் என் மேல ரொம்ப அபெக்ஷனா இருக்கா. அவளுக்கு நான்தான் எல்லாமேன்ற மாதிரி நடந்துக்குறா. எனக்கு ஒன்னுன்னதும் ஓவரா பதட்டப்படுறா. இன்னும் நாங்க ரெண்டும் பேரும் லவ்வை சொல்லிக்கலை. நெக்ஸட் மந்த் எண்ட்ல அவ பெர்த் டே வருது. அன்னைக்கு ப்ரபோஸ் பண்ணிடலாமான்னு ஒரு ஐடியா. பட், கொஞ்சம் பயமா இருக்கு!” என்றான் சின்ன குரலில்.

“இதுல பயப்பட என்ன இருக்கு? அவளுக்கும் உன்னைப் பிடிக்கும்னு சொல்ற? அப்புறம் என்ன பிரச்சனை?” என அவள் கேட்டதும், ஒரு விரலை மட்டும் உயர்த்தி அவள்புறம் காண்பித்தான்.

வாணி முகத்தில் புரியாத பாவனை. “நான் என்ன உன்னை ப்ரபோஸ் பண்ண கூடாதுன்னு கையவா பிடிச்சிழுக்குறேன்? என் பக்கம் விரலை நீட்டுற?” என அதட்டலாகக் கேட்டாள்.

“நீ பிராப்ளம் இல்ல வாணி‌. நம்ப செஞ்ச அக்ரீமெண்ட் மேரேஜ்தான் ப்ராப்ளம். அதைப் பத்தி அவளுக்கு எதுவுமே தெரியாது. நான் உன்னை என்னோட ரிலேடீவ், அக்கா மாதிரின்னு சொல்லி வச்சிருக்கேன். இப்போ போய் இந்த டூப் மேரேஜ் பத்தி சொன்னா அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு நினைச்சாலே பயமா இருக்கு. சாரி டூ சே திஸ், அவளுக்கு உன்னை சுத்தமா பிடிக்காது. ஏன்னு எனக்குத் தெரியலை வாணி. அப்படி இருக்கப்போ இதை சொன்னா என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவா!” என்றான் கவலை நிறைந்தக் குரலில்.

வாணி எதுவும் பேசாமல் சாப்பிட, “வாணி... ப்ளீஸ், ப்ளீஸ். எனக்காக நீயே அவகிட்டே பேசேன். நீ சொன்னா அவ நம்புவா‌. நான் சொன்னா நம்புவாளா? மாட்டாளான்றது டவுட் தான்...” என இவளை இறைஞ்சலாகப் பார்த்தான்.

“லவ் பண்றேன்னு சொல்ற. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க. அப்படி இருக்கப்போ அவளுக்கு உன் மேல நம்பிக்கை இருக்காதா பரிதி. ஒரு ரிலேஷன்ஷிப்ல ரொம்ப முக்கியம் ம்யூட்சுவல் ஹோப். நீ பேசு, அவ புரிஞ்சுப்பா!” வாணி பதிலுரைக்க, அவளின் இடதுகையைத் தன் கரத்தால் பற்றிக் கொண்டான் பரிதி.

“ப்ளீஸ் வாணி... இது என்னோட லைஃப் மேட்டர். இவ்வளோ நாள் தனியாவே இருந்துட்டேன்‌. இப்போதான் எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து லவ் பண்ணி செட்டிலாக சான்ஸ் கிடைச்சிருக்கு. அதுக்கு நீதான் ஹெல்ப் பண்ணணும்!” என அவன் கெஞ்ச, வாணி தன் கையை உருவிக்கொண்டு எழுந்து சென்று கையைக் கழுவ, பரிதி அவள் பின்னே சென்று நின்றான்.

“லுக் பரிதி... உன் மதிக்கு மட்டும் என்னைப் பிடிக்காம இல்லை‌. எனக்கும் அவளை சுத்தமா பிடிக்காது. உனக்காக அவகிட்டே பேசுற அளவுக்கு நீயும் சரி, அவளும் சரி என் லைஃப்ல இம்பார்டெண்டான ஆட்கள் இல்ல. அண்ட் ஒன்மோர் திங்க், அவளை நீ தானே கல்யாணம் பண்ண போற. போ... அவளைக் கன்வின்ஸ் பண்றது உன்னோட திறமை. நான் உங்க ரெண்டு பேருக்கும் இடையில வர்றதை மதி விரும்ப மாட்டா. உங்களுக்குள்ள இருக்கப் பிரச்சனை நீங்களே சார்ட் அவுட் பண்ணிப் பழகுங்க. காலம் முழுக்க ட்ராவல் பண்ண அது ஹெல்ப்பா இருக்கும்!” என்றாள் அழுத்தமானக் குரலில்.

“அப்போ நீ எனக்காகப் பேச மாட்ட?” அவன் அடத்தோடு கேட்டான்.

“முடியாது பரிதி. நீயே எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணி பழகு. சப்போஸ் நீ என்ன சொல்லியும் அவ நம்பலைன்னா என்கிட்டே கூட்டிட்டு வா‌. நான் நம்ப செஞ்சுகிட்டது அக்ரீமெண்ட் மேரேஜ்தான்னு சொல்றேன்...” என்றவள் அகல, இவனுக்கு வேறு வழியே இருக்கவில்லை. எப்படியாவது இளமதியிடம் இதைக் கூறிவிட வேண்டும் என்று மனதிற்குள்ளே ஒத்திகைப் பார்த்தவாறே இருந்தான்.

திடுதிப்பென்று இப்படியொரு விஷயத்தைக் கூறினால் அவள் எப்படி எதிர்வினையாற்றுவாள் எனத் தெரியாது தயங்கியவன், விக்னேஷிற்கு அழைத்தான். அவன் ஒருவனுக்கு மட்டும்தான் பரிதியைப் பற்றிய அனைத்து விடயங்களும் தெரியும். அதனாலே அவன் உதவியை நாடினான்.

இடைப்பட்ட நாளில் விக்னேஷிற்கும் வாணிக்கும் இடையே நல்ல புரிதல் வந்திருந்தது. இருவரும் ஒத்தக் கருத்துடையவர்களாக இருந்தக் காரணத்தினால் நட்பு இறுகிப் போயிருந்தது.

பரிதி புலம்பல் அனைத்தையும் கேட்டவன், “வாணி கரெக்டாதான் சொல்றாங்க டா. நீயே ஒரு விஷயத்தை அவகிட்டே சொல்றதுக்கும் தேர்ட் பெர்சன் சொல்றதுக்கும் டிப்ரென்ஸ் இருக்குல்லடா. மதி என்ன பேயா? பிசாசா? இவ்வளோ பயப்படுற. போ, தைரியமா சொல்லு!” என்றவன் சில நொடிகள் நிறுத்திவிட்டு,

“டிவோர்ஸ் எப்போ கிடைக்கும் டா?” என தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“நெக்ஸ்ட் மந்த்ல கிடைச்சுடும்!” பரிதி பதிலளிக்க, விக்னேஷ் மனத்தில் ஒரு நிம்மதி அடர்ந்தது.

“தேங்க் யூ சோ மச் மச்சான். நீயும் மதியும் ரொம்ப வருஷம் நல்லா வாழுவீங்கடா!” என்றான் உற்சாகத்துடன். பரிதிக்கு அவன் குரலிலிருந்த துள்ளல் எத்றகெனப் புரியவில்லை.

“தேங்க்ஸ் விக்கி!” என்றவன், தைரியத்தைத்
திரட்டிக்கொண்டு அவளிடம் சொல்ல ஒரு நல்ல நாளாய் பார்த்திருந்தான். ஆனால் நிறைய தடைக் கற்கள் வந்து இடையில் விழுந்தன.

தொடரும்...




அடுத்த அப்டேட்ல தரமான சம்பவம் ஒன்னு இருக்கு மக்களே! யாரு யாருக்குப் பண்றாங்கன்னு கெஸ் பண்ணுங்க 😒
 
Well-known member
Messages
522
Reaction score
377
Points
63
Vicky ivanga divorce ku ivolo happy ah feel panratha partha oru vela isai ku avan propose panniduvano aana ennaku ennavo sambhavam sambhavam nu onnu parithi ku than nadakapoguthu nu nenaikiren
 
Top