• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,279
Reaction score
3,751
Points
113
நேரம் – 3 💜

கழுத்துவரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்க மனமில்லாமல் படுக்கையில் சுருண்டிருந்தாள் இசைவாணி.
பாதி திறந்திருந்த ஜன்னல் திரைவழியே சுள்ளென வெயில் முகத்தில் அறைந்தது.

“வாணிமா... எழுந்திரிங்க. எப்பவும் போல லீவ்னு தூங்கிட்டே இருப்பீங்க. சேலை எடுக்கப் போக வேணாமா?” கமலா இவளது அறைக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தார்.

அசையாமல் படுத்திருந்தவள் முகத்திலிருந்த போர்வையை விலக்கித் தலையைத் தூக்கி அவரைப் பார்த்து முறுவலித்தாள். “அம்மா எழுந்துட்டாங்களா கமலாமா?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்து குதிரைவாலிட்டிருந்த முடியின் இழுபட்டையை உருவி தலையைக் கொண்டையிட்டாள். தொடைவரை உயர்ந்திருந்த அந்த தொளதொள கால்சராயை கீழே இறக்கிப் போர்வையை கசங்காமல் மடித்து தலையணை மீது வைத்தாள்.

“அதெல்லாம் அம்மா எப்பவோ ரெடி. அவங்க எழுந்திரிச்சு குளிச்சு முடிச்சு உங்கப்பாவை வேண்டிக்கிட்டு கிச்சனுக்கு வந்து அராஜகம் பண்றாங்க!” இவர் அலுக்க, அவள் முகத்தில் புன்னகை உதிர்ந்தது.

“அம்மாவை ரொம்ப நாள் கழிச்சு இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு டா வாணிமா. இப்படியே இருந்தாங்கன்னா, அவங்க உடம்புக்கு எந்த நோவும் வராது!” என்ற கமலா அகல, இவளது சிரிப்பு மெதுமெதுவாய் தேய்ந்தது. இரவு படுக்கையை நனைத்த ஈரம் இன்னும் அவளது இமையோரம் இழையோடுயதோ என்னவோ? ஆட்காட்டி விரலால் அதை தோய்த்து எடுத்தவள், கமலா வைத்துவிட்டுச் சென்ற தேநீரை எடுத்து பருகிக் கொண்டே ஜன்னல் திரையை முழுமையாக திறந்துவிட்டாள்.

அவளது அறைக்கு நேரெதிரே இருந்த சிந்தாமணி ஸ்டோரில் அரைக்கால் சட்டையும் கலைந்த தலையும் தூக்கம் சுமந்த விழிகளுமாக அமர்ந்திருந்தான் இளம்பரிதி. வாயில் எதையோ அரைத்துக் கொண்டே கடைக்கு வருவோர் போவோருக்குப் பொருட்களைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவள் பார்வை அப்படியே வெறிச்சோடிக் கிடந்த சாலையை மேய்ந்தது. அவளது மனத்தைப் போல அப்பகுதியும் யாருமற்றுத் தெரிந்தது போல. பெருமூச்சொன்றை இழுத்துவிட்டாள்.

“வாணி... அங்க என்ன வேடிக்கை? காமராஜ் கிளம்பிட்டானாம். ஒருமணி நேரத்துல எல்லாரும் வந்துடுவாங்க. சீக்கிரம் குளிச்சிட்டு நான் எடுத்து வச்சிருக்க சேலையைக் கட்டிக்கோ!” சுந்தரி உரத்தக் குரலில் கத்தியதும் சிந்தனைக் கலைந்தவள், அவர் கட்டிலில் வைத்திருந்த புடவையை எடுத்துக்கொண்டு குளித்து வந்தாள்.

கண்களில் தெரியும் மென்சோகத்தை மையிட்டு நிரப்பியவள், அவளது நிறத்திற்கு தகுந்த உதட்டுச் சாயத்தைப் பூசினாள்‌. பத்து நிமிடம் முகத்திற்கு ஏதோ பூசியவள், முன்புறம முடியை மட்டும் இறுக்கிப் பிடித்து கவ்வியில் அடக்கினாள். ஒருமுறை கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். பார்ப்பவர் கண்களுக்குத் தன் உள்ளத்து உணர்வு வெளிப்பட்டுவிடக் கூடாது என்ற மெனக்கெடல் எல்லாம் தன்னை அலங்கரிப்பதில் வெளிப்பட்டது. மற்றபடி தன்னையே அவள் ஆசையாக அலங்கரித்த நாட்கள் எல்லாம் கடந்து பல வருடங்களாகியிருந்தன.

“என் மக்கு அத்தைப் பொண்ணே... என்ன டீ இவ்வளோ அழகா இருக்க? பேசாம எனக்குப் பின்னாடி பொறந்திருக்க கூடாதா நீ?” போலி ஏக்கத்துடன் அறைக்குள்ளே நுழைந்து ஒய்யாரமாய் கட்டிலில் அமர்ந்தான் சரவணன்.

“ஹக்கும்... நல்ல வேளை வாணி, நீ தப்பிச்ச. இவன்கிட்டே மாட்டக் கூடாதுன்னுதான் சீக்கிரம் பொறந்துட்டீயோ என்னவோ?” தம்பியைக் கலாய்த்தபடி உள்ளே வந்தாள் அற்புதா.

“எங்கப் போனாலும் ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்துப் பண்றதே எனக்கு வேலை!” என அவர்கள் இருவரையும் முறைத்த அம்சவல்லியைப் பார்த்த இசைவாணி, “சும்மா விளையாட்டுக்குப் பேசுறாங்கத்த. நீங்க டென்ஷனாகாதீங்க!” என அவரை சமாதானம் செய்தாள்.

“ம்மா... இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை. இவளை நானே கட்டிக்கிறேன்மா!” சரவணா எழுந்து சென்று இசைவாணியின் தோளில் கையைப் போட்டான். அவள் அவனை மென்மையாய் முறைத்து வைத்தாள்.

“ஜோடிப் பொருத்தம் செம்மையா இருக்குல்ல?” சட்டையின் நுனியைத் தூக்கிவிட்டவனைக் கேலியாகப் பார்த்த அற்புதா,

“தம்பி... முதல்ல ஃபைனல் இயர்க்குள்ள நீங்க வச்சிருக்க எட்டு அரியரைக் க்ளியர் பண்ணுங்கப்பா. அப்புறம் கல்யாணத்தைப் பத்திப் பேசிக்கலாம்!” என்றாள் இடைபுகுந்து.

அம்சவல்லி மகனை உக்கிரமாகப் பார்க்க, “சரியான நேரத்துல கோர்த்துவிட்டிருச்சு விஷ எலி!” என்று அக்காவை நினைத்துப் பற்களை நறநறத்தவன், “ம்மா... அவ சொல்றதைக் கேட்பீயா நீ? அரியரெல்லாம் எப்பவோ க்ளியர் பண்ணிட்டேன்மா!” என்றவனைத் அவர் நம்பத் தயாராகவில்லை என முறைத்த முகம் கூறிற்று.

“ம்ப்ச்... நீ நம்பலையா? என் அத்தைப் பொண்ணு என்னோட க்ரஷ் இசைவாணி மேல சத்தியமா க்ளியர் பண்ணிட்டேன் மா!” என அவள் மீது அவன் சத்தியம் செய்ய சென்றதைக் கண்டு பதறிய அம்சவல்லி,

“டேய்... டேய்! இப்போதான் அவளுக்கு ஒரு நல்லது நடக்கப் போகுது. உன் பொய் சத்தியத்தால எதையும் கெடுத்துவிட்றாதாடா!” எனப் பதறினார்.

“அம்சா... என்ன பண்ற? புள்ளைங்களை சாப்பிடக் கூட்டிட்டு வா!” என காமராஜ் சத்தமிடவும், மகனை முறைத்தவர், “வீட்டுக்கு வாடா மகனே! உன்னை அப்புறம் பார்த்துக்குறேன்!” என்றுவிட்டு “மூனு பேரும் சீக்கிரம் சாப்பிட வாங்க...” என அகன்றார்.

சரவணன் அற்புதாவின் தலையில் ஓங்கி கொட்டச் செல்ல, “ஒரு அடி என்மேல பட்டா கூட உன் உடம்புல உயிர் இருக்காது டா. லாஸ்ட் டைம் நீ என்னை அடிச்சதுக்கே அப்பா உன் கையை ஒடிப்பேன்னு சொன்னாரு!” என்றவள் கட்டிலின் மீதேறி அறை முழுக்க ஓடினாள்.

“அவர் என் கையை ஒடிச்சாலும் பரவாயில்லை டீ. இன்னைக்கு உன்னை ஒரு அடி அடிக்கலைன்னா எனக்கு மனசே ஆறாது. ஹம்ம்.. நீ பார்த்தியா எனக்கு எட்டு அரியர்னு!” அவன் பல்லைக் கடித்துக்கொண்டு அவளைத் துரத்தினான்.

“டேய்... ஆதாரமே வச்சிருக்கேன் டா. அரியர் சர்டிஃபிகேடை நீ கப்போர்ல ஒளிச்சு வச்சிருந்ததை நான் ஃபோட்டோ எடுத்திருக்கேன். காட்டவா?” உதட்டை சுழித்துப் பழிப்புக் காட்டியவள், அவனிடம் பிடிபடவில்லை.

இசைவாணி இடுப்பில் கை வைத்து அவர்கள் இருவரையும் முறைத்துவிட்டு, வெளியே சென்றாள். அவள் வந்ததும், “ப்பா... இப்போதான் எங்க வாணிமா அழகா இருக்கா!” என்ற கமலா நேற்றே வாங்கி கட்டி வைத்த மல்லிகைப் பூவை இவளது தலையில் வைத்துவிட்டார். இவளது உதட்டில் சின்னதாய் ஒரு புன்னகை. அவ்வளவுதான் எதிர்வினையே!

“இந்த சேரி நல்லா இருக்கே அண்ணி, எப்போ எடுத்தது?” அம்சவேணி கேட்டதும் சுந்தரி பதிலளிக்க, இவள் சென்று மாமாவின் அருகில் அமர்ந்தாள்.

“அழகா இருக்க வாணிம்மா!” அவளைப் பார்த்துக் கனிவாய் உரைத்தவருக்கு தலையை அசைத்தவள், அவரோடு சேர்ந்து காலை உணவை உண்ணத் தொடங்கினாள்.

பெண்கள் இருவரும் இன்னுமே அந்த புடவையைப் பற்றிய ஆராய்ச்சியிலிருக்க, “அம்சா... நீ பெத்த ரெண்டும் கட்டி உருண்டுட்டு இருக்குங்க. போய் சாப்பிட கூட்டிட்டு வா. பத்து மணிக்காவது கிளம்பணும்!” என்ற காமராஜ் குரலில் கண்டிப்பு தெரிந்தது.

“நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கம்மா. நான் போய் புள்ளைங்களைக் கூட்டிட்டு வரேன்!” கமலா செல்ல, பெண்கள் இருவரும் உண்ண அமர்ந்தனர்.

அற்புதாவின் நீண்ட பின்னல் சரணவனின் கையைச் சுற்றியிருக்க, அவளது தலையிலே நறுக்கென நான்கு கொட்டுகள் வைத்தான். “நாயே... வலிக்குது டா. அப்பாட்ட சொல்லப் போறேன் பாரு!” என அவள் துள்ள,

“தம்பி... உங்கப்பா உங்களைக் கூப்பிட்டாங்க!” என கமலா வந்து நின்றார். அவர்கள் நின்றிருந்த கோலம் பார்த்து இவருக்குத் தான் பெற்ற பிள்ளைகள் நினைவு வந்தனர். இந்த மாதமாவது அவர்களைப் பார்க்கச் செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

“கமலாம்மா... இவன்ட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க!” என அவள் அலறினாள்.

“தம்பி... விடுங்க அவளை. சின்ன புள்ளை மாதிரி சண்டை போட்றீங்க!” என அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டார் பெரியவர்.

சரணவனை முறைத்துக் கொண்டே வந்த அற்புதா, “ப்பா... முடியைப் பிடிச்சிழுத்துட்டான். தலையே வலிக்குது!” என அழும் குரலில் தந்தையிடம் முறையிட்டாள்.

“சரவணா... பொம்பளை பிள்ளையை கை நீட்டி அடிக்கிறது என்ன பழக்கம்?” சுந்தரி அவனை சத்தம் போட்டார்.

“அத்தை... அவ வாய் சரியில்லை. என்னை மட்டும் கேட்காதீங்க!” என முனைத்துக் கொண்டவனை அருகே அமர்த்தியவர், “உனக்குப் பிடிக்கும்னுதான் கேசரி பண்ணேன். முதல்ல சாப்பிடுடா
அப்புறம் சண்டை போடலாம்” என அவரே அவனை அழைத்து அருகே அமர்த்தி உணவை தட்டலிட, அற்புதா அவர்கள் இருவரையும் கடுப்புடன் பாத்தவாறே உண்டாள். அனைவரும் சாப்பிட்டு முடிய, காமராஜ் அலைபேசியை எடுத்துச் சென்று இரண்டு நிமிடம் கழித்து வந்தார்.

“அக்கா... மாப்பிள்ளை வீட்ல எல்லாரும் கிளம்பிட்டாங்களாம். நம்பளும் இப்போ கிளம்புனா கரெக்டா இருக்கும்!” என்றவர் அனைவரையும் விரட்டினார். சரவணனும் அற்புதாவும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே மகிழுந்தில் ஏறினர்.

“வாணி... நெத்தில வியர்த்து வடியுது பாரு. உன் கரச்சீப் எங்க. போய் முகத்துல பவுடர் பூசிட்டு வா!” சுந்தரி மகளிடம் கூற, “லைட்டாதான் ஸ்வெட்டாகியிருக்கு!” என்றவள் புறங்கையால் நெற்றியைத் துடைத்தாள். அவளுக்கு மட்டும்தான் வியர்த்திருந்தது.‌ மனத்தின் படபடப்பு எனப் புரிய அறைக்குச் சென்று உணர்வை மறைத்து முயன்று தருவித்த முறுவலுடன் வந்தாள்.

அனைவரும் மகிழுந்தில் ஏறியிருந்தனர். சரவணன்தான் வாகனத்தை இயக்குவதால் மகிழுந்தை வெளிவாயிலுக்கு கொண்டு வந்து, செல்லும் திசைக்கேற்ப மாற்றி நிறுத்தினான்.

“நல்லபடியா கல்யாண சேலையை எடுத்துட்டு வா வாணிமா!” கனிவாய் கூறிய கமலாவிடம் புன்னகைத்துவிட்டு வெளியே நடந்தாள்.

சிந்தாமணி அவித்துக் கொடுத்த நிலக்கடலையை உரித்து சாப்பிட்டுக் கொண்டே கடை வியாபாரத்தைக் கவனித்த பரிதி எதேச்சையாக நிமிர, இசைவாணி அவன் கண்ணில்பட்டாள். ஒரு நொடி இமையை சிமிட்டினான் அவன்.

வெயிலுக்கு மிணுமிணுத்த கோதுமை நிறமும் அவள் கட்டியிருந்த வெளிர் நீல நிறப்புடவையும் அவளைப் பாந்தமாய் காண்பித்தன. ‘என்ன சேலைல அழகா இருக்கா? அன்னைக்கு சுமாரா இருந்தாளே!’ என்றவனின் ஆராய்ச்சிப் பார்வையை உணர்ந்த வாணி அவனை அடிக்கண்ணால் முறைத்ததும், படக்கென மறுபுறம் திரும்பினான்.

‘சே... இதோட எத்தனை தடவைடா அசிங்கப்படுவ நீ. அவ எப்படியிருந்தா உனக்கென்ன?’ எனக் கேட்டவன் அன்றைய சந்திப்பிற்கு பின்னே மீண்டுமொரு அவளைப் பார்க்க நேர்ந்தது. தாயோடு எங்கோ சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியிருப்பாள் போலும். கலைந்த தலையும் நலுங்கிய உடையும் முகத்தில் சோர்வுமா வந்தவளை இரண்டு நொடிகள் உற்றுப் பார்த்தான். அதற்கும் முறைத்துவிட்டுப் போனாள்.

‘ஆமா... இவ ரம்பை ஊர்வசி!’ என அவன் தோளைக் குலுக்கிக் கொண்டான். இப்போதும் எதிர்பாராத விதமாகத்தான் பார்வை அவளை சமீபித்தது. அதற்கு ஏதோ இவனைப் பொறுக்கி போல பார்த்து வாணி முறைக்கவும் கடுப்பானான்.

‘கண்ணு இருந்தா பார்க்கத்தான் செய்வாங்க. ஏதோ இந்த தெருலயே கொஞ்சம் பார்க்குற மாதிரி இருக்காளேன்னு சைட்டிச்சா ஓவராத்தான் பண்றா!’ என முணுமுணுப்புடன் இவனும் அவளை முறைத்துப் பார்க்க, தன் இருசக்கர வாகனத்தை கடை முன்னே நிறுத்தி வாங்கி வந்திருந்த சரக்குகளை கீழே இறக்கினார் மார்த்தாண்டம்.

பெரிய பெரிய பைகளை அவர் தூக்க முடியாது மகனைப் பார்க்க, அவன் பார்வை போகும் திசைக்குத் திருப்பினார். எதிர்வீட்டுப் பெண்ணை அவன் காண்கிறான் என உணர்ந்து தொண்டையைச் செருமியவர், “பரிதி!” என்றார் அதட்டலானக் குரல்.

சுயம் பெற்றவன், “ப்பா...” என படக்கென எழுந்து நின்றான். அவன் மடியிலிருந்த கடலை கடையெங்கும் சிதறியது.

'எத்தனை வயசானாலும் இந்த மனுஷன் குரல் கேட்டா மட்டும் பயப்பட்றதை விட மாட்றேன்' தன்னைத் தானே கொட்டிக் கொண்டான்.

“வந்து மூட்டையை எடுத்து வை. உன் போக்கே சரியில்லாம கிடக்கு டா!” அவர் கண்டிப்புடன் கூற, ‘சே.‌.‌. சைட்டடிக்க கூட இந்த உலகத்துல எனக்கு உரிமை இல்லையா?’ எனப் பொருமியவன், பெரிய பைகளைத் தூக்கி கடையினுள்ளே வைத்தான்.

ஜன்னல் புறமாக அமர்ந்திருந்த இசை வாணியின் விழிகள் இவனைத் தொட்டு கடக்க, பரிதியும் அவளைப் பார்த்தான்.

‘இப்போ இவ மட்டும் என்னைப் பார்க்கலாமா? நான் பார்த்தா முறைப்பாளாம். எந்த ஊர் நியாயம் இது?’ மனத்தில் பொரிந்தவன், எட்டி வலப்புறமாய் இருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தான்.

‘உனக்கென்ன டா. நல்லா வெள்ளை வெளேர்னு ஃப்ரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரி இருக்க. அவ கிடக்குறா சாக்லேட் ப்ரௌனி. அவளை இனிமே பார்க்க கூடாது. முக்கியமா ஐ காண்டாக்ட் வைக்க கூடாது. அவ ஒன்னும் அழகா இல்ல. ஃபுல்லா மேக்கப். காலைல தூங்கி எந்திரிச்சு அப்படியே வெளிய வந்தா மூஞ்சியைப் பார்க்க முடியாது. உனக்கேத்த மாதிரி ஹை க்ளாஸ், மில்கி ஃபிகரை மட்டும்தான் பார்க்கணும் நீ!’ எனத் தனக்குள்ளே சபதம் எடுத்தான்.

“டேய் பரிதி!” வாணி சென்ற மகிழுந்தையே பார்த்த மகனை கோபமாய் வெறித்தவர், அவன் தலையிலே நங்கென குளிர்பான போத்தலால் ஒரு அடியைப் போட்டார்.

சுள்ளென்று உச்சி மண்டையில் வலி உறைக்கவும், “இப்போ எதுக்கு அடிச்சீங்க?” என அவரிடம் சினந்தான் இவன்.

“எத்தனை தடவைக் கூப்பிட்றது? அப்படியென்னடா பார்வை உனக்கு அந்தப் புள்ளைகிட்டே போகுது. விவகாரமா எதையும் செஞ்சுபுட்ட, தோளை உரிச்சுப் போடுவேன் பார்த்துக்கோ!” என்றார் கோபமாய். இவனுக்கு அதில் ரோஷம் பொங்கிற்று.

“நான் ஒன்னும் யாரையும் பார்க்கலை. எதுக்கு கூப்பிட்டிங்க நீங்க?” என சிலிர்த்தவன், நொடியில் இசைவாணியை மனதிற்குள் திட்டித் தீர்த்துவிட்டான்.

“இந்தா...‌ இதைக் கணக்கைப் பாரு. எல்லாம் சரியா இருக்கான்னு சொல்லு!” என மார்த்தாண்டம் கொடுத்த ரசீதை வாங்கி அவன் சரிபார்க்கத் தொடங்கினான்.

***

“வாங்க... வாங்க, வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” காமராஜ் அந்த தம்பதியிடம் பேசிக் கொண்டே உள்ளே நடந்தார்.

“இல்ல காமராஜ், இப்போதான் வந்தோம்!” அவர்கள் பதிலளிக்க, பெரியவர்கள் முன்னே சென்றனர்.

இளையவர்கள் அவர்கள் பின்னே வர, “வாணி, அங்கப்பாரு உன் ஆளை. உன்னைத்தான் தேடுறாரு போல. போய் அவரோட பேசுடீ. நான்லாம் எங்கேஜ்மெண்ட் முடிஞ்ச கையோட கரண் ஃபோன் நம்பர் வாங்குனது. போன்ல பேசியே மேரேஜ்க்கு முன்னாடி அவர் ஜாதகத்தை உருவிட்டேன். நீ என்னடான்னா உன் அவர் முகத்தைக் கூடப் பார்க்க மாட்ற!” அற்புதா இசைவாணியின் தோளை இடித்தாள்.

“அப்போல இருந்து இப்போ வரை ஃபோன்லதானே அற்புதா குடும்பம் நடத்துற?” நாக்கை துருத்திவிட்டு சரவணன் முன்னே விரைந்தான்.

அற்புதாவிற்கு திருமணம் முடிந்து ஆறுமாதங்களாகிறது. அவளது கணவன் அமெரிக்காவில் ஐடி ஊழியராக பணிபுரிகிறான். திருமணத்திற்குப் பின்னே இவளையும் அவனோடு அழைத்துக் கொள்வதாகத்தான் ஏற்பாடு. ஆனால் நுழைவு இசைவு கிடைப்பதில் சின்ன சிக்கல் ஏற்பட, அது இழுபறியாகிக் கொண்டே போனது.

“அவன் கிடக்கிறான் லூசுப் பையன். நீ அதெல்லாம் கண்டுக்காத. போ... ஒழுங்கா அவரோட சேர்ந்து சேரி செலக்ட் பண்ணு!” என இவள் அத்தை மகளை அங்கிருந்த ஆடவன் அருகே தள்ளிவிட்டாள்.

இசைவாணி உதட்டைக் கடித்து உள்ளத்தின் உணர்வுகளை மறைத்தபடியே சின்ன புன்னகையுடன், “ஹாய் பிரதீப்!” என்றாள்.

இசைவாணி திருமணத்திற்கு சம்மதம் என்ற கையோடு காமராஜ் தனது நீண்ட கால நண்பனின் மகனை இவளுக்கு மாப்பிள்ளையாக அழைத்து வந்துவிட்டார். ஏற்கனவே அவருக்குப் பிரதீப்பை சிறுவயதிலிருந்தே நன்கு தெரியும்.

எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாத அமைதியான பையன். படித்து முடித்துவிட்டு இசைவாணியைப் போலவே ஐடி துறையில் பணிபுரிகிறான். அவளுக்குப் பொருத்தமாக இருப்பான் என ஒரு நல்ல நாளில் பிரதீப் வீட்டினர் இசைவாணியைப் பெண் பார்க்க வந்தனர்.

பிரதீப்பின் தாயிற்கு இவளைப் பார்த்ததும் பிடித்துப் போக, தாமதப்படுத்த வேண்டாம் என்று அன்றைக்கே இரு வீட்டுப் பெற்றவர்களும் மனமுவந்து நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டனர். சண்முகசுந்தரிதான் மகளுக்குத் திருமணம் நிச்சயமானதில் உடல்நலக் குறைவை மறந்து முழுமூச்சாக மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற முனைப்பிலிருக்கிறார்.

அவசர அவசரமாக நிச்சயம் முடிந்தாலும், தெரிந்தவர் அறிந்தவர் மூலமாக மாப்பிள்ளை வீட்டைப் பற்றி நன்றாக விசாரித்து, திருப்தியானப் பின்பே அவருக்கு மனம் சமாதானமடைந்தது. மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது நோக்கம்தான். அதற்காக தவறான ஒருவனின் கையில் மகளை ஒப்படைத்துவிடக் கூடாது என வெகுகவனமாக செயல்பட்டார். அடுத்த மாதம் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என ஒரு மனதாக இருவீட்டினராலும் முடிவு செய்யப்பட, இன்றைக்கு முகூர்த்தப் புடவை எடுக்க வந்திருந்தனர்.

இசைவாணி பெண்பார்க்கும் நாளில் தேநீர் கொடுக்கும்போது பிரதீப்பை பார்த்ததோடு சரி. இன்றைக்குத்தான் அடுத்த சந்திப்பு. அவன் கருப்பா, வெள்ளையா, குட்டையா, உயரமா என அவளிடம் எவ்வித ஆராய்ச்சியும் இல்லை.

தன் தாயின் மலர்ந்த முகத்தைப் பார்த்தவள், அவருக்காக இவன் எப்படியிருந்தாலும் சம்மதிக்கலாம் என தன் விருப்பத்தை தெரிவித்தாள். அப்போதே கமலா வந்து இவளது கன்னத்தைக் கிள்ளி முத்தமிட, சுந்தரி பத்து வயது குறைந்ததை போல பேசியதில் தன் மனதோரம் அரித்த நினைவை தூக்கித் தூரப் போட்டிருந்தாள்.
திருமணம் முடிந்தால் அவனை கணவனாக முழுமனதோடு ஏற்றுக்கொள்வோம் என மனத்தை சுயசமாதானம் செய்து தேற்றி இந்த திருமணத்திற்குத் தயாரானாள்.

ஆனால் பிரதீப்பிடம் திருமணத்திற்கான ஆர்வமே இல்லை. அன்றைக்கும் ஏதோ கடமைக்கு வந்து அமர்ந்திருந்தான். இப்போதும் இவளது ஹாய்க்கு அவனிடம் சின்ன தலையசைப்பு மட்டும்தான் பதிலாகக் கிடைத்தது. இவளது இலக்கத்தைப் பெறவோ, பேசவோ அவனிடம் ஆர்வமில்லாததில் துணுக்குற்றாள். மனதோரம் சின்னதாய் ஒரு நெருடல் அவளைப் போட்டு அனத்தியது. எந்த தவறும் நடந்துவிடக் கூடாது கடவுளே என மனத்தில் கவலை அரித்தது.

அவளுக்குப் பிரதீப்பை பிடித்திருக்கிறது இல்லை என்ற முடிவெல்லாம் இரண்டாம்பட்சம்தான். சுந்தரிக்கு இந்தக் குடும்பத்தைப் பிடித்திருக்கிறது. அவரது ஆசைக்காகவேணும் எவ்வித தடங்கலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு பார்வையைச் சுழற்றினாள்.

சிரித்த முகத்தோடு ஆசையாய் மகளுக்குப் புடவையைத் தேர்வு செய்து கொண்டிருந்தார் சுந்தரி.
அதற்குள்ளே பெண்கள் மூவரும் சேர்ந்து நான்கைந்து புடவைகளை கலைத்துப் போட்டிருந்தனர்.

“வாணி... இங்க வா டீ!” அம்சவல்லி அழைத்ததும் இவள் அவர்கள் அருகே செல்ல, ஆளாளுக்கு ஒரு புடவையை எடுத்து இவளது தோளில் வைத்துப் பார்த்தனர். இவளது அபிப்ராயமும் கேட்கப்பட்டது.

“பிரதீப்... இங்க வா டா. வந்து உன் வருங்காலப் பொண்டாட்டிக்கு நீயே செலக்ட் பண்ணு!” மாப்பிள்ளையின் தாயார் மகனை அழைத்தார். அவரது பொண்டாட்டி என்ற வார்த்தையின் கசப்பை தொண்டையோடு விழுங்க முயன்றவள், தலையைக் குனிந்து கொண்டாள்.

பிரதீப் இவளருகே வந்து அமர்ந்ததும், “இந்த மூனு சேலை நாங்க எடுத்துருக்கோம். எது அவளுக்கு சரியா இருக்கும்னு சொல்லு!” என அவன் தாய் கேள்விகளுக்கு அசுவாரஸ்யமாய் ஒன்றைத் தேர்வு செய்தான்.

பெண் அழைப்பு, முகூர்த்தம், மறுநாள் திருமண வரவேற்பு என இசைவாணிக்கு மட்டுமே நான்கைந்து புடவைகள் எடுத்து முடிய, அற்புதாவும் சரவணனும் தங்களுக்குரிய உடையை எடுத்துக்கொண்டு இவளருகே அமர்ந்தனர்.

“வாணி... என்ன அவர்கிட்டே பேசுனீயா? நாங்க கரடியா இருக்க வேணாம்னுதான் வேற செக்ஷனுக்குப் போனோம். அவர் செலக்ட் பண்ணாரா இந்த சேரியை!” கேள்வியும் அவளே, பதிலும் அவளே என அற்புதா இவளுக்கு எடுத்தப் புடவையை ஆராய்ச்சி செய்ய, சரவணன் புடவையை விரித்துப் போடும் பெண்ணை ஆராய்ந்தான்.

“தம்பி... உன் வேலையை இங்க காட்டக் கூடாது. எலும்பை எண்ணிடுவாரு அப்பா!” அற்புதா மெல்லிய குரலில் இவனிடம் முணுமுணுக்க, ‘சே... ஒரு பொண்ணைப் பார்க்க விட மாட்டா. இவ கூட இருக்கவரை நான் சிங்கிள்தான். சீக்கிரம் மாமா இவளைக் கூப்ட்டுப் போனாதான் எனக்கு சுதந்திரம் கிடைக்கும்!’ எனக் கடுப்போடு அவன் அகன்றான்.

எல்லோருக்கும் உடைகள் எடுத்து முடிய மதிய பொழுதாகியது. அருகிலுள்ள உணவகத்தில் உண்டுவிட்டு நகைக்கடைக்குச் சென்று தாலி செய்ய கொடுத்துவிட்டு மாப்பிள்ளை வீட்டினர் விடை பெற்றனர்.

“மாமா... நீங்க கிளம்புங்க. உங்களுக்கும் டையர்டா இருக்கும். நான் கேப் புக் பண்ணிட்டேன். ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடும்!” இசைவாணி காமராஜ் குடும்பத்தை அனுப்ப முயன்றாள். இவள் பதிந்த மகிழுந்து வந்ததும் இவளையும் சுந்தரியையும் அனுப்பிய பின்னரே அவர்கள் கிளம்பினர்.

இருக்கையோரம் சாய்ந்தமர்ந்தவளின் காதில், “நோ நீட்!” என்ற வார்த்தையே மீண்டும் ஒலித்தது. கடையை விட்டு வெளியேறும் முன்னே அற்புதா இவளை பிரதீப் எண்ணைப் பெறச் சொல்லி உந்த, இவள் தயக்கத்துடன் அவனது இலகத்தைக் கேட்டாள்.

“நோ நீட்... மேரேஜ்க்குப் அப்புறம் பேசிக்கலாம்!” அவன் தன்மையாய் மறுத்திரு
ந்தாலும், இவளுக்கு வயிற்றில் பயபந்து சுழன்றது. கண்டிப்பாக அவனிடம் ஒருமுறை பேசித் தெளிவுப்படுத்திவிட வேண்டும் என்றெண்ணத்தோடு வீடு சென்றிறங்கினாள்.

தொடரும்...

 
Top