• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,275
Reaction score
3,734
Points
113
நேரம் – 2 💜

வீட்டிற்குள்ளே நுழைந்ததும் கையிலிருந்த பையை மேஜையில் வைத்த இசைவாணி இருக்கையில் பொத்தென அமர்ந்தாள். சென்ற வாரம் அவர்கள் குழு செய்த திட்டத்தில் ஏதோ கோளாறு என நேற்றிலிருந்து அதை சரி செய்து மீண்டும் ஒப்படைத்தவளுக்கு உடல் என்னவோ அதீத சோர்வாய் உணர்ந்தது.

கழுத்தை சுற்றிப் படர்ந்திருந்த துப்பட்டாவிற்கு விடுதலைக் கொடுத்தவள், அடர்ந்து சுருண்டு கிடந்த முடியைத் தூக்கி கொண்டையிட்டாள். முதுகை பின்னோக்கி வில்லாய் வளைத்தவளுக்கு குனிந்தே மடிக்கணினியைப் பார்த்திருந்ததில் கழுத்தும் முதுகும் நிரம்ப வலிக்க, கண் வேறு எரிந்தது. நேற்றிரவும் இதே வேலையாக இருந்ததால், சரியாய் தூங்கவும் இல்லை. ஒரு பக்க கையைத் தூக்கி கழுத்தும் முதுகும் சேரும் இடத்தை மெல்ல நீவிவிட்டாள். சுகமாய் இருக்கவும், நன்றாய் ஒரு காலை இழுத்து மற்றொன்றை கீழே தொங்கவிட்டு வசதியாய் அமர்ந்தாள்.

தொடர்ந்து வேலை செய்ததால் கழுத்து வலிக்கிறதா? இல்லை மனவழுத்தம்தான் காரணமா? என மூளை வேறு தனியாய் ஓர் ஆராய்ச்சியில் இறங்கிற்று. மேலும் அதைப் பற்றி யோசிக்க விருப்பப்படாதவள், சிந்தனையை முயன்று கலைத்துப் போட்டாள்.

அவள் அரவம் உணர்ந்த கமலா கையிலிருந்த கரண்டியை சமையல் மேடை மீது வைத்துவிட்டு ஈரத்தில் ஊறிப்போன விரல்களை உடுத்தியிருந்த சேலையில் துடைத்துக் கொண்டே மென்முறைப்போடு இவளை நோக்கி வந்தார்.

“என்ன வாணிமா, நானே காய்கறி வாங்கிக்கிறேன்னு சொன்னேன்ல. எதிர்தாப்புல கடை இருக்கு. வேலை முடிஞ்சு நேரா வீட்டுக்கு வர வேண்டியதுதானே. நான் தானே எப்போவும் கடைக்கு போவேன். இதெல்லாம் உனக்கு பழக்கம் இல்லாத வேலை?” என உரிமையாகக் கடிந்தவரைப் பார்த்து சோபையாய் புன்னகைத்தவள் கையைத் தூக்கி நெட்டி முறித்தாள்.

“இன்னும் ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரியே என்னை ட்ரீட் பண்றது நீங்க ஒரு ஆள் தான் கமலாமா...” என முறுவலித்தவள், “நானும் எல்லாத்தையும் கத்துக்க வேணாமா? பாருங்க அந்த கடை பையன் வெண்டைக்கா கார்னரை ஒடிச்சு எடுக்குறேன்னு முகத்தை தூக்குறான். அப்படியே பழகிக்க வேண்டியதுதான்” என்றாள் கேலியாக. அவனுடைய ஆராய்ச்சிப் பார்வை ஒருமுறை கண்முன்னே வந்து போனது.

“வெண்டைக்காயை ஒடிச்சதுக்கு எல்லாமா முகத்தைக் காட்றான். பின்னே எப்படி காய் வாங்குறதாம். நான் அடுத்து போகும்போது என்னென்னு கேட்குறேன்மா!” முகத்தைக் கோணியவாறே கமலா சமையலறைக்குள் நுழைய, இவள் அவரது செய்கையில் சிரித்துவிட்டு அகன்றாள்.

அலுப்பு தீர ஒரு குளியலைப் போட்டவள், உடை மாற்றி முகத்துக்கு ஏதோ பூசிவிட்டு தாயின் அறைக்குள் மெல்ல அடியெடுத்து வைத்து நுழைந்தாள். சண்முகசுந்தரி ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தார். இவள் பெருமூச்சுடன் அவர் அருகே சப்தம் வராது ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர, அன்னிச்சையாக அவர் இவள்புறம் திரும்பிப் படுத்தார்.

அமைதியில் திளைத்திருக்கும் அவரது முகத்தையே பார்த்தவளுக்கு மனதில் கனம் கூடிப்போனது. தந்தை இறப்பிற்கு பின்னே சுந்தரி மொத்தமாய் ஒடிந்து போயிருந்தார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்ல, இவளுக்கு அவரை எப்படி தேற்ற என்று தெரியவில்லை. தன்னைப் பற்றிய கவலைதான் அவரை இன்னும் உருக்குகிறது என மகளுக்கும் புரிந்தே இருந்தது.

“நான் உங்ககிட்டே என்ன சொன்னேன் இசைவாணி? உங்க அம்மா உங்களுக்கு முக்கியம் இல்லையா என்ன? லாஸ்ட் டைம் வரும்போதே ஐ வார்ண்ட் யூ. ஒழுங்கா டேப்லட்ஸ் எடுக்கலைன்னா, எப்படி அவங்க ஹெல்த் இம்ப்ரூவ் ஆகும். ஆப்ரேஷன் பண்ண அவங்க உடம்பு ஒத்துழைக்கணும். இல்லன்னா உங்களுக்குத்தான் கஷ்டம். அஸ் அ டாக்டரா நான் சொல்ல வேண்டியது சொல்லிட்டேன். இதுக்கும் மேல உங்க அம்மாவைப் பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. நெக்ஸ்ட் டைம் வரும்போது உங்கம்மா ஹெல்த் இம்ப்ரூவாகி இருக்கணும். இல்லன்னா வேற டாக்டரை கான்சல்ட் பண்ணுங்க. என்னை ஆளை விடுங்க!” கடித்து துப்பாத குறையாக இவளிடம் மருத்துவர் அறிவுறுத்தி இருக்க, சுந்தரி எதற்கும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறாரே என இவளுக்கு பெரும்கவலை அரித்தது.

கமலா கூடத்திலிருந்து இவளை எட்டிப் பார்க்கவும், எழுந்து அறைக்கதவை மெதுவாய் சாற்றிவிட்டு அவர் கொடுத்த தேநீரை வாங்கிக்கொண்டு சென்று அந்த கூடைப் போலிருந்த ஊஞ்சலில் ஒடுங்கி அமர்ந்தாள். சூடான பானத்தை அவள் நிதானமாகப் பருக, பின்னூடே கமலா வந்து நின்றார். இவள் கவனித்தாலும் தலையை நிமிர்த்தாது தேநீரிலே கவனம் இருப்பது போன்ற பாவனையைக் கொடுத்தாள். அவரே தொடங்கினார்.

“வாணிமா, இன்னும் நீங்க அந்த அர்ஜுன் தம்பியை மறக்கலையாமா?” அவர் குரல் காதில் மோதி செவிப்பறையை கிழித்துக்கொண்டு உள்நுழைய, இவள் சூடான தேநீரோடு மனத்தின் கசப்பையும் தொண்டையில் மெதுவாய் உள்ளிறக்கினாள். அவர் பதிலுக்காக தன் முகத்தையே பார்த்திருப்பது புரிய, உதட்டை கடித்து சில நொடிகள் தயங்கியவள் நிமிர்ந்து அவரைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள்.

“உங்க சுந்தரிமா கேட்க சொன்னாங்களா?” எனக் கேட்டவளின் உதட்டோரம் கசப்பான முறுவல் படர்ந்தது.

“அவங்க எதுவுமே என்கிட்ட பேசலைடா. நான்தான் அம்மா இப்படி இருக்குறதைப் பார்த்து மனசு கேட்காம உன்கிட்டே கேட்குறேன்!” அவர் தயங்கியபடிதான் பேசினார். இவள் சிரிப்புடன் தலையை இடம் வலமாக இல்லை என் அசைத்தாள். ஆனால் கண்கள் உண்மையை புடம் போட்ட தங்கமாய் மின்னிக் காண்பித்தன.

அவளுக்குத் தன் வாயைத் திறந்து பேச என்ன தடுக்கிறது என்று நான்கு வருடங்களாக கண்டுபிடிக்க முயற்சி செய்தும் விடை என்னவோ சுழியம்தான். இதுவரை யாரிடமும் அவள் இதைப்பற்றி மனதார பகிர்ந்ததில்லை. ஒருவேளை யாரிடமாவது கூறியிருந்தால் பாரம் அப்போதே கரைந்திருக்குமோ என்னவோ? பொத்திப் பாதுகாத்ததில் பொதிக் கூடிற்று.

ஒரு காதல் தோல்வி நான்கு வருடங்களாக தன்னை துரத்துகிறதா? தோல்வி என்ற வார்த்தையை மனம் பிரயோகிக்க விரும்பவில்லை போல. முகம் கசங்கியது.

காதல் முறிவு என்ற வார்த்தையை உட்புகுத்தியவளுக்கு நான்கு வருடங்கள் ஒரு காதல் முறிவை கடந்து செல்ல போதுமானது என்று எங்கோ பார்த்த நினைவு வர, உதடுகள் கோணலாய் வளைந்தன. உண்மையில் தோல்வி, முறிவு என்ற வார்த்தைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது ஒரு பிரியத்தை இழக்கும்போது வரும் வலி.

உடன் இருக்கும்போது அர்ஜூனை இந்த அளவிற்கு சார்ந்து இருந்திருக்கிறோமா என அவளுக்கே தெரியாது போனது. வேண்டாம் என பிரியும் முடிவை எடுத்தபோது கூட இத்தனை வலிக்கும் என இவள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் நான்கு வருடங்களாக அவன்விட்டு சென்ற இடத்திலே நிற்கிறோம் என்று உணர்ந்தபோது தன்னையே பலகீனமாய் எண்ணி வெட்கினாள். எப்போதும் சாய்ந்து சலுகையாக கொஞ்சும், கெஞ்சும் தந்தை இப்போது புகைப்படத்தில் அவளைப் பார்த்து சிரிக்க, இவளால் இன்னுமே அவர் தங்களை விட்டுப்போனதை ஏற்கவே முடியவில்லை.

‘அந்த முடிவை எடுக்குறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் கூட நானும் அம்மாவும் உங்க கண்ணுக்கு தெரியலையாப்பா?’ மானசீகமாய் எப்போதும் போல மனதிலே அவரிடம் கேட்டு மருகினாள். அவர் உடனிருக்கும்போது கவலைகள் அற்று பட்டாம்பூச்சியாய் வளைய வந்த நாட்கள் இப்போது அவளை வருத்தின. அப்பொழுதே தான் இன்னும் கொஞ்சம் பொறுப்பாய் இருந்திருக்கலாம். நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்திருக்கலாம் என எண்ணியதும் துக்கப் பெருமூச்சொன்று அவளிடம் எழுந்து அடங்கியது.

“அம்மா காலைல ஒழுங்கா சாப்பிடவே இல்லை பாப்பா. அவங்களுக்கு உன்னை பத்தின கவலை அதிகமாகிடுச்சு. என்கிட்டே கூட ரெண்டு வார்த்தையோட நிறுத்திக்கிட்டாங்க. இப்போ கடைசியா வந்த வரன் ரொம்ப நல்ல மாதிரியா தெரிஞ்சாங்க. அம்மாவுக்கு அவங்க குடும்பத்தை ரொம்ப பிடிச்சு போச்சு. நீங்க மட்டும் சரின்னு சொல்லி இருந்தா, ஒரே வாரத்துல கல்யாணத்தை முடிச்சு இருப்பாங்க. ஆனால் நீதான் வேணாம்னு சொல்லிட்ட!” மனதாங்கலோடு அவர் பேச,

“அந்த பையன் எனக்கு செட்டாக மாட்டான் கமலாம்மா!” இவள் இடை மறித்தாள்.

“வாணி மா, நீ அர்ஜுன் தம்பியை மற முதல்ல. எல்லாரையும் செட்டாக மாட்டாங்கன்னு நீயே சொல்லாத. பழகிப் பார்த்தா தானே தெரியும். இப்போதான் ஃபோன், அது இதுன்னு நிறைய இருக்கே. அவர் நம்பர் வாங்கி பேசிப் பார்க்கலாம் இல்லை. ஒரு டைம் பார்த்ததும் குணம் எப்படி தெரியும்?” அவர் கேட்க, இவளிடம் அதீத அமைதி.

“பாப்பா, நீ தப்பா நினைச்சா நினைச்சுக்கோ. உங்க அம்மா உடம்பு ரொம்ப மோசமாகிட்டே போகுது. மாத்திரை சப்பிடுங்கன்னு கொடுத்தா, அதை அப்படியே வச்சிருகாங்க. உன்னை நினைச்சு அவங்க நிதம் கவலைப்பட்றாங்க. அவங்களுக்கும் வயசாகுது இல்ல, உனக்கும்தான். காலத்தே பயிர் செய்யணும்னு சொல்லி இருகாங்க. பயிருக்கு மட்டும் இல்ல, மனுஷங்களுக்கும்தான்!”

“அம்மா நல்லா இருக்கும்போதே உங்களை ஒரு நல்ல இடத்துல கட்டிக் கொடுக்க நினைக்குறாங்க. அதுல தப்பு இருக்கதா எனக்குத் தெரியலை. நல்லா யோசிங்க!” அவர் பேசும்போதே சுந்தரி எழுந்து வந்துவிட்டார். இவர்கள் உரையாடல் பாதியிலே நின்று போனது.

“கமலாமா, நாளைக்கு டாக்டர் அப்பாய்ன்மெண்ட் இருக்கு. மார்னிங் டென் ஒ க்ளாக் போகணும்!” சுந்தரிக்கு கேட்க வேண்டும் என்று வாணி கத்தி சொல்ல,

“என்னால எங்கேயும் வர முடியாது கமலா. நீ போய் எனக்கு சக்கரை தூக்கலா ஒரு டீ கொண்டு வா” கமலாவிடம் அவர் வேலை ஏவ, மகள் கோபத்தில் பல்லைக் கடித்தாள்.

“கமலாமா, நோ சுகர் டீ கொடுங்க” தாய் மீதிருக்கும் கோபத்தில் இவரிடம் இரைந்தாள் இசைவாணி.

“கமலா, நான் சொல்றதை நீ கேளு. நான்தானே டீ குடிக்கப் போறேன். போய் சக்கரை போட்டு எடுத்துட்டு வா” சுந்தரி கூறவும் கமலா சமையலறை நோக்கிச் செல்ல, வாணி தாயை இயலாமையுடன் பார்த்தாள். அவரிடம் கோபப்படவும் முடியாது. சென்ற முறை அவருக்கும் இவளுக்கும் வாக்குவாதம் முற்றி அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்து மயங்கிவிட, இவள்தான் துடித்துப் போனாள்.

அதன் பிறகு இன்றைக்குத்தான் இருவரும் பேசி கொள்கின்றனர்.
தாயிடம் காண்பிக்க முடியாத கோபத்தை வேக நடையில் வெளிப்படுத்தியவள், “கமலாமா...” என்றாள் ஆதங்கமாய்.

“சக்கரை போடலை பாப்பா. நீங்க போங்க!” அவர் கூற்றை நம்பாதவள், கையோடு சர்க்கரை டப்பாவையும் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

***

நாற்பதின் துவக்கத்தில் இருந்த அந்த மருத்துவ பெண்மணி ஒருமுறை தனது மூக்கு கண்ணாடியை சற்றே மேலேற்றிவிட்டு, தன் கையிலிருந்த மருத்துவ அறிக்கையை பார்த்து அதிருப்தியோடு நிமிர்ந்தார். இசைவாணி அவரது முகத்தை ஒருவித பயமும் குற்றவுணர்வுமாய் பார்த்திருந்தாள். அவளுக்கு அருகே அமர்ந்திருந்த சுந்தரி தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற பாவனையில் வேடிக்கைப் பார்த்தார்.

ஏதோ திட்ட வாயெடுத்த மருத்துவர், அவள் முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “வேற டேப்லட்ஸ் மாத்தி தரேன். நெக்ஸ்ட் மந்த் வாங்க, இம்ப்ரூவ்மெண்ட் இருக்கான்னு பார்க்கலாம்...” என்று பேச்சை முடித்துக் கொண்டார்.

அவர் பார்வை, ‘நான் என்னதான் சொன்னாலும் நீங்க கேட்க போவதில்லை’ என்பது போல அவளைக் குற்றம் சுமத்திற்று,

“டாக்டர், ரிப்போர்ட்ஸ் எப்படி இருக்குன்னு நீங்க சொல்லவே இல்லையே!” தயக்கமாய் கேட்டவளைப் பார்த்தவர்,

“ஒன்னும் சொல்றதுக்கு இல்லைமா. உங்களுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க விருப்பம் இருந்தா மட்டும் என்கிட்ட வாங்க. இல்லன்னா ப்ளீஸ், வீட்டுலே இருந்துக்கோங்க” வெடுக்கென அவர் கூறவும் இவளது முகம் கசங்கிப் போனது.

“சாரி டாக்டர்” வாணி மென்குரலில் மன்னிப்பை வேண்டினாள்.

“டோன்ட் ஆஸ்க் சாரி இசைவாணி. அட்லீஸ்ட் நெக்ஸ்ட் டைம் வரும்போதாவது கரெக்டா ட்ரீட்மெண்ட் ஃபாலோ பண்ணீட்டு வாங்க. இல்லன்னா என் டைமும் வேஸ்ட். உங்களுக்கும் மணி வேஸ்ட்” என்றவரிடம் தலையை அசைத்தவள், தாயை ஒருமுறை இயலாமையுடன் பார்த்துவிட்டு விறுவிறுவென முன்னே நடந்தாள். இருவரும் ஒரு வாடகை மகிழுந்தில் வீடு வந்து சேர்ந்ததும் கையிலிருந்த மருத்துவ அறிக்கையை விசிறி அடித்தவள், சுந்தரியைக் கோபமாகப் பார்த்தாள்.

“இப்படி கொஞ்சம் கொஞ்சமா என்னை சாகடிக்குறதுக்கு பதிலா மொத்தமா ரெண்டு பேரும் போய்டலாம் வாங்க!” என்றாள் இயலாமைக் கொடுத்த கோபத்தோடு.

அவளை நிதானமாகப் பார்த்த சுந்தரி, “கமலா, ரொம்ப தாகமா இருக்கு. நேத்து வாங்கிட்டு வந்த தர்பூசணி பழத்துல ஒரு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா!” என்றார் சாவகாசமாய். இவளுக்கு வந்ததே ஒரு கோபம்.

“ம்மா, நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா ஜூஸ் கேட்டுட்டு இருக்கீங்க?” பல்லைக் கடித்தாள்.

“ஏன்டி, நான் என்ன கேட்டேன். தாகத்துக்கு ஒரு ஜூஸ் கேட்டது குத்தமா?” என்றவரை என்ன செய்தால் தகும் என்பது போல பார்த்தாள் மகள்.

“ஏன்மா இப்படி பண்ற?” எனக் கேட்டவளுக்கு குரல் கமறிப் போனது. குபுக்கென விழிகள் தளும்பி நிற்க, தாயருகே சென்று அவர் முந்தானையை எடுத்து விழியோரம் கசிந்த நீரை துடைத்துவிட்டு அவரை இறுக அணைத்துக் கொண்டாள். அவர் இளகாது அப்படியே இருக்க, இன்னுமின்னும் கண்களில் நீர் திரண்டது.

“நீயாவது எனக்கு வேணும்மா. ப்ளீஸ்மா, உன்னை ஒழுங்கா பார்த்துகோம்மா!” என்றாள் தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கி.

மகளின் கண்ணீரைக் கண்டதும் தாய் மனம் இளகித் தொலைத்தது போல. தனது வீம்பைத் தூக்கிப் போட்டவர், அவள் விழிநீரை துடைத்துவிட்டு, “ஒரு தடவை நான் உன் பேச்சை கேட்கலைன்னதும் உனக்கு கோபம் வருதில்லை வாணி? ஆனால் நாலு வருசமா நீ என் பேச்சை கேட்கலை. நடந்து முடிஞ்சதையே யோசிச்சுட்டு உன்னையும் என்னையும் சேர்த்துக் கஷ்டப்படுத்துற?”

“உன் வாழ்கை நல்லா இருக்கணும்னு ஒரு அம்மாவா நான் நினைக்கிறேன். உங்கப்பா சுயநலமா உன்னை என் பொறுப்புல விட்டுட்டு போய்ட்டாரு. டாக்டர் என்னடான்னா இதயத்துல அடைப்பு இருக்கு, ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்றாங்க. எங்க நானும் உங்க அப்பா மாதிரி உன்னை தனியா நிக்க விட்டுட்டு போய்டுவேனோன்னு பயமா இருக்கு டி. எனக்கு இப்போலாம் நைட் தூக்கமே வர்றது இல்லை!” என்றவர் அவள் முகத்தை தன் விரலால் வருடினார். இவள் அமைதியாய் அவரைப் பார்த்தாள்.

“நடந்ததையே நினைச்சுட்டே இருந்தா எதுவும் மாறிட போகுதா பாப்பா? உனக்குன்னு ஒரு வாழ்கை இருக்கு. அதை யோசி, அர்ஜுன் சந்தோஷமா இருக்கான் பொண்டாட்டி புள்ளைன்னு. நீதான் அவனை நினைச்சுட்டே இருக்க...” அவர் கூறவும் இவள் முகத்தில் வருத்தப் புன்னகை உதிர்ந்தது.

“இல்லை, நான் இப்படியே தான் இருப்பேன்னு நீ சொன்னா, நானும் இருக்க காலம் வர எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போறேன்..” சுந்தரி தன பேச்சு முடிந்தது என்பது போல மகளைப் பார்த்தார். அவர் கேட்கும் எந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. உண்மையில் அவள் அவளாகத் தன்னை சுய-அலசல் செய்யவே முயற்சிக்கவில்லை. நடந்ததையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து மேலும் தன்னை வருத்த மனம் விரும்பவில்லை போல.

தாயின் ஆசைக்காகத்தான் கடைசியாய் வந்த வரனிற்கு வாணி சம்மதம் தெரிவித்திருந்தாள். ஏனோ அவனை நேரில் பார்த்து பேசும்போது இவளுக்கு மனம் ஒப்பவே இல்லை. அவனோடு ஒன்றி வாழ முடியாது என மூளை தீர்க்கமாய் முடிவு எடுத்ததில் அவன் வேண்டாம் என உரைத்திருந்தாள். அதுதான் சுந்தரியை நிரம்ப பாதித்து இருந்தது.

அந்த‌ நிகழ்வுக்குப் பின்னே மகளோடு பேசுவதை முற்றிலுமாய் தவிர்த்தார். உணவு பழக்க வழக்கத்தை மாற்றினார். மாத்திரை, மருந்துகளை சரியாய் உட்கொள்ளாமல் தனது மௌன போராட்டத்தை தொடர்ந்தார். அவர் எதிர்த்து சண்டையிட்டிருந்தால் கூட இசைவாணி அவரை எதிர்த்திருப்பாள். ஆனால் அவரது இவ்வகையான நூதன தண்டனை இவளை மொத்தமாய் நொறுக்கியிருந்தது.

தாய்க்கு இதயத்தில் அடைப்பு இருக்கிறது எனக் கேட்டதிலிருந்தே அடிவயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஏதோ உணர்வு மேலெழுந்து அவளது நிம்மதியை மொத்தமாய் பறித்துப் போட்டிருந்தது. அவரது உடல்நிலை அறுவை சிகிச்சையை தாங்கும் அளவிற்கு இல்லை. முதலில் உடல்நிலையை சீர்செய்து பின்னர் சிகிச்சை செய்யலாம் என மருத்துவர் அறிவுறுத்தியிருக்க, எதற்கும் அவர் உடன்பட மறுக்கிறார்.

கண்டிப்பாக அறுவை சிகிச்சைக்கு முன்னே மகளுக்கு திருமணத்தை முடித்துவிட தீர்க்கமாய் இருந்தார் பெரியவர். இதை வைத்துதான் அவளை சம்மதிக்க வைக்க முடியும். இல்லையென்றால் வாணி இப்படியே இருந்துவிடுவாள். ஒரு தாயாய் வேதனை அவரை அரித்தது.

அதனாலே இப்போதெல்லாம் மகளுக்குப் பிடிக்காததை செய்து, கட்டாயப்படுத்தியேனும் அவளை சம்மதிக்க வைக்க முயல்கிறார். அவளுக்கான நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் அவரிடம் பிரதானம்.

“ரெண்டு பேரும் பேசி முடிச்சாச்சுன்னா, ஜூஸ் எடுத்துக்கோங்க...” என்று கமலா கேலியாய் கூறியவாறே வந்து நிற்க, இசைவாணி அவரை நிமிர்ந்து முறைத்தாள்.

“அம்மாக்கு சக்கரை போடல வாணிமா” என்றவர் மற்றொரு குவளையை இவளது கையில் திணிக்கவும் சின்ன முறைப்போடு தாயின் மீது சாய்ந்தமர்ந்து அதைப் பருகத் தொடங்கினாள்.

“அம்மாவும் பொண்ணும் சமாதானம் ஆகிட்டீங்களா? இனிமேல் உங்களுக்கு இடையில என் தலை உருளாது தானேமா?” கமலா தானும் பழச்சாற்றை அருந்தியபடி பகடியாய்க் கேட்க, தாயும் மகளும் ஒருசேர அவரை முறைத்தனர். பேச்சு அப்படியே மதிய சமையலுக்கு மாற, வாணி தன அலுவலக வேலையை கவனிக்கச் சென்றுவிட்டாள்.

***

எதிர் வெயில் கொடுத்த தாக்கத்தில் கண்ணை சிமிட்டியவாறு அந்த உயர்ந்த கட்டிடத்தை ஒருமுறைப் பார்த்த பரிதி, தான் வந்த முகவரி சரிதான் என்பதை உறுதிப்படுத்திவிட்டு பாபுவிற்கு அழைப்பை விடுத்தான். இரண்டுமுறை அழைப்பு சென்று துண்டாக, மூன்றாவது முறை ஏற்கப்பட்டது.

“ஹலோ...” தூக்க கலக்கத்தில் அவன் குரல் குழற,

நெற்றியில் ஒரு விரலால் கோடிழுத்த பரிதி, “சாரி டா மச்சான், அன்டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல, இங்க கன்சல்டன்சி இன்னும் ஓபன் ஆகலடா...” என்றான் ராகமிழுத்து. மறுபுறம் அவன் கொட்டாவி விடும் சப்தம் இவனை எட்டியது.

“டேய் கடமை கண்ணாயிரமே, பத்து மணிக்குத்தான்டா ஓபன் பண்ணுவாங்க. ஆப்போசிட்ல ஒரு டீ கடை இருக்கும் பாரு. அங்க போய் ஒரு டீயைப் போட்டுட்டு வெயிட் பண்ணு. வந்துடுவானுங்க...” என்ற பாபு கைபேசியை தூக்கி தூரப் போட்டுவிட்டு உறக்கத்தை தொடர்ந்தான்.

“கிறுக்கன், இந்த மொட்ட வெயில்ல டீ குடிக்க சொல்றான்..” என் நண்பனை வாய்க்குள் மென்றவன் அந்த சாலையை சுழற்றி கண்கள் மேயவிட்டவாறே, “அண்ணே கொதிக்க கொதிக்க‌ சூடா ஒரு டீ!” என்றுவிட்டு நிழலான இருக்கை ஒன்றில் அமர்ந்து குமுதத்தை எடுத்துப் புரட்டினான்.

சரியாய் இவன் டீ குடித்து முடித்து நிமிர, நவீன யுவதி ஒருத்தி வந்து அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தாள். இவன் அவள் பின்னோடயே சென்றான்.

“குட் மார்னிங் சார், வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?” அந்த யுவதி நுனி நாக்கு ஆங்கிலத்தில் இவனிடம் கேட்க, பரிதி தான் வந்த நோக்கத்தைக் கூறினான்.

”ஓகே சார், ப்ளீஸ் வெயிட் ஃபார் டென் மினிட்ஸ். ஐ வில் கனெக்ட் யூ வித் அவர் ஸ்டாஃப்!” எனக் கூறி அவனைக் காத்திருக்க பணித்தாள். பத்து நிமிடங்களிலே அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் வந்துவிட, இவன் உள்ளே அழைக்கப்பட்டான்.

அறைக்குள்ளே நுழைந்தவன் அங்கே அமர்ந்திருந்த மத்திம வயது ஆண் ஒருவனிடம் தான் எதற்கு வந்தேன் என்பதை விளக்கிக் கூறினான். அவர் இவன் கூறுவதைப் பொறுமையாய்க் கேட்டுவிட்டு சான்றிதழ்களை ஒருமுறைப் பார்த்தார்.

“டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ஓகே தான் மிஸ்டர் பரிதி. பட், ஒரு சில சேஞ்சஸ் பண்ணணும். எஸ்.ஒ.பி புதுசா ரெடி பண்ணி அப்ளை பண்ணலாம். வீ வில் ட்ரை அவர் பெஸ்ட். பட் ஹண்ட்ரட் பெர்சன்ட் கேரண்டி தர முடியாது. பட் டில் நவ், எங்க சக்சஸ் ரேட் அதிகம்தான். நீங்க ஓகே சொன்னா, இந்த வீக்கே அப்ளை பண்ணிடலாம்!” என அவர் கூறவும்,

“உங்களோட சார்ஜ் எவ்ளோ சார்?” என யோசனையுடன் கேட்டான் இவன்.

“உங்க கேஸ் கொஞ்சம் க்ரிடிக்கல்தான். சோ, அப்ராக்சிமேட்லி டூ லாக் ஆகும்!” அந்த அலுவலர் கூறியதும் இவன் திகைத்துப் போனான்.

“ரெண்டு லட்சம் ஆகுமா சார்?” இவன் அதிர்ச்சியாய்க் கேட்க,

“ஆமா மிஸ்டர் பரிதி, அப்ளிகேஷன் பீஸே அரௌண்ட் ஃபிப்டி தௌசண்ட் வந்திடும். தென் மத்ததுக்கு எல்லாம் செலவு ஆகும்ல...”

“டூ லாக் வாங்குறீங்க. பட் விசா கண்டிப்பா அப்ரூவ் ஆகும்னு கேரண்டி இல்லை. அதெப்படி சார்?” இவன் எரிச்சலாய் கேட்டதும் அவர் மெலிதாய் சிரித்தார்.

“ப்ராசஸிங் மட்டும்தான் எங்க கைல. எம்பசி தான் ஃபைனல் டிசிஷன் எடுப்பாங்க. பட் வீ வில் டூ அவர் பெஸ்ட் அஸ் மச் அஸ் பாசிபிள் இளம்பரிதி...” மேலும் பத்து நிமிடங்கள் மூச்சுவிடாது பேசியே இவனை தலையாட்ட வைத்திருந்தார் அவர். பரிதிக்கும் வேறு வழியேதும் இல்லை. அதனால் ஒப்புக்கொண்டான்.

“ஒகே இளம்பரிதி, உங்க டாக்குமெண்ட்ஸ் எல்லாத்துலயும் ஒரு சாஃப்ட் காபி எனக்கு மெயில் பண்ணிடுங்க. அட்வான்ஸ் அமௌவுண்ட் பிஃப்டி தௌசண்ட் பே பண்ணிட்டிங்கன்னா, வீ வில் ஸ்டார்ட் தி ப்ராசஸ் இம்மிடீயட்லி” அவர் கூறவும் இரண்டு நாட்களில் பணம் செலுத்துவதாக கூறி வெளியே வந்தவன், மீண்டும் ஒரு தேநீரை பருகிக்கொண்டே இலக்கிலாமல் சாலையை வெறித்தான்.

உடனடியாக ஐம்பதாயிரத்திற்கு எங்கே செல்வது என மூளை என்னென்ன வழிகள் இருக்கிறதென ஆராய, குடித்த தேநீருக்கு பணம் கொடுக்கும்போது நீண்ட வலது கையிலிருந்த மோதிரம் அவனுக்கு அப்போதுதான் கண்ணிலும் கருத்திலும்பட்டது. அதை ஒரு விரலால் தடவியவன், தற்போதைய தீர்வாக, அதை அடகு வைக்கலாம் என்ற எண்ணத்துடன் அகன்றான்.

தொடரும்...
 
Well-known member
Messages
492
Reaction score
352
Points
63
Sundari amma isai ah marriage ku othuka vaika enna ma blackmail panraga .

Parithi ippo 2lakhs ku enna pannuvan apadiyae avan kuduthalum.sure ah visa varum nu sollamudiyaathu nu vera solluraga ah
 
Top