• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,291
Reaction score
3,813
Points
113
நேரம் – 17 💜

பொள்ளாச்சியிலிருக்கும் மதனகோபால சுவாமி கோவில் அன்றைக்கு அநேக மக்களை உள்ளடக்கியிருந்தது. அன்றைக்கு முகூர்த்த நாள் என்பதால் கோவிலே சலசலத்தது. ஆங்காங்கே புதுமண ஜோடிகள் திருமணத்திற்காக காத்திருக்க, ஒரு சிலர் மணம் முடித்த பூரிப்பில் தங்கள் துணையோடு கடவுளை தரிசித்துவிட்டு அகன்றனர்.

வெள்ளையும் அரக்கும் கலந்த பட்டுச்சேலை இசைவாணியைப் பாந்தமாகத் தழுவியிருந்தது. அவளது கோதுமை நிறக் கண்களும் ஒற்றைக் கல் மூக்குத்தியும் அவளுக்குத் தனி அழகை கொடுத்தன. இருபக்க தோளிலும் தொங்கிய மல்லிகை சரத்தை மருதாணியிட்ட வளைக்கரம் உயர்ந்து பின்னகர்த்தியது. மையிட்ட விழிகளால் உறவினர்ளை பார்வையால் அளந்தாள் இசைவாணி. இன்றைக்கு அவளுக்கும் பரிதிக்குமான ஒப்பந்த திருமணம் நடைபெறவிருந்தது.

அவளுக்கு அருகே பட்டு வேட்டிச் சட்டையில் கொஞ்சம் பக்குவப்பட்ட மனிதன் தோரணையிலிருந்த இளம்பரிதி பயபக்தியுடன் கடந்த ஐந்து நிமிடங்களாக முருகனையே விழியகலாது பார்த்திருந்தான். அவன் முகத்தில் சின்னதாய் ஒரு கலவரமும் பயமும் தோன்றியதை அவள் மட்டுமே கவனித்திருக்க கூடும்.

தொண்டையைச் செருமியவள், “பரிதி... இவ்வளோ பக்தியா என்ன வேண்டுற நீ?” என சின்ன குரலில் கேட்டாள்.

அவளைத் திரும்பி முறைத்தவன், “எல்லாம் உன்னாலதான் இசைவாணி. நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருந்தேன். சின்ன சின்ன தப்பு பண்ணி எங்கப்பாகிட்டே பெல்டடி, அம்மாகிட்டே திட்டுன்னு க்ரைம் ரேட் ரொம்ப மினிமம். பட் இப்போ இந்த மேரேஜை நினைச்சா அல்லுவிடுது. நீ சொல்லும்போது ஜாலியா இருந்துச்சு. ஆனால் ரியாலிட்டிக்கு என்னாகுமோன்னு பயமா இருக்கு!” என்றான் கலவரம் அப்பிய குரலில்.

அவனை சின்ன முறுவலுடன் பார்த்தவள், “ரொம்ப இமேஜின்‌ பண்ணாத. நீ இதெல்லாம் சைன் பண்ணுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். இப்போ பயந்து என்னாகப் போகுது. பார்த்துக்கலாம் விடு!” என்றாள் அவனுக்கு ஆதரவாக.

“ஹக்கும்... கடவுளே கேட்டுக்கோங்க, இவ பேசுறதை. நான் ரொம்ப நல்ல பையன், என்னைக் கெடுத்ததே இவதான். இந்த தப்புல சைன் பண்ணது மட்டும்தான் என் பங்கு. பாய்ண்ட் பாய்ண்டா எடுத்து ஏதேதோ சொல்லி என் மனசைக் கலைச்சதும் இந்தப் பொண்ணுதான். என்ன தண்டனைனாலும் இவளுக்கே கொடுத்துருங்க. என்னை பனிஷ் பண்ணிடாதீங்க. மீ பாவம், கண்டிப்பா டூ இயர்ஸ் கழிச்சு எனக்குப் பிடிச்ச பொண்ணோட வந்து உங்க சன்னிதானத்துலயே நிஜக் கல்யாணம் பண்ணி என் தப்பை சரி பண்ணிடுறேன்!” என அவன் முணுமுணுக்க, இசைவாணி முறுவலுடன் அவனைப் பார்த்தாள்.

“நீ சரியா காமெடி பீஸ் பரிதி. உன்னை என்னவோன்னு நினைச்சு வச்சிருந்தேன் நான்!” என உதட்டோரச் சிரிப்பை மென்றவள், “விடு... எல்லா பனிஷ்மெண்டையும் நானே வாங்கிக்கிறேன். அப்புறம் நீ ஆசைப்பட்ற மாதிரி பொண்ணைக் கண்டுபிடிச்சதும், நானே என் தலைமையில உனக்கு கல்யாணமும் பண்ணி வச்சிட்றேன். உன் வாழ்க்கையை கெடுத்த பாவம் எனக்கெதுக்குப்பா!” என்றாள் கேலியாக. அவன் அவளை முறைத்து வைத்தான். யாருக்கும் கேட்காத வண்ணம் மெல்லிய குரலில்தான் இருவரும் உரையாடினர்.

“யம்மா இசைவாணி... இனிமே வாழ்க்கை முழுசும் அவன் கூடத்தானே இருக்கப் போற? அப்புறம் என்ன கிசுகிசுன்னு பேச்சு வேண்டி கிடக்குன்னு நான் சொல்லலை... பக்கத்துல பேசிக்கிட்டாக!” என அற்புதா இவளின் தோளை இடித்தாள். வாணி அவளை மென்மையாய் முறைத்தாள்‌.

“ஏய் பரிதி... அதான் என் அத்தை மகளை உஷார் பண்ணிக் கல்யாணம் வரைக்கும் வந்துட்ட. கொஞ்ச நேரம் பொறுக்க முடியாதோ? அமைதியா நில்லேன் டா!” என அவனையும் கேலி செய்தாள்.

‘ஹக்கும்... நான் எங்க கரெக்ட் பண்ணேன். இவதான் ஏதேதோ சொல்லி என் மூளையை கரப்ட் பண்ணி மேரேஜ் வரைக்கும் கொண்டு வந்துட்டா. எந்தக் காலத்துலயும் என் அப்பாவுக்கு மட்டும் இது தெரிஞ்சுடவே கூடாது. என்னைக் கொன்னு போடக் கூடத் தயங்க மாட்டாரு அந்த மனுஷன்!’ என மனதிற்குள் புலம்பியவனுக்கு, இந்த திருமணம் நடக்க வேண்டும் என ஒரு வாரமாகத் தாயிடம் குட்டிக்கரணம் இட்டது நினைவு வந்தது.

சுந்தரி பேசிவிட்டு சென்ற பின்னே மார்த்தாண்டம் அவர்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். அவர்கள் சொல்வது அத்தனையும் உண்மை எனத் தெரிய வந்தது. எவ்வித பொய் புரட்டும் அற்று அவர்கள் உண்மையை உரைத்ததில் திருப்தி என்றாலும் கூட, மனிதருக்கு மனத்தில் நெருடல்தான். இவ்வளவு விரைவாக பரிதிக்குத் திருமணம் செய்ய வேண்டுமா என அவர் அந்த விஷயத்தை ஆறப்போட நினைக்க, மகன் விடவில்லை.

சிந்தாமணியிடம் தினமும் பேசி அவர் மூளையை சலவை செய்தான். தந்தையை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டுமென அவரைப் பாடாய்ப்படுத்தினான். அவரும் மகன் தொல்லை தாங்காமல் கணவரின் மனதை மெதுமெதுவாக மாற்ற முயன்றார். இடையே தன்‌ மனத் திருப்திக்காக‌ சுந்தரியிடம் கேட்டு இசை வாணியின் ஜாதகத்தை வாங்கிக்கொண்டு சென்று அவளுக்கும் பரிதிக்கும் பொருத்தம் பார்த்து வந்தார்.

“பொண்ணு ஜாதகம், ரொம்ப நல்ல ஜாதகம்மா. உங்க வீட்டுக்கு வரப் போற மகாலட்சுமி. உன் பையனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் நல்ல பொருத்தம் இருக்கு. ஆரம்பத்துல சண்டை சச்சரவு வரத்தான் செய்யும். பிரிஞ்சு போறளவுக்கு கூட போவாங்க. ஆனால் இந்தப் பொண்ணுதான் விடாம உன் பையனைப் பிடிச்சு வச்சுப்பா. ஒன்னுக்கு மூனா பேரப்புள்ளைங்க பொறக்கும்!” என்றவரிடம் பேரமே பேசாமல் இருநூறு ரூபாய் தாளைக் கொடுத்துவிட்டு வந்த சிந்தாமணியின் முகம் அன்றைக்கு விடிவிளக்கை விட அதிகமாய் பிரகாசித்தது.

அதற்குப் பின்னர் பெண்மணி தீவிரமாக களத்தில் இறங்கினார். சுந்தரியை அவ்வப்போது இவரே பார்த்துப் பேசி உறவை வளர்த்து நம்பிக்கை கொடுத்தார். இசைவாணியிடமும் பேசினார். அவள் அவரிடம் அன்பாக நடந்து கொண்டாள். பணக்கார வர்க்கத்தினர் எனினும் அவளது தன்மையான பேச்சில் பெண்மணி விழுந்தே போனார். அதனாலே கணவரை சம்மதிக்க வைக்கத் தன்னால் இயன்றவரை முயன்றார். ஆனாலும் மார்த்தாண்டம் முரண்டுப் பிடித்தார்.

“டேய் பரிதி... நீ ஒரு தடவை உங்கப்பாகிட்டே பேசு டா. நீ சொன்னா அவர் புரிஞ்சுப்பாரு!” என இவர் மகனை உந்த, அவன் தைரியத்தை திரட்டி தந்தையிடம் மனதில் உள்ளவற்றைக் கொட்டினான்.

“ப்பா... எனக்கு இசைவாணியை ரொம்ப பிடிச்சிருக்குப்பா. எப்படியும் ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணப் போறேன் தானே? அதை இப்பவே பண்ணா என்ன தப்புப்பா?”

“ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்லை. எங்க அவளைத் தனியா விட்டுட்டுப் போய்டுவாங்களோன்னு பயப்படுறாங்க. அவங்க சூழ்நிலைல இருந்து யோசிங்கப்பா. உங்களுக்கு உடம்பு சரியில்லன்னதும் நாங்க எல்லாரும் துணைக்கு நின்னோம். ஆனால் அவளுக்குன்னு யாருமே இல்லப்பா. இப்போ நீங்க வேணாம்னு தட்டிவிட்டுட்டா எனக்காக அவ வெயிட் பண்ற நிலைமைல இல்ல. அவ அம்மாவுக்காகப் பார்க்கணும். இசைவாணியை மிஸ் பண்ணிட்டா காலம் முழுக்க எனக்கு அது வலிப்பா.”

“கடனைப் பத்தி யோசிக்குறீங்கன்னா, என்னை நம்புங்க. ரெண்டு வருஷத்துல எல்லாக் கடனையும் அடைச்சு வீட்டை மீட்டுடுவேன். அப்படியும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலைன்னா உங்க இஷ்டப்படி செய்ங்க. ஆனால் ப்யூச்சர்ல என் கல்யாணம் பத்தி எப்பவும் பேசாதீங்க. இசைவாணி இல்லாத வாழ்க்கைல யாருக்கும் அவ்வளோ சீக்கிரம் என்னால இடம் கொடுக்க முடியாதுப்பா. முடிவு உங்க கைல!” என்றவனின் குரல் வேதனையை சுமந்து வந்தது.

தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டுதான் அத்தனையும் பேசினான். மார்த்தாண்டத்திற்கு மனம் சுருக்கென்றுவிட்டது. அவன் கூறுவது போல அவர் திருமணம் வேண்டாமென தட்டிவிட்டு மகன் கடைசிவரை தனியாய் நின்றுவிடுவானோ என யோசித்தார்.

பரிதி இதற்கு முன்னே இது போல வெகுதீவிரமாக எதிலும் முனைப்புக் கட்டியதில்லை. பொறியியல் படிப்பு வேண்டுமென கடைசியாய் அவரிடம் சண்டையிட்டு, பின் அவன் மதிப்பெண்ணுக்குரிய படிப்பையே தேர்ந்தெடுத்தான்.

உண்மையில் மார்த்தாண்டத்திற்கு அவன் ஆசைப்பட்ட படிப்பில் சேர்த்துவிட வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் அப்போதைய அவனது மதிப்பெண்ணும், இவருடைய நிதிநிலைமையும் எல்லாவற்றையும் குலைத்துப் போட்டிருந்தது. என்னதான் அவனைத் திட்டிக் கண்டித்து வளர்த்தாலும், மூத்த மகன் என அவன் மீது அவருக்குத் தனிப்பாசம் உண்டு. என்ன பரிதிதான் அவரின் கண்டிப்பில் முறுக்கிக்கொண்டு சுற்றுவான். இப்போது மகனுக்கு ஆதரவாக அவர் யோசிக்க, சிந்தாமணி சரியாய் அந்நேரம் கணவரிடம் பேசியே அவரைக் கரைத்தார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல மார்த்தாண்டம் மனமிறங்கிவிட்டார்.

எப்படியும் பரிதிதானே கடனை திருப்பி செலுத்தப் போகிறான். திருமணம் முடிந்து செலுத்தினால் என்ன தவறு என அவர் சிந்தனை சென்றது. அவர் பார்த்த வரையில் இசைவாணி பொறுப்பு மிகுந்த பெண்ணாகவே தெரிந்தாள். எனவே மனத்தைப் போட்டு மேலும் குழப்பாமல், சரியென்றுவிட்டார்.

தந்தையிடம் பேசி சென்ற பரிதிக்கு இசைவாணி அழைத்துவிட்டாள். “என்ன, நான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே பேசிட்டீயா பரிதி? சொதப்பலை தானே?” எனக் கேட்டாள் அவள்.

“ஏய் இசைவாணி... நீ சொல்லிக் கொடுத்ததோட, மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு பேசிட்டேன். எங்கப்பாவுக்கு ஒரே ஷாக், நான் சீரியஸா பேசுனதைப் பார்த்து. இருந்தாலும் அவர் மனசுல என்ன நினைக்கிறார்னு தெரியலை!” என்றான் இறங்கிய குரலில்.

“நீ டையலாக்ஸை ஒப்பிக்காம எமோஷனலோட பேசிருந்தாலே, அங்கிள் ப்ளாட் ஆகிடுவாரு. ஏதோ சொல்ற, நான் நம்புறேன்!” என அவள் நம்பாமல் கூற, இவனுக்கு மூக்கு வேர்த்தது.

“இசைவாணி... என் ஸ்கூல்ல எல்லாம் நான் நிறைய நாடகத்துல கலந்துட்டு ப்ரைஸ் வாங்கி இருக்கேன். இன்பேஃக்ட் சின்ன வயசுல எனக்கு ஆக்டராகணும்னு ஆசை. நான் வேற அழகா இருக்கேன்னு பசங்க எல்லாரும் சொல்லுவானுங்க. ஆனால் அமையலை, சோ கிடைச்சதைப் படிச்சுட்டு கடமைக்கு ஒரு வேலைக்குப் போறேன்!” என அவன் சலிக்க,

“ச்சு... உன் சோக கதையைக் கேட்க எனக்கு நேரமில்ல மேன். ப்ராஜெக்ட் டெட் லைன் நெருங்கிடுச்சு. மேரேஜூக்கு முன்னாடி நான் முடிச்சுக் கொடுக்கணும். எல்லா கதையும் கல்யாணத்துக்குப் பின்னாடி சொல்லு. அப்போ கேட்குறேன்!” என அவள் அழைப்பைத் துண்டிக்க,

“பெரிய கலெக்டர் வேலை பார்க்குறா. ரொம்பத்தான்!” என இவன் முணுமுணுத்தான். அன்றைக்கு அலுவலகம் முடிந்தும் கூட இவன் வீட்டிற்கு செல்லாமல் நகரையே வட்டமடித்துக் கொண்டிருக்க, சிந்தாமணி மகனுக்கு அழைத்துவிட்டார்.

“எட்டு மணியாச்சு. இன்னும் எங்கடா சுத்தீட்டு இருக்க. வீட்டுக்கு வர வேணாமா? கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா. நாளைப் பின்ன கல்யாணமானப் பின்னாடியும் இப்படித்தான் பண்ணுவீயா?” எனப் பொரிந்தார் அவர்.

“ஆமா... ஆமா நீயும் உன் புருஷனும் புள்ளை ஆசைப்பட்டுட்டான்னு விழுந்தடிச்சுட்டுப் போய் பொண்ணு வீட்ல பேசிட்டீங்க. தொண்டைத் தண்ணி வத்த எவ்வளோ மனசுக் கஷ்டத்தோட அப்பாகிட்டே பேசுனேன். ஆனாலும் அவர் மனசு இறங்கலை பாரேன். உன் புருஷனுக்கு கல்நெஞ்சுமா!” என்றான் ஆதங்கமாய். காலையிலிருந்து யாருமே அவனுக்கு அழைக்கவில்லை. அதிலே மார்த்தாண்டத்தின் முடிவு இதுவாகத்தான் இருக்க கூடுமென அவனொரு முன்முடிவை எடுத்து, வீட்டிற்கு வரப் பிடிக்காமல் ஊர் சுற்றினான்.

“வாய்! வாய்... நேர்ல இருந்தா ஒன்னு போட்டிருப்பேன் டா. அதென்ன என் புருஷன் புருஷன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்ற? அவரு உங்கப்பாடா. அதை முதல்ல ஞாபகத்துல வச்சுட்டுப் பேசு!” என்றவர், “அந்த மனுஷரைப் போய் கல்நெஞ்சுன்னு சொல்றீயே, காலைல நீ பேசிட்டுப் போனதுல யோசிச்சுட்டே கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டாரு. உங்களுக்காக உழைக்கிற மனுஷன் டா. கொஞ்சம் கண்டிப்பா இருந்தாலும், உங்க விருப்பத்துக்கு மாறா ஏதாவது செஞ்சிருக்காரா?” என சூடாய் கேட்டார்.

அவர் மூச்சுப் பிடித்துப் பேசிய அனைத்தையும் கிடப்பிலிட்டவன், “ம்மா... நிஜமாவா சொல்ற. அவர் ஓகே சொல்லிட்டாரா? இதை ஏன்மா இவ்ளோ லேட்டா சொல்ற?” என ஆரப்பரித்தான் மகன்.

“ஹம்ம்...நீ வந்ததும் நேர்ல சொல்லி உன் சந்தோஷத்தை நேர்ல பார்க்க ஆசைப்பட்டாரு டா என் புருஷன்!” என்றவர் கடைசி வார்த்தையில் அழுத்தம் கொடுத்து மகனைக் குத்திப் பேசினார்.

சில நொடிகள் உதட்டைக் கடித்தவன், “சாரிம்மா...” என்றான் சின்ன குரலில்.

“யாருக்கு டா வேணும் உன் சாரி. ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேரு!” என்ற கட்டளையோடு அவர் அழைப்பைத் துண்டிக்க, இவனிடம் ஓர் ஆசுவாசப் பெருமூச்சு எழுந்தடங்கியது. உடனே இசைவாணிக்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்துவிட்டான்.

முடிவெடுத்தப் பிறகு தயங்க வேண்டாமென மார்த்தாண்டம், சிந்தாமணி மறுநாளே சுந்தரியை நேரில் பார்த்து தங்களது விருப்பத்தைப் பகிர, அந்த வாரத்திலே ஒரு நல்ல நாளில் இரண்டு குடும்பத்தாரும் நெருங்கிய சுற்றத்தோடு எளிமையாய் நிச்சயத்தை முடித்தனர்.

ஏற்கனவே வீட்டின் பேரில் கடனிருப்பதால், ஆடம்பரமான திருமணத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என மார்த்தாண்டம் அழுத்தமாக கூறிவிட, அதில் சுந்தரிக்கு மனத்தாங்கல் அதிகம். ஆனால் இசைவாணி உடனே சரியென்றுவிட்டாள். இரண்டு வருடத்தில் முறித்துக்கொள்ளப் போகும் உறவிற்கு ஏன் இத்தனை ஆடம்பரம் செய்ய வேண்டுமென அவளுக்கே தோன்றிற்று. அதனாலே தாயை சமாதானம் செய்தாள். அற்புதாவிற்கு விஷயம் அப்போதுதான் பகிரப்பட்டது. உடனே சரவணனோடு இங்கே வந்துவிட்டாள்.

எப்படி பிடித்தது? ஏன் பிடித்தது? யார் காதலை முதலில் பகிர்ந்தது? என வாணியைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துவிட்டாள். இசைவாணியும் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என கற்பனையாக ஒரு கதையைப் புனைந்து மறக்காது அதைப் பரிதியிடமும் பகிர்ந்தாள்.

இந்த திருமண விஷயத்தில் பரிதி வீட்டினரின் சம்மதத்திற்காக என்ன செய்யலாம் என அவனும் இசைவாணியும் தினமும் அலைபேசியில் உரையாடியதில் அவர்களுக்கிடையே நட்பென்ற இழை வளர்ந்து செழித்திருந்தது.
அற்புதா பரிதியையும் விடவில்லை. அவனையும் போட்டுப்படுத்தி எடுத்தப் பின்பே விட்டாள்.

பரிதிக்கும் இசைவாணிக்கும் இடையேயான இரண்டு வருட வயது வேறுபாடு அவளுக்குப் பெரிதாய் தெரியவில்லை. சம்பந்தபட்ட இருவருமே அதைப் பற்றிக் கண்டுகொள்ளாத போது இவள் எதையும் பேசி பிரச்சனையாவதை விரும்பாமல், அமைதியாய் அத்தை மகளின் திருமணத்தை ரசித்தாள். தன் நண்பனே இசைவாணிக்கு கணவனாக வருவதில் அவளுக்கும் மிகுந்த விருப்பமே.

“அன்னைக்கு உண்மையிலயே நீ நல்லவன் மாதிரி அத்தை ஹாஸ்பிடல்ல சேர்க்க ஹெல்ப் பண்ணப்போ, உன்னை ரொம்ப நல்லவன்னு நம்பி ஏமாந்துட்டேன் டா. அவளைப் பார்க்கும்போது முறைச்சுட்டே சுத்தீட்டு, கடைசியா அவளுக்கே ரூட் விட்டுருக்க நீ. ஹம்ம்... எனக்கே தெரியாம அணில் மாதிரி உங்க காதலுக்கு பாலம் அமைச்சுக் கொடுத்திருக்கேன் நான்!” என எப்போது அவனைக் காண நேர்ந்தாலும் ஏதோ ஒன்றை சொல்லி வம்பிழுத்தாள்.

மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று சென்னை சென்ற கமலா, அவள் குணமாகி வீட்டிற்கு வரவும் பொள்ளாச்சிக்குத் திரும்பியிருந்தார். இடைப்பட்ட நாட்களில் வாணியின் திருமணம் நின்றது அவருக்குத் தெரியும் என்றாலும், பரிதி திடீர் மாப்பிள்ளையானதில் அவருக்கு அதிர்ச்சி.

“ஏன் வாணிம்மா... வெண்டைக்காயை உடைக்க கூடாதுன்னு மூஞ்சியைத் தூக்குன பையனத்தான் சொல்றீயா?” என மீண்டுமொரு தன் சந்தேகம் தீரக் கேட்டார் பெண்மணி.

“ஆமா கமலாம்மா. பரிதியைத்தான் சொல்றேன்‌. ஏன் அவனை உங்களுக்குப் பிடிக்கலையா என்ன?” என சிரிப்புடன் கேட்டாள்.

“உண்மையை சொன்னா எனக்கு அந்தப் பயலை பிடிக்கலை வாணிம்மா. எப்போ பார்த்தாலும் குட்டி குட்டியா டவுசர் போட்டுட்டு கடைல உக்கார்ந்திருக்கது. ஏன் முழு கால் டவுசர் வாங்கிப் போடக் கூட காசில்லயா அவன்கிட்டே. வயசு பிள்ளைக கடைக்கு வரப் போக இருக்கும்னு ஒரு கூச்சம் வேணாமா?” என அவர் முகத்தைக் கோண, அவள் பொங்கிச் சிரித்தாள்.

இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரி, “ஏன் கமலா... அவர் ஷார்ட்ஸ் தானே போட்டிருந்தாரு. என்னமோ கோமணத்தோட நின்ன மாதிரி பேசுற நீ? அவர் நம்ப வீட்டு மருமகன்!” என பரிதிக்காக வாதட, அவர் கூறிய உவமையில் இசைவாணியின் சிரிப்பு சப்தம் வீட்டை நிறைத்தது. பரிதி மட்டும் தன் தாயின் பேச்சைக் கேட்டிருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பான் என நினைத்து நினைத்து பொங்கி சிரித்தாள். அவளைத்தான் மற்ற இரு பெண்களும் ஆதுரமாகப் பார்த்தனர். எப்போதுமே அவள் இதே போல மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என மனதார நினைத்தனர்.

சுந்தரியின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அடுத்த இரண்டு வாரங்களிலே திருமணம் முடிவானது. என்னதான் ஒப்பந்த திருமணம் என்றாலும் சுந்தரிக்கு எவ்வித சந்தேகமும் வரக்கூடாது என்பதால் இசைவாணி முயன்று தன்னை உற்சாகமாகக் காட்டிக் கொண்டாள். திருமணச் சேலை எடுக்கும்போது இரண்டு சேலைகள் கூடுதலாக எடுத்தாள். பழைய நகை ஒரு சிலவற்றை போட்டுவிட்டு தனக்குப் பிடித்த வகையில் புதிதாய் எடுத்தாள். அவளது சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பார்த்த காமராஜிற்கும் அம்சவல்லிக்கும் அதிருப்தி கரைந்து போயிருந்தது. அவள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதுமென தங்கள் மனத்தை மாற்றிக் கொண்டனர்.

இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையிலிருக்க, திருமண நாள் விடிந்திருந்தது. இரண்டு பக்க உறவினர்களோடு இரண்டு வீட்டின் குடும்பதாட்களும் பரபரப்பாய் கோவிலில் வலம் வர,‌ மணமக்களோடு அற்புதாவும், சரவணனும் தனித்து நின்றிருந்தனர்.

“ஆமா... சரோ ஏன் ரொம்ப ஆக்ட் பண்றான். அவனைப் பார்த்தா எனக்கே நடிப்பு மாதிரி தெரியல டீ!” இசைவாணி அற்புதாவின் காதில் முணுமுணுக்க, அது பரிதிக்கும் கேட்டது. அவனும் சரவணனைத்தான் பார்த்தான். அவன் முகத்தில் ஏன் இவ்வளவு சோகமென்ற கேள்வி இவனுக்கு எழுந்தது.

“அவன் ஆஸ்கார் வாங்குறதுக்கு ட்ரை பண்றானா இருக்கும். நாய் எந்த பக்கத்துல இருந்து ஃபோனை பிடிச்சு ரீல்ஸ் எடுக்குதோ. நம்பளை வேற ஃபோகஸ் பண்ணுவான்!” எனத் தம்பியை முறைத்தாள் அவள்.
அவர்கள் பேச்சு பரிதிக்குப் புரியவில்லை.

“வாணி... அவன் ஏன் சோகமா இருக்கான். வந்ததுல இருந்து நான் பார்த்திட்டிருக்கேன்!” என அவள் தோளை சுரண்டினான் இவன்.

“அவனையே கேட்டுத் தெரிச்சுக்கோ பரிதி. என்னைவிட நல்லா கதை சொல்லுவான் அவன்!” இவள் கேலியாக கூற, பரிதி அவனை அழைத்து விசாரித்தான்.

“ப்ம்ச்... எனக்கு இருக்கது ஒரே ஒரு அத்தைப் பொண்ணு‌. அவளையும் நீங்க உஷார் பண்ணிட்டீங்க. இப்போ நான் யாரை சைட் அடிப்பேன்? யாரை வம்பிழுப்பேன். யாருக்கு வாழ்க்கைத் தரேன்னு கதை விடுவேன்!” என இல்லாத போலிக் கண்ணீரைத் துடைத்தான் சரவணன்.

“டோன்ட் வொர்ரீ, இரண்டு வருஷம் கழிச்சு நீங்க இதெல்லாம் கண்டினியூ பண்ணலாம் ப்ரோ!” ஒரு வேகத்தில் பரதி உளறிவிட, அவன் வயிற்றிலே முட்டியை வைத்துக் குத்திய இசைவாணி தீயாய் முறைத்தாள்.

“அதென்ன ப்ரோ ரெண்டு வருஷ கணக்கு?” இவன் கேட்க, பரிதி விழித்தான்.

“ஆங்... புள்ளைக்குட்டி பெத்துட்டா இவனுக்கு நான் சலிச்சுப் போய்டுவேனாம். சூசகமா அதைத்தான் சொல்றான் பரிதி!” என்றவள் பல்லைக் கடிக்க, அவன் இவளை அசடு வழியப் பார்த்தான்.

“முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. அற்புதா, வாணியையும் மாப்பிள்ளையும் கூட்டிட்டு வா!” என அம்சவல்லி கூறியதும், மணமக்கள் இருவரும் சன்னதியின் முகப்பறைக்குச் சென்றனர். ஐயர் மந்திரங்களை ஓத, பெண் வீட்டார் ஒருபுறமும் மாப்பிள்ளை வீட்டார் மறுபுறமும் நின்றிருந்தனர்.

“அண்ணி...” என வாணியின் தோளைச் சுரண்டிய கீர்த்தனா, “நீங்க என்னைவிட ஹைட்டா இருக்கீங்களே. எப்படி நான் நாத்தனார் முடிச்சைப் போடுவேன். அண்ணன் ரெண்டு முடிச்சைப் போட்டதும் நீங்க கொஞ்சம் குனியுறீங்களா?” எனக் கிசுகிசுப்பாக கேட்டாள். அதில் பெரியவளுக்கு முறுவல் பிறக்க, மெலிதாய் இதழ் பிரித்து புன்னகைத்தாள். பரிதி அவளையும் தங்கையையும் பார்த்தான். வாணி இவன் தோள் அளவிற்கிருக்க, கீர்த்தனா அவளை விட குட்டையாகத் தெரிந்தாள்.

‘இவளாம் ஹைட்டுன்னா அப்போ என்னை என்ன சொல்றது?’ என அவன் எண்ணிக் கொண்டான்.

அம்சவல்லியின் வழிகாட்டுதலின்படி இசைவாணி இரண்டு கையையும் முன்வைத்து குவிக்க, மந்திரங்களைக் கூறிய ஐயர் பரிதியிடம் மாங்கல்யத்தைக் கொடுத்தார். அதை வாங்கும்போதே அவன் கைகள் நடுங்கின.

“சாமியைக் கும்பிட்டுட்டுப் பொண்ணுக் கழுத்துல தாலி கட்டுப்பா!” என அவர் கூற, இவன் மீண்டுமொரு மனதில் கடவுளிடம் முறையிட்டான்.

‘முருகா... எல்லாத்துக்கும் இந்த சதிகாரிதான் காரணம். என்னை எதுவும் செஞ்சுடாதப்பா. அவளை வேணா வச்சு செஞ்சுக்கோ!’ என வேண்டியவன், வாணியை நோக்கித் தாலியை உயர்த்தினான். அவன் கைகளின் நடுக்கம் வெளிப்படையாகத் தெரிய, அவள் மானசீகமாக தலையிலடித்தாள்.

“ப்ரோ, இப்பவே நடுங்குனா எப்படி? இனிமேதான் மெயின் பிக்சரே! ஹம்ம்... கட்டுங்க!” சரவணன் இவனை உந்த, பெருமூச்சுவிட்டவன் கைகளை மூடித் திறந்து நடுக்கத்தை விரட்டிபயடியே, அவள் கழுத்தில் இரண்டு முடிச்சுகளை இட, கீர்த்தனா மூன்றாவது முடிச்சிட்டு கடவுள் சாட்சியாக இசைவாணியைத் தங்கள் வீட்டின் மூத்த மருமகளாக வரவேற்றாள்.

அவ்வளவு நேரமில்லாமல் அவன் தாலிக் கட்டும்போது வாணி பார்வை அனிச்சையாக சுந்தரியைத் தொட, அவர் பூரித்துப் போய் அட்சதை தூவினார். சட்டென குற்றவுணர்வு கழுத்தை நெரித்ததை போல இவள் மனம் கனத்தது. ஆனால் முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை.

அவள் நிமிரவும், அந்தப் பூனைக் கண்களில் பரிதியின் பார்வை கலந்தது. இருவரிடமும் கலக்கமும் பயமும் சரிவிகிதமிருந்தாலும், சின்ன கண் சிமிட்டலால் தங்கள் இணையை சமாதானம் செய்தனர். பரிதி அவளின் கோதுமை நிற விழிகளிலால் ஈர்க்கப்பட்டு புதைந்த பார்வையை, வெகுசிரமப்பட்டு வெளியே இழுத்தான். அடுத்தடுத்த சடங்குகள் நடைபெற, பெற்றவர்கள் காலில் விழுந்து வணங்கினர். அடுத்த காமராஜ் தம்பதியிடம் ஆசிர்வாதம் பெற்றவர்கள் , கமலா மறுத்தும் அவர் காலிலும் விழுந்து எழுந்தார்கள்.

அப்படியே மணமக்கள் அருகேயுள்ள மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உறவினர்கள் குழுமியிருக்க, ஒவ்வொருவராய் வாழ்த்தி விடைபெற, அனைவரிடமும் இன்முகத்தோடு பேசினர் தம்பதியர்.

பிரவீன் கூட்டத்தோடு வந்தவன் வாணியை முறைத்துவிட்டு, பரிதியிடம் வாழ்த்துச் சொல்லி அகன்றான். அவன் செய்கையில் வாணி புன்னகைத்தாள்.
அப்படியே மணமக்கள் மதிய உணவு உண்டு வர, தாமதமாய்
வந்தவர்கள் வாழ்த்தி முடித்தனர். முன்மாலை பொழுதை தொட்டதும், இருவீட்டாட்களும் மாப்பிள்ளை வீட்டை நோக்கிப் பயணமாகினர்.

தொடரும்...




 
Well-known member
Messages
507
Reaction score
366
Points
63
Parithi unga amma ne vitta kadhai ah vida andha josiyar sonnaru paru moonu per pillai nu athuku than da ok sonnaga ah aana kadaisi varaikum lord murugan kita punishment ah vani ku kuduka nu sonna parthiya appo ne unmai ah vae chinna pillai mathiri than da theriyura ah ithu na la unga appa unnaku kalyanam panna avolo yosicharu pola
 
Top