• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,259
Reaction score
3,690
Points
113
எண்ணம் – 6

“ஆ...” எனப் பல்லைக் கடித்த மலர்விழிக்குக் கண்கள் கலங்கிவிட்டன. வலது கையைத் தூக்கிப் பார்க்க, புசுபுசுவென வீங்கத் துவங்கியது. மற்றக் கரத்தால் அந்தக் கையைப் பிடித்து அழுத்த, அவளது கத்தலில்தான், தான் செய்த செயல் புரிய மனைவி அருகில் விரைந்திருந்தான் தனஞ்செயன்.

“ஐயோ! விழி... சாரி. சாரி டி...” என்றவன் பதட்டத்துடன் அவளது கரத்தைத் தொட வர, வெடுக்கென அவனிடமிருந்து கையை உருவிவிட்டாள். வலி உயிர் போனது. கை புஸ்ஸென நன்கு வீங்கிப் போக, அழக்கூடாது என அழுத்தமாய் அமர்ந்திருந்தாள் மலர்விழி.

அவளது வீங்கியக் கையைப் பார்த்து தனஞ்செயன் துடித்துப் போனான். “ஓ காட்! சாரி விழி. சாரி!” என்றவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது.

“வா விழி, ஹாஸ்பிடல் போகலாம். வா..‌.” என அவள் தோளைப் பிடித்தான்.

“கையை எடுங்க...” எனப் பல்லைக் கடித்தபடி வலியைப் பொறுத்தவளைப் பார்த்து கலங்கிப் போனது தனாவின் உள்ளம்.

“சொன்ன பேச்சை கேட்கவே மாட்டீயா டி? என்னைக் கோபப்படுத்துறதே உன் வேலையா?” என தனா பொரிய, அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒற்றைக் கையை சுவற்றில் வைத்து எழுந்து நின்றாள். அழக்கூடாது... இவன் முன்னே அழக்கூடாது என திடமாய் நின்றவளுக்குக் கையே உடைந்துவிடும் போல வலி.

அவளது முகத்தை வைத்து அகத்தைக் கணித்தவன், “விழி, இப்போ என் கூட ஹாஸ்பிடல் வரலை. நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் டி...” என்றவனுக்குப் பொறுமை பறந்திருந்தது.

அவளது அடிபடாத கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே சென்றான். “டேய்! அவளை ஏன் டா இப்படி இழுத்துட்டு போற?” லீலா பதறினார்.

“அம்மா, வந்து சொல்றேன். ஹாஸ்பிடல் போய்ட்டு வரோம்...” என்றவன், மகிழுந்து சாவியை எடுத்துக்கொண்டு தரதரவென அவளை இழுத்துப் போய் வண்டியில் ஏற்றினான். தன் மீதே அத்தனை கோபம் வந்தது. அதையெல்லாம் மகிழுந்தில் காட்டிட, அது வேகமாய் பறந்தது. விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்துவிட்டாள் மலர்விழி. அவளையும் மீறி விழியோரம் நீர் கசிய, அதைப் பார்த்தவனுக்கு மனம் முழுவதும் வலித்தது. எப்படி இப்படி ஒரு பெண்ணைத் தள்ளிவிடும் அளவிற்கு எனக்கு கோபம் வந்தது எனத் தன்னை நினைத்தே அருவருத்துப் போனான். தன்னுடைய குணம் இந்தப் பெண்ணிடம் முற்றிலும் மாறிவிடுவதை அவனால் உணர முடிந்தது.

சிறிது நிமிடத்திலே மருத்துவமனை வந்துவிட்டது. இருவரும் இறங்கி உள்ளே செல்ல, “டூ மினிட்ஸ வெயிட் பண்ணுங்க சார்.‌ உள்ளே ஒரு பேஷண்ட் இருக்காங்க!” செவிலியர் கூற, “சிஸ்டர், கொஞ்சம் அர்ஜெண்ட்...” பதட்டத்துடன் கூறினான் தனஞ்செயன்.

மலர்விழி எதுவும் பேசாது இருக்கையில் அமர்ந்துவிட்டாள். கை இப்போது விண்விண் என வலித்தது.

“உள்ளே போங்க சார்...” என செவிலியர் கூறியதும், இருவரும் உள்ளே நுழைந்தனர்.

மலரை பரிசோதித்த மருத்துவர், “எப்படி இப்படி வீங்குச்சு கை?” என வினவினார்.

தனஞ்செயன் பதில் கூறும் முன், “கீழே விழுந்ததுல டேபிள் இடிச்சுடுச்சு டாக்டர்...” எனப் பதில் அளித்தாள் மலர்விழி.

“சரி, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துடலாம். அப்போதான் தெரியும்...” என்று மருத்துவர் அவர்களை ஊடுகதிர் பகுதிக்கு அனுப்பிவிட, சிறிது நேரத்தில் அதன் முடிவுகள் வந்துவிட்டன. மீண்டும் மருத்துவரை இருவரும் சந்திக்கச் சென்றனர். தனஞ்செயன் தான் முள்ளில் மேல் நிற்பதைப் போல அமர்ந்திருந்தான். மலர்விழியின் கைக்குப் பெரிதாய் எதுவும் அடிபட்டுவிட்டதோ என மனம் பரிதவித்துப் போனது.

“பிராக்சர் எதுவும் இல்லை. சோ நோ ப்ராப்ளம், கைக்கு ஆயின்மெண்ட் அண்ட் வலிக்கு டேப்லெட் தரேன். சரியாகிடும்...” என்று மருத்துவர் கூற, அப்போதுதான் அவனுக்கு நிம்மதி வந்தது.

“கையை இன்னும் ரெண்டு நாளுக்கு அசைக்கவே கூடாது!” என மருத்துவர் வலியுறுத்திதான் அனுப்பி வைத்தார். ஊசி போட்டதில் இப்போது வலி நன்றாய் குறைந்திருக்க, மலர்விழி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள். வலது கை இடது கையைத் தாங்கி இருந்தது. மனம் முழுவதும் வலியும் வேதனையும் தான். இதில் கைவலி வேறு சேர்ந்து அவளைப்படுத்திவிட்டது.

வாகனத்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்ற தனா, ஆள் அரவம் இல்லாத இடத்தில் நிறுத்தினான். அதை உணர்ந்தும் விழிகளைத் திறக்காது அமர்ந்திருந்தாள் மலர். அவளது கைகளைப் பார்த்த தனஞ்செயனை குற்ற உணர்வு கொன்று தின்றது.

“விழி? ஏன் டி?” என்றவனுக்கு வார்த்தையே வரவில்லை. குரல் கரகரத்துப் போயிருந்தது. விழிகள் கூட லேசாய் கலங்கித்தான் போயின. தான் நிதானமிழந்த ஒரு நொடி இவளை இந்த அளவிற்கு காயப்படுத்திவிட்டதே என குற்ற குறுகுறுப்பு அவனை மொத்தமாய் அரித்தது.

“சாரி விழி, ஏன் டி என்னை கோபப்படுத்துற மாதிரி பேசுற. என்னால உன்கிட்ட கோபத்தைக் கன்ட்ரோல் பண்ண முடியலை விழி. உன்கிட்ட நான் நானா இருக்க முடியலை. இது நான் இல்லை டி. என்னோட மொத்த குணமும் உன்கிட்ட டோட்டலா சேஞ்ச் ஆகுது. என்ன பண்ணன்னு சத்தியமா தெரியலை விழி...” என்றான். என்ன சொல்வது மன்னிப்பு கேட்டால் இல்லையென்றாகிவிடுமா என்ன? தன் மனசாட்சியே அவனை கேள்வி கேட்டது. அவனுடைய இத்தனைப் பேச்சுக்கும் மலர்விழி அசையவே இல்லை. விழிகளை திறக்காது அப்படியே அமர்ந்திருந்தாள். ஆனால், அருகிலிருந்தவனின் வார்த்தைகள் அவளது இதயத்தையும் வதைத்தது. அவனது குரலிலிருந்த வேதனை இவளது மனதை கூறு போட்டது.

“விழி, என் முகத்தைப் பாரேன்...” என தனா அவளது முகத்தைத் தன்னை நோக்கித் திருப்ப, விழிகளைத் திறந்து அவனை உறுத்து விழித்தவளிடம் உணர்ச்சியற்ற பாவனை. அதில் மேலும் நொந்தவன், “சாரி சொன்னா, உன்னோட பெய்ன் போகுமான்னு தெரியலை. பட், சாரி. தௌசண்ட் டைம்ஸ் சாரி...” என்றான்.

“நீங்க ஏன் சாரி கேட்கணும்.
உங்க மேல என்ன தப்பு. நான் தான் உங்களை கோபப்படுத்துற மாதிரி பேசுனேன். தப்பெல்லாம் என் மேல தானே?” எந்தவித உணர்வின்றி பேசியவளிடம் கூற சத்தியமாய் அவனிடம் பதிலில்லை. எது பேசினாலும் அது தவறாகிவிடுகிறதே என ஆற்றாமை தனஞ்செயனுக்கு வந்தமர்ந்து கொண்டது. முற்றிலும் அந்நிய பாவனை குரலில். எட்டி நிறுத்துகிறாள் எனப் புரிந்து மனம் வலித்தது.

“ப்ம்ச்... விழி...” என்றவன் திசை மாற்றியில் கையைக் குத்தினான். யார் மீதும் காண்பிக்க முடியாத கோபம் அது.

“என் மேலதான் தப்பு...” என்றவளை நிமிர்ந்து பார்த்தான் தனஞ்செயன்.

“உங்களோட அந்தஸ்து, வசதி எல்லாம் தெரிஞ்சும் என் அம்மா, அப்பா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சது எங்கத் தப்பு தானே? இப்போ குத்துது குடையுதுன்னு சொல்றோம் இல்லை. நீங்க உங்களோட வசதிக்கு ஏத்த மாதிரி நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணி இருந்தா, ரெண்டு பேரோட நிம்மதியாவது மிஞ்சியிருக்கும்...” தொண்டை அடைக்க கூறியவள், பொங்கி வந்த கேவலை அடக்கினாள். இருந்தும் விழிகள் முழுவதும் நனைந்து போயின. சொல்ல முடியாத வலி இதயம் முழுதும். இந்த நொடி வரக்கூடாது என்று தானே அத்தனை தூரம் தன்னை, தன் மனதை அவனிடமிருந்து அந்நியப்படுத்தி இருந்தாள். இருந்தும் சூழ்நிலை அவளைக் கைதியாக்கியிருந்தது.
அவளைத்தான் பார்த்திருந்தான் தனஞ்செயன் . அவள் குரலின் வேதனை இவனை ஏதோ செய்து தொலைத்தது. அவளை எப்படியாவது சமாதானம் செய்துவிடு என உள் மனதின் உந்துதல்.

“ப்ம்ச்... லூசாடி நீ? பணம், அந்தஸ்து, ஸ்டேடட்ஸ்னு பேசிட்டு இருக்க? ரெண்டு பேர் வாழ்றதுக்கு மனசு ஒத்துப்போனா போதும்!” என்றவனை கேலியாய்ப் பார்த்தாள்.

“மனசு ஒத்துப் போகணுமா?” என்று கூறியவளின் இதழ்களில் விரக்தியானப் புன்னகை அமர்ந்தது.

“உங்களுக்குப் புரியாது, இப்போன்னு இல்லை, எப்பவுமே புரியாது!” என்றவள் பொங்கும் கண்ணீரை அவனுக்குக் காட்டாது மறுபுறம் திரும்பி மறைத்துவிட்டாள்.

தனஞ்செயன் அவளது சோர்ந்திருந்த முகத்தையும் கண்ணீர் வழியும் விழிகளையும்தான் பார்த்திருந்தான். அவளது ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் அவனை ஆயிரம் பாகங்களாக சிதறச் செய்திருந்தது‌.

வேதனையையும் வலியையும் விழுங்கியவள், “வண்டியை எடுங்க, வீட்டுக்குப் போகலாம்...” என்றாள். பெருமூச்சை வெளிவிட்ட தனஞ்செயன், மகிழுந்தை வீட்டை நோக்கிச் செலுத்தினான். மனம் முழுவதும் அவளது அழுத முகம்தான் அவனை மொத்தமாய் இம்சித்தது.

உள்ளே நுழைந்ததும் லீலாவதியும் ராமலிங்கமும் இவர்களுக்காகக் காத்திருந்தனர். “என்னாச்சு டா மலர்?” ராமலிங்கம் அருகே வர, லீலா அவளது கையைத் தூக்கிப் பார்த்தார்.

“ஷ்... ஆ!” என முகத்தைச் சுருக்கியவள், “பீரோ மேல ஒரு பேக்கை வச்சிருந்தேன் அத்தை. அதை எடுக்கலாம்னு எக்கும்போது கீழே தவறி விழுந்துட்டேன். அப்படியே டேபிள்ல கை பலமா மோதிடுச்சு...” என்றாள். அவர் வினவுவதற்கு முன்பே பதிலளித்துவிட்டாள்.

“ஏன் மா, பார்த்து ஏறக் கூடாதா? கை வேற வீங்கிப் போச்சு. ரொம்ப வலிக்குதா, டாக்டர் என்ன சொன்னாங்க? பெருசா ஒன்னும் இல்லையே?” லீலாவதி வினவினார்.

“ஒன்னும் பெருசா பிரச்சனை இல்லை. ரெண்டு நாள்ல சரியாகிடும்னு சொல்லிட்டாங்க!” என்றாள் முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.

“சரி மா. வா, வந்து சாப்ட்டு படு!” என்றவர், அவளுக்கு உணவைப் பரிமாறினார். தனா உள்ளே நுழைய, “வாடா, வந்து சாப்பிடு...” என அவனையும் அழைத்தவர், ராமலிங்கத்திற்கும் உணவைப் பரிமாறினார்.

“இல்லை மா, எனக்குப் பசிக்கலை...” என்ற தனா அறைக்குள் நுழைந்தான். அவன் கைகளில் களிம்பும், மருந்து மாத்திரைகளும் இருந்தன.

“ஏங்க, நீங்கதான் அவனை சாப்பிட கூப்பிடணும். ஒன்னும் சாப்டாம வெறும் வயித்துல படுக்கப் போறான்...” லீலாவதி கூற, அவனை நிமிர்ந்து பார்த்த மலர்விழி, “அத்தை, நான் அவரை சாப்பிட சொல்றேன்...” என உண்டுவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.


“விழி, இந்தா, இந்த டேப்லெட்டை போடு. அப்போதான் வலி குறையும்...” என்று அவள் முன்னே மாத்திரைகளை நீட்டினான் தனஞ்செயன் .

“போய் சாப்ட்டு வாங்க...” என்றாள் இவள். தலையை இடம் வலமாக முடியாது என அசைத்தான் அவன்.

“அப்போ என்னாலையும் மாத்திரை சாப்பிட முடியாது...” என்றவள் போர்வையை எடுத்து தரையில் விரித்தாள்.

“ம்ப்ச்... விதண்டாவாதம் பண்ணாம, டேப்லெட்டை போடு விழி!” என்று தனா அதட்ட, அவளிடம் துளியும் எதிர்வினை இல்லை. தன்னையே நொந்தவன், “சரி, சாப்பிட்றேன். நீ டேப்லெட் போடு...” என்றான் இறங்கி வந்து.

“நீங்க போய் சாப்பிடுங்க. எனக்கு என்னைப் பார்த்துக்க தெரியும்...” என்று வெட்டிவிடுவதைப் போல பேசி மாத்திரையை கையில் வாங்கிக்கொண்டாள். அவளை அழுத்தமாய்ப் பார்த்த தனா, சாப்பிட்டு அறைக்கு வர, மலர்விழி தூங்கியிருந்தாள். தலைக்கு மேல கையைத் தூக்கி குப்புறப் படுத்து தலையணையில் முகம் புதைத்திருந்தாள். வலித்திருக்கும் போல என எண்ணியவனுக்கு மனம் பிசைந்தது. களிம்பை எடுத்து அவள் கைகளில் பூசினான்.

வலியில் முகம் சுளித்தவள், உறக்கத்தில் தலையை அவனை நோக்கித் திருப்பினாள். அவள் முகத்தையே ஆதுரமாகப் பார்த்தான். சிறுவயது மலர்விழி நினைவை நிறைத்தாள். அவளும் இப்படித்தான் கொஞ்சம் அழுத்தமானவளும், பிடிவாதகாரியும் கூட. ஆனால், இப்போது ஏன் இத்தனை பிடிவாதம் வளர்ந்தது என அவனால் கண்டறிமுடியவில்லை.

‘சாரி விழி, நான் எதையும் வேணும்னு பண்றது இல்லை. உன்கிட்ட நான் சரியா இல்லையோ? எங்க தவறுறேன்னு தெரியலை.’ என்று அவளது தலையை மென்மையாய் தடவினான்.

‘உங்களுக்கு இப்போ இல்லை, எப்புவுமே புரியாது!’ என்ற விழியின் வார்த்தைகள் செவியை மோத, அதை யோசித்தே அன்றைய தூக்கம் பறிபோனது.

மறுநாள் காலையில் அவனுக்கு முன்பே எழுந்து குளித்து வெளியேறிவிட்டாள் மலர்விழி. காலையில் கண்விழித்த தனஞ்செயன் விழிகள் மனைவியைத் தேடின. அவளைக் காணாது போக, தன்னை சுத்தம் செய்துகொண்டு வெளியே வந்தான்.

“வா டா, டீ குடி...” என்ற லீலா மகனுக்குத் தேநீரைக் கொடுத்தார். அவன் விழிகள் மலர்விழியிடம்தான் நிலைத்தன.

ஒற்றைக் கையால் லீலாவதிக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.
“விழி, கை எப்படி இருக்கு?” என இவன் இயல்பாய் வினவ, அவளிடம் பதிலில்லை. கவனிக்காதது போல வேலையில் கவனமாய் இருந்தாள்.

“விழி, உன்னைதான் கேட்குறேன். கை எப்படி இருக்கு? இந்தக் கையோட ஏன் வேலை பார்க்குற?” என அழுத்தமாய் அதட்டினான்.

“இல்லை, இப்போ பரவாயில்லை!” என அவன் முகத்தைக் காணாது பதிலளித்தாள்‌.

“நீயே கேளு டா. நானும் சொன்னேன். அவ கேட்கலை” என்றார் லீலா.

“சும்மாவே இருக்க ரொம்ப போர் அடிக்குது அத்தை. இந்த சின்ன வேலை கூட செய்யலைன்னா எப்படி?” என சிறியதாய் புன்னகைத்தாள்‌. ஆனால், அதில் சுத்தமாய் உயிர்ப்பில்லை.

“விழி, நீ காலேஜ் கிளம்புறீயா பேசாம? ஐஞ்சாறு நாளா லீவ்ல இருக்க?” என லீலா வினவ,
“இல்லைத்தை, ரிசப்ஷன் முடிஞ்சதும் போறேன். அதுவும் இல்லாம இப்போ கல்சுரல்ஸ்தான் நடக்குது‌. அதனால லீவ் கணக்குல வராது!” என்று பதிலளித்தாள். தனஞ்செயனும் அதை கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.

“ம்மா, இன்னைக்கு நான் ஆஃபிஸ் போறேன்...” என தனா எழ, “நீயும் அடுத்த வீக்ல இருந்து போகலாமே டா?” என ராமலிங்கம் வினவினார். அவர் அலுவலகம் செல்லத் தயாராகி வந்தார். நடந்த களேபரத்தில் அவர் இந்த வாரம் முழுவதுமே அலுவலகம் செல்லவே இல்லை.
அதுதான் கிளம்பினார்.

“இல்லை பா, நான் நேர்ல போனா நல்லா இருக்கும்‌. அதான் போய்ட்டு வரேன்!” என்றவன் தயாராக அறைக்குச் சென்றான்.

தனஞ்செயன் கல்லூரியில் உயிரி-மருத்துவ பொறியியல் முடித்ததும் தந்தை தொழிலை எடுத்து நடத்த விரும்பாதவன், தனக்கென ஒரு தொழில் வேண்டும் என அவரிடம் நின்றான். ராமலிங்கம் சற்று யோசித்தார். ஆனால், தனஞ்செயன் தன் முடிவில் உறுதியாய் நின்றுவிட, சரியென அவனின் விருப்பத்திற்கு மதிப்பளித்தார்.

தந்தை பணம் எதுவும் வேண்டாம் என வங்கியில் அவன் கடன் பெறுவதாய் கூற, ராமலிங்கம் மறுத்துவிட்டார். பரம்பரை பரம்பரையாக அத்தனை சொத்துக்கள் இருக்க, மகன் வெளியே சென்று கடன் பெறுவதில் அவருக்கு விருப்பம் இல்லை. அதனால் தானே அவனுக்கு கடனாய் பணம் கொடுப்பதாகக் கூற, ஒப்புக் கொண்டான்.

தந்தையிடம் பணத்தை வாங்கி, தன் மனதிலிருந்த திட்டத்திற்கு உயிர் கொடுத்தான். கடல்பாசி வளர்ப்பை வர்த்தக ரீதியாக செய்ய வேண்டும் என்பதுதான் அவனது விருப்பமாய் இருக்க, கடற்பாசி பதனிடும் தொழிற்சாலையை மத்திய தர அளவில் வடிவமைத்தான். பின்னர், தொழிலை சிறிது சிறிதாகக் கற்றுத் தேர்ந்தான்.

பின்பு தொழில்சாலையை விரிவுபடுத்தினான். இரண்டு பகுதிகளாக பிரித்து முதல் பகுதியில் திசு வளர்ப்பு ஆய்வு கூடம், இளம் தாவர வளர்ப்பு அலகு, வெளிப்புற கடல்பாசி விதை வளர்ப்பு மையம், பயிற்சி மையம், உலர் தளங்கள் என அமைத்தான்‌. பின்னர் இரண்டாம் பகுதியில்கடல்பாசி பதனிடும் தொழிற்சாலை, நிர்வாக கட்டிடம், புதிய கண்டுபிடிப்புகள் மேம்பாட்டு மையம் என தனியாய் அமைத்து, அதை திறம்பட செய்து வருகிறான்.

கடல்பாசிகள் மருத்துவ குணங்கள் மட்டுமல்ல, அவை அழகு சாதனப் பொருட்கள், உணவு பண்டங்கள் இன்னும் பலவகையில் இப்போது பயன்பாட்டிற்கு வந்திருக்க, உள்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறான். தொழில் அவன் நினைத்ததை விட நன்றாய் வளர, தந்தையிடம் வாங்கிய கடனை சென்ற வருடமே கொடுத்துவிட்டான்.

ராமலிங்கத்திற்கு மகனை நினைத்து அத்தனை பெருமை‌. அவர் தன் தந்தையின் தொழிலைதான் செய்து வந்தார். அதில் எந்த வித ஏற்றமும் இறக்கமும் இல்லாது பார்த்துக் கொண்டார். ஆனால், மகன் தனியாய் நின்று இத்தனை பெரிய வேலையை திறம்பட செய்ய, அவருக்கு தனஞ்செயனைப் பற்றிய கவலை அற்றுப் போனது. இதில் மட்டுமல்ல தனா, அனைத்திலும் திறமை வாய்ந்தவன்தான்‌. அதைவிட எவ்வித அலட்டலும் இல்லாதவன். எல்லாரையும் அனுசரித்து ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும் பொறுமையும் உடையவன். அதனாலே அனைவருக்கும் அவன் மீது நல்ல எண்ணம் வலுப்பெற்றிருந்தது.

தனஞ்செயன் அலுவலகம் கிளம்பிச் செல்ல, மலர்விழி லீலாவதியோடு அமர்ந்து கொண்டாள்‌. ராமலிங்கம் அலுவலகத்தைப் பார்த்துவிட்டு, விட்டுப் போன சொந்தங்களை வரவேற்புக்கு அழைக்கச் சென்றார்.

அங்கே சாரதியும் லோகநாயகியும் கூட ஓரளவிற்கு எல்லாவற்றையும் முடித்திருந்தனர். மாறனும் தன்னால் முடிந்தளவு அவர்களுக்கு உதவினான்‌.

இரண்டு நாட்களில் மலர்விழியின் கையிலிருந்த காயம் நன்றாய் ஆறிவிட்டிருந்தது. அவளிடம் பேசாவிட்டாலும், தனாவின் பார்வை முழுவதும் மனைவியிடம்தான். அவளது நடவடிக்கைகளை நன்றாய் கவனித்தான். அவன் பேசினால், அதை அலட்சியம் செய்வது, ஒதுக்குவது, பதில் பேசாது இருப்பது என அவனை அதிகமாய் சோதித்தாள்‌. தனாவிடம் மட்டும் அவளது இயல்பு தொலைந்திருந்ததை கவனித்தான். லீலாவதியிடமும் ராமலிங்கத்திடமும் இப்போதும் சிறு வயதிலிருந்த மலர்விழியாய் அவ்வப்போது சிரித்துப் பேசுவாள். ஆனால், தான் என வரும்போது நத்தையாய் கூட்டிற்குள் ஒடுங்கினாள்.

அதற்கான காரணம் மட்டும் தனஞ்செயனுக்கு சுத்தமாய் புரியவில்லை. இவனாக வலியச் சென்று பேசினால் கூட, எந்தவித எதிர்வினையும் இல்லை. பேச்சு, ஒன்று சண்டையில் முடியும் அல்லது அவளது அழுகையில் முடியும்‌. இரண்டையுமே அவனால் சமாளிக்க முடியவில்லை. சோர்ந்துதான் போனான், இந்தப் பெண்ணை முழுமையாய் புரிந்துகொள்ள முயன்று.

நாட்கள் கடகடவென பறந்தோட, வரவேற்பு நாளும் வந்து சேர்ந்தது. நெருங்கிய உறவினர்கள் எல்லாம் காலையிலே தனாவின் வீட்டை ஆக்கிரமித்திருந்தனர். மலர்விழியின் குடும்பத்தாரும் வந்து விட்டிருந்தனர். மதிய விருந்து முடிய, மாலை வரவேற்புக்கு அனைவரும் தயாராகினர்.

மலர்விழி தங்களது அறையில் அமர்ந்திருக்க, அழகுகலை நிபுணர் அவளை அழகுபடுத்திக் கொண்டிருந்தார். அவளுக்கு இருபுறமும் தேவியின் பிள்ளைகள் அமர்ந்திருந்தனர். அன்று போல இன்றும் அவளிடம் பேச ஆர்வமாய் வந்திருக்க, குழந்தைகளை அவளால் தவிர்க்க முடியவில்லை. சின்ன சிரிப்புடன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“என்ன மா, என் பொண்ணை ரெடி பண்ணிட்டீயா?” என லோகநாயகி உள்ளே நுழைந்தார்.

“இதோ, ஐஞ்சு நிமிஷம் மேடம். அவ்வளோதான் முடிஞ்சது!” என்று பதில் வந்தது அழகுகலை நிபுணரிடமிருந்து.

“ரொம்ப அழகா இருக்க டி” என்று மகளை நெட்டி முறித்தார். அவரிடம் எந்த எதிர்வினையும் காட்டவில்லை பெண்.

“என் மருமக அழகுதான்...” என்ற லீலா கையில் நகைப்பெட்டியுடன் வந்தார்.

“லோகு, இந்த நகையெல்லாம் மலருக்கு போட்டு விடுங்க!” என லோகநாயகி கையில் நகைகளைக் கொடுத்தார்.

“ஏற்கனவே போட்டு இருக்காளே!” லோகு கேட்க, “அத்தை, நகையைக் கொடுங்க. எனக்கு எது செட்டாகும்னு நான் போட்டுக்குறேன்!” என தானே வாங்கினாள் மலர். லீலாவதி தாயிடம் வேறு எதையும் பேசி சங்கடப்படுத்திவிடுவாரோ? என எண்ணி அவரது பேச்சை தடை செய்தாள்.

“ஆமா அண்ணி, அந்தப் பொண்ணுகிட்ட நகையெல்லாம் கொடுங்க. அவ போட்டிருக்கது எல்லாம் ஒன்னோ ரெண்டோ. நம்ம வீட்டு மரியாதை நமக்கு முக்கியம் அண்ணி..” என தேவி அங்கு வந்து சேர்ந்தார். அவரது பேச்சில் மலருக்கு கோபம் வர, லோகநாயகி முகம் சுருங்கிப் போனது. அவர் மகளது கையைப் பிடித்துக்கொண்டார். அவள் எதாவது பேசி பிரச்சனை செய்துவிடுவாளோ என்று.

“ப்ம்ச்... இப்போ எதுக்கு தேவையில்லாத பேச்சு தேவி. இங்க எதுக்கு வந்த?” என லீலா காட்டமாகக் கேட்டார்.

“நான் எதுக்கு தேவையில்லாம இங்க வரப் போறேன். எல்லாம் நான் பெத்ததுகளை சொல்லணும். கண்டவங்க பின்னாடியே சுத்துதுக!” என குழந்தையின் முதுகில் ரெண்டு அடிபோட்டு அவர்களை இழுத்துச் சென்றார்.

“குழந்தை மேல கை வைக்காத தேவி...” என்ற லீலாவின் அதட்டல் காற்றில் கரைந்தது. மலரிடம் திரும்பியவர், “மலர், நீ எதுவும் மனசுல வச்சுக்காத. நகையெல்லாம் போட்டு ரெடியாகு!” என்று அவர் நகர, கையிலிருந்த நகைப்பெட்டியை பார்த்து கசப்புடன் சிரித்தாள். நகையும் அவளைப் பார்த்து நக்கல் செய்வது போலொரு பிரம்மை. அதை எடுத்து விருப்பமில்லை எனினும் அணிந்துகொண்டாள்.

தனஞ்செயன் மற்றொரு அறையில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். கலகலப்பாக கல்லூரி கால நாட்கள் அங்கே பரவிக் கிடந்தன‌. எதிலுமே பிடிப்பில்லாதது போல அமர்ந்திருந்தான் தனஞ்செயன்.

அவனது தோளில் தட்டிய மாறன், “என்ன டா, யோசனை பலமா இருக்கே!” என்றான்.

“ஹம்ம்... வாடா நல்லவனே! உன் தங்கச்சியைப் பத்திதான் யோசிச்சுட்டு இருக்கேன்...” பதில் இயம்பினான் தனஞ்செயன்.

“ஏன் டா, எதுவும் பிரச்சனையா?”

“பேசுனா தான் டா பிரச்சனை வர. அவதான் என்னை ஒரு மனுஷனாவே மதிக்கலையே. அப்புறம் எங்க சண்டை போட...” சலித்துக்கொண்டான் தனஞ்செயன்.

“டேய்! எல்லா சரியாகும். நீ ஃபர்ஸ்ட் அவளை புரிஞ்சுக்க ட்ரை பண்ணியா?”

“டேய், அது M1, M2 பேப்பரை விட ரொம்ப கஷ்டமான விஷயம் டா...” என இழுத்தவன், “என் முகத்தைக் கூட உன் தங்கச்சி பார்க்கலை டா. அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்கலை. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க!” என்றான் குறையாய்.

“மச்சான், அவளுக்கு உன்னைப் பிடிக்காதுன்னு யாரு சொன்னா?” மாறன் வினவ, “யாரு சொல்லணும்? அதான் அவ முகமே சொல்லுதே!” என்றான்.

மாறன் பதில் அளிப்பதற்குள்,
“டேய், போனை எங்க வச்ச? அட்ரஸ் தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்...” என்று கல்லூரி நண்பன் ஒருவன் கூறினான்.

“சாரி டா... ஃபோனை ரூம்லயே வச்சுட்டேன்!” என்ற தனா, அறைக்கு விரைந்தான்.

அவன் உள்ளே நுழைய, சரியாக தேவியின் இரண்டு பிள்ளைகளும் மீண்டும் உள்ளே வந்தனர்.

“அக்கா...” என மலர்விழி அருகே அவர்கள் செல்ல, “அபி, கிருத்தவ்... எதுக்கு இங்க வந்தீங்க? உங்க அம்மாகிட்ட போங்க...” என்று அதட்டல் போட்டாள் மலர்விழி.

“நோ, நாங்க இங்கதான் இருப்போம்...” அபி அடமாய் கூற,
“ரெண்டு பேரும் இந்த ரூமை விட்டுப்போகலைன்னா, உதை விழும். போங்க!” கடுமையாய் அவள் கூற, குழந்தை முகம் வாடிப்போனது.

“போங்க...” அவள் பல்லைக் கடிக்க, இரண்டு பேரும் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு வெளியேறினர். கண்டிப்பாக அவர்கள் இங்கே இருந்தால், தேவியிடம் மீண்டும் திட்டோ அடியோ வாங்க நேரிடும் என அவர்களை அதட்டி கோபம் கொண்டது போல அனுப்பிவிட்டாள். ஆனால், தனஞ்செயனுக்கு அது தெரியாது. அவளது நடவடிக்கையில் இவனுக்கு கோ
பம் வந்துவிட்டது.

‘சின்ன குழந்தைங்க கிட்ட போய் இப்படி பேசுறா!’ எனப் பல்லைக் கடித்தவன், “ஏன் விழி இப்படி சீப்பா நடந்துக்கிற...?” எனக் கோபத்தில், அவளிடம் வார்த்தைகளை வீசியிருந்தான்.
 
Well-known member
Messages
559
Reaction score
389
Points
63
எப்பவும் தப்பான டைம்ல கரெக்டா என்ட்ரி குடுக்கறான்
 
Top