• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,263
Reaction score
3,702
Points
113
எண்ணம் – 13

2015 நவம்பர் எனத் தேதி போட்டு முதல் பக்கத்தில் தொடங்கி இருந்தாள் மலர்விழி.

விழி அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். சாரதியும் லோகநாயகியும் அவசர வேலையாக வெளியே சென்றிருந்தனர்.

அன்றைக்கு மலர்விழிக்கு டைபாய்டு காய்ச்சலாக இருக்க, அறையிலே முடங்கிக் கிடந்தாள். மாறனுக்கும் தனாவிற்கும் தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம் அது.

இருவரும் ஒரே கல்லூரியில் பயின்றாலும் வேறு வேறு பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பயின்று கொண்டிருந்தனர்.

தங்கைக்கு உடல்நலமில்லை என மாறனும் மலர்விழியை அவ்வப்போது பார்த்து வந்து படித்துக்கொண்டிருந்தான். திடீரென யாரிடமிருந்தோ அழைப்பு வர, அவன் வெளியே சென்று விட்டான். தனா மட்டும் கூடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க, விழி கஷ்டப்பட்டு எழுந்து வந்தாள்.

“மாறா...” என இவள் குரல் சுவாதீனமாக ஒலிக்க, மாறனுக்குக் கேட்கவே இல்லை. தனா எழுந்து வந்தான்‌.

“என்ன விழி, எதுவும் வேணுமா?” அவன் அருகே வந்ததும் விழி வாந்தி எடுத்திருந்தாள். தனஞ்செயன் உடையும் அதில் பாழாய்ப் போனது.

வாந்தி எடுத்தவள் கீழே விழப் போக, அவளைத் தாங்கிப் பிடித்திருந்தான் தனா. அவனது முகத்தை சின்னவள் கலக்கத்துடன் பார்க்க, “ப்ம்ச்... ஒன்னும் இல்லை டா விழி...” என்றவன் முகத்தில் அருவருப்பு சுத்தமாய் இல்லை. இவளை கழிவறைக்கு அழைத்துச் சென்றான். வாந்தியெடுத்து முகம் வாயைக் கழுவிவிட்டு மலர் வெளியே வர, தனா தன் உடையை கழுவிவிட்டு வந்தான்.

“சாரி...” என இவள் அவனைக் குற்ற உணர்வாய்ப் பார்த்து வைத்தாள்.

“விழி, அதை விடு. சாப்ட்ட எல்லாத்தையும் வாந்தி எடுத்துட்ட. எதாவது சாப்பிட எடுத்துட்டு வரவா?” எனக் கேட்டவன், எதையும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் பதிலைக் கேட்காது சமையலறைக்குச் சென்று உணவைத் தட்டிலிட்டு எடுத்து வந்தான்.

“நீ உட்காரு. நானே ஸ்பூன்ல ஊட்டி விட்றேன்...” என்றவன் மலர்விழிக்கு உணவை ஊட்டினான். உடலில் தெம்பு சுத்தமாய் இல்லை இவளுக்கு. டைபாய்டு காய்ச்சல் வந்து இரண்டு நாட்களாகப் படுத்தப் படுக்கையாகக் கிடந்தாள்.

அலைபேசியைத் துண்டித்துவிட்டு வந்த மாறன், “விழி, என்ன பண்ணுது, பசிச்சிருச்சா?” எனக் கேட்டவாறே தனாவிடமிருந்து உணவை வாங்கி ஊட்ட ஆரம்பித்தான். தனாவும் அவளது அருகே அமர்ந்தான். உணவை உண்டுக்கொண்டே அவனைப் பார்த்தவள் புன்னகைத்தாள்.

தாய், தந்தை, தமையனுக்கு அடுத்து அவளுக்கு அக்கறையாய் உணவு ஊட்டிவிட்ட வரிசையில் இடம்பெற்றிருந்தான் தனஞ்செயன். இதற்கு முன்பு ஓரிரு வார்த்தைகள் பேசி, தினமும் பார்த்துக்கொண்டாலும் மென்னகையுடன் கடந்துவிடுவான் தனா. மலரும் அப்படித்தான் பெரிதாய் அவனிடம் பேசவோ ஒட்டுதலோ காட்ட விழையமாட்டாள். ஆனால், அன்றைக்கு தனஞ்செயன் அவளது விழிகளுக்கு வித்தியாசமாய் தெரிந்தான். அவனை இதுவரை தனது நட்பு வட்டத்தில் இணைத்திராதவள், லேசாய் வட்டத்தை தளர்த்தி தனாவை நண்பனாய் ஏற்றுக் கொண்டாள்.

அதற்குப் பின்னர் எப்போதும் உதிர்க்கும் சம்பிரதாயப் பேச்சுக்கள் மட்டும் இல்லாது நின்று நிதானமாக அவனிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசத் தொடங்கியிருந்தாள். தன்னை அறியாமலே தனஞ்செயன் மீது மலருக்குப் பிடித்தம் உண்டாக ஆரம்பித்திருந்தது.

சாரதியிடமும் லோகநாயகியிடமும் மரியாதையாய் நடந்து கொள்ளும் விதம் பிடித்தது. நண்பனின் தங்கை, தன் தோழி என்றாலும் கூட ஒரு தப்பான பார்வை வீசியிராத தனஞ்செயன் எப்போது தனக்குள்ளே நுழைந்தான் என பாவைக்குத் தெரியாது.

தனாவும் அவளின் நட்புக் கரத்தை ஏற்று மாறனைப் போல அவனது தங்கையையும் தோழியாக மாற்றிக்கொண்டான். இப்போது இருவர் மூவராகிப் போயினர்.
தனாவும் மாறனும் வெளியே சுற்றும் போது, இவளும் என்றாவது ஒருநாள் இணைந்து கொள்வாள். மலர்விழிக்கும் மாறனுக்கும் சின்ன சின்ன சண்டைகள் வரும்போது தனா நீதிபதியாகிப் போனதெல்லாம் தனிக் கதை.

மலர் எதையாவது கேட்டு அடம்பிடிக்க, மாறன் வாங்கித் தராது மறுத்துவிடுவான். ஆனால், தனஞ்செயன் அத்தியாவசியமானது எனத் தோன்றினால், அவளுக்காக வாங்கிக் கொடுப்பான்.

மலர்விழி ஆரம்பத்தில் அவனிடமிருந்து எந்தப் பொருளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவளைப் பொறுத்தவரை உறவிற்குள் இதெல்லாம் சரியென்றாலும், அவர்களின் பண வசதியை எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தியது போலிருக்கக் கூடாது என எண்ணி மறுத்துவிட்டாள். மாறன்தான் தங்கையை வற்புறுத்தி வாங்கச் சொல்லுவான். விலை உயர்ந்தப் பொருளாக இருந்தால், விழி அதை கையிலே தொடமாட்டாள்.

எல்லோரும் சிறுவயதிலிருந்தே மலர் என அழைத்துப் பழக, வந்த முதல்நாளே தனா விழி என அழைத்திருந்தான்‌. சிறு வயதில் என்ன நினைத்து அழைத்தானோ தெரியாது. ஆனால், அதுவே தொடர்கதையாகிப் போனது.

தனாவின் மீதிருந்த ஈர்ப்பு எப்போது நேசம் என்னும் அத்தியாயத்திற்குள் நுழைந்தது என ஒவ்வொரு பக்கமாக அவனைப் பற்றி எழுதி இருந்தாள் மலர்விழி. ஆங்காங்கே கவிதைகள் வேறு அத்தனை காதலுடனும் நேசத்துடனும் எழுதி வைத்திருந்தாள். இவனுக்குப் அதைப் படித்ததும் இளம் புன்னகை தோன்றியது.

அவனுடான தன் காதலை உணர்ந்தப் பிறகு, தனாவிடமிருந்து வாங்கிய அத்தனை பொருட்களைப் பற்றியும் எழுதி, அதை பத்திரமாகவும் வைத்திருந்தாள். அப்படித்தான் அந்த அயிரை நிறச்சட்டையும் அவளிடம் வந்திருந்தது.

அது தனாவின் சட்டை, ஒருநாள் மாறன் உடுத்திவிட்டு அப்படியே வைத்துக்கொள்ள, இவள் மாறனிடமிருந்து திருடி வைத்திருந்தாள். மலர் அதை விவரித்து எழுதி இருந்ததைக் கவனித்த தனாவிற்கு என்ன உணர்வென்று விவரிக்க முடியவில்லை. மனதில் இருந்ததை வார்த்தையால் வடித்திருந்தாள்.

நாட்குறிப்பேட்டை வாசிக்க வாசிக்க அவனால் நம்பவே முடியவில்லை. ‘விழி... தன்னை விரும்பி இருக்கிறாளா? ஏன் இந்தப் பிடித்தம்? இத்தனை காதல்?’ என மனம் பரபரத்தது. எப்போதும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சண்டையிட்டு முறைத்தவாறு திமிராய் சுற்றுபவளுக்குள் இப்படியொரு எண்ணம் இருக்குமென அவனால் இப்போதும் நம்ப முடியவில்லை. ஏதோ எட்டாவது அதிசயமாய் அவளின் காதல் இவனது சிந்தனையை சிக்கனமின்றி ஆக்கிரமித்தது.

அவளது நாட்குறிப்பேட்டில் நடந்தது அத்தனையும் மலர்விழி கைப்பட எழுதி இருந்தாள். தனஞ்செயன் இதுவரை அவளை அப்படியொரு கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லை. வாயடைத்துப் போனான் விழியின் செய்கையில்.

அந்தப் பையை எடுத்துத் தலைகீழே கொட்டினான். அதிலிருந்தவை பேனாக்கள், குட்டி குட்டி இதரப் பொருட்கள் என எல்லாம் அவன் வாங்கிக் கொடுத்தவை தான். இப்படி காதலித்தவள், ஏன் அப்படி நடந்து கொள்கிறாள் என மனம் முரண்ட, மீண்டும் நாட்குறிப்பேட்டை எடுத்துப் படிக்கத் தொடங்கி இருந்தான்.

மலர்விழி அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். வகுப்பில் முதல் மாணவியாக வரவில்லை எனினும் எப்போதும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுவிடுவாள். ஆனால், அந்த முறை நடந்த அரையாண்டுத் தேர்வில் எல்லா பாடத்திலும் வெறும் தேர்ச்சி மதிப்பெண்கள் மட்டுமே வாங்கியிருந்தாள்‌.

அதைக் கவனித்த பெற்றவர்கள் மலர்விழியை அழைத்துக் கேட்க, அவர்களிடம் எதையோ கூறி சமாளித்துவிட்டாள். ஆனால், மாறன் தங்கை கூறியதை நம்பவே இல்லை. சோர்ந்திருந்த முகமும் கருவளையமிட்டிருந்த விழிகளும் அவனை யோசிக்க செய்தன. கடந்த ஒரு மாதக் காலமாக அவள் இயல்பைத் தொலைந்திருப்பதை மூளை தாமதமாக இனம் கண்டறிய, அவனுக்குள் லேசாய் பயபந்து சுழன்றது. வேறு ஏதும் பிரச்சனைகளில் அவள் சிக்கிவிட்டாளோ? என மனம் பலவாறு யோசித்து தொலைத்தது.

தாய் தந்தை இல்லாத நேரமாக மலர்விழியிடம் பேசலாம் என இவன் அறைக்குள் நுழைய, அவனைக் கண்டதும் பட்டென கையிலிருந்த நாட்குறிப்பேட்டை மடக்கி தூரம் வைத்தாள். மாறனின் கண்களில் அது தவறாமல் பட்டுவிட்டது.

“மலர், அம்மா, அப்பாகிட்ட பொய் சொன்ன மாதிரி, உன்னால என்கிட்ட எதையும் மறைக்க முடியாது!” என்றவனின் பார்வை அந்த நாட்குறிப்பேட்டை மொய்த்தது.

“ப்ம்ச்... ஒன்னும் இல்லை மாறா...” மலர் குரல் கலங்கித்தான் வெளிவந்திருந்தது. குரல் மட்டுமல்ல இதயமும் முழுவதும் கலங்கிப் போயிருந்ததை அவள் மட்டுமே அறிவாள்.

“அப்போ டைரியை என்கிட்ட கொடு...” மாறன் அதை எடுக்கப் போக, மலர்விழி மாட்டேன் என்பது போல தலையை அசைத்து அதை எடுத்து கைகளுக்குள் அடக்கினாள்.

“மலர்...” மாறன் அதட்டலிடவும், இவளின் கண்களிலிருந்து பொலபொலவென நீர் வழிந்தது. மாறனை எட்டி அணைத்துக் கொண்டவளுக்கு வார்த்தைகள் எல்லாம் வரவில்லை. அப்படியொரு அழுகை அழுதாள். மாறன் பயந்து போனான். மலர்விழி எதற்கும் எளிதாய் கலங்கும் ரகமில்லை. இப்படி அவள் அழுகிறாள் என்றால் விடயம் பெரிது என மனம் அடித்துக்கொண்டது.

“மலர், அழறதை நிப்பாட்டு. என்ன ஆச்சுன்னு முதல்ல சொல்லு. மனசெல்லாம் பதறுது டி‌...” தங்கையைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்த மாறன் அதட்டலாய்க் கேட்க, மலர் தேம்பினாள்.

அழுதுகொண்டே மென்றும் விழுங்கியும் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன. “அண்ணா, எனக்கு... எனக்கு ஜெய்யை ரொம்ப பிடிச்சிருக்கு...” என்றவள் குரல் முழுவதும் வேதனையின் தடம். முதல் முறையாய் விழியிடம் தடுமாற்றம் . தமையன் முகத்தை அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. குற்ற உணர்வு அவளை வாட்டியது.

அழுத முகத்துடனும் சிவந்த விழிகளுடனும் தலையைக் குனிந்துகொண்டாள். தன்னுடைய வலி அவனுக்குத் தெரிய வேண்டாம் என உதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள்.
மாறனுக்கு லேசாய் அதிர்ச்சி. இப்படியொரு விஷயத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை‌. ஒரு நொடி என்ன செய்வது எனத் தெரியாது தடுமாறிப் போனான்.

இப்போது மலர்விழியின் அண்ணனாய், அவளது வாழ்க்கையில் தன்னுடைய பொறுப்பு எத்தனை இருக்கிறது, அவளை நல்வழி படுத்த வேண்டும் என மனம் தன்னுடைய கடமைகளை அடுக்கியது.

அவனால் நம்பவே முடியவில்லை. அவனுடைய நட்பு தனாவுடன் அத்தனை ஆழமானது. ஆனால், மலருக்கும் தனாவிற்கும் அப்படியெதும் பெரிதாய் இருந்ததில்லை. தனா தன்னைக் காண வரும்போது இருவரும் பார்த்துக் கொள்வார்கள். இரண்டொரு வார்த்தைப் பேசுவார்கள். அப்படி இருக்கையில் இந்தத் தனஞ்செயன் எந்த இடத்தில் மலர்விழியை ஈர்த்தான் என அவனுக்கு சுத்தமாய்ப் புரியவில்லை. அதுவும் இப்படியொரு அழுகை அழுகிறாளே தங்கை எனப் பதற்றம் சூழ்ந்தது.

கண்டிப்பாய் இதற்கு இந்த வயதில் ஏற்படும் பருவ மாற்றங்களும், ஈர்ப்பும்தான் காரணம். அதைதான் மலர்விழி காதலென்று நம்புகிறாள் என அவன் எண்ணியிருக்க, தங்கையின் பேச்சு அதை உடைத்திருந்தது.

மறுபுறம் திரும்பி நின்று கையைக் கட்டிக்கொண்ட விழிக்கு இதயம் முழுதும் சொல்ல முடியாத வலி. தொண்டையில் ஏதோ முள் மாட்டிக்கொண்டு அவளைப் பேச விடாமல் தடுத்தது. ஆனாலும், மாறனிடம் கூறிவிட்டால் இத்தனை நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக தன் உயிரை உருக்கியிருந்த சுமை குறையும் என அவனிடம் மனதில் உள்ளவற்றைக் கொட்டிவிட முனைந்தாள்.

“எனக்கும் அவனுக்கும் ஒத்து வராது மாறா...” என்றாள் கசங்கிய முகமும் கலக்கம் சூழ்ந்த விழிகளுமாய். மாறன் தங்கையைக் கேள்வியாய்ப் பார்த்தான்.

“குணத்திலும் சரி, பணத்திலும் சரி, ஜெய் வேற. அவங்க வேற தானே? நம்ம எல்லாரும் பக்கத்து பக்கத்து வீட்ல இருக்கோம், அத்தை, மாமான்னு உறவு சொல்லி கூப்பிட்றோம். அதுக்காக லீலா அத்தையும் ராமு மாமாவும் நம்மளோட சொந்தக்காரங்க ஆக முடியாது இல்ல. அவங்க எப்பவுமே பணக்காரங்கதான். ஏதோ தெரிஞ்சவங்கன்றதுக்காக நம்மகிட்ட நல்லா பழகுறாங்க இல்ல?” என்றாள் தொண்டை அடைக்க. இதைக் கூறும்போதே அழுகைப் பொங்கியது. மாறன் அவளது பேச்சில கொஞ்சமல்ல நிறையவே ஆச்சர்யமானான். இந்த அளவிற்கு இவள் யோசித்து இருக்கிறாளா என!

“பணம் பணத்தோட தானே சேரும் மாறா. ராமு மாமாவுக்கு இருக்க சொத்துக்கு நம்ம எல்லாம் துரும்பு கூட கிடையாது! அவங்க வசதிக்கு ஏத்த மாதிரி பணக்கார பொண்ணா தானே தனாவுக்குப் பார்ப்பாங்க...” என்றவள் பொங்கி வந்த அழுகையை அடக்கினாள். முடியவில்லை அவளால்.

மனதில் நினைத்தவனை தூக்கியெறிவது அத்தனை சுலபமில்லையே என நினைத்ததும், விழிகளில் பொலபொலவென நீர் வழிந்தது. மனதின் பாரமெல்லாம் கரைந்து விழிநீர் வழியே வெளியேறியது.
இருந்தும் ஒவ்வொரு நொடியும் பாரமேறும் இதயத்தை எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தாள். நெஞ்சே அடைத்துப் போனது. தன் மீதே கோபம் வந்தது. எந்த நம்பிக்கையில் அவன் மீது எனக்கு காதல் வந்தது. எந்த வகையிலுமே அவர்களது குடும்பத்துடன் ஏணி வைத்தால் கூட தங்களால் எட்ட முடியாதே! அதை நினைத்ததும் குபுகுபுவென மீண்டும் உவர்நீர் வெளியேறியது.
 
Administrator
Staff member
Messages
1,263
Reaction score
3,702
Points
113
“மலர், ஏன்?” எனக் கேட்ட மாறனுக்கும் விழிகள் பனித்துப் போயின.

“என்னாச்சு மலர்... முதல்ல அதை சொல்லு. யாரும் உன்னை எதுவும் சொல்லீட்டாங்களா? தனா எதுவும் சொன்னானா?” என மாறன் வினவ, தலையை இடம்வலமாக அசைத்தாள் மலர்.

“வாயைத் தொறந்து சொல்லு மலர்!” மாறன் பொறுமை இழந்தான். பயமாய் இருந்தது இந்தப் பெண் இப்படித்தான் தமையனின் நிம்மதியை நொடியில் உருக்குலைத்திருந்தாள். தனஞ்செயன் இதில் எந்த வகையிலும் சம்பந்தப்பட்டிருப்பானோ? என எண்ணங்கள் அவன்புறமும் தாவின.

“யாரும் எதுக்கும் என்ன சொல்லணும் மாறா? எனக்குத்தான் புத்தியில உறைக்க ரொம்ப நாளாச்சு. இந்த தனா எனக்கு வேணாம். இவன் வேணாம் மாறா. எனக்கு இவன் செட்டாக மாட்டான்... அவங்க அம்மா, அப்பா பார்க்குற பணக்கார பொண்ணா கல்யாணம் பண்ணிட்டு அவன் சந்தோசமாக இருக்கட்டும்...” என தமையன் முகம் பார்க்காது உரைத்தவளின் நெஞ்சம் முழுவதும் நெருஞ்சி முள்ளை வைத்துக் குத்துவதைப் போலொரு வலி. யாரிடமும் பகிர முடியாத வேதனை அது. அவளை அத்தனை பாடாய்ப்படுத்தியது.

“இந்த ஜெய் எனக்கு வேணாம் மாறா. இந்த தனஞ்செயன் எனக்கு வேணாம்...” ஜெபம் போல அதையே கூறியவள், கீழே சிதறிக் கிடந்த பொருட்களை எல்லாம் எடுத்து பையினுள் திணித்தாள். மாறன் அவளது செய்கைகளைத்தான் அதிர்ந்து பார்த்திருந்தான். இதெல்லாம் தனஞ்செயன் மலர்விழிக்கு வாங்கிக் கொடுத்திருந்த பொருட்கள் என மனம் கணக்கிட்டது. அவளது குரலும் செய்கையும் பேச்சும் தனாவின் மீதான அவளது எண்ணத்தை வெளிச்சமிட்டுக் காட்டின. தான் நினைத்ததை விட மலர்விழி இந்த விஷயத்தில் இத்தனை தீவிரமாக இருந்திருக்கிறாள் என தமையனால் நம்ப முடியவில்லை.

யாரும் வந்து மலர்விழி தனாவை விரும்புகிறாள் என கூறி இருந்தால் கூட, கண்டிப்பாக மாறன் அதை ஒரு துளியேனும் நம்பியிருக்க மாட்டான். ஏனென்றால், அவள் யாரையும் எளிதில் நட்பு வட்டத்தில் கூட சேர்த்துக் கொள்ள மாட்டாள். பெரிதாய் யாரிடமும் அண்டாது கொஞ்சம் திமிராய் சுற்றுவாள். அவளாகச் சென்று யாரிடமும் நட்பு கூடப் பாராட்ட மாட்டாள். தன் வேலைகளை தானே செய்வது, எல்லாவற்றிலும் தன்னால் முடியும் என்பது போலொரு தன்னம்பிக்கையும் பிடிவாதமும் அவளது பிறப்பு குணம். எதற்காகவும் அழவே கூடாது என உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட தைரியமாக இருப்பாள். அப்படிப்பட்ட பெண் ஒருவனை விரும்பி இருக்கிறாளா? என மனம் நடந்ததை நினைத்துப் பார்த்தது. ஆனால், அவன் அறியாதது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை அன்பு, காதல், நேசம், ஈர்ப்பு போன்ற பொக்கிஷமான உணர்வுகள்.

நாட்குறிப்பேட்டை எடுத்துப் புரட்ட, தனஞ்செயனை அத்தனை முறை வரைந்து வைத்திருந்தாள் மலர்விழி. அவளுக்கு இத்தனை அழகாய் வரைய வருமா? என மாறன் வியந்தான். பாடநோட்டில் படம் வரையச் சொல்லி அவனைத் தொந்தரவு செய்ததும், தனஞ்செயன் மலர்விழிக்கு வரைந்து கொடுத்ததும் இப்போது நினைவிற்கு வந்தது. எல்லாவற்றையும் இவள் வேண்டுமென்றே செய்திருக்கிறாள் என மனம் கணக்கிட்டது.

“மாறா, நான் எல்லாத்தையும் மறந்துட்றேன். எனக்கு இந்த தனா வேணாம்!” என வலியுடனும் வேதனையுடனும் மாறன் முகத்தைப் பார்க்காது வேறுபுறம் பார்த்து ஜெபித்தவளைத் தன்னை நோக்கித் திருப்பினான் மாறன்.

“மலர், என்கிட்ட நீ இதுவரைக்கும் பொய் சொன்னது இல்லைன்னு நம்பிட்டு இருந்தேன். ஆனால், அதை இன்னைக்கு மாத்திட்ட. எனக்குத் தெரியக் கூடாதுன்னு உன் வாழ்க்கையில தனியா எதை எதையோ மறைக்க கத்துக்கிட்ட...” மாறன் குரல் கரகரத்துப் போய் வேதனையுடன் வெளிவந்தன. தன்னிடம் கூட கூற முடியாது அப்படியென்ன இவள் மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறாள் என ஆற்றாமை வேறு.

மாறனை பாவமாய்ப் பார்த்தாள் மலர்விழி. அவனிடம் சொல்லிவிட்டால் கூட இந்த வேதனைக் குறையாது போல என மனம் அரற்றியது. இருந்தும் அழுது சோர்ந்த முகத்துடன் திக்கித் திணறி கூறிவிட்டாள்.

“நான் லீலா அத்தை வீட்டுக்குப் போய்ருந்தேன். அப்போ, சுமியோட அம்மா வந்திருந்தாங்க...” என்றவள், அன்றைய நிகழ்வை விளக்கினாள்.

“அத்தை, அம்மா கொழுக்கட்டை செஞ்சாங்க. அதான் கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்...” என்ற மலர் கையிலிருந்த கிண்ணத்தை லீலாவதியிடம் நீட்டினாள்.

“வா மலர்...” என லீலா புன்னகையுடன் அவள் கையிலிருந்தக் கிண்ணத்தை வாங்கிவிட்டு அருகிலிருக்கும் நாற்காலியில் அமர வைத்தார்.

“ஏன் மலர், இப்போ எல்லாம் இங்க வர்றதே இல்லை!” என லீலா வினவ, அறைக்குள்ளிருந்து கோசலை வெளியே வந்தார்.

“எக்ஸாம் அத்தை, படிச்சுட்டு இருக்கேன். அதான் இங்க வர முடியலை...” என மெல்லிய புன்னகையுடன் பதிலளித்தவளின் விழிகள் தனஞ்செயனைத் தேடின. அவனைக் காணலாம் என்றுதான் வந்திருந்தாள்.

“லீலா, யார் இந்தப் பொண்ணு? சொந்தக்கார பொண்ணா?” கோசலை வினவினார்.

“சொந்தம் இல்லை கோசலை. இங்க பக்கத்துல ரெண்டு வீடு தள்ளி குடியிருக்காங்க. உனக்கு இவளை முன்னமே தெரியும்தானே?” லீலாவதியின் பதிலில் மலருக்கு சுருக்கென்றுவிட்டது. ஆம், அவள் எந்த வகையிலும் அவர்களுக்கு சொந்தமில்லை தானே?
அவர் கூறுவது உண்மை என உறைத்ததும் லேசாய் விழிகள் கலங்குவதைப் போலிருந்தன. ஆனால், மலர்விழி அவர்களை தங்கள் சொந்தமாகத்தான் எண்ணி இத்தனை நாட்கள் அவர்களிடம் உறவு கொண்டாடினாள். லீலாவதியின் பேச்சு நொடியில் அதை உடைத்திருந்தது.

‘அத்தை... மாமா!’ என வீட்டிற்கு அருகிலுள்ளவர்களை அழைத்தால், அவர்கள் தங்களது சொந்தமாகிவிட மாட்டார்கள் என்ற உண்மை அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. லீலா என்னவோ பொதுவாய்தான் கூறினார். ஆனால், மலர்விழிக்கு அங்கு உட்காரப் பிடிக்கவில்லை. மனதில் ஏனோ சொல்ல முடியாத பாரம் தொக்கி நின்றது.

“சின்னப் பிள்ளையில பார்த்தது. இப்போ மறந்து இருப்பேன் லீலா...” கோசலை பதில் கூறினார்.

“அத்தை, எனக்கு வேலை இருக்கு. நான் வரேன்...” என்ற மலர்விழிக்கு அங்கு நிற்க ஒப்பவில்லை.

“அட! வந்ததும் ஏன் கிளம்புற மலர்.‌ இங்க வந்து உட்காரு...” என்ற லீலா அவளது கையைப் பிடித்து அருகில் இருத்திக்கொள்ள, அவளால் நகர முடியவில்லை.

மலர்கொண்டு வந்தக் கிண்ணத்தை திறந்த லீலா தனக்கொரு கொழுக்கட்டை எடுத்துக்கொண்டு, “கோசலை, நீங்களும் எடுத்துக்கோங்க...” என அவரிடம் நீட்டினார்.

அவர் முகம் ஒரு நொடி அஷ்டக்கோணலாக மாறியது. ஒரு மாதிரி ஒவ்வாத பொருளைப் பார்ப்பது போல பார்த்தவர், “ஐயோ! பரவாயில்லை லீலா. எனக்கு வேணாம்!” என்று கூறினார். அதில் மலர்விழிக்குக் கட்டு கடங்காது கோபம் பெருகியது. எந்த விதத்திலும் இவர்களை விட நாங்கள் குறைந்துவிட்டோம்? இப்படி ஒவ்வாத, வேண்டாதவர்கள் செய்த பொருட்களை உண்ண சொல்வதை போல முகத்தை வைத்திருக்கிறார் என மனம் கோபத்தில் கொந்தளித்தது.

“அத்தை, எனக்கு எக்ஸாம் இருக்கு. நான் படிக்கணும்...” பட்டென மலர்விழி இடத்தைவிட்டு அகலப் பார்க்க, தனா சரியாய் அந்நேரம் உள்ளே வந்தான். அவளைப் பார்த்ததும் அவன் புன்னகைக்க, அவன் முகத்தை நோக்கிய விழிக்கு ஏனோ அழுகை வரப் பார்த்தது.

“ஹே விழி, ஒன் மினிட் வெயிட் பண்ணு மா. நான் கொடுக்குற பென்ட்ரைவை மாறன்கிட்ட கொடுத்துடு...” என்றவன் அறைக்குள் நுழைய, இவளுக்கு அங்கேயே நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

“ஏன் லீலா, நம்ம தனா பெரிய பையனா வளர்ந்துட்டான் இல்ல? படிச்சு முடிச்சு இப்போ பிஸ்னஸ் வேற பண்றான். அடுத்து என்ன கல்யாணம் தானே?” கோசலை தனஞ்செயனைப் பார்த்ததும் வினவினார்.

“ஆமா கோசலை, ஆனால் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அவன் பிஸ்னஸ் ஸ்டெடியானதும் நல்ல பொண்ணா பார்க்கலாம்...” லீலாவும் பதில் கூறினார்.

“எந்த மாதிரியான சம்பந்தம் எதிர்பார்க்குறீங்க லீலா?” கோசலை வேறொரு எண்ணத்தில் வினவினார்.

“இதென்ன கேள்வி கோசலை? கண்டிப்பா நம்ம வசதிக்கு ஏத்த வீட்டுப் பொண்ணா, அப்புறம் என் பையனுக்கும் பிடிச்ச பொண்ணாதான் பார்ப்பேன்...” லீலா மனதிலிருந்து எதையும் கூறவில்லை. அப்போதைக்குத் தோன்றியதை அவர் கூற, மலர்விழிக்கு மனது சுக்கல் சுக்கலாய் நொறுங்குவதைப் போலிருந்தது. தனாவுடனான அவள் கட்டிய வாழ்க்கையின் கனவுகள் எல்லாம் அந்த நொடி நிதர்சனம் மனதில் அறைந்ததில் பட்டென சரிந்து போனது. லீலாவின் கூற்றில் தான் அவளுக்கு உண்மை உறைத்தது.

அவர் கூற்று நூறு சதவீதம் உண்மை. நின்றிருந்த இடத்திலிருந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். தன்னுடைய வீட்டை விட இது நான்கு மடங்குப் பெரியது. அவளறிந்த வரை ராமலிங்கத்திற்கு பரம்பரை சொத்துகள் ஏராளம். தனாவும் சொந்தமாய் பெரிய அளவில் தொழில் செய்கிறான். தன் வீட்டை எண்ணிப் பார்த்தாள். தங்களுடைய குடும்பத்தில் பரம்பரை சொத்துக்கள் என எதுவுமே கிடையாது.

மலர்விழி குடும்பம் இப்போதிருக்கும் வீட்டின் கடனே வங்கியில் நிலுவையில் இருந்தது. சாரதியின் மாத வருமானம் வீட்டை சமாளிக்க, பிள்ளைகளைப் படிக்க வைக்க என வாய்க்கும் கைக்கும் போதும் படியாய் இருந்தது. மாறன் இப்போது தான் ஒரு வேலையில் அமர்ந்து கல்வி கடனைக் கட்டிக்கொண்டிருக்கிறான். மகளுக்கென லோகநாயகி ஒரு ஐந்து பவன் நகை சேர்த்து வைத்திருந்தார். இதுதான் தன்னுடைய குடும்பத்தின் தற்போதைய நிலைமை. அவர்கள் குடும்பம் அளவு கனவிலும் கூட தங்களால் பணத்திலும், சொத்திலும் உயர முடியாது என முதன்முதலாக மூளை விழித்துக்கொண்டது. மூளை பேச பேச காதல்கொண்ட இதயம் கொஞ்சம் கொஞ்சமாய் மறித்துக் கொண்டிருந்தது.

“நீங்க சொல்றதும் சரிதான் லீலா. நம்ம வசதிக்கும் ஏத்த மாதிரி பார்க்குறதுதானே முறை. அப்போதான் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும் மரியாதை, நமக்கும் கௌரவம்...” என்று கோசலை பதிலளித்தார்.

இதுவரை தனக்கும் தனஞ்செயன் குடும்பத்திற்கும் மனம் கண்டறியாத ஆயிரம் வேறுபாடுகளை மூளை குறிப்பிட்டுக் காட்ட, இவளுக்கு தங்களது நிலை புரிந்தது. எந்த வகையிலும் அவர்கள் குடும்பத்துடன் தங்கள் வீட்டின் உறவு என்பது இப்போது கோசலை பார்த்த அருவருப்பான பார்வைப் போல எனத் தோன்றியதும் தொண்டை அடைத்துப் போக, விழிகளில் ஒரு சொட்டு நீர் கீழே விழுந்து, உயிரையும் உடலையும் மொத்தமாய் உருக்கியிருந்தது. லேசாய் கை கால்கள் எல்லாம் மரத்துப் போனது போல உணர்ந்தாள் மலர்விழி. அந்த இடத்தில் நிற்பதே நெருப்பில் நிற்பதை போல சுட்டது, உண்மையும் கூட.

“ஏன் லீலா, ரொம்ப நாளா நானும் கேட்கணும்னு நினைச்சேன். இன்னும் கொஞ்ச வருஷத்துல சுமித்ராவும் படிப்பை முடிச்சுடுவா. நம்ம தனாவுக்கு அவளைப் பேசலாம்னு எனக்கொரு எண்ணம்...” கோசலைத் தன் மனதிலிருப்பதை உரைக்க, லீலாவதியின் முகத்தில் புன்னகை தான்.

“அட! நம்ம சுமித்ராவை மருமகளாக்கிக்க எனக்கென்ன தயக்கம். ரொம்ப அமைதியான பொண்ணு. நம்ம வீட்டுப் பொண்ணு அவ! நான் எப்படி வேணாம்னு சொல்லுவேன். சுமி படிப்பை முடிக்கட்டும். தனாவுக்கு ஓகேன்னா, அவதான் நம்ம வீட்டு மருமக!” என்ற லீலாவிற்கும் சொந்தத்திலயே மகனுக்குத் திருமணம் முடிந்தால் அத்தனை சந்தோஷம் எனத் தோன்றியது.

“சாரி விழி, வெயிட் பண்ண வச்சுட்டேனா? சாரி மா...” முகத்தைச் சுருக்கி விழிகளை சிமிட்டி சிரித்தபடி தன் கையில் விராலியை வைத்தவனின் முகத்தை ஆதியும் அந்தமுமாய் வலியுடன் மனதில் சேமித்தாள் மலர். அவன் விழிகளைப் பார்த்தால் அழுது கதறிவிடுவோம் என உள்மனம் எச்சரித்து தொலைத்தது. தலையைக் குனிந்துகொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.

“என்னப்பா தனா, எப்படி இருக்க?” கோசலை வினவுவது இவளுக்கும் கேட்டது.

“நான் நல்லா இருக்கேன் அத்தை. நீங்க மாமா, சுமி, காயு எல்லாரும் எப்படி இருக்காங்க?” தனாவும் புன்னகையுடன் பதிலளித்தான்.

“எல்லாரும் நல்லா இருக்கோம் பா. அத்தை உன்கிட்ட ஒன்னு கேட்கணும்...” பீடிகையுடன் ஆரம்பித்தவர், “யாரையாவது காதல் கீதல் எதுவும் பண்றீயா பா?” என வினவினார். அவரது கேள்வியில் ஒரு நொடி திகைத்தவன், தாயைப் பார்த்து முறைத்துவிட்டு அவரிடம் திரும்பினான்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை அத்தை...” இவன் பதிலளிக்க,

“அப்போ, அம்மா அப்பா பார்க்குற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பீயா?” விடாது கோசலை கேட்க, லேசாய் எரிச்சல் வந்தது அவனுக்கு. இப்போது எதற்கு இந்தக் கேள்வி என.

“ஆமா அத்தை, என் அம்மா பார்க்குற எந்தப் பொண்ணா இருந்தாலும் அவங்களைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்...” என்றவன் அறைக்குள் நுழைய, இரண்டு பெண்மணிகளுக்கும் சந்தோஷம் தாளவில்லை.

“எனக்குத் தெரியும் லீலா, நம்ம பையன் தங்கம். இருந்தும் இந்தக் காலத்துல பொண்ணுங்க சரியில்லை. பணக்காரப் பையனா இருந்தா, காதல், கல்யாணம்னு பண்ணி வளைச்சுடுவாங்க. அதான் கேட்டேன்!” என்று கூறினார்.

மலர்விழி வாசலைத் தாண்டினாலும், ஒரு நொடி தனாவின் பதிலுக்காக நின்றாள். அவனது பதிலில் மொத்தமாய் இதயம் நொறுங்கிப் போக, தொண்டை வரை வந்தக் கேவலையும் அழுகையும் அடக்க, வாயில் கையை வைத்துப் பொத்தினாள்.

போதாதற்கு கோசலையின் பேச்சு அவளை மேலும் சிதைத்திருந்தது. வீட்டு வாயிலைத் தாண்டும்போதே தனாவின் மீதான தன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்திற்கு வந்திருந்தாள். கோசலை அப்படி கூறியதும், தன் காதலை விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தால், இப்படித்தான் கூறி இருப்பார்களோ? என மனம் கதறியது. அவர்கள் கூறுவது போல்தான் சுற்றியுள்ள அனைவரது கண்களுக்கும் தெரிவோம் என உண்மை உறைக்க, விழிகளில் குபுகுபுவென நீர் பொங்கி வழிந்தது.

தனஞ்செயனை தன் வாழ்விலிருந்து வெளியேற்ற வேண்டும் என முடிவெடுத்து இருந்தாள். ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை என ஒவ்வொரு நாளும் அவனின் நினைவுகள் அவளைக் கொன்று குவிக்கும் என பாவை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வீட்டிற்குச் சென்றவள் இரண்டு நாட்கள் யாரிடமும் பேசவில்லை. உடல்நிலை சரியில்லை எனப் பொய்க் கூறிவிட்டாள். முழுதாய் இரண்டு நாட்களும் அழுகையில்தான் கரைந்தாள். வெறும் கற்பனையில் அவனுடன் வாழ்ந்த வண்ணமயமான வாழ்க்கை மொத்தமும் காற்றில் கலந்த கானலாய் மறைந்து போயிருந்தது. லீலாவின் பேச்சும் கோசலையின் வார்த்தைகளும் காதில் மாறி மாறி ஒலித்து அவளை உடையச் செய்திருந்தது.

மூளை அவர்கள் பேசிய பேச்சின் நியாயங்களை அடுக்கியது. காதல் என எண்ணும்போது துரும்பாய் தெரிந்த விஷயங்கள் எல்லாம் இப்போது திருமணம் என்னும் பேச்சில் பூதாகரமாய்த் தோன்றியது. அப்படி தன் ஆசைப்படி திருமணம் முடிந்தால் கூட கோசலையின் பார்வைப் போல்தான் தங்கள் குடும்பத்திற்குரிய மரியாதையும் அங்கு கிடைக்கும் என்ற எண்ணம் அவளது நிம்மதியை மொத்தமாய் பறித்திருந்தது. இரண்டுநாட்கள் கஷ்டப்பட்டு மனதை தேற்றி இந்தத் தனஞ்செயனுக்குத் தன்னுடைய வாழ்வில் எந்த இடமும் இல்லை என முடிவெடுத்திருந்தாள்.

ஏனோ காதலைவிட குடும்பத்தின் மரியாதை பெரிதாய்ப்பட்டது. அதைவிட அவளது சுயகௌரவமும் சுயமரியாதையும் எங்கும் எதிலும் இறங்கிப் போக இடம் கொடுக்கவில்லை. திருமணம் முடிந்தால் கூட காலம் முழுவதும் தங்களது குடும்பம் அவர்களிடம் அடிபணிந்து போவது போலத்தான் சூழ்நிலை அமையும்.

அவர்கள் அளவிற்கு தங்களால் சீர், வரதட்சணை என்று எத்தனையோ விஷயங்கள் எதையும் செய்ய முடியாது என உண்மை உறைத்தது.‌ தனாவின் குடும்பத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஆயிரம் வேறுபாடுகளை மூளை அடுக்கியது. கண்டிப்பாய் இதெல்லாம் திருமணப் பேச்செடுக்கும் போது விஷ்வரூபமாகிவிடும்.

சாரதியும் லோகநாயகியும் மகளுக்காக என எங்கும் தயங்காமல் ஒரு படி இறங்கும் ரகம்தான். ஆனால், மலர்விழி அதை அறவே வெறுத்தாள். தனக்காக தன் குடும்பம் எங்கேயும் இறங்கிவிடக் கூடாது என உறுதியாய் நினைத்தவள், தன் காதலை மொத்தமாய்ப் புதைத்திருந்தாள்.

இந்த நிகழ்வு நடந்து முடிந்த ஒரு மாதத்தில் தேர்வுகள் வந்திருக்க, மலர்விழியால் எதிலும் கவனத்தை திசை திருப்ப முடியவில்லை. மூளையும் மனமும் தனஞ்செயனும் அவனது குடும்பமும், தங்கள் குடும்பம் என அதை சுற்றி மட்டுமே நிரம்பியிருந்தன.

மலர்விழி தனஞ்செயனையும் அவனது குடும்பத்தையும் தவிர்த்துவிட்டாள். அவனைக் காணும் அனைத்து சந்தர்ப்பத்தையும் மறுத்துவிட்டாள். ஆனால், எதிர்பாராது சந்திக்க நேர்ந்தால் இவள் கண்டும் காணாது செல்ல, தனஞ்செயன் அவளை விடவில்லையே. எப்போதும் போல அழைத்துப் பேசுவதும், பள்ளி படிப்பைப் பற்றிக் கேட்பதுமாய் இருந்தான். ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லித் தப்பித்துவிடுவாள்.

ஆடவனைக் காணும்போது மனதிலெழும் வேதனையையும் வலியையும் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தனா கோசலையிடம் கூறிய பதிலே அவளை சோர்வடையச் செய்ய காரணமாகிப் போனது. அவன் மீது தவறில்லை என்றாலும் யார் மீதும் காண்பிக்க முடியாத கோபத்தை மனதில் வைத்து மன அழுத்தத்தை உண்டாக்கியிருந்தாள்.

நடந்ததைக் கூறி முடித்து மலர் கரங்களால் முகத்தை மூடி அழ, இங்கே மாறன் கண்களில் நீர் வழிந்தது. இவளும் அழுகையில் குலுங்கினாள். அவன் தங்கையை வேதனையுடன் பார்த்தான்.

அவளது அழுகைப் பொறுக்காதவன், இழுத்து அணைத்துக் கொண்டான். குடும்பத்திற்காக என எல்லாவற்றையும் யோசித்து, காதலித்தவனை வேண்டாம் என தூக்கியெறிந்தத் தங்கையை நினைத்து மனம் ஒருபுறம் சந்தோஷம் கொண்டாலும், அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு அமைத்துத் தர முடியாத தங்களது ஏழ்மை நிலையை எண்ணி கழிவிரக்கம் தோன்றியது.
 
Administrator
Staff member
Messages
1,263
Reaction score
3,702
Points
113
“சாரி மலர், எங்களால நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சுத் தர முடியாது டா!” என்ற மாறனுக்கு மனது அத்தனை வலித்தது.

குரல் முழுவதும் வேதனையுடன் கூறிய தமையனை நிமிர்ந்து பார்த்த விழி, “ப்ம்ச்... மாறா, நான்... நான் தனாவை மறந்துட்டேன்.‌ அவங்க சொன்னாலும் சொல்லலைனாலும் அதானே நிஜமும் கூட. அவங்க எல்லா விதத்திலும் நம்மளைவிட வேற. அது எனக்கு எப்பவோ புரிஞ்சது. என் மனசை நான் மாத்திக்கிட்டேன்...” என அவனுக்கு ஆறுதல் கூறியவளைப் பார்த்து மாறனுக்குத் தொண்டை அடைத்தது.

"சாரி மலர்..." என்றவன் வேறு எதையும் கூறாது வெளியேறிவிட்டான்.

மாறனிடம் கூறியது போல மலர்விழி தனாவை மறந்துவிட்டதாக தமையனை நம்ப வைத்தாள். அவளது மனதிலிருந்த பாரத்தைக் குறைத்து முடிந்த அளவிற்கு தங்கையை சந்தோஷமாய்ப் பார்த்துக்கொண்டான் அண்ணன். அவளும் நடந்ததை மறக்க தினமும் முயற்சி செய்வாள். ஆனால், இந்த தனஞ்செயனை மட்டும் எண்ணாத நாள் அவளது வாழ்க்கையில் குறைவு என்னும் அளவிற்கு மனம் சிந்தை முழுவதும் தனஞ்செயன்தான். அதை மாறனிடம் மறைத்துவிட்டாள்.

அவன் சம்பந்தபட்ட பொருட்கள், நாட்குறிப்பேடு என அனைத்தையும் ஒரு பையில் வைத்து மூட்டைக் கட்டி பரணி மேலேற்றிவிட்டாள். தங்கை எதையும் தூக்கிப் போடவில்லை என மாறனும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். கண்டிப்பாக மலருக்கான நேரமும் இடைவெளியும் வேண்டும். அவளே தேறி வருவாள் என அவனும் விட்டுவிட்டான்.

அதே போல தனஞ்செயனுடனான அவன் நட்பையும் சந்திப்பையும் முடிந்த அளவு குறைத்தான். தனா வீட்டிற்கு செல்வதையும், அவன் இங்கே வர விடுவதையும் குறைத்துக்கொண்டான். தனாவிற்கு அப்போதுதான் தொழில் தொடங்கிய நேரம். அதில் தன் காலை நன்றாய் ஊன்ற வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவன், மாறன் விலகலை கவனிக்கத் தவறியிருந்தான்.

அதன்பின்னர் ராமலிங்கம் புதிதாய் பெரியதாக ஒரு வீட்டைக் கட்டி அந்த வீட்டிற்கு மாறிவிட, மாறனுக்கு நிம்மதியாய் இருந்தது. தங்கை கண்டிப்பாக தனா விஷயத்திலிருந்து மீண்டுவிடுவாள் என ஆசுவாசம்கொண்டான்.

மலர்விழியும் முடிந்த அளவு மனதை எதிலாவது திசை திருப்பினாள். நன்றாகப் படித்து ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாள். இளங்கலையை வெற்றிகரமாய் முடித்து முதுகலையும் சேர்ந்தாள். இடையில் தனஞ்செயனை சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. தனாவும் இங்கே வர முடியாத சூழ்நிலையிலும் வேலையிலும் சிக்கிக் கொள்ள, இரண்டு குடும்பத்திற்கும் இடைவெளி பெரிதானது.

ஆனால், மலர்விழி மனம் மட்டும் தனாவைத் தவிர யாரையும் ஏற்காது என அவளுக்குப் புரிந்தது. அதை மாறனிடம் வெளிப்படுத்தி அவனைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என இயல்பாய் இருக்கக் கற்றுக் கொண்டாள்.

அப்படியிருக்கையில் திடீரென வீடு சேர்ந்த தனஞ்செயனின் பத்திரிக்கை அவள் மறந்துவிட்டதாய் நினைத்திருந்த அத்தனையும் நினைவுப்படுத்தியது. அந்தப் பத்திரிக்கை வீட்டிற்கு வந்த அன்று மலர் இரவு தூங்கவே இல்லை. கண்ணீரில் கரைந்தாள் என்பது அவள் மனம் மட்டுமே அறிந்த உண்மை.

மாறன் கூட தனஞ்செயன் திருமண விஷயம் கேள்விப்பட்டு தங்கையைக் கவனிக்க, அவள் எதுவும் என்னைப் பாதிக்கவில்லை என்றுதான் நடந்து கொண்டாள். ஆனாலும் அவளது அழுத முகம் அனைத்தையும் காட்டிக் கொடுத்தது‌. எதிர்பார்த்த ஒன்று தானே தனா, சுமியின் திருமணம்? கண்டிப்பாக தனா திருமணம் முடிந்தால் மலர் அவனை மறந்துவிடுவாள் என மாறன் நினைத்தான்.

திருமண நாள் நெருங்க நெருங்க ஒவ்வொரு நாளும் மலர்விழி அனுபவித்த சித்திரவதைகளும் வலியும் வேதனைகளையும் அந்த நாட்குறிப்பேட்டில் நிரப்பி இருந்தாள். படித்துக்
கொண்டிருந்த தனஞ்செயன் விழிகளில் லேசாய் கண்ணீர் திரையிட்டது. அதை துடைத்துக்கொண்டு தொடர்ந்து படித்தான்.

அப்படியிருக்கையில்தான் தனஞ்செயன் மலர்விழி திருமணம் எதிர்பாராது நடந்திருந்தது. அப்போது கூட மலர் நடந்த அனைத்தையும் நினைத்து திருமணம் வேண்டாம் என உறுதியாய் நின்றுவிட, “மலர், நீ தனாவைதான் கல்யாணம் பண்ணிக்கணும். அவனோட மட்டும்தான் நீ சந்தோஷமா வாழ்வ!” என மாறன் தன் பிடியிலே நின்று தங்கையை சம்மதிக்க வைத்திருந்தான் என அன்று அவர்களுக்குள் நடந்த உரையாடலையும் எழுதி இருந்தாள்.

கடைசியாக தங்கள் இருவரது திருமணமான புகைப்படத்தையும் வரைந்து வைத்திருந்தாள். எல்லாவற்றையும் பார்த்த தனஞ்செயன் முகம் இறுகிப் போனது. மேலும் அந்தப் பையில் என்னென்ன இருக்கிறது என ஆராய்ந்தான்.

எல்லாமே அவன் மட்டுமே அந்தப் பை மட்டுமல்ல! மலர்விழியும் தனஞ்செயனால்தான் நிறைந்திருக்கிறாள் என நினைத்ததும் இன்னும் மனதும் உடலும் இறுகிப் போக, கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். நடந்த அனைத்தையும் அவள் கூறியதையும் இணைத்துப் பார்த்தான்.

கல்லூரி முடிந்தும் கூட தனஞ்செயன் - மாறன் நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், இடையில் மாறன் தன்னிடமிருந்து விலகுவதைப் போலொரு எண்ணம் வந்தது தனாவிற்கு. ஆனால், அது தன் கற்பனையென எண்ணி ஆராயாமல்விட்ட தன் தவறை எண்ணினான்‌.
பின்னர் அனைத்தையும் எடுத்து அந்தப் பையிலேயே வைத்து எடுத்த இடத்தில் பத்திரமாய் வைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தான். நேரம் நள்ளிரவு இரண்டு மணியென காட்டியது.

விளக்கு ஒளியில் சிறிது நேரம் மலர்விழி முகத்தையேப் பார்த்தான். பின்னர் அவளருகே தனா படுக்கவும், கணவனின் வாசத்தை உணர்ந்தவள், லேசாய் அசைந்து படுத்தாள். தனாவிற்கு உறக்கம் பறிபோனது. அங்கும் இங்கும் அசைந்து படுத்த விழி, இவனருகே வந்து நெஞ்சில் தலையை சுகமாய் சாய்த்தாள். அவன் உடல் சூட்டை இவள் உணரவும், கதகதப்பில் கணவனை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள்.

தனஞ்செயன் பதிலுக்கு அவளை அணைக்கவில்லை. இறுகிய முகமும் அழுத்தமான விழிகளுடனும் அவளைப் பார்த்தவாறே சிறிது நேரத்தில் உறங்கிப் போனான்
 
Well-known member
Messages
564
Reaction score
389
Points
63
காதல் படுத்தும் பாடு
 
Top