கைப்பேசி விடாமல் இசைத்துக் கொண்டே இருந்தது. ஆழ் நித்திரையின் கைப்பிடியில் ஆட்கொள்ளப்பட்டிருந்த அமுதாவோ “அதுக்குள்ள அடிச்சிடுமே!! எவன்தான் இந்த அலாரத்தை கண்டுபிடிச்சானோ!!!” புலம்பிக் கொண்டே புரண்டு படுத்து கையில் சிக்கிய கைப்பேசியை பார்த்த பொழுதுதான் உணர்ந்துக்கொண்டாள் அழைத்தது அலாரம் இல்லை அம்மாவென்று.
‘இவங்க எதுக்கு இந்த நேரத்துல கூப்படறாங்க?? தினமும் சாயந்திரம் அதுவும் நானா கூப்டாலே ‘அப்புறம் வேற என்ன?’ இதைத் தவிர எதையுமே தானா ஆசையா பேசாதவங்களாச்சே!!!’ இவ்வாறான யோசனையுடனே காலை கட்செய்து இவளாக அழைத்தாள்.
“சொல்லுங்க மா. குட் மார்னிங்.”
“வெரி குட் மார்னிங் அம்மு. எழுந்துட்ட தானே??”
“என்ன நக்கலா?? எழுப்பிவிட்டுட்டு எழுந்துட்டியானு ஒரு கேள்வி! வெறுப்பேத்தாம விஷயத்துக்கு வாங்க” கடுப்பாகிவிட்டாள் அமுதா.
பின்ன, கடந்த இரண்டு மாதங்களாக ஏழு மணிக்கு முன்னால் கண்டிப்பாக தூங்கி எழும்பி விடவேக்கூடாதென்ற கொள்கையை தவறாமல் கடைப்பிடித்து வருபவளை ஆறு மணிக்கே எழுப்பிவிட்டுவிட்டு இப்படி ஒரு கேள்வியும் கேட்டால்?
“நான் எவ்ளோ சந்தோஷமான செய்தியை சொல்ல கூப்டேன், நீ என்னனா எம்மேலயே எறிஞ்சி விழறே!”
“செய்தியை வாசியுங்க முதல்ல. அதுக்கு அப்புறம் நான் சொல்றேன் அது சந்தோஷமா இல்ல சர்வ மோசமானு.”
“சொல்றேன் சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாடி நீ எழுந்து குளிச்சு பக்கத்துல கோயில் இருக்குனு சொன்னியே, அங்கே போய் சாமி கும்மிடுட்டு வா. நான் மறுபடியும் கூப்டுறேன். ம் அப்புறம்… சரி வேணாம், நீ மொதல்ல நான் சொன்னத செஞ்சிட்டு வா.”
ஒன்றுமே புரியவில்லை அமுதாவிற்கு. ஆனால் கோபம் வந்துவிட்டது.
“ஏம்மா.. காலங்காத்தால கடுப்பேத்தனே கால் பண்ணீங்களா?? என்ன விஷயம்னு சொல்லித்தொலையுங்க ப்ளீஸ்” குரல் உயர்ந்திருந்தது.
ஆனால் பாவம் அவள்,அவளின் அம்மா அவர் பேசி முடித்த மறுநொடியே அழைப்பை துண்டித்திருந்தார்.
அமுதாவின் கோபம் இப்போது பெருங்கோபமாக உருமாறியிருந்தது. மனதிற்குள் பலவாறான புலம்பல்கள் துவங்கின. ‘அப்படியென்ன விஷயத்தை சொல்லிடப்போறாங்க. எவனாவது ஒரு கேனையனோட ஜாதகம் பொருந்தியிருக்கும். உடனே போட்டோ அனுப்பனும் இதுவாகத்தானே இருக்கும்.’ ‘ஒரு பெண் பிள்ளைக்கு நல்லது செய்றதுனா அவளுக்கு கல்யாணம் செய்றதுதான். என்ன ஒரு அறிவாளி சமூகம்.சை.’ இப்படிப்பட்ட புலம்பல்களுக்கு இடையே எதேர்ச்சியாக அவளது விழிகள் சுவர் கடிகாரத்தில் பதிந்தன.
“டைம் ஏழரையா?? புலம்பலே நீ மட்டும் என்னைவிட்டு கிளம்பலே..அவ்ளோதான்” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தினமும் செய்யும் காலை வாக்கிங்கிற்கு தயாராகி நடக்கத் தொடங்கினாள்.
முசோரிக்கு வந்த இந்த இரண்டு மாதங்களாக அவள் செல்லும் அதே பாதை. பழகிய பாதையாதலால் அவளின் நீல நிற ஷூக்களால் மறைக்கப்பட்டிருந்த பாதங்கள் தடையின்றி சென்றுக்கொண்டிருந்தன.
சிறிது தூரத்திற்குப் பின் எப்பொழுதும் போலவே இப்போதும் கால்களுடன் சேர்ந்து அவளின் கண்களும் “way to LAL BAHADUR SHASTRI NATIONAL ACADEMY OF ADMINISTRATION” என்ற வழிகாட்டி பலகையின் முன் நின்றன. கண்கள் கலங்க நினைவுகளின் பாதையில் பின்னோக்கிச் சென்றாள் அவள்.
அமுதாவின் பள்ளி காலத்தில் என்று அவள் சிவிக்ஸ்(civics) என்ற பாடத்தை முதல் முறையாக படித்தாளோ அன்று துவங்கியது அவளின் ‘அமுதா ஐ.ஏ.எஸ்’ என்ற கனவு. அன்றிலிருந்து அவளால் முடிந்தவரை அதற்காக என்னென்ன செய்யவேண்டும், படிக்கவேண்டும் போன்ற செய்திகளை சேகரிக்கத் துவங்கினாள். அவளது கனவைப் பற்றி அவளின் பெற்றோரிடம் கூறினால் “ஒழுங்கா படிச்சு பர்ஸ்ட் ரேங்க் எடு முதல்ல”என்று வாயை அடைத்துவிடுவர். அமுதாவிற்கு பொதுஅறிவு அதிகம். பள்ளிப் பாடங்களையும் பிடித்து, புரிந்து படிப்பாள். ஆனால் மக் அடிப்பது துளியும் வராது.அப்படியிருக்க முதல் ரேங்க் எப்படி வரும்!
ஆனால் இதையெல்லாம் அதிக பாசமிருந்தும் பிள்ளையின் படிப்பிலோ விருப்பத்திலோ அத்தனை ஆர்வம் காட்டாத அவளின் நடுத்தர வர்க பெற்றோர் கவனித்திருக்கவில்லை.
இருந்தும் அமுதா அவளின் கனவை தகர்த்தெறியவில்லை. பள்ளிப் படிப்பை மெடிக்கல் கட்-ஆஃப்பிற்கு சற்றே குறைவான கட்ஆஃப்வுடன் முடித்தாள்.
‘எந்த டிகிரி சேர்ப்பது, எந்த கல்லூரி’போன்ற கேள்விகள் எழுந்தபோது “அம்மா நான் BA SOCIOLOGY சேர்ந்து படிக்கிறேன் மா” என்றாள் அமுதா. யு.பி.எஸ்.ஸீ மெயின்ஸ் தேர்விற்கு இது பெரிதாக உதவக்கூடிய ஒரு பாடம். அவளுக்குத் தெரியும் ஐ.ஏ.எஸ் (யு.பி.எஸ்.ஸீ) தேர்வு கோச்சிங் சேர்வதெற்கெல்லாம் அதிகம் செலவாகுமென்று. அதனால் கல்லூரி படிப்பையே அவளது கனவை அடைய ஒரு படிகட்டாக அமைக்க நினைத்தாள்.
அதிலும் இடி விழுந்தது அவளின் பெற்றோரின் பதிலில் “அதெல்லாம் ஒன்னும் வேணாம். இந்த சோஷியாலஜி, சைக்காலஜி எல்லாம் பணக்காரங்க சும்மா பேருக்காக படிக்குறது. நீ ஒழுங்கா என்ஜினீயரிங் சேர்ந்து படி. உன் மார்குக்கு கவர்மெண்ட் காலேஜுலயே சீட் கிடைக்கும். வேலைக்கு போனும் முதல்ல. ஐ.ஏ.எஸ் எல்லாம் அப்புறம்.”
தன் கனவை தன் பெற்றோர்களேயானாலும் அவமதிப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் “ ஏன் என்னாலலாம் ஐ.ஏ.எஸ் ஆகமுடியாதா?? கண்டிப்பா ஆவேன்” என்றாள் அமுதா அவளையும் அறியாமல் கண்களில் துளிர்த்த நீருடன்.
மகள் கண்கலங்குவதில் வேதனையுற்ற தாய் “அழாத அம்மு. நம்ம குடும்பத்துக்கு மரியாதை சேர்க்கவாச்சும் நீ ஒரு நல்ல படிப்ப படிக்க வேணாமா? நம்மகிட்ட காசு பணமா இருக்கு? யோசிச்சு பாருமா. உன் படிப்பு ரொம்பவே முக்கியம்,அதுவும் நாளைக்கு உனக்கு நல்ல வரன் வரனும்ல??” என்றார் அவளின் தலையை வருடியவாரே.
‘ஒன்னும் சொல்றதுக்கில்ல. இவங்ககிட்ட பேசி வெல்லவா முடியும். நம்ம கனவுக்கு நாம கேரண்டி. இப்போதைக்கு இவங்க சொல்ற டிகிரியில சேருவோம். சைடுல யு.பி.எஸ்.ஸீக்கு பிரிப்பேர்(prepare) செஞ்சிக்கலாம்’ இவ்வாரான திட்டமிடலுடன் அமுதாவின் கல்லூரி வாழ்வு தொடங்கிற்று.
கல்லூரி காலத்தில் கல்லூரி படிப்பிற்காகவே பாதி நேரம் செல்ல மிகவும் சொற்பமான நேரமே அவளின் யு.பி.எஸ்.ஸீ ப்ரிப்பரேஷனிற்காக அவளிடம் எஞ்சும். அந்த குறைந்த நேரத்தில் ஆசையாகவும் தீவிரமாகவும் படித்தாள். அதிகாலையில் படிக்கும் பழக்கம் அவளுக்கு பெரிதாக உதவிற்று.
ஒருவாராக கல்லூரி படிப்பை முடித்து அந்த வருடமே யு.பி.எஸ்.ஸீ சிவில் சர்வீஸ் பரீட்சையையும் எழுதினாள் அமுதா.
சிவில் சர்வீஸ் பரீட்சை கிளியர் செய்வதென்பது அத்தனை சுலபமில்லை. கோச்சிங் சேராமல் தாமாகப் படித்து தேர்ச்சி காண்பவர்கள் மிக சிலரே. இருந்தும் நம் அம்மு ப்ரிளிமினரி என்றழைக்கப்படும் பரீட்சையின் முதல் பகுதியை க்ளியர் செய்தாள். ஆனால் போதிய பயிற்சியும் சரியான வழிகாட்டுதளும் இல்லாததால் இரண்டாம் பகுதியான மெயின் பேப்பர்ஸில் தேர்ச்சி பெறவில்லை.
ஆயினும் அமுதா மனம் தளரவில்லை. அவளின் பெற்றோர் வேலைக்குச் செல்ல சொல்லியும் செல்லாமல் வீட்டிலிருந்தே படித்து அடுத்த வருடம் மீண்டும் பரீட்சை எழுதினாள். இம்முறை இரண்டு பகுதிகளையும் க்ளியர் செய்தவள் இறுதிப் பகுதியான நேர்முகத்தேர்வில் திண்டாடிப்போனாள். க்ளியர் செய்யவில்லை. சோர்ந்துப் போனாள் அவள்.
ஆறுதலாகச் சாய தோள்தேடி பெற்றோரை நாடினால் “இதுக்குத்தான் படிச்சு படிச்சு சொன்னது. கேட்டாதானே. இரண்டு வருஷம் வேஸ்டு. பேசாம மாப்பிள்ளை பார்க்குறோம்,கல்யாணம் பண்ணிக்கோ. அது வரைக்கும் ஏதாச்சும் பேங்க் கோச்சிங் போய் எக்சாம் எழுது” என்ற பதிலே வந்தது. யு.பி.எஸ்.ஸீ க்ளியர் செய்து லால் பகதூர் சாஸ்திரீ அகாதமியில் ட்ரெயினிங் எடுக்கவேண்டியவளை ‘பேங்க் கோச்சிங் போ’ என்று சர்வ சாதாரணமாய் சொன்னதும் வேதனை தாளவில்லை அமுதாவிற்கு.
“ப்ளீஸ் பா. இதுதான் கடைசி முறை. எப்படியாச்சும் க்ளியர் செய்திடுறேன்." கெஞ்சியவளிடம் “சரி எழுது. ஆனா, நாங்க மாப்பிள்ளை பார்க்க தொடங்கிடுவோம். ஏதாச்சும் பொருந்துச்சுனா நீ ஒத்துக்கனும் சரியா?” பதில் கேள்வி வந்தது அவளின் தந்தையிடமிருந்து.
வேறு வழி, ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும். அவரிடம் சரியென்று சொல்லிவிட்டு, “என்ன இன்னும் நீ வீட்லயே இருக்க. வேல கிடைக்கலயா?”போன்ற கேள்விகளையும் “வீட்லயே இருக்கு.கல்யாணமும் செஞ்சிக்க மாட்டிக்குது.ஏதாச்சும் தோஷமோ” போன்ற பரிகாசங்களையும் தாண்டி, இடையிடையே பெற்றோர் காட்டிய வரன்களுக்கும் புதுப்புது வழிகளில் போக்குகாட்டி, சேர்த்து வைத்திருந்த பணத்தில் ஒரு கோச்சிங் செண்டரில் மாக்-டெஸ்டுகளை (mock test) எழுதி ஒருவாராக ப்ரிளிமினரி மற்றும் மெயின் எக்ஸாம்களை க்ளியர் செய்தாள் அமுதா.
நேர்முகத்தேர்வில் “ ஏன் ஒரு எக்ஸாமை க்ளியர் செய்ய இத்தனை அட்டெம்ட்ஸ் எடுத்துக்குறீங்க?” “ஒரு பெண்ணாக குடும்ப பாரத்துடன் சேர்த்து இத்தனைப் பெரிய பொறுப்பினை தாங்க முடியுமா உங்களால்?” போன்ற வேண்டுமென்றே சீண்டக் கூடிய கேள்விகளையும் நிமிர்வுடனே எதிர்கொண்டு தேர்வினை முடித்து வெளிவந்தாள்.
இன்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகளின் விளைவால் தான் க்ளியர் செய்து விடுவதில் சிறிது நம்பிக்கை இழந்திருந்த அமுதா, தேர்வு முடிவு அறிவிக்கப்படுவது அப்போது நாட்டில் நிகழ்ந்த ஒரு முக்கிய அரசியல் குழப்பத்தினால் இரண்டு முறை தள்ளிச் செல்லவும் மொத்தமாய் நம்பிக்கை இழந்தாள்.
‘இந்த முறையும் கிடைக்கப்போவதில்லை’என்ற முடிவுக்கு வந்தவள், ‘வேலைவெட்டிக்குச் செல்லாத வெத்துவேட்டாக’வீட்டிலிருக்கவும் பிடிக்காமல் முசோரியில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் என்.ஜி.ஓ நடத்திவரும் தன் கல்லூரித்தோழி ஒருத்தி அங்கே ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவையென்று என்றோ கூறியிருந்ததை நினைவுகூர்ந்து அவளை அழைத்தாள்.
தன் தோழியிடமிருந்தும் சாதகமாக பதில் வரவே “நான் முசோரியில வேலைக்கு போறேன். அப்படியே பேங்க் எக்ஸாமுக்கும் படிக்குறேனே ப்ளீஸ்.” கெஞ்சி கெஞ்சி பெற்றோரிடமும் ஒருவாராக அனுமதி பெற்றாள்.
இதோ முசோரிக்கு வந்து வேலையில் சேர்ந்து மாதங்கள் இரண்டும் கடந்தாயிற்று.
நினைவுகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த அமுதாவின் பேண்ட் பாக்கட்டிலிருந்தபடியே இசைத்ததுஅவளின் அலைப்பேசி. யோசனையில் இருந்தவளோ அழைத்தது யாரென்றே பார்க்காமல் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“என்ன அம்மூ. கோயிலுக்கு போயிட்டு வந்துட்டியா. பாரு உன் முயற்சி எதுவுமே வீணாகல. வெள்ளிக்கிழமை அதுவுமா இவ்ளோ நல்ல விஷயம் நடந்திருக்கு!!!”
பூரிப்புடன் ஒலித்த தாயின் குரலில் நனவிற்கு திரும்பிய அமுதா ‘அம்மா வாய்சூ.’ ‘ஹ்ம், இப்போ கோயில் ரொம்ப முக்கியம்’ ‘என்னது நல்ல விஷயமா?என்னவாயிருக்கும்?!’ இவ்வாராக மைண்ட் வாய்ஸில் மட்டுமே பேசிக்கொள்ளாமல் “என்னதான் மா நடந்துச்சு. ப்ளீஸ் சொல்லுங்களேன். டைம் ஆச்சு,நான் வேலைக்கு வேர போணும்.” என்று வினவினாள் தாயிடம்.
“ஹாஹா..என்னதூ,வேலைக்கா? இனிமே அந்த வேலை உனக்கெதுக்குடீ. அதான் ஆசைபட்ட வேலயே என் தங்கத்திற்கு கிடச்சிருச்சே.”
“என்ன மா சொல்றீங்க?”
“அடியேய் அம்மூ. நீ எழுதின ஐ.ஏ.எஸ் எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்குடீ. நேத்து நைட் பத்து மணிக்கே வந்துடுச்சாம். காலையில ஏந்திரிச்சுப் பார்த்தா அப்பா போனுல ஒரு மெசேஜ், நீ டெஸ்ட் எழுதின கோச்சிங் கிளாஸ்ல இருந்து “congratulations on the success of your child in civil services exam” அப்படீனு.”
“அம்மா..உண்மையாவா மா!!!!!????” நம்பவே முடியவில்லை அமுதாவால். இதயம் படபடவென்று அடிக்கத்துவங்கியிருந்தது. ‘சே, இப்போனு பார்த்து நம்பர் மாத்திடோமே.இல்லனா மெசேஜ் நமக்கும் வந்த்திருக்கும்!’என்றிருந்தது அவளுக்கு.
“ நிஜமாதான்மா. நீ சாதிச்சுட்ட.” அத்தனைப் பெருமை அத்தாயின் குரலில்.
‘எத்தனாவது ரேங்க்னு போய் பார்க்கனும்.நல்ல வேளை அந்த மெசேஜ் வந்தது.இல்லனா நான் ரிசல்ட எப்போ பார்த்திருப்பேனோ!’ நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியிட்டுக்கொண்டிருந்தவளிடம்
“அதுமட்டுமில்ல. கொஞ்சநேரத்துக்கு முன்னாடி கோச்சிங் கிளாஸ்ல இருந்து போன் வந்துச்சு. நீதான் தமிழ்நாட்லயே இரண்டாவது ரேங்காம். அதனால உன்னை இன்டர்வியூ எடுக்க நிறைய பேர் வருவாங்லாம். நீ அங்கே இருக்கனு சொன்னதும் உன்னை சீக்கிரமா இங்கே வரச் சொன்னாங்க. உனக்கான ப்ளைட் டிக்கெட் செலவைகூட அவங்களே ஸ்பான்சர் செய்றாங்களாம். நீ கிளம்பு மா.அதுவும் இப்போவே” பரபரத்தார் அம்முவின் அம்மா.
“என்னது உடனேவா?” அமுதாவால் இன்னமும் நடப்பவற்றிற்குள் பொருந்த முடியவில்லை. ‘இதெல்லாம் கனவா மட்டும் இருக்கக்கூடாது சாமீ…’ வேண்டிக் கொண்டே நிமிர்ந்தவளின் பார்வையில் பட்டது அந்த ‘way to LAL BAHADUR SHASTRI NATIONAL ACADEMY OF ADMINISTRATION’ என்ற பலகை “உடனே வா”என்று அவளிற்கு அழைப்பு விடுக்கும் விதமாக!
--------
[பி. கு: இக்கதை 2019ல் எழுதப்பட்டது]
கதை எப்படி? அமுதாவை பிடிச்சுதா உங்களுக்கு? - சொன்னீங்கனா பதிவர் மகிழ்வார்! 