• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,049
Reaction score
3,001
Points
113
இஷ்டம் – 3 💖
அந்த மாதம் யாருக்கும் நிற்காமல் கடந்து போயிருந்தது. ரகுராமிற்கு மாதத்தின் கடைசி வாரம் எப்போதும் இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது‌. காயத்ரிக்கு முதல் வாரம் இரவுப் பணி. எனவே இருவரும் சந்திக்க சந்தர்ப்பங்கள் வெகு குறைவே. இவளாக அவனைத் தேடி செல்ல மாட்டாள்.
ரகுவின் வீட்டிற்கு கடைசியாய் எப்போது சென்றோம் என காயத்ரி மூளையின் கடைசி அடுக்கு வரை தூசி தட்டினாலும் நினைவடுக்கில் ஏதுமில்லை. அவளாகவே அங்கு செல்வதை நிறுத்தி பற்பல ஆண்டுகள் கடந்திருந்தன. அவனுமே என்ன? ஏன்? எதற்கு என எத்தனையோ கேள்விகளை முன் வைத்து அவளிடம் தோண்டித் துருவி கேள்வி கேட்க, சிரித்தே மழுப்புவதுதான் பெண்ணின் வழக்கம். ஒரு கட்டத்தில் ரகுவே சரி போ என விட்டுவிட்டான். அதற்காகத் தோழியைப் பார்க்காமல் இல்லை. வாரத்திற்கு இரண்டு முறையாவது இங்கு வந்து அவளைப் பார்த்துவிட்டு செல்வான்.
ரகு இளங்கலை மருத்துவம் முடித்துவிட்டு தந்தை இதய சிகிச்சை நிபுணராகப் பணியாற்றும் அதே மருத்துவமனையில் பணிபுரிகிறான். காயத்ரியும் ரகுராமும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில்தான் இளங்கலை முடித்திருந்தனர். இவன் மருத்துவம் தேர்ந்தெடுக்க, காயத்ரி அவளது மதிப்பெண் அடிப்படையில் துணை மருத்துவப் படிப்பான மருந்தியல் துறையைத் தேர்வு செய்திருந்தாள்.
இருவரும் ஒரே கல்லூரி எனினும் ரகுவிற்கு காலை ஏழு மணிக்கே வகுப்பு தொடங்கிவிடும். இவளுக்கு பத்து மணிக்குத்தான் துவங்கும். மாலை இருவருக்கும் நான்கு மணிக்கு என பொதுவான நேரத்தில் முடிய, வீட்டிற்கு வரும் பொழுதை தங்களுக்கென ஒதுக்கியிருந்தனர். பள்ளி முதல் கல்லூரி வரைத் தொடந்த நட்பு, அதற்குப் பின்னும் எந்த இடத்திலும் தேங்கி நிற்கவில்லை. விருட்சம் போல இன்றைக்கு அழுத்தமாய் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கிறது. காயத்ரி மெனக்கெட்டு அவனைக் காண செல்ல மாட்டாள். ஆனால் ரகு அவளுக்காக வருவான். வாரத்தில் இரண்டு முறையாவது தோழியைப் பார்த்து அவளது நலம் நாடி செல்வான். அவளுக்கு தேவையானவற்றை அவனாகப் பார்த்து நேசத்துடன் செய்வான். அவள் மறுக்க மாட்டாள். ஆனாலும் பெரிய பெரிய உதவிகளை, பரிசு பொருட்களை காயத்ரி ஏற்றுக் கொள்ள மாட்டாள். அவளுக்கு விலையுயர்ந்த பொருட்களை நட்பின் நிமித்தமாகக் கூட பரிசாய் பெருவதில் விருப்பமில்லை.
ரகு வேலைக்குச் சென்ற முதல் மாதத்தில் இவளுக்கு அலைபேசி ஒன்றை வாங்கிப் பரிசளிக்க, பெண் அதை வாங்க மாட்டேன் என சாதித்திருந்தாள். அவனுக்கு கோபம் எனினும், சரியென்று விட்டுவிட்டான். அவள்தான் அவனுக்கு முன்பே படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சென்றது. அவனுக்காக உடைகள், கைக்கடிகாரம், காலணி என வாங்கிக் கொடுத்தவளின் பட்டியல் இன்னுமே நீண்டு கிடந்தது. அத்தனையிலும் அவளுக்குத் தன் மீதான அன்பே பிரதானமாய் இருந்ததில் ரகு பெரிதாய் அலட்டிக் கொள்ளாது அனைத்தையும் பெற்றுக் கொண்டான். இப்படி சிறு சிறு விஷயத்தில் கூட எங்கேயும் தன்னை விட்டுக் கொடுக்காத உறவு அவர்களுடையது.
அன்றைக்கு குளித்து முடித்து மருத்துவமனை செல்லத் தயாரான ரகுராம் தட்டிலிருந்த இடியாப்பத்தையும் தேங்காய் பாலையும் ரசித்து ருசித்து உண்டு கொண்டிருந்தான். மகன் உண்ணுவதை வாஞ்சையாகப் பார்த்த கௌதமி, “இன்னொரு இடியாப்பம் சாப்பிடு டா...” என்றார்.
அவர் முன்னே வேகமாய் கரத்தை நீட்டியவன், “நோ மா, இப்பவே ஸ்டமொக் ஃபுல். இதுக்கும் மேல சாப்பிட முடியாது!” என தலையை அசைத்தவன் கையைக் கழுவிவிட்டு தந்தை அறையை எட்டிப் பார்த்தான். ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் மனிதர்.
“நைட் ஆப்ரேஷன் முடிஞ்சு லேட்டாதான் வந்தாரு டா. அதான் டயர்ட்ல தூங்குறாரு...” என்ற தாயிற்கு தலையை அசைத்துவிட்டு வந்து மீண்டும் இருக்கையில் வந்தமர்ந்தான். உணவு உண்ண வரும்போதே ஏதோ பேச வாயெடுத்த கௌதமி மகன் உண்டு முடியட்டும் என அமைதி காத்தார்.
“சொல்லுங்கமா... என்ன பேசணும்?” என்றான் மகன் புன்னகையுடன்.
“ராம்... போன வாரமே நான் உன்கிட்ட சொன்னேன் இல்ல. உனக்கு குரு பெயர்ச்சி நல்லா இருக்கு. இப்போ கல்யாணம் பண்ணா வாழ்க்கை அமோகமா இருக்கும்னு ஜோசியர் சொன்னாரு டா. நான் கூட போன வாரம் சொன்னேனே!” என்ற தாயிடம் நினைவிருப்பதாய் தலையை மென்மையாய் அசைத்தான்.
“நம்ப நளினி பொண்ணு சைந்தவி இருக்கால்ல... படிப்பை முடிச்சிட்டு டாக்டரா வேலை பார்க்குறா போல. ரொம்ப லட்சணமா அழகா இருந்தா டா. நான் சரின்னு அப்படியே பேச்சுவாக்குல மாப்ளை பார்க்குறீங்களான்னு கேட்கவும், நளினியும் ஆமான்னு சொன்னாங்க. உன் போட்டோ ஜாதகத்தைக் கொடுத்துட்டு பொண்ணு போட்டோவும் ஜாதகமும் வாங்கிட்டு வந்து ஜோசியர் கிட்டே காட்டுனேன். பொருத்தம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரு. உங்கப்பாகிட்டே பேசிட்டுதான் செஞ்சேன். அவருக்கும் பொண்ணையும் அவரோட குடும்பத்தையும் பிடிச்சிருக்கு. சந்தனவேல் அண்ணாவுக்குப் பிறகு அவரோட ரெண்டாவது பையன் மினிஸ்டராகிட்டான் போல. நல்ல இடம் டா, அவங்களுக்கும் ஓகேன்னு சொல்லிட்டாங்க. நீ ஒரு தடவை பொண்ணைப் பார்த்து பேசிட்டு வாடா. உனக்குப் பிடிச்சா மேற்கொண்டு பேசலாம்!” மூச்சு விடாமல் பேசிய தாயை இவன் அயர்ந்து பார்த்தான். சென்ற வாரம் அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவன் அவர் திருமணம் அது இதுவென பேச்சைத் துவங்கியதும் உடனே அனைத்தும் நடந்துவிடப் போகிறதா என்ற விட்டேற்றியான எண்ணத்தில் சரியென தலையை அசைத்திருக்க, கௌதமி எள் என்றால் எண்ணெய் என்று இந்த விஷயத்தில் நிற்கிறார்.
“ம்மா... நீ பேசுனதைப் பார்த்ததும் பொண்ணைப் பார்க்க ஒரு ஆறு மாசமாவது ஆகும்னு எக்ஸ்பெக்ட் பண்ணேன். இப்படி திடுதிப்புன்னு பொண்ணு பார்த்துட்டேன்னு நிக்கிற!” என அவன் அதிர்ச்சியும் ஆச்சரியமும்மாய்ப் பார்த்தான்.
“டேய்...நானே இந்தக் காலத்துல எல்லாம் மேட்ரிமோனிலதானே பொண்ணுப் பார்க்குறாங்க. அதெல்லாம் ஒத்து வருமான்னு யோசிச்சேன். அப்புறம் பார்த்தா ஒரு விஷேசத்துக்கு புதுக்கோட்டை வந்த நளினி வீட்டுக்குப் பொண்ணோட வந்துட்டுப் போகவும், எனக்கு அந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு டா, விட மனசில்லை. அமைதியான சுபாவம், மரியாதையா நடந்துகிட்டா. போட்டோ காட்டுறேன் இரு...” என்றவர் விறுவிறுவென அறைக்குள் நுழைந்து ஒரு புகைப்படத்தை எடுத்து வந்தார். அலைபேசி வழியே உலகத்தையே பார்க்கும் இந்தக் காலத்தில் கையிலிருந்த புகைப்படத்தை நீட்டிய தாயை ஆதுரமாக நோக்கியவன், அந்தப் பெண்ணைப் பார்த்தான்.
பார்த்ததும் கண்ணைவிட்டு அகல முடியாத வசீகரம் பொருந்தியிருந்தாள். மை தீட்டிய விழிகளும், மென் சாயமிட்டிருந்த உதடுகளும் அவளது அழகைக் கூட்டிக் காண்பித்தன. தாயைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான் மகன்.
“எப்படி டா அம்மா செலக்ஷன்?” என அவர் முகம் பெருமையில் விகசித்தது.
“குட் மா... பொண்ணு சூப்பர்!” என்றான்.
“அப்போ உனக்கு ஓகேவாடா. அடுத்து என்னென்னு பார்க்கலாமா?” என அவர் ஆர்ப்பரிக்க, “ம்மா...வெயிட், வெயிட். பார்க்க லுக் ஓகே‌. பட் கேரக்டர் என்னென்னு தெரியாம மேரேஜ் வரைக்கும் ப்ராசசஸ் பண்றது ரிஸ்க் மா. நான் அந்தப் பொண்ணை மீட் பண்ணி பேசுறேன். எங்களோட தாட்ஸ் ஒத்துப் போச்சுன்னா, முறைப்படி பொண்ணு பார்க்கலாம், எங்கமேஜ்மெண்ட், மேரேஜ் எல்லாம் வைக்கலாம்!” என்றான் யோசனையாக. இன்னுமே சைந்தவியின் வசீகரமும் நீண்ட பல்வரிசை சிரிப்பும் அவனது விழிகளைவிட்டு அகலவில்லை.
“ப்யூட்டி ஃபுல் கேர்ள், ஷி இஸ் மெஸ்மரைஸிங் மீ!” என அவன் உதடுகளில் குளிர் புன்னகை கவிழ்ந்தது.
“அப்போ ஒருநாள் அந்தப் பொண்ணை இங்க நம்ப மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர சொல்லுறேன் டா. நீயும் போய் பார்த்து பேசிட்டு வாடா!” என அவர் முகம் கொள்ளா புன்னகையுடன் கூறினான்.‌
“ம்மா... தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரியுது. ரொம்ப இமாஜின் பண்ணாத மா. அழகா இருக்கான்றதுக்காக எல்லாம் நான் ஓகே சொல்ல மாட்டேன். ப்யூட்டி இஸ் ஆல்வேய்ஸ் டேஞ்சரஸ்!” என அவன் குறும்பாய் சிரிக்க, தாய் அவனை செல்லமாய் முறைத்தார்.
“ஹக்கும்... ம்கூம்!” எனத் தொண்டையைக் கனைத்துக் கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தார் தேவராஜ்.
அவரைக் கண்டதும் கௌதமியின் சிரிப்பு மறைய, “காஃபி எடுத்துட்டு வரேன்ங்க...” என சமையலறைப் பக்கம் ஒதுங்கினார்.
“என்ன ராம்... கையில என்ன?” எனத் தந்தை கேட்டதும் அவன் அந்தப் புகைப்படத்தை நீட்டினான். நேற்றைக்கு மனைவி அவரிடமும் சைந்தவியின் படத்தை காண்பித்திருந்தார்.
“எக்ஸ் மினிஸ்டர் பொண்ணு ராம். அவங்க அண்ணனும் இப்போ மினிஸ்டர் போல. நல்ல குடும்பம். கேள்விபட்ட வரைக்கும் எந்த ஒரு கெட்டப் பேரும் இல்ல. அதானலாதான் நானும் உங்கம்மா சொன்னதும் ஓகே சொன்னேன். உன் மனசுல என்ன இருக்கு ராம். இந்தப் பொண்ணு ஓகேவா?” எனக் கேட்டார் பெரியவர்.
“யெஸ் பா... நேர்ல ஒன் டைம் மீட் பண்ணிட்டு கன்பர்ம் பண்றேன்!” என்றான் அவன்.
“சரிப்பா...” மகன் தலையசைத்தான்.
“அந்த கார்த்திகிட்டே பேச்சை குறைச்சுக்கோ ராம்‌. அவன் சரியில்லை. முன்னாடி நல்லவன் மாதிரி பேசிட்டு, பின்னாடி மேனேஜ்மென்ட்ல நம்ப மேலயே கம்ப்ளைண்ட் பண்ணுவான். சச் அ ப்ரூட்டல் கேரக்டர் அவன்!” என்ற தந்தையிடம் எவ்வித மறுப்பும் சொல்லாது மகன் தலையை அசைத்து ஏற்கவும், அவரது முகத்தில் சற்றே பெருமிதமும் கர்வமும் குடி கொண்டது. ரகுராமிற்கு தந்தையென்றால் அத்தனை பிரியம். சிறு வயதிலிருந்தே தாயா தந்தையா எனக் கேட்டால், தேவராஜிடம் ஓடுவான். அப்போதிலிருந்தே அவர் மீது இவனுக்கு மரியாதையும் மதிப்பும் அதிகம். சிறு வயதிலே நிறைய கஷ்டங்களைப் பார்த்து மூன்று அக்காக்களுக்கு திருமணம் முடித்து என அவர் பொறுப்பிலிருந்து எங்கேயும் தவறாத மனிதர். அப்படி இருக்கும் தந்தை அவனுக்கு எப்போதுமே அவனுக்கு முன்மாதிரிதான்.


அவரைப் பார்த்துதான் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையும் அவனுக்கு வந்திருந்தது. ரகு நன்றாய் படிக்கும் ரகம்தான். இருந்தும் தேவராஜ் மகனை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட மாட்டேன் என்று முன்பே உறுதியாக மறுத்துவிட்டார். அவனாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தால் ஒழிய, அவனுக்கு வேறெந்த வகையிலும் தான் பணத்தின் மூலம் மருத்துவ படிப்பை கொடுக்க மாட்டேன் என்று உறுதியாய் நின்றவரைப் பார்த்து ரகுவிற்கு கோபம் வரவில்லை. மாறாக தந்தையின் நேர்மையான குணத்தைப் பார்த்து இன்னுமே வியந்து போனான். அவரிடம் நல்ல பெயர் பெற வேண்டும் என்ற நோக்கோடு பன்னிரெண்டாம் வகுப்பில் தீவிரமாய் படித்து பள்ளி தர வரிசையில் மூன்றாம் இடம் பெற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலே சேர்ந்திருந்தான். அதில் தந்தைக்கு ஏக மகிழ்ச்சி. மகனை கொண்டாடி மகிழந்திருந்தார்.
அவரைப் போலவே படித்து முடித்து அவர் வேலை பார்க்கும் மருத்துவமனையில் பயற்சி மருத்துவராகப் பணியாற்றுகிறான். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், தற்போதைக்கு அதை செயலாற்றாது கிடப்பில் போட்டிருந்தான்.
கௌதமி குளம்பியைக் கணவனிடம் கொடுக்க ஒரு மிடறு விழுங்கியவர், “கௌதமி... காபில சர்க்கரை போட்டீயா? இல்ல சர்க்கரைல காபியை போட்டீயா?” என சுள்ளென கேட்கவும், பெண்ணின் முகம் வாடிப் போனது. மகன் திருமணத்தை எண்ணி களிப்புற்றிருந்தவர் சர்க்கரையை சற்று கூடுதலாக சேர்த்துவிட்டார்.
“இல்லங்க... கொஞ்சம் கூடிப் போச்சு போல. நான் வேற காஃபி எடுத்துட்டு வரேன்!” என அவர் கூற, “ஒன்னும் வேணாம். காலையில மனுஷனுக்கு நிம்மதியா காஃபி கூட இந்த வீட்ல கிடைக்காது போல!” என அவர் இரைய, “ப்பா... தெரியாம சுகர் கூடியிருக்கும். அதுக்கு ஏன்பா இவ்வளோ டென்ஷன்... நீங்க போங்க!” என அவரை அனுப்பியவன், தாயின் வாடிய முகம் பொறுக்காது அவரது தோளில் கையைப் போட்டான்.
“தெரியாம சர்க்கரை கூடிப் போச்சுடா ராம்!” கௌதமி வருத்தம் மேவிய குரலில் கூற, “ம்மா... இட்ஸ் நேச்சுரல். எல்லா நேரமும் சரியா இருக்க முடியாது. நீங்க அப்செட் ஆகாதீங்க!” என சில பல நிமிடங்களில் தாயைக் கொஞ்சி இயல்பிற்கு மீட்டப் பின், மருத்துவமனைக்கு கிளம்பினான்.
தேவராஜ் அனைத்து வகையிலும் அவனுக்கு ஒரு முன்மாதிரிதான். ஆனால் தாயிடம் நடந்து கொள்ளும் விதம் மட்டும் அவனுக்கு விருப்பமின்மையைக் கொடுக்கும். முன்பெல்லாம் தொட்டற்தெற்கெல்லாம் கௌதமியை அவலாக மென்று தின்றுவிடுவார் மனிதர். சிறு வயதில் விவரம் தெரியாதிருந்த ரகுவிற்கு ஏன் தந்தை தாயைத் திட்டுகிறார் எனப் புரியவில்லை. வளர வளர அவனுக்கு காரணம் விளங்கிற்று. தேவராஜ் படித்து முடித்து மருத்துவராக இருக்க, தனக்குத் துணையாக வரப் போகும் பெண்ணிடம் ஆயிரம் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார். ஆனால் விதி, அவற்றையெல்லாம் கௌதமி என்ற பெண்ணின் மூலம் சிதைத்திருந்தது.
 
Administrator
Staff member
Messages
1,049
Reaction score
3,001
Points
113
கௌதமி தேவராஜின் அத்தைப் பெண்தான். தந்தையின் சொல்லத் தட்ட முடியாத காரணத்தால் தேவராஜ் இவரை மணம் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தார். அவர் படித்த தன்னம்பிக்கை மிகுந்த, முற்போக்கு சிந்தனை மிகுந்த பெண்ணை மனைவியாய் மனதில் வரித்து வைத்திருக்க, கௌமதி அதற்கு எதிராய் இருந்தார். சிறு வயதிலே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வயலில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார்.
தன்னுடைய தங்கை மகளின் வாழ்வு சிறப்பாய் இருக்க வேண்டும் என்றெண்ணிய தேவராஜின் தந்தை மகனின் விருப்பமின்மையைப் பொருட்படுத்தாது இருவருக்கும் மணம் முடித்து வைத்திருந்தார். திருமணமான புதிதில் தேவராஜ் மனைவிடம் காண்பித்த முகமே வேறு. எந்த வகையிலும் நீ எனக்குப் பொருத்தமில்லை என்ற அர்த்தத்தை ஒவ்வொரு செயலிலும் விதைப்பார். முதலில் அழுது கரைந்த கௌதமி பின்னாளில் இதுதான் தன் வாழ்க்கை என அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். காலப் போக்கில் விரும்பியும் விரும்பாமலும் அவர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசுதான் ரகுராம். கணவனின் பாரா முகத்தில் சுருண்டாலும், மகனைத்தான் உலகமாய் சுற்றி வந்தார் பெண்மணி. ரகு பிறந்த பிறகு வாழ்க்கை அவனைக் கொண்டு ஓட ஆரம்பித்திருக்க, தேவராஜிற்கும் பழகியிருந்தார்.
ரகு சிறுவயதில் தந்தையை எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை எனினும், விவரம் புரிய ஆரம்பித்த வயதில் தந்தையிடம் தாயிற்கு ஆதரவாக சண்டையிட, கௌதமிக்கு அன்றைக்கு அழுத அழுகையை இவனால் மறக்க முடியாது. அதானலே தாயிடம் இதுபோல சுடு சொற்களைப் பயன்படுத்தினாலோ, பாரா முகம் காண்பித்தாலோ தந்தையிடம் பேச மாட்டேன் என இவன் தர்க்கம் புரிய, மகனுக்காக தேவராஜ் இறங்கி வந்திருந்தார். முன்பு போல எப்போதும் அவரைத் திட்டி சுகம் காணவில்லை எனினும், அரிதாக இன்றைக்கு போல நல்ல மனநிலையில் இல்லாவிட்டால், முகத்தைக் காண்பித்து நோகடிப்பார். ரகுதான் தாயை சமாதானம் செய்வான்.
ரகுராம் அன்றைக்கு நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் சைந்தவியின் முகம்தான் அடிக்கடி மனக்கண்ணில் தோன்றி இம்சித்துக் கொண்டிருந்தது. ‘என்னடா இந்தப் பொண்ணு... போட்டோல பார்த்ததுக்கே இப்படியொரு அட்ராக்சன்!’ என தன்னை நினைத்தே அவனுக்கு வியப்பு மேலிட்டது. நாளைக்கு காயத்ரியை சந்தித்து இந்தப் பெண்ணைப் பற்றி கூறுவதுதான் முதல் வேலையென்று மனதில் நினைத்துக் கொண்டான்.
காலையில் ஒன்பது மணிக்குத்தான் காய்தரிக்கு அன்றைய விடியல்‌. அவளுக்கு அன்றைக்கு வார விடுமுறை. அதனாலே தாமதமாக எழுந்தாள். விடுமுறை நாளிற்கான சோம்போறித்தனம் அவளது முதுகில் ஏறியமர்ந்து கொள்ள, விசிராந்தையாய் எழுந்து மெதுவாய் தேநீரைத் தயாரித்துக் கொண்டு வந்து நீள்விருக்கையில் சாய்ந்தமர்ந்து கால்களை மடக்கினாள். புதிதாய் பிரிக்கப்படாமலிருந்த உப்பு ரொட்டியின் முனையை லேசாய் கீறி விட்டு இரண்டு துண்டுகளை எடுத்து சூடான தேநீரில் நனைத்து உண்டாள்.
காலையில் கபகபவென வயிற்றில் சுரந்த அமிலத்தின் உபயத்தாலே தூக்கம் கலைந்து எழுந்தமர்ந்திருந்தாள். வெதுவெதுப்பான சூரியனின் கதிர்களும் உபரியாய் அதில் அடக்கம்.
இசையருவி ஒளியலை முன்பே வா என் அன்பே வா என்ற பாடலை ஒலிபரப்ப, இவள் ரசனையுடன் சூர்யாவையும் பூமிக்காவையும் சேர்த்து பாடலின் வரிகளையும் தனக்குள்ளே முணுமுணுத்தாள். அன்றைக்கு கொஞ்சம் மனம் இலகுவாக இருந்தது. காரணமென்று பெரிதாய் ஏதுமில்லை. சில நாட்களுக்கு இப்படித்தான் இலகுவாய் இருக்கும் மனம், பல நாட்கள் ஆறிப் போன காயத்தை தீண்டி அவளை வலிக்க செய்யும்.
இவள் இசையில் லயித்திருக்க, கதவைத் திறந்து கொண்டு ரகுராம் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் காயத்ரியின் அகமும் முகமும் மலர்ந்து போனது‌. “வாடா...” என்றாள்.
“ஹம்ம்... வீக் ஆஃப் என்ஜாய்மெண்டா?” என அவளை வம்பிழுத்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தவன் முன்னிருந்த உப்பு ரொட்டி துண்டொன்றை எடுத்து உண்ணத் தொடங்கினான்.
“வாரத்துல ஒரு நாள் லீவு கிடைக்குதேன்னு லேட்டா எழுந்தேன். உனக்குப் பொறுக்காதே டா!” பெண் அங்கலாய்த்தாள்.
சின்ன சிரிப்புடன் அவளைப் பார்த்தவன் பையிலிருந்து எதையோ எடுத்து நீட்ட, காயத்ரியின் முகம் பிரகாசமானது. என்னவென்று அவன் கூறும் முன்னே அந்தக் காகிதத்தைப் பிரித்து உண்ணத் தொடங்கினாள். அவளுக்கும் அவனுக்குமான உறவின் துவக்கப்புள்ளி அது, பன் பட்டர் ஜாம். காயத்ரியின் விருப்ப பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் நொறுக்குத் தீனி. அடிக்கடி வாங்கி சாப்பிடக் கூடாது என இவன்தான் அவளை அதட்டுவான். காயத்ரியும் எப்போதாவது வாங்கி உண்ணுவாள். பின்னர் அரிதாகிப் போயிருந்தது. இன்றைக்கு இவன் மீண்டும் அந்த ரொட்டி வகையை வாங்கி வந்திருந்தான்.

அவள் உண்பதையே ஆசையாய்ப் பார்த்தவன், “வாங்கிட்டு வந்தவனுக்கு கொஞ்சமாச்சும் கொடுக்கணும்னு இங்கிதம் இருக்காடி உனக்கு?” என்றவனை அவள் சட்டை செய்யவே இல்லை. முழுவதையும் உண்டு முடித்துவிட்டே அவனைப் பார்த்து அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள்.
“அதெப்படி காயு உன் ஃபேவரைட் பன்னை பார்த்ததும் பக்கத்துல இருக்குறவன் காணாம போய்டுறான்!” என கலாய்த்தவனை வலது கை முட்டியால் பெண் இடித்தாள்.
“ஆமா... எதுக்கு இப்போ பன் பட்டர் ஜாம். விஷயம் இல்லாம இப்படியெல்லாம் வர மாட்டீயே!” காயு அவனை ஓரக் கண்ணால் பார்க்க, அவன் முகத்தில் மனோகரமான முறுவல் தோன்றியது. அழகாய்ப் புன்னகைத்தவனை அகம் முழுவதும் நிறைத்துக் கொண்டாள் பெண்.
“உனக்கொரு சர்ப்ரைஸ்!” என்று கண்ணை சிமிட்டியவன் சட்டைப் பையிலிருந்த புகைப்படத்தை எடுத்து அவளுக்கு வெண்பக்கம் தெரியுமாறு கொடுத்தான்.
“இந்தப் ஃபோட்டோவைத் திருப்பி பாரு காயு!” என அவன் கூறவும், இத்தனை நேரமிருந்த இலகு பாவனை அவளின் முகத்தில் தொலைந்து போயிற்று.
“ராம்... இந்தப் பேச்சை அப்பவே விட சொன்னேன் நான்!” அவள் கண்டனமாய்ப் பார்த்தாள்.
“ஏய்... இது அதில்ல டி. அம்மா எனக்கு அலையன்ஸ் பார்த்திருக்காங்க. பொண்ணு போட்டோ இது. பார்த்து எப்படி இருக்கான்னு சொல்லு!” என அவன் கூறி முடித்ததும் காயத்ரியின் மனம் நொடியில் திடுக்கிட்டுப் போனது. அவனை அதிர்ந்து பார்த்தாள்.
“என் முகத்தையே பார்க்காம பொண்ணு எப்படின்னு சொல்லு காயு!” என அவளின் கையில் புகைப்படத்தை திணித்தவனின் முகம் பார்க்கத் திராணியற்று விழிகளை முயன்று அந்தப் பெண்ணிடம் குவித்தாள்.
புகைப்படத்திலிருந்த பெண் அழகாய் இருந்தாள். அந்த சிரிப்பு இன்னுமே அவளைப் பேரழயகியாகக் காண்பித்தது.
“பொண்ணு எப்படி அழகா இருக்கா இல்ல?” என ராம் ஆர்வமாய் அவளது முகம் பார்க்க, காய்தரிக்கு அடிவயிற்றிலிருந்து குபுகுபுவென எழுந்த உணர்வொன்று தொண்டையை அடைத்தது. உணர்வற்று அவனைப் பார்த்தவள், “ரொம்ப அழகா இருக்காங்க ராம்!” என்றாள் வலிய புன்னகைத்து.
“யெஸ் காயு... ஷீ இஸ் க்யூட். நான் இன்ட்ரெஸ்ட் இல்லாமதான் ஃபோட்டோ பார்த்தேன். பட், ஐ லைக் ஹெர். ஷீ இஸ் சம் வாட் அட்ராக்டீவ் இல்ல. பார்த்ததும் பச்சக்குன்னு இந்தப் பொண்ணு ஒட்டிக்கிட்டா. அந்த சிரிப்பு, பேஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு காயு!” என அவன் பேச பேச இவளுக்கு அழுகை வரும் போலானது. கண்கள் தளும்பி நின்றன. சைந்தவியின் புகைப்படத்தை முகத்திற்கு நேராகக் கொண்டு வந்து தன்னுணர்வுகளை மறைக்க முயன்றாள். முடியாது அழுது விடுவோம் என இத்தனை நாட்கள் போட்டிருந்த கம்பி வலையின் நூலிழை ஊசலாடியது.
“அச்சோ.‌. அடுப்புல பால் இருக்கு ராம்!” என அவசரமாய்க் கூறி அவன் முகம் பார்க்காது சமையலறைக்குள் நுழைந்தவளின் கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர் வடிந்தது. ஏற்கனவே காய்ச்சிய பாலை மீண்டும் அடுப்பில் ஏற்றி சுடு செய்தாள். இந்தப் பையன் இத்தோடு சென்று விட்டால் நல்லது என இவளது மனம் அரற்றியது. பூசியிருந்த அரிதாரங்கள் உவர் நீரில் கரைந்து கொண்டிருந்தன. இரண்டு நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தவன் எழுந்து சமையலறைக்குள்ளே வந்துவிட, இவள் அவனுக்கு முகம் காட்டாது திரும்பி நின்றாள்.
“என்னடி... நீ எதுவுமே சொல்லாம வந்துட்ட?” என அவன் கேட்க, இவளிடம் மௌனம்.
“என்ன... என்ன சொல்லணும் ராம்?” உள்ளத்தின் நடுக்கத்தை மறைக்க முயன்றது பெண்ணின் குரல்‌.
“உனக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கா? இல்லையான்னு சொல்லவே இல்ல காயு?” என அவனின் ஆர்வக் குரல் இவளை கத்திக் கொண்டு மிகமிக மெதுவாய் ஆழமாய்க் கீறிவிட்டு பதம் பார்த்தது.

உதட்டை அழுந்தக் கடித்து வரவழைத்த சிரிப்புடன் அவனைப் பார்த்தவள், “ஏன் நான் பிடிக்கலைன்னு சொன்னா மட்டும் ஐயா வேண்டாம்னு சொல்ற ஐடியால இருக்கீங்களா என்ன?” என கேலிக் குரலில் உணர்வுகளைப் புதைத்தாள். சற்று முன்னர் தித்திப்பை சுவைத்த நாவு இப்போது கசந்து வழிந்தது. அவளது கூற்றில் ராமிடம் அசட்டுத்தனமாய் ஒரு சிரிப்பு. அவனையே கண்ணெடுக்காமல் பார்த்தாள் பெண்.
“அப்படியில்லை காயு... எனக்குப் பிடிச்சாலும் என் காயுவுக்கும் பிடிக்கணும். அவ ஓகே சொன்னாதான் நெக்ஸ்ட் ஸ்டெப்!” என அவள் முகம் பார்த்தவனை நோக்கிய விழிகளை சிமிட்டி இப்போது மனதார புன்னகைத்தாள் காயத்ரி.
“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா. ரொம்ப நல்ல டைப் மாதிரிதான் தெரியுறாங்க. நீ பேசி பார்த்து ஓகேன்னா, அடுத்துப் பார்க்கலாம்!” என்றாள் உள்ளத்திலிருந்து உளப்பூர்வமாக. ராமின் மீதான அவளது அன்பு தூய்மையானதாகிற்றே. அவனது மகிழ்ச்சியில் தானே இவளது சர்வமும் அடங்கியிருக்கிறது.
“நிஜமா உனக்கு ஓகேவா காயு. போட்டோ பார்த்து ஓரளவுக்கு கெஸ் பண்ணி இருந்தாலும் நேர்ல பார்த்து பேசிட்டா ரொம்ப பெட்டர். அதான் வீக்கெண்ட் மீட் பண்ற ப்ளான்!” என்றவனுக்கு இவள் சம்மதமாய் தலையை அசைத்தாள்.
“லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் கேள்வி பட்டிருக்கீயா காயு? ஐ பெல்ட் தட் நவ். என்னமோ இந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு டி. அவளுக்கும் என்னைப் பிடிக்கும் தானே? வேண்டாம்னு சொல்லிட மாட்டா இல்லைல காயு? எப்படி பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்றது டி?” என தயக்கமும் தவிப்புமாய்ப் பார்த்தவனின் கரத்தை எடுத்து அழுத்தினாள்.
“என் ராமை யாருக்காவது பிடிக்காம போகுமா டா? நீ அலைபாயுதே கார்த்திக் டா. கண்டிப்பா உனக்கு பீலாகுற எல்லாமே அந்தப் பொண்ணுக்கும் இருக்கும். நிச்சயமா உன்னைப் பிடிக்கலைன்னு சொல்ல மாட்டாங்க. இம்ப்ரெஸ் பண்றேன்னு ட்ரமாட்டிக்கா ஏதும் பண்ணாத ராம். உன்னோட நேச்சரே எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்ணிடும்!” என்றாள் அவன் கையைத் தட்டிக் கொடுத்து ஆதரவானப் புன்னகையுடன்.
“தேங்க் யூ டி...தேங்க் யூ சோ மச்!” என பட்டும்படாமலும் அணைத்து விடுவித்தவனை இவள் ஆதுரமாகப் பார்த்தாள்.
“யூ க்நோ காயு, நேத்து மார்னிங் ஃபோட்டோ பார்த்ததும், ஐ லைக்ட் ஹெர். ஈவ்னிங் தான் அந்தப் பொண்ணுக்கும் என்னைப் பிடிக்குமான்னு டவுட். ஒரே நெவர்ஸா போய்டுச்சு. உன்கிட்ட ஷேர் பண்ணதும் ஃபீலிங் ரிலாக்ஸ்ட்!” என்றவனை இவள் அன்பாய் பார்த்தாள்.
“ஆல் தி பெஸ்ட் ராம்! குடும்பஸ்தனாகப் போற!” என அவள் இவன் தோளைத் தட்ட, ரகுராமின் முகத்தில் மிக மெல்லியதாய் வெட்கத்தின் கீற்றுப் பரவியது.
“பத்து மணிக்கு அப்பாய்ன்மெண்ட் இருக்கு காயு. நான் கிளம்புறேன்!” என அவன் விடைபெற, இவள் வாயில் வரை சென்றாள்.
“தேங்க்ஸ் டி!” என மீண்டுமொருமுறை நன்றியை ஏலம்விட்டவனை இவள் மென்மையாய் முறைக்க, அதைத் தோள் குலுக்கலில் புறந்தள்ளிச் சென்றவனைத்தான் பார்த்தாள். அவன் செல்ல செல்ல ராம் தன்னைவிட்டு வெகுதூரம் செல்வதாய் ஒரு பிரம்மை எழுந்து இவளது விழிகளில் நீர் துளிர்த்தது.
“யூ ஆல்வேய்ஸ் டிசர்வ் பெட்டர் லைஃப் ராம்!” என்றாள் முணுமுணுக்கும் உதடுகளுடன். இமையைத் தொட்டு உறவாடிய நீரை கீழே சிந்தவிடாது பத்திரப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். தந்தையின் பார்வை அவளிடம் தான் என்பதை பெண் உணர்ந்ததால், என்றைக்கும் போல இன்றைக்கும் தன்னுணர்வுகளை அரிதாரமிட்டு மறைத்தாள். எதுவும் என்னைப் பாதிக்கவில்லை என்ற எண்ணத்துடன் குப்பையாய் கிடந்த கூடத்தை சுத்தம் செய்தாள்.குளிர்சாதன பெட்டியில் நேற்று வைத்த சாம்பாரை எடுத்து சூடு செய்தாள்.
“நீங்க சாப்பிடுங்கப்பா... நான் குளிச்சிட்டு வந்து லேட்டா சாப்பிட்றேன்!” என்று அவரிடம் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து மெதுவாய் கதவை தாழிட்டாள். தந்தையின் பார்வைக்கு எவ்வித ஆதரவும் அளித்திடக் கூடாதென ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைத்தாள் பெண். இப்போது மூச்சை நன்றாய் இழுத்துவிட்டவள், குளியலறைக்குள் புகுந்து துவாலைக் குழாயைத் திறந்துவிட்டு அதனடியில் நின்றாள்.
இத்தனை நேரம் வேலியிடப்பட்டு அணை போட்டிருந்த கண்ணீர் குழாய் தண்ணீரோடு சேர்ந்து கதி மோட்சம் பெற்றது. கண்களில் நீர் வழிந்தாலும் காயத்ரி திடமாகவே இருந்தாள். இவையெல்லாம் அவள் எதிர்பார்த்த நிகழ்வுதானே. அனைத்தையும் எதிர் கொள்ள வேண்டும் என்றொரு மனதைரியத்தை தனக்குத் தானே கூறிக் கொண்டவள் குளித்து முடித்து உண்டுவிட்டு நித்திரையில் துயரங்களை தொலைக்க எண்ணி துயில் கொண்டாள். தலையணை சொட்டு சொட்டாக அவளது உவர்நீரின் ஈரம் உணர்ந்தது.
‘ஐ லவ் யூ ராம்!’ என உதடுகள் முணுமுணுக்க, கடினப்பட்டு தூக்கத்தை வரவழைத்திருந்தாள்.
தொடரும்...








































 
Top