• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 17 💖
இரண்டு வாரம் சென்றிருந்தது. ரகுராம் மீண்டும் பணியில் இணைந்திருந்தான். திருமணம் நின்றுவிட்ட செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்க, அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் அனுதாபத்தோடு அணுகியவர்களை ரகுராம் புன்னகை முகமாகப் பேசி அனுப்பினான். நெருங்கிய மருத்துவ தோழர்கள் புரிந்து கொண்டனர். ஒரு சிலர் கேலியாய் சிரித்துவிட்டு செல்ல, இவன் அனைத்தையும் சிரித்தபடியே கடந்திருந்தான். தான் கோபப்பட்டால் அவர்களது பேச்சிற்கு மதிப்புக் கொடுத்தது போலாகிவிடும் என எல்லா சூழ்நிலைகளிலும் நிதானத்தைக் கடை பிடித்திருந்தான்.
கௌதமி முகத்தில் இருந்த புன்னகை இந்த இரண்டு வாரமும் துடைத்தெறியப்பட்டிருந்தது. அலைபேசியைத் தூரத் தூக்கிப் போட்டிருந்தார். ஒருவரிடமும் பேசவில்லை. அறைக்குள்ளே அடைந்து கிடந்தார்‌‌. தேவராஜ் நடந்த நிகழ்வில் மனைவியைக் கடுஞ்சொற்களால் வதைத்திருந்தார்.
“என்ன ஏதுன்னு விசாரிக்காம தான் பொண்ணு கேட்டீயா கௌதமி? ஒரே ஒரு பையனைப் பெத்து வச்சு அவனோட கல்யாணம் இப்படியா நின்னுப் போகணும். எவ்வளோ ஆசையா சொஞ்சோம். ஒன்னுத்த கூட உருப்படியா செய்யத் துப்பில்லை உனக்கு!” என அவர் பேச்சு மனைவியை வகை தொகையில்லாத திட்டித் தீர்க்க, ரகுராம்தான் அவரிடமிருந்து தாயைக் காப்பாற்றினான்.
“ப்பா... நடந்த எதுக்கும் அம்மா காரணம் இல்லை. புரிஞ்சுக்கோங்க. அவங்களை திட்டினா எதுவும் மாறப் போகுதா என்ன? இனிமே நீங்க அவங்களைத் திட்டக் கூடாது. அப்படி திட்டுனா நான் வீட்டுக்கு வர மாட்டேன். எங்கேயாவது ஹாஸ்டல் பார்த்துட்டுப் போய்டுவேன். உங்களை விட இந்த விஷயத்துல பாதிக்கப்பட்டது நான்தான். என்னைப் பத்தி உங்களுக்கு அக்கறை இல்ல. அம்மாவைத் திட்டி உங்களோட கோபத்தைக் குறைச்சுக்குறீங்க? ஹம்ம், ரெண்டு வார்த்தை என்கிட்ட நீங்க ஆறுதலா பேசுனீங்களா?” எனத் தடித்த சொற்களால் தந்தையிடம் பேசிவிட்டான். தேவராஜ் வாய் அன்றிலிருந்து பூட்டுப் போட்டுக் கொண்டது. அவருக்குமே மனதில் குற்றவுணர்வு உண்டு. மகனது இந்த நிலைக்கு தாங்களும் ஒரு காரணம், என்ன ஏதென்று கேளாமல் தங்கள் தேர்ந்தெடுத்தப் பெண்ணை அவன் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டிருக்க, இப்படியாகும் என ஒருவரும் எண்ணியிருக்கவில்லையே. மனது விட்டுப் போயிருந்தது. இருந்தும் மகன் இல்லாத சமங்களில் கோபத்தை மனைவி மீது காட்டிவிடுவார்.
நளினியும் இளவேந்தனும் எத்தனையோ முறை இவர்களிடம் பேச முயற்சிக்க, தேவராஜ் அனைத்தையும் நிராகரித்தார். அத்தனை எளிதில் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. இப்படி மேடை வரை வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணின் வாழ்க்கையை வீணடித்திருந்தால், தங்களை எதுவும் செய்யாது விட்டிருப்பார்களா என மனம் கனன்றது. அமைச்சர் வீட்டு சம்பந்தம் என கண்ணை மூடிக்கொண்டு சம்மதித்த தங்கள் மீதே அவருக்கு கோபம்.
தங்களுடைய வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றது போல நடுத்தர வர்கத்துப் பெண்ணைப் பார்த்திருந்தால், இப்படியொரு அசம்பாவிதம் நடந்திருக்குமா என்ன? அப்படியே நடந்திருந்தாலும் இவர் அமைதியாய் வந்திருப்பாரா? அவர்களிடமிருந்த பணமும் பதவியும் இவரை வாயடைக்கச் செய்திருந்தன. எதுவும் செய்ய முடியாத தன் கையாலாகாத தனத்தை தானே வெறுத்துப் போனார். அதை மனைவி மீது வார்த்தைகளாகவும் தணித்துக் கொண்டிருந்தார்.
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல இவர் உடன்பிறந்த மூன்று சகோதரிகளும் திருமணம் நின்ற அன்று வீட்டிற்கு வந்து பேசிய பேச்சுக்களில் இவருக்கு வெறுத்துப் போனது.
“பணக்கார வீட்டு சம்பந்தம்னா கண்ணை மூடிட்டு சரின்னு சொல்லிடுவீயா தேவா. இதெல்லாம் ஒத்து வருமா? இல்லையான்னு யோசிக்க மாட்டீயா?‌ ஹம்ம்... பணத்தை பார்த்து ஏமாந்துட்டீங்களா? பொண்ணு குணம் சரியில்லாம போச்சே? இப்படி மேடை வரைக்கும் வந்து அசிங்கப்படுத்தியிருக்காங்க. நம்மளால எதுவும் செய்ய முடியாம போச்சு!” மூத்த அக்கா ஆதங்கத்தை வாய் வழியாய் கொட்டினார்.
“ஆமா... அவ்வளோ பெரிய வீட்ல இருந்து சம்பந்தம் பேசுனப்பவே நம்ப கொஞ்சம் உஷாரா பொண்ணைப் பத்தி விசாரிச்சு வச்சிருக்கணும். ஒழுங்கங் கெட்டவளா இருக்கவ, இன்னைக்கு காதலன் வந்ததும் ஓடிட்டா. இதுவே கல்யாணமாகி இதைப் பண்ணியிருந்தா நம்ப வீட்டு மானமே போய்ருக்கும். இதெல்லாம் தேவையா?” இரண்டாவது அக்கா பேச, தேவராஜ் கூனிக்குறுகி அமர்ந்திருந்தார். அவருக்கும் கடலளவு கோபம்தான். ஆனால் அதைக் காண்பிக்க முடியாத இடத்தில் இருந்ததால், ரத்த அழுத்தம் உயர்ந்து போயிருந்தது. அவரது உடல்நிலையைக் கவனித்துக் கொள்வதிலே மற்றதை மறந்து போயினர்.
மேலும் இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு ஆறுதல் கூறி அவர்கள் அனைவரும் கிளம்பிவிட, சிரமப்பட்டு மூவரும் தங்களை தங்களது இயல்பு வாழ்க்கைக்குள் பொருந்த முயன்றனர். ஆண்கள் வெளியே வேலைக்குச் சென்று வீட்டிற்கு வருவதால் அவர்களுக்கு சற்றே மனமாற்றம் கிடைத்திருக்க, கௌதமி வீட்டிலே அடைந்து கிடந்ததில் இன்னுமே அவரைக் குற்றவுணர்வு கொன்றது. தான் பார்த்த பெண்தானே சைந்தவி. தன்னால்தானே மகனின் வாழ்க்கை இப்படியாகிவிட்டது என அவர் மனதிற்குள் மருகினார். வாழ்வே ஒரு மாதிரி வெறுமையாக நகர ஆரம்பித்தது.
காயத்ரிக்கும் ஓட்டமும் நடையுமாய் இருந்தவளுக்கு வீட்டிலே அடைந்து கிடப்பது அத்தனை சிரமமாய் இருந்தது. எப்போது மீண்டும் வேலைக்குச் சேரலாம், மனதை எதில் திசை திருப்பலாம் என எண்ணிக் கொண்டிருந்தாள். ரகுராம் பேசிச் சென்றவற்றை அவள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. முன்பிலிருந்தே அவளது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. ரகுராமைக் காதலித்தால், காதலிக்கிறாள், வாழ்க்கை முழுவதும் காதலிப்பாள். தனது பிரியத்தை உரியவனிடம் சேர்த்துவிட்ட திருப்தி போதும் அவளுக்கு. அவனைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் துளியும் இல்லை. சுயமரியாதையும் தன்மானமும் அவளுக்கு அதிகம் இருந்தது. அதனாலே ரகுராமைத் திருமணம் செய்து கொள்ள மனம் ஒப்புக் கொள்ளவில்லை.
திருமணம் நின்ற விரக்தியில் இப்படி பேசுகிறான். நாட்கள் செல்ல செல்ல அவன் சரியாகிவிடுவான் என அவளே மனதிற்குள் கூறிக் கொண்டாள். ரகுராம் பேசிச் சென்ற அன்று ஷண்முகி மருமகன் வந்ததும் அனைத்தையும் ஒரு வரி விடாமல் ஒப்பித்துவிட்டார்.
தங்கராஜ் காயத்ரியிடம் என்னவென்று பல முறை அழுத்திக் கேட்டும் மகள் வாயைத் திறக்கவில்லை. அவர் மேலும் பேச முடியாதபடி, “ப்பா... கை ரொம்ப வலிக்குது பா. நான் கொஞ்ச நேரம் படுக்குறேன்!” என அப்பேச்சிலிருந்து தப்பித்து ஓடியிருந்தாள். அதற்குப் பிறகு பலமுறை அவர் கேட்டும் காயத்ரி எதையாவது கூறி மழுப்புவதிலே கூறியாய் இருக்க, அவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. என்னவென பிரச்சனையின் அடிநாதம் தெரியாது இவர் எந்த முடிவும் எடுக்க முடியாது தடுமாறினார்.
ஷண்முகிக்கும் அவரது தடுமாற்றம் புரிய, “மாப்பிள்ளை, தாயில்லாத பொண்ணு‌. நம்ப எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா. கை சரியானதும் நான் நல்ல பையனா பார்க்குறேன். அதட்டி உருட்டி கல்யாணம் பண்ணி வச்சுடலாம். அப்புறம் சந்தோஷமா வாழாமலா போய்டுவா. சின்ன புள்ளைக்கு என்ன தெரியும். பெரியவங்க நம்ப செய்றது தானே. அவ வார்த்தைக்கு தயங்கி தயங்கி இத்தனை நாள் கல்யாணம் தள்ளிப் போய்டுச்சு. இவ வயசுல இருக்க பொண்ணுங்க எல்லாம் புள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பிட்டாங்க. நீங்க இன்னும் காயூவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலை!” என பேசிப் பேசியே தங்கராஜ் மனதைக் கரைத்திருந்தார். அவருக்கும் ஷண்முகி பேச்சின் ஏதார்த்தம் புரிந்தே இருந்தது. கை சரியானதும் கட்டாயப்படுத்தியேனும் மகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று மனதிற்குள் முடிவொன்றை உறுதியாய் எடுத்திருந்தார்.
அன்றைக்குத்தான் காயத்ரிக்கு விபத்து நடந்து மூன்று வாரம் முடிந்திருந்தது. மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும் என்று தந்தையிடம் நேற்றே கூறியிருக்க, காலையில் அவளும் தங்கராஜூம் கிளம்பினர்.
இவள் மகிழுந்தை முற்பதிவு செய்துவிட்டு காத்திருக்க, ரகுராமின் வாகனம் அவர்கள் வீட்டின் முன்னே வந்து நின்றது. இரண்டு வாரம் இருவருக்குள்ளும் குறுஞ்செய்திகளுக்கு கூடப் பஞ்சமாகியிருக்க, இப்போது வந்து நின்றவனைக் கண்டு இவளுக்கு மனம் வலித்தது. அன்றைக்கு கோபமாய் பேசிச் சென்றவன் தன்னிலையிலிருந்து சிறிது கூட இறங்கி வரவேயில்லை. இவளாக அழைத்தும் செய்தி அனுப்பியும் அவனை சமாதானம் செய்ய விழைய, அவன் உறுதியாய் நின்றிருக்க, காயத்ரி கலங்கிப் போயிருந்தாள். ஏனோ இந்தப் பையன் ராம் என்று வருகையில் அவளது தன்முனைப்பு எல்லாம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது.
“ரகுராம்... வாப்பா, நல்லா இருக்கீயா?” தங்கராஜ் அவனை நலம் விசாரிக்க, “நல்லா இருக்கேன் அங்கிள். நானே ஹாஸ்பிடல் கூட்டீட்டு போறேன். நம்ப ஹாஸ்பிடல்லயே பார்த்துக்கலாம்!” என்றவனிடம் அவர் மறுத்துக் கூற வர, “காயூ, வந்து கார்ல ஏறு...” என்றவனின் குரலில் அழுத்தம்தான். ஏறியே ஆக வேண்டும் என்றொரு கட்டளை அதில் பொதிந்து இருந்தது.
“ப்பா.‌.. ராம் கூடவே போகலாம். நான் டேக்ஸியைக் கேன்சல் பண்ணிட்றேன்!” என்றவள் எதுவும் கூறாது ரகுராமிற்கு அருகே ஏறியமர, அவன் இருக்கையை அவளுக்கு வாகாக சற்று சாய்த்தான். தங்கராஜூம் ஏறியமர, மூவரும் மருத்துவமனையை அடைந்தனர்.
ரகுவிற்கு அங்கிருந்த மருத்துவர்கள் அனைவரும் பரிட்சயம். அதனாலே காயத்ரியை தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தான். தங்கராஜ் வெளியே காத்திருக்க, இவர்கள் மருத்துவரைச் சந்தித்து வந்தனர். கட்டைப் பிரித்ததும் ஒரு ஊடு கதிர் படம் எடுத்தவர், “யூ ஆர் ஆல்ரைட் காயத்ரி. லக்கிலி எலும்பு கூடிருச்சு. பட் இன்னும் த்ரீ மந்த்ஸ்க்கு கைக்கு பெருசா வேலை குடுக்காதீங்க!” என சில பல அறிவுரைகளுடன் அவர்களை வீட்டிற்கு அனுப்பினார்.
ரகுராம் மகிழுந்தை நிறுத்தியதும் தங்கராஜ் இறங்கி உள்ளே செல்ல, காயத்ரி அசையாது அவனையே பார்த்திருந்தாள். அவன் பார்வை சாலையில்தான் இருந்தது.
“வீட்டுக்குள்ள வந்துட்டுப் போ ராம்!” காயத்ரி தயங்கியபடியே அழைக்க, மறுக்காதவன் விறுவிறுவென உள்ளே நுழைய, இவள் தேநீர் தயாரித்து எடுத்து வந்து கொடுத்தவள், எதுவும் பேசாது அவனருகே அமர்ந்தாள். குடித்து முடித்தவன் வேறு என்ன என அவள் முகத்தைப் பார்க்க, “உன் கோபம் எப்போ போகும் ராம்? என் பேச மாட்ற? உன் கூட பேசாம, பார்க்காம இருக்க முடியலை டா. எனக்கு என் ஃப்ரெண்ட் ராம் வேணும்!” வருத்தம் மேவிய குரலில் அவனைப் பார்த்தாள்.
“ஓஹோ... ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கேன்னு சொன்னல்ல காயூ. அப்போ எப்படி என்னை பார்ப்ப? எப்படி பேசுவ?” ராம் கேலியாகக் கேட்க, அவள் முகம் மாறிற்று. அவளுக்கே விடை தெரியாத கேள்வியாகிற்றே.
“அதை அப்போ பார்த்துப்போம் ராம். இப்போ நீ என்கிட்ட பழையபடி பேசு டா!” உள்ளே சென்ற குரலில் பேசினாள்.
“கல்யாணத்துக்கு ஓகே சொல்லு. நான் பழைய ராமா உன்கிட்ட பேசுறேன்...” என்றவனை இவள் இயலாமையுடன் பார்த்தாள்.
“ராம்...” என அவள் மறுத்துப் பேச வர, “எனக்கு டைமாச்சு காயூ. நான் கிளம்புறேன்...” என்றவன் எழுந்து நிற்க, இவள் அவனைத்தான் பார்த்திருந்தாள். மளுக்கென்று நீர் நிறையப் பார்த்த விழிகளை சிமிட்டி அதட்டினாள்.
சமையலறையில் இருந்தாலும் காதுகளைத் தீட்டி இங்கே வைத்திருந்தார் ஷண்முகி. அவளுக்கு அருகே குனிந்து அமர்ந்தவன், கையை ஒருமுறை பரிசோதித்தான்.
“வலி எதுவும் இருந்தா சொல்லு காயூ. ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத!” என்றான். அந்த அக்கறையில் இவளது முகம் மலர்ந்தது. சிறு முறுவலுடன் தலையை அசைத்தாள்.
“ஹம்ம்...இனிமே கை காலை உடைச்சிக்கணும்னா கஷ்டப்பட்டு ஆக்ஸிடென்ட் பண்ணாத. என்னைக் கூப்பிடு. நானே கையும் காலையும் உடைச்சுட்றேன்!” என அவன் அழுத்தமாய்க் கூற, இவள் அவனை முறைத்தாள்.
“அம்மாவும் மகனும் நாத்தனார் முடிச்சை போட சொல்றதுக்கு முன்னாடி அதை யோசிச்சிருக்கணும்!” என இவள் முணுமுணுக்க, அவளை முறைத்துக் கொண்டே ரகுராம் அகன்றான்.
ஷண்முகி இவளுக்கு கை குணமாகி விட்டதென அன்றைக்கு இரவே மதுரைக்கு கிளம்பிவிட்டார். காயத்ரி மேலும் இரண்டு நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டு வேலைக்கு சென்றாள்.

அவள் இயல்பு வாழ்க்கைக்குள் சென்றதும் எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு. ஷண்முகி ஊருக்குச் செல்லும் முன்னே தங்கராஜிடம் பேசிவிட்டுத்தான் சென்றார். தற்போதைக்கு காயத்ரியிடம் திருமணம் பற்றி பேச வேண்டாம் என்றும் நல்ல வரனாய் அவர் பார்த்துக் கூறியதும் அவளை பேசி கரைத்து ஒரே வாரத்தில் திருமணத்தை முடித்துவிடலாம். முன்பே கூறினால் இந்தப் பெண் எதையாவது செய்து திருமணத்தை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் என அவர் கூற, தங்கராஜூம் கேட்டுக் கொண்டார். எப்படியேனும் மகளுக்கு ஒரு நல்லது நடந்துவிட்டால் போதுமென அவர் மனம் மகளுக்காக வெகுவாய் வருந்திற்று. மனைவி சென்ற பின்னே அவளைத் தான் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையோ என காலம் கடந்த ஞானதோயம்தான் என்றாலும் அவளுக்கு திருமணத்தை முடிந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்.

காயத்ரி தந்தையாக திருமண பேச்சை எடுக்கவில்லை என்று பெரிதாய் ஆசுவாசம் கொண்டாள். இவளாக அவரிடம் எதுவும் பேச விழையவில்லை. இவள் எதாவது பேசச் சென்று அவர் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டால் என்ன செய்வதென வெகுகவனமாய் இருந்தாள்.

எல்லாம் நன்றாய் சென்றது. ஆனாலும் ரகுராம் இல்லாத வெறுமை அவளைச் சோர்ந்து போகச் செய்தது. இவளாக அவனை அழைக்காவிடினும், வாரவாரம் வந்து இவளைப் பார்த்து நலம் நாடி செல்பவனின் அருகாமைக்கு மனம் நிரம்ப ஏங்கிற்று. தொடர்ந்து இவள் அனுப்பிய குறுஞ்செய்திகள் எல்லாம் படிக்கப்படாது பரணியிலேறிய பொருட்கள் போல வீணாய்ப் போயின. ஒரு சில முறை அழைப்பு விடுத்தும் அவன் அதை ஏற்கவில்லை. மனம் அடிவாங்கிப் போனது. இவள் என்ன சமாதான மொழிகளைக் கூறியும் அவன் இறங்கி வரவேயில்லை. என்னவோ இந்தப் பையன் தன்னை ரொம்ப கஷ்டப்படுத்துவதாய் ஒரு எண்ணம்.

திருமணம் மட்டும்தான் வாழ்க்கையை நிறைக்குமா என்ன? எல்லோருடைய வாழ்க்கையிலும் அதுவொரு நிகழ்வு. அவ்வளவுதானே அன்றி அது மட்டுமே வாழ்க்கையல்ல என அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள். பலன் என்னவோ சுழியம்தான்.

இரண்டு மாதங்கள் முழுதாய் கடந்திருக்க, காயத்ரியின் மனம் முழுவதும் ரகுராம்தான் நிறைந்து கிடந்தான். ஒருமுறை அவனைக் கண்டால் மனத்தின் அலைப்புறுதல் நின்றுவிடும் என அவள் ஏங்க, வாய்ப்பே கிட்டவில்லை. இவள் ஒருமுறை அவனைக் காண செல்ல, அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தான் ரகுராம். அப்போதும் பார்க்க முடியாமல் போயிற்று. இவளைப் பார்க்காது இருக்க முடியும் என ரகுராம் உறுதியாயிருக்க, காயத்ரியால் சர்வ நிச்சயமாய் அப்படி இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ரகுராம் கோபத்தை விடுத்து தன்னைப் பார்க்க வந்துவிடுவான் என எதிர்பார்த்தாள். ஆனால் அவன் வரவேயில்லை.

முழுதாய் அவன் முகம் பார்த்து குரல் கேட்டு என நூற்று இருபது நாட்களைப் பல்லைக் கடித்து கடந்து விட்டாள். இதோ இரண்டு தெரு தள்ளித்தானே அவன் வீடு. ஆனாலும் அவனிருப்பிடத்திற்கு செல்ல இவளுக்கு மனம் வரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவளின் ரோஷமனம் அவனாய் வரட்டும் என்றுவிட, குறுஞ்செய்திகளையும் அழைப்புகளையும் அறவே நிறுத்தியிருந்தாள்.
ரகுராம் திருமணம் நின்று நான்கைந்து மாதம் கடந்திருக்க, அனைவருமே அந்நிகழ்விலிருந்து வெளியே வந்திருந்தனர். எங்கே மகன் அடுத்து திருமணமே வேண்டாம் என்று கூறிவிடுவானோ என கௌதமிக்கு மனம் முழுவதும் பயம் நிறைந்திருந்தது. தயங்கித் தயங்கி கணவரிடம் அதை கூறிவிட, அவருக்குமே அந்த எண்ணம் இருந்தது.

அதானலே விடுமுறை தினத்தன்று அவனை அமர வைத்து திருமணம் பற்றிய பேச்சை எடுக்க, “ப்பா... இப்போதைக்கு எனக்கு மேரேஜ் பண்ற மைண்ட் செட் இல்லை. அடுத்த வருஷம் பார்க்கலாம்!” என அப்பேச்சை முழுவதுமாகத் தட்டிவிட்டிருந்தவனை பெற்றவர்கள் வேதனை ததும்ப பார்த்தனர். அதன் பிறகும் கௌதமி அந்தப் பேச்சை எடுத்தாலும் அவன் பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை. தாயாய் கலங்கிப் போயிருந்தார். எப்படியாவது மகன் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என அனைத்துக் கடவுளையும் வேண்டியபடியே நாட்களை கடத்தினார்.
அன்றைக்கு தேவராஜூம் கௌதமியும் மளிகைப் பொருட்கள் வாங்கிவர அருகேயிருந்த வணிக வளாகத்திற்கு சென்றிருக்க, அங்குதான் காயத்ரியும் வந்திருந்தாள்.
அவளை எதிர்பாராது திகைக்க கௌதமி, “காயூ, எப்படி இருக்க டா? கை சரியாகிடுச்சா? இந்த அம்மா மேல கோபமா? உன்னைப் பார்க்க வர முடியலை டா. ராம் கல்யாணம் நின்னதுல மனசே சரியில்லை மா!” என அவர் கவலையாய் கூற,
“அச்சோ... அதெல்லாம் இல்லைமா. எனக்கும் உங்க சிட்சுவேஷன் புரியுது மா. நீங்க இப்போ ஓகே வா? எல்லாம் சரியாகிடுச்சா மா? நானே இதை எக்ஸ்பெக்ட் பண்ணலை!” ஐந்து மாதங்களுக்கு முன்னே நடந்த நிகழ்வுக்கு இப்போது வருத்தம் தெரிவித்தாள் இவள்.
“யாரைக் குத்தம் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை மா. கடவுள் ஏன் எம்புள்ளைக்கு இப்படி பண்ணாருன்னு நிதம் நான் அவர்கிட்ட கேட்டுட்டுதான் இருக்கேன்!” என்றவர், “உனக்கும் அவனுக்கும் எதுவும் மனஸ்தாபமா காயூ. அவன் கூட நீ பேசுறது இல்லையா?” என யோசித்தபடியே கேட்டார்.
“அதெல்லாம் இல்ல மா. அவன் கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தான். அதான் தொந்தரவு பண்ண வேணாம்னு விட்டுட்டேன் மா. அப்போ அப்போ போன்ல பேசுவான். நேர்லதான் பார்க்க முடியுறது இல்ல!” பொய்யும் மெய்யும் கலந்து பேசினாள்.
“சரிம்மா...இந்த அம்மாவுக்காக நீ அவன்கிட்ட பேசுறீயா மா. நடந்ததையே நினைச்சிட்டு இருந்தா என்ன பண்றதுமா. நானும் வேற நல்ல பொண்ணா பார்க்குறேன். கல்யாணம் பண்ணிக்கோடான்னு சொன்னா காதுலயே வாங்க மாட்றான். எங்க இப்படியே இருந்துடுவானோன்னு கவலையா இருக்குமா. அவன்கிட்ட நீ பேசி புரிய வைக்குறீயா மா? நீ சொன்னா கண்டிப்பா அவன் கேட்பான்!” என அவர் இவள் முகம் பார்க்க, காயத்ரியின் முகம் நொடியில் சலனமற்றுப் போனது. வெகுவாய் தயங்கியபடியே தலையை அசைத்தாள்.
“சரிடா... நீ அவன்கிட்ட பேசி அவன் மனசுல என்ன இருக்குன்னு கேட்டு அம்மாவுக்கு கால் பண்ணு டா. அவங்க அப்பா காத்திருக்காரு. இன்னும் ரெண்டு நிமிஷம் லேட்டாக்குனாலும் திட்டிடுவாரு!” என அவர் விடைபெற, காயத்ரி வீட்டை அடைந்தாள். அன்று முழுவதுமே கௌதமியின் பேச்சுதான் அவளது சிந்தனையை ஆக்கிரமித்திருந்தது. அவரது குரலில் இருந்த வருத்தம் இவளையும் தாக்கியிருந்தது.
மறுநாள் மதிய நேரத்து வேலை அவளுக்கு. இருளும் இரவும் மெல்ல கவிழத் தொடங்க, மணி ஆறைரையைத் தொட்டிருந்தது. ஏழுமணிக்கு இவளுக்குப் பணி முடிந்துவிடும். ரகுராமும் இந்நேரம் மருத்துவமனையில்
தான் இருப்பான் என மனம் நச்சரித்துக் கொண்டே இருக்க, ரோஷம் மானம் எல்லாம் எங்கோ ஒளிந்து கொள்ள, தயங்கியபடியே அவனுக்கு அழைப்பை விடுத்தாள். முதல்முறை முழுவதும் அழைப்புச் சென்று துண்டாக, மனம் சோர்ந்து போனது.
இரண்டாம் முறையாக முயற்சித்துப் பார்க்கலாம் என நேசம் கொண்ட மனம் அவளை உந்த, மீண்டும் அழைத்தாள். அழைப்பு துண்டாகச் செல்லும் தருவாயில் ஏற்றிருந்தான். இப்போதுதான் அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு வந்தவன், அழைப்பை ஏற்றுக் காதில் பொருத்தினான். ஆனால் பேசவில்லை.
“ராம்...” என்றாள் இவள் தயங்கி.
“ஹம்ம்...” என்றவன் இருக்கையில் அப்படியே சாய்ந்து கண்களை மூடி மூச்சை இழுத்துவிட, ஐந்து மாதங்கள் கழித்தான அவனது குரலில் இவளுக்கு விழிகள் ஈரம் கோர்க்கப் பார்த்தது.
“என் மேல கோபம் போகலையா ராம்? எவ்வளோ மெசேஜ், எத்தனை கால். எதுக்குமே ஏன்டா ரிப்ளை பண்ணலை?” எனக் கேட்டவளின் குரல் கலங்கிப் போயிருந்ததது. மறுமுனையில் இருந்தவனும் அதை உணரத்தான் செய்தான். ஆனாலும் பதிலளிக்கவில்லை.
“ஐ மிஸ்ட் யூ ராம். உன்னைப் பார்க்கணும் போல இருக்கு டா!” என்ன முயன்றும் அவளது அகம் குரலில் வெளிப்பட்டு விட, மறுபுறம் அதே மௌனம்தான். அழுதுவிடக் கூடாது என பெண் வெகு கவனமாய் பேசினாள்.
“ஏன் டா அமைதியா இருக்க. எதாவது பேசித் தொலையேன். ஐஞ்சு மாசமாச்சு டா உன் முகத்தைப் பார்த்து, உன் குரலைக் கேட்டு. அப்படியென்ன நான் வேண்டாதவளா போய்ட்டேன். உனக்கு என்னைப் பார்க்காம இருக்க முடியுது. ஆனால் என் பாழா போன மனசு உன்கிட்ட பேசணும், பார்க்கணும்னு அனத்திட்டே இருக்கு டா!” அவள் குரலிலிலிருந்த வேதனைக்கு சற்றும் குறையாது ரகுராமும் காயத்ரியை அத்தனையாய் தேடியிருந்தான்தான். ஆனாலும் என்னவோ ஒரு வீம்பு. இவளுக்கு நான் வேண்டும் என்றால் திருமணத்திற்கு சம்மதம் சொல்லட்டும் என அவள்புறம் சாய்ந்திருந்த மனதை இழுத்துப் பிடித்து வைத்திருந்தான். ஆனால் இன்றைக்கு அவள் அழைக்கவும் மனம் கோபத்தையெல்லாம் விடுத்து ஏற்றுப் பேசச் சொல்லியது. ஆனாலும் வாயை இறுகப் பூட்டியிருந்தான்.
“ராம்... மனசு உன்னை ரொம்ப தேடுது போல. நானும் ரோஷமா இருந்துடலாம்னுதான் பார்க்குறேன். ஆனாலும் உன்கிட்ட ரோஷ மானம் பார்க்க முடியலை டா. ஹாஸ்பிடல்தான் இருக்கேன். என் ராமை எனக்குப் பார்க்கணும். நீ இப்போ கிளம்பி வர்ற டா!” கலங்கிய குரலை மறைத்து அதட்டலாய் உரைத்தாள். அவன் எதுவும் சொல்வது அழைப்பைத் துண்டிக்க, காயத்ரி வேதனை அப்பிய விழிகளுடன் அலைபேசியைப் பார்த்தாள்.

தொடரும்...





















































 
Top