• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 12 💖
“கதவை திற டீ!” அவன் அதட்டலிட, சாவியை எடுத்துச் சென்று திறந்த காயத்ரி, “இந்த டைம்ல எதுக்கு வந்திருக்க ராம்? என்ன எதுவும் பிரச்சனையா?” எனப் புரியாதது போல வினவினாள். இவனிடம் மெல்லிய பெருமூச்சு மட்டுமே எழுந்தது. நெற்றியை ஒரு விரலால் கீறியவன், “சாரி டி... மிட் நைட்ல உன்னை டிஸ்டர்ப் பண்றேன்!” மெதுவாய் பேசினான்.
“உள்ளே வா நீ!” என அவனை அழைத்துச் சென்று அமர வைத்தவள் நீரை எடுத்து வந்து பருகச் செய்துவிட்டு வெகு கவனமாய் அவனிடமிருந்து தள்ளி வேறொரு இருக்கையில் அமர்ந்தாள். ரகுராம் எதுவும் பேசாது சுவரிலிருந்த கடிகாரத்தையே வெறித்திருந்தான். ஏனோ எத்தனை முயன்றும் அவனால் விரைவில் வர முடியாது போயிற்று.
அவனது முகத்தையே பார்த்திருந்தாள் காயத்ரி. கலக்கம் சூழ்ந்த விழிகளும் குற்றம் செய்த பாவனையும் இவளை இளகச் செய்திருந்தன. முன்பே கோபம் இல்லை. வருத்தம்தான். ஆனாலும் காண்பித்துக் கொள்ளவில்லை.
“என்னாச்சு ராம்? எதுவும் பிரச்சனையா?” என ஆதரவாகக் கேட்டாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், “சாரி காயூ...” என்றான் வருத்தம் மேவிய குரலில்.
“எதுக்கு டா?” அவளது கேள்வியில் இன்னுமே இவன் காயம்பட்டான்‌.
“ஹம்ம்... அது உன் பெர்த் டேவை மறந்துட்டேன் காயூ. நிஜமா வேணும்னு பண்ணலை டி. வொர்க் டென்ஷன். சைந்தவியோட ஃப்ரெண்ட்ஸ்க்கு சின்ன பார்ட்டி கொடுக்க திருப்பூர் வரைக்கும் போய்ட்டேன். அதானல தான்... சாரி, சாரி!” என அவன் பேசப் பேச காயத்ரியின் முகம் மாறிற்று. அவள் மூளைக்கு காரணம் இதுவாக இருக்கலாம் என ஏற்கனவே தெரிந்த போதும் அவன் வாய் மொழியாய்க் கேட்கவும் அதிகமாய் வலித்தது.
வெகு கவனமாய் அவன் பார்வையிலிருந்து அதை மறைத்தவள், “ப்ச்..‌‌ ராம். இதுக்கா இந்த மிட் நைட்ல அரக்கப்பறக்க ஓடி வந்த. நான் எதுவும் நினைக்கலை டா. நீயே மேரேஜ் பிஸில இருப்ப. என் பெர்த்டேக்கு விஷ் பண்ணலைன்றது எல்லாம் பெரிய விஷயம் இல்லை டா. இட்ஸ் நாட் அ பிக் டீல் மேன்!” என்றாள் அதிராமல் புன்னகைத்து. உன்னுடைய வாழ்த்தின் இன்மையோ உன்னுடைய இன்மையோ எங்கேயும் என்னைப் பாதிக்கவில்லை என்பதைப் போலத்தான் காயத்ரின் குரல் இருந்தது. இவன் வாழ்த்தை தெரிவிக்காததற்கு திட்டியிருந்தாலோ அல்லது அடித்திருந்தாலோ கூட இத்தனை வலித்திருக்காது. ஏனோ பேச்சிலே எட்ட நிறுத்திய அந்நிய பாவனையில் இவனுக்கு மனம் முழுவதும் வேதனை படர்ந்தது‌.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், “உன் கோபம் எனக்குப் புரியுது காயூ. பட், நான் வேணும்னு செய்யலை டி. மறந்துட்டேன்!” என்றவன் எட்டி அவளது கையைப் பிடித்தான்.
மெதுவாய் அவனிடமிருந்து கரத்தை விலக்கியவள், “ப்ம்ச்... லூசா ராம் நீ? எனக்கு கோபம் எல்லாம் இல்ல டா. இன்பேக்ட் பெர்த் டே செலிபிரேட் பண்ற வயசெல்லாம் தாண்டிட்டேன் நான். யார் விஷ் பண்ணா, பண்ணலைன்னு ஞாபகம் கூட இல்ல. நீ வந்து விஷ் பண்ணலைன்னு சொல்றப்போ தான் ராம் விஷ் பண்ணலைன்னு எனக்குத் தோணுது. நானே வயசாகிட்டே போகுதே. அப்பா மேரேஜ்க்கு கம்பெல் பண்ணுவாரேன்னு அந்தக் கவலைல இருந்தேன்!” கேலியான குரலில் நான் நன்றாய் இருக்கிறேன் எனக் கூற முயன்றாள். சர்வ நிச்சயமாய் நன்றாக இல்லைதான். ஆனாலும் எங்கேயும் தன்னை வெளிப்படுத்திக் விடக் கூடாது என்றொரு உறுதி மனம் முழுவதும் இருந்து தொலைத்தது. உயிர் தோழனே ஆகினும் அவனுக்கொரு குடும்பம் என்று வருகையில் தான் இரண்டாம்பட்சமாக போய்விட்டதில் அவளுக்கொன்றும் பெரிதாய் வருத்தமில்லை. சற்று நேரத்திற்கு முன்னிருந்த மனநிலை எல்லாம் வடிந்திருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் சென்றால் நடந்ததை மறந்துவிட்டு அவளுடைய இயல்பு வாழ்க்கைக்குப் பழகி இருப்பாள். இதுதானே வாழ்வின் நிதர்சனமும் கூட.
“நீ என்கிட்ட திட்டி கோபப்பட்டிருந்தா கூட எனக்கு வலிச்சிருக்காது காயூ. யாரோ மாதிரி பேசவும் ஒரு மாதம் மனசெல்லாம் வலிக்குது காயூ. ஏன் டி இப்படி பேசுற?” வேதனை ததும்பிய குரல் சர்வ நிச்சயமாய் இவளைப் பாதித்தது தான். உதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கியவள் தயங்கியபடியே மெதுவாய் அவன் தோளில் தட்டிப் புன்னகைத்தாள்.
“நான் கோபப்பட்டா எல்லாமே மாறிடுமா ராம்? மோர் ஓவர் என் கோபத்துல எந்த நியாயமுமே இருக்கதா எனக்குத் தோணலை. உனக்கே மேரேஜ் டென்ஷன், வொர்க் டென்ஷன். இதுல என் பெர்த் டேக்கு விஷ் பண்ணலைன்னு நான் சண்டை போட்டா எது எவ்வளோ சைல்ட் டிஷ்ஸா இருக்கும். அதுவும் இல்லாம கூட இருக்கவங்க பெர்த் டே விஷ் பண்ணலைன்னு நான்லாம் அழணும்னா, வருஷம் முழுக்க அழுகணும் டா. ஏன்னா, என்னைப் பெத்தவருக்கு என் பெர்த் டே டேட்டே தெரியாது. நானா போய் சொன்னா கூட, நல்லா இரும்மான்னு ரெண்டு வார்த்தை சொல்லுவாரு. அவ்வளோ தான் என் பெர்த் டே. பிறந்தாள் கொண்டாட்றதெல்லாம் அம்மா இருந்தவரைக்கும் தான் ரகு. அப்புறம் எல்லா நாள் போல அதுவும் ஒருநாள். அவ்வளோ தான். இதோ, இன்னைக்கு கூட அம்மாவோட புடவையை தான் கட்டுனேன். புது ட்ரெஸ் எல்லாம் எடுக்கணும்னு கூடத் தோணலை. அவ்வளோதான் என் பெர்த் டே ராம். சோ உனக்கு கில்டி கான்ஷியஸ் எல்லாம் வேணாம். இனிமே என் பெர்த் டேவை மறந்தா தப்பில்லை. சைந்தவியோட பிறந்தாளை மட்டும் மறக்காத. அதை ஞாபகம் வச்சுக்கிட்டா போதும் டா. இல்லைன்னா உனக்குத்தான் சேதாரம் அதிகம்!” என கேலியாய்ப் பேசி சூழ்நிலையை இயல்பாக்க முயன்றவளை அவன் வெற்றுப் பார்வை பார்த்தான். இந்தப் பெண் தன்னிடமிருந்து மொத்தமாய் விலகிவிட்டாள் என்ற நிதர்சனத்தை வலிக்க வலிக்க ஏற்றுக் கொண்டிருந்தான். விழிகள் எல்லாம் கலங்கப் பார்த்தன.
“ஹம்ம்... நான் சொல்லிக் காட்டுறேன்னு நினைக்காத ராம். அன்னைக்கு நான் சொன்னப்போ உனக்கு கோபம் வந்தது. பட் திஸ் இஸ் தி ரியாலிட்டி. வீ ஹேவ் டூ அக்செப்ட் இட் அண்ட் மூவ் ஆன். நீ விஷ் பண்ணலைன்னு இல்ல, யார் விஷ் பண்ணாலும் பண்ணலைனாலும் காலம் யாருக்காகவும் நிக்காது டா!” என மென்முறுவலுடன் கூறியவளை அமைதியாகப் பார்த்தவன், தன் கையிலிருந்த நெகிழிப்பையை நீட்டினான்.
“என்ன ராம் இது?” கைகள் நீளவில்லை. கேள்வி முன்னே வந்து விழுந்தது.
“ஹேப்பி பெர்த் டே காயூ!” அவள் முகம் பார்த்து அவன் ஆழ்ந்து கூற, “ஓ... தேங்க் யூ ராம்!” என சிரிய புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள். அவ்வளவே மற்றபடி பெரிதாய் அதைப் பிரிக்கும் ஆர்வமோ ஆசையோ அவளிடம் துளியேனும் இல்லை. ஒவ்வொரு முறையும் இவனது பரிசு என்னவாக இருக்குமோ என ஆசையாய் பிரிக்கும் காயத்ரி மனக்கண்ணில் வந்து போனாள். அட்சர சுத்தமாக இவள் என் காயூ இல்லை. இந்தப் பெண் ஒரு வார்த்தையில் பாவனையில் என்னை எட்ட நிறுத்தி அந்நியப்படுத்துகிறாள் என மனம் வெதும்பியது.
“நான் கிளம்புறேன் காயூ!” என அவன் எழுந்து நிற்க, தலையை சரியென அசைத்தாள். அவன் இரண்டெட்டுகள் வைக்க, “ராம், சாப்டீயா நீ?” எனக் கேட்டாள். அந்தக் கேள்வியில் நொடியில் இவனுக்கு அடிவயிற்றிலிருந்து தொண்டையை ஏதோ அடைக்கும் உணர்வு.
தன்னை சரி செய்தவன், “சாப்டேன் காயூ!” என்றான்.
“பொய் சொல்லாத ராம். உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது. பசியில இருக்க நீ. ட்ராவல் பண்ணது வேற டயர்டா இருக்கும். நீ வந்து உக்காரு. சாப்ட்டு போ, இல்லைன்னா தூக்கம் வராது டா!” என அன்பாய் கட்டளை இட்டவள் உள்ளே சென்று இரவு சமைத்த உணவை சூடு செய்து எடுத்து வந்தாள்.
“ஸ்பெஷல் எல்லாம் எதுவும் இல்ல ராம். வெஜ் ரைஸ் வித் குருமா தான் செஞ்சேன். பரவாயில்லாம இருக்கும். சாப்பிடு!” என்றவள் உணவைப் பரிமாறிவிட்டு அவனுக்கு இரண்டு முட்டைகளை ஆம்லேட் செய்து எடுத்து வந்து கொடுத்தாள். அவன் உண்டு முடிய முடிய அவன் தட்டை நிரப்பியவள், அவனை ஆதுரமாகப் பார்த்தாள்.
அந்தப் பார்வை உணர்ந்தவனும் நிமிர்ந்து, “சாரி காயூ!” என்றான் குரல் கலங்க.
“ப்ம்ச்... சாப்பிடும்போதும் என்னடா உனக்கு?” என அதட்டலாய் அவனருகே எழுந்து நின்றவள் அவனது தலையைக் கலைத்துவிட்ட நொடி, “காயூ!” என்றவன் உண்ட கையோடு அவளை இடையை சுற்றி அணைத்து முகத்தை அவளது வயிற்றில் முகம் புதைக்க, காயத்ரியிடம் பெரும் பிரளயம் வெடித்திருந்தது. நெஞ்சம் திடுக்கிட்டு போக, “ராம், முதல்ல என்னை விடுடா!” என்றாள் குரல் நடுங்க.
“ஹ்கூம்..சாரி காயூ, நான் என்ன பண்ணியிருந்தாலும் என்னை மன்னிச்சிடு டி. நீ என் கூட பேசாம, உன் முகத்தைப் பார்க்காமல் எல்லாம் என்னால இருக்க முடியாது டி. ஐ மிஸ்ட் யூ அ லாட்!” என அவன் குரலிலிருந்த உணர்வில் இவளது உணர்வுகள் பொங்கிப் பெருகின. கண்களில் குபுகுபுவென கண்ணீர் பெருகியது. இந்தப் பையன் இப்படியெல்லாம் செய்தால் எப்படி அவனை விட்டுக் கொடுக்க இவளுக்கு மனம் வருமென காயத்ரிக்கு அழுகையாய் வந்தது. எங்கே தானும் உணர்வுகளைக் கொட்டிக் கவிழ்த்து விடுவோமோ என மனம் அஞ்ச, “ராம், முதல்ல என்னை விடு!” என்றாள் அதட்டலாக. அவளுக்கு அவளையே சமாளிக்க வேண்டியிருந்தது. அவனை வயிற்றோடு புதைத்துக் கொள்ளச் சொல்லி மனம் பரபரத்தது. கைகளை இறுக மூடிக் கொண்டாள். சைந்தவி கண் முன்னே வரவும் இன்னுமே அவள் இறுகிப் போனாள்.
“முடியாது!” என முணுமுணுத்தவன் ஒரு நிமிடம் முழுதாய் அவளை அணைத்திருந்தே விடவும், காயத்ரியின் மனம் துடித்துப் போனது. விறுவிறுவென சமையலறைக்குள் சென்றாள். தேம்பி அழ முயன்ற மனதை அதட்டி உருட்டி சமாதானம் செய்து அழுத விழிகளைத் துடைத்துக் கொண்டு பழைய திடத்துடன் வெளியே வந்தவள், “சாப்ட்டு இப்போ கிளம்புற ராம். இனிமே அன்-டைம்ல வீட்டுக்கு வராத. எனக்குப் பிடிக்கலை!” என்றாள் கண்டிப்பான குரலில். அவன் இவளை நிமிர்ந்து பார்க்காது உண்டு முடித்து கிளம்பினான். காயத்ரியும் அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அவன் அகன்றதும் பட்டென கதவை சாற்றினாள். சில பல நிமிடங்கள் நீள்விருக்கையில் தலையைப் பிடித்து அமர்ந்திருந்தாள். மிக மிக மெதுவாய் மனம் சமன்பட்டது. அருகேயிருந்த அவன் வாங்கிக் கொடுத்த உடையை பிரித்துக் கூடப் பார்க்காதவள் அதை அப்படியே நிலை பேழையில் வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தாள். அழக்கூடாது என்ற வைராக்கியம் கண்ணீரைக் கட்டுப்படுத்தியிருந்தது. தூரச் சென்றிருந்த உறக்கத்தை வெகு கட்டாயப்படுத்தி இழுத்து உறங்கிப் போனாள். ஆனால் ரகுராம் உறங்காது விழித்தே கிடந்தான்.

காலையில் எழுந்த காயத்ரிக்கு இரவு நடந்தது எல்லாம் நினைவில் நின்றது. இது எதுவும் தன்னைப் பாதிக்கவில்லை என்றொரு திடமிருந்தது அவளிடம். எப்போதும் போல வேலைக்கு கிளம்பிச் சென்றாள். வேலை முடிந்து வந்தாள். வீடு, மருத்துவமனை என அவளது நாட்கள் நகரத் தொடங்கின.
 
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
ரகுராம் தினமும் இவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். அவளது நலத்தை விசாரித்துக் கொண்டான். நேரில் வர முயலவில்லை. அதற்கு காயத்ரியும் ஒரு காரணம். அன்றைக்கு அவன் அணைத்தது சரியில்லை என மறுநாள் அழைத்து அவனைக் கண்டித்திருந்தாள். இனிமேல் திருமணம் முடியும்வரை வீட்டிற்கு வரக் கூடாது என்று விட்டாள். அவன் முதலில் மறுக்க, “நான் சொல்றதை நீ கேட்கணும் ராம். கேட்டா நான் உனக்கு ப்ரெண்டா இருப்பேன். இல்ல, எப்பவுமே இந்த காயத்ரி உன்கூட பேச மாட்டா!” என அவள் அழுத்திச் சொல்லிவிட, இவன் தவித்துப் போனான். அவளைப் பற்றி அவனறியாதது இல்லை. சொன்னால் சொன்னதை செய்துவிடக் கூடியவள் காயத்ரி. அவனைப் போல் எல்லாம் அவள் அத்தனை எளிதில் உடைந்துவிடக் கூடியவள் இல்லையே. இதோ இப்போது கூட தங்களுக்கு இடையே அனைத்தும் சரியாய் இருக்கிறது எனப் பொய்யாய் ஒரு அரிதாரத்தைப் பூசிக்கொண்டு ஸ்திரமாக இருக்கிறாளே. மனதில் எத்தனை வலிகள், வாதைகள் இருந்தும் அதை வாயை திறந்து உரைத்த கணங்கள் எல்லாம் வெகு வெகு சொற்பம். அப்படி இருக்கையில் இவன் அவளது பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து காயத்ரி வீட்டிற்கு செல்லவே இல்லை.
தங்கராஜிற்கு முறையாய்ப் பத்திரிகை வைக்க வேண்டும் என இவன் கேட்க, “நோ நீட் ராம். அப்பா அப்படியெல்லாம் பார்மாலிட்டீஸ் பார்க்குற மனுஷன் இல்ல. நீ கூப்ட்டுத்தான் நீங்க வரணும்னு இல்ல. அப்படி மூனாவது மனுஷங்க மாதிரி இன்வைட் பண்ணணும்னு தோணுச்சுன்னா நீ ஒருநாள் வந்து குடுத்துட்டு போ!” என அவள் கூறிவிட, இவனால் பதிலுரைக்க முடியாது போயிற்று. வேண்டுமென்றே தான் இப்படி பேசுகிறாள் என அவனுக்கும் புரிந்ததுதான். எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நின்றவன், “சரி காயூ...” என அழைப்பைத் துண்டித்திருந்தான்.
திருமண வேலைகள் வெகுசிறப்பாய் நடை பெற்றன. ஊரெங்கும் பத்திரிகை வழங்கப்பட்டது. தேவராஜின் உறவினர்கள் அனைவருக்கும் பத்ரிக்கை வைத்து முடிய, கௌதமி பக்க ஆட்களையும் அழைத்து முடித்திருந்தனர். ரகுராம் உடன் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரையும் அழைத்திருந்தான். தந்தை, மகன் இருவரும் அங்கே வெகு பரிட்சயம். அதனால் மருத்துவமனை காவலாளி முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் அவனது நட்பு பட்டியலில் இருந்தனர். சென்ற மாதமே விடுப்பிற்கு விண்ணப்பித்திருக்க, இதோ ஒரு வாரம் விடுப்பெடுத்துவிட்டான்.
திருமணம் முடிந்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் பணிக்குத் திரும்பினால் போதும் என தலைமை மருத்துவர் புன்னகையுடன் இவனுக்கு வாழ்த்தையும் தெரிவித்திருக்க, நன்றி கூறி விடை பெற்றிருந்தான்.
அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை திருமணம் என்றிருக்க, செவ்வாய் கிழமையே மூன்று அத்தைகளும் இங்கே வருவதாய் ஏற்பாடாகியிருந்தது. புதன்கிழமை மாலையே இளவேந்தன் மொத்தக் குடும்பத்தோடு இங்கே திருப்பூர் வந்துவிடுவதாக உரைத்திருந்தான். ரகுராம் வீட்டில் அத்தனை பேரும் தங்க இயலாது என்பதால் அவர் ஐந்து நட்சத்திர விடுதியில் அறை எடுப்பதாக கூற, “வேணாம் மாப்பிள்ளை. எங்களுக்கு பூர்வீக வீடு அங்கதான் இருக்கு. புதுக்கோட்டை தானே சொந்த ஊர். திருப்பூருக்கு பிஸ்னஸ்காகாத்தான் வந்தோம். அங்க அப்பாவோட தாத்தா வழி வீடு ஒன்னு இருக்கு. அந்தக் காலத்துல கட்டுன வீடுதான். ரெனோவேட் பண்ணி பக்காவா ரெடி பண்ணியாச்சு. கல்யாணத்துக்கு சைந்தவிக்கு அந்த வீட்டை கொடுக்கலாம்னு அப்பா சொன்னாரு. நல்ல ஐடியாவா இருந்துச்சு. அதான் வீட்டை ரெடி பண்ணிட்டோம்!” என மகிழ்வேந்தன் உரைத்திருந்தான். ரகுராமிற்கு வரதட்சணை பெருவதில் விருப்பமில்லைதான். ஆனால் அது சைந்தவியின் உரிமை. பெண்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு‌. அவள் வேண்டாம் என்று விருப்பப்பட்டால் மறுத்து விடலாம் என இவன் அவளிடம் பேச, “இல்ல ரகு, அந்த வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும். தாத்தா பாட்டி இருக்கும்போது அங்க இருந்த ஞாபகம் இன்னுமே இருக்கு. அதை வாங்கிக்கிறதுல எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல. அதுவும் இல்லாம அக்காவுக்கு கல்யாணம் பண்ணும்போது அப்பா அவளுக்கும் மாமாவுக்கும் ஒரு புது வீடு வாங்கி கொடுத்தாரு. எனக்கும் புதுசா வாங்கலாம்னு சொன்னாரு‌. நான்தான் இந்த வீடே போதும்னு சொல்லிட்டேன். வாங்கிக்கலாம் பா!” என அவள் கூற, ரகுவும் ஒப்புக் கொண்டிருந்தான். அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தவன் எவ்வித மறுப்பையும் தெரிவிக்கவில்லை.
காயத்ரி அன்றைக்கு வேலை முடித்து மருத்துவமனையிலிருந்து கிளம்பினாள். மதிய நேரம் பன்னிரெண்டு மணிக்கு சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தார். மே மாதத்திற்கே உரிய வெயில் வாட்டி எடுத்தது‌.
தனது இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்த காயத்ரி மருத்துவமனை பிரதான கதவைக் கடந்து சாலையை அடைந்தாள். சிவப்பு வண்ண சமிக்ஞை விழுந்ததும் வாகனங்கள் அப்படியே சாலையைக் கடக்காது நின்றுவிட, இவளும் நின்றிருந்தாள். முழுதாய் ஒருநிமிடம் கடந்ததும் பச்சை விளக்கு ஒளிர, இவள் வாகனத்தை இயக்கி வலதுபுறம் செல்லத் திரும்ப, அந்நேரம் அவளுக்கு எதிர் திசையில் வந்த மகிழுந்தைக் கவனிக்காதவள் சாலையில் வளைந்து செல்ல முயன்ற கணம் அந்த வாகனம் இவளை இடித்திருந்தது.
நொடியில் விபத்து ஏற்பட்டிருந்ததால் அவளால் வாகனத்தை திடமாய் பிடிக்க முடியவில்லை. கீழே விழச் சென்றவள் வலது கையை ஊன்றியிருக்க, தலை தரையில் மோதி குருதி கசியத் தொடங்கியது. அழுத்தமாய் ஊன்றியதால் சட்டென தோள்பட்டையிலிருந்த எலும்பு லேசாய் விலகிவிட, இவளுக்கு வேக வேகமாக கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. வலி உயிர் போனது. கையை ஆடாது அசையாது மறுகையால் பிடித்துக் கொண்டாள். ஒரு பக்க நெற்றியில் வழிந்த ரத்தம் முகத்தை நனைத்தது.
அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. மருத்துவமனை அருகே விபத்து நடந்ததால், “சீக்கிரம் ஹாஸ்பிடல்க்கு கூட்டீட்டுப் போங்கப்பா. கைல எலும்பு உடைஞ்சிடுச்சு போல!” என முதிய பெண்மணி ஒருவர் அவளைக் கைத்தாங்கலாக எழுப்ப, தானி ஓட்டுநர் ஒருவர் முன் வந்தார். அதற்குள் சாலை போக்குவரத்து காவல் துறையினர் வந்துவிட்டனர்.
அவளது வாகனத்தை ஓரமாய் எடுத்து நிறுத்தப்பட்டது. மகிழுந்து ஓட்டி வந்தப் பெண்மணி குழந்தைகளோடு நின்றிருந்தார். அவரது முகத்தில் கலவரம் தெரிந்தது.
காயத்ரியோடு அந்தப் பெண்மணியும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தாள். அவசர சிகிச்சை பிரிவில் அவள் அனுமதிக்கப்பட்டாள். இந்தப் பெண்மணி வெளியே காத்திருப்பு இருக்கையில் அமர்ந்தாள். உடன் நான்கு மற்றும் எட்டு வயதில் குழந்தைகள் நின்றிருந்தனர். சிறிது நேரம் மூளை ஸ்தம்பித்து அமர்ந்திருந்தவர் உடனே கணவருக்கு அழைத்துவிட்டார். அவரது கணவர் வந்ததும் காவல் துறை அதிகாரியும் வந்து என்னவென விசாரித்தார். உள்ளே காயத்ரிக்கு சிகிச்சை நடைபெற்றது. அவள் மயக்கநிலைக்கு சென்றிருந்தாள்.
அரை நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்தார்.
“அவங்களுக்கு ரைட் சைட் ஷோல்டர்ல எலும்பு விலகிருச்சு. ஷி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சரஸ். பட், கை சரியாக ரெண்டு மாசமாவது ஆகும். இன்னும் மூனு வாரத்துக்கு கையை அசைக்கவே கூடாது.
நெத்தில சின்ன இஞ்சுரிதான். பயப்பட்ற அளவுக்கு ஒன்னும் இல்ல. ஷி இஸ் வெல் நவ். கண்ணு முழிச்சதும் ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுவோம். அப்புறம் போய் பாருங்க!” என அவர் காவலரிடம் கூறி அகல, அந்தப் பெண்மணிக்கு அப்போதுதான் உயிரே வந்தது.
காயத்ரி சில பல மணி நேரங்கள் கழித்து கண்விழித்தாள். வலியில் முகம் சுருங்கியது. மங்கலாக இருந்த விழிகளை சிமிட்டினாள். கழுத்தோடு சேர்த்து கையில் கட்டுப் போட்டிருந்தனர். மயக்க மருந்தின் உதவியால் சரியாய் வலி தெரியவில்லை. இருந்தும் வலித்தது. நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். சின்னதாய் பஞ்சு வைத்து பிளாஸ்திரி ஒட்டியிருந்தனர்.
கண்களை மூடி மெதுவாய் எழுந்தமர்ந்து கட்டிலில் சாய்ந்தாள். அவளுக்கு இரண்டு புறமும் நோயாளிகள் வரிசையாய் கட்டிலில் படுத்திருந்தனர். மருத்துவர்களும் செவிலியர்களும் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறிது நேரம் முன்புதான் இவளை இந்த அறைக்கு மாற்றியிருந்தனர்.
“கண் முழிச்சுட்டீயா மா? இந்த மாத்திரையைப் போடணும்மா. எதாவது சாப்ட்டு போடு. வெறும் வயித்துல போடாதம்மா!” என அவளுக்கு அருகே இருந்த மேஜையில் மாத்திரைகளை வைத்துவிட்டு வெளியே சென்ற செவிலிப் பெண், “அந்த ஆக்ஸிடென்ட் கேஸ் பொண்ணு கண் முழிச்சிடுச்சு. யார் அட்மிட் பண்ணது. வந்து பார்க்குறதுன்னா பாருங்க. சாப்பாடு வாங்கிக் கொடுங்க!” என அவர் கூற, அந்தப் பெண்மணி எழுந்து வந்தார்.
“ஏங்க, நீங்க போய் அவங்களுக்கு சாப்பாடு எதுவும் வாங்கிட்டு வாங்க‌. நான் பேசுறேன்!” என்றுவிட்டு அவர் உள்ளே நுழைந்து காயத்ரி அருகே வந்தார்.
இவள் அவரைக் கேள்வியாகப் பார்க்க, “நான் நிர்மலா, என்னோட கார் இடிச்சுதான் நீங்க கீழ விழுந்தீங்க. ஆக்சுவலி மிஸ்டேக் என் மேல இல்ல. நான் சரியாதான் வந்தேன். நீங்கதான் பார்க்காம வந்தீங்க!” என அவர் படபடவென பதற்றத்தில் உரைத்தார்‌.
“யெஸ் நிர்மலா, நான்தான் பார்க்காம வந்து இடிச்சுட்டேன். உங்க மேல எந்த மிஸ்டேக்கும் இல்ல. உங்களை நான் ப்ளேம் பண்ணவும் இல்ல. ரிலாக்ஸ் அண்ட் தேங்க்ஸ். என்னை இங்க வந்து அட்மிட் பண்ணி கூடவே இவ்வளோ நேரம் இருந்ததுக்கு!” என்றாள் முகத்தில் வலியைக் காட்டாது புன்னகைத்து. அந்தப் பெண்மணியின் முகம் அப்போதுதான் தெளிந்தது.
“ஓகே... போலீஸ் உங்ககிட்டே விசாரிச்சுட்டுத்தான் கேஸ் ஃபைல் பண்ணணும் சொல்லி இருக்காங்க!” இவர் தயங்க,
“டோன்ட் வொர்ரீ. அந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் நான் பார்த்துக்கிறேன். உங்க மேல எந்த கம்ப்ளைன்டும் இருக்காது. நீங்க பயப்பட தேவையில்ல. நீங்க கிளம்புறதுன்னா கிளம்புங்க. போலீஸ் எப்படியும் என்கிட்டே தானே விசாரிப்பாங்க. ஐ வில் ஹேண்டில்!” என்றாள் அவருக்கு தைரியம் கூறும் விதமாக. அந்தப் பெண்மணி தலையை அசைத்துவிட்டு அவளது கைப்பையைக் கொடுத்தார்.
“ஸ்கூட்டீ போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கு. நீங்க போய் கேட்டு வாங்கிக்கோங்க!” என நிர்மலா கூற, தலையை அசைத்து ஏற்றுக் கொண்டாள். அவரின் கணவர் உணவு பொட்டலத்துடன் உள்ளே வந்தார்.
“இந்த சாப்பாடு உங்களுக்குத்தான். சாப்பிட வச்சு மாத்திரை போட சொன்னாங்க நர்ஸ்!” நிர்மலா அவளிடம் உணவை நீட்ட, “நோ... நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத செலவு?” என இவள் மறுத்தாள்.
“பரவாயில்லை சிஸ்டர், வாங்கிக்கோங்க!” என அந்த ஆடவன் வற்புறுத்த அதை வாங்கிய காயத்ரி ஒற்றைக் கையால் தனது கைப்பையை எடுத்து நிர்மலாவிடம் உணவிற்கானப் பணத்தை நீட்டினாள். அவர் வாங்க மாட்டேன் என மறுக்க, கட்டாயப்படுத்தி கொடுத்தவள், “உங்க பசங்களா? எட்டிப் பார்த்துட்டே இருக்காங்க. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க!” என்றாள்.
“இல்ல... உங்களைத் தனியா விட்டுட்டு எப்படி கிளம்புறது. வீட்ல இருந்து யாரையும் வர சொல்லுங்க‌. அவங்க வந்ததும் நாங்க போறோம்!” நிர்மலா கூற, “நான் இந்த ஹாஸ்பிடல்லதான் வொர்க் பண்றேன். என் ஃப்ரெண்டைக் கூப்ட்டா டூ மினிட்ஸ்ல வந்துடுவா. நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க!” என அவள் எத்தனைக் கூறியும் அவர்கள் காதில் வாங்கவில்லை. அலைபேசியை எடுத்தவள் கார்த்திகாவை வரக் கூறினாள். என்னவென தெரியாவிட்டாலும் கார்த்திகா இவள் அனுமதித்திருக்கும் பகுதிக்குள் நுழைந்தாள்.
தோழியைக் கையில் கட்டுடன் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
“ஹே... காயூ, என்னடி... ஏன், எப்படி இப்படியாச்சு?” என அவள் பதற, “கார்த்தி, ரிலாக்ஸ். வண்டி ஸ்லிப் ஆகிடுச்சு. சோ, லைட்டா காயம். வேற எதுவும் இல்ல!” என அவளை அமைதிப்படுத்தியவள், “நிர்மலா, இவதான் என் ஃப்ரெண்ட். நீங்க கிளம்புங்க!” என அவர்களை அனுப்பி வைத்தாள்.
“ஏன் காயூ, எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு. கேர்லெஸ்ஸா ஓட்டுனீயா?” என அவள் கடிந்தாள்.
“தெரியாம ஸ்லிப் ஆகிடுச்சு. சடன்னா என்ன பண்ணன்னு தெரியாம கையை ஊண்டுனதால எலும்பு விலகிடுச்சுன்னு டாக்டர் சொன்னாரு. மூனு வாரத்துல கட்டைப் பிரிச்சுடலாமாம். பெருசா ஒன்னும் இல்ல!” என்றவள், “எனக்கு காமன் ரூம் ரொம்ப அனிஸியா இருக்கு‌. நீ என்னோட ஸ்டாப் ஐடி காடை காட்டி தனி ரூம் வாங்கு டி!” என்றாள் சோர்வாய்.
“ஓகே வெயிட்...” என்ற கார்த்திகா அந்தப் பிரிவின் மருத்துவரிடம் பேசி காயத்ரியின் அடையாள அட்டையைக் காண்பித்து தனி அறையைக் கேட்டு வாங்கித் தோழியை அங்கே மாற்ற வைத்தாள். அரசு மருத்துவமனையில் படிக்கும் மாணவர்களுக்கும் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஒரு சில பல சலுகைகள் வழங்கப்பட்டன. அதைத்தான் காயத்ரி கார்த்திகாவிடம் கேட்கக் கூறினாள்.

அவளைத் தனி அறைக்கு மாற்றியதும் தந்தைக்கு அழைத்தாள். “என்னம்மா காயூ, ஃபோன் பண்ணா எடுக்கவே இல்லை. லேட்டாகும்னு சொன்ன. ஆனால், இவ்வளோ நேரம் ஆகிடுச்சே மா. ரொம்ப வேலையா?” என அவர் கேட்க, “இல்லப்பா, நீங்க இங்க ஹாஸ்பிடல் வாங்க. பேசிக்கலாம்...” என அவரிடம் எதையும் கூறிப் அச்சப்பட வைக்க விரும்பாதவள், தன்னுடைய அறை எண்ணை மட்டும் பகிர்ந்து வரக் கூறினாள்‌. மேலும் அவருடைய மாத்திரைகளை மறக்காது எடுத்து வர உரைத்தாள்.
“கார்த்தி, அப்பாவுக்கு ரூம் பார்த்து வரத் தெரியாது. கேட்கிட்டே போய் கூட்டீட்டு வரீயா?” இவள் கேட்க, “யெஸ் டி... நான் கூட்டீட்டு வரேன். உனக்கு ஜூஸூம் வாங்கிட்டு வரேன்” என நகர்ந்த கார்த்திகாவின் அலைபேசி இசைத்தது. நந்தேஷ்தான் அழைத்திருந்தான். என்னவென அவன் விசாரிக்க, இவள் நடந்ததைக் கூறவும் விறுவிறுவென காயத்ரியைப் பார்க்க வந்துவிட்டான்.
“பார்த்து ட்ரைவ் பண்ணலாம் இல்ல காயூ? ரொம்ப அடியா? டாக்டர் என்ன சொன்னாங்க. உங்களுக்கு மெடிகல் லீவ் நானே அப்ரூவல் பண்ணி விடுறேன். நீங்க மத்த எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க. உடம்பு நல்லா குணமானதும் வேலைக்கு வாங்க!” என அவன் அக்கறையுடன் கூற, “ஓகே சார், தேங்க் யூ!” என்றதோடு இவள் முடித்துக் கொண்டாள். வேறு எதுவும் வேண்டுமா என அவன் கேட்க, இவள் இல்லையென கூறி அவனை அனுப்பி வைத்தாள்.
“உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் ஜஸ்ட் ஒரு கால் பண்ணுங்க காயூ. உடனே வந்துடுறேன்...” என்றவன், “நைட் யாரு உங்க கூட ஸ்டே பண்ணுவா?” என அனைத்தையும் விசாரித்து அவன் அகல, கார்த்திகாவும் தங்கராஜூம் வந்துவிட்டனர்.
மகளை அப்படிக் கண்டதும் தந்தை துடித்துப் போனார். “காயூ, என்னம்மா... ஏன் இப்படி? பார்த்துப் போக வேணாமா?” என அவர் குரல் கலங்கி போனது. மகளுக்கு ஒன்று என்னும் போது தந்தையாய் பரிதவித்துப் போனார்.
“ப்பா... ஒன்னுமே இல்லை. மூனு வாரத்துல கட்டைப் பிரிச்சுடலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு. ஒன்னு ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கப்பா‌‌. பயப்பட எதுவும் இல்ல!” என அவரை இவள்தான் தேற்ற வேண்டியிருந்தது. உண்டுவிட்டு மாத்திரையை விழுங்கினாள். கொடுத்திருந்த மயக்க மருந்தின் வீரியம் குறைய குறைய வலி கொன்றது. தான் அழுதால் தந்தை பயந்து விடுவார் என்று அனைத்தையும் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டாள்.
“காயூ, எனக்கு டைமாச்சு. வீட்ல தேடுவாங்க. நான் கிளம்பவா?” கார்த்திகா தயங்கியபடியே கேட்க, “சாரி கார்த்தி, நீ கிளம்பு.‌ நான் மறந்தே போய்ட்டேன். அம்மா தேடப் போறாங்க, போ. அப்பா கூட இருக்காரு இல்ல, அவர் என்னைப் பார்த்துப்பாரு!” என காயத்ரி கூற, “ஹம்ம்... ரகுராம் சார்க்கு சொல்லலையா காயூ?” எனக் கேட்டாள். அவளறிந்தவரை ரகுவிற்கு தெரியாதது என்று காயத்ரி வாழ்வில் எதுவும் இல்லையே.
“இல்லை கார்த்தி, அவன் மேரேஜ் வொர்க்ல பிஸியா இருப்பான். இதை சொல்லி ஏன் டென்ஷன் பண்ணணும்‌‌. நான் வீட்டுக்குப் போனதும் அவன்கிட்ட சொல்லிக்கிறேன்...” என அவள் கூற, கார்த்திகா தலையை அசைத்து ஏற்றுக்கொண்டு அகன்றாள்.
“ப்பா... இங்க பின்னாடி கேண்டீன் இருக்கு. போய் சாப்ட்டு வந்து சுகர் மாத்திரையும் பீபி மாத்திரையும் போடுங்கப்பா!” என்றாள்.
“இல்லம்மா... நீ தனியா இருப்பீயே. நானும் போய்ட்டா உனக்கு எதாவது வேணும்னா என்ன பண்ண?” என அவர் யோசிக்க, “ப்பா...கைலதான் அடி. கால் நல்லா இருக்கு. நானே நடந்து போய்க்குவேன். இப்போ நீங்க சாப்ட்டு வரணும்!” என அவரை அதட்டி உணவுண்ண வைத்து மாத்திரையும் விழுங்க செய்தவள், “இன்னைக்கு ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணி படுத்துக்கோங்க பா. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க!” என அவரை நாற்காலியில் அமர்ந்து உறங்கக் கூறியவள், தானும் சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தாள். வலியில் தூக்கம் வரவில்லைதான். ஆனாலும் தூங்கி எழுந்தால் நன்றாக இருக்குமென கடினப்பட்டு உறங்கினாள். கையை வேறு அசைக்காது அமர்ந்த வாக்கிலே உறங்க வேண்டும் என்று செவிலியர் கூறிச் சென்றார். இன்னும் மூன்று வாரங்களுக்கு படுக்கவே கூடாது. அமர்ந்தபடிதான் உறக்கம் என நினைத்ததும் இவளிடம் பெருமூச்சு. எதையும் நினைக்காது உறங்கினாள்.
தொடரும்...

அடுத்த அப்டேட்ல ஒரு ப்ரபோசல் சீன் இருக்கு. யாரு யாருக்கு ப்ரபோஸ் பண்றான்னு சரியா சொல்லுங்க டியர்ஸ் 🏃‍♀️🏃‍♀️








































 
Active member
Messages
206
Reaction score
137
Points
43
Yara irukum
Proposal
oruvela synthu seanir ka irukumo🤣🤣🤣🤣
 
Top