• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,314
Reaction score
3,908
Points
113
எழுத்தாளர் ஜானு முருகனின் கலைகளிலே அவள் ஓவியம் யூட்யூப் எக்ஸ்க்ளூசிவ் நாவல். முழு நீள ஆடியோவாக கேட்டு மகிழுங்கள் 🥳🤩 தொடர்ந்து கதைகளைக் கேட்க மறக்காம நம்ப சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோங்க



நேரம் – 35 💜

அந்த மயில் வண்ண புடவையை இரண்டுமுறை மடிப்பெடுத்து முடிக்க முயன்று தோற்ற இசைவாணி, ஒற்றையாய் தோளில் தொங்கவிட்டாள். நன்றாய் இருக்கிறதா எனக் கண்ணாடியில் ஒருமுறை மேலும் கீழாகப் பார்த்தாள். அவளுக்கு சரியாக புடவை உடுத்த தெரியாது.

சுந்தரி அல்லது கமலா என யாரோ ஒருவர்தான் அவளுக்கு புடவையை அணிவித்து விடுவர். இப்போது அவளாக உடுத்த முயல சரியாக வராமல் தடுமாறி அணிந்தாள். ஓரளவிற்கு நன்றாகத்தான் இருந்தது.

வெளியே பரிதி கிளம்பி இவளுக்காகக் காத்திருந்தான். இன்றைக்குத்தான் இளமதியினுடைய அத்தை, மாமாவின் முப்பதாவது திருமணநாள். மாலை அவர்கள் வீட்டுக்குப் முன்புறமிருந்த தோட்டத்தில் சின்னதாய் ஓர் இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். வாணிக்கு அங்கு செல்லவே விருப்பமில்லை. ஆனால் பரிதியும் விக்னேஷூம் அவளைவிடாது வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர். இன்றைக்கு வேலை நாள் என்பதால் இருவருமே அரைநாள் விடுப்பெடுத்துக்கொண்டு வந்து தயாராகினர்.

கையில்லாத மேல் சட்டை அணிந்திருந்தாள் வாணி. சுருட்டை முடி அவள் கைக்கு அடங்காது போக, அதை இழுத்து ஒரு சின்ன கவ்வியில் அடக்கி, பின்பக்கம் முடியைத் தளரவிட்டிருந்தாள். விசேஷத்திற்கு செல்லும் மனநிலை இல்லாததால் ஏனோ தானோவென்றுதான் கிளம்பினாள்.

ஆனாலும் பொது இடத்திற்கு செல்கையில் தான் மட்டும் கீழாகத் தெரிந்துவிடக் கூடாதே என்ற எண்ணம் அவளை உந்தித் தள்ள, கண்ணை உறுத்தாத வண்ணம் மெல்லியதாக ஒப்பனை செய்தாள். கழுத்தை ஒட்டிய ஒரு ஆரமும், ஒருகையில் கடிகாரம், மற்றொரு கையில் சேலைக்கு ஏற்ற நிறத்தில் வளையலும் அணிந்து நெற்றியில் ஒரு பொட்டை மட்டும் ஒட்டிக் கொண்டாள்.

‘போதும்... நல்லாருக்கு!’ தன்னைத் தானே பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டவள், வாசனை திரவியத்தை தெளித்துவிட்டு வெளியே வந்தாள். பரிதி கோட் சூட் அணிந்து நேர்த்தியாய் தயாராகி அமர்ந்திருந்தான். இவள் வந்ததும் அவனது பார்வையில் ஒரு மெச்சுதல் தெரிந்தது.

“நான் சொன்னேன்ல வாணி. யூ லுக் ப்ரிட்டீ. இந்த சேரி உனக்கு ரொம்ப நல்லாருக்கு!” என்றான் ரசனையான குரலில். வாணி சிறு முறுவலுடன் அதை ஏற்று தலையை அசைக்க, இருவரும் மகிழுந்தில் புறப்பட்டனர்.

ஒன்றரை மணி நேரப் பயணம் அது. பரிதி அவளிடம் ஏதோ வளவளத்துக் கொண்டே வர, இசைவாணி சுரத்தை இல்லாமல் வெறுமனே அதைக் கேட்டபடியே வந்தாள். அவர்கள் விழா நடக்கும் இடத்தை அடைய, ஏற்கனவே அங்கே ஒரு கூட்டம் சலசலத்துக் கொண்டிருந்தது.

இவர்கள் இருவரையும் பார்த்ததும் அருகே ஓடி வந்த மதி, “வா இளா... வாங்க வாணி!” என வரவேற்று அவனை இறுக அணைத்து விடுவித்தவள், இசைவாணியை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு பரிதியைக் கையோடு அழைத்துச் சென்றாள்.

இவள் பார்வை நிதானமாக அந்தக் கூட்டத்தை அளந்தது. ஆங்காங்கே உணவு மேஜையுடன் நாற்கலிகள் போடப்பட்டிருக்க, வண்ண விளக்குகள் எரிந்து இருட்டை விரட்ட முயன்றன. பத்திற்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் அந்த இடத்தையே சுற்றி வளைத்திருக்க, ஒன்றிரண்டு லண்டன் மக்களும் அதில் அடக்கம்.

இளமதி பரிதியை அழைத்துச் சென்று தங்களது உறவினர்கள், நண்பர்கள் என அறிமுகம் செய்த வண்ணமிருந்தாள். அவள் முகம் அந்த நிலவிற்குப் போட்டியாய் ஜொலித்தது. மெல்லிய பஞ்சுமிட்டாய் வண்ண லெஹங்கா அணிந்திருந்தாள். அதற்கு ஏற்ற அணிகலன், தலையலங்காரம், முகப்பூச்சு என தேவதைப் போல காட்சியளித்தாள் அவள். பரிதி அவளுக்கருகே சிரிப்புடன் நின்று அனைவரிடமும் சகஜமாக பழக முயல, இவள் அமைதியாய் அவர்களைப் பார்த்திருந்தாள். அவர்களின் ஜோடிப் பொருத்தம் மிக கச்சிதமாக இருந்தது.

'பெர்ஃபெக்ட் ஜோடில்ல வாணி நாங்க?' என முன்பொருமுறை அவன் இவளிடம் கேட்டது நினைவு வந்தது. பரிதியும் அவளுக்கு சற்றும் குறையாத நிறம், அழகு என நேர்த்தியாய் இருந்தான். அவன் முகத்திலிருந்த சிரிப்பு அவனைத் தனித்துக் காண்பித்தது.

“ஹக்கும்...” தொண்டையைச் செருமி வாணியின் கவனத்தை தன்புறம் திருப்பினான் விக்னேஷ். அவன் வந்து ஐந்து நிமிடங்கள் கடந்தும் கூட இசைவாணி தன்னைக் கவனிக்கவில்லை என அவன் மனம் சுணங்கிற்று.

“ஹாய் விக்னேஷ்!” அவனைப் பார்த்ததும் இவளிடம் புன்னகை வந்தமர்ந்தது.

“உங்க பக்கத்துல ஒருத்தன் வந்து உக்கார்ந்து ஐஞ்சு நிமிஷம் ஆச்சு. ஆனால், உங்க பார்வை உங்களோட பிலவ்ட் தம்பி அண்ட் அவன் ஆளுகிட்டேருந்து நகரவேயில்ல!” என்றான் கேலியாக. வாணி அவனை மென்மையாய் முறைத்தாள்.

“நான் சொல்லலை வாணி. அதோ... கருப்பு சொக்கா போட்டுட்டு சுத்துறானே பரிதி பரிதின்னு ஒரு நாய். அதுதான் அப்படி சொல்லுச்சு!” என்றான் நண்பனை முறைத்து.

“ஏன் எப்ப பார்த்தாலும் அவனைத் திட்டி முறைச்சுட்டே இருக்கீங்க விக்னேஷ். நான் வர்றதுக்கு முன்னாடிவரை அவன் உங்களுக்கு நல்ல ப்ரெண்ட். அதை மறந்துடாதீங்க!” இவள் அதட்டலிட, அவன் முகத்தைக் கோணினான்.

“பொல்லாத ப்ரெண்ட். அவன் ஒரு டாங்கி. அவனுக்கெல்லாம் கற்பூர வாசனை தெரியுமா?” இவன் சிலிர்க்க, அவள் சிரித்துவிட்டாள்.

அந்த சிரிப்பையே ஆசையாய் பார்த்திருந்த விக்னேஷ், “அப்புறம்... டைவர்ஸ் வாங்கிட்டீங்கன்னு பரிதி சொன்னான். அடுத்து என்னப் பண்ண போறீங்க?” என அவளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காண்பித்தான்.

“ஹம்ம்... இந்தியா போய் வேலையைக் கண்டினியூ பண்ணணும். பட், கோயம்பத்தூர் பிராஞ்ச் இல்லாம பெங்களுர்தான் போகலாம்னு ப்ளான்!” இவள் யோசித்ததைப் பகிர்ந்தாள்.

“கண்டிப்பா போகணுமா வாணி? இங்கேயே வேற ப்ராஜெக்ட் கேட்டுப் பார்க்கலாமே?” அவள் முகம் பார்த்தான் விக்னேஷ்.

“இல்ல விக்னேஷ், எனக்கு இங்க இருக்கது செட்டாகாது. நம்ம ஊர்தான் எனக்குப் பிடிக்கும்!” என்றாள் தூரமாயிருந்த நட்சத்திரத்தைப் பார்த்தபடியே. தாயும் தந்தையும் அங்கிருந்து தன்னைப் பார்க்கின்றனர்‌ என்றெண்ணி மனதைத் தேற்றிக் கொண்டாள்.

என்னவோ கடந்த ஒரு வாரமாக அவள் மனத்திற்குள் என்னவோ சொல்ல முடியாத பாரம் போட்டு அழுத்திற்று. அவளாலே என்னவென விவரிக்க முடியவில்லை. தாயை மனம் அதிகமாகத் தேடியது. அவர் மடியில் படுத்து தன் மனத்துயரத்தைப் பகிர வேண்டும் என உள்ளம் ஏங்கியது. அடுத்த மாதத்தோடு அவர் தன்னைவிட்டு சென்று ஒரு வருடமாகப் போகிறது என நினைத்ததும் துக்கப் பெருமூச்சு சுவாசக் குழாயை அடைத்துக்கொண்டு வெளி வரத் துடித்தது. அதை உள்ளேயே அமிழ்த்த, தொண்டை வலித்தது.

“என்ன வாணி... ஸ்டார்ஸயே பார்த்துட்டு இருக்கீங்க?” விக்னேஷ் கேட்டதும்,

“அம்மா அப்பா ஸ்டார்ஸா இருந்து என்னைப் பார்க்குற ஃபீல் விக்னேஷ். அதான் வானத்தைப் பார்த்துட்டே இருக்கேன்!” என்றாள் முறுவலுடன். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே யாரோ ஒருவர் வந்து பழச்சாறு, மதுபானம் என மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றார்.

“வாணி... ஜூஸைக் குடி. டின்னர் சாப்பிட லேட்டாகும்!” பரிதி வந்து கூற, இவள் தலையசைப்புடன் பழச்சாற்றை எடுத்துப் பருகினாள். விக்னேஷ் கூட மதுபானம் அருந்தாமல் இவளைப் போல பழச்சாற்றை எடுத்துக் குடித்தான்.

“பேரண்ட்ஸை ரொம்ப மிஸ் பண்றீங்களா வாணி?” அவன் கேட்க, சின்ன சிரிப்புடன் இல்லையென தலையை அசைத்து, பின்னர் ஆமாமென முடித்தாள் இவள்.

“தனியாவே இருந்தா அப்படித்தான் தோணும் வாணி. நீங்க ஒரு நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கலாம். உங்களுக்குன்னு ஒரு ஃபேமிலி வந்தா இந்த லோன்லினெஸ் போய்டும் மா!” அவன் அக்கறையுடன் கூறி, நட்பாய் அவள் கையை ஒருநொடி அழுத்திப் பின்னர் விடுவித்தான். இவள் மாட்டேன் என்பதாய் தலையை அசைத்தாள்.

“வேணாம் விக்னேஷ். எனக்கு மேரேஜ் பண்றதுல இஷ்டம் இல்லை. அப்படியிருந்தா ஏன் அக்ரீமெண்ட் மேரேஜ்னு பரிதியைக் கல்யாணம் பண்ணேன். நான் இப்பவே சந்தோஷமாதான் இருக்கேன். கல்யாணம்ன்ற விபரீத பரீட்சை வேணாம்!” தீர்க்கமாக அவள் மறுத்தாள்‌.

“அப்படி சொல்லாதீங்க வாணி. இந்த உலகத்துல பொறந்த எல்லாருக்குமே மனரீதியா, உடல்ரீதியா ஒரு துணை அவசியம். நம்மளா தனிமையை ஏத்துக்கிட்டா கூட அது நம்மளைக் கொன்னு புதைச்சுடும்!” என்றவன்,

“இந்த நேரத்துல இப்படி கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு வாணி. ஷேல் வீ கெட் மேரீட்?” எனத் தன் மனத்தை போட்டு உடைத்திருந்தான் விக்னேஷ். வாணியின் முகம் அதிர்ந்தது.

“விக்னேஷ்?” அவள் திகைத்துப் போனாள்.

“நாட் அ ஜோக். ஐ யம் டேம்ன் சீரியஸ். உங்களுக்கு டைவர்ஸ் ஆகட்டும்னு நான் வெயிட் பண்ணேன்ங்க. நான் பரிதி மாதிரி கிடையாது. எனக்குன்னு வரப் போற பொண்ணை ரெஸ்பெக்ட் பண்ணுவேன், காயப்படுத்த மாட்டேன். குடிக்க மாட்டேன், நோ ஸ்மோக்கிங் ஹேபிட் இருக்கு. எந்தப் பொண்ணு பின்னாடியும் அலைஞ்சது இல்ல. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. இதைவிட ஜென்யூனா எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியலைங்க!” மனத்தின் படபடப்பை மறைத்தபடி அவன் கூற, இவளுக்கு அவன் பேச்சை உள்வாங்க நேரம் தேவைப்பட்டது.

மூச்சை இழுத்துவிட்டவள், “சாரி... சாரி விக்னேஷ். நான்... நான் உங்களை நல்ல ப்ரெண்டாதான் பார்த்தேன். அதுவும் இல்லாம நான் உங்களை விட வயசுக்கு மூத்தவ!” அவள் மேலும் பேசும் முன்,

“அந்தப் பரிதி நாய்தானே இப்படிலாம் சொன்னது. ஏஜ் இஸ் ஜஸ்ட் அ நம்பர் வாணி. ரெண்டு வயசு மூத்தப் பொண்ணெல்லாம் அக்கா கேட்டகரிக்குள்ள வர மாட்டாங்க. இன்பேஃக்ட் உங்களுக்கு பத்து வயசு அதிகமா இருந்துச்சுன்னா கூட, எனக்குப் பிடிச்சா நான் ப்ரபோஸ் பண்ணுவேன்!” என்றான் படபடவென.

வாணி அவனிடம் தண்ணீரை நீட்டிக் குடிக்கப் பணித்தவள், “ரிலாக்ஸ் விக்னேஷ். நான் ஒன்னு சொன்னா கோபப்படாதீங்க. உங்களுக்கு என் மேல இருக்கது லவ் இல்ல. இது கருணை, இரக்கம். பரிதி என்னை யூஸ் பண்ணிக்கிறான். நானும் அவனோட இழுப்புக்குப் போறேன்னு ஒரு கோபம் உங்களுக்கு. என்னை ரொம்ப நல்ல பொண்ணாவும், அவனை பீஸ்டாவும் ஃபிக்ஸ் பண்ணிட்ட மைண்ட் உங்களை இப்படி பேச வைக்குது. கருணை வேற, காதல் வேற!” என்றாள் அவனுக்குப் புரிய வைத்திடும் நோக்கோடு.

அவளைப் பார்த்து தலையை இடம் வலமாக அசைத்தவன், “நீக்க சொல்ற மாதிரி எனக்கு உங்க மேல இருக்கது கருணையாவே இருக்கட்டும்.
கருணையும் கூட ஒரு வகை காதல்தாங்க. நாய் குட்டி மழைல நனைஞ்சதும், வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வளர்க்குறது கருணைனா, அது மேல நம்ப வச்சிருக்க பாசம் உண்மையில்லாம போய்டுமா. கருணைலத் தொடங்கி காதல்ல முடிச்சா என்ன தப்பு? என் காதல் உங்களுக்கு கருணையா தெரிஞ்சா நோ இஷ்ஷூ. பட் நீங்க என்னைக் கன்சிடர் பண்ணுங்க!” என்றான் அழுத்தமாய். இசைவாணி அவனை அயர்ந்து பார்த்தாள்.

“விக்னேஷ்... புரிஞ்சுக்கோங்க!” அவள் மறுத்துப் பேச வர,

“பரிதி மேல நீங்க காட்டுறது கருணையா? காதலா?” என்றவனின் கேள்வியின் திடுக்கிட்டவள், “விக்னேஷ்!” என்றாள் அதட்டலான குரலில்.

“சரி அவனை விடுங்க. என்னைப் பாருங்க. நான் ரொம்ப நல்ல பையன்!” அவசரமாய் அவன் தன்னை நிரூபிக்கப் போராட, வாணி சிரித்துவிட்டாள்.

“நீங்க உண்மைலயே நல்ல பையன்தான் விக்னேஷ். உங்களை எனக்குப் பிடிக்கும். பட், பிடிச்ச எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” என்றாள் தீவிரக் குரலில். அவன் பெருமூச்சுடன் இல்லையென தலையை அசைத்தான்.

“அந்த மாதிரித்தான் இதுவும். உங்களுக்கான பொண்ணு வரும்போது என்னை பாசிங் க்ளவுடா நினைச்சு மறந்துடுவீங்க!” என்றாள் அவனுக்கு ஆறுதலாக. அவன் முகத்தை வேறுபுறம் திருப்பினான். அங்கே பரிதியும் இளமதியும் நடனமாடிக் கொண்டிருந்தனர். வாணியும் அவர்களைத்தான் இப்போது பார்த்தாள்.

“குடுத்து வச்சவன் பரிதி. என்ன தப்பு பண்ணாலும் இரண்டு வருஷம் அவனைத் தாங்குற காண்ட்ராக்ட் வொஃய்ப். இப்போ ஜெனிலியா மாதிரி ஒரு லவ்வர். செம்ம லைஃப் அவனோடது!” இவன் குரலின் பொறாமை அப்பட்டமாய் தெரிந்தது.

“சாபம் எதுவும் குடுத்துடாதீங்க விக்னேஷ். அவன் நல்லாருக்கணும்!” இவள் கண்டிப்புடன் கூற,

“இதோ... இதுக்காகத்தான் எனக்கு உங்களைப் பிடிச்சது. அவன் உங்களுக்கு என்ன பண்ணிட்டான்? உங்களைப் பத்தி தப்பு தப்பா சொல்றது, உங்களை ஹேர்ட் பண்றது. உங்களோட பணத்துலயே வாழ்றது, அட்டை மாதிரி உறுஞ்சுறது‌. இதைத் தவிர என்ன பண்ணான்? அவன் இப்போ இருக்க வேலை, விசான்னு எல்லாமே நீங்க கொடுத்தது. அதுக்கு கொஞ்சமாச்சும் அவன்கிட்டே நன்றி இருக்கா? செல்ஃபிஷ் கை!” இவன் பொரிந்தான்.

அவனை நிதானமாகப் பார்த்த வாணி, “எனக்கு என் அம்மான்னா ரொம்ப பிடிக்கும் விக்னேஷ்!” என்றாள் அமைதியான குரலில். அவன் அவளைப் புரியாது பார்த்தான்.

“என்னோட அதிகபட்ச ஆசையே அவங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கணும்னுதான். அதுக்காகத்தான் நான் பரிதியை அப்ரோச் பண்ணது. எனக்கு அவன் கெட்டவனா இருந்தா கூட, என் அம்மா மேல அவன் வச்ச பாசம் உண்மை. அவங்களை அவன் கேர் பண்ணது உண்மை. யூ க்நோ, என் அம்மா சாகுறதுக்கு முதல்நாள் அவ்ளோ சந்தோஷமா நிம்மதியா இருந்தாங்க. அந்த நிம்மதியைக் கொடுத்தது பரிதி. என் அம்மாவுக்கு ஒரு நிம்மதியான சாவைக் கொடுத்திருக்கான்...”

“என்னைப் பத்தின கவலை, பயம் எதுவுமில்லாம அவங்க உலகத்தைவிட்டுப் போய்ருக்காங்க. அந்த ஒரு விஷயத்தை யாராலையும் எனக்கு செஞ்சிருக்க முடியாது விக்னேஷ். அதுக்காகத்தான் அவன் என்னை எவ்ளோ கஷ்டப்படுத்துனாலும் நான் தாங்கிக்கிட்டேன். இந்த ரெண்டு வருஷத்துல அவன் ஆசைப்பட்டபடி அவனை செட்டில் பண்ணிட்டேன் நான். தட்ஸ் இட், இதுக்கும் மேல அவனுக்கும் எனக்கும் என்ன இருக்கு? மிஞ்சிப் போனா ரெண்டு வாரம்தான் அவனோட இருப்பேன். அப்புறம் நாங்க எங்க வாழ்க்கையைப் பார்த்திட்டு போய்டுவோம். சோ, என் முன்னாடி அவனைத் திட்டதீங்க!” என்றாள் இறைஞ்சலான குரலில்.

அவளையே சில நொடிகள் பார்த்தவன், “இந்த சேரி உங்களுக்கு நல்லாருக்கு!” என்றான்.

முதலில் புரியாது விழித்தவள், அவன் பேச்சை மாற்ற எண்ணுகிறான் என உணர்ந்து, “பரிதிதான் செலக்ட் பண்ணான்!” என்றாள் முறுவலுடன்.

“ஹக்கும்...” தொண்டையைக் கனைத்தவன், “சேரியெல்லாம் நல்லா செலக்ட் பண்ணிருக்கான். பட், லைஃப்ல கோட்டை விட்டுட்டான்!” என்றான் இளமதியைப் பார்த்தவாறே.

“இந்த உலகத்துல எல்லா உயிருக்கும் அவங்கவங்க லைஃப் பாட்னரை சூஸ் பண்ற உரிமை இருக்கு விக்னேஷ். எல்லாரும் ஹண்ட்ரட் பெர்சன் சரியா இருக்கோமா என்ன? இளமதி நல்ல பொண்ணுதான். அவளோட லைஃப் ஸ்டைல் வேறயா இருக்கலாம். அதுக்காக அவளைத் தப்பானவளா நினைக்காதீங்க. பரிதி அவளை மாத்தி அவளோட சந்தோஷமா வாழ்வான். நீங்க அதைப் பத்தி ரொம்ப யோசிக்காதீங்க!” என்றாள் கண்டிப்புடன். அவளை சலிப்புடன் பார்த்த விக்னேஷ் எழுந்து சென்று வேறொரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

‘காந்திக்கு பொறந்தவளா இருப்பா போல. ஏசு நாதர் வீட்டு பக்கத்து வீட்டுல குடியிருந்திருப்பா!’ அவன் மனத்திற்குள் குமைந்தான். அவனுக்கு இசைவாணியை விட மனதே இல்லை‌. எத்தனை அருமையான பெண்.

‘ஷீ டிசர்வ்ஸ் அ பெட்டர் லைஃப் அண்ட் லைஃப் பாட்னர்!’ என அவன் எண்ணாத நாளில்லை. அப்படி யோசிக்கும்போதுதான் ஏன் அது தானாக இருக்க கூடாதென அவளிடம் மணக்க கேட்டிருந்தான். அவள் மறுத்ததில் இவனுக்கு மனசுணக்கம் ஏற்பட, தனியாய் அமர்ந்துவிட்டான்.

வாணி தனியாய் உட்கார்ந்திருப்பதை பார்த்த பரிதி, அவளருகே வந்தான். “என்னாச்சு வாணி? விக்கி எங்க? ஏன் தனியா உக்கார்ந்திருக்க?” என விசாரித்தான். இவள் என்ன சொல்வது எனத் தயங்கி, அவனுக்கு அழைப்பு வந்துவிட்டதால் பேசச் சென்றிருப்பதாக உரைத்தாள்.

“சரி வா... நீ தனியா உக்காராத. இங்க தமிழ் ஆட்களும் இருக்காங்க. நான் இன்ட்ரோ பண்றேன். நீ அவங்களோட பேசு!” என கைப் பிடித்து அழைத்தான்.

நாசூக்காக தன் கரத்தை விலக்கியவள், “அங்கப் பாரு, மதி உன்னைத் தேடுறா. போ... நீ அவளைப் பாரு. நான் தனியா உக்கார்றதுல ஒரு பிரச்சனையும் இல்ல!” என வலுக்கட்டாயமாக அவனை அனுப்பி வைத்தாள்.‌

பரிதி விக்னேஷைப் பார்வையாலே தேடிக் கொண்டே நடந்தான். அவன் தனியாக அமர்ந்திருக்க, அவனருகே சென்றவன், “டேய்... நீ என்ன இங்க தனியா உக்கார்ந்திருக்க? வாணியோட‌ இருன்னு சொன்னேனா இல்லையா?” எனக் கடுப்புடன் கேட்டான்.

விக்னேஷ் அவனை நிமிர்ந்து பார்த்து பார்வையாலே அனலைக் கக்கியவன், “அவளோட என்னால உக்கார முடியாது!” என்றான் கடித்தப் பற்களிடையே.

“ஏன்டா?” இவன் எரிச்சலாக,

“நான் அவளுக்குப் ப்ரபோஸ் பண்ணேன். பட், அவ என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா. அதான் தனியா வந்து உக்கார்ந்திருக்கேன்!” என விக்னேஷ் கூறியதும், பரிதி அதிர்ந்தான்.

“டேய்... அறிவிருக்கா உனக்கு? யாரைக் கேட்டு அவகிட்டே ப்ரபோஸ் பண்ண?” இவனுக்கு கோபம் பொங்கிற்று.

“யாரைடா கேட்கணும்? உன்னையா? உனக்கும் அவளுக்கும் இடையில என்ன இருக்கு? அதான் லீகலா டைவர்ஸ் வாங்கிட்டீங்கல்ல?” அவன் சூடாய் திருப்பிக் கொடுத்தான்.

“டைவர்ஸ் ஆகிடுச்சு... ஆகலை. அதெல்லாம் இப்போ உனக்கு அவசியம் இல்லாதது. அவ உனக்கு அக்கா மாதிரி. வயசு கூட!” எனப் பேச வந்த பரிதியின் குரல் வளையை சற்றே அழுத்திப் பிடித்த விக்னேஷ்,

“இன்னொரு தடவை அவளை அக்கான்னு சொல்லிப் பாரு. உன் மூஞ்சில என் ஷூவோட தடம் தெரியும்?” என்றான் மிரட்டலாக.

அவன் கையை எடுத்துவிட்ட பரிதி, “டேய்... வயசுக்கு மூத்தவளை அக்கான்னு சொல்லாம வேற என்னடா சொல்றது?” இவன் தொண்டையை நீவியபடியே எரிச்சலாக கேட்டான்.

“மூடிட்டு போய்டு பரிதி. கெட்ட கெட்ட வார்த்தையா வாய்ல வருது. அக்காவாம்! அக்கா... ஹம்ம் அப்போ வயசுல மூத்த கேர்ள்ஸ் எல்லாரையும் நீ அக்காவாத்தான் பார்க்குற? அவங்களை சைட் அடிச்சது இல்ல, கமெண்ட் பண்ணது இல்ல. அப்படித்தானே?” எனக் கேட்டான் அவன்.

“டேய்... அதுவும் இதுவும் ஒன்னா? பரிதி சினமுற,

“செருப்பாலே அடிச்சுடுவேன் நாயே. வாயைத் திறந்து எதுவும் பேசிடாத!” விக்னேஷ் பொறுமையை இழுத்துப் பிடித்தான்.

“நீ பார்டி பண்ணது போதும். கிளம்பு முதல்ல!” பரிதி வெளியேறுமானு அவனுக்கு கைக் காண்பித்தான்.

அந்தக் கையைப் பிடித்து யாருமறியாமல் அவன் முதுகோடு வளைத்த விக்னேஷ், “இன்னும் ரெண்டு வாரம்தான் வாணி இங்கருப்பா. அதுவரைக்கும் நீயோ, உன் மதியோ அவளை டிஸ்டர்ப் பண்ண கூடாது. கஷ்டப்படுத்தக்
கூடாது. மீறுனா நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” என அவன் கையைவிட்டான்.

“விக்கி டேய், இங்க எதுவும் சம்பவம் பண்ண கூடாதுன்னு பார்க்குறேன். அவளைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நீங்க எங்களுக்குள்ள இடையில வராத. மூட்டிட்டு கிளம்பு இப்போ. நாளைக்கு உன் ரூமுக்கு வந்து வச்சுக்கிறேன் உன்னை!” என்ற பரிதியின் பேச்சை அசட்டையுடன் கடந்த விக்னேஷ் என்னவோ யோசித்து அவனருகே வந்தான்.

“போகும்போது உனக்கொரு கடைசி வாய்ப்பா நல்லது செய்யலாம்னு நினைக்கிறேன் பரிதி!” என்றவன், “நிலோஃபர் இந்த கூட்டத்துலதான் இருக்கா!” என்றான் அமைதியான குரலில்.

“யாரு நிலோஃபர்?” பரிதி புரியாது விழிக்க,

“அதானே டா. உதவி செஞ்சவங்களைத் தூக்கி விட்றதுதானே உன் பழக்கம்!” என அவன் பல்லைக் கடிக்க, பரிதியின் முகம் மலர்ந்தது.

“டேய்... எனக்கு ஜாப் கிடைக்க ஹெல்ப் பண்ண பொண்ணா?” எனக் கேட்டான் ஆர்வத்துடன்.

“ஆமா! அவளேதான். க்ரீன் அண்ட் ப்ளு கலர் மிக்ஸ் பண்ண சேரி கட்டிருக்கா. கேர்லி ஹேர், ப்யூட்டி புல் ஐய்ஸ். லெஃப்ட் சைட்ல பிஃப்த் டேபிள்ல தனியா உக்கார்ந்திருக்கா. போய் பேசு!” என்றவன், விறுவிறுவென அவ்விடத்தைவிட்டு அகல, பரிதி இடப்புறம் ஐந்தாவது மேஜையை நோக்கி நடந்தான்.

அங்கே இசைவாணி அமர்ந்திருக்கவும் அவனுக்குப் புரியவில்லை. சுற்றி முற்றிப் பார்த்தவன், படக்கென அதிர்ந்து அவள் உடுத்தியிருந்த புடவையைப் பார்த்தான். அவன் இதயம் அதிர்ந்து அடங்கிற்று.

“வாணி!” என அவன் திகைப்புடன் அழைக்க, எங்கோ பார்வையைப் பதித்திருந்தவள், நிதானமாக அவனை நிமிர்ந்து என்னவென்பதாய் பார்த்தாள்.

“வாணி... நீதான்!” என அவன் பேச வர, “இளா... கேக் கட் பண்ண போறாங்க. என்கூட வா நீ!” என அவன் கையைப் பிடித்திழுத்த இளமதி,

“வாணி நீங்
களும் வாங்க... கம் அண்ட் ஜாய்ன் வித் அஸ்!” என அழைத்தவள், அவனோடு முன்னே நடந்தாள். பரிதி இசைவாணியைப் பார்த்தவாறே மதியின் இழுப்புக்குச் சென்றான்.

தொடரும்...
 
Last edited:
Well-known member
Messages
525
Reaction score
380
Points
63
Vani definte ah parithi love panra than aana athu endha point la irundhu nu aval ah solla tha varaikum definte ah veliya varuthu nu than thonuthu yen na vicky nega parithi ah love panniragala enna apadi keta thu ku ithae first irundha vani ah irundha sattunu no na ra bathil vandhu irukum ipadi shock vandhu irukathu .

Vicky parithi kita nilofer yaru na ra unmai ah sollitan aana ithula iruku ah twist yae ippo madhi kita parithi innum unmai ah solla la na ra thu than avan london lifestyle ku adopt aagi irundhu irukalam but parithi oda contract marriage ah accept pannipala and enna porutha varaikum parithi panna thappu na athu Vani hurt pannathu mattum than atha avan seiya ma irundhu irukkalam atha thavirthu nan parithi ah korai solla matten yen na ivangalodathu agreement marriage parithi andha marriage ku accept pannathu yae vani london visa vangi kudukira n sonnathu kaga so atha than vicky aval ah angel range ku pesum pothu ava sonnathu eppudi parithi vishyathula avan ketkama la yae iva seiyuthalo athae pola than parithi sundari vishyathula irundhan.
 
Top