• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 18

Administrator
Staff member
Messages
575
Reaction score
832
Points
93
தேனும் இனிப்பும் 18:

நானும் அவனும்
கடலும் காற்றும்…


“ஜானு எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா?” என்று பரமேஸ்வரி கேட்க, “ஹ்ம்ம் வச்சிட்டேன்த்தை” என்றவள் கையில் இருந்த தாம்பூலத்தை தூக்கி சென்று கூடத்தில் வைத்தாள்.

எல்லோரும் கூடத்தில் தான் அமர்ந்து இருந்தனர். இன்று லாவண்யாவின் நினைவு தினம். இன்றோடு லாவண்யா உலகை விட்டு சென்று இரண்டு வருடங்கள் ஆகிறது.

அமர்ந்து இருந்த எல்லோரது முகத்திலும் லாவண்யாவின் இழப்பு தந்த சோகம் தங்கியிருந்தது. அமைதியாக அமர்ந்து இருந்த ஜீவாவின் முகத்தில் லேசான இறுக்கம்.

“இவ்ளோ சீக்கிரம் நீ எங்களைவிட்டு போயிருக்க வேணாம்” என்று திலகவதி ஒரு புறம் கண்ணை கசக்கி கொண்டிருக்க மஹிமா அவருக்கு ஆறுதல் கூறி கொண்டிருந்தாள்.

கண்ணாயிரமும் மகளது இன்மையை எண்ணி வருந்தி கொண்டிருக்க லிங்கம் தான் ஆறுதலாக இருந்தார்.

ஒரு ஐயரை அழைத்து வந்து முறையாக திதி கொடுக்க வேலைகள் நடந்தது. ஜீவா வந்து அமர்ந்து அவர்கள் கூறியதை அப்படியே செய்து கொண்டிருந்தான்.

மனதிற்குள் லாவண்யாவின் நினைவு தான். லாவண்யா அவ்வளவு அன்பானவள் பொறுமையானவள் ஜீவாவின் மேல் உயிரையே வைத்திருந்தாள்.

பிரசவத்திற்கு உள்ளே அழைத்து செல்லும் போது கூட கண்டிப்பாக தான் திரும்பி வருவேன் என்று கூறி சென்றாள். ஆனால் அவள் வரவில்லை. பிள்ளையை மட்டுமே அவனிடத்தில் கொடுத்துவிட்டு உயிரை விட்டிருந்தாள்.

ஏற்கனவே ஜானவிக்கு செய்தது நினைவிற்கு வந்ததில் குற்றவுணர்வில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு லாவண்யாவின் இழப்பு பேரிடியாக வந்து விழுந்தது. கையில் அழும் பிள்ளையை வைத்து கொண்டு நாட்களை நகர்த்தியவனது வாழ்க்கை அவ்வளவு வேதனையையும் துக்கத்தையும் சுமந்திருந்தது.

அதிலிருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டான். ஏன் இப்போதும் ஜானுவுடன் வாழ்வை துவங்குவதற்குமே லாவண்யாவை எண்ணி வருந்தினானே. நெருப்பின் முன்னே அமர்ந்திருந்தவனது நினைவில் நடந்த அனைத்தும் நழுவி சென்றது.

கை அதன் பாட்டிற்கு அவர்கள் கூறியதை செய்து கொண்டிருந்தது. ஜானுவின் பார்வை முழுவதும் கணவனிடம் தான். அவனது முகம் பார்த்தே தவிப்புகளை உணர்ந்து கொண்டவளுக்கும் மனது பாரமாகியது.

ஜானுவுமே லாவண்யா இறந்த செய்தி உணர்ந்து கலங்கி நின்றாளே. காரணம் அவ்வளவு இனிமையானவள் லாவண்யா. ஜானு பேசாத போது கூட தானே வந்து பேசிவிட்டு செல்வாள். ஒருபோதும் தான் முதலாளி நீ தொழிலாளி என்று பேதம் பார்த்ததில்லை அவள்.

கடவுள் அவளை இவ்வளவு சீக்கிரம் அழைத்திருக்க வேண்டாம் என்று ஜானு நினைத்து கொண்டாள்.

எல்லா சம்பிரதாயங்களும் முடிய லாவண்யாவிற்கு பிடித்தது என பார்த்து பார்த்து சமைத்தது அனைத்தும் அவளது புகைப்படத்தின் முன்னே படைக்கப்பட்டது. ஜீவா லாவண்யாவின் புகைப்படத்தை வெறித்தபடி எழுந்து கொண்டான்.

அவனறையில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் அது. திருமணமான புதிதில் ஜீவா தான் அதனை எடுத்திருந்தான். புகைப்படம் அழகாக வந்துவிட்டதென எவ்வளவு அலப்பறைகள் செய்தாள் அவள். ஜீவா தான் அவளது மகிழ்ச்சியை கண்டுவிட்டு பெரிதாக சட்டமிட்டு தங்களது அறையிலே மாட்டியிருந்தான். நினைவு புகைப்படத்தை மாட்டிய தினத்திற்கு சென்று வந்தது.

ஜீவாவின் தோளை தொட்ட பரமேஸ்வரி, “வாப்பா சாப்பிடலாம்” என்று அழைக்க, “ஹ்ம்ம்” என்று தலையசைத்தவன் சென்று அமர வரிசையாக மற்றவர்கள் அமர்ந்தனர்.

ஜீவா, லாவண்யாவின் குடும்பம் மற்றும் சில நெருங்கிய சொந்தங்கள் மட்டும் வந்திருந்தனர். ஜானவி பரமேஸ்வரியுடன் நின்று பரிமாறி கொண்டிருக்க திலகவதியின் பார்வை ஜானுவின் மீது முறைப்புடன் பதிந்தது.

மகளை நினைத்து அழுது கொண்டிருப்பவருக்கு ஜானுவை கண்டதும் தன் மகள் இடத்தில் இருக்கிறாள் இவள் என்று உள்ளே கோபம் கனன்றது.

போதாததிற்கு அருகில் இருந்த உறவுக்கார பெண்மணி ஒருவர், “ஏன் திலகா நம்ம பிள்ளை போய் ரெண்டு வருஷம் கூட ஆகலை அதுக்குள்ள உன் மருமகன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டானா?” என்று கேட்டிட, “ஆமக்கா” என்றவரது குரல் உள்ளே சென்றது.

“அதுவும் காதல் கல்யாணமாமே நம்ம பிள்ளை போன கொஞ்ச நாள்லயே மறந்திட்டு இவளை காதலிக்க ஆரம்பிச்சிட்டானா உன் மருமகன். இல்லை ஏற்கனவே இரண்டு பேருக்கும் பழக்கமா?” என்று தோண்டி துருவ, “எனக்கு தெரியலைக்கா” என்று திலகவதி சமாளித்தார்.

“என்னவோ லாவண்யா இடத்தில இந்த பொண்ணை வச்சு பாக்க முடியலை. அதுவும் இந்த பொண்ணுக்கு சொந்த பந்தம் பெருசா இல்லை போல. பேசாம நம்ம மஹியையே கட்டி வச்சிருக்கலாம்” என்று அவர் அங்கலாய்க்க, “நானும் அதான் சொன்னேன் யாரும் ஒத்துக்கலைக்கா” என்று திலகவதி வருந்தினார்.

“நீதான் பேசி ஒத்துக்க வச்சிருக்கணும் திலகா” என்று அவர் கூற, “எங்க ஜீவா வேணாம்னு சொன்னா பேசலாம் நான் பெத்ததும் வேணாம்னு ஒரேடியா சொல்லிடுச்சே” என்று திலகா பதில் அளித்தார்.

“நம்ம பொண்ணு இருந்த இடத்தில வேற ஒருத்தி வந்து நாட்டாமை பண்றது நல்லாவா இருக்கு. உன் சின்ன மக இருந்தா நாளைப்பின்ன அண்ணன் வீடுன்னு உரிமையா வந்து போகலாம்ல” என்றவர் ஏத்தி விட, “ஏன் இப்போ மட்டும் என்ன இது என் அண்ணன் வீடு எனக்கு இல்லாத உரிமையா” என்று திலகா எகிறினார்.

“என்ன இருந்தாலும் இது அவ வீடு தான. கல்யாண விஷயத்தில உன் பேச்ச யாரும் கேக்கலையே அதே மாதிரி இவ உன்னையும் இந்த வீட்ல மதிப்பில்லாம பண்ணிட்டா எப்படி வந்து போவ நீ. நம்ம மஹி இருந்தா இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை அதான் சொன்னேன்” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேசினார்.

“நேத்து வந்தவ இவ என்னை என் அண்ணன் வீட்ல இருந்து துரத்தி விடுவாளா?” என்று ஜானுவை விழிகளால் பஸ்பமாக்க, “வாய்ப்பிருக்கு திலகா. அதுவுமில்லாம அவளுக்கு ஒரு புள்ளை இருக்கு போல இதுல அவ எப்படி உன் பேரப்பசங்களை நல்லா பாத்துப்பா. அவ புள்ளைக்கு மட்டும் எல்லாம் செஞ்சிட்டு நம்ம பிள்ளைங்கள விட்ற போறா. எவ்ளோ சித்தி கொடுமை எல்லாம் பாத்து இருக்கோம்” என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல, இவருக்கு லேசான கிலி பிடித்து கொண்டது. எங்கே தன் பேரப்பிள்ளைகளை கொடுமை செய்வாளோ என்று.

“அக்கா அதெல்லாம் எதுவும் இல்லை. நான் பாத்தவரைக்கும் நல்லாதான் பாத்துக்கிறா” என்றவர், “அதுவுமில்லாம என் மருமகனுக்கு பிள்ளைங்கன்னா உசிரு” என்று கூற, “அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். நாள பின்ன பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு பிள்ளைங்கள கண்டுக்கலைன்னா என்ன பண்றது?” என்று வினவிட திலகவதியிடம் பதில் இல்லை.

“என் ஒன்னுவிட்ட அண்ணன் பையன் இப்படி தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணான். ஆரம்பத்தில நல்லாதான் போச்சு. இப்போ அவன் அவ பேச்ச கேட்டுட்டு ஆடி பிள்ளைக்கள போட்டு கொடுமை பண்றானாம்” என்று அவர் விடாமல் பேச, “ஏன்கா என்னை இப்படி பயமுறுத்துறீங்க.‌ என் அண்ணன் அண்ணி எல்லாம் அப்படி விடமாட்டாங்க” என்று திலகா இயம்பினார்.

“உன் மருமகன் இவளை கல்யாணம் பண்றதை தடுக்க முடிஞ்சதா அவங்களால. அதே மாதிரி தான் இதுவும் பாத்து இருந்துக்கோ” என்று முடித்திட, “இப்போ என்னத்தான் பண்றது நானு. முன்னாடியே என் மகக்கிட்ட தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்” என்று புலம்பினார்.

“அவக்கிட்ட எப்பவும் ஒரு பார்வை வச்சுக்கோ அப்பப்போ நீ இருக்கன்னு அவளுக்கு காட்டிட்டே இரு. உன் மேல அவளுக்கு எப்பவும் ஒரு பயம் இருக்கணும். இல்லை உன் பேரப்பிள்ளைகள பாக்க கூட நீ அவக்கிட்ட அனுமதி வாங்குற நிலைமை வந்திடும்” என்று மேலும் அவரை ஏற்றிவிட்டவர் உண்டு எழுந்து செல்ல, இங்கு திலகவதி தான் உணவு தொண்டையில் இறங்காது அமர்ந்திருந்தார்.

பார்வை ஜானுவின் மீது படிந்தது. பரமேஸ்வரியுடன் சேர்ந்து அனைவருக்கும் பரிமாறியபடி அங்குமிங்கும் நடமாடியவளை கண்டதும் உன் அண்ணன் வீட்டுல உரிமையா வலம் வருவா என்று கூறியது நினைவிற்கு வந்தது.

அவள் ஓடியாடி வேலை செய்வது ஏதோ அவள் உரிமையுடன் நடமாடுவது போல இவருக்கு தோன்றியது. விழிகளால் அவளை வெறித்தவரை, “ம்மா சாப்பிடாம என்ன வேடிக்கை” என்று மஹிமாவின் குரல் தான் நினைவுக்கு கொண்டு வந்தது.

“என் மகளை நினைச்சா சாப்பாடு இறங்க மாட்டுது. அவ மட்டும் இருந்தா இவலாம் இங்க நடமாடுவாளா?” என்று ஜானுவை வெறுப்புடன் நோக்கி கூற, “ம்மா நீ எப்போதான் திருந்த போற. ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பி வா வீட்டுக்கு போகலாம்” என்று மஹிமா திட்டினாள்.

“ப்ச் போடி” என்றவர் எழுந்து சென்று கை கழுவி வந்து சட்டமாக அமர்ந்து கொண்டார்.

மஹிமா, “ம்மா நிறைய ரிலேடிவ்ஸ் வந்து இருக்காங்க. கொஞ்சம் நேரம் உன் திருவாய மூடிட்டு இரு. ஏதாவது பிராப்ளம் பண்ண நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்று கடிந்துவிட்டு செல்ல திலகா அவளை அசட்டை செய்துவிட்டு ஜானுவை வெறுப்புடன் நோக்கினார்.

ஜானு அவரது பார்வையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை காரணம் சும்மாவே அவருக்கு தன்னை பிடிக்காது இதில் இன்று மகளுக்கு நினைவு தினம் மகளின் இடத்தில் தான் இருப்பதை கண்டு கோபம் தான் கொள்வார் என்று விட்டுவிட்டாள்.

எல்லோரும் உண்டு முடிய மாமியாருடன் தானும் அமர்ந்து உண்டாள். பிறகு பிள்ளைகளை அழைத்து உணவுண்ண வைக்க முயல அவர்கள் போக்கு காட்டி மறுத்திட்டனர். எல்லோரும் காலையில் இருந்து விரதம் இருப்பதால் பனிரெண்டு மணியளவில் உண்டிருக்க காலையில் சாப்பிட்ட பிள்ளைகளுக்கு பசிக்கவில்லை.

அர்னவ்விற்கு மட்டும் போக்கு காட்டி உணவை ஊட்டிவிட்டாள். பிறகு அவனும் இளையவர்களுடன் விளையாட செல்ல நேரம் மெதுவாக நகர்ந்தது.

வந்தவர்கள் ஒவ்வொருவராக கிளம்ப துவங்க மாமியாரோடு சேர்ந்து அனைத்தையும் ஒதுங்க வைத்தபடி இருக்க, “ம்மா‌…” என்ற அழுகையோடு வந்து அர்னவ் அவளது காலை கட்டி கொண்டான்.

மகனது அழுகையில் லேசாக பதறியவள், “என்னடா தங்கம் ஏன் அழற? கீழ விழுந்திட்டியா?” என்று அவனை தூக்கி கொண்டாள்.

“இல்லைம்மா அண்ணன் அடிச்சிட்டான்” என்று கண்ணை கசக்க, “நீ என்ன பண்ண?” என்று வினவினாள்.

“நான் எதுவுமே பண்ணலைம்மா” என்றவன் தேம்ப, “சரி சரி அழாத. நான் அவன்கிட்ட கேக்குறேன்” என்றவள் அதியிடம் வந்து, “அதி ஏன் தம்பிய அடிச்ச?” என்று வினவினாள்.

“அவன் தான் மா என்னை பர்ஸ்ட் அடிச்சான் அதான் நான் அடிச்சேன்” என்று அதிரன் பதில் அளிக்க, “நீ ஏன்டா அடிச்ச?” என்று அர்னவ்விடம் கேட்டாள்.

“அவன் தான் முதல்ல அடிச்சான்” என்று அர்னவ் கூற, “ம்மா அதி தான் மா பர்ஸ்ட் அடிச்சான்” என்று மகளும் சாட்சி சொன்னாள்.

ஜானு அதியை லேசாக முறைத்து, “ஏன்டா தம்பிய அடிச்ச. அடிக்காம விளையாடனும்னு சொல்லி இருக்கேன்ல” என்று லேசாக அடிக்க கையை ஓங்கினாள்.

இவை அனைத்தும் ஒரு ஓரமாக நின்று தான் யார் கருத்தையும் கவராமல் பேசி கொண்டு இருந்தனர். ஆனால் இவர்களையே கவனித்து கொண்டிருந்த திலகாவின் பார்வையில் இருந்து தப்பவில்லை.

விறுவிறுவென எழுந்து சென்றவர், “ஹேய் விடு என் பேரனை அவனை அடிக்க உனக்கு யார் உரிமை கொடுத்தது” என்று சற்று உரக்க கத்திவிட, அங்கிருந்த அனைவரது பார்வையும் அவர்கள் மேல் விழுந்தது.

இதனை சற்றும் எதிர்பாராத ஜானு அதிர்ந்து திகைத்து பின், “அதி அர்னவ்வை அடிச்சிட்டான் அதான் நான் திட்டிட்டு இருந்தேன்” என்று பொறுமையாக கூறினாள்.

“அதுக்கு என் பேரனை அடிப்பியா நீ‌. உனக்கு யார் அடிக்கிற உரிமையை கொடுத்தா?” என்று எகிற, மற்றவர்கள் பார்வையில் அசௌகரியமாக உணர்ந்தவள் கணவனை விழிகளால் துலாவினாள். அனிதாவின் மகன் ஜீவாவின் உடை மீது நீரை கொட்டியதால் அவன் உடை மாற்ற சென்றது நினைவிற்கு வந்தது.

விழிகளை மூடி திறந்தவள் ஜீவா கூறியதை போல தனக்கு தான் தான் பேச வேண்டும் என்று எண்ணிவிட்டு, “அவன் என்னோட மகன். தப்பு பண்ணா திட்ட தான் செய்வேன்” என்று அழுத்தி கூறினாள்.

“எது உன் மகனா? நீயா பெத்த. என் மகள் சுமந்து பெத்த புள்ளை இவன். உன் இஷ்டத்துக்கு அடிச்சு கொடுமை படுத்துவியா?” என்று எகிற, “திலகா” என்று பரமேஸ்வரி வந்துவிட, மற்றவர்களும் கூடிவிட்டனர்.

மஹிமா, “ம்மா உன்னை வாயவே திறக்க கூடாதுனு சொல்லிட்டு தானே போனேன்” என்று பற்களை கடிக்க, மனைவியின் செயல் பிடிக்காத கண்ணாயிரம், “திலகா” என்று அதட்டினார்.

“இப்போ எதுக்கு எல்லாரும் என்னையே பேசுறீங்க. இவ என் பேரப் பிள்ளைய அடிப்பா நான் அதை பாத்திட்டு சும்மா இருக்கணுமா? நாம இருக்கும் போதே இப்படி அடிக்கிறா இல்லாதப்போ எவ்ளோ கொடுமை பண்றாளோ” என்று பேச, ஜானு அதிர்ந்து பார்த்தாள்.

மஹிமா, “ம்மா ஏன்மா நீ பிரச்சனை பண்ணனும் தான் இங்க வந்தீயா? நீயெல்லாம் எங்களை அடிக்கவே மாட்டீயா” என்று புரிந்து கொள்ளவே மாட்டாரா இவர் என்று எண்ணி பேச, ஜீவா உடை மாற்றி இறங்கி வந்துவிட்டான்.

எல்லோரும் கூட்டமாக நிற்பதை கண்டு அருகில் வந்தவன், “என்ன? எதுக்கு எல்லாரும் இங்க நிக்கீறிங்க?” என்று வினவிட,

“எல்லாம் உன்னால தான் நீ இவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்ததால தான் இவ வந்து என் பேரப் பிள்ளைகங்களை அடிச்சு கொடுமை பண்றா. என் மகள் போய் ரெண்டு வருஷம் கூட ஆகலை இவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்ட எப்போ என் மக போவான்னு காத்து கிடந்தீங்களா? இதெல்லாம் தெரிஞ்சு தான் என் மக போய் சேந்துட்டாளா? இல்லை அதுக்கு முன்னவே ரெண்டு பேருக்கும் பழக்கமா?” என்று கோபத்தில் தன்னிலை மறந்து ஜீவாவை பேசிவிட, அங்கே குண்டூசி விழுந்தால் கூட கேக்கும் அளவிற்கு அமைதி குடிபு
குந்தது. யாருக்கும் அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.

ஜானு நடுங்கும் கரங்களால் ஜீவாவை இறுக பிடித்து கொண்டாள்…


 
Well-known member
Messages
488
Reaction score
349
Points
63
Janu lavanya oda edathula vazha la ava vazha vendiya vazhkai ah than ava lavanya ku vittu kudutha jeeva ku niyabagam pogama irundhu ah avan lavanya ah va kalyanam yae panni iruku ah matan la aana indha amma vai iruku nu enna vena pesa lam nu pesuvagala ah enna
 
Top