• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 9

Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
ஜென்மம் 9:

கனியே உனை

காண காத்திருக்கேன்
அடியே வழி நானும்

பாத்திருக்கேன்…

அவனது அதிர்ச்சியை வெற்றுப் பார்வை பார்த்தவள் ‌அருகில் இருந்தவரிடம்,

“அண்ணா ஒரு ஆட்டோ மட்டும் பிடிச்சு தர்றீங்களா?” என்று வலியில் முகத்தை சுருக்கியவாறு கூற,

இவனது அதிர்ச்சி எல்லாம் பறந்து போய் கோபம் புகுந்திருந்தது.

காரணம் யாரோ ஒருவரிடம் உதவி கேட்பாள் நான் செய்தால் ஒப்புக்கொள்ள மாட்டாளா? என்பது தான்

“கனி இப்போ என்னோட வர போறீயா இல்லையா?” என்று பல்லை கடித்தபடி கேட்க,

இவள் பதில் கூறாது முகத்தை வேறு புறம் திருப்ப பார்த்தீபனுக்கு கோபத்தில் முகம் சிவந்துவிட்டது.

“இப்போ நீ வரலைன்னா நானே உன்னை தூக்கிட்டு போய் கார்ல உட்கார வச்சிடுவேன்” என்று மிரட்ட,

சடுதியில் திரும்பியவள் தீயாய் அவனை முறைக்க,

“என்ன முறைப்பு. யார் இருக்கான்னு நான் பாக்க மாட்டேன்.‌ அப்புறம் உனக்கு தான் கஷ்டம்” என்று கூற,

அவனது குரலே சொல்லியதை செய்துவிடுவான் என்று உறுதியாக உணர்த்த,

‘ப்ச்’ என்று தன்னை சலித்து கொண்டவள்,

அருகில் இருந்த பெண்மணியின் உதவியுடன் நடந்து வந்து அவனது மகிழுந்தில் அமர்ந்தாள்.

கனியின் வெஸ்பாவை அருகில் இருந்த கடை வாயிலில் நிறுத்தியவன் வந்து வாகனத்தை எடுத்தான்.

கனிக்கு வலி ஒரு புறம் இவனது உதவியை வாங்கிக் கொண்டோமே என்று கோபம் ஒரு புறம் வாட்டி எடுக்க முகத்தை கடுகடுவென வைத்து சாளரத்தின் புறம் திரும்பி கொண்டாள்.

மகிழுந்தை இயக்கியவாறு,

“கனி” என்று பார்த்தீபன் அழைக்க,

“டோன்ட் கால் மீ லைக் தட். யூ டோன்ட் ஹாவ் ரைட்ஸ் டு கால் லைக் திஸ். கால் மீ கன்னல் மொழி” என்று வலியை பொறுத்து கொண்டு கத்த,

“ப்ச்” என்று சலித்த பார்த்தீபன்,

“சரி கன்னல் மொழி கால் ரொம்ப வலிக்குதா?” என்று வினவ,

“அதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? பாதி வலியை வாங்கி போறீங்களா?” என்று வார்த்தைகளை விட,

இங்கு பார்த்தீபனுக்கு தான் அடுத்து போச நா எழவில்லை.

‘அத்தான் அத்தான்’ என்று பாசமாய் தன் காலை சுற்றிவரும் கனிக்கு இது போல முகத்தில் அடித்தது போல எல்லாம் பேச வருமா? என்று சிந்தித்தபடி வந்தவன் ஐந்தே நிமிடத்தில் அருகில் உள்ள சிறிய மருத்துவமனைக்கு வந்து இருந்தான்.

முதலில் இறங்கியவன் அவளுக்கு இறங்க கையை நீட்ட அவனது கரத்தை கண்டு கொள்ளாதவள் கதவை பிடித்து தானே இறங்கி மெதுவாக நடந்து வந்தாள்.

உதவிக்கு ஆள் இல்லாமல் நடப்பது அவ்வளவு வலித்தது. இருந்தும் இவனது கரத்தை பிடிப்பதற்கு இதனை போல இன்னும் இரண்டு மடங்கு வலியை தாங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நடந்து வர,

இத்தகைய சூழலில் தனது உதவியை அவள் விரும்பவில்லை என்றால் அவள் தன்னை எவ்வளவு தூரம் விலக்கி வைத்திருப்பாள் என்று புரிந்தது.

புரிந்த கணம் உள்ளுக்குள் சொல்லவொண்ணா துயரம் வந்து அமர்ந்து கொண்டது.

உள்ளே நுழைந்ததும் செவிலியர்,

“என்னாச்சு?” என்று விசாரிக்க,

“ஸ்கூட்டில இருந்து ஸ்கிப் ஆகிட்டேன்” என்று கனியே விளக்கம் மொழிந்தாள்.

ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அவளை அமர வைத்தவர்,

“இங்க இருங்க. டாக்டர்கிட்ட கேட்டுட்டு அழைச்சிட்டு போறேன்” என்று நகர,

கனி வலியில் முகத்தை சுழித்து காலை பிடித்தாள்.

சட்டென்று அவளது காலடியில் அமர்ந்தவன்,

“ரொம்ப வலிக்குதா கனி?” என்று அவளது காலை பிடித்து ஆராய,

கனிக்கு மெலிதான பூகம்பமாய் அதிர்வு.

பட்டென முகத்தில் இருந்த உணர்வை மறைத்தவள்,

“என்ன பண்ணிட்டு இருக்கிங்க? எந்திரிங்க?” என்று மெலிதாய் அதட்டினாள்.

ஆனால் அவன் கண்டு கொள்ளவே இல்லை. நிறுத்தி நிதானமாக அவளது காலை ஆராய்ந்தவன்,

“லேசான காயம் தான். ஒன் வீக்ல சரி ஆகிடும்னு நினைக்கிறேன். ரொம்ப பெயினா இருந்தா பெயின் கில்லர் கேட்டு வாங்கிக்கலாம்” என்று சாவகாசமாக எழ,

இவள் உக்கிரமாக அவனை முறைத்திருந்தாள்.

செவிலியர் வந்து, “வாங்க” என்று அவளை கைப்பிடித்து அழைத்து செல்ல,

அங்கு அமர்ந்திருந்த மருத்துவர் அவளது காயத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு,

“சின்ன இன்ஜுரி தான். ட்ரெஸ்ஸிங் பண்ணி கட்டு போட சொல்றேன். செப்டிக் ஆகாம இருக்க டி.டி போட சொல்றேன்” என்றவர் தனது மருந்து சீட்டில் அவளது பெயர் வயதை எழுதிவிட்டு,

“பெயின் கில்லர் எழுதி இருக்கேன். ரொம்ப பெயினா இருந்தா போட்டுக்கோங்க” என்றிட,

கனி மொனமாய் தலை அசைத்தாள்.

செவிலியர் அருகில் இருந்த அறைக்கு அழைத்து சென்று காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டவர் ஊசியும் போட்டார்.

வலிக்கும் ஊசி போட்டிருப்பதால் வலி சற்று மட்டுப்பட்டிருக்க சற்று சாதாரணமாகவே நடந்து வந்தாள்.

வெளியே வந்தவள் கட்ட வேண்டிய பணத்தை கேட்க,

அவளுக்கு முன்பு பணம் செலுத்த சென்றான் பார்த்தீபன்.

அதில் சுறுசுறுவென கோபம் ஏற,

“ஸ்டே இன் யுவர் லிமிட்ஸ் மிஸ்டர் பார்த்தீபன்” என்று கண்களாலே எரித்தவள் தானே பணத்தை செலுத்தினாள்.

பார்த்தீபனுக்கு தான் கனியின் இந்த பாவனைகள் அதிர்ச்சியாக இருந்தது.

மென்மையே உருவாக இருந்த கனி எப்படி இவ்வாறு இறுகி போனாள் என்று மனம் சிந்திக்க துவங்கியிருந்தது.

அவளுடன் வெளியே வந்தவன் மகிழுந்தின் கதவை திறந்து விட,

“நோ தாங்க்ஸ் நான் கேப் புக் பண்ணி போய்க்கிறேன்” என்க,

இப்போது பார்த்திக்கு கடுப்பு வந்தது.

“ஒவ்வொரு டைமும் சொல்லிட்டே இருக்க முடியாது. கார்ல ஏறு” என்று உறும,

“எதுக்கு நான் உங்களை மயக்க முயற்சி பண்றேன்னு நீங்க சொல்லவா?” என்று சாட்டையடியாக விழுந்தது வார்த்தை.

‘ப்ச்’ என்றவனிடத்தில் பதில் இல்லை.

“சொல்லுங்க இன்னைக்கு ஏறுன்னு சொல்லுவிங்க.‌ அப்புறம் நாளைக்கு ஆபிஸ்ல வந்து நான் கூப்பிட்டா நீ ஏறிடுவியான்னு கேட்பீங்க. எனக்கு யார் உதவியும் முக்கியமா உங்க உதவி தேவையே இல்லை” என்று இறுக்கமாக கூற,

இவள் நிச்சயமாக தனது மகிழுந்தில் ஏற மாட்டாள் என்று புரிய சடுதியில் அவளது கைப்பிடித்து தானே வாகனத்தினுள் அமர்த்தியவன் தானும் அமர்ந்து கிளப்பினான்.

நொடியில் நிகழ்ந்துவிட்டதை உணர்ந்தவள் பல்லை கடித்து அமைதி காத்தாள்.

இவனிடம் பேசி எந்த உபயோகமும் இல்லை என்று புரிந்தது.

வந்த நாளில் இருந்து தான் உண்டு தனது வேலை உண்டு என்று தானே இருக்கிறோம்.

இவ்விடத்தில் மட்டும் ஏன் இப்படி? தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கோபப்படுகிறோம்.

யோகா வகுப்பில் முதலில் கற்று கொண்டது என்ன? உணர்வுகளை கட்டுப்படுத்த தானே? இனி யோகாவை முழு மனதுடன் செய்து உணர்வுகளை நன்றாக கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டவள் ஒரு முறை மூச்சை இழுத்து வெளியேவிட்டாள்.

இனி இவன் என்ன செய்தாலும் சுயத்தை இழக்காது வீட்டில் இருப்பவர்களிடம் நடந்து கொள்வது போல மிகவும் இலகுவாக இருக்க வேண்டும் என்று எண்ணி கொண்டாள்.

பார்த்தீபன் அவளை கவனித்து கொண்டு தான் வந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை.

தான் உள்ளே அமர வைத்ததற்கே என்ன வார்த்தையை வீசி தன்னை காயப்படுத்த போகிறாளோ என்று சிறிது அஞ்சி இருந்தவனுக்கு அவள் எதுவும் பேசாதது சற்று நிம்மதியாக இருந்தது.

அமைதியான பயணத்தை கலைக்கும் விதமாக கனியின் அலைபேசி அழைக்க,

திரையில் தெரிந்த பெயரை கண்டவள்,

‘ஷ் இதை எப்படி மறந்தேன்’ என்று தலையில் அடித்தவள் அழைப்பை ஏற்று,

“சாரி சாரி கமல். என்னால இன்னைக்கு வர முடியாத சுட்சுவேஷன்”

“...”

“ஆக்சுவலி அங்க வர தான் மார்னிங்கே கிளம்புனேன். வர்ற வழியில ஒரு சின்ன ஒர்க் இருந்தது அதை முடிச்சிட்டு வரலாம்னு போனேன். வழியில ஒரு ஆட்டோ என்னோட ஸ்கூட்டியை இடிச்சிடுச்சு”

“...”

“இல்லை பெருசா காயமில்லை. கால்ல தான் லைட்டா அடி”

“...”

“ஹ்ம்ம் ஹாஸ்பிட்டல் போய்ட்டு ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டு இப்போ வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன்”

“...”

“நோ நேர்ல வந்து பாக்குற அளவுக்கு பெரிய அடி இல்லை” என்று மறுக்க,

பார்த்தீபன் தான் இவள் யாரிடம் பேசி கொண்டு இருக்கிறாள்? இந்த ஊரில் இவளுக்கு யாரை தெரியும்? என்று புருவத்தை நெறித்தான்.

“ஹ்ம்ம் டூ டேஸ் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும். ஹ்ம்ம் டேப்லெட் கொடுத்து இருக்காங்க”

“...”

“எனக்கு தான் இன்னைக்கு அங்க வர முடியலைனு வருத்தம்.‌ நைட் உக்காந்து நிறைய சாட்ல ட்ராயிங் பண்ணி வச்சேன்.‌அதை காட்டி சொல்லி கொடுத்தா ஈஸியா புரிஞ்சுப்பாங்கன்னு”

“...”

“ஹ்ம்ம் ஓகே இந்த வீக் மட்டும் நீங்க பாத்துக்கோங்க. நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா வந்திட்றேன்”

“...”

“அதுக்குள்ள சரியாகிடும். ஓகே கமல் டேக் கேர்” என்று அழைப்பை துண்டித்தாள்.

அவள் பேசியதில் இருந்து எங்கே கற்பிக்க செல்கிறாள் என்று புரிந்தது.‌ எங்கே என்று கேட்டால் நிச்சயமாக பதில் வராது என்று உணர்ந்து அமைதியாக இருந்தான்.

ஆனால் மனது மட்டும் அருகில் இருப்பவளையே சுற்றி வந்தது. மற்றவர்களுக்கு உதவி செய்வதையே முழு நேர வேலையாக வைத்து இருப்பாளோ என்று தான் எண்ணம் ஜனித்தது.

கால் மணி நேரத்தில் வீட்டை அடைந்து இருந்தனர்.

அவனை திரும்பியும் பாராது கனி இறங்கி கொள்ள அவளை விட்டு செல்ல வேண்டும் என்று பார்த்தீபனும் இறங்கி சென்றான்.

இத்தனை நேரம் இறுக்கமாக இருந்த கனியின் முகம் வாசலில் நின்று இருந்த ப்ரத்யூவையும் நிவியையும் கண்டதும் பூவாய் மலர்ந்துவிட்டது.

சடுதியில் அருகில் இருந்தவனை நெருங்கி நின்றவள்,

“அங்க பாருங்க மிஸ்டர் பார்த்தீபன் உங்க அத்தை பெத்த ரத்தினம் உங்க‌ அன்பு தங்கையும் ஹார்ட் அட்டாக் வராத குறையா நிக்கிறாங்க” என்று சிரிப்புடன் மொழிந்தவள்,

“நீங்க சொன்ன மாதிரி உங்களை மயக்கி‌ கைக்குள்ள போட்டுட்டேன்னு நினைக்க போறாங்க” என்று மொழிய,

தங்கையையும் அத்தை மகளையும் கண்டவன் அவளது கூற்றில் முறைத்து,

“பேசாம வா. அவங்களை எதுக்கு தேவையில்லாம வம்பிழுக்குற?” என்று அதட்டினான்.

காரணம் வேறொன்றும் இல்லை. தான் கூறிய வார்த்தையை வைத்தே தன்னை போட்டு படுத்துபவளது வாயை அடைக்க வழி தெரியவில்லை.

“ஆஹான் நான் வம்பிழுக்கிறேனா? இப்போ நாம போனதும் அத்தான் சொத்தான்னு வந்து அழுகாத குறையா இந்த பிச்சைக்காரியை போய் உங்க காரில கூட்டிட்டு வந்து இருக்கிங்கன்னு கேட்பா” என்றவள் வேண்டுமென்றே அவர்களது வயிறை எரிய செய்ய அவனுக்கு சிறிதே இடைவெளிவிட்டு நடந்தாள்.

இருவரும் சிரித்து பேசியபடி நடந்து வருவதை கண்டு இங்கு ப்ரத்யூவிற்கு வயிறு பற்றி எரிய ஆத்திரம் தலைக்கேறியது.

அவர்கள் அருகில் வருவதற்குள் ஓடி வந்தவள் முகம் முழுவதும் வெறுப்புடன்,

“அத்தான் இந்த பிச்சைக்காரி கூட உங்களுக்கு என்ன பேச்சு? அதுவும் இவளை போய் நம்ம காஸ்ட்லி கார்ல கூட்டிட்டு வந்து இருக்கிங்க” என்று முகத்தை சுழிக்க,

சட்டென்று பார்த்தீபனது பார்வை கனியிடத்தில் விழ, அவளது முகம் நிச்சலமாக இருந்தது.

பார்த்தீபன் ப்ரத்யூவை கண்டிக்கும் முன் நிவி,

“ண்ணா இந்த கொலைக்காரி இதுக்கு முன்னாடி இந்த மாதிரி காஸ்ட்லி கார்லாம் பாத்து இருக்க மாட்டா” என்று பேசுகையிலே இடை நுழைந்த பார்த்தீபன்,

“ஷட் அப் நிவி” என்றிட, அவனது முகத்தில் இருந்த கோபம் இருவரையும் அதிர செய்தது‌.

இதுவரை தங்களிடம் அதிர்ந்து கூட பேசாத பார்த்தீபனிடத்தில் இவ்வளவு சீற்றத்தை இருவரும் எதிர்ப்பார்க்கவில்லை.

அதுவும் கன்னல் மொழிக்காக கிஞ்சிற்றும் எதிர்பாராதது.

இருவரது அதிர்ந்த முகத்தையும் கண்டு கொள்ளாதவன்,

“வா போகலாம்” என்று நடக்க,

அவனது குரலில் நடப்புக்கு வந்தவர்கள்,

“அத்தான் இவளை எதுக்கு நீங்க அழைச்சிட்டு வர்றீங்க? காலையில‌ கேட்டதுக்கு அவளை எதுக்கு நான் கூட்டிட்டு போக போறேன்னு சொன்னிங்க?” என்று வழியை மறிக்க,

“உள்ள போய் பேசிக்கலாம் வாங்க” என்று நடந்து உள்ளே சென்றான்.

“மருமகனே வந்துட்டியா உனக்கு அத்தை கூலிங்கா ஜுஸ் போட்டு வச்சிருக்கேன்” என்றபடி வந்தவர்,

பார்த்தீபனது அருகில் வந்த கனியை கண்டதும் ஆணி அடித்தது போல நின்றுவிட்டார்.

பார்த்தீபன் அதனை கவனியாது போல,

“தேங்க்ஸ்த்தை வெயிலுக்கு கூலிங்கா குடிச்சா நல்லா இருக்கும்” என்று இரண்டு குவளையை எடுத்தவன் ஒன்றை கனியிடம் கொடுத்து அவளருகே அமர்ந்தான்.

இதனை கண்ட அத்தனை பேருக்கும் உண்மையாக நெஞ்சு வலிக்க துவங்கி இருக்கும்.

கோதை, “பார்த்தீ எதுக்கு இந்த அநாதை கழுதை உங்கூட வர்றா?” என்று அதிர்ச்சி குறையாது கேட்க,

“பாட்டி வார்த்தையை பாத்து பேசுங்க. அவ அநாதை கிடையாது”

“அநாதைய அநாதைனு தான் சொல்ல முடியும் மருமகனே” என்று கற்பகம் வர,

“அத்தை அதான் மாமாவும் நீங்களும் லீகலா தத்து எடுத்துட்டிங்களே அப்புறம் ஏன் அவளை அந்த வார்த்தையை யூஸ் பண்ணி திட்றீங்க”

“திட்டாம என் மகளை கொல்ல பாத்திருக்கா இவ. கொஞ்சம் விட்ருந்தா இன்னைக்கு என் மக எனக்கு இல்லை”

“ப்ச் அத்தை அது அந்த வயசுல தெரியாம ஏதோ நடந்து இருக்கும். இன்னமும் அதையே புடிச்சு பேசிட்டு இருக்காதிங்க”

“எப்போ நடந்தா என்ன? இவ கொலைக்காரி தான் அதுவும் இப்போ நம்மக்கிட்ட‌ இருக்க பணத்தை கொல்லையடிக்க வந்து இருக்கா”

“அத்தை போதும் இதுக்கு மேல அவளை பத்தி தப்பா பேசாதிங்க” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட சடுதியில் பெரியவர்களிடத்தில் அமைதி.

பார்த்தீபனது கோபம் புரிந்தவர்கள் அவன் சென்றதும் இவளை பேசி கொள்ளலாம் என்று அமைதியாகிவிட,

இங்கு ப்ரத்யூவிற்கு இருப்பு கொள்ளவில்லை.

“அத்தான் அவங்களை விடுங்க. இவளை எதுக்கு நீங்க கூட்டிட்டு வந்திங்க? நீங்க ஏதோ வேலையா போறேன்னு தான சொன்னிங்க” என்று தனது காரியத்திலே குறியாக இருக்க,

இவ்வளவு நேரம் இவர்களது சண்டையை சிரிப்புடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள்,

“நான் சொல்றேன் அதுக்கு பதில்” என்க,

ப்ரத்யூ அவளை கண்களாலே எரித்தாள்.

“அது நானும் உன் அத்தானும் சுத்தி பார்க்க பீச் போயிருந்தோமா அங்க ஓடி விளையாடும் போது கால் தடுக்கி கீழே விழுந்து எனக்கு கால்ல அடிப்படிருச்சு. அதான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்து என்னை ட்ராப் பண்ணாரு. எனக்கு கால்ல லேசான காயம் தான் ஆனா அதுக்கே இவர் எப்படி துடிச்சு போய்ட்டாரு. ஹாஸ்ப்பிட்டல்னு கூட பாக்காம என் காலை பிடிச்சு கீழே உட்கார்ந்து இருந்தாரு”

“...”

“உன் அத்தானுக்கு என் மேல எவ்ளோ பாசம். கால்ல அடி படலைன்னா ஒரு நல்ல ரொமான்டிக் மூவி போய்ட்டு வரலாம்னு இருந்தோம். மிஸ் ஆகிடுச்சு” என்று முயன்று குரலை சாதரணமாக்கி கூற,

இங்கு ப்ரத்யூவுக்கு மயக்கம் வராததுதான் குறை‌.

பார்த்தீபன் அவளது பொய்யை திகைப்பும் அதிர்வுமாக காண,

கோதை நெஞ்சை பிடித்து கொண்டார்.

“பார்த்தீ என்ன‌ கருமம் டா இதெல்லாம்” என்க,

அவளது கூற்றை பொய்யாக்க விரும்பாதவன்,

“பாட்டி நீங்க ரியாக்ட் பண்ற அளவுக்கு எதுவும் நடக்கலை” என்று முடித்துவிட,

ப்ரத்யூ தான் எரிமலை குழம்பாகி இருந்தாள்.

வெளியே கேட்ட சத்தத்தில் அறைக்குள் அமர்ந்து படித்து கொண்டிருந்த பிரவீன் எழுந்து வந்தான்.

வந்ததுமே பார்த்தீபனை கண்டு, “வாங்க அத்தான்” என்று வரவேற்றவன்,

தமக்கையை கண்டதும் அவளது காலில் இருந்த கட்டு பெரியதாக தெரிய பதறி,

“அக்கா கால்ல என்னாச்சு” என்றபடி கீழே அமர்ந்து காலை பிடித்தான்.

“டேய் நீ பதறுற அளவுக்கு எதுவும் இல்லை. கால் ஸ்லிப்பாகி விழுந்துட்டேன்” என்று அவனை சமாதானம் செய்தவள்,

“வா ரூம்க்கு போவோம்” என்க,

“வாக்கா” என்று அவளது கையை ஆதரவாக பிடித்து அழைத்து செல்ல,

தன்னை திரும்பியும் பார்க்காது செல்பவளையே நொடிகள் தாண்டி உறுத்து விழித்தவன் தான் கிளம்புவதற்காக எழுந்து கொள்ள,

“அத்தான்” என்று அவனது கையை பிடித்து அமர வைத்தவள்,

“ஏன் அத்தான் அவளுக்கு சப்போர்ட் பண்ணி எங்களை திட்றீங்க. உங்களுக்கு அவளை பத்தி தெரியலை. அவ ஒரு பணத்தாசை பிடிச்சவ. செல்பிஷ். தான் சந்தோஷமா இருக்க என்ன வேணா பண்ணுவா” என்று அடுக்கி கொண்டே போக,

பார்த்தீபனுக்கு சற்று நேரத்திற்கு முன்பு அவள் காண்பித்த பல்வேறு பரிமாணங்கள் நினைவில் நழுவி சென்றது.


பார்த்தீபன் அமைதியாக இருக்க இதுதான் சாக்கென்று ஆளாளுக்கு அவளை பற்றி தங்களது வன்மத்தை கொட்டினர்.

கனியின் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று சிந்தித்து கொண்டிருத்தவன் காலை வரை தானும் அவ்வாறு தான் இருந்தோம் என்பதை வசதியாக மறந்து போனான்.

இதற்கிடையில் பிரவீன் வந்து, “அத்தான் உங்களை அக்கா கூப்பிட்றா” என்க,

இவர்கள் பேசுவதை கண்டு கொள்ளாதவன் எழுந்து மேலே செல்ல,

கோதை, “ஏய் பின்னாடி போய் என்ன பேசுறாங்கன்னு பாரு” என்றதும் வேகமாக எழுந்து ப்ரத்யூவும் ஓடினாள்.

பார்த்தீ அறைக்குள் சென்றதும் பிரவீன்,

“நீங்க எங்க போற நில்லு” என்று பிடித்து நிறுத்த,

“ஏன் நான் போக கூடாதா?” என்று அவனிடம் எகிறினாள்.

“ஆமா போக கூடாது. அவங்க ரெண்டு பேரையும் பா
த்தா லவ் பண்ற மாதிரி தெரியுது‌. லவ்வர்ஸ்க்கு நடுவுல நந்தி மாதிரி நீ எதுக்கு?” என்றிட,

படபடவென்று அடித்த நெஞ்சுடன் சுவற்றை பிடித்தபடி நின்றுவிட்டவளுக்கு நிஜமாகவே மயக்கம் வரும் போல இருந்தது.

“பைத்தியம் மாதிரி உளறாத” என்று அவனிடம் எரிந்து விழுந்து கதவை திறந்து உள்ளே நுழைந்தவள் கண்ட காட்சியில் உண்மையாவே மயங்கி விழுந்திருந்தாள்‌.




 
Well-known member
Messages
368
Reaction score
255
Points
63
Mayangura alavuku anga periya sambavam ethuvum nadanthu irukathu indha prayu than normal ah na vishyatha kooda abnormal ah imagine pannuva ava parthiban ah la kannula yae erikira ah avan yae iva kita vai ah kuduthu vangi kattitu muzhichikitu irukan ithula indha kosu vera apadi orama poi mayangi vizhuma ah
 
Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
Mayangura alavuku anga periya sambavam ethuvum nadanthu irukathu indha prayu than normal ah na vishyatha kooda abnormal ah imagine pannuva ava parthiban ah la kannula yae erikira ah avan yae iva kita vai ah kuduthu vangi kattitu muzhichikitu irukan ithula indha kosu vera apadi orama poi mayangi vizhuma ah
Ama ama 😂😂
 
Top