அடுத்த நொடி கண்ணாடி இறக்கப்பட, உள்ளே அமர்ந்திருந்தான் ரிஷிகேஷவ்.
அவனைக் கண்டதும் மலரின் முகத்தில் இருந்த பதட்டம் வடிந்துவிட, “ரிஷி சார், நீங்கதானா? ஒரு அம்மா தலையில அடிபட்டு பாதி மயக்கத்தில் கிடக்கிறாங்க. ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக உதவி பண்றீங்களா?” என்று கேட்டாள்.
“என்னாச்சு?” என்றபடி ரிஷி கீழிறங்கி வர,
“தெரியல, சார். நான் ரோடு கிராஸ் பண்ணும் போது யாரோ முனங்குற சத்தம் கேட்டுச்சு. பக்கத்துல போய் பார்த்தா ஒரு அம்மா தலையில காயத்தோட கிடந்தாங்க. நீங்க கார் கதவைத் திறந்து வைங்க, சார். நான் போய் அவங்கள அழைச்சிட்டு வரேன்,” என்றவள், அவனது பதிலை எதிர்பாராமல் அரைமயக்கத்தில் இருந்தவரை தோளில் கை போட்டபடி அழைத்து வந்து மகிழுந்தின் பின் இருக்கையில் சாய்ந்து அமர வைத்தாள்.
ரிஷி மகிழுந்தை இயக்கியதும்,
“சார், இந்த ரோட்ல ஸ்ட்ரெயிட்டா போனீங்கன்னா பர்ஸ்ட் லெப்ட்ல ஒரு கிளினிக் இருக்கு. அங்க போங்க, சார்,” என்று வழி கூறினாள்.
பத்து நிமிடத்தில் அவர்களது வாகனம் மருத்துவமனையை அடைய, ரிஷியின் உதவியை எதிர்பாராது மலர் அவரைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றாள்.
ரிஷி மகிழுந்தை நிறுத்திவிட்டு அவளுடன் உள்ளே செல்ல விழைய, அவனது அலைபேசி இசைத்தது. அவன் அதனை எடுத்துப் பேசிவிட்டு வர, மலர் அந்தப் பெண்மணியை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றிருந்தாள்.
ரிஷி பேசிவிட்டு உள்ளே செல்ல, அந்தப் பெண்மணியை சிகிச்சைக்காக அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்தவள், ரிஷியைக் கண்டதும், “ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார். சரியான நேரத்துல உதவி செஞ்சு இருக்கீங்க,” என்று அவனுக்கு நன்றியை நவின்றாள்.
அவளது நன்றியைத் தலையசைத்து ஏற்றுக் கொண்டவன், “டாக்டர் என்ன சொன்னாங்க? பெரிய அடியா?” என்று வினவினான்.
“அடி பலமா படல. ஆனா ரத்தம் நிறைய போயிருச்சு. ரத்தம் ஏத்தணும்னு சொன்னாங்க, சார்,” என்று மலர் கூறிக் கொண்டிருக்க,
“நீங்க தானே பிளட் டொனேட் பண்ணப் போறீங்க? வாங்க, உங்க ப்ளட்டை டெஸ்ட் பண்ணனும்,” என்று செவிலியர் வந்து மலரிடம் கூறினாள்.
“ரெண்டு நிமிஷத்துல வரேன், சிஸ்டர்,” என்று அவரிடம் கூறி அனுப்பியவள், “இனி நான் பாத்துக்குறேன். நீங்க கிளம்புங்க, ரிஷி சார். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் தரீங்களா? நான் இங்க இருந்து கிளம்ப டைம் ஆகிடும்,” என்று கேட்டாள்.
“சரி,” எனத் தலையசைத்து அங்கிருந்து அகன்றான்.
மலர் ரத்தப் பரிசோதனைக் கூடத்தை நோக்கிச் செல்ல, “ரிசப்ஷன்ல போய் இந்த அமௌன்ட் பே பண்ணிட்டு வாங்க,” என்று ஒரு செவிலியர் வந்து கூறினாள்.
மலர் அதனைக் கையில் வாங்கிப் பார்க்க, ஐயாயிரம் என்று போடப்பட்டிருந்தது.
“அஞ்சாயிரமா? என்கிட்ட இப்ப அவ்வளவு இல்லையே!” என்று அதிர்ந்தவள், சடுதியில் வாயிலை நோக்கி வேக நடையில் சென்றாள்.
ரிஷி தனது மகிழுந்தை அடைந்து அதனைத் திறக்க முயல, “ரிஷி சார்… ரிஷி சார்…” என்று கூவியபடி சென்றவள், அவன் கவனிக்காததில் முழங்கையைப் பற்றி தன் புறம் திருப்பியிருந்தாள்.
அவளது செயலில் திரும்பியவன் தனது கையைப் பார்த்துவிட்டு அவளை நோக்க, அவசரத்தில் அதனைக் கவனிக்காதவள், “அஞ்சாயிரம் பணம் கட்ட சொல்றாங்க, ரிஷி சார். என்கிட்ட இப்போ அவ்வளவு பணம் இல்ல, சார். நீங்க கொடுத்தீங்கன்னா நாளைக்கு திருப்பி கொடுத்துவிடுவேன், சார்,” என்று உதவி வேண்டி அவனை கண்டாள்.
ரிஷி தனது பர்ஸை எடுத்து ஐந்தாயிரம் ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டியவன், “போதுமா? இல்லை எக்ஸ்ட்ரா மணி தரவா?” என்று வினவினான்.
“போதும், சார். ரொம்ப நன்றி, சார். நாளைக்கு காலையில வரும் போது கொண்டு வந்து கொடுத்திட்றேன், சார்,” என்று மனமார அவனுக்கு நன்றி உரைத்தவள் வேகமாக மருத்துவமனையில் நுழைந்தாள்.
இங்கு மலர் அந்தப் பெண்மணிக்கு சிகிச்சை முடிந்ததும் அவரிடம் கேட்டு அவரது வீட்டு ஆட்களுக்கு அழைத்து விடயத்தைக் கூறி, அவர்கள் வந்த பிறகுதான் வீட்டிற்குச் சென்றாள்.
இடையில் மாதவியிடமிருந்து அழைப்பு வர, அவருக்கு விவரத்தைக் கூற, அவர் முரளியை துணைக்கு அனுப்புவதாகக் கூறினார்.
“வேண்டாம். நான் பார்த்துக்கொள்வேன்,” என்று கூறி மறுத்துவிட்டவள், அந்தப் பெண்மணியின் உறவினர் வந்ததும் அங்கிருந்து கிளம்பினாள். மலர் வீட்டை அடைய கிட்டத்தட்ட பத்து மணி ஆகி இருந்தது.
மலரைக் கண்டதும், “இப்போ அவங்களுக்கு எப்படி இருக்கும், மலரு?” என்று மாதவி வினவ,
“நல்லா இருக்காங்கம்மா. கண்ணு முழிச்சு நல்லா தெளிவா பேசுனாங்க. டாக்டரும் ஒன்னும் பயப்படுற மாதிரி இல்லைன்னு சொல்லிட்டாங்க,” என்றவள் குளித்து உடைமாற்றி வந்து சாப்பாடு சாப்பிட்டதும் உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலையில் ரிஷியின் வீட்டிற்குச் சென்றவள், முதல் வேலையாக பணத்தை அவனது மேஜை மீது வைத்தவள், “இந்தாங்க, ரிஷி சார். உங்க பணம். ரொம்ப ரொம்ப நன்றி, ரிஷி சார். நீங்க சரியான நேரத்துல உதவி பண்ணினால்தான் அவங்க இப்போ நல்லா இருக்காங்க. அந்த அம்மாவும் கண் முழிச்சதும் உங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னாங்க,” என்று கூற,
பணத்தையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தவன், “நான் செஞ்ச உதவிய திரும்பி வாங்குறது இல்ல, மலர்,” என்று கூறினான்.
ஒரு நொடி அவனது பதிலில் திகைத்தவள், “சார், நான் திருப்பி கொடுத்துட்றேன்னு சொல்லித்தானே உங்ககிட்ட வாங்கினேன்,” என்று அவனது முகம் நோக்க,
“நான் கடனா இதைக் கொடுக்கல, மலர்,” என்று அவன் பதில் உரைத்தான்.
“சார், இது என்னோட பணம் இல்லையே. அந்த அம்மாவோட பொண்ணு நேத்து ஹாஸ்பிடலுக்கு வந்ததும், ‘எவ்வளவு பில்லு?’ன்னு கேட்டு என்கிட்ட கொடுத்துட்டாங்க, சார். அதுதான் உங்ககிட்ட கொடுக்க எடுத்துட்டு வந்தேன்,” என்று மலர் விளக்கம் கொடுக்க,
“யாரோடதா இருந்தாலும், நான் செஞ்ச உதவிய திருப்பி வாங்க மாட்டேன். டேக் தட் மணி,” என்று முடித்துவிட்டான்.
ஒரு நொடி அவனது பதிலில் திகைத்தவள், “ஆனா சார், இது எனக்கு சொந்தமானது இல்லையே. இதை நான் என்ன செய்றது?” என்று மலர் புரியாது வினவ,
“தட்ஸ் நன் ஆப் மை பிஸ்னஸ்,” என்று ரிஷி கூறிவிட்டு அறைக்குள் எழுந்து சென்றுவிட்டான்.
“இவர் என்ன இப்படி சொல்லிட்டு போறாரு?” என்று யோசனையுடன் அந்தப் பணத்தை எடுத்து தனது பையில் வைத்தவள் வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.
ரிஷி அலுவலகத்தில் தனது கணினியில் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனது அலைபேசியில் செய்தி வந்ததற்கான ஒலி கேட்டது.
எடுத்துப் பார்க்க, மலரிடமிருந்து புலனத்தில் ஏதோ செய்தி வந்திருந்தது.
அதனைத் திறந்து பார்த்தான்.
மலர் ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தாள். அதில் குழந்தைகள் வரிசையாக அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்.
அந்தப் புகைப்படத்திற்குக் கீழே, “சார், உங்க பணத்தை இந்த இல்லத்து பசங்களுக்கு சாப்பாடு செலவுக்கு குடுத்துட்டேன். இந்த புண்ணியம் எல்லாம் உங்களுக்குத்தான், சார், சேரும்,” என்று செய்தி அனுப்பியிருந்தாள்.
அதனை ஒரு கணம் பார்த்துவிட்டு பதில் எதுவும் அனுப்பாதவன் தனது பணியை கவனித்தான்.
மலர் மாலை வழக்கம் போல வேலைக்கு வந்தவள், அவனிடம் மதியம் அனுப்பிய புகைப்படத்தைப் பற்றி எதுவும் பேசிக்கொள்ளாது சமையலை கவனித்தாள்.
அவன் உண்டு முடித்ததும், வழக்கமாக செய்வது போல பாலில் பசுமஞ்சளும் பனங்கற்கண்டும் போட்டு காய்ச்சியவள், குவளையில் ஊற்றி வைத்துவிட்டு கிளம்புவதற்கு ஆயத்தமானாள்.
ரிஷியிடம் கூறிவிட்டு செல்வதற்காக அவனது அறைக் கதவைத் தட்டிவிட்டு வெளியே நிற்க, கதவைத் திறந்து வெளியே வந்தவனது கையில் ஒரு பை இருந்தது.
“நான் கிளம்புறேன், ரிஷி சார்,” என்று இயம்ப,
“மலர், இதுல என்னோட டிரஸ் ஒன்னு இருக்கு. இதுவரைக்கும் ஒரு டைம் தான் போட்டு இருக்கேன். இப்போ எனக்கு இது பிடிக்கலை. யாருக்காச்சும் தேவைப்பட்டா கொடுத்துட்றியா?” என்று வினவினான்.
“ஹ்ம்ம்… குடுங்க, சார். எங்க ஏரியால நிறைய பேர் உங்களோட ஹைட் இருப்பாங்க. அவங்ககிட்ட கொடுத்துடறேன்,” என்று அவன் கொடுத்த உடையைப் பெற்றுக் கொண்டவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
மலர் வீட்டிற்குள் நுழைந்ததும், அவளது கையில் இருந்த பையை கவனித்த வித்யா, “அக்கா, அது என்ன பேக்?” என்று வினவ,
“இதுல ஒரு டிரஸ் இருக்கு, வித்யா. ரிஷி சார் கொடுத்தாரு. அவருக்கு இந்த டிரஸ் புடிக்கலையாம். ஒரு தடவைதான் போட்டு இருக்காராம். யாருக்காவது தெரிஞ்சவங்ககிட்ட குடுத்துட்றன்னு சொல்லி தந்தாரு,” என்று பதிலளித்தாள்.
“அப்படியா?” என்றவள் அந்தப் பையைத் திறந்து உடையை எடுத்துப் பார்த்தாள்.
“டிரஸ் பார்க்க புதுசு மாதிரியே இருக்குக்கா,” என்று வித்யா கூற,
அந்த உடையைப் பார்த்த முரளி, “அக்கா, இந்த டிரஸ் சூப்பரா இருக்கு. நானே எடுத்துக்குறேன்,” என்று கூறினான்.
முகம் கழுவிவிட்டு துடைத்தவாறு வெளியே வந்தவள், “அது உனக்கு ரொம்ப பெருசா இருக்கும்டா. வேற யாருக்கும் கொடுத்துடுவோம்,” என்று கூற,
“நான் வளர்ந்த பின்னாடி போட்டுக்குறேன், க்கா,” என்றவன் கண்ணாடியில் அதனை தன் மேல் வைத்து பார்த்தான்.
“ஆமாக்கா, டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு. அண்ணாவே வச்சுக்கட்டும்,” என்று வித்யாவும் மொழிய,
“சரிடா, நீயே வச்சுக்கோ,” என்றவாறு அருகில் வந்து அந்த உடையைத் தொட்டுப் பார்த்தவளது முகம் சடுதியில் மாறியிருந்தது.
“அக்கா, இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கும்ல?” என்று முரளி வினவ,
“ஹ்ம்ம்… நல்லா இருக்குடா,” என்று நொடியில் தன்னைச் சமாளித்து பதில் அளித்தவள் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.