முகம் முழுவதும் தவிப்புடனும் விழிகளில் கெஞ்சலுடனும் தன் எதிரே நிற்பவளை ஒரு நொடி அமைதியாய் நோக்கியவன் பிறகு மெதுவாய் தலையை அசைத்து சம்மதத்தை தெரிவிக்க மலரின் முகத்தில் நிம்மதி படர்ந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றவளது குரலில் அவனுக்கான நன்றி விரவிக்கிடந்தது.
சடுதியில் ராதாவின் புறம் திரும்பியவள், “ஒரு மணி நேரத்துல போய் குளிச்சிட்டு ரெடி ஆகிட்டு வரேன்ம்மா” என்று மொழிய, ராதா சம்மதமாய் தலையசைத்தார்.
ராதாவிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் வேகமாக அங்கிருந்து வெளியேறியவள் தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். மலரின் வீடு அங்கிருந்து பதினைந்து நிமிட நடை பயணத்தில் வந்து விடும். அந்த பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் மற்றொருபுறம் தான் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியும் இருந்தது.
அரக்க பறக்க வீட்டை அடைந்தவள் காலணியை கழட்டிவிட்டு உள்ளே நுழைய, “அம்மா அக்கா வந்துட்டா” என்ற வித்யா கூடத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தாள். முரளி அருகில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தான். இருவரும் பக்கத்தில் உள்ள பள்ளியில் தான் பயில்கின்றனர்.
வித்யாவின் குரலில் சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்த மாதவி, “என்ன மலரு போன வேலை என்னாச்சு? என்று வினா தொடுத்தார்.
“வேலை கிடைச்சிருச்சுமா இன்னும் ஒரு மணி நேரத்துல போகணும் நான் போய் குளிச்சிட்டு வரேன் சாப்பாடு எடுத்து வை” என்றவள் குளியல் அறைக்குள் நுழைந்து ஒன்றுக்கு மூன்று முறை சோப்பை நன்றாக தேய்த்து குளித்து முடித்து வெளியே வந்து அங்கிருந்த செல்ஃபில் எதையோ தேட துவங்கினாள்.
அதனைக் கண்ட மாதவி, “என்ன தேடுற மலர்?” என்று வினா எழுப்ப, “சுதாகர் அண்ணா வாங்கி கொடுத்த சென்ட் இங்க தான இருந்துச்சு எங்க போச்சு?” என்று பதில் வினவினாள்.
உண்டு முடித்து கையை கழுவி வந்த வித்யா, “உனக்கு எதுக்கு கா சென்ட் நீ தான் சென்ட் வாசமே ஆகாதுன்னு சொல்லுவியே?” என்று வினவ, “சென்ட் வாசம் ஆகாது தான் ஆனா என்ன பண்றது சென்ட் அடிக்கலனா வேலை கிடைக்காது” என்றவளது கையில் வாசனை திரவியம் சிக்கியது.
“என்ன சொல்ற மலரு” என்று மாதவி புரியாது வினவ, “ம்மா இந்த சுதாகரன் அண்ணாவோட ஃப்ரெண்ட் இருக்காருல அந்த சாருக்கு மீன் வாசமே ஆகாதாம். நான் வேற மீனை வித்துட்டு அப்படியே போய் நின்னேன்னா அவங்க வேலைக்கு வர வேண்டாம் வேற ஆளை பார்த்துகிறேன்னு சொல்லிட்டாங்க. நான் தான் குளிச்சு முடிச்சு சென்ட் எல்லாம் போட்டு மீன் வாசம் வராம பார்த்துகிறேன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன்” என்றவள் தன்னுடையில் ஆங்காங்கே வாசனை திரவத்தை தெளிக்க துவங்கினாள்.