“எல்லாரும் நல்லா இருக்காங்க மலர்…” என்று பதிலளித்துவிட்டு, “பின்… முரளி காலேஜ்ல சேர்ந்துட்டானா?” என்று விசாரித்தான்.
“ஹான்… சேர்ந்துட்டான்ணா. ஆர்.கே.பி. இன்ஜினியரிங் காலேஜ்லதான் சேர்த்து விட்டு இருக்கேன்…” என்று மலர் பதில் மொழிய,
“ஓ… அந்த காலேஜா? ரொம்ப பெரிய காலேஜாச்சே…” என்று சுதாகர் கேட்டான்.
“ஆமாண்ணா. நான் வேலை பார்க்கிற இடத்துல வருஷத்துக்கு இருபத்தி அஞ்சு பேர் குடும்பத்தில் இருக்கிற ஒருத்தருக்கு படிப்புச் செலவை ஏத்துக்குறாங்க. அந்த ஸ்கீம்லதான் நான் முரளியைப் படிக்க வைக்கிறேன்…” என்று மலர் விளக்கினாள்.
“ஓ… ரிஷியோட ஆஃபீஸ்தானே அது?” என்று சந்தேகமாக சுதாகர் கேட்க,
“ஆமாண்ணா…” என்று முடித்துக்கொண்டாள்.
இதுவே வேறொரு சமயமாக இருந்திருந்தால், ரிஷியைப் பற்றி கண்டிப்பாகப் புகழ்ந்து பேசியிருப்பாள். அது சுதாகருக்கும் நன்றாகப் புரிந்தது.
ஆனால், ஏன் இப்படி ஓரிரு வார்த்தைகள் பதில் அளிக்கிறாள் என்றுதான் தெரியவில்லை.
“ரிஷி கூறியதால் அழைத்தேன்…” என்று கூற மனம் வராததால், “சும்மாதான் மலர் கூப்பிட்டேன். திடீர்னு உன்னோட ஞாபகம் வந்துருச்சு. சாகித்யா இந்த வருஷம் ஃபைனல் இயர் தானே?” என்று விசாரித்தான்.
“ஆமாண்ணா… ஃபைனல் இயர்தான். வித்யா எய்த் படிக்கிறா…” என்று மலர் பதில் கூற,
“சரி மா… பார்த்து இரு. ஏதாவது ஹெல்ப் வேணும்னா யோசிக்காம எனக்குக் கூப்பிடு…” என்று மொழிந்தான்.
“கண்டிப்பா கேட்குறேன் ண்ணா…” என மேலும் இரு வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
மலரிடம் பேசியதில் யோசனையான சுதாகர், ரிஷிக்கு அழைப்பை விடுத்தான்.
முதல் ரிங்கிலேயே அழைப்பை எடுத்த ரிஷி, “என்ன பேசிட்டியா?” என்று மறைக்க முயன்ற பரிதவிப்புடன் கேட்டிட, சுதாகருக்கு ஏதோ புரிவது போல இருந்தது. ஆனால், இது எப்படி சாத்தியம் என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை.
அவர்களாகக் கூறும் வரை தான் ஏதாவது கேட்கப் போய், அது இல்லையென்றால் இருவருக்கும் மனக்கசப்பு என்று எண்ணியவன்,
“பேசிட்டேன் டா. நான் பேசின வரைக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்க மாதிரி தெரியல. சாதாரணமாதான் பேசினா…” என்று சுதாகர் கூற, இங்கு ரிஷியின் முகத்தில் குழப்ப ரேகைகள்.
“சுதாகரோட கால் அட்டென்ட் பண்ணவ ஏன் என்னோட கால் அட்டென்ட் பண்ணல?” என்று சிந்தையுடன் நெற்றியைச் சுருக்கியவன்,
“சரிடா… அப்ப நான் பாத்துக்குறேன்…” என்று பதில் அளித்தான்.
“உன்னோட கால் ரீச் ஆகலைன்னு நினைக்கிறேன். அதான் அவ எடுக்கல…” என்று சுதாகர் தங்கைக்காகப் பரிந்து பேச,
“சரிடா… நேர்ல பார்த்துப் பேசுறேன்…” என்று ரிஷியும் முடித்துக்கொண்டான்.
அழைப்பைத் துண்டித்தவனுக்கு இம்மையும் புரியவில்லை, மறுமையும் புரியவில்லை. தான் ஊருக்குச் செல்லும் போது கூட நன்றாகத்தானே பேசினாள். இப்போது என்ன வந்தது என்று சிந்தை பலவாறாகச் சுழன்றது.
பிறகு நேரமாவதை உணர்ந்தவன், எப்படியும் அலுவலகத்திற்கு இன்று வருவாள். வந்த பிறகு நேரில் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணி, ஒரு தேநீரை மட்டும் போட்டுக் குடித்துவிட்டு அலுவலகத்தை நோக்கிச் சென்றான்.
ரிஷியைக் கண்டதும் எல்லோரும் மரியாதை நிமித்தமாகக் காலை வணக்கம் கூற, ஒரு தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டவன் தனது அறைக்குச் சென்று அமர்ந்தான்.
இன்னும் மலர் வந்திருக்கவில்லை. இன்றும் வராமல் விடுமுறை எடுத்துக் கொள்வாளா என்று ரிஷியின் இதயம் பரிதவித்தது.
அவனைப் பல நிமிடங்கள் காக்க வைத்தவள், நிர்மலான முகத்துடன் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
தன்னுடைய அறையில் இருந்து கண்காணிப்பு கேமராவில் அவளைக் கண்டவனது விழிகள் உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தது. அவள் நன்றாக இருக்கிறாள் என்று மனது உணர்ந்த கணம், ஒரு நிம்மதி சொல்லாமல் கொள்ளாமல் வந்தமர்ந்தது.
“ஊஃப்…” என்று பெருமூச்சு விட்டு விழிகளை மூடித் திறந்தவன், தன்னுடைய இன்டர்காமில் இருந்து மலரின் மேலாளருக்கு அழைப்பை விடுத்தான்.
அவர் அழைப்பை ஏற்றதும், “உங்க டீம்ல இருக்க ஸ்டாஃப் கருணைமலரை வர சொல்லுங்க…” என்று கூறிட,
“என்னாச்சு சார்? நீங்களே டைரக்டா வரச் சொல்றீங்க… எதுவும் பிரச்சனையா?” என்று மேலாளர் பதட்டத்துடன் கேட்டார்.
காரணம், ரிஷியின் வேலைப் பேச்சுவார்த்தை எல்லாம் மேலாளர் மற்றும் சிஆர்எம் அவர்களுடனே முடிந்துவிடும். அவர்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களிடம் எல்லாம் ரிஷிக்கு எந்தவித பேச்சுவார்த்தையும் இருக்காது.
இப்போது திடீரென வந்து, தனக்குக் கீழே பணிபுரியும் கருணைமலரை அழைப்பதைக் கண்டுதான் அவர் இவ்வாறு வினவினார்.
“நத்திங் மோகன். டோன்ட் பேனிக். அவங்கள வர சொல்லுங்க…” என்று ரிஷி முடித்திட, மோகன் மலருக்கு அழைப்பு விடுத்தான்.
மலர் அழைப்பை ஏற்றதும், “கருணைமலர், உங்களை எம்டி சார் கூப்பிடுறாங்க. போய்ப் பார்த்துட்டு வந்துருங்க…” என்று கூறிட, மலருக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
கைகளை ஒரு கணம் இறுக்கியவள், “சரிங்க சார்…” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
மலரின் அருகில் அமர்ந்திருந்த லதா, “என்ன மலர்? ஏன் உன் ஃபேஸ் ஒரு மாதிரி இருக்கு? நேத்தும் வரல…” என்று வினவிட,
“ரெண்டு நாளா காய்ச்சல் லதா. அதான் நேத்து வர முடியல…” என்று சமாளித்தவள், அடிவயிற்றிலிருந்து எழுந்த பயத்தை முகத்தில் காண்பிக்காதவாறு பாவனையை கொண்டு வந்தவள், ரிஷியின் அறையை நோக்கிச் சென்றாள்.
இந்தக் கணமும் மலரிடம் ராதாவும் ராமச்சந்திரனும் பேசிய வார்த்தைகளின் தாக்கம் அப்படியே இருந்தது. அதுவும் குடும்பத்தினரை இழுத்து வைத்துப் பேசியது, இந்த நொடியும் நடுங்கச் செய்தது.
வீட்டு வேலையில் இருந்து உடனடியாக நின்று கொண்டவளால், அலுவலக வேலையில் அப்படி செய்ய முடியவில்லை. காரணம், இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றாள் என்றால், மூன்று மாதச் சம்பளத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும். மொத்தம் அறுபதாயிரம் வரும்.
மற்றொரு காரணம் முரளியின் படிப்பு. தான் இங்கிருந்து சென்றால், அடுத்த வருடத்திலிருந்து அவனுக்குக் கல்லூரிக் கட்டணம் இவர்கள் செலுத்த மாட்டார்கள்.
அலுவலகத்திலிருந்து உதவி கிடைத்ததால், முரளி ஆசைப்பட்ட பெரிய கல்லூரியிலேயே சேர்த்து விட்டிருந்தாள். இப்போது தான் இங்கிருந்து விலகிச் சென்றால், கல்லூரிக் கட்டணத்தை தான் கட்ட வேண்டும்.
வருடத்திற்கு மூன்று லட்சம் வரும் கல்லூரிக் கட்டணத்தை மலரால் அவ்வளவு பெரிய தொகையை நிச்சயமாகக் கட்ட முடியாது.
இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால், தன்னுடைய சக்திக்கு மீறி அவனைப் பெரிய கல்லூரியில் சேர்த்து விட்டிருக்க மாட்டாள்.
தம்பியின் படிப்பிற்காக இங்கே பணியைத் தொடர வேண்டிய நிலை மலருக்கு.
வேறு வழியின்றி வந்து விட்டாலும், ராதாவும் ராமச்சந்திரனும் என்ன செய்வார்களோ என்று அச்சமாக இருந்தது.
தான் ரிஷியின் அலுவலகத்தில் பணி புரிவது ராதாவிற்கு இன்றுவரை தெரியாது. இனி தெரிய வந்தால் தன்னுடைய நிலை என்னாவது? அதற்கு மேல், தன்னுடைய குடும்பம் என்று நினைக்கும் போதே இதயம் நடுங்கியது.
ராதாவும் ராமச்சந்திரனும் பேசிய பேச்சில், சாலையோரத்தில் அமர்ந்து அழுகையில் கரைந்தவள், வெகு நேரம் சென்றே தன்னிலை அடைந்து வீட்டிற்குச் சென்றாள்.
நல்ல வேளை, அவள் சென்ற சமயம் உடன்பிறந்தவர்கள் மூவரும் வந்திருக்கவில்லை. மாதவி மட்டும் சமையலறையில் இருந்தார்.
அவருக்கு முகத்தைக் காட்டாது அறைக்குள் நுழைந்து கொண்டவள், அழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் போராடினாள். சத்தமாக அழுகக் கூட முடியாத நிலை.
இரண்டு நாட்களாக உறக்கமின்றித் தவித்தாள்.
நடந்ததை அறிந்தால் வீட்டினர் நிச்சயமாகத் துன்பப்படுவர் என்பதை உணர்ந்தவள், மற்றவர்களிடம் மறைத்துவிட்டு தனக்குள்ளே புதைத்துக் கொண்டாள்.
யாரிடமாவது கூறியிருந்தால் மனபாரம் குறைந்திருக்கும். தனக்குள்ளேயே வைத்து உழன்றவளுக்கு, நேரம் செல்லச் செல்ல வேதனைதான் அதிகரித்தது.
இரண்டு நாட்களும் தூங்கா இரவுகளுடனும், குடும்பத்தினரின் பாதுகாப்பை எண்ணி அச்சத்துடனும்தான் கழிந்தது.
நடந்ததை எண்ணி தனக்குள்ளே மருகியவள், “மே ஐ கம் இன் சார்?” என்று ரிஷியிடம் அனுமதி வேண்டி நின்றாள்.
“கம்மின்…” என்று ரிஷியின் குரல் வந்ததும், இவளுக்கு இதயம் அச்சத்தில் தடதடக்கத் துவங்கியது.
கூடவே, அபஸ்வரமாய், “இனிமே என் புள்ள இருக்கிற பக்கம் தலை வைச்சுக்கூட பார்க்கக் கூடாது. அப்படி மீறினா உன் குடும்பத்தோட உருத் தெரியாம அழிச்சிடுவேன்…” என்ற ராதாவின் குரல் செவியில் ஒலித்து, அவளது உயிர் வரை வதைத்தது.
கதவில் கை வைத்தவளின் கரம் கிடுகிடுவென நடுங்க, விழி மூடி தன்னைச் சமாளித்தவள், மிகவும் நிர்மலான பாவனையுடன் உள்ளே நுழைந்து,
“நீங்க கூப்பிட்டீங்கன்னு மோகன் சார் சொன்னாங்க…” என்றிட, ரிஷியின் பார்வை ஆராய்ச்சியாய் அவள் மீது படிந்தது.
அவனது பார்வை அவளது அச்சத்தை கிடுகிடுவென வளரச் செய்ய, அடிவயிற்றில் பந்தொன்று உருண்டது.
மிகவும் முயன்று முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொள்ளப் போராடினாள்.
ரிஷி எந்த முகாந்திரமுமின்றி, “ஏன் மார்னிங் வீட்டுக்கு வரல?” என்று கேட்டிட, இவளுக்கு அச்சத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
அவளது முகத்தையே விழியாக்கிப் பார்த்தவன், “உன்கிட்டதான் கேட்கிறேன் மலர்…” என்று சற்று அழுத்தத்துடன் உரைக்க,
இரண்டு கைகளையும் இறுக்கித் தன்னைச் சமன் செய்தவள்,
“நான் வேலையை விட்டு நின்னுக்கிறேன் சார். நீங்க வேற யாரையும் வேலைக்கு சேர்த்துக்கோங்க…” என்று திணறியவாறு கூறினாள்.
அவளது குரலில் இருந்த திணறலையும், இரண்டு நாட்களாக உறங்காத விழிகளையும், வேதனையில் கசங்கி, கலைந்திருந்த முகத்தையும் கண்டது அவனைப் பெரிதாய் தாக்கியது.
எப்போதும் புன்னகையுடன் காலை வணக்கம் கூறுபவளின் இதழ்கள் இன்று பேசக்கூட மறுக்கிறது.
என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், அவளது முகம் ஏதோ அசம்பாவிதம் நடந்ததை அவனுக்கு உணர்த்தியது.
“ஏன் மலர், திடீர்னு வேலையை விட்டு நிற்கிறேன்னு சொல்ற? என்ன பிராப்ளம் உனக்கு?” என்று முயன்று வரவழைத்த சாதாரண குரலுடன் வினவினான்.
“பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை சார். மீன் வித்துட்டு அங்கேயும் வேலை பார்த்துட்டு, இங்கேயும் வந்து பார்க்க முடியல. அதுதான்…” என்றவள், அவனது முகத்தைப் பார்க்காமல் கூற, ரிஷிக்குப் புரிந்தது அவள் பொய் கூறுகிறாள் என்று.
அதற்கு மேலும் பொறுமையைக் காக்க விரும்பாதவன்,
“என்ன மலர்? என்ன பிரச்சனை உனக்கு? என்கிட்ட சொல்லு…” என்றவாறு அவளை நோக்கி வர,
சடுதியில் இரண்டடி பின்னால் நகர்ந்து சுவற்றில் மோதியவள்,
“ப்ளீஸ் சார்… பக்கத்துல வராதீங்க…” என்று நடுங்கிய குரலில் கூறிட, அந்தக் குரல் அவனது இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சியது.
அதுவும் அவளது குரலில் இருந்த அந்தப் பயம் அவனைப் பெரிதாய் தாக்க,
“என்ன மலர்? எதுக்கு என்னைப் பார்த்து இப்படி பயப்படுற?” என்று ஓரடி எடுத்து வைத்தான் அவளை நோக்கி.
“ப்ளீஸ் சார்… என் பக்கத்துல வராதீங்க…” என்று தழுதழுத்த குரலில் கூறியவள், கையெடுத்துக் கும்பிட, அவளது செயலில் ஏகமாய் அடி வாங்கினான் ரிஷி.
எதிரில் இருந்தவளது கண்ணீரினால் ரிஷி மொழியற்று போக,
“ப்ளீஸ் சார்… எங்களை வாழ விடுங்க. எனக்கு என் குடும்பம் ரொம்ப முக்கியம்…” என்று கண்ணீரைத் துடைத்தாள்.
அவளது பேச்சைக் கண்டு எதுவும் புரியாதவன்,
“மலர், ப்ளீஸ்… என்ன நடந்துச்சுன்னு சொன்னாதானே தெரியும்…” என்று வேதனையைச் சுமந்த குரலில் உரைக்க,
“நான் எதுவும் சொல்ல விரும்பல சார். தயவு செய்து என்கிட்ட எதுவும் கேட்காதீங்க. ப்ளீஸ்… என்ன விட்டுடுங்க சார். என் வீட்ல இருக்க யாருக்காவது ஏதாவது ஆச்சுன்னா, என்னால அதைத் தாங்கிக்க முடியாது. புரிஞ்சுக்கோங்க சார்…” என்று மொத்த வேதனையையும் விழிகளில் தேக்கி அவனிடம் இறைஞ்சினாள்.
அவளது அந்த அழுகையைத் தாங்க மாட்டாதவன், சட்டென்று நெருங்கித் தன்னோடு சேர்த்து அணைக்க விழைய,
“உங்க கால்ல கூட விழுறேன்… என்னை விட்டுட்டுங்க சார்…” என்று மலர் அழுகையுடன் மடிந்து அமர்ந்திட,
ரிஷி அப்படியே உறைந்து போனான்.