• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,247
Reaction score
3,666
Points
113
வேதம் – 4

வேதவள்ளி வீட்டிற்குள் நுழைய, அம்சவேணி அமைதியாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, எழிலரசன் அவரருகே அமர்ந்திருந்தான். இவளைப் பார்த்ததும் முறைத்தவன், தலையைத் திருப்பிக்கொள்ள, எதுவும் கூறாது அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

உள்ளே பயம் அப்பிக்கிடந்தது பெண்ணுக்கு. உடைமாற்றி தன்னைச் சுத்தம் செய்துகொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். பாத்திரம் குவிந்து கிடந்தது.

கூடத்தை எட்டிப் பார்த்தாள் வேதா. இருவரது முகமும் எப்போதும் போல நிர்மலமாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் நிற்க வைத்து கேள்வி கேட்டிருந்தால் கூட, இத்தனை பதைபதைப்பு இருந்திருக்காதோ என்னவோ? தவிப்புடன் பாத்திரத்தை எல்லாம் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அவள் எல்லாவற்றையும் சுத்தம் செய்து முடிக்க, முருகையா வந்துவிட்டார்.

அவர் அறைக்குள் நுழைய, தாயும் மகனும் ஒன்றாக அவர் பின்னே அறைக்குள் நுழைந்தனர். இதை எதிர்பார்த்தாளே பெண். இதழ்கள் கேலியாக வளைந்தன. சிறிது நேரம் கடக்கவும், முருகையா கூடத்திற்கு வந்தமர, மற்ற இருவரும் அமர்ந்தனர்.

அவர் அழைப்பதற்கு முன்பே அவர்கள் முன்னே சென்று நின்றாள் வேதவள்ளி. “பெரியப்பா, இன்னைக்கு காலைல அவரா வந்து என்கிட்ட பேசுனார். நான் யார்க்கிட்டேயும் பேசலை...” எனக் காலையில் நடந்ததை விவரித்தாள்.

“ப்பா, பொய் சொல்றா பா. இவ அவன்கிட்டே பேசுனதை நான் பார்த்தேன்...” எழிலரசன் கூற, பெருமூச்சை வெளியிட்டார் முருகையா.

“வேதா மா, நீ பேசலை சரி. அவன் உன்கிட்ட பேசுறானே. எழிலுக்குத் தோணுன மாதிரிதானே எல்லாருக்கும் தோணும். ஒவ்வொருத்தர்கிட்டேயும் போய் விளக்கம் கொடுக்க முடியாதே. அவனுக்கு ஒன்னும் இல்லை மா. உன்னை மாதிரி இன்னும் ரெண்டு பேர் பின்னாடி சுத்துனா கூட, ஆம்பளையை உலகம் குத்தம் சொல்லாது. பொண்ணை மட்டும்தான் குத்தம் சொல்லும். உன்னோட பேர் கெட்டுப் போறதுல எனக்கு இஷ்டம் இல்லை மா...” என்றவரை வேதவள்ளி கேள்வியாக நோக்கினாள்.

“ஏங்க, இவ சொல்றான்னு நீங்க அந்தக் கதையை நம்புறீங்களா? இவ பேசியிருப்பான்னு எனக்குத் தோணுது. கண்டிக்கிறதை விட்டுட்டு என்னென்னமோ பேசிட்டு இருக்கீங்க...” அம்சவேணி சிடுசிடுத்தார்.

“அம்சு, ஆயிரம் காவாலி பசங்க நம்ம பொண்ணு பின்னாடி சுத்துனாலும், அவ யாரையும் நிமிர்ந்து பார்க்க மாட்டா. எனக்கு என் பொண்ணு மேல நம்பிக்கை இருக்கு” முருகையா கூறியதும், ஏனோ அழுகை வரும் போலிருந்தது வேதவள்ளிக்கு. அவள் நினைத்து வந்தது ஒன்று. ஆனால், நடந்து கொண்டிருந்ததோ வேறு.

“இனிமே நானே உன்னை காலையிலும் நைட்டும் வேலைக்குக் கூட்டீட்டுப் போய், திரும்ப கூப்பிட்டு வந்துட்றேன். துணைக்கு ஆள் இருக்கும்போது என்ன பண்ணிட முடியும் அவனால?” என்றார் முருகையா.

“ம்க்கூம்... அது ஒன்னுதான் குறை. என்னமோ பண்ணுங்க” என்ற அம்சவேணி அறைக்குள் நுழைய, எழிலும் தன் தாயைப் பின்பற்றி எழுந்து சென்றுவிட்டான்.

தன் முன்னே நின்றிருந்தவளை அருகே அழைத்து அமர்த்தியவர்,
“என்ன பிரச்சனைனாலும், இந்தப் பெரியப்பாகிட்டே சொல்லுடா. நான் பார்த்துக்குறேன். உன் அப்பா சீக்கிரம் வந்துடுவான்” என்று வேதவள்ளி கரத்தை முருகையா ஆதரவாகப் பிடிக்கவும், அவள் விழிகளிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கோடாய் இறங்கியது.

“பெரியப்பா...” என்றவள் லேசாகப் புன்னகைத்தாள். தன் தந்தை விரைவில் வந்துவிடுவார் என்ற வார்த்தைகள் அத்தனை ஆசுவாசத்தைப் பெண்ணிற்கு அளித்தது. அவர் வந்தப் பிறகு, தானும் தன் தந்தையுடன் தங்கள் வீட்டிற்கு சென்றுவிடலாம் என மனதின் ஓரத்தில் இப்போதே மகிழ்ச்சி துளிர்விடத் துவங்கியிருந்தது.

எத்தனை நாட்கள் ஏங்கியிருக்கிறாள், தொலைந்தத் தன் தந்தையின் அன்பு மீண்டும் கிடைக்குமா? என்று. நிறைய இரவுகள் தாய் தந்தையை நினைத்து தூங்காது கடத்தியிருக்கிறாள். தனக்கென யாருமில்லையே என மனது விம்மிய கணங்களில், ‘தந்தை விரைவில் வந்துவிடுவார்’ எனத் தனக்குத் தானே கூறி தேற்றிக் கொள்வாள் வேதவள்ளி.

முகமெல்லாம் புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்த மகனைக் கேள்வியாகப் பார்த்தார் வத்சலா. அவரைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிய அன்பழகன், அறைக்குள் நுழைந்தான். அவளருகே உணர்ந்த சிலிர்ப்பு இன்னும் ஆடவனை சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. அது உடலிலும் உள்ளத்திலும் துள்ளலைக் கொடுத்திருக்க,
கண்ணாடியில் பார்த்து தலையைக் கலைத்து புன்னகைத்துக்கொண்டான். மனதில் உள்ளவற்றை உரியவளிடம் கொட்டிவிட்ட ஆசுவாசத்தில், ஆடவன் சுகமான நித்திரையைத் தழுவினான்.

எப்போதும் கட்டிலில் வீழ்ந்த சிறிது நேரத்தில் உறங்கிவிடுவாள் பெண். ஏனோ அன்று உறக்கம் கண்களைத் தழுவ மறுத்தது. மறுபுறம் திரும்பிப் படுத்தாள். ஐந்து நிமிடத்தில் கட்டிலின் இரண்டு முனைகளுக்கும் புரண்டுப் புரண்டுப் படுத்தும் நித்திரை என்பது பெண்ணை அணுகவில்லை.

இதோ மனது சற்று நேரம் முன்பு தன்னருகே பேசியவனின் வார்த்தையை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்த்தது. இந்த இரண்டு வருடங்களில் தன்னிடம் அவன் அதிகபட்சமாய் பேசியது இன்று மட்டும்தான் என மூளை அறிவுறுத்தியது‌. ஏனோ அந்த முகம் அகத்தில் பதிந்து தன்னைவிட்டு நீங்கமாட்டேன் என அடம் பிடித்தது. தவறென்று தெரிந்தும் மனதின் ஒரு மூலையில் அந்த அன்பு பெண்ணை அசைத்துப் பார்த்ததென்னவோ உண்மை. அன்பு பெண்ணை அசைத்துவிட்டான் என்பதும் உண்மைதான்.

தாய் தந்தையின்றி தவிக்கும் பாவையை ஆதரவாய் அணைத்து, அன்பு செலுத்த நினைக்கும் அந்தக் கரத்தை ஒரு நொடி கூட தட்டிவிட தோன்றவில்லை வேதவள்ளிக்கு. இந்த அன்பழகன் பாதித்தான் அவளை. விழியோரம் நீர் துளிர்த்தது. முருகையா தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற முடியாது போய்விடுமோ? என முதன்முதலில் பெண் மனம் அச்சம்கொண்டது. விழிகளை மூடியவளின் கண்முன்னே வந்து நின்றான் அன்பழகன். காவல்நிலையம் சென்று பிரச்சனை செய்த அன்பழகன் வந்து நின்றான். அந்த நிகழ்வும் கண்முன்னே விரிந்தது.

ஆறுமாதமாகத் தன் பின்னே வருபவனைப் பொருட்படுத்தாது வேலைக்குச் சென்று வந்துகொண்டிருந்தாள் வேதவள்ளி. அவள் இருப்பிடம் வருபவன், சந்திற்குள் நுழையாது திரும்பிச் சென்றுவிடுவான்.

அன்றும் அப்படித்தான் வேதவள்ளி முன்னே நடக்க, சில அடிகள் தொலைவில் யார் கண்ணையும் உறுத்தாத வகையில் அவளைப் பின்தொடர்ந்தான் அன்பழகன். நன்றாய் இருள் கவிழ்ந்திருந்தது. ஆட்கள் நடமாட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே இருக்க, நிசப்த அமைதி. தன் பின்னே தொடருபவனை இதுவரை வேதவள்ளி நிமிர்ந்து கூடப் பார்த்ததில்லை. ஏன் அவன் முகம் கூட அவளுக்குப் பரிட்சயமில்லை.

வேதவள்ளி அவளது வீடு இருக்கும் தெருவில் நுழையவும், சில நொடிகள் நின்ற அன்பழகன், அப்படியே திரும்பி நடக்க ஆரம்பித்தான். சரியாக அதேநேரம் அங்கு வந்த எழிலரசன், அவர்களிருவரையும் கவனித்துவிட்டான்.

விறுவிறுவென வேதவள்ளியின் முன்பு நின்றவன், “யாரு டி அவன்? உன் பின்னாடி எதுக்கு வர்றான்?” குரலை உயர்த்திக் கேட்கவும், அன்பு அப்படியே நின்றுவிட்டான்.

எழிலை எதிர்பார்க்காது திகைத்த வேதவள்ளி, “எனக்குத் தெரியாது...” என்றாள் அதிர்ச்சி கலந்த குரலில். முகத்தில் லேசான பதட்டம் படர்ந்தது.

“பொய் சொல்லாத டி. கண்டவன் கூட ஊரை சுத்தீட்டு வர்றீயா?” என்று எழில் கேட்டதும், அதிர்ந்து போனாள் வேதவள்ளி. சட்டென கண்கள் கலங்கிவிட்டன. உடல் நடுங்கியது அந்த பேதைப் பெண்ணுக்கு.

“என்ன டி, வாயைத் திறந்து சொல்லு. வேலைக்குப் போறீயா, இல்லை டெய்லி இப்படி எவன் கூடவும் ஊரை சுத்தீட்டு வர்றீயா?” எனக் கேட்டவனின் கன்னத்தில் இடியாய் இறங்கியது அன்புவின் கரங்கள். எதிர்பாராத இந்தத் தாக்குதலில் எழிலரசன் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழச்செல்ல, அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தான் அன்பழகன்.

“எங்க இப்ப பேசுடா. இந்த வாய்தானே அவளைத் தப்பா பேசுனது...” என எழில் வாயில் ஓங்கி குத்தினான் அன்பு. அதில் எழிலரசன் வாயிலிருந்து குருதி வழியத் துவங்கியிருந்தது.

“ஹே...‌ஏய்!” என அவர்களுக்கு இடையில் புகுந்திருந்தாள் வேதவள்ளி. நடந்த நிகழ்வில் அவளது இதயம் படபடவென அடித்தது.

“என்ன டி, அடிக்க விட்டுட்டு வேடிக்கைப் பார்க்குறீயா? வேணும்னு தானே பண்ற நீ...” வாயில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக்கொண்டே எழிலரசன் வேதவள்ளியிடம் எகிற, “அடிச்சும் அடங்க மாட்ற டா நீ...” என்ற அன்பு கையை முறுக்கிக்கொண்டு அவனருகில் செல்லவும், “இரண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா?” எனக் கத்திவிட்டாள். அவளது கத்தலில் கையைக் கிழே இறக்கினான் அன்பழகன். அப்போதுதான் முதன்முதலில் அவனை நேர்க்கொண்டு பார்த்தாள் பெண். அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

வெளியே நடந்த கலவரத்தில் அம்சவேணி வந்துவிட்டார்.
எழிலரசன் ரத்தம் வழிய நிற்கவும், “டேய் எழிலு, என்னாச்சு டா? ஐயோ” எனப் பதறிக்கொண்டு அவனருகே வந்தார் பெண்மணி.

“ம்மா... இவதான் மா. எவன் கூடவோ ஊரை சுத்தீட்டு வந்தா. நான் அதை கேட்டதுக்கு, அவனைவிட்டு என்னை அடிக்க வச்சுட்டா” என்ற எழில் தாயின் பின்னே நகர, அன்பு பல்லைக் கடித்தான்.

‘நாய்! மறுபடியும் மறுபடியும் அதையே சொல்றான் பாரு’ என கையை இறுக்கியவன், தன்னைக் கட்டுப்படுத்தினான்.

“ஐயோ! ஏங்க... வெளிய வாங்க முதல்ல. உங்க செல்ல மக பண்ண காரியத்தைப் பாருங்க. எழில் இரத்தம் வழிய நிக்கிறான் பாருங்க” என்றவருக்கு விழிகள் எல்லாம் கலங்கிவிட்டது. தன் சேலையின் முந்தானையை எடுத்து எழிலரசன் வாயில் வழியும் இரத்தத்தைத்
துடைத்துவிட்டார் அம்சவேணி.

முருகையா மனைவி குரலில் பதறிக்கொண்டு வெளியே வந்தார். என்ன நடந்தது என்று புரியவில்லை அவருக்கு. “எழிலு! என்னாச்சு டா...” அதிர்ந்தபடியே மகனருகே சென்றார் மனிதர். வேதவள்ளி விழிகளில் நீருடன் நின்றிருந்தாள். இத்தனை பெரிய பிரச்சனையாகும் என்று எள் அளவும் அவள் எண்ணியிருக்கவில்லை. இல்லையென்றால், எப்போதோ அன்பழகன் விஷயத்தை முருகையா கருத்திற்குக்கொண்டு சென்றிருப்பாளே.

“முதல்ல அவனை உள்ள கூட்டீட்டு வா அம்சு” என்றவர், மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். அம்சவேணியும் அழுதவாறே கணவன் பின்னே சென்றார். இத்தனை நடந்தும் அசையாது அந்த இடத்திலே நிற்கும் அன்பழகனைப் பார்த்து கோபமாய் வந்தது வேதவள்ளிக்கு.

அத்தனை திடமாய் நின்றிருந்தான் அன்பு. “ப்ளீஸ், தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்புங்க. ஏற்கனவே நடந்தப் பிரச்சனை பத்தாதுன்னு நிக்குறீங்களா?” எனப் பெண் கோபமாகப் பேச, அவள் விழிகளில் நீர் கசிந்தது. அதைப் பார்த்ததும் அன்பு தவித்துப் போனான். முதன்முதலில் தங்களுக்கு இடையேயான உரையாடல் இதுதான். இப்படியா சண்டை நிகழ வேண்டும்? என்று ஆயாசமாக இருந்தது ஆடவனுக்கு. தன் முன்னே நிற்பவளின் தோற்றத்தில் அன்பழகன் தவித்து, துடித்துப் போனான்.

“வேதா...” எனப் பேச வந்தவனின் முன்னே கையைப் பேசாதே என்பது போல நீட்டியவள், விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்து விட, செல்லும் அவளை ஆற்றாமையுடன் பார்த்தான் அன்பழகன். வலித்தது அவனுக்கு, அவளது கண்ணீர். இதோ சில நிமிடங்கள் முன்பு கலங்கிய கண்களுடன் எழில் கேட்ட கேள்வியில் துடித்துப் போய் நின்றிருந்தவளின் நிலை கண்டுதான் அவனை அடித்துவிட்டிருந்தான்.

‘எத்தனை தைரியம் அந்த நாய்க்கு...’ என இப்போதும் கோபம் வந்தது ஆணவனுக்கு. எத்தனை பெரிய வார்த்தைகள்? எப்படி என்னுடைய வேதாவைப் பார்த்து அவன் அப்படி கேட்கலாம் என்ற கோபத்தில் கையை நீட்டிவிட்டான். அடித்தது தவறென்று ஒருபோதும் அவன் எண்ணவில்லை. ஆனால், கண்டிப்பாக இதனால் பெண் பாதிக்கப்படுவாள் என மனம் தவித்தது. வேதாவின் முகம் வாடப் பொறுக்காதவன், அவள் கண்ணீருக்குத் தானே காரணமாகிவிட்டோம் என்ற குற்ற குறுகுறுப்புடன் அவ்விடத்தைவிட்டு
அகன்றிருந்தான்.

வீட்டின் ஒரு மூலையில் நின்றிருந்தாள் வேதவள்ளி. முகம் அழுதழுது சிவந்து போயிருக்க, மனமெங்கும் பயமும் பதட்டமும் சூழ்ந்திருந்தது. முருகையாவும் அம்சவேணியும் எழிலுக்கு முதலுதவி செய்து முடிக்க, குருதி வழிவது நின்றிருந்தது.

தங்களைப் பார்த்தவாறே நின்றிருக்கும் வேதாவைப் பார்த்து கோபமாக வந்தது அம்சவேணிக்கு. ‘எவ்வளவு தைரியம் இவளுக்கு? தன் வீட்டிலே இருந்துகொண்டு, தன் பையனையே அடிக்க வைப்பாளா இவள்?’ என்று கொதித்துப் போனார் பெண்மணி.

“பார்த்தீங்களா இவ செஞ்ச காரியத்தை. இத்தனை வருஷம் வீட்ல வச்சு பார்த்துக்கிட்டதுக்கு நமக்கு செஞ்ச நல்லதைப் பார்த்தீங்களா?” அம்சவேணி எழிலரசனின் காயத்தைப் பார்த்து கோபத்துடன் மொழிய, கண்ணில் நீருடன் அவரைப் பார்த்தாள் வேதவள்ளி. எழிலின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்ற எண்ணத்தில் விழிநீர் வழிந்து கொண்டிருந்தது.

“இவளை வீட்ல சேர்க்கும் போதே சொன்னேன், கேட்டீங்களா? இப்ப பாருங்க, உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டா...” அம்சவேணி கோபத்தில் வார்த்தைகளைக் கொட்ட, அதில் அதிகம் காயப்பட்டது என்னவோ வேதாவின் மனதுதான்.

எப்போதும் வேதாவுக்கு ஆதரவாகப் பேசும் முருகையா, இப்போது எதுவும் பேசாது அவளை அதிருப்தியுடன் பார்த்தார். அவரது பார்வையில் ஆற்றாமை பொங்கி வழிய, துடிதுடித்துப் போனாள் பெண்.

ஒரு வார்த்தைக் கூட முருகையா உதிர்க்கவில்லை‌. அவரது ஒரே ஒரு பார்வையில் பெண் மறித்துப் போனாள். ‘என்ன நடந்தது என்று கேட்கக் கூட ஆளில்லையே! என் பக்க நியாயம் ஒன்றிருக்கும் என்பது ஒருவருக்கும் தோன்றவில்லையா?’ என எண்ணி துடித்துப் போனாள். இந்த வீட்டில் அடியெடுத்து வைத்ததிலிருந்து இன்றுதான் அதிகமாகக் காயம்பட்டாள் மாது. அம்சவேணியின் தேள் போல கொட்டும் வார்த்தைகள் தராத காயத்தை, ஒரே நாளில் கொடுத்துவிட்டார் முருகையா.

‘தன் தரப்பு நியாயத்தை ஒரு வார்த்தை கூட எவரும் கேட்கவில்லையே!’ ஒரு துளி தவறுகூட தன் மீது இல்லாத நிலையில் கூட, குற்றவாளி கூண்டில் நின்றுகொண்டிருக்கும் தன்நிலையை எண்ணி கழிவிரக்கம் தோன்ற, விழிநீர் பொங்கியது பெண்ணுக்கு. அழுதாள், கதறவில்லை. மனதிற்குள்ளே அழுதாள்.




 
Well-known member
Messages
1,058
Reaction score
763
Points
113
Paavam vedha
Nice moving maa
 
Top