• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,247
Reaction score
3,666
Points
113
வேதம் - 3

‘நான் பேசிட்டு இருக்கேன். இவ எங்கப் பார்க்குறா?’ என எண்ணிய அன்புவின் விழிகள் வேதவள்ளி பார்க்கும் திசையில் பயணித்தன.

அவர்கள் இருவரையும்தான் நின்று பார்த்துக்கொண்டிருந்தான் எழிலரசன். அவனைக் கண்டதும் ஆடவன் இதழ்கள் கேலியாக வளைந்தன. கையை மடக்கியவன், “என்ன டா, ஏற்கனவே வாங்குனது பத்தலையா?” என்று புருவத்தைத் தூக்கினான். அதில் அன்புவைப் பார்த்து முறைத்த எழிலரசன், அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

‘கடவுளே!’ என பதைபதைப்புடன் இருவரையும் பார்த்திருந்தாள் வேதவள்ளி. எழிலரசன் அகலவும்தான் பெண்ணிடம் மூச்சே வந்தது. எங்கே இருவருக்கும் அடிதடியாகிவிடுமோ என பதறிவிட்டாள் பாவை.

“உன் முகத்துக்காகத்தான் வேதா அவனை சும்மா விட்றேன். இவனைப் பார்த்தெல்லாம் ஏன்டி பயப்பட்ற? ஒரு அடிக்கே சுருண்டு விழுந்துட்டான்...” என எள்ளலாக சிரித்தவனிடம் பேச வந்த வார்த்தைகளை விழுங்கியவள், விறுவிறுவென நடக்கத் துவங்கினாள். அன்புவின் கால்களும் அவளுடன் நகர்ந்தன.

சில நிமிடங்களிலே, “அழகேந்திரா” எனப் பெயர் பொறிக்கப்பட்ட வணிகவளாகத்திற்குள் நுழைந்தாள் வேதவள்ளி. அவள் சென்றதும் சில நொடிகள் நின்றவன், பின் கிளம்பிவிட்டான்.

“வா வேதா, உடம்பு பரவாயில்லையா?” அக்கறையாக நலம் விசாரித்த சகபணியாளரிடம் புன்னகைத்தவள், “நல்லாகிட்டேன் கா” என பதிலளித்து நகர்ந்தாள்.

நவீன வருகைப்பதிவேட்டில் கைரேகையைப் பதிந்தவள், தன் பணியைச் செய்ய ஆயத்தமானாள். அழகேந்திரா வணிகவளாகம் அந்தப் பகுதியில் பிரசித்திப்பெற்ற ஒன்று. பள்ளிப்படிப்பு முடிந்ததும் அங்கே வேலைக்குச் சேர்ந்திருந்தாள் வேதவள்ளி. அவள் இங்கு பணியைத் துவங்கி இரண்டு வருடங்கள் முழுதாக நிறைவுற்றிருந்தன.

“வேதா, சாக்லேட் செக்ஷன் போ. இன்னைக்குத்தான் லோட் இறக்குனோம். தனிதனியா பிரிச்சு அடுக்கிவிடு” மேற்பார்வையாளர் கூறவும், அவரிடம் தலையை அசைத்தவள், இனிப்புப் பகுதியை அடைந்திருந்தாள்.

புதிதாக வந்திருந்த இனிப்புகளைப் பிரித்துத் தனித்தனியே அடுக்கி, பழைய இனிப்புகளின் தேதிகளைப் பரிசோதித்துக் காலவதியானப் பொருட்களை எல்லாம் குறித்து, அதை அன்றைய நாளின் முடிவில் ஒப்படைப்பதற்காக அறைக்குள் பத்திரப்படுத்தினாள்.

எப்போதும் வரும் வாடிக்கையாளர்கள் வருகைத் தரவும் புன்னகை முகமாக அவர்களிடம் பேசி என்ன வேண்டும் எனக்கேட்டு, எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கைகள் அதன்பாட்டிற்கு வேலையைச் செய்ய, மனம் காலையில் நடந்த நிகழ்வில் தேங்கிவிட்டிருந்தது. கண்டிப்பாக இது இத்தோடு முடிந்து விடாதே. வீட்டிற்குச் சென்றதும் கேள்வி எழும்.

தான் என்ன கூறினாலும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்களே என ஆயாசமாக வந்தது பெண்ணுக்கு. ‘சரி எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். தன்னை மீறி எதுவும் நடந்துவிடாது’ மனதைத்
தேற்றிக்கொண்டாள்‌.

வேதவள்ளி பத்தொன்பது வயது யுவதி, தாயை இழந்து தந்தையின் அருகாமையும் இன்றி தவித்த பேதைக்கு அப்போது 12 வயது. முருகையா, வேதாவின் தந்தை சோனைமுத்துவின் நெருங்கிய நண்பரும் தூரத்து உறவினரும் கூட.

நிராதரவாக நின்றிருந்த பேதையை அணைத்து ஆறுதல் கூறி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது மனைவி அம்சவேணிக்கு வேதாவை வீட்டில் சேர்ப்பதில் துளிக்கூட இஷ்டமில்லை. தனது விருப்பமின்மையை முகத்திலே காட்டிவிட்டார் பெண்மணி.

எதுவும் பேசாது அமைதியாக நின்றிருந்தாள் வேதவள்ளி. தாய் இறந்து ஒரு நாள்தான் ஆகியிருந்தது. தன்னை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற தந்தையை விழிகளில் நீருடன் பார்த்தாள் பெண்.

“அப்பா, எப்போ வருவீங்க? என்னை விட்டுட்டு போகாதீங்கப்பா” என அவரை அணைத்துக்கொண்டு வேதவள்ளி கதற, தந்தையின் விழிகளும் பனித்திருந்தன.

மகளின் உச்சி முகர்ந்து முத்தமிட்ட சோனைமுத்து, “அப்பா சீக்கிரம் வந்துடுவேன் டா. நீ என் பொண்ணா இருக்க வரைக்கும் முருகையா வீட்லதான் இருக்கணும். அம்சவேணி கொஞ்சம் குணம் அப்படி இப்படித்தான் டா. ஆனால், நல்லவங்கதான். அவங்க என்ன சொன்னாலும், அதை அனுசரிச்சு இருக்கணும் வேதா. நம்ம வீடு இல்லை இது. இங்க நீ விருந்தாளியா வந்திருக்க. இப்போதைக்கு உனக்கு ஒரு பாதுக்காப்பான இடம்னா, அது முருகையா வீடு மட்டும்தான்மா. அப்பா எது செஞ்சாலும், அது உன்னோட நல்லதுக்குத்தான். அழாம சமத்தா இருந்துக்கணும். நல்லா படி...” என மகளிடம் அறிவுரைக்கூறிய தந்தைக்குத் தொண்டை அடைத்துக்
கொண்டது.

எத்தனை செல்லமாக வளர்ந்த மகள். அவள் இன்னதென கேட்கும் முன்பே எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துவிடுவார். தாயை விட தந்தையிடம்தான் அதிகம் செல்லம் கொஞ்சுவாள் பெண். சோனைமுத்து, மனைவி காவேரி, மகள் வேதவள்ளி என அழகான கூடு அவர்களது.

பெற்றவர்கள் இருவரும் மகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினர். பெரிதாய் வசதியில்லை எனினும், மகள் முகம் வாடப்பொறுக்காத மனிதர் சோனைமுத்து. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பார்த்துக்கொண்டனர். ஏனோ சூழ்நிலையின் சூழ்ச்சியால் அந்த அழகான கூடு கலைந்துவிட்டது.

நடந்ததை நினைத்தவரின் மனம் அத்தனைப் பாரமாய் இருந்தது. தன் உயிருக்கு உயிரான மனைவி இறந்த துக்கமே அவரை உருக்குலைத்திருந்தது. இதில் மகள் தானின்றி ஆதரவற்று போய்விட்டாளே என விம்மித் தவித்தார் மனிதர்.

“சோனை, நீ போய்ட்டு வா. உன் மகளைப் பத்திரமா நான் பார்த்துக்குறேன். அவளைப் பத்தி நீ கவலைப்படாதே!” என்ற முருகையாவிடம் ஆயிரம் நன்றியை உரைத்தவர், அணைத்து விடுவித்தார்.

மகளின் கையை எடுத்து முருகையா கையில் கொடுத்தவர்,“நான் வர்ற வரைக்கும் முருகா வீட்ல இருடா வேதா” என வேதனையுடன் தன்னைவிட்டுச் சென்ற தந்தையின் பிம்பம் இப்போதும் பெண்ணின் விழிகளை நிறைத்து, ஈரத்தைக் கசியச் செய்யும்.

முருகையாவுடன் வந்த வேதாவைப் பார்த்த அம்சவேணி, “என்னங்க, ஒரு பொம்பளைப் புள்ளையை வளர்க்குறது என்ன அவ்வளோ சுலபமா? இது எல்லாம் ஒத்து வராதுங்க. எங்கேயாவது ஸ்கூலோட சேர்த்து ஹாஸ்டல் இருந்தா சேர்த்து விடுங்க‌. பணம் போனா போய்ட்டுப் போகுது...” என்றார்.

“இல்லை அம்சு, சோனைகிட்டே நான் வாக்கு கொடுத்துட்டேன், புள்ளையை நான் நல்லா பார்த்துக்குறேன்னு. எழில் மாதிரிதான் வேதாவும் எனக்கு. வீட்ல ஒரு ஓரமா இருந்துட்டுப் போறா. அவளை எங்கேயும் நான் அனுப்புறதா இல்லை. சோனை வர்ற வரைக்கும் அவ இங்கதான் இருப்பா...” என்று முருகையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வேதவள்ளியை வைத்து நிறைய வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும்தான் பார்த்தாள் பெண். அவர்களது சண்டையைப் பார்த்து, வேறு எங்காவது சென்றுவிடலாம் எனக் கூட எண்ணியிருக்கிறாள். ஆனால் தன் தந்தையின் வார்த்தைகள் காதில் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்க, அதை அவளால் மீற முடியாது போனது.

சண்டைபோட்டு ஓய்ந்து போனார் அம்சவேணி. முருகையா தன் முடிவில் தீர்க்கமாக இருந்துவிட, மனைவிதான் இறங்கி வரவேண்டியதாகப் போகிற்று. வேறு வழியின்றி வேதாவை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஏனோ கணவன் செய்கையில் பெண் மீது அவருக்கு வெறுப்பு உருவானது. அதற்காகக் கொடுமையெல்லாம் செய்யவில்லை பெண்மணி.

அவளிடம் பேச்சுக் கொடுக்கமாட்டார். என்ன என்பது போலத்தான அவரது பார்வை இருக்கும். வேதவள்ளியும் அடைக்கலம் புகுந்த வீட்டில் அன்பையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முருகையா அவள்மீது பாசத்துடன்தான் இருந்தார். அவரைப் பொறுத்தவரை வேதவள்ளி பெறாத மகள். அவளுடையத் தேவைகள் அனைத்தையும் அவர்தான் பார்த்துப் பார்த்து நிறைவேற்றுவார்.

கானல் நீர் போலிருக்கும் வாழ்க்கையில் அவரின் அன்பு வேதாவைச் சற்றே நெகிழ்த்தும். அம்சவேணி என்ன செய்தாலும், அதை எல்லாம் முருகையாக்காகப் பொறுத்துப் போவாள் பெண். அதே போல அவர் இல்லாத நேரத்தில், அம்சவேணி முகத்தைக் காட்டினாலும், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், ஒருபோதும் அதை முருகையா வரை அவள் எடுத்துச் சென்றதே இல்லை.

தன் வேலை உண்டு தானுண்டு எனப் பள்ளிக்குச் சென்று வருவாள். அவர்களது உழைப்பை தான் இலவசமாக சுரண்டுகிறோம் என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் துளிர்விட, அம்சவேணி கூறாவிடினும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்தாள் பெண். நாளடைவில் அந்த வேலையெல்லாம் அவளுக்குப் பாத்தியப்பட்டதாக மாறிவிட்டிருந்தது.

அம்சவேணி வீட்டில் சமையலைப் பார்த்துக் கொள்ள, துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது என மற்ற வேலைகளைப் பார்த்துக் கொள்வாள் வேதவள்ளி. பள்ளி படிப்பு முடிந்து முருகையா அவளைக் கல்லூரி சேர்த்து விடுகிறேன் என்று கூறிய போது, அம்சவேணிக்கு அதில் விருப்பமில்லை.

அவரது முகத்தைப் பார்த்தே அகத்தைக் கணித்தவள், “பெரிப்பா, எனக்கு படிக்க இஷ்டம் இல்லை. நான் வேலைக்குப் போறேன்...” என அடம்பிடித்து வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டாள். அவரும் சொல்லிப் பார்த்து, பின் விட்டுவிட்டார்.

அம்சவேணி போலத்தான் எழிலரசன். ஏனோ தந்தையின் பாசம் நேற்று வந்தவளிடம் பகிரப்பட்டத்தில், சிறுவயதிலே அவனுக்கு வேதாவைப் பிடிக்காமல் போய்விட்டது. அவளை முறைத்துக் கொண்டுதான் சுற்றுவான். எதையும் பொருட்படுத்தாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவளின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுத வந்திருந்தான் அன்பழகன்.

முதலில் அவனை கவனிக்கவில்லை பெண். ஒருவாரம் தன்னைப் பின்தொடர்ந்து வருகிறான் என உணர்ந்தப் போது கூட, அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை பாவை. அரசல்புரசலாகக் கேள்விபட்டு முருகையா விசாரித்த போது கூட, எந்தப் பிரச்சனையும் இல்லை என்றுதான் கூறினாள்.

ஆனால், போக போக சில பிரச்சனைகளை, விரும்பத்தகாத சூழ்நிலைகளைப் பெண் சந்திக்க நேரிட, அம்சவேணி அவளைக் கண்டித்தார்.

“ஏன் டி இப்படி பண்ற? உனக்கு இந்த வீட்ல என்ன குறை வச்சோம். ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையாது” என அவர் வார்த்தைகளால் தேள் போலக் கொட்ட, உதட்டை கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு நின்றாள் வேதவள்ளி.

யாரிடமும் இதுவரை பெண் அழுததில்லை. அம்சவேணி வார்த்தைகள் ஒருபுறம் தன்னைக் காயப்படுத்த, எப்போதும் தனக்கு ஆதரவாக நிற்கும் முருகையா கூட அன்று அவளை அதிருப்தியாய்ப் பார்க்க, நொந்தே போனாள் பெண். அத்தனை கோபமாய் வந்தது அன்புவின் மீதும், தன்னுடைய சூழ்நிலையின் மீதும்.

அவன் வருகை தனக்கு உவப்பானதாக இல்லை எனப் பெண் முகத்தின் பாவனைகளிலே வெளிப்படுத்தி அவனை எட்ட நிறுத்திவிட்டாள். ஆடவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எப்போதும் காலையிலும் மாலையிலும் அவள் பின்னே வருவான்.

பெரிதாய் அவளிடம் அன்பழகன் பேசியதும் இல்லை. தொல்லை செய்ததும் இல்லை. ஏதோ மூன்றாம் நபர் போல அவனைக் கடந்துவிடுவாள் வேதவள்ளி. ஆனால், சுற்றியிருப்பவர்களின் பேச்சும் பார்வையும்தான் அவளால் கடக்க முடியவில்லை.

அன்றைய நிகழ்விற்குப் பிறகு முருகையாவிடம் நடந்ததை விளக்கித் தன் தரப்பு நியாயத்தைப் பெண் முன் வைக்கவும், அவருடைய கோபமும் தணிந்தது. அதற்கடுத்தாக எந்தப் பிரச்சனையுமின்றி வாழ்க்கை செல்ல, அதில் கரும்புள்ளியாய் இன்றைய நிகழ்வு.

கண்டிப்பாய் எழிலரசன் தன் கண்ட காட்சியை வீட்டில் உரைத்திருப்பான். அவர்களை எப்படி எதிர்கொள்வது என மனதைத் தயார் செய்துகொண்டே, வேலை
முடிந்து பேருந்து நிலையத்தை அடைந்தவளின் அருகே வந்து நின்றான் ஆடவன்.

ஏனோ அவனைப் பார்த்ததும் விழிகள் கலங்கியது பெண்ணுக்கு. ‘போடா... என் பின்னே வராதே!’ என்பதாய் எப்போதும் திமிராய் அவனைப் பார்ப்பாள் பாவை. அத்தனை அலட்சியம் விழிகளிலும் பெண் பாவனையிலும் வெளிப்படும். அந்த அலட்சியம்தான் ஆடவனை அசைத்துப் பார்க்கும். பிடித்ததே! அதிகமாய் பிடித்தது அவளை. அந்தத்‌ திமிறான பார்வையில்தான் வீழ்ந்து போனான். ஒரு துளிகூட அதிலிருந்து மீள விரும்பவில்லை நாயகன்.

எந்தப் புள்ளியில் இவள் தன்னை ஈர்த்தாள் எனத் தெரியவில்லை அன்பழகனுக்கு. ஆனால், அவளின் அருகாமை அத்தனை இதத்தை இதயத்திற்குக் கடத்தும். அவளருகே தோன்றும் ஆசுவாசம் இதுவரை எந்தப் பெண்களிடமும் அவன் அனுபவித்திராத ஒன்று. அவளைக் காணும்போதே, ‘இவள் என்னவள்’ என்கிற கர்வம் மனதில் குடி கொள்ளும்.

பேரழகிதான், அவனுக்கு அவன் வேதா பேரழகிதான். யாரையும் நிமிர்ந்து பார்த்திராத அந்த விழிகள் அத்தனை அழகு. அவனை அலட்சியப்படுத்தும் பாவனைகள் அழகு. கலங்கி நிற்கும்போது கூட யாரையும் எதிர்பார்க்காதத் தன்னம்பிக்கை அழகு. மொத்தத்தில் பேரழகி அவள் அவனவளுக்கு மட்டும்‌.

பத்துமுறை திட்டினால், நூறு முறை மனதிற்குள்ளே மனம் நிறைந்தவளைக் கொஞ்சுவான். அத்தனை ஈர்த்தாள் பெண். அவள் மீதான ஈர்ப்பு என்பது அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம் போன்றது ஆடவனுக்கு. இந்த ஜென்மத்தில் அது தீரவே தீராது. அதீத நேசத்தை அவனுள் விதைத்திருந்தாள் பேதை பெண்.

அமைதியாக நின்றிருந்தவன் விழிகள் அவளது பனித்த கண்களில் பதிந்தன. அதில் உருகியவனின் உள்ளம் தவிக்கத் துவங்க, விரலை எடுத்து நெற்றியை சொரிந்தவன், பார்வையை சாலையில் படரவிட்டான். பின் மெதுவாய் அவளது விழிகளைச் சந்தித்தவன், “இப்போ எதுக்கு டி அழற?” என ஆற்றமையாகக் கேட்டான்.

அதில் பெண்ணுக்கு கோபம் துளிர்த்தது. ‘இவனெதற்கு இப்போது கோபம் கொள்கிறான்? நான்தான் நியாயப்படி கோபம் கொள்ள வேண்டும்’ மனம் அவனை நிந்தித்தது.

“வாயைத் தொறந்து சொல்லுடி...” அதட்டல் போட்டவனைப் பார்த்தவளின் கலங்கிய விழிகளில் இப்போது ஈரமில்லை, கோபமிருந்தது.

“எதுக்காக என் பின்னாடி வர்றீங்க? எனக்குப் பிடிக்கலை.‌‌..” முறைத்தவளின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல், அலட்சியமாக நின்றிருந்தான் அன்பழகன்.

‘ரொம்பத் திமிர்...’ என எண்ணி பல்லைக் கடித்தாள் வேதவள்ளி.

“காலைல அந்த நாய் பார்த்ததை நினைச்சு பயப்பட்றீயா வேதா?” எனக் கேட்டவன், “ஆல்ரெடி கொடுத்தும் அடங்க மாட்றானா?” என வினவினான்.

“ஒருத்தனை அடிப்பிங்க. ஊர்ல இருக்கவன் எல்லாரையும் உங்களால அடிக்க முடியுமா? அவன் மட்டும் பேசலை. ஊரே பேசுதே!” ஆத்திரத்துடன் கூறியவளைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான்.

“ஊர்ல வேற பொண்ணே கிடைக்கலையா உங்களுக்கு. ரெண்டு வருஷமா என் பின்னாடி வர்றீங்களே, இதுவரைக்கும் ஒருதடவை உங்களை நிமிர்ந்து பார்த்திருப்பேனா? ஒரு வார்த்தை பேசியிருப்பேனா? அப்படி என்னதான் என்கிட்ட இருக்கு உங்களுக்கு?” இத்தனை நாட்களாய் கேட்க நினைத்த, மனதிலிருந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டாள்.

சில நொடிகள் அமைதியாய் இருந்தவன், “சத்தியமா எனக்கும் அதான்டி தெரியலை. பைத்தியமா உன் பின்னாடி சுத்துற அளவுக்கு உன்கிட்ட என்ன இருக்குன்னு தேடி தேடி தோத்துட்டேன். படிச்சவன் மாதிரியா இருக்கேன். ஒழுங்கா ஒரு வேலையைச் செய்ய முடியலை. சாப்பிட பிடிக்கலை, தூங்கப் பிடிக்கலை. கண்ணை மூடுனா, கண்ணுக்குள்ள வந்து நிக்கிற வேதா. நான் நானா இல்லை. ச்சு... போடி...” என்றவன் பின்னந் தலையை கோதினான். வார்த்தைகளால் வடித்திட முடியுமா இந்த நேசத்தை? அத்தனை எளிதில் சொற்களுக்குள் அடைபட்டுவிடக் கூடிய உணர்வா இது? எல்லாவற்றிற்கும் அப்பாற்ப்பட்டதாகிற்றே. அதெல்லாம் உணர்ந்தவர்களால் மட்டுமே அனுபவித்திட முடியும். இதயத்தை இதமாய் கடத்தும் அந்த உணர்வொன்றை கூற புதிய வார்த்தைகளைத்தான் செதுக்க வேண்டும். அத்தனை சுகமானது காதல்!

அவன் முகபாவனைகளைத்தான் பார்த்திருந்தாள் வேதவள்ளி. இத்தனை நேரம் கடுமையாக இருந்த முகம், இதோ இப்போது பேசும்போது அவள் மீதான நேசத்தில் கனிந்து போயிருந்தது. விழிகள் முழுவதும் ஏதோ ஒரு உணர்வில் மின்னின. ஆடவனது தோற்றத்தை ஆராய்ந்தாள்.

‘உண்மையில் பிரபலமான கல்லூரியில் பொறியியல் முடித்தவன் மாதிரியா இருக்கின்றான் இவன்? சத்தியமாக இல்லையே!’ புறத்தோற்றத்திற்கு மதிப்பே கொடுக்கவில்லை எனப் புரிந்தது. தன்னைப் பின் தொடர்ந்த ஆரம்ப காலத்தில் எத்தனை நேர்த்தியாக உடையணிந்து இருப்பான். தாடியெல்லாம் மழித்து, பார்க்க வசீகரமாய் இருப்பான். இப்போதும் அழகாய்தான் இருந்தான். ஆனால், முன்பிருந்த தோற்றத்திலிருந்து நிறைய மாற்றம். அவள் பார்வையில், தன் மனதிலிருப்பதைக் கொட்டிவிட முனைந்தான் ஆடவன்.

“ஏன் வேதா, இந்த ரெண்டு வருஷத்துல ஒரு தடவை கூட உன்னை நான் பாதிக்கலையா? எப்போ பார்த்தாலும், ‘போடா... நீயெல்லாம் ஒரு ஆளான்னு பார்க்குற...’ அதான் டி. அந்தப் பார்வைதான் உன் பின்னாடி பைத்தியக்காரனா சுத்த வைக்கிது. வேணாம், வேணாம்னு நீ தொரத்து. உங்க வீட்ல இருக்க எல்லாரும் ஏதோ வேண்டாத விருந்தாளியைப் போல ட்ரீட் பண்றாங்க. போதாதக் குறைக்கு எங்கப்பாவும், அம்மாவும் என்னை எதிரி மாதிரி பார்க்குறாங்க. என்னதான் டி செய்ய சொல்ற? சே... அவ்ளோ கோபம் வருது. உன் மேல இல்லை, என் மேலதான் டி. அப்படி என்ன உன்கிட்ட மயங்கி கிடக்குறேன்னு... மொத்தமாய் மயக்கி வச்சிருக்க மாயக்காரி டி நீ. யூ ஹெவ் செட்யூஸ்ட் மீ..‌.” என முணுமுணுத்தவன், பின்னந்தலையை கோதிக் கொண்டான். உள்ளே ஆர்பரிக்கும் உணர்வுகளையெல்லாம் உரியவளிடம் கொட்டி அவளிடம் மண்டியிடத் துடித்தது இதயம்.

அவனைத்தான் இமைக்க மறந்து பார்த்திருந்தாள் பெண். ‘இத்தனையெல்லாம் பேசுவானா இவன்?’ என ஆச்சரியம் அவளுக்கு. ஏன் இத்தனை நேசம்? என மனம் வினாத் தொடுத்தது. அவன் சொல்வதும் சரிதானே! இதுவரை அவனை, நான் ஒரு பொருட்டாக என்ன, சக மனிதனாக மதித்துக் கூட ஒரு பார்வைப் பார்த்தது இல்லை. தன் வீட்டிலும் அவனை அடித்து துரத்தாதது ஒன்றுதான் குறை. அவர்கள் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தது போலத் தெரியவில்லை. இப்படி சுற்றி எல்லா இடத்திலும் எதிர்ப்புகள் குவிந்து கிடக்கும் போது, எந்த நம்பிக்கையில் இவன் என் பின்னால் சுற்றுகிறான்.
நான் எந்த விதத்திலும் அவனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லையே!’ பெண் மலைத்துப் போனாள். கொஞ்சமல்ல அதிகம் பயமாக இருந்தது.

'எதற்கு இந்தப் பிடித்தம், ஈர்ப்பு, நேசம்? மயங்கிவிட்டானா? என்னிடமா? நான் எங்கே இவனை மயக்கினேன்?' முகமெல்லாம் வியர்த்தது பெண்ணுக்கு அவனது பேச்சில், அதன் சாரம்சத்தில், வார்த்தை ஜாலத்தில், அதில் கொட்டிக் கிடந்த உணர்வுகளில், அதை அவன் வெளிப்படுத்திய பாவனைகளில். இன்னும் எத்தனையோக்களில். இது எங்கு சென்று முடியுமோ என்று அச்சம் பிறந்தது பாவைக்கு.

“பின்னாடி வராத, பிடிக்கலை, பேசாத. இந்த வார்த்தையைத் தவிர வேற எதுவுமே தெரியாதடி உனக்கு?” எனக் கேட்டவன் இதழ்களில் புன்னகை ஜனித்திருந்தது. தெரியாது என மட்டும் பாவை தலையசைத்திருந்தால், ஆயிரம் சொல்லிக் கொடுத்திருப்பான். காதலிக்க சொல்லிக் கொடுத்திருப்பான், அதை எப்படி வெளிப்படுத்துவது என சொல்லிக் கொடுத்திருப்பான். தன்னை அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பான. தன் உணர்வுகளை உணர்த்தியிருப்பான். வாழ்க்கை முழுவதும் தன் காதலில், இந்த அதீத நேசத்தின் பிடியில் பெண்ணைக் கட்டிவைத்திருந்திருப்பான்.

“உன்னை விட்ற ஐடியா எல்லாம் இல்லை எனக்கு. நீதான் சொல்லணும். எப்பவுமே இந்த அன்பு, வேதாவுக்குத்தான். அவளுக்கு மட்டும்தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவளை விட்டுடமாட்டான். உன் மனசை நீதான் மாத்திக்கணும் வேதா...” என்றவன் கரங்கள் லேசாய் அவளது கைகளைத் தொட முனையவும், சட்டென நகர்ந்தவளுக்கு உடல் முழுவதும் நடுக்கம் பிறந்தது.

‘என்ன செய்கிறான் இவன்? எத்தனை தைரியம் இவனுக்கு?’ என கோபமும் ஆச்சரியமுமாய் அவனைப் பார்த்தவளின் விழிகளில் தொலைந்து போனான் அன்பழகன். அவளின் அன்பழகன். பாவையை ஸ்பரிசிக்கச் சென்ற விரல்கள் அப்படியே பின்னிழுத்துக் கொண்டவன் மற்றொரு கரம் தன் சுருங்கிய நெற்றியில் படர்ந்து, அந்த நொடி மகிழ்ச்சியை நீடிக்கச் செய்தது. இதழை குவித்து மூச்சை நன்றாய் வெளிவிட்டான். அவளருகே இதயம் அதிகமாய்த் துடித்து தொலைத்தது, தொலைந்தது.

தன்னருகே நின்றவளின் விழிகளில் தொலைந்து, அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து உச்சி முகர்ந்து நாசியில் முத்தமிட்டு, தன்னை பித்தாக்கும் அந்த கழுத்தில் இதழைப் பதித்து மூச்சடைக்கச் செய்ய வேண்டும் எனத் தோன்ற, அதை சிறிய புன்னகையில் அடக்கி அவளைப் பார்த்தான்.

எப்போதும் திமிறாய், ‘யார் நீ?’ என அலட்சியமாகப் பார்க்கும் விழிகளில் இன்று தனக்கான ஆச்சரியமும் பயமும் அவனுள்ளே எதோ ஒன்றை அடங்கிப் போகச் செய்தது. இத்தனை நாட்கள் வெறும் பார்வையாளராக இருந்தவன், இன்று மனம் முழுவதும் அவள் மீதிருந்த நேசத்தை வார்த்தைகளால் வடித்துவிட்டான். அந்த நிம்மதி உடல் முழுவதும் படர்ந்திருந்தது. தன்னருகே நின்றவளின் வதனத்தை மனதில் பத்திரமாய் சுருட்டிக்கொண்டான் ஆடவன்.

அவனிடம் பேசியதே போதும் போதும் என்றளவுக்கு இருந்தாள் பெண். ஏனோ இந்த நேசம் தன்னைச் சுருட்டி சென்றுவிடுமோ என்று இரண்டு வருடங்களில் முதன்முதலில் பெண் மனதில் சலனம் தோன்றிற்று. அவனைப் பார்த்தவாறே பேருந்தில் ஏறி சென்றவளைப் பார்த்து விசிலடிக்கத் தோன்றியது அவனுக்கு. உதட்டிலிருந்த புன்னகையுடன் வேதா பத்திரமாக வீடு
சேர்ந்ததை உறுதிபடுத்திக்கொண்டு தன் இருப்பிடத்தை நோக்கிப் பயணித்தான்.
முற்றிலும் இருவேறு பாதைகள் எப்போது ஒன்றிணைவது?







 
Well-known member
Messages
1,058
Reaction score
763
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
Anbu❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top