• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,247
Reaction score
3,666
Points
113
வேதம் - 1

அதிகாலை நான்கு மணி, எங்கும் இருள் சூழ்ந்திருக்க, பளிச்சென மஞ்சள் விளக்கின் ஒளியில் மிளிர்ந்தது அந்தக் கட்டிடம்.

பாண்டியன்நகர் காவல்நிலையம், விருதுநகர் எனப் பெரிதாய் பெயர் பொறிக்கப்பட்டிருக்க, முகப்பில் ஒரு மரமேஜையில் அமர்ந்தவாறு உறங்கிக்கொண்டிருந்தார் காவலர் ஒருவர். வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், இடதுபுறம் சிலர் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

“வேணாம் சார்… வேணாம் சார்” ஒருவனின் கதறல் காவல்நிலையத்தை அதிரவைத்துக் கொண்டிருக்க, “உண்மையை சொல்ற வரைக்கும் இவனை லாடம் கட்டுங்க. ராஸ்கல்...” அவன் மேலே லத்தியை எறிந்தக் காவல் அதிகாரி, தன் தலையிலிருந்தத் தொப்பியைக் கழட்டியவாறே இருக்கைக்கு வந்தார்.

இத்தனை சலசலப்புகளுக்கு இடையில் பல காவலர்கள் உறக்கத்திலிருக்க, சிலர் முகத்தை நன்றாய் கழுவிவிட்டு மீண்டும் தன்னிருப்பிடத்திற்கு வந்தமர்ந்தனர்.

“அம்மாஆஆஆஆ... உண்மையை சொல்லிட்றேன் சார். விட்ருங்க சார், விட்ருங்க சார்...” அந்த வாலிபன் கத்தவும், அவன் வாயிலிருந்து உண்மையை வரவழைத்த திருப்தியில், “இவனுக்கு ஒரு டீ வாங்கிட்டு வாங்க ஏட்டையா. குடிச்சுட்டு நல்லா தெம்பா உண்மையைச் சொல்லட்டும்” எனத் துணைகாவலர் ஆசுவாசமானார்.

இது எதுவும் தன்னைப் பாதிக்கவில்லை என்பது போல சட்டையின் கையை சற்றே மேலேற்றிவிட்டு, சுண்டு விரலால் காதைக் குடைந்தான் அன்பு.

“சைக்... என்ன தப்பு பண்ணியிருந்தாலும் இப்படி போட்டு அடிக்கக்கூடாது டா” முகிலன் முணுமுணுக்க,

“ப்ம்ச்... அவன் என்ன பண்ணான்னு உனக்குத் தெரியுமா டா?” எனக் கேட்ட அன்புவின் இதழ்கள் கேலியாக வளைய, “தெரியலையே டா...” எனத் தோளைக் குலுக்கினான் மற்றவன்.

“பத்து வயசு குழந்தைக்கிட்டே போய் விளையாண்டு இருக்கான் நாய் ***” கெட்ட வார்த்தையில் அன்பு திட்டவும், “பொறுக்கி, இவனையெல்லாம் சாகுறவரை அடிக்கணும்...” எனப் பல்லைக் கடித்தான் முகிலன்.

“அதான் அடிக்குறாங்க. நீ வேலையைப் பாரு மச்சான்...” முகிலனின் தலையைக் கணினியை நோக்கி அன்பு திருப்பிவிட, மீண்டும் இருவரது கவனமும் கணினியில் குவிந்தது.

தன் பையிலிருந்து ஒரு விராலியை எடுத்த அன்பு அதை கணினியில் பொருத்திவிட்டு, கையை மேலே தூக்கி சோம்பல் முறித்தான். விழிகள் எல்லாம் சிவந்துகிடந்தன. தூக்கத்திற்கு உடலும் உள்ளமும் கெஞ்ச, அதை விரட்டியடித்தவன், மேலும் ஒரு மணி நேரம் கடந்தே வேலையை முடித்திருந்தான்.

“டீயைக் குடிச்சுட்டு வேலையைப் பாருங்க பா...” இருவருக்கும் தேநீரைக் கொடுத்துவிட்டு ஏட்டையா நகர, “தேங்க்ஸ் அண்ணே!” பதில் மொழிந்தவாறே சூடான பானத்தை உள்ளிறக்கினான் அன்பு.

மீண்டும் ஒருமுறை எல்லாம் சரியாய் உள்ளதா எனப்பார்த்தவன், “சார், எல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க” என்று காவலரிடம் கூறினான்.

அவர் ஒரு முறை கணினியைப் பரிசோதித்துவிட்டு, “ரொம்ப நன்றி தம்பிகளா. மொத்த டீடெயில்ஸூம் எப்படி எரேஸ் ஆச்சுன்னு தெரியலை. மேலிடத்துல இருந்து பிரஷர் மேல பிரஷர். நல்ல வேளை, எல்லாத்தையும் ரெக்கவர் பண்ணிட்டீங்க” நிம்மதியுடன் கூறி அவனுக்குண்டான பணத்தை மனிதர் கொடுக்கவும், அவரிடம் லேசாய் தலையை அசைத்தான் அன்பு என்கிற அன்பழகன்.

மடிக்கணினி, விராலி மற்றும் மற்ற இத்யாதிகளை எல்லாம் தன் பையினுள் அடைத்தவன், தன் உறவுக்கார காவலரைப் பார்த்து தலையை அசைத்துவிட்டு, முகிலன் தோளில் கையைப் போட்டுக்கொண்டே வெளியேறினான்.

“மச்சான், லேசா பசிக்குது. எங்கேயாவது ஹோட்டலுக்கு விடு வண்டியை...” முகிலன் அன்புவின் தோளில் தட்டவும், இருவரும் அருகிலுள்ள விருதுநகர் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றனர். அந்தக் காலை வேளையில் ஒவ்வொரு கடையாக இயங்கத் துவங்கியிருக்க, ஆதவன் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தான்.

ஆங்காங்கே மக்கள் கூட்டம் லேசாகத் தெரிந்தது. கூட்டமில்லாத உணவகத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

“அண்ணே! ரெண்டு பிளேட் இட்லி...” முகில் குரல் கொடுக்கவும் சுடசுட இட்லி அவர்கள் முன்னே பரிமாறப்பட, உண்டு முடித்திருந்தனர்.

முகிலனை வீட்டில் இறக்கிவிட்ட அன்பு, காவலர் கொடுத்திருந்த பணத்தை அவனது சட்டைப்பையில் திணித்தான். “மச்சான், ஏன் டா?” என்ற முகில் பணத்தை எடுக்கவும்,

“அடங்கு டா. ஒழுங்கா கலைக்கு காலேஜ் ஃபீசை கட்ற” நண்பனை மிரட்டிய அன்பு தன் இருசக்கர வாகனத்தை இயக்கி, “தேங்க்ஸ் டா...” என்ற முகில் வார்த்தையைக் காற்றில்விட்டவாறு நகர்ந்திருந்தான்.

அன்பழகன் பொறியியல் முடித்துவிட்டு, கணினி மற்றும் அலைபேசி பழுதுபார்க்கும் கடை ஒன்றைத் தன் நண்பன் முகிலனுடன் சேர்ந்து நடத்திவருகிறான். கணினி சார்ந்த அனைத்து வேலைகளும் அவனுக்கு அத்துப்படி. அதன்பொருட்டே காவல்நிலையத்தில் இரவு முழுவதும் அமர்ந்து கணினியைப் பழுது பார்த்து கொடுத்துவிட்டு வந்திருந்தான்.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு அன்பு காத்திருக்கவும், வத்சலா கதவைத் திறந்தார்.

விழிகள் இரண்டும் சிவந்து போய், கலைந்தத் தலையுடன் நின்ற மகனை முறைத்தவர், “என்னதான் வேலையோ, பகல்ல பார்க்க வேண்டியது தானே டா? இப்படி நைட்டெல்லாம் தூங்காம முழுச்சு, பரதேசி மாதிரி வந்து இருக்க...” எனக் கூறியவரைப் பார்த்து சிரித்தவன்,

“ஒருநாள் வீட்டுக்கு வரலைன்னதும் பரதேசம் போக சொல்லிடுவ போலயே ம்மா...” என்று தன்னறைக்குள் நுழைந்து பையைத் தூர எறிந்தான்.

மீண்டும் அவனை முறைத்தவர், “சாப்பிட்டியா டா?” என வினவவும்,
“இப்போதான் வயிறு ஃபுல்லாகுற அளவுக்கு சாப்பிட்டு வந்தேன். குட்நைட் மம்மி...” என்றவன், படுக்கையில் குப்புற விழுந்திருந்தான்.

“கண்ட இடத்துல சாப்பிட வேண்டியது. கண்ட நேரத்துல தூங்க வேண்டியது” திட்டிக்கொண்டே அறை விளக்கை அணைத்துவிட்டு வத்சலா வெளியேற, தலைக்கு மேலிருந்த அலறியை எடுத்து ஒன்பது மணிக்கு அடிக்குமாறு வைத்துவிட்டு தலையணையில் ஆடவன் முகம் புதைக்க, நித்திராதேவி அவனைத் தழுவியிருந்தாள்.

மூன்று மணிநேரம் கடந்ததும் அலறி தன் வேலையைச் சரியாய் செய்து அவனை எழுப்பி விட, விழிகளை மூடியவாறே அதை அணைத்தவன், எழுந்து முகத்தைக் கழுவி வந்தான். கண்ணாடியில் தலையை மட்டும் சரிசெய்துவிட்டு, இருசக்கர வாகனத்தின் சாவியைக் கையில் வைத்து சுழற்றியவாறே வெளியேற, “சாப்பிட்டு போ டா. இட்லி சுட்டுட்டேன்...” என்ற வத்சலா குரல் அவனைத் தடுத்தது.

“ம்மா, கொஞ்ச நேரத்துல வந்து சாப்பிட்றேன்” என்ற அன்பு வெளியேறவும், “என்னைக் காலேஜ்ல ட்ராப் பண்ணு டா...” என அவன் பின்னே அமர்ந்தான் அறிவழகன்.

“என்னடா அண்ணா, காலேஜ் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டீயா?” என வினாத் தொடுத்தவாறே அன்பு இருசக்கர வாகனத்தை இயக்கவும், “ஆமா டா. இன்னைக்கு எக்ஸாம் வேற இருக்கு” என்ற அறிவழகன் குரலில் பதட்டம் பரவிக்கிடந்தது.

“ஹ்ம்ம் டா...” தலையை அசைத்தவன் தமையனை சரியான நேரத்தில் கல்லூரியில் இறக்கிவிட, “தேங்க்ஸ் டா...” என பறந்துவிட்டான் அறிவு.

“ஆல் தி பெஸ்ட் டா...” அன்பு கத்தவும், கையை உயர்த்திக் காட்டிய அறிவு, கல்லூரியில் கலந்தான்.

முத்துக்கிருஷ்ணன் வத்சலா தம்பதியினருக்கு இரண்டு புதல்வன்கள். மூத்தவன் அறிவழகன் பல் மருத்துவம் முதுநிலை படிப்பிலிருக்க, இளையவன் அன்பழகன் பொறியியல் முடித்துவிட்டு சுயத்தொழில் செய்து வருகிறான்.

முத்துக்கிருஷ்ணன் ஒரு கலை கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். வத்சலா ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்தார். குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களைக் கவனிக்க வேண்டும் என்று வேலையை விட்டுவிட்டு வீட்டிலே இருந்துவிட்டார்.

பெரிதாய் சொத்துக்கள் என்று எதுவும் இல்லை. இப்போது குடியிருக்கும் வீடு மட்டும்தான் அவர்களுக்கென்று உள்ளது. முத்துக்கிருஷ்ணன் சொத்தை சேர்க்காவிடினும் இரண்டு மகன்களையும் நன்றாய் படிக்க வைத்துவிட்டார். மூத்தவன் அறிவழகன் கொஞ்சம் அமைதியான சுபாவம், எந்த வம்புக்கும் செல்ல மாட்டான். அதனாலே அப்பாவின் செல்லமாகிப் போனான்.

இளையவன் அன்பழகன் அடாவடிக்குப் பேர் போனவன். எங்கே சண்டை என்றாலும், அவன் பெயர் அடிபட வாய்ப்புகள் அதிகமிருக்கும். அதன் காரணமாகவே தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிறைய முறை சண்டைகள் நிகழும். அவர் எத்தனை முறை கூறினாலும், எதையும் காதில் வாங்க மாட்டான் அன்பு. இருவரும் எதிரும் புதிருமாகத்தான் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். தந்தைக்கும் மகனுக்கும் இடையே பேச்சுக்கள் கூடக் காலப்போக்கில் அருகிவிட்டது.

“அண்ணா, ஸ்ட்ராங்கா ஒரு டீ...” என்ற அன்பு தேநீர் விடுதியின் நாற்காலியில் அமர்ந்தான். விழிகள் அந்த நான்கு வழிச்சாலையைத்தான் அடிக்கடி நோட்டமிட்ட வண்ணமிருந்தன. நேரத்தைப் பார்த்தான், ஒன்பது முப்பது எனக் காட்டியது அது‌.

தேநீரைப் பருகிக்கொண்டே விழிகளைச் சாலையில் வைத்தான். நேரம் கடந்துகொண்டேயிருந்தது. அவன் எதிர்பார்த்தவள் மட்டும் வரவேயில்லை. ஒரு மணிநேரம் சென்றிருக்க, நெற்றியைச் சொரிந்தான். இத்தோடு மூன்று நாட்கள் கடந்திருந்தது அவளைக் காணாது. இன்று கண்டிப்பாகப் பார்க்க
வேண்டும் என எண்ணி வந்திருந்தவனை ஏமாற்றியிருந்தாள் பெண்.

எரிச்சலாய் வந்தது. யார் மீது காட்டுவது எனத் தெரியாது இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தான். கால் லேசாய் வலித்தது. அதைப் பொருட்படுத்தாதவன், நேரே வாகனத்தை அவளது வீட்டை நோக்கிச் செலுத்தினான்.

‘வேணாம், ஏற்கனவே பிரச்சனையாகியிருக்கு. அங்கப் போனால், இன்னும் பிராப்ளம் வரலாம்’ மூளை அறிவுறுத்தியதை எல்லாம் கிடப்பில் போட்டவன், அந்தத் தெருமுனையில் வாகனத்தை நிறுத்தினான்.

வாயிலில் இருந்த கோலம் அவளால் வரையப்பட்டது என மனது கூற, அங்கேயே நின்றான். வீட்டு வாசலை பார்த்த வண்ணமிருந்தவனின் விழிகளை நிறைத்தாள் பெண். லேசாய் சோர்ந்திருந்தன அவளின் விழிகள். உடல் மொழி கூட தளர்ந்திருந்தது.

அதனுடனே கையில் பெரிய வாளி ஒன்றை தூக்கிக்கொண்டு மாடியேறினாள். மூன்று நாட்களாய் காய்ச்சல் படுத்தி எடுத்தாலும், வேலைகள் எல்லாம் வரிசைக்கட்டி நின்றன.

ஓரளவுக்கு உடல்நிலை தேறியதும், இரண்டு நாட்கள் துவைக்காத துணிகள் மலைபோல குவிந்திருக்க, அதைப் பார்த்ததும் விழிகளெல்லாம் கலங்கியது பெண்ணுக்கு.

“எல்லாத்தையும் துவைச்சு காயப்போட்டுட்டு சீக்கிரம் வா. ரெண்டு நாளா பாத்திரத்தைக் கழுவி என் கையெல்லாம் வலிக்குது...” முனங்கிக் கொண்டே சென்ற அம்சவேணியிடம் “சரிங்க பெரியம்மா...” என்றுவிட்டு துணியைத் துவைத்து முடித்திருந்தாள். நின்றிருந்த காய்ச்சல் மீண்டும் வருவது போல உடலெல்லாம் நடுங்கியது.

அதைப் பொருட்படுத்தாமல் துணியைக் காயவைத்துக் கொண்டிருந்தாள் அவள், வேதவள்ளி.

“வேதா, துணியை காயப்போட்டு முடிஞ்சதுன்னா சீக்கிரமா வா. வேடிக்கைப் பார்த்துட்டே நிப்பா” அம்சவேணி குரலை உயர்த்தவும், மடமடவென எல்லாத் துணியையும் காயவைத்துவிட்டு மூச்சு வாங்க படியிறங்கினாள் வேதவள்ளி. இருமல் வேறு அதனுடன் சேர்ந்துகொண்டது. குனிந்தவாறே இறங்கியவளின் விழிகள் பக்கவாட்டில் தன்னை நோக்குபவனை ஒரு நொடி கூட சந்திக்கவில்லை. அப்படியே வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள்.

“***” ஆங்கில கெட்ட வார்த்தை ஒன்றை முணுமுணுத்தவன், “உடம்பு சரியில்லைன்னா ரெஸ்ட் எடுக்கக் கூட விடாம வேலை வாங்குறது. என்னப் பொம்பளை...” என்று அம்சவேணி அவனிடம் பல வசவுகளைப் பெற்றார்.

குனிந்துகொண்டே செல்பவளையும் மனதில் திட்டினான். தரதரவென இழுத்து வரவேண்டும் போலிருந்தது ஆடவனுக்கு. ஆத்திரமாய் வந்தது. மேலும் தனக்குத் தெரிந்தக் கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்திக் கொண்டே வாகனத்தை வீட்டை நோக்கிச் செலுத்தினான் அன்பழகன். அவன் சென்றதும் வாயிலை எட்டிப் பார்த்தாள் வேதா.
முகம்
எதையும் வெளிக்காட்டவில்லை. சில நொடிகள் சாலையை வெறித்தவள், வீட்டிற்குள் நுழைந்தாள்.









 
Active member
Messages
221
Reaction score
171
Points
43
Nice epi sis
 
Top