• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 23

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 23:

அனைவருக்கும் உடைகளை எடுத்த பிறகு உணவுன்ன செல்ல முடிவெடுக்க குழந்தைகள் அங்கே முன்னே வைத்திருந்த பெரிய பொம்மைகளை பார்த்து,

“ப்பா அங்க போய் போட்டோ எடுப்போம்” என்று அடம்பிடிக்க துவங்கினர்.

காயத்ரி சிரிப்புடன் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தாள்.

“ம்மா நீயும் வா ப்பா நீயும் வந்து உட்காரு” என்று இருவரையும் அனிருத் அழைக்க,

“டேய் நாங்க எதுக்கு நீங்க மட்டும் எடுங்க” என்று சைத்து மறுக்க,

“வாப்பா” என்று அனிருத் அழுகைக்கு தயாராக,

“சரி சரி வர்றோம்” என்ற காயு,

“மேகா இதுல எங்களை போட்டோ எடு” என்று அலைபேசியை கொடுத்துவிட்டு வலப்புறம் அமர,

சைத்தன்யா குழந்தைகளுக்கு இடம் புறம் அமர்ந்தான்.

கள்ளமில்லா சிரிப்புடன் அமர்ந்திருந்த குழந்தைகளுடன் மென்சிரிப்பை உதிர்த்தவாறு இருபுறமும் உட்கார்ந்து இருந்தவர்களை கண்டு,

“பெர்பெக்ட் பேமிலி” என்று உதடு முணுமுணுத்து.

சற்று தூரத்தில் அமர்ந்து இருந்ததால் சைத்தன்யாவிற்கு அவளது இதழசைவு மட்டும் தெரிந்தது.

ஆனால் என்ன கூறினாள் என்று தெரியவில்லை.

அலைபேசி வழியாக அக்குடும்பத்தை கண்டவளது இதயத்தினுள் வலி ஊசியாய் ஊடுருவ ஏனோ நடுங்கிய கரங்கள் வியர்வையில் பிசுபிசுத்தது.

அவளை அவதானித்திருந்த சைத்தன்யாவிற்கு அவள் முகத்தில் வந்து போன சொல்லவியலாத பாவனை ஏனென்று புரிந்தது.

அவள் நிலையையும் மனது ஒரு கணம் உணர்ந்தது.

ஆனால் அடுத்த நொடியே எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் இப்படி வருந்தி கொண்டிருக்கிறாளே என்று சிறிது சலிப்பும் வந்தது.


நடுங்கிய கரங்களை முயன்று சரி செய்து கொண்டவள் புகைப்படம் எடுக்க முயலும் கணம் காயுவின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.

அலைபேசியின் திரையில் மின்னிய புகைப்படத்தை கண்டவளது கரங்கள் அலைபேசியை அப்படியே நழுவ விட்டிருந்தது.

அவள் முகத்தில் தெரிந்த ஏக அதிர்ச்சியை சைத்தன்யா புருவம் சுருக்கி பார்க்க,

“என்ன ஆச்சு மேகா?” என்று காயு வர,

அதில் நினைவு திரும்பியவள் பதறி குனிந்து அலைபேசியை எடுத்தாள்.

அலைபேசிக்கு எதுவும் ஆகவில்லை. அழைப்பு இன்னும் வந்து கொண்டு தான் இருந்தது.

“அது அக்கா உங்களுக்கு கால்” என்றவளது குரல் நடுங்கியது.

வாங்கி பார்த்தவள், “என் வீட்டுக்காரரு தான் கூப்பிட்றாரு பேசிட்டு வர்றேன்” என்று சற்று தள்ளி சென்று பேச,

இவள் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.

காயு இங்கிருந்தே சைத்துவிடம்,

‘உன் அண்ணா தான்’ என்று சைகை செய்துவிட்டு ஓரமாக சென்று பேச துவங்க,

மேகாவின் அதிர்விற்கு காரணம் அறிந்தவன் விழிகள் அழுத்தமாய் அவளிடம் பதிந்தது.

மேகா தான் தலையில் இடி விழுந்ததை போல ஒரு பாவனையில் நின்றிருந்தாள்.

சைத்துவிற்கு, ‘இப்போதாவது இவளுக்கு உண்மை தெரிந்ததே இனியாவது வருந்தாமல் இருப்பாள்’ என்று நிம்மதி பிறந்தது.

காயு ஆதியிடம் பேசிவிட்டு வந்ததும் மேகா ஏதோ அவளிடம் கேட்பது தெரிந்தது.

ஆதியை பற்றி தான் கேட்பாள் என்று யூகித்து கொண்டான்.

அதன் பிறகு உண்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

செல்லும் வரையிலுமே மேகாவின் முகத்தில் தெளிவில்லை.

இது முடிந்துவிட்டது வேறு எதையோ போட்டு குழப்பி கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது.

அதன் பிறகு சைத்தன்யா ஊருக்கு சென்றிட மேகாவும் கவியின் திருமணத்தில் வேலையாக இருந்தாள்.

ஊருக்கு சென்ற சைத்தன்யா தான் எப்போதடா வேலையை முடித்துவிட்டு திரும்புவோம் என்று தவிப்புடன் நாட்களை கடத்தி கொண்டிருந்தான்.

காரணம் மேகாவை தவிர வேறென்ன இருந்துவிட போகிறது?

அதுவும் குழந்தைகளிடத்தில் தன்னை தேடிய அந்த கணத்தில் நழுவி சென்று இதயம் அவளது காலடியில் விழுந்ததை உணர்ந்தவனுக்கு அதன் பிறகு மேகாவை தவிர வேறு சிந்தையில்லை.

இத்தகைய உன்னத நேசத்தை பெறுவதற்கு தான் என்ன செய்துவிட்டேன் இவளுக்கு என்று தான் தோன்றியது.

அவனுக்கு புரியவில்லை இந்த நேசம் நுழைவதற்கும் மறைவதற்கும் நொடி நேரம் போதும் என்று.

என்னவோ உள்ளுக்குள் ஏதோ ஒன்று, ‘அவளை விட்டுவிடாதே அவளை விட்டுவிடாதே…’ என்று கூச்சலிட,

அந்த விநாடி முடிவு செய்திருந்தான். இனி வாழும் வாழ்வை அவளுடன் பிணைத்து கொள்ள வேண்டும் என்று.

பார்த்து பிடித்து காதல் வயப்படுபவர்கள் ஒரு விதம் என்றால் இவன் அவளுடைய நேசத்தை நேசிக்க துவங்கியிருந்தான்.

அவளுடைய அளவில்லாத நேசத்தில் திளைத்து வாழ்வின் இறுதி காலத்தை கடந்துவிட‌ முடிவெடுத்திருந்தான்.

எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்ட அந்த கணம் அவளை பார்க்க வேண்டும் இறுக்கமாக அணைத்து தனது உள்ளத்து கிடங்கை அவளிடம் கொட்டிவிட வேண்டும் என்று பலவாறு ஆசைகள் முட்டி மோதியது.

ஆனால் செய்யவில்லை அமைதியாக‌ ஆர்ப்பரிப்பின்றி இருந்தான்.

அவளுடைய நேசத்தை கண்டு தான் நேசம் கொண்டாய் ஆக அவளே வந்து அதனை உன்னிடம் சேர்பிக்கும் வரை காத்திரு.

அவளது செய்கையால் உணர்ந்த நேசமே இத்தனை உவகை அளிக்கிறதே இதனை அவளது வாய் மொழியில் கேட்டால் எவ்வளவு உவகை அளித்திடும் என்று பேரவா எழுந்திட அவளாக கூறும் வரை காத்திருக்க எண்ணியது காதல் கொண்ட மனது.

நாட்கள் கடந்தோட அவளை காணும் மகிழ்வில் கிளம்பி கவியின் திருமணத்திற்கு கிளம்பினான்.

வெள்ளை நிறத்தில் சட்டை கருப்பு நிறத்தில் பேன்ட் அணிந்து கையில் கைக்கடிகாரத்தை அணிந்து கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்து விட்டு வெளியேறினான்.

இதழில் புன்னகை கீற்று. எல்லாம் அந்த காதல்காரி செய்த மாயம் தான் என்று மனது முணுமுணுத்தது.

மகிழ்ந்தை நிறுத்திவிட்டு திருமண மண்டபத்தில் சைத்தன்யா நுழைந்த கணம் அவனது பார்வையில் விழுந்தது மேகா தான்.

ஒரு கணம் அவனது நடை தடைபட்டு மீண்டும் தொடர்ந்தது.

காரணம் மேகா தான். பச்சை நிறத்தில் பட்டு உடுத்தி தங்க நிறத்தில் கழுத்தணியும் காதில் சிறிய ஜிமிக்கியும் அணிந்து இருந்ததவளது விரித்துவிடப் பட்டிருந்த கூந்தல் பாதி முகத்தை மறைத்திட குனிந்து நின்று பேசி கொண்டு இருந்தாள்.

வியர்வையை துடைத்துவிட்டு அவள் நிமிர்ந்த கணம் காதில் இருந்த ஜிமிக்கி நடனமாட இவனது இதயமும் ஊசலாடியது.

அதுவும் காதோரம் சூடியிருந்த ரோஜா பூ அவனது இதயத்தை நின்று துடிக்க வைத்தது.

மேகாவும் மெல்லிய சிரிப்பு நெற்றியில் வைத்த சந்தனத்துடன் நடந்து வருபவனை கண்டு விழி விரித்து நின்றுவிட்டாள்.

ஆனால் அடுத்த கணமே தன்னை சுதாரித்துவிட்டவளது பார்வையில் ரசனை வழிந்தோடியது.

எப்போதும் போல அவளது ரசனை பார்வை இவனை குறுகுறுக்க செய்ய பார்வையை அவளிடமிருந்து விலக்கி சுற்றி படரவிட்டான்.

மேகா காவ்யாவிடம் ஏதோ பேசுவதும் காவ்யா தன்னை பார்த்துவிட்டு பதிலுக்கு ஏதோ கூறுவதை கவனித்தான்.

அவளிடம் சம்மதமாய் தலையசைத்தவள் வேகவேகமாக சேலையை உயர்த்தி பிடித்தபடி தன்னை நோக்கி வருபவளை கண்டான்.

நெருங்கி வந்ததும், “வா.. வாங்க சார் வாங்க” என்று பதட்டத்துடன் அவள் வரவேற்க,

மெலிதான தலையசைப்புடன் ஏற்று கொள்ள,

அவளது விழிகள் அவனை அமர வைக்க இடத்தினை தேடி அலைபாய்ந்தது.

இறுதியில் ஒரு இருக்கை இருக்க சைத்தன்யா அங்கு அமரலாமா? என்று சிந்திக்க கணம் விரைந்தோடி அதனை எடுத்து வந்து முதல் வரிசையில் போட்டவள்,

“உட்காருங்க சார்” என்றாள்.

அவளது பதட்டத்தினை கண்டவனுக்கு இவளுக்கு ஏன் இத்தனை பதட்டம் நானும் சாதாரண மனிதன் தானே ஏன் இவ்வாறு செய்கிறாள் என்று தான் எண்ணம் தோன்றியது.

“ஒரு நிமிஷம் வந்திட்றேன் சார்” என்றவள் அவன் தலையசைத்ததும் தந்தையிடம் விரைந்தாள்.

சைத்தன்யா அமைச்சரின் மகன் என்று சில நாட்களுக்கு முன் அறிந்து கொண்ட விடயத்தின் காரணமாக சிறிது பதட்டதம் தான் காவ்யாவிற்கு.

“அப்பா” என்ற மேகாவின் அழைப்பில் திரும்பிய சேதுபதி,

“என்னம்மா?” என்று வினவ,

“அப்பா எங்க எம்.டி வந்து இருக்காரு” என்க,

“அப்படியா? யாரும்மா?” என்று வினவ,

“அதோ ஆவர் தான்”

“ஓ அந்த தம்பியா? நாங்க மாப்பிள்ளையோட ப்ரெண்ட்னு நினைச்சிட்டோம் நீ போ நான் வந்து பேசுறேன்” என்க,

“அப்பா அவரு எங்களுக்கு எம்‌டி மட்டுமில்லை கல்வி துறை அமைச்சர் சதாசிவம் பையனும் கூட கொஞ்சம் கவனிங்க” என்றதும் சேதுபதியிடமும் சிறிது ஆச்சர்யம்.

“மினிஸ்டர் மகன் இவ்வளோ சிம்பிளா வந்திருக்காரா?” என்றிட,

செந்தில்நாதனுக்கும் தங்கள் வீட்டு திருமணத்தில் அமைச்சரின் மகன் வந்திருப்பது மகிழ்ச்சியை தந்தது.

சேதுபதி, “நான் போய் கவனிக்கிறேன்” என்றவர் சைத்தன்யா அருகில் சென்று,

“வாங்க தம்பி நீங்க மாப்பிள்ளையோட ப்ரெண்ட்னு நினைச்சிட்டேன் இப்போ தான் மேகா நீங்க அவங்க எம்‌.டின்னு சொன்னா” என்று வரவேற்க,

பதிலுக்கு எழுந்து நின்ற சைத்தன்யாவும் அவருடைய வரவேற்பை ஏற்று கொண்டவன் மனதில்,

‘இவர் தான் என் மாமானாரா?’ என்று எண்ணம் எழுந்தது.

‘ஹ்ம்ம் எழுந்து நின்னெல்லாம் மரியாதை கொடுக்குறாரே’ என்று எண்ணி கொண்ட மேகா அவனுக்கு குடிக்க பழச்சாறு எடுத்து வர,

சேதுபதி ஒரு நாற்காலியினை போட்டு அமர்ந்து அவனிடம் பேசி கொண்டிருந்தார்.

மேகா தட்டில் வைத்து பழச்சாறை எடுத்து வர,

அதனை எடுத்து கொண்டவனது பார்வை அவளிடம் பதிந்து மீண்டது.

அவளை முதன் முறையாக புடவையில் பார்த்தவனுக்கு தான் உள்ளுக்குள் தவிப்பு.

அவள் மீது ஒரு கண்ணை வைத்தவாறு தான் மாமனாரிடம் பேசி கொண்டு இருந்தான்.

மேகாவின் பார்வையும் அவ்வபோது தன் மீது விழுவதையும் அவதானித்தபடி தான் இருந்தான்.

பின்னர் திருமணம் முடிந்ததும் பரிசை கொடுத்துவிட்டு கிளம்ப எத்தனித்த நேரம் தான் சேதுபதி வந்து,

“நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வந்திருக்கிங்க சாப்பிட்டு தான் போகனும் தம்பி” என்று கூறிவிட,

அவளுடனே அமர்ந்து உண்டுவிட்டு கிளம்ப அவனை வழியனுப்பி வைக்க வந்தாள் அவனது எண்ணத்தின் நாயகி.

லேசாக பூத்திருந்த வியர்வை துளிகள் வெயிலில் வைரமென மின்ன தன் முன்னே தேவதையாக நின்றிருந்தவளை கண்டவனது மனது,

‘இப்படியே இவளை கடத்திட்டு போய்டலாமா?’ என்று சிந்திக்க தனது எண்ணப் போக்கை உணர்ந்தவனது இதழ்கள் கீற்றாய் புன்னகை சிந்தியது.

அதனை இதழுக்குள் மறைத்தவன்,

“உனக்கு எப்போ கல்யாணம்” என்று அவளை வம்பிழுக்க கேட்டிட,

அவனது கேள்வியில் இவள் தான் அதிர்ந்து நின்றுவிட்டாள்.

அவளது அதிர்ந்த கோலமும் இவனை ரசிக்க தூண்டிவிட இதற்கு மேலும் தாங்காது என்று எண்ணியபடி கிளம்பிவிட்டான்.

அதன் பிறகு நாட்கள் கடந்தோடியது. தனது ஊரில் இருந்த சைத்தன்யா மேகாவின் பிறந்தநாளுக்கு தான் அங்கு இருக்க வேண்டும் என்று நினைத்து முதல்நாளே விமானத்தில் பயண சீட்டை பதிவு செய்திருந்தான்.

ஆனால் அவனது நேரம் இறுதி நேரத்தில் அலுவலகத்தில் நடந்த குளறுபடியால் அவன் அங்கேயே இருக்க வேண்டியதாய் போயிற்று.

இருந்தும் இரவுக்குள் பிரச்சனையை சரி செய்துவிட்டு காலை சென்றுவிட வேண்டும் என்று எண்ணியிருக்க மதியம் வரை ஆகிவிட்டது.

ஒருவழியாக அடித்து பிடித்து கிளம்பி‌ அலுவலகம் வர மேகா வீட்டிற்கு கிளம்பிவிட்டிருந்தாள்.

“ப்ச்” என்று வெளிப்படையாக சலித்து கொணடவனுக்கு நிச்சயமாக என்ன செய்வதென்று தெரியவில்லை.

இந்நேரம் அவள் வீட்டிற்கே சென்றிருக்க கூடும்.

தான் எப்படி வாழ்த்துக்கள் கூறுவது அவளது வீட்டிற்கு சென்றா அது முடியாதே என்று தோன்ற தன் மீதே கோபம் வந்தது.

சிறிது விரைவாக கிளம்பியிருந்தால் வந்திருக்கலாம் என்று.

அவளை பார்க்காது தன்னுடைய நாள் முடியாது மனதின் தவிப்பு அடங்காது என்று புரிய மெதுவாக மகிழுந்தை அவளது வீட்டிற்கு செல்லும் வழியில் செலுத்தினான்.

சுரத்தேயில்லாமல் பயணம் செய்தவனின் விழிகள் விழுந்தது மேகா தனது இரு சக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருப்பது.

ஒரு கணம் காண்பது கனவா நினைவா என்று புரியவில்லை.

விழிகளை சுருக்கி மீண்டும் பார்க்க அவள் தான் என்று இதயம் அறுதியிட்டு கூறியது.

அடுத்த நொடி அவளருகே மகிழுந்தை நிறுத்தி இருந்தான்.

தன்னருகே திடும்மென வந்து நின்ற மகிழுந்தை கண்டு மேகா அதிர்ந்து பின்னே செல்ல,

கண்ணாடியை இறக்கியவன், “மேகா” என்று அழைத்திட,

“சார்” என்றவளிடத்தில் அதிர்ச்சி அதையும் மீறிய திகைப்பு.

விழிகளை பெரிதாக விரித்து தன்னை மறந்து அதிர்ந்து பார்த்தாள்.

இதோ இந்த இவளது உணர்வை படம்பிடித்து காண்பிக்கும் வதனத்தை காணத் தானே அடித்து பிடித்து ஓடி வந்தான்.

தன்னை கண்டதும் சூரியனை கண்ட தாமரையாய் மலர்ந்திடும் இந்த வதனத்தை கண்டதும் உள்ளுக்குள் ஏதோ செய்தது.

நொடிகள் நீள இவள் இப்போதைக்கு தன்னிலை மீள மாட்டாள் என்று உணர்ந்தவன்,

“மேகா” என்றவனது அழுத்தமாக அழைத்தான்

அதில் மீண்டவள், “ஹான்” என்று விழித்தாள்.

“இந்த டைம்ல இங்க என்ன பண்ற?” என்று சைத்து வினவ,

“அது கோவிலுக்கு வந்தேன். சாமி கும்பிட்டு கிளம்பும் போது வண்டி ப்ரேக் டவுன் ஆகி நின்னுடுச்சு. நிறைய டைம் ட்ரை பண்ணிட்டேன் பட் ஸ்டார்ட் ஆகலை” என்று நிறுத்திவிட்டு அவன் முகம் காண,

தனது அலைபேசியை எடுத்து வாகனம் பழுது பார்ப்பவரை அழைத்து சரி செய்து தரும்படி கூறினான்.

அவர் இரண்டு நாட்கள் ஆகும் என்று கூறிட சரி செய்து தன்னிடத்திற்கு கொண்டு தரும் படி கூறியவன்,

“மேகா கெட் இன்” என்க,

“ஹான்” என்றவள் விழித்தாள்.

“உன்னை ஏற சொன்னேன் மேகா” என்று மீண்டும் அழுத்தி கூற,

“உங்களுக்கு எதுக்கு சிரமம். நான் ஆட்டோவுல போய்க்கிறேன்” என்று மறுக்க,

“எனக்கு எந்த சிரமமும் இல்லை. நான் போற வழியில தான் உன்னோடு ஏரியா இருக்கு ட்ராப் பண்ணிட்டு போறேன்” என்று மீண்டும் அழைக்க, வேறு வழியின்றி ஏறி கொண்டாள்.

பயணம் அமைதியாக சென்றது.

சைத்தன்யாவின் உணர்வுகளை வடிக்க வார்த்தையே இல்லை.

பார்க்கவே முடியாது என்று எண்ணியிருக்க இப்போது அவள் தன்னருகே.

இதுவே போதும் என்று உள்ளே மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.

எவ்வளவு நேரம் அமைதியாக இருப்பது என்று எண்ணியவன்,

“மேகா” என்றழைக்க,

“சார்” என்றபடி திரும்பி பார்த்தாள்.

“இன்னைக்கு உனக்கு பர்த்டே வா?” என்று கேள்வி எழுப்ப,

“ஆ…ஆமா சார்” என்று பதில் அளித்தவளுக்கு இவருக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி ஜனித்தது.

“எத்தனாவது பர்த்டே” என்று கேட்டிட,

இதை எதிர்பாராது திகைத்து விழித்தவள்,

“ட்வென்ட்டி பைவ்” என்றாள்.

“ஓ…” என்றவன் வாகனத்தை இயக்கியபடியே,

“விஷ்ஷிங் யூ அ ஹாப்பி பர்த்டே மேக மொழியாள்” என்றுவிட,

“தாங்க் யூ சார்” என்றவளுக்கு தான் இனிப்பை கண்ட குழந்தையின் குதூகலம்.

“மேகா பேக் சீட்ல ஒரு கவர் இருக்கும் அதை எடு” என்க,

மனமெங்கும் தித்திப்புடன் இருந்தவள் அதனை எடுத்து அவனிடம் கொடுக்க,

“அது உனக்கு தான் பர்த்டே கிஃப்ட்” என்றுவிட,

இங்கு மேகாவிற்கு அதிர்ச்சியில் நெஞ்சு வலி வராதது தான் குறை.

“எனக்கா?” என்றவளுக்கு நம்ப இயலவில்லை. அவளது பாவனையை கண்டவனது இதழ்கள் சிரிப்பில் மலர்ந்தது‌.

இதை பார்க்க இன்னும் எத்தனை தூரத்தில் இருந்தும் ஓடி வரலாம் என்று மனது கூறியது.

“உனக்கு தான். பிரிச்சு பாரு” என்று மொழிய,

அதனை பிரிக்கும் முயற்சியில் இருந்தவளது முகத்தில் இருந்த ஆர்வத்தை கண்டவனுக்கு அவளை அப்படியே அள்ளி கொள்ளத்தான் தோன்றியது.


மேகா பிரித்து பார்க்க அதில் அழகிய பட்டு புடவை இருந்தது.

அதனை கண்டதும் ஒரு கணம் மின்னிய விழிகள் சடுதியில் ஒளியிழந்து போனது.

அவளது முக மாற்றத்தை கண்டவன்,

“என்ன மேகா சாரி பிடிக்கலையா?” என்றுவிட,

சடுதியில் முக பாவனையை மாற்றியவள்,

“ஆங் ரொம்ப பிடிச்சிருக்கு சார்” என்று பதில் அளித்தாள்.

அவளது பதிலை நம்பாதவனுக்கு மேகாவின் முக மாற்றம் யோசனையை தந்தது.

அதுவும் சில கணங்களுக்கு முன்பு வரை முகத்தில் தெரிந்த ஆர்வம் எப்படி சடுதியில் வடிந்து போகும் என்ன ஆயிற்று இவளுக்கு.

உண்மையிலே இவளுக்கு புடவை பிடிக்கவில்லையா? இல்லையே அன்று அவ்வளவு ஆசையுடன் இதனை வருடினாளே என்று எண்ணம் ஜனித்தது.

ஏனோ விழிகள் கலங்கியது அதனை மிகவும் சிரமப்பட்டு மறைக்க முயற்சித்து கொண்டிருந்தாள்.

இருந்தும் அதனை கண்டு கொண்டவனுக்கு தான் உள்ளுக்குள் வலித்தது.

சில நிமிடங்களில் மேகாவின் வீடு வர கதவை திறந்து இறங்கியவள் திரும்பி,

“சார் நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே” என்று வினவிட,

“என்ன?” என்றவனது முகத்திலும் முன்பிருந்த இதம் தொலைந்திருந்தது.

“இந்த சேரி அன்னைக்கு நீங்க உங்க வைஃப்க்கு தானே வாங்குனிங்க? அதை ஏன் எனக்கு கிஃப்டா கொடுத்திங்க? உங்க வைஃப்க்கு இந்த சாரி பிடிக்கலையா? அதான் என்கிட்ட கொடுத்துட்டிங்களா?” என்று ஒருவாறு வினவிட,

என்ன ஆகிற்று என்று இத்தனை நேரம் குழம்பி தவித்தவனுக்கு அவளது கேள்வி சடுதியில் சினத்தை எழுப்பிவிட்டிருந்தது.

அதன் காரணமாகவே அடுத்த விநாடி, “எஸ் யூ ஆர் ரைட் மேகா. என் வைஃப்க்கு இந்த சேரி சுத்தமா பிடிக்கலை. அதான் வேஸ்ட்டா போறது உனக்கு கொடுக்கலாம்னு கிஃப்ட் பண்ணிட்டேன்” என்றவன் அவளது பதிலை எதிர்பாராது வாகனத்தை எடுத்து கொண்டு சென்றிருந்தான்.

வேகமாக மகிழுந்தை இயக்கி சென்றவனுக்கு தான் கோபம் குறையவே இல்
லை.

எவ்வளவு தூரம் போராடி இவளை பார்த்து வாழ்த்து கூறி பரிசை கொடுக்க ஓடி வந்திருக்கிறேன்.

இவள் என்னவென்றால் மனைவிக்கு வாங்கியதை என்னிடம் கொடுக்கிறாயா என்று கேட்கிறாளே என்று நினைத்தவனுக்கு ஆதங்கம் தான்.

அதுவும் அவள் அதிர்ந்து நின்ற தோற்றம் கண்ணுக்குள்ளயே நிக்க தன்னையே நிந்தித்தபடி வாகனத்தை இயக்கியவன் அப்போதே ஊருக்கு சென்றுவிட்டான்.









 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Shaithu evlo hint kuduthum megha thaan puriyama tube light ah ve irunthirukkaaaa😆😆😆😆😆😆😆😆😆
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Chaidhu ava unalavuku sharp illa rasa apadi irundha unnaku unmai theriyum ava eppo vae kandupidichi irupa ah athu na la than unnoda activities parthu kooda avaluku ne aval ah nesikiren nu kooda kandupidika mudiyala ithula sir ku aval ah vae vandhu ava love ah sollanum ah irundhalum ivolo periya aasai unnaku vandhu iruku ah vena Chaidhu ava unna parthu ah la yae ava mozhi ellam marndhu poidu thu avalukku per ku mattum Megha mozhiyal but Chaidhu ah partha mouna mozhi than varuthu aniyathuku ipadi oru tubelight heroine ah atleast oru zero watts bulb aachum iva irundhu irukalam
 
Top