• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பூக்களை விரும்பா வேர்களில்லை - 32

Messages
94
Reaction score
2
Points
8
அத்தியாயம் - 32


நேரம் அதிகாலை மூன்றை தொட்டுக் கொண்டிருந்தது. இன்னமும் அமிழ்தினியனின் எதிர்பாராத செய்கையில் முகிழ்ந்திருந்தவளின் முகம் தெளிந்தபாடில்லை. அவ்வளவு பொறுமையாக அதற்கு விளக்கம் கொடுத்து எடுத்து சொல்லி புரிய வைத்தும் மழைக்குழலியின் அசாதாரண கோபப் பார்வை அவனையே தான் குற்றம் சுமத்தியது.


'எத்தனை துணிந்து இந்த முடிவினை எடுத்துவிட்டான்!’


மனம் மானசீகமாய் வெந்துப் போனது. நகரும் நொடிகளுடன் கடந்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் மனமெங்கும் கசப்பை உமிழ்ந்து சென்றதை போல இருந்தது.


காற்றிலாடிய காகிதங்களை கற்சிலையாய் வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளின் நிலையை அதற்கு மேல் கைகட்டி தள்ளி நின்று காண முடியாமல் நிதானமாய் அவளருகே வந்து நின்றான் அமிழ்தினியன்.


அணைக்க மறந்த இமைகளை சுமந்தவாறு தவிப்பில் துடிக்கும் இதழ்களுடன் தன்னை நோக்கி நிமிர்ந்தவளின் நெகிழி பேழைக்குள் அடைக்கப்பட்டிருந்த இதயத்தை மெல்ல சுட்டெரித்தது அவன் விழிகளின் தீற்றல்கள்.


தடதடவென அங்குமிங்குமாய் அசைந்த கருவிழிகளுக்குள் வர்ணம் பூசி மெதுவாய் குனிந்து அவள் இமை ஓரமாய் பதித்தான் தன் நேசத்தை. இரு நொடிகளுக்குள் பதிந்து திரும்ப வேண்டிய இதழ்கள் இரண்டு நிமிடங்கள் கடந்தும் பிரிய மனம் இல்லாது மயங்கி நின்றது.


மீளாத சூழலாக இன்ப பெருவெள்ளத்தில் மாட்டிக் கொண்ட அதரங்களால் தொட்டு தொட்டு அவள் மீது வண்ணங்கள் தீட்டினான். ஒன்றிரண்டில் தான் நிறுத்தி விடமுடியுமா? கொடுக்க கொடுக்க இன்னும் அதிகமாய் பெருகிட, திகட்ட திகட்ட அவனை பெற்றுக் கொண்டிருந்தாள் அவன் இதயத்தின் இளவரசி.


“அத்..தான்” கட்டுப்படுத்திக் கொண்ட அழுகையுடன் அழைத்தவளின் இதழ்கள் அவனில் இடம் மாறிப் போனது.


அடுத்தடுத்து அவள் அழைக்க, அவனிடம் கேள்வி கேட்க கேட்க, சிறிது சிறிதாக அவள் மொத்தமாய் அவனிடம் இடம் பெயர்ந்துக் கொண்டிருந்தாள். அவளை பேசவே விடவில்லை அமிழ்தினியன்.


“நீ இதுவரைக்கும் பேசினது எல்லாம் போதும் ஜில்லு…” என்றுவிட்டான் ஒரேயடியாக.


“இனி நா..நான் பேசுறதை கேளு. என்னை உள்வாங்கிக்க ரெடியா இரு…” என்பதை தவிர அவனும் வேறு எதையும் அவளிடம் பெரிதாய் பேசிவிடவில்லை. அதற்கு அவனிடம் பொறுமையும் இல்லை.


“இன்னைக்கு நம்ப கல்யாண நாள் ஜில்லு. இரண்டு வருஷத்தை விடு. இப்பவாது என்னை அனுசரிச்சு போடி…” மொத்தமாய் மாறிப் போயிருந்தது அமிழின் நகர்வுகள்.


இதற்கு பிறகு அவளுடனான தன் வாழ்க்கைக்கு எந்த தடையும் இருக்க போவதில்லை என்ற பெரும் கொண்டாடல் அவனை நிமிர்த்தி நிறுத்தியிருந்தது. அதனால் மனைவியின் அர்த்தமற்ற பேச்சுகளை கேட்கும் எண்ணமே இல்லை அவனிடம்.


கொண்டவனின் தீண்டல்களில் உள்ளெழுந்த உணர்வுகளை தவிர்க்க முடியாமல் திண்டாடிய குழலி வேறுவழியில்லாமல் அவனை ஏற்றாள். ஏற்றுக் கொண்டாள் என்பதை விடவும் மார்பிலிருந்து பீறிட்டு கிளம்பிய மென்மையில் கரைந்துக் கொண்டிருந்தாள். அவனால் மட்டுமே அவளுள் வெடித்து சிதறும் உணர்வுகளின் பேருவகை ஆளுமையின் கீழ் அவனுடைய இதழ் ஒற்றல்கள் நீண்டது. அவள் வாசத்தை சுவாசித்தவாறே முகத்தை தாண்டி விட துடித்தபடி திணறினான் அமிழ்தினியன்.


குறை என்று கொடுத்த இறைவன் இந்த உணர்வுகளையும் பிடுங்கி எறிந்திருக்கக் கூடாதா என்ற தவிப்பு அவளுள் பெருகிக் கொண்டேப் போனது. காதலின் உணர்வு காய்ச்சலில் எரிந்துக் கொண்டிருந்தன உள்ளங்கள்.


“உனக்கு குறை இருக்குனு நீ நினைச்சனா… இப்ப… எனக்கும் கூட குறை வந்துடுச்சு தானே… அதுவும் இதுவும் சரியாப் போய்டுச்சுல ஜில்லு. இப்ப இதுக்கு அப்பறம் நீ என்னை வேணாம்னு சொல்ல மாட்டல…” சற்று முன்பு அவன் சொல்லியவையே மீண்டும் மீண்டும் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அதிலும் அவன் முகபாவனைகளும் குரலும் அவளிடம் அவளை கேட்டு நின்றதை போலவே இருந்தது.


நிறுத்தி நிதானமாய் காதுக்குள் ஒலித்த வார்த்தைகளில் மீண்டும் அவள் விழிகள் இருவரை சுற்றிலும் விழுந்திருந்த காகிதங்களை ஒருமுறை தொட்டு மீண்டது.


“அத்…தான்” மீண்டும் அவனிடம் ஒரு யாசிப்பு.


“ம்ம்” அவள் கன்னங்களோடு அவன் மீசை முடிகளுக்குள் நடந்த சண்டையில் முன்னேறியபடி மெல்ல கிசுகிசுத்தான்.


“இதெல்லாம் சரியா?” குழலியின் பார்வை சுற்றிலும் பதிந்தது.


கிடைத்த இடைவெளியில் முகம் பார்த்து இதழ் அணைத்தவன், “சரின்னு நினைச்சா சரிதானே ஜில்லு…” மனைவியின் கனி இதழ்களுக்குள் பேசினான்.


அவன் மார்பில் கைப்பதித்து வேகமாய் அவனிடமிருந்து பிரிந்து, “என..எனக்கு சரின்னு தோணலையே அத்தான்…” என சத்தமில்லாமல் முனங்கினாள் மழைக்குழலி.


தன் கைகளை இறுக்கமாய் மூடி அரை நிமிடம் அவளை வெறித்தவன், “இப்ப என்ன என்னை மறுபடியும் போய் ஆப்ரேஷன் பண்ணிக்க சொல்றியா?” சுத்தமாய் இதம் தொலைந்த வலுமை அவனிடம்.


அவன் வார்த்தைகளை கேட்டு துடித்து அதிர்ச்சியில் உறைந்துவிட்ட விழிகளுக்குள் எரிமலையின் கங்குகளை புதைத்தான் அந்த நிதானக்காரன்.


நெஞ்சலிருந்து ஊற்றெடுத்த வலியொன்று குழலியின் உடலெங்கும் வேகமாய் பரவியது. சற்று முன்பு வரை தன்னை கொண்டாடி கரைந்த இதழ்களை பார்த்தபடியே அமர்ந்திருந்த குழலியின் உள்ளம் தன்னை முழுதாய் அவனிடம் அள்ளி கொடுத்திட சொல்லியது.


“என்னடி பாக்கற? அதை தானே அடுத்து சொல்லப் போற?” உறுமலுடன் அவள் முழங்கையை பற்றி இறுக்கினான்.


ஒரு முடிவோடு நிமிர்ந்து, “ஆமா, இது ரிவர்சிபிள் தானே. வாசெக்டாமி…” என சொல்லி எழுந்து நிற்க முயன்றவளின் கரம் பிடித்து அவளை வேகமாய் இழுத்தவன் அவளை இழுத்து தன்னுள் சுருட்டிக் கொண்டபடியே,


“எல்லாத்துக்கும் உன்கிட்ட சொல்லுஷன் இருக்குல… நீ எல்லாரையும் யோசிக்கறல…” என நிறுத்தி அவள் முகவாய் பற்றி,


“அப்ப… என்னை பத்தியும் யோசி ஜில்லு. என்னோட காதலுக்கும் பதில் சொல்லு…” அதட்டலுடன்,


“நான் வாசெக்டாமி பண்ணிக்கிட்டேன்னு தெரிஞ்சதும் அப்படி துடிச்சுப் போன. எல்லா மெடிக்கல் ரிப்போர்ட்ஸையும் தூக்கி எறிஞ்ச. இரண்டு மணி நேரமா உட்காந்து அழுத… அப்பறம்… அவ்வளவு தான்ல… மறுபடியும் ஆரம்பிச்சுட்ட. என்னை பத்தி அவ்வளவு தான் யோசிப்பல நீ” ஆங்காரமாக வினவினான்.


விழிகளில் திரண்டு நின்ற முத்துகளோடு அவனை நிமிர்ந்துப் பார்க்க முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தவளின் முகம் பார்த்து விழி பதித்து, “நான் ஒன்னும் எனக்காக இதெல்லாம் பண்ணிக்கல. எனக்கு இதெல்லாம் தேவையே இல்ல. இதெல்லாம் இல்லாமலே என்னால உன் கூட சந்தோஷமா வாழ முடியும். ஆனா, இதை நினைச்சு என் பொண்டாட்டி எப்பவும் வருத்தப்படவே கூடாதுனு தான். எந்த நிலையிலையும் உன்னாலனு நீ யோசிச்சிட கூடாதுனு தான்.. இதெல்லாம்…” கூறியவனின் முன்பாக தவிப்புக்கும் வருடலுக்கும் இடையே கிடந்து அல்லாடினாள் குழலி.


உள்ளுக்குள் கிடுகிடுவென ஆடியது மனம். நிஜம் தான். உண்மையில் எவரும் செய்ய துணியாத காரியத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் செய்துவிட்டு வந்திருக்கிறான். அது வேறொன்றுமில்லை வாசெக்டாமி என்றழைக்கப்படும் ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை. குடும்பத்திறக்காக என்றாலுமே பல தகப்பனார்கள் இன்னமும் செய்ய முன்வராமல் பின்னடைவில் நிற்கும் ஒன்று. எப்போதும் போல அன்னைகளின் உதிரத்திற்கும் உடல் வலிமைக்கும் வேலை வைக்கும் சமுதாயத்தில் அவளால் கிஞ்சித்தும் ஏற்க முடியாத விஷயத்தை செய்துவிட்டு வந்திருக்கிறான் என்பதில் இருந்தே இன்னமும் அவளால் வெளிவர முடியவில்லை.


'இனிமே உன்னால என்னை வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கங்க அத்தான்னு சொல்ல முடியாதுல ஜில்லு…' சிறு துள்ளலுடனும் மனமெங்கும் பாய்ந்த வந்த இன்பத்துடனும் அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு மட்டும் அமிலத்தை நினைவுப்படுத்தி சென்றதே.


“நானும் என்னென்னமோ சொல்லிப் பார்த்துட்டேன். என்னென்னவோ செஞ்சுப் பார்த்துட்டேன். ஆனா, நீ என் பேச்சைக் கேக்குறதாவே தெரியல. அதான் உனக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்… என்னோட கிஃப்ட் எப்படி இருக்கு ஜில்லு?” என இதழ்கள் விரிய புன்னகை முகமாய் அவன் கேட்டு நின்றபோது உடலுக்குள் உயிர் கறைவதாய் ஒரு உணர்வு தோன்றியதே அதை இப்போதும் கூட அவளால் எளிதாக ஏற்க முடியவில்லையே.


அடுத்தடுத்த விஷயங்களின் பின்னலில் மாட்டிக்கொண்டு அவளால் அப்படியே யோசித்துக் கொண்டிருக்கவும் முடியாதே. அவனுடைய எந்த வகையான செய்கைகளுக்கும் மகிழ்வுறும் விதி அவளுக்கு இந்த ஜென்மத்தில் வாய்க்கப்படவில்லையே. எல்லாம் தனக்காகவே என சந்தோஷிக்க முடியாத அவல நிலையில் அல்லவா மலர்ந்திருக்கிறது பெண் மனது. அதனாலேயே அதற்குள் அடுத்தக்கட்ட பேச்சிற்குள் நகர்ந்துவிட்டாள். ஆயினும், முன்பை போல மனதார அவளால் இனி அவனை பிரிய முடியாது என்பது எப்போதோ அவளுக்கு புரிந்துவிட்டது. முன்பு, எப்படியோ அவனுடைய நலனுக்காகவென தீர்க்கமாய் அவனை பிரிந்துவிடும் முடிவோடு அவளால் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி முடிந்தது.


ஆனால் இப்போது கதையே வேறு. தன் நேசம், நாட்களின் நகர்வு, ப்ரியமானவனின் அருகாமை, அவன் பார்வைகள் முதல் தொடுதல்கள் வரை எல்லாமே அவளை அடிமையாக்கிவிட்டன. அவனுடைய நேசத்தை சுவாசிக்கவே இவ்வுலகத்திற்குள் உதிர்ந்துவிட்ட நட்சத்திரமாய் ஒளிர்ந்தது அவள் பெண்மை.


இனி தான் என்னதான் செய்வது என சிந்தித்தபடியே மெல்ல அவன் கை நழுவி எழுந்து, தள்ளி நின்றவளை கண்டு வேகமாய் எழுந்தவன் இரண்டெட்டில் அவளை அணுகி, “அடுத்து குழந்தைனு தானே ஆரம்பிக்கப் போற?” என கேள்வியுற்றவாறே மெதுவாய் அவள் வயிற்றில் கைப்பதித்து,


“என்னோட குழந்தைய உன்னால மட்டும் தான் சுமக்க முடியும். அந்த உரிமை உனக்கு மட்டும் தான் சொந்தம் ஜில்லு. குழந்தைப் பெத்துக்க எத்தனையோ வழிகள் இருக்கு தான். அதெல்லாம் வேணாம்னு சொல்ற அளவுக்கு நான் பிற்போக்குவாதி கிடையாது. பட், நமக்கு எதுவும் வேணாம். எந்த காலத்துலையும் என் ஜில்ல இக்கட்டான நிலையில நிறுத்துற எந்த விஷயமும் எனக்கு வேணாம். அது குழந்தையாவே இருந்தாலும்.


நீ இல்லாம எதுக்கு டி எனக்கு குழந்தை? என்னோட இரத்தத்துல இருந்து பிறந்தா தான் அது குழந்தையா? இல்ல உனக்கும் எனக்குமான பந்தத்துக்கு குழந்தை தான் அத்தாட்சியா? நீயும் நானும் குழந்தையே பெத்துக்க வேணாம். நம்பகிட்ட வர குழந்தைய நாம நல்லபடியா வளர்ப்போம்.” என ஆதரவாக அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.


விழிகளுக்குள் திரண்டு நின்ற நீரோடு மௌனமாய் அவனை திரும்பிப் பார்த்த குழலியை நோக்கி குனிந்தவன் லேசாய் அவள் நெற்றி முட்டி, “இன்னும் நான் என்ன பண்ணனும் ஜில்லு? என்ன பண்ணா நீ என் கூடவே இருப்ப? என்ன பண்ணா உன் காதல் மொத்தத்தையும் எனக்கு தருவ? சொல்லு ஜில்லு…” மென்மையாய் கேட்க,


“அத்தான்… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” தாடையில் பதிந்திருந்த அவன் விரல்களை பிரித்து அகற்றினாள்.


பெருமூச்சோடு விலகியவன் தள்ளி நின்று மார்பிற்கு குறுக்காக தன் கைகளைக் கட்டிக் கொண்டு இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான். தொடர்ந்து வீசும் விழிகளின் மின்னல்களில் மெல்ல தலை குனிந்து தன்னை சரி செய்துக் கொண்டு தன் மனம் திறந்தாள் மழைக்குழலி.


“எனக்கு ஒரு பதினஞ்சு வயசு இருக்கும். ஒரு பெண்ணா என்னை நான் உணர ஆரம்பிச்ச நேரம். காதல்னா என்னனு கேள்விப்பட்ட வரையறையில மட்டும் தான் நான் அப்ப இருந்தேன். ஸ்கூல் டைம்ல சில ஃப்ரெண்ட்ஸ் பேசுற டாப்பிக் தான். ஆனாலும், எனக்கு என்னமோ பெருசா அதுல இன்ட்ரெஸ்ட் இருந்ததே இல்ல. குடும்பம், படிப்பு, விளையாட்டுனு நானும் ஒரு வளையத்துக்குள்ள மட்டும் தான் இருந்தேன்.


அந்த கால கட்டத்துல தான் பெருசா இல்லனாலும் ஏதோ ஒரு விஷயம் என்னை உங்கள நோக்கி ஈர்த்துச்சு. ஈர்ப்ப விட நீங்க என்கிட்ட காட்ட ஆரம்பிச்ச ஒதுக்கம் என்னை என்னமோ பண்ணிச்சு அத்தான். வெளிப்படையா இல்லனாலும் நீங்க விலகிய நொடிகள் என்னை ரொம்பவே பலகீனமா ஆக்கிடுச்சு.


சொல்லப்போனா முதல்முறையா அப்பதான் காதல்னா என்னனு உணர்ந்தேன். ஆனாலும், மனசுக்குள்ள ஒரு சின்ன நெருடல். ஸ்கூல் படிக்கிற வயசுல இதெல்லாம் தப்புனு ஒரு பயம் ஸ்கூல் முடிக்கற வரைக்கும் என்னை பெருசா யோசிக்க விடல. அதுவரைக்கும் எதையும் தெரிஞ்சிக்காம எப்பவும் போல அமைதியாவே தான் இருக்கணும்னு இருந்தேன்.


காலேஜ் படிக்கும்போது எனக்கு ஓரளவுக்கு என்னோட நிலமை புரிஞ்சிடுச்சு. உங்களை எவ்வளவு யோசிக்கிறேன்னு தெரிஞ்சுது. ஆனா, அதை உங்ககிட்ட சொல்றதுக்கு சுத்தமா எனக்கு தைரியம் இல்ல. என்னோட ஆசைய நான் சொல்லி, நீங்க நான் அப்படியெல்லாம் உன்னை நினைக்கவே இல்லனு சொல்லிட்டாலோ, என்ன நீ இப்படி எல்லாம் கேவலமா யோசிக்கறனு கேட்டுட்டாலோ அதுக்கு அப்பறம் நான் என்ன பண்ணுவேன்.


பக்கத்துலையே இருந்து தினமும் பார்த்திட்டு இருக்கற உங்களை அதுக்கு அப்பறம் நான் எப்படி எதிர்கொள்வேன்னு ஒரே யோசனை. அதனால என்ன ஆனாலும் சொல்லிடவே கூடாதுனு முடிவெடுத்தேன். உள்ளுக்குள்ள உங்களை நான் தேடினாலும் வெளிய காமிச்சுக்கவே கூடாதுனு ரொம்ப உறுதியா இருந்தேன்.”


இறுகிய முகம் லேசாய் மாறிவிட அவனுக்கு முதுகு காட்டி மறுபக்கமாக திரும்பி நின்றிருந்தவளுக்கு அருகில் வந்து நின்றான் அமிழ்தினியன்.


“அதுக்கு அப்பறம் படிப்பு, வேலைனு ஓட்டிட்டே இருந்தபோதும் என்னை உயிர்ப்போட வச்சிருந்தது என்னோட காதல் தான். முதல்ல இருந்த தயக்கம் காலப்போக்குல சந்தோஷமாவும் நிம்மதியாவும் மாறிடுச்சு. அந்த சந்தோஷத்தையும் நிம்மதியையும் கெடுத்துக்க விரும்பாம ஊமையா உங்களை நேசிச்சேன். என் விருப்பத்தை வெளியே சொல்லாத அந்த ஒருதலைக்காதல் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அத்தான்.


உங்களை கனவுல, கற்பனையில, என் இதயத்துலனு அழகா வடிச்சு வச்சு ரசிச்சிட்டு இருந்தேன். உங்ககிட்ட இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவே இல்ல அத்தான். ஆனா, உங்களை சேர முடியாம போயிருமோன்ற தவிப்பு மட்டும் எனக்குள்ள அதிகமாகிட்டே இருந்துச்சு…” கரைந்துவிட்ட கண்ணீரோடு மார்பிற்கு குறுக்காக கைகளை கட்டிவாறு தன் தோள்களை தடவிக் கொடுத்தாள்.


“ஜில்லு… இங்க பாரேன்…” அவள் படும் அவஸ்தையை காண பிடிக்காமல் தன் மௌனத்தை கலைத்து வாய்திறந்தவனை தவிர்த்தவாறு வெளியே வேடிக்கைப் பார்ப்பதாய் பாசாங்கு செய்தவளின் குரல் கம்மியது.


“அப்பதான் அன்பா கல்யாணம் நடந்துச்சு. அன்னைக்கு நடந்ததை என்னால மறக்கவே முடியாது. எங்க பக்க சொந்தம் எல்லாம் அன்பாக்கு அடுத்து எனக்கு தான்னு பேசும்போதும், வரனா ஒண்ணு இரண்டு இடம் சொல்லும்போதும் அப்பா சொன்னது என் உயிரை வேரோடு பிடுங்கி அந்த பரந்த ஆகாயத்துக்கே தூக்கி எறிஞ்ச மாதிரி இருந்துச்சு. அந்த நொடி என் மனசு அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லத்தான்.”


அவனுக்கும் அன்றைய நிகழ்வு நன்றாகவே நினைவு இருக்கிறது. தன் தந்தை வழி சொந்தத்திலிருந்த ஒருவர் குழலிக்காகவென ஒரு வரத்தை பற்றி பேசவும் அங்கேயே அனைவரின் முன்பாகவும் தன் மனதிலிருந்ததை தெளிவாக சொல்லிவிட்டார் அவனுடைய மாமானர். சொல்லிவிட வேண்டும் என அவர் நினைக்கவில்லை தான் ஆனால் மற்றவர்களிடத்தில் தட்டி கழித்து பேசியதை போல தன் சொந்த பந்தத்திடம் சாக்கு சொல்லி அவரால் சமாளிக்க முடியாமல் தீர்க்கமாக சொல்லிவிட்டார்.


'குழலிக்கு இனியன் தான்னு பேசி ரொம்ப நாளாச்சே. சொல்லப் போனா அவங்க சின்ன வயசுல இருந்தபோதே நான் என் நண்பனுக்கு என் பொண்ணு அவன் வீட்டுக்கு தான் மருமகளா வருவானு வாக்கு கொடுத்துட்டேன். அவங்களும் எங்க பேச்சுக்கு எந்த மறுப்பும் சொல்ல மாட்டாங்கனு நினைக்கறேன். அதனால சபைல வச்சே தெளிவா சொல்லிடறேன் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு. அமிழ்தினியன் தான் அவளுக்காக நாங்க பேசியிருக்கற வரன். அவங்க கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்டறோம்…' என உரைத்த குரலில் அங்கிருந்த சொந்தங்கள் அனைவருக்கும் நன்றாக புரியும் வகையில் தெளிவாக தெரிவித்திருந்தார்.


அப்போது அமிழ்தினியனும் அங்கு தான் இருந்தான். மழைக்குழலியும் கூட அங்கு தான் இருந்தாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் கண நேரத்தில் திரும்பிப் பார்த்ததோடு சரி. வேறு எதையும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே தங்கள் வாழ்க்கையை பற்றிய சிந்தனையிலும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்பிலும் ஆழ்ந்துப் போய் மௌனமாய் யோசித்து நின்றிருந்தனர்.


ஆனால், அந்த ஒரு வினாடியில் பதிந்து விலகிய அமிழ்தினியனின் பார்வை மாற்றத்தை கண்டுக் கொண்டாள் மழைக்குழலி. அந்த நொடி நேர உரசலில் தான் உணர்ந்துக் கொண்ட காதலால் தான் நம்பிக்கையுடன் அவனுக்காக காத்திருக்க துவங்கினாள்.


“அன்னைக்கு என்னை ஒரே ஒரு நொடி சந்திச்சு விலகின உங்க கண்ணுல இருந்து தான் முதல்முறையா உங்க காதலை உணர்ந்தேன். உங்களோட விருப்பத்தை நீங்க சொல்லாமலே அந்த பார்வையிலேயே எனக்கு புரிஞ்சுது. அப்ப எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரு வாரம் நான் சுத்தமா தூங்கவே இல்ல. எப்பலையில இருந்து உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கும்? என்னோட காதலை நான் வெளிப்படுத்தாமையே நீங்களும் புரிஞ்சிக்கிட்டீங்களா? இனி நான் உங்களை எப்படி ஃபேஸ் பண்றது? நம்ப உறவு இனி எப்படி இருக்கும்னு எனக்குள்ள ஆயிரம் யோசனை ஓட்டிட்டே இருந்துச்சு.


காதலிப்பதை விட காதலிக்கப்படுவது எவ்வளவு சுகம்னு நான் அன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அடுத்தடுத்த விஷயங்கள் நான் எதிர்பார்த்தபடி நடக்கல. நீங்களும் எதுவும் நடக்காத மாதிரி பழையபடி தான் இருந்தீங்க. வீட்லையும் யாரும் எதுவும் பெருசா தோண்டி துருவல. எல்லாரும் எப்பவும் போல இயல்பா இருக்க… எனக்கு தான் மனசுக்குள்ள கொஞ்சம் ஏமாற்றமா இருந்துச்சு…” அந்நாட்களின் தன்னுடைய அமைதி அவளை எந்த அளவிற்கு குழப்பி இருக்கிறது, அவளுக்கு எந்த அளவிற்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்பதினை இப்போது புரிந்துக் கொண்டவனாக தவித்துப் போனான் அமிழ்தினியன்.


“இல்லடா… உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான்… உனக்கு எந்த வகையிலையும் என் காதல் தொந்தரவா இருந்தற கூடாதுனு தான் நான் உன்கிட்ட வெளிப்படையா எதையும் காட்டிக்கல…” தன் கைகளால் பரபரவென தலையை அழுத்தமாய் கோதிக் கொடுத்தான்.


தலை முதல் கால் வரை பீறிட்டு கிளம்பிய சிலிர்ப்பை கட்டுப்படுத்தவே முடியாமல் தண்ணீரை எடுத்து தன் வாயில் சரித்தவன் அவளிடமும் கொடுத்தான். சிறு புன்னகையோடு அவன் தருவித்ததை வாங்கிக் குடித்தவள்,


“எனக்கு உங்களை நல்லாவே தெரியும் அத்தான். நீங்க என்ன நினைச்சு என் கிட்ட சொல்லலனு தெரியாது. ஆனா, அதுவும் எனக்காக தானு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்…” இதழ் பிரிக்காத இளம்முறுவலுடன் மீண்டும் தொடர்ந்தாள்.
 
Messages
94
Reaction score
2
Points
8

“அப்படியே நாலு வருஷமும் ஓடிப் போச்சு. முன்ன மாதிரி இல்லாம இந்த நாலு வருஷமும் நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன் அத்தான். முன்ன தான் எனக்கு தெரியாது. இப்ப நீங்களும் என்னை தான் லவ் பண்றீங்கனு தெரிஞ்சுக்கிட்டேன் இல்லையா அதுனால எனக்கு நிறைய ஸ்வீட் மெம்மரீஸ் சேர்ந்துச்சு. ரொம்ப ஹாப்பியா இருந்தேன். அப்ப தான் அப்பாவும் மாமாவும் நம்ப கல்யாணத்தை பத்தி பேசினாங்க. நீங்க தள்ளிப் போடுறதுக்கு உங்ககிட்ட காரணம் கேட்டு சின்ன பிரச்சனையா மாறினதும் எனக்கு ஓகேனு நான் உடனே சொல்லிட்டேன். இருந்தாலும் நீங்க என்னை வந்து கேட்பிங்கனு எதிர்பார்த்தேன்.


அட்லீஸ்ட் உங்க காதலையாவது என்கிட்ட வெளிப்படுத்துவிங்கனு ரொம்ப எக்ச்பெக்ட் பண்ணேன். ஆனா, எப்பவும் போல அப்பவும் நீங்க வாயே தொறக்கல. அப்படி இப்படின்னு கல்யாண டேட் ஃபிக்ஸ் பண்ணியும் உங்க தூது புறாக்கிட்ட மட்டும் அது இதுனு எனக்கு தேவையானதை எல்லாம் மறைமுகமா வாங்கிக் கொடுத்து அனுப்பனிங்களே தவிர என்கிட்ட நேரடியா வந்து பேசவே இல்லை.” மூக்கை சுழித்துக் கொண்டு அவள் பேசிய அழகில் மனம்விட்டு சிரித்தவன் தன்னவளை நெருங்கி வந்து அவள் தோள் அணைத்து,


“ஹே, இதெல்லாம்… நீ என்னை இவ்வளவு எதிர்பார்த்தனு எனக்கு தெரியாது ஜில்லு. தெரிஞ்சிருந்தா நான் சும்மா நின்னு வேடிக்கை பார்த்திருந்திருப்பேனா என்ன? பச், நான் நிறைய மிஸ் பண்ணி இருக்கேன் போலையே…” என கிசுகிசுப்பாய் முனங்கியவனை நோக்கி வெட்டும் பார்வை ஒன்றினை வீசியவள்,


“நீங்க தான் 90'ஸ் கிட் ஆச்சே அத்தான். உங்ககிட்ட இருந்து இதெல்லாம் எதிர்பார்த்தது என்னோட தப்பு தான்…” என இகழ்ச்சியாய் சொல்லி முடிப்பதற்காகவே காத்திருந்தவன் கொஞ்சம் கூட நிதானமின்றி வேகமாய் அவள் இதழ்களை தன்னில் இணைத்துக் கொண்டான்.


“அத்தான்….” பிரிந்த வினாடியில் அதட்டலாய் அழைத்தவளின் கன்னம் வருடி,


“நீயும் தானே டி என்கிட்ட எதுவும் சொல்லாம இருந்துட்ட… நீயும் நானும் காதல்ல எவ்வளவு மக்கா இருந்து இருக்கோம்னு பாரு…” என இதழ்கள் விரித்து சிரிக்க, அவன் இதழ்களையே இமைக்காமல் வெறித்தாள் மழைக்குழலி.


அவளின் தொடர் பார்வையில், “என்ன ஜில்லு…?” என காற்றோடு கலந்தவனின் குரலில் அவள் காதோரம் மெலிதாகக் கூசியது.


“இல்ல…த்தான்…”


“அப்பறம்?”


“அழகா இருக்கேனு பாத்துட்டு இருந்..தேன்” அவன் விழிகளையும் இதழ்களையும் மாறி மாறி வட்டமிட்டது குழலியின் நெஞ்சம்.


“ஹாஹா… அழகா இருக்குனு தெரியும். நான் நீ சொல்ல வந்தது என்னனு கேட்டேன்…” என இன்னுமின்னும் அழகாய் சிரித்து வைத்தான்.


“கல்யாணத்துக்கு அப்பறம் இதெல்லாம் என்கிட்ட சொல்லி இருக்கலாமே. ஏன் ஒரு வருஷம் டைம் கேட்ட… உனக்கு என்னை பிடிக்கும்னு தான் முதல்ல எனக்கு தோணிட்டு இருந்தது. நீ டைம் எல்லாம் கேட்கவும் தான் லைட்டா எனக்கு சந்தேகம். உனக்கு இஷ்டமா இல்லையானு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். அதுனால தான் உன்னைவிட்டு ரொம்ப தள்ளி நின்னுட்டேன். இல்லனா, எனக்கு இதெல்லாம் எப்பவோ தெரிய வந்திருக்கும். நமக்குள்ள இதுவரை இருந்த பிரிவுக்கும் வருத்ததுக்கும் கொஞ்சமும் அவசியமே இல்லாம போயிருக்கும்.” வெகு எளிதாக அனைத்தையும் பேசி முடித்தவனை இமைக்க மறந்த விழிகளோடு வாரி சுருட்டிக் கொள்ளும் பார்வை பார்த்தாள் மழைக்குழலி.


“என்ன ஜில்லு? என்னாச்சு?” வியப்பாய் கேட்டவனிடம் இடவலமாய் தலையசைத்து ‘ஒன்றுமில்லை' என மறுத்தாள்.


நெடிய பெருமூச்சோடு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தவள், “எனக்கு நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட எதுவும் பேசாததுக்கு உங்க மேல ஒரு சின்ன வருத்தம் இருந்தது அத்தான். அதனால தான் அந்த ஒரு வருஷம் டைம் கேட்டு சும்மா விளையாட நினைச்சேன். கிட்டதட்ட பதினொரு வருஷம் வெயிட் பண்ணேன். ஒரு வருஷம் உங்களை காத்திருக்க வைப்போம்னு ஒரு சின்ன ஆசை. அந்த ஒரு வருஷம் நடந்ததை நினைச்சா எனக்கு இப்பவும் சிரிப்பா இருக்கு…” புன்னகை முகமாக ரசனை மிக கூறினாள்.


தன்னவளின் கனிந்த முகத்தை ரசித்துக் கொண்டே அவளருகே அமர்ந்த அமிழ்தினியன் எதையோ கூற வரும் முன், “இந்த மாதிரி சந்தோஷமான நினைவுகளை தந்தது போதும்னு நினைச்சானோ என்னவோ திடீர்னு தவிர்க்கவே முடியாத அளவுக்கு எனக்கு வலிய கொடுத்துட்டான் அந்த கடவுள்.” நெஞ்சை கசக்கி பிழிந்த முகபாவனையோடு விழிகளை மூடிக்கொண்டு முகம் சுருக்கியவளை அள்ளிக்கொள்ள துடித்த மனதோடு செயலற்று அமர்ந்திருந்தான் அமிழ்தினியன்.


“ஜில்லு…”


“நம்ப ஃபர்ஸ்ட் யேர் வெட்டிங் டேவ… ரொம்ப எதிர்பார்த்து காத்திட்டு இருந்தேன் அத்தான். நிறைய பிளான் பண்ணேன். உங்ககிட்ட என் காதலை எப்படியெல்லாமோ சொல்ல யோசிச்சு வச்சிருந்தேன். கிஃப்ட், கோவில், ட்ரிப்னு எல்லாமே யோசிச்சு வச்சிருந்தேன். நீங்களும் ரெண்டு மாசம் வெளியூர் போயிருந்திங்களா அந்த டைம்ல என்னலாமோ யோசிச்சேன். நம்ப லைஃப் பத்தி டிஸ்கஸ் பண்ணனும் நாம..நாம ஒன்னா சேர்ந்து… வாழ… ஹ்ம்ம்… ரொம்ப ஆசையா வெயிட் பண்ணேன் அத்தான்…”


“ஜில்லு… என்னை பாரேன்” அவள் கன்னங்களை தன் கைகளால் ஏந்திக் கொண்டு, அவள் முகம் முழுவதும் விரவியது அவன் இஸ்னேகமான பார்வை.


“திடீர்னு தாங்க முடியாத அளவுக்கு வயிறு வலி. ஆறு மாசமாவே ரொம்ப வலிச்சுது. அதுவும் பீரியட்ஸ் டைம்ல என்னால எதுவும் செய்ய முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டேன் அத்தான். அதான் செக் பண்ண ஹாஸ்பிடல் போனேன். பெருசா அப்ப எதுவும் நினைக்கல அத்தான். ஒரு வாரம் ஸ்கேன் எல்லாம் எடுத்தாங்க, கல்யாணம் ஆகிடுச்சானு கேட்டாங்க, மேரேஜ் லைஃப் எப்படி இருக்குனு கேட்டாங்க, ஹஸ்பண்ட் வரலையானு கேட்டாங்க இன்னும் என்னென்னமோ எல்லாம் கேட்டாங்க. அப்ப கூட எனக்கு இந்த அளவுக்கு பிரச்சனைனு புரியல.


மெதுவா விஷயம் என்னனு சொன்னாங்க. பயப்பட வேணாம் சரி பண்ணிடலாம்னு சொன்னாங்க. வேற டாக்டர்ஸ் கன்சல்ட் பண்ணிப் பாருங்கனும் சொன்னாங்க. அதுக்கப்பறம் ரெண்டு மூணு ஸ்பெசலிஸ்ட் கிட்ட செக் பண்ணேன் அவங்களும் அதையே தான் சொன்னாங்க. எனக்கு என்னனு எதுவுமே ஓடல, நான் எப்படி இதை வெளிய சொல்றதுன்னு புரியல, அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல. அவ்வளவு தானா என்னோட வாழ்க்கைனு ஆகிப்போச்சு எனக்கு.


நீங்க ஊர்ல இருந்து வந்ததும் உங்ககிட்ட முதல்ல சொல்லிடனும்னு நினைச்சேன். அப்புறம் இதை சொல்லி என்ன ஆகப்போகுது எதுவும் மாறப் போறது இல்லையே. அதனால நீங்களாவது சந்தோஷமா நல்லா இருக்கணும்னு நினைச்சு என்ன பண்ணலாம்னு தான்… உங்களை விட்டு உடனே பிரியனும்னு முடிவெடுத்தேன். என்னால எப்படி அத்தான் உங்க கூட இருந்து உங்க வாழ்க்கையையும் கெடுக்க முடியும். எனக்கு தான் உங்களோட வாழ குடுத்து வைக்கல ஆனா நீங்களாவது….” அதற்குமேல் குரலே எழும்பவில்லை குழலிக்கு.


குரல் தேய தழும்பியவளை தன் மார்போடு இழுத்து அணைத்துக் கொண்டான் அமிழ். ஊமையாய் அவன் மார்பில் சாய்ந்து அழுது தீர்த்த மனையாளை தேற்றும் வழி தெரியாமல் இன்னும் இறுக்கமாய் தன்னோடு தழுவிக் கொண்டான்.


“எனக்கு நீங்க வேணும் அத்தான். என்னோட எல்லாமும் நீங்க தானே. என்னால எப்படி உங்களை விட்டுட்டு இருக்க முடியும். நீ..நீங்க இல்லாம நான் வெறும் உயிரில்லாத ஜடம் மாதிரி தான் வாழ்வேன் அத்தான். ஆனா, என்னால அதை பண்ண முடியாதே. என்…என்னால உங்களை… எனக்கு அந்த கொடுப்பனை இல்லத்தான்…” விசும்பலுடன் தள்ளி அமர முயன்றவளை வேகமாய் மீண்டும் இழுத்தவன்,


“ஜில்லு ப்ளீஸ் டி… நமக்கு எதுவும் வேணாம் டி… ஜில்லு… அழுகைய முதல்ல நிறுத்து. அழாத ப்ளீஸ்…” தவிப்பை உள்ளடக்கி அவளை தனக்குள் புதைத்துக் கொள்ள முயன்றவாறே மொழிந்தவனை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடி தவித்தது அவள் பெண்மை.


சிறுது நேர அமைதிக்கு பிறகு மெல்ல, “இந்த உலகத்துல எந்த ஒரு சக்தியாலையும் காதலை பிரிக்க முடியாது. அவங்களே பிரிய நினைச்சா தான் அந்த காதலுக்கு பிரிவு உண்டு. நீ இப்ப அப்படி தான் நினைச்சுட்டு இருக்க. இதெல்லாம் நம்பல பிரிச்சு வைக்க கூடிய விஷயமா? இது ஒரு விஷயமே இல்ல. அது உனக்கே தெரியும். உன் பிடிவாதம் தான் என் காதலை வேணாம்னு சொல்ல வைக்குது. இல்ல ஜில்லு? பிடிவாதகாரி டி நீ. அந்த பிடிவாதத்தை என்னோட சேர்ந்து வாழுறதுல காமியேன்.


மத்த எல்லாத்தையும் விடு ஜில்லு. நம்ப குடும்பம், படிப்பு, வேலை, ஆசை, கனவு, எதிர்காலம்னு எல்லாத்தையும் விடு. இரண்டு நிமிஷம் நம்பல பத்தி மட்டும் யோசி. இப்படி பேசுறதுக்கும், தோணும் போதெல்லாம் தோள் சாஞ்சி அழறதுக்கும், மடில படுத்து தூங்குறதுக்கும், உன் கைப்பிடிச்சு நடக்கறதுக்கும், கண்களைப் பார்த்தே உன் மனசை புரிஞ்சி நடந்துக்கறதுக்கும், உன்கூட ஒன்னா சிரிச்சு விளையாடவும் நான் வேணாமா உனக்கு? உனக்கு நா..நான் வேணாமா ஜில்லு?” நெற்றி முட்டி விழிகளில் திரண்டு நின்ற நீரோடு பரிதவிப்பில் கனிந்த வார்த்தைகளோடு இமைக்காது பார்த்திருந்த தன் மனம் கவர்ந்தவனை அதற்கு மேலும் தவிக்க விட அவளுக்கு மனம் வருமா என்ன?


பாய்ந்து அவன் இமைகளில் இதழ் பதித்தவள் குனிந்து அவன் இதழ்களில் அழுத்தமாக இறங்கினாள். உதடுகள் சொல்லாத சம்மதத்தை மௌனமாய் முத்தங்களோடு சொல்லிக் கொண்டிருந்தவளை பிரித்து, “முதல்ல சொல்லுடி. நான் வேணாமா உனக்கு?” என மீண்டும் அமிழ்தினியன் விடாமல் கேட்க,


அவன் மடியில் ஏறி அமர்ந்தவளின் விழிகளில் சட்டென்று பூத்தது மகிழ்ச்சியின் சாயல். “ஹாப்பி ஆன்னிவர்சரி அத்தான்” என மீண்டும் தான் விட்டதை தொடர,


“பச், நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. வாயால ஒத்துக்கிட்டாலே மறுபடியும் முருங்கை மரத்துல ஏறுவ டி நீ. அதனால ஃபர்ஸ்ட் எனக்கு பதில் வேணும். அதுக்கு அப்பறம் நீ என்னை என்ன வேணா பண்ணிக்கோ. ம்ம், நான் உனக்கு வேணுமா? வேணாமா?” அவள் கைகளைப் பிரித்து விட்டபடியே அவன் விடாமல் இயம்ப,


“சொல்ல மாட்டேன்” என்றாள் சட்டென.


“ஏன்?”


“நீங்க கேக்குற கேள்வியே தப்பு. அதெப்படி நீங்க என்னை பாத்து இப்படி கேக்கலாம்?” அவன் மீதிருந்து எழுந்துக் கொண்டவளை தொடர்ந்து தானும் எழுந்தவன்,


இருப்பக்கமாய் இடுப்பில் கை வைத்துக் கொண்டு, “பண்றது எல்லாம் பண்ணிட்டு. நான் தப்பா கேள்வி கேக்குறேனா? வேற எப்படி கேக்கணும் மேடம்? அதையும் நீங்களே சொல்லுங்க…” என முறைத்துக் கொண்டு கேட்க,


“காலம் முழுக்க இந்த அமிழனை சகிச்சுக்க சம்மதமானு கேக்கணும்” மனம்விட்டு அவனிடம் தன் மனதிலிருந்தவற்றை எல்லாம் கொட்டிவிட்ட நிம்மதியோடு விளையாட்டாய் சொல்லி வெளியே சென்றவளை அமைதியாக பார்த்திருந்தவன் சட்டென அவளின் கரம் பிடித்து நிறுத்தினான்.


“சரி, நீ சொன்ன மாதிரியே கேக்குறேன். இப்ப பதில் சொல்லு. காலம் முழுக்க என்னை சகிச்சுக்க…” மேலும் தொடர விடாமல் இறுக்கமாய் அவன் வாயை மூடியவள்,


“ஐய்யோ, நா..நான் விளையாட்டா சொன்னேன் அத்தான்…” என புன்னகைக்க முயன்று அது முடியாமல் போகவே, “ஸாரி ஸாரி அத்தான். உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ரொம்ப ஸாரி…” உடைப்பெடுத்து விசும்பியவளை அணைத்துக் கொண்டு, “மூச், போதும் ஜில்லு. இனி எதுவும் பேசக் கூடாது.” என்று உறுதியாக சொல்லிவிட்டவன் அதன் பிறகு அவளையும் கூட அதைப் பற்றி பேச விடவில்லை.


நடந்ததெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனி நடப்பவை நன்றாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உள்ளடக்கி இருவரின் கைகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்துக் கொண்டது.


இரவு நேரத்து இசையை ரசித்தபடியே பசியில் அரற்றிய வயிற்றுக்கு தேவையான குளம்பி கோப்பைகளோடு சில வகை சிற்றூண்டிகளுடன் தரைத்தள உப்பரிகை பகுதியில் வசதியாய் அமர்ந்தபடி வெகு நேரம் ஏதேதோ பழைய கதைகளை ஆர்வமாய் பேசிக் கொண்டு நேரம் போவது தெரியாமல் இருவரும் உறங்காது விழித்தே இருந்தனர்.


“தூக்கம் வரலையா ஜில்லு?” சோர்வில் களைத்திருந்த உடலை அவள் மீது சாய்த்து அவள் தோளில் தலை வைத்து சரிந்தவன் முகம் முழுக்க தழுவிய இதத்துடன் அமர்ந்திருந்தவளிடம் வினவ,


“இல்லத்தான். உங்களுக்கு தூக்கம் வருதா?” கொட்டாவி விட்டபடியே விழிகளை மூடிக் கொண்டவனை பரிவாக ஏறிட்டாள்.


“தூக்கம் வரல. ஆனா, இரண்டு நாள் அலைஞ்சிட்டு வந்தது டயர்ட்டா இருக்கு. உன் மடில படுத்துக்கறேன் ஜில்லு…” என புன்னகை முகமாய் அவள் மடியில் முகம் புதைத்துப் படுத்துக் கொண்டான்.


அவள் இடது கையினைப் பிடித்து உள்ளங்கை ரேகைகளை வருடியபடியே, “என்னோட கிஃப்ட் எங்க ஜில்லு?” என மெல்லிய குரலில் அமிழ்தினியன் கிசுகிசுக்க,


“ஹ்ம்ம்?” புருவம் சுருக்கி என்னவென்று புரியாமல் வினவினாள்.


“ஏதோ கிஃப்ட்…” என அவன் விவரிப்பதற்குள் அவனுடைய அலைபேசியின் சத்தம் அவன் கவனத்தை ஈர்த்திருந்தது.


அதன் திரையைப் பார்த்தவன் புன்சிரிப்புடன் அதை குழலியிடம் காண்பிக்க அவளோ முகத்தை சுழித்து தன் தலையில் அடித்துக் கொண்டாள். அவள் செய்கையில் வாய்விட்டு சிரித்தவன் செங்கதிர்வேலனிடமிருந்து வந்திருந்த அழைப்பை ஏற்று தன் இடப்பக்க காதிற்கு கொடுத்து,


“ஹலோ… சொல்லு வேலா” என்க,


மறுபக்கம் பகிரப்பட்ட செய்தியில் பதறிப் போய் எழுந்து அமர்ந்தான் அமிழ்தினியன்.


“எப்ப? என்னாச்சு?” என பதட்டத்தோடு இயம்பியவனை கண்டதும் குழலியின் முகமும் மாறியது.


“எந்த ஹாஸ்பிடல்னு எனக்கு மெசேஜ் பண்ணுடா. மார்னிங் ஃபர்ஸ்ட் ஃப்ளைட்ல நாங்க கிளம்பிடுவோம்…”


“...”


“இல்ல வேலா. என்ன நடந்தாலும் பரவால்ல. நாங்க வரோம்…” என சொல்லி வைத்துவிட்டவனின் முகத்தை ஏறிட்டு பார்க்க முடியாமல் அவன் அலைபேசியையே வெறித்துக் கொண்டிருந்த குழலி,


“யாருக்கு என்னத்தான்?” என கேட்க மௌனமாய் அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தான் அமிழ்தினியன்.


“ப்ளீஸ் சொல்லுங்கத்தான்…” பதில் வராததில் மீண்டும் அவள் வெடிக்க,


“இப்ப எதுவும் கேட்காத ஜில்லு. என் கூட கிளம்பி சென்னை வா…” என்றவனின் கூற்றில் மேலும் அதிர்ந்தாள் மழைக்குழலி.


- விருப்பம் தொடரும்



ஹாய் பூக்களே,


வெரி வெரி ஸாரி. ரொம்ப நாள் இடைவேளை எடுத்துட்டேன். மன்னிச்சு. இனி சரியா வந்துடுறேன்.


கதையின் 32 வது அத்தியாயத்தை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் நட்பூஸ்.


- அபிராமி இளவரசன்💓
 
Top