• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,351
Reaction score
4,091
Points
113
நேரம் – 42 💜

வீட்டின் கதவைத் திறந்து வைத்து வாயிலில் அமர்ந்திருந்த பரிதி, வாடிப் போயிருந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான். இரண்டு நாட்களாக நீர் ஊற்றியும் கூட அவை இன்னும் தெளியவில்லை. முன்பு போல பசுமையாகவும் பளிச்சென மாறுவதற்கும் நேரமெடுக்குமென யோசித்து உள்ளே சென்றான்.

காமைக் கலத்தின் விசில் சப்தம் கேட்டதும் இவன் கால்கள் தன் போல சமையலறைக்குள் நுழைந்தன. அடுப்பை அணைத்தவன், சின்ன கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் தாளித்து தயிர் சாதத்தில் ஊற்றினான். கடந்த ஒரு வாரமாக வீடே அதீத நிசப்தத்தில் திளைத்திருந்தது அவன் மனத்தைப் போல.

அன்றைக்கு அவன் கை நீட்டி அறைந்ததும், சண்டையிட்டு இளமதி வீட்டைவிட்டு வெளியேறியிருந்தாள். எப்போதும் போல பரிதி நாய்க்குட்டி போல அவள் பின்னே சென்று சமாதானம் செய்யாமல் வெறுமனே வேடிக்கைப் பார்த்திருந்தான். இளமதிக்கு மலையளவு கோபம் கனன்றது. இனிமேல் இந்த வீட்டிற்கு வரவே மாட்டேன் என அழுகையும் கோபமுமாய் சீறிவிட்டு சென்றிருந்தாள்.

இந்த இடைப்பட்ட ஒரு வாரத்தில் அவளுக்கும் இவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவனாக அழைக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ என எந்த முயற்சியும் எடுக்காது, முதலில் தன் மனத்தையும், தன்னையும் புரிந்துகொள்ள நேரமெடுத்தான். தன்னை சுய-அலசல் செய்ய அவனுக்கு இந்த ஒரு வாரம் தேவைப்பட்டது.

மதியின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் முதலில் இவனுக்குத் துடிக்கும். தவித்துப் போய் அவளை சமாதானம் செய்திடுவான். ஆனால் இப்போதெல்லாம் அவனுக்கு எந்த உணர்வுமே தோன்றுவதில்லை. அவள் மீது கோபமும் வெறுப்பும் அவனறியாமலே அடிமனத்தில் புதைந்திருக்கிறது. அவள் சரியாகிவிடுவாள் என இவன் இந்த மூன்று மாதத்தில் எத்தனையோ நாட்கள் அவளது ஏச்சுகளையும் பேச்சுகளையும் தாங்கினான். ஆனால் பாம்பிற்கு பால் வார்த்தாலும் அதன் குணம் என்றும் மாறாது என்பதை நிரூபித்துவிட்டாள் மதி.

எல்லாவற்றையும் விட அவளில்லாத இந்த ஒரு வாரமும் நிம்மதியாய் உறங்கி எழுந்தான். மதுகுடிக்க வேண்டும் என தோன்றும் எண்ணத்தை மறக்க, உடற்பயிற்சி கூடம் சென்றான். சரியான நேரத்திற்கு சமைத்து உண்டான். வீட்டை சுத்தம் செய்தான். வாயிலில் வாடிப் போயிருந்த செடிகளுக்கு நீர் ஊற்றினான். ஒருமாதிரி சலசலப்புகளற்ற இந்த அமைதி அவனுக்கு நிரம்ப பிடித்தது. எப்போதும் சண்டையும், சமாதானமும் என மதியோடு கடந்த மூன்று மாதங்கள் அவனது நிம்மதியும் இயல்பு வாழ்க்கையும் பறிபோயிருந்தது. இப்போதுதான் அவனால் அனைத்தையும் ஒருவித
சுதந்திரத்தோடு செய்ய முடிந்தது.

தன் மீதுதான் தவறு என இவன் விட்டுக் கொடுத்துச் சென்றதெற்கெல்லாம் சேர்த்து வைத்து அவள் இவனை படுத்தியிருந்தாள். இப்போதும் இவன் அவளிடம் உண்மையை மறைத்தது தவறுதான் என ஒப்புக் கொள்கிறான். ஆனால் அதற்காக இதற்கு மேலும் அவளிடம் அடிபணிந்து போக இவனது சுயமரியாதை இடமளிக்கவில்லை. அதைவிட அவனுக்கு ஒரு அமைதியான, எளிமையான வாழ்க்கைதான் வேண்டும்.

வீட்டிற்குள்ளே நுழைந்ததும் மனைவி அவனை சிரிப்புடன் வரவேற்க வேண்டும். அன்றைய அவனுடைய அலுவல்களைப் பற்றி அவளிடம் பகிர்ந்து, அவளையும் பேசச் சொல்லிக் கேட்க வேண்டும். வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும். ஏதாவது கேலியோடு சமைத்து உண்டு, என்றைக்கோ பார்த்த படத்தைப் பற்றி பேசி சிலாகிக்க, தங்களது காதல் வாழ்க்கையை வெகு எளிமையாக ரசித்து வாழ அவனுக்கு ஒரு துணை தேவைப்பட்டது. இளமதியுடன் அவனால் இது போன்ற வாழ்க்கையை எதிர்பார்க்க முடியாது.

அவன் விரும்பியது எளிமையான வாழ்வு. ஆனால் அவளோ ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவள்
வெறும் தோற்றத்தில் மயங்கி அவளிடம் தன் வாழ்க்கையை இவன் அடகு வைக்க தயாராக இல்லை. இதற்கு மேலும் இந்த உறவை அவன் நீட்டிக்க விருப்பமில்லை. மதியாக கேட்டாலும் கூட இவன் தங்களது உறவை முறித்துக்கொள்ளும் தீர்க்கமான அறுதியொன்றை எடுத்திருந்தான். அதை எடுத்தப் பின்புதான் என்னவோ தன்னைக் கட்டி வைத்திருந்த பெரிய தளையொன்றின் பிடியிலிருந்து தப்பித்ததைப் போல மனம் ஆசுவாசம் கொண்டது.

அலைபேசியை எடுத்தவன், தாய், தமக்கை எனப் பேசினான். இன்றைக்கு கல்லூரியில் ஏதோ விழா என்பதால் தாவணி அணிந்திருந்த கீர்த்தனா, “அண்ணா... இந்த ஹாஃப் சேரி எப்படியிருக்கு? அண்ணி வாங்கிக் கொடுத்தது...” என சுற்றி சுற்றிக் காண்பித்துப் பூரித்துப் போனாள். இவனும் நன்றாக இருக்கிறதெனப் பார்ட்டினான். தந்தையிடமும் பேசியவன் பின்னே புகைப்படத் தொகுப்பைத் தொட்டு உள்ளே சென்றான்.

படத்தில் வாணி மென்மையாய் முறைத்துக் கொண்டிருந்தாள். கீர்த்தனா தொடர்ந்து சுயமியை எடுக்கவும் அவள் சின்னவளைக் கண்டித்து, மென்மையாய் முறைக்கும்போது எடுத்த புகைப்படம் அது. அடுத்தடுத்த படத்தில் முறைப்பு படிப்படியாக குறைந்து மெல்ல பல்வரிசை தெரிய வசீகரமாகச் சிரித்திருந்தாள். பார்க்கவே இவனுக்கு மனதும் கண்ணும் நிறைந்து போனது.

உண்மையில் இந்த ஒருவாரத்தில் தான் அவன் வாணியை அதிகமாக மனதளவில் தேடியிருக்கிறான். இதற்கு முன்னே மதியின் இருப்பு அவன் மூளைக்கு ஓய்வே கொடுக்காமல், ஏதேனும் சண்டை அல்லது மது, ஊர் சுற்றுதல், அலுவலகம் என நேரத்தைப் பறித்துக் கொண்டிருந்தது. இப்போது நின்று நிதானமாக அவன் யோசிக்கும்போது வாணி அவனை நிரம்ப பாதித்திருக்கிறாள். அதை அவனால் முன்பு ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. அதனாலே அவளது வயதைக் காரணம் காண்பித்து காயப்படுத்தியிருக்கிறான்.

இவள்தான் தனக்குப் பொருத்தம் என வெளித் தோற்றத்தில் மயங்கி மதியின் பின்னே மதிக்கெட்டு சுற்றியிருக்கிறான். ஆனால் நிறம், அழகு இதையெல்லாம் அப்பாற்பட்டு வாணியோடு அவனால் அவனாக இருக்க முடிந்தது. அவளின் அண்மையில் ஒருவித நிம்மதியும், பாதுகாப்பையும் சுதந்திரமாய் அனுபவித்திருக்கிறான். அவளது இருப்பு ஒருபோதும் அவனை எரிச்சல்படுத்தியதில்லை. அவள் இல்லாத இந்த மூன்று மாதங்களும் மனதளவில் ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்திருந்தான். அது தன்னைப் பாதிக்கவில்லை என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தான்.

“என்ன மேன்? கப்பல் கவுந்து போன மாதிரி உக்கார்ந்திருக்க!” வேலைக்கு சேர்ந்த புதிதில் மேலாளர் ஒருவர் இவன் செய்த சிறிய தவறுக்கு திட்டிவிட்டார் என சோகமாய் அமர்ந்திருந்தவன்‌ தோள்தட்டி, என்னவென விசாரித்து, பின்னர் கேலி செய்து சிரிக்க வைத்திருந்தாள் வாணி.

“நீயெல்லாம் இப்படி இருந்தா நல்லா இருக்குமா பரிதி. கமான்... போய் ஒரு ப்ளேட் எடுத்து நான் செஞ்ச பிரியாணியையும் பெப்பர் சிக்கனையும் முடிச்சி விடு. உன் சோகம் போய்டும்!” என அவள் குறும்பாய் கூறினாலும் கூட அவள் அவனை நிறைய கவனித்திருக்கிறாள். பரிதி சோகத்தில், கோபத்தில், அதீத உணர்ச்சிவசப்படும் நேரங்களில் வயிறு நிரம்ப உண்பான். சிந்தாமணிக்கு அது தெரியும். ஆனால் இவள் தன்னைப் புரிந்திருக்கிறாள், என் உணர்வை மதிக்கிறாள் என மதிகெட்ட புத்திக்கு இப்போது செருப்பால் அடித்தது போல உறைத்தது.

“சோறாக்கி வச்சுட்டேன். கொட்டிட்டு படுன்னு அழகா தமிழ்ல எழுதாம என்ன வாணி கிறுக்கி வச்சிருக்க?” அவள் அவனுக்குப் புரியாத நூதன ஆங்கிலத்தில் எழுதி வைத்துச் சென்ற நாளன்று இவன் கத்தவும், உதட்டில் மறைக்க முயன்ற சிரிப்போடு அவனைக் கடந்திருந்தாள் வாணி.

ஒருமுறை அவள் படிக்கும் புத்தகத்தை பிடுங்கி இவன் இரண்டு வாசித்துவிட்டு திருதிருவென முழிக்க, வாணி வாய்விட்டு சிரித்த நிமிடம் இப்போது கவிதையாய் இவனுள்ளே இறங்கிற்று. அதை நினைத்ததும் இவனது உதடுகள் மெல்ல பிரிய, சின்ன சிரிப்பொன்று உதிர்ந்தது. அவளை நினைக்கும்போது மனம் லேசானது.

இரண்டு ஆண்டுகளாய் அவள் அன்பில் கட்டுண்டுகிடந்த காலம் நினைவுகளாக அவனை நிறைத்துப் போட்டது. இவன் சோகமாக இருந்தால், பேசி தேற்றியிருக்கிறாள். கஷ்டத்தில் துவளும்போது கைக்கொடுத்து உதவியிருக்கிறாள். சந்தோஷத்தைப் பங்கு போடாமல் தூர நின்று ரசித்திருக்கிறாள். இவனது கிறுக்குத் தனங்களை கண்டு சிரித்திருக்கிறாள். எச்சரிக்கை செய்ய வேண்டிய இடத்தில் மட்டும் தன்னை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாளே என பரிதியின் மனம் சுணங்கிற்று.

அவள் எச்சரித்திருந்தால் கூட அதை செவியில் வாங்குமளவிற்குத் தான் இல்லை என்பதும் இவனுக்குப் புரிந்தது. இந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும் அவள்தான் நிறைத்தாள். மதியோடு இந்த மூன்று மாதத்தில் எப்போது சந்தோஷமாக இருந்தோம் என விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் வாணியோடு அவன் வாழ்ந்த காலத்தில் எவ்வித பொறுப்பும் அற்று திரிந்தான். அவள் அனைத்தையும் பார்த்துக் கொள்வாள் என அவளிடம் பொறுப்புகளைத் திணித்திருக்கிறான். ஒப்பந்த திருமணம் என்பதைத் தாண்டி தன் குடும்பத்தில் தானில்லாத இடத்தை அவள் இப்போது கூட நிரப்புகிறாள். உண்மையில் அவள் அவனையும் அதே அளவு அன்பு செய்திருந்தாள், நேசித்திருந்தாள். இந்த மடையனுக்கு இப்போதுதான் அது புரிந்தது.

எல்லாவற்றையும் மெல்ல அசைபோட்டுக் கொண்டே பெருமூச்சுடன் எழுந்து அலுவலகம் கிளம்பிச் சென்றான். அடுத்து வந்த இரண்டு வாரங்களும் இப்படித்தான் கழிந்தன. மதி பரிதி வந்து கெஞ்சி அழைத்தால் கூட அவனோடு இனி தன் உறவை தொடர விருப்பமற்றிருந்தாள். ஆனாலும் அவனாக வந்து கெஞ்சி, சமாதானம் செய்யும்போது வர மாட்டேன் என அவனை உதாசீனம் செய்துவிடும் எண்ணத்தோடு காத்திருந்தாள்.

மூன்று வாரங்கள் முடிந்தும் கூட அவன் வரவில்லை என்றதும் அவளின் பொறுமை பொடிந்து போனது. மைக்கேலை அனுப்பி அவளுடைய பொருட்களை எடுத்து வரப் பணித்தாள். அப்படியே பரிதியையும் சந்திக்க வரக் கூறுமாறு சொல்ல, அவனும் அவள் கூறியதை செய்து முடித்தான்.

பரிதிக்கும் மதியிடம் பேச வேண்டியிருந்தது. மறுநாளே ஒரு உணவகத்தில் அவளை சந்திக்கச் சென்றான் இவன். மதி இன்னும் வந்திருக்கவில்லை. அரைமணி நேரம் தாமதமாகத்தான் வந்தாள். தனியாக வரவில்லை. மைக்கேல், விதுஷா என நான்கு நண்பர்களுடன் வந்தாள். அவர்கள் நால்வரும் இவனை எதிரியைப் போல பாவித்து பார்த்தனர். இவன் அடித்ததை அவள் கூறிவிட்டாள் எனப் புரிந்தது.

நேரே இவனிடம் வந்தவள், கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி அவன் முகத்தில் எறிந்தாள். “லுக் மிஸ்டர் இளம்பரிதி... உன்னை மாதிரி லோக் க்ளாஸ் ஆளை லவ் பண்ணது என் தப்பு. உன்னை நான் உண்மையா லவ் பண்ணேன் டா. உனக்காக என்ன வேணா செய்ய தயாரா இருந்தேன். ஆனால் நீ எனக்கு என்ன பண்ண? நம்பிக்கை துரோகம். அட்லீஸ்ட் அவளுக்கு உண்மையா இருந்திருந்தா கூட நான் உன்னைவிட்டு விலகிருப்பேன். அவளும் வேணும், நானும் வேணும்னு டபுள் கேம் விளையாடிருக்க இல்ல? சீ... நீ ஒரு சுயநலவாதி டா. உன்னோட ரெண்டு வருஷம் பழகுனதை நினைச்சாலே எனக்கு வெறுப்பாகுது!” என்றாள் சீற்றத்துடன். ஆனாலும் அவள் கண்கள் கலங்கின. இவன் முன்னே அழக் கூடாது என உறுதியாய் நின்றாள்.

“சாரி மதி... நான் உனக்கு செஞ்சது தப்புதான். அந்த தப்புக்குத்தான் இந்த மூனு மாசம் உன்கிட்டே நல்லா வாங்கிட்டேன். நல்லவேளை நீயே இந்த ரிலேஷன்ஷிப் வேணாம்னு சொல்லிட்ட. வெறும் அப்பியரன்ஸ் வச்சு நம்ப ரெண்டு பேருக்கும் செட்டாகும்னு நம்ம டிசைட் பண்ணோம். பட், ரியாலிட்டி வேற. உனக்கும் எனக்கும் சுத்தமா ஒத்து வராது. உன்னோட லைஃப் ஸ்டைல் வேற. என்னோடது வேற!” என்றவனைக் கை நீட்டி தடுத்தவள்,

“ஓஹோ... இதெல்லாம் இனிக்க இனிக்க என் கூட பழகும்போதோ, முத்தம் கொடுக்கும்போதோ தெரியலே. ஹம்ம்?” என அவள் அவனை உறுத்து விழிக்க, பரிதி அமைதியாய் இருந்தான்.

“நான் ஒன்னு சொல்லவா மேன்? நீயெல்லாம் ஒரு பொண்ணோட அன்புல வாழத் தகுதியே இல்லாதவன். ரெண்டு வருஷமா உன்கூட இருந்து உன்னோட டார்ச்சரையெல்லாம் தாங்கிட்டு அந்த வாணி ஏன் உன் கூட இருந்தா தெரியுமா? ஷீ ட்ரூலி லவ்ஸ் யூ. யெஸ், அதே போல நானும் உன்னை உண்மையாதான் டா காதலிச்சேன்‌. ஆனால், நீ... ஹம்ம் என்ன பண்ண? என் மனசை உடைச்சிட்ட. அவளை மட்டும் சும்மாவா விட்ட? உனக்கெல்லாம் இந்த ஜென்மத்துக்கு எவளும் கிடைக்க மாட்டா. நீ பண்ண தப்புக்கு கண்டிப்பா தண்டனை அனுபவிப்ப. யாருமில்லாம நடு ரோட்ல நின்னு அழுவடா. அப்போ தெரியும் என்னோட வலியும் வேதனையும். அவளைவிட பெட்டரா நான் வந்ததும் என் கூட வந்த. இப்போ என்னைவிட பெட்டரா யாரையும் பார்த்துட்டீயோ என்னவோ? மனசு வேதனையோட சொல்றேன். நீ நல்லாவே இருக்க மாட்ட!” என்றவள் தொண்டையை அடைத்த அழுகையை மறைத்து,

“மறந்தும் வாணிகிட்டே போய்டாத. உன்னை செருப்பால அடிச்சு தொரத்திடுவா. அவளை மாதிரி ஒரு கேனச்சியும், என்னை மாதிரி ஒரு இளிச்சவாயும் இனிமே உனக்கு கிடைக்கவே மாட்டாங்க டா. இதை நினைச்சு நினைச்சு காலம் முழுக்க கஷ்டப்படு, அழு. காட் வில் பனிஷ் யூ!” என்றவள், புறங்கையால் கண்ணீரைத் துடைத்தபடியே செல்ல, பரிதி முன்னெற்றியைக் கோதிக் கொண்டான். என்னவோ மதி பேசியது அவனை நிறைய பாதித்தது. அவள் கூறியது அனைத்தும் உண்மை. இரண்டு பெண்களை மனதளவில் நிறைய துன்பப்படுத்திவிட்டான்.
என்ன வாணி இவளைப் போல அல்லாது நன்றாய் இரு என்றுவிட்டு போனாள். இவள் ஆத்திரம் தீரும்வரை திட்டிவிட்டுப் போயிருக்கிறாள். மனத்தை அடைத்த வேதனையோடு வீடு வந்து சேர்ந்தான்.

கட்டிலில் விழுந்தவனுக்கு அழுகை வந்தது. மதியின் அறையில் மைக்கேல் விட்டுச் சென்ற மதுபானத்தை எடுத்துக் குடித்துவிட்டு தூங்கிப் போனான். அந்த வாரம் முழுவதும் ஒருமாதிரி அழுத்தத்திலே சுற்றினான். காலையில் எழுந்ததும் நினைவு வந்தவனாக, மதி அறையிலிருந்த மது போத்தல்களை தூக்கி குப்பையிலிட்டிருந்தான்.
அடுத்த வந்து சில நாட்களும் அவனுக்கு வெகு கனமாகச் சென்றன. எதுவும் வேண்டாமென தூக்கிப் போட்டுவிட்டு ஊருக்குச் சென்று தாயின் மடி சேர வேண்டுமென ஏங்கினான்.

மதி சொல்லியது போல செருப்பால் அடித்து துரத்தினால் கூட வாணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவளோடு புதிதாய் ஒரு வாழ்க்கையை வாழ விரும்பினான். அவளின் தோழமை, காதல், அன்பு என எல்லாமே அவனுக்கு மீண்டும் வேண்டுமென தீராத ஏக்கம் பிறந்தது. வெறும் நிறத்தையும் அழகையும் வைத்து எத்தனை முறை வாணியைக் காயப்படுத்தியிருக்கிறோம் என அவனாலே கணக்கிட முடியாது போனது. அவள் மனத்தை உடைத்து அனுப்பியதற்குத்தான் மனம்விட்டு பேச கூட ஆளின்றி ஒற்றையாய் வீட்டில் பைத்தியம் பிடித்தது போல சுற்றுகிறோம்‌ என தன்னை நினைத்தே அவனுக்கு கழிவிரக்கம் பிறந்தது.

யாரிடமாவது மனத்திலிருப்பதை பகிர வேண்டும் என முடிவு செய்தவன், விக்னேஷிற்கு அழைத்துவிட்டான். “என்ன மச்சான், இன்னும் உயிரோடத்தான் இருக்கீயா? குடிச்சு குடிச்சு குடல் வெந்து செத்துப் போய்ருப்பன்னு நினைச்சேன்!” அவன் நக்கலாக பேச,

“மதியோட ப்ரேக்கப் பண்ணிட்டேன் டா!” என்றான் சின்ன குரலில்.

“என்ன டா... உன் மதி மயக்கம் தெளிஞ்சு போச்சா? இல்ல, மதிக்கும் உனக்கும் பெரிய சண்டையா? அப்படியெல்லாம் சொல்லிடாத டா. நீ இன்னும் அவளோட சேர்ந்து குடிச்சு குடிச்சு கெட்டு சீரழியணும். அதைப் பார்த்து நான் சந்தோஷப்படணும் டா!” அவன் போலியான குரலில் பதறினான்.

“டேய்... டேய்! என்னை செருப்பாலயே அடிச்சாவது புத்தி சொல்லிருக்க வேண்டியதுதானே டா? உன் கூடத்தானே சுத்துனேன். ஏன்டா இப்படி என்னை நீயும் வாணியும் எக்கேடோ கெட்டுப் போன்னு விட்டுடீங்க?” பரிதி ஆதங்கத்துடன் கேட்டான்.

“வெறும் செருப்பால இல்ல டா! செருப்பை சாணில முக்கி அடிச்சா கூட கேட்குற நிலைமைல நீ இல்லடா மச்சான். மதியோட அழகுல மதிமயங்கிப் போய் திரிஞ்ச டா. வெள்ளைத் தோளுதான் உனக்குத் தோள் குடுக்கும்னு நம்புன. பார்த்தீயா செருப்பாலே அடிச்சு தொரத்திருக்கா. சே, அந்தக் கண்கொள்ளா காட்சியை நான் பார்க்க கொடுத்து வைக்கலை!” என ஏளனம் செய்தவன்,

“அப்புறம் என்ன சொன்னா? வாணி... ஹம்ம் அவ அக்கா ஸ்தானத்துலருந்து உனக்குப் புத்தி சொல்லியும் நீதான் காதுல வாங்கலை!” என்றான் அவன் கேலியாக. அக்கா என்ற பதத்தில் இவன் முகத்தைச் சுளித்தான். காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல, வேப்பங்காய் மென்றதை போல உணர்ந்தான்.

“அக்கா... நொக்கா மண்ணாங்கட்டி... அதெல்லாம் எதுக்கு டா நீ சொல்ற?” இவன் கடுப்பாக,

“மச்சான்... கொஞ்சம் கொசுவத்தியை சுருட்டிப் பாரு டா. நீதான் வாணியை அக்கான்னு என்கிட்டே‌ அறிமுகம் செஞ்ச. நீ அவளுக்குத் தம்பினா எனக்கு மச்சான்தானே? உன் ஆளு உன்னைவிட்டுப் போய்ட்டானு சோகத்துல என் பக்கம் வந்துடாத டா. மூனு மாசமா தினமும் பேசி என் ஆள் மனசை மாத்திட்டு இருக்கேன். இன்னும் ஒரு மூனு மாசம், அவளை ஓகே பண்ணி, ரெண்டு வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்ணுவேன் டா. மறக்காம உனக்கும் பத்திரிகை வைப்பேன். அப்போ நீ எங்களை வாழ்த்த வந்தா போதும். தயவு செஞ்சு இப்போ எங்களுக்கிடையில வந்து இர்ரிடேட் பண்ணிடாத!” விக்னேஷ் வெகு தீவிரக் குரலில் கூறவும், பரிதிக்கு அடிவயிற்றிலிருந்து பயபந்து தொண்டையை அடைத்தது.

“சீ... வாயைத் தொறந்தாலே பொய்யா பேசுறதை நிப்பாட்டு‌ டா. வாணியைப் பத்தி‌ எனக்குத் தெரியும். அவளுக்கு என்னைத்தான் பிடிச்சிருக்கு. நீ சொல்ற பொய்யெல்லாம் நம்ப நான் ஒன்னும் குழந்தை இல்ல!” பரிதி வேகமாக கூற, மறுபுறம் விக்னேஷ் பலமாக சிரித்தான்.

“மச்சான்... ரொம்ப சீக்கிரம் உனக்கு அது புரிஞ்சு போச்சு. ஆனால் பாரேன். அதெல்லாம் பாஸ்ட் டென்ஸ்டா. இப்போ வாணிக்கு என்னைத்தான் பிடிக்கும். என்னை மட்டும்தான் பிடிக்கும். எங்க ரெண்டு பேருக்கும் இடையில நீ வந்தா நான் டென்ஷனாகிடுவேன். மதி மாதிரி அரை லூசு வேற யாரும் கிடைச்சா இன்னும் ரெண்டு வருஷம் சுத்தீட்டு திரி. அப்புறம் வீட்ல பார்த்து ஏதாவது அப்பாவி பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அவளோட டூயட் பாடி, புள்ளை குட்டின்னு சந்தோஷமா இரு!” விக்னேஷ் பேசியதைக் கேட்டவனுக்கு அவன் வாயை உடைத்து இரத்தம் வர வைக்குமளவு கோபம் பொங்கிற்று.

“யாரு பொண்டாட்டியை யாரு டா சொந்தம் கொண்டாட்றது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஊரறிய அவளுக்குத் தாலி கட்டிருக்கேன் டா நான்!” பல்லைக் கடித்தான் இவன்.

“அதே நீதான் டா லீகலா டைவர்ஸ் பேப்பர்லயும் சைன் போட்டிருக்க. மூடிக்கிட்டு அவளை டிஸ்டர்ப் பண்ணாம இரு. உன்னை மாதிரி ஒரு கேடுகெட்டவன் அவளுக்கு வேணாம். என்னை மாதிரி குடும்பத்துக்கு செட்டாகுற அடக்க ஒடுக்கமான பையன்தான் அவளுக்கு செட்டாவான். வாணி என்னோட வாழ்ந்தா நிம்மதியா இருப்பா டா. உன்கிட்டே ரெண்டு வருஷம் அந்தப் பொண்ணு கஷ்டப்பட்டது போதும். உன் நிழல் கூட அவ மேல படுறதை நான் விரும்பலை. ஃபோனைக் கட் பண்ணு டா பரதேசி!” என படக்கென விக்னேஷ் அழைப்பைத் துண்டித்திருக்க, பரிதிக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கோபம் உயர்ந்தது.

ஆ... வெனக் கத்தியவன் அலைபேசியைத் தூக்கிப் போட்டான். ‘யாரு பொண்டாட்டியை யாரு டா உரிமை கொண்டாடுறது. என்னோட வாணி டா அவ!’ தயக்கம், பயம், குற்றவுர்வெல்லாம் காத தூரம் சென்று வாணி தனக்கு மட்டுமே சொந்தம் என்ற தீவிர எண்ணம் வலுப்பெற, எப்படியேனும் அவளைத் தன் வாழ்வில் இணைத்திட முடிவு செய்தவன், அடுத்த இரண்டு நாட்களில் பெங்களூர் சென்று இறங்கியிருந்தான். வாணியின் நண்பன் ஒருவனின் இலக்கத்தை தேடியெடுத்து எப்படியோ அவளது முகவரியைப் பெற்றுக்கொண்டவன், அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்று நின்றான்.

“தம்பி... யாரு நீங்க? புதுசா இருக்கீங்க?” காவலாளி விசாரிக்க,

“பி.செவன்ல மூனு மாசத்துக்கு முன்னாடி குடி வந்த இசைவாணியோட ஹஸ்பண்ட் நான். அவளைப் பார்க்க வந்திருக்கேன்!” என்றான் இவன். ஆனால் அவர் இவனை நம்பாமல் பார்த்தார். வாணியிடம் திருமணமான அடையாளங்கள் ஏதுமில்லை. அதுவும் இல்லாமல் அவளது அடையாள அட்டையிலும் அவள் பெயருக்கு முன்னே செல்வி என்றுதான் அச்சிடப்பட்டிருந்தது.

“யோவ்... என்ன நீ என்னை சந்தேகமாவே பார்க்குற? அவளோட புருஷன் நான். எனிடைம் குங்குமம் தாலியோட திரிய முடியுமா? என் பொண்டாட்டி கொஞ்சம் மாடர்ன்!” என்றான் எரிச்சலாக. அவர் எதுவும் பேசவில்லை.

“ஸ்பேர் கீ இருந்தா கொடுங்க. நான் போய் ரெஸ்ட் எடுக்கணும்!” அவன் கையை நீட்ட, அவரது சந்தேகம் உறுதியானது போல.

“தம்பி... அப்படியெல்லாம் சாவியைத் தர முடியாது. உங்களைப் பார்த்தா ஆளே சரியில்லாத மாதிரி தெரியுது‌. வாணி மேடம் வரட்டும். அதுவரைக்கும் நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க!” என அவர் கூறவும், அவரிடம் சண்டையிட்டு குரலை உயர்த்தினான்.

“சரி... உங்கப் பொண்டாட்டின்னு சொல்றீங்க. அவங்களுக்குப் ஃபோன் பண்ணி குடுங்க. நானே பேசுறேன்!” அவர் கேட்டதும், இவன் நெற்றியை சொரிந்தான். இவனது எண்ணை அவள் கருப்பி வைத்திருந்தாளே.

“என் ஃபோன்ல பேலன்ஸ் இல்ல!” அவன் விறைப்பாக கூற, “அப்படியா?” எனக் கேட்டவர், அவரது அலைபேசியிலிருந்து அவளுக்கு அழைத்துவிட்டார்.

“மேடம்... ஒரு பையன் வந்து உங்க ஹஸ்பண்ட்னு சொல்லி ஸ்பேர் கீ வேணும்னு பிரச்சனை பண்றாப்புல!” இவர் நடந்ததை சுருக்கமாக கூற, அவளுக்கு முதலில் பரிதி ஏன் அங்கே வந்தான் எனப் புரியவில்லை.

எதற்காக வந்தாலும் அவனைப் பார்த்துப் பேசப் பிடிக்காதவள், “அண்ணா... அவனை யாருன்னே எனக்குத் தெரியாது. கீ எதுவும் குடுத்துடாதீங்க. நான் வரும்போது அவன் அங்க இருக்க கூடாது. பேசி அனுப்பி வைச்சிடுங்க!” என அவள் கோபத்தோடு கூற, இவரும் சரியென்றார்.

பின்னர் பரிதியை மேலிருந்து கீழாகப் பார்த்தவர், “பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. இப்படி பட்டபகல்ல பொய் சொல்லி ஆளில்லாத வீட்ல திருடப் பார்க்கிறீங்களே, அசிங்கமா இல்ல!” என கேட்கவும், பரிதி கோபத்தில் அவர் சட்டையைப் பிடித்துவிட்டான். உடனே மற்ற காவலாளிகள் வந்துவிட்டனர்.

“எங்க வந்து யார் மேல கை வைக்கிற டா!” என அவர்கள் எகிற, இவன்தான் தகைந்து போக வேண்டியதானது.

“அண்ணே... என் பொண்டாட்டிக்கும் எனக்கும் சண்டை. கோச்சிட்டு வந்து இங்க உக்கார்ந்திருக்கா. அவளை சமாதானம் பண்ணிக் கூட்டீட்டு போகலாம்னு வந்தா இந்த வாட்ச்மேன் என்னை திருடன் ரேஞ்சுக்குப் பேசறாரு!” என்றான் அவன். அந்தக் காவலாளி வாணி தன்னிடம் பேசியதை உரைக்க, பரிதி படக்கென அலைபேசியை எடுத்து தங்களது திருமண புகைப்படத்தைக் காண்பித்தான். அதைப் பார்த்ததும் அவன் சட்டையிலிருந்து அவர்கள் கையை விலக்கினர்.

“புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு எல்லாமா யாருன்னே தெரியாதுன்னு அந்தப் பொண்ணு சொல்லுச்சு!” என அவர்களுக்குள்ளே குசுகுசுத்தவர்கள், பின்னர் பரிதியின் தோளில் கைப்போட்டனர்.

“தம்பி... வாணி மேடம் வர டைமாகும்‌.
நீங்க வந்து ஒரு டீ சாப்பிட்டுட்டே என்ன கதைன்னு சொல்லுங்க!” என அவனை அழைத்துச் சென்றனர் அவர்கள்.

தொடரும்...




 
Active member
Messages
268
Reaction score
197
Points
43
Semma epi sis.. excellent.. Nalaiku morning next epi koduga pls . Need to know vani's reaction.
 
Active member
Messages
271
Reaction score
222
Points
43
Vani ivana ah accept panna kudathu
Very selfish
Ivanoda comfort zone vani nu terinchu varaan no this is not true love
Vani ya hurt dhan pannum 🙏🙏🙏🙏🙏
 
Top