- Messages
- 1,094
- Reaction score
- 3,134
- Points
- 113
இஷ்டம் – 6 
அடுத்த வாரமே ஒரு நல்ல நாளில் தேவராஜூம் கௌதமியும் திருப்பூருக்கு சந்தனவேல் நளினி குடும்பத்தை சந்திக்க சென்றனர். ஏற்கனவே உறவினர்கள் என்பதால் பெரிதாய் எவ்வித அறிமுகப் படலமும் தேவைப்படவில்லை. சைந்தவியை நேரில் பார்த்த கௌதமிக்கு மனம் நிறைந்து போயிருந்தது. அவளுடைய அலட்டல் இல்லாத பேச்சு, பெரியவர்களை மதிக்கும் பாங்கு என பெண்ணின் குணத்தில் எவ்வித குறையும் அவர்களால் கூற இயலவில்லை. தங்களை வசதியை விட பன்மடங்கு அதிகமிருக்கும் அவர்களின் உயரத்தைப் பார்த்த தேவராஜ் பிரம்மித்துப் போயிருந்தார். அமைச்சர் வீட்டு சம்பந்தம் என்றால் சொல்ல வேண்டுமா என்ன என்று என்னுமளவிற்கு அவர்களது செல்வாக்கும் செல்வ செழிப்பும் இருந்தது.
தேவராஜ் எதிலும் நேர்மையை எதிர்பார்க்கும் மனிதர். அரசியல்வாதி வீட்டு சம்பந்தம் வேண்டுமா என அவர் முதலில் யோசித்து மனைவியிடம் வேண்டாம் என்பது போலத்தான் பேசியிருந்தார். ஆனால் இளவேந்தனைப் பற்றி அவர் கேள்விபட்ட அனைத்து விஷயங்களும் அவனுடைய நேர்மையை, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை புடம் போட்டுக் காண்பிக்க, மனதோரம் இருந்த சிறு விருப்பமின்மையும் கரைந்திருந்தது.
தங்கை திருமணத்தை எப்படி செய்ய வேண்டும் என்பனவற்றை இளவேந்தனும் மகிழ்வேந்தனும் முன்னின்று பேச, சிறு பிராயத்தில் தன்னைக் கண்டது போலவே தேவராஜிற்கு தோன்றிற்று. குணத்திலும் பணத்திலும் தங்களைவிட உயர்ந்தவர்களை மறுக்க எந்தக் காரணமும் அந்தப் பெரியவருக்கு புலப்படவில்லை. அதைவிட சைந்தவியை சந்தித்து வந்தப் பின்னே மகனின் முகத்தில் கண்ட மகிழ்ச்சி அவரை சம்மதிக்க வைத்திருந்தது.
தன்னுடைய திருமணம்தான் விருப்பமில்லாமல் நடந்து வேறு வழியின்றி இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மகனின் வாழ்வு நன்றாய் செழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இன்முகமாகவே பெண் வீட்டாரிடம் பேசிவிட்டு வந்தார். பெண் பார்க்கும் நிகழ்வொன்றை தனியாய் வைக்க வேண்டாம், நேரடியாக நிச்சயதார்த்தத்தை நடத்திவிடலாம் என சந்தனவேல் தங்களது எண்ணத்தை முன் வைத்தார். அதைத் தொடர்ந்து ஒரே மாதத்தில் திருமணமும் வைத்துவிடலாம் என இருவீட்டு சார்பாகவும் ஒரு மனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதற்கு முக்கிய காரணம் இன்னும் சில பல மாதங்களில் வரவிருந்த தேர்தல்தான். அதுவும் இன்றி திருமணமே வேண்டாம் என இத்தனை நாட்கள் ஏதேதோ காரணங்களைக் காண்பித்து மறுத்து வந்த சைந்தவி இப்போது ரகுராமைப் பிடித்திருக்கிறது என பச்சைக் கொடியைக் காண்பித்ததில் மொத்த குடும்பமும் மகிழ்ந்து போயினர். இன்றைக்கு அவனும் பெற்றவர்களுடன் வருவதாய்தான் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு சிகிச்சையில் அவன் கட்டாயம் உடனிருக்க வேண்டிய சூழ்நிலையால் வர இயலாமல் போய்விட்டது.
இங்கே வந்ததும் கௌதமி முதல் வேலையாக கையில் வாங்கி வந்த பூவை சைந்தவியின் தலையில் வைத்துவிட்டு அவளிடம் கூறுவது போல அனைவரிடமும் மகனின் இன்மைக்கான காரணத்தை சங்கடத்துடன் உரைக்க, “பரவாயில்லை ஆன்ட்டி, ஒரு டாக்டரா அவரோட சிட்சுவேஷன் எனக்குப் புரியுது!” என்றவளின் இயல்பான அணுகுமுறையில்தான் பெரியவர் விழுந்து போனார். அவள் முகத்தைச் சுளித்திருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் நோகும்படி பேசியிருந்தாலோ இவருக்கு அவள் மீதான பிம்பம் மாறியிருக்க கூடும். ஆனால் மகனின் சூழ்நிலையை புரிந்து கொண்ட இந்தப் பெண் கண்டிப்பாய் அவனை அனுசரித்து வாழ்வாள் என பெற்றவராய் அவருக்கு மனம் நிறைந்து போயிருந்தது. இவர்கள் விடைபெற்று வீட்டிற்கு வந்திருந்தனர்.
“பொண்ணு ரொம்ப தங்கமா இருக்கால்லங்க. பணக்கார வீட்டுப் பொண்ணுன்னு ரொம்ப அலட்டல் இல்ல, பெரியவங்களை மதிச்சுப் பேசுனா. பார்க்க அழகா இருக்கா. ராம்க்குப் பொருத்தமா இருப்பால்லங்க?” என வரும் வழியிலே கௌதமி கணவரிடம் பெருமை மிகுந்து உரைக்க, வாய் வார்த்தையாக உரைக்காவிடினும் அவரும் அதை உணர்ந்திருந்தபடியால் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டார்.
மகன் மருத்துவமனையிலிருந்து வந்திருந்தான். “என்னம்மா... எல்லாம் ஓகேவா?” என அவன் கேட்டுக் கொண்டே தொலைக்காட்சியின் முன்னே அமர்ந்தான்.
“எல்லாம் நல்லபடியாக பேசி முடிச்சிட்டோம் டா. இன்னும் ரெண்டு வாரத்துல நிச்சயம் வச்சுக்கலாம், அடுத்த மாசத்துல கல்யாணமும் வச்சுக்கலாம்னு முடிவெடித்துருக்கோம் ராம். உனக்கு ஓகேதானே டா? ஹாஸ்பிடல்ல லீவ் தருவாங்க தானே? உன்னை கேட்காம நாங்களே பேசிட்டு வந்துட்டோம் டா!” இத்தனை நேரம் இறக்கையற்று பறந்து கொண்டிருந்த கௌதமி இப்போதுதான் தரையிறங்கிருக்க, நிதர்சனம் உறைத்தது.
அவரைப் பார்த்த ரகுராம் தாயை வம்பிழுக்கும் நோக்கில், “ம்மா... இன்னும் ஒரு மாசத்துக்கு லீவே கிடையாது மா. டைட் ஷெட்யூல் எனக்கு. யாரைக் கேட்டு நீங்களா முடிவெடுத்தீங்க. மாப்பிள்ளை இல்லாம நீங்க மட்டும் எங்கேஜ்மெண்டை நடத்துங்க!” என அவன் பேசவும், கௌதமி முகத்தில் பயரேகைகள் படர்ந்தது.
“டேய்...ராம், என்ன டா சொல்ற? உங்கப்பா கூட கொஞ்சம் யோசிச்சாரு. நான்தான் என் மகனுக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. அதனால் சீக்கிரம் கல்யாணம் வைக்கிறதுல பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டேன். இப்போ நீ பேசுறதைப் பார்த்தா உங்கப்பா என்னைத் திட்டி தீர்த்துடுவாரு டா. ஹாஸ்பிடல்ல எப்படியாவது லீவை கேட்டு வாங்கிடுடா மகனே!” என கணவர் அறையை எட்டிப் பார்த்துப் பயத்துடன் கௌதமி கூற, இவன் சிரித்துவிட்டான்.
“டேய் படவா... எது எதுல விளையாட்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா டா? உங்கப்பா கேட்டிருந்தா அவ்வளோதான்!” என மகன் தலையில் செல்லமாய்க் கொட்டியவரைப் பார்த்து சிரித்தான் இவன்.
“ராம்... சைந்தவி பொண்ணுகிட்டே பேசுனீயா? இல்லையா? நீ எங்களோட வருவன்னு எதிர்பார்த்திருக்க போறா டா. போன் பண்ணி சமாதானம் பண்ணு டா!” என அவர் கூறி நகர, ரகுராமுமே அவளிடம் பேச வேண்டும் நினைத்திருந்தவன் சைந்தவி இலக்கத்திற்கு அழைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான். கடந்து சென்ற ஒரு வாரத்தில் புலனத்தில் குறுஞ்செய்திகள் பரிமாறினாலும் அழைப்புகள் ஏதுமில்லை. ஒரு நொடி தயங்கியவன் பின்னே அழைத்துவிட்டான்.
சைந்தவி அப்போதுதான் உண்டுவிட்டு அறைக்குள் நுழைந்திருந்தாள். அவனது எண்ணைப் பார்த்ததும் உதடுகளில் புன்னகை பூக்க, “சொல்லுங்க மிஸ்டர் ரகுராம்!” என சின்ன சிரிப்புடன் அழைப்பை ஏற்றாள்.
“ஹம்ம்... சாரி சைந்து, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? இன்னைக்கு என்னால அங்க வர முடியலை. ஒரு எமர்ஜென்சி கேஸ், அதான்!” என இவன் மன்னிப்பைக் கேட்க,
“ச்சு... அதான் ஆன்ட்டி சொல்லிட்டாங்களே ரகு. நமக்குள்ள இந்த பார்மாலிட்டீஸ் எதுவும் வேணாம்...” என்றவள் வேறு பேச்சிற்கு தாவ பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டே அழைப்பைத் துண்டித்தனர். ரகுவிற்கு சைந்துவிடம் ஒரு நல்ல தோழமை உணர்வு உருவாகியிருந்தது. அழகான பெண் என்ற வகையில் ஈர்ப்பிருந்தாலும், சட்டென அவளிடம் உரிமை கொண்டாடவில்லை இவன். பொறுமையாய் நட்பென்ற படியிலிருந்து திருமணம் முடிந்ததும் நேசப்படியைத் தொடலாம் என்பது அவனது சித்தாந்தம். இந்த சிறிய இடைவெளியை பிடித்தங்களையும், எண்ணங்களையும் பகிர்ந்து, ஒருவரையொருவர் புரிந்து கொள்ள பயன்படுத்திக் கொண்டனர்.
அன்னிச்சையாய் அவனது விரல்கள் காயூவின் இலக்கத்திற்கு அழைப்பை விடுத்தன. இரண்டு முறை அழைப்பு சென்று துண்டாக, மூன்றாவது முறை ஏற்றிருந்தாள்.
“சொல்லு டா, என்ன பண்ற?” என வினவிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.
“ஆப்டர்நூன் ட்யூட்டியா?”
“ஆமா ராம், இப்போதான் வீட்டுக்கு வந்தேன்!”
“ஹம்ம்... இன்னைக்கு அம்மா சைந்து வீட்டுக்குப் போய்ருந்தாங்கடி!” என்றவன் பேச்சு இயல்பாக சைந்தவியின் பெயரை சுருக்கியிருந்தது.
“ஓ... என்ன எல்லாம் ஓகேவா ராம்? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க. அம்மா, அப்பாக்கு சைந்துவைப் பிடிச்சிருச்சா? அவங்க ரொம்ப பெரிய இடம் போல?” என வெகு சாதாரணமாக விசாரித்தபடியே அலைபேசியை ஒலிப் பெருக்கியில் வைத்து உடைமாற்றினாள் இவள்.
“ஆமா டி... எல்லாம் ஓகேதான்!” என்றவன் நடந்ததை அப்படியே ஒப்பித்தான்.
“சூப்பர் ராம், ரொம்ப டிலே பண்ணாம மேரேஜ் வைக்கிறது கூட பெஸ்ட்தான் டா. எல்லாம் நல்லபடியா நடந்தா சந்தோஷம்!” என்றவள் குரலில் அவன் மீதான அன்பே பிரதானமாய் இருந்தது.
“அதெல்லாம் நல்லா நடக்கும் காயூ. இந்த மாதிரி நீயும் ஒருநாள் உனக்கு மேரேஜ்னு சொல்லி, என்னைக்கு நான் சந்தோஷப்பட?” என அவன் சலிப்பாய்க் கேட்க, இவளது வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது.
“அதானே... இதுக்கும் மட்டும் பதில் சொல்லிடாத டி” என அவளை அதட்டியவன், “நெக்ஸ்ட் ப்ரைடே வீக் ஆஃப் வர்ற மாதிரி பார்த்துக்கோ காயூ. காஞ்சிபுரம் போய் அன்னைக்கு எங்கேஜ்மெண்ட் அண்ட் மூகூர்த்த சேலை எடுக்கப் போற ப்ளான்னு சைந்து சொன்னா. அம்மா கூட ஓகேன்னுட்டாங்க. அப்பா வர மாட்டார். அத்தைங்க எல்லாம் வந்துடுவாங்க.
நம்ப எல்லாரும் போய்ட்டு வரலாம்!” என அவன் அழைக்க, காயத்ரி மௌனமாய் இருந்தாள்.
“ராம்... நீங்க ஃபேமிலியா போறீங்க. சேரி எடுக்குறதுக்கு நான் எதுக்கு டா, நான் வர்றது நல்லா இருக்காது. நீங்க போய்ட்டு வாங்க!” என அவள் பேசி முடிக்கும் முன்பே, “உன்னை வர்றீயா? வரலையான்னு கேக்க ஃபோன் பண்ணலை. நீ வர்ற அவ்வளோதான். நான் முக்கியம்னு தோணுச்சுன்னா வா, இல்லைன்னா வராதே!” என அவன் கோபத்துடன் அழைப்பைத் துண்டிக்க, இவள் அலைபேசியை சில நொடிகள் வெறித்திருந்தாள். இந்த ஒரு வாரத்தில் ஒருவாறாக மனதைத் தேற்றியிருந்தாள். தனது கட்டுப்பாட்டை மீறி நடக்கும் எந்த செயலுக்கும் தான் பொறுப்பேற்க முடியாது என மூளைக்குப் புரிந்தது.
இப்படி அழுது கொண்டிருந்தால் மட்டும் எதுவும் மாறிவிடப் போகிறதா என்ன? அவள் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை. எது வந்தாலும் புன்னகையுடன் கடக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை தைரியம் மீண்டிருந்தது. அதுவும் இல்லாது இவளது சிறிய முகச்சுணக்கம் கூட ரகுராமை பாதிக்கும் என பெண்ணுக்கு நன்றாய் புரிந்தே இருந்தது. அப்படி இருக்கையில் அவனுடைய திருமணத்திற்கு எந்தவிதத்திலும் தான் தடையாய் இருக்க கூடாதென்ற எண்ணம் வலுப்பெற, நடப்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பகுவத்திற்கு வந்திருந்தாள்.
அந்த வார வெள்ளிக்கிழமை அதிகாலையிலே ரகுராமும் கௌதமியும் காஞ்சிபுரத்திற்கு கிளம்பினர். தேவராஜின் மூன்று அக்கா குடும்பமும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என சென்னையை சுற்றித்தான் வசிக்கின்றனர். அதனால் அவர்கள் அங்கிருந்து வந்துவிடுவதாக கூறிவிட, இவர்கள் இருவரும் நேரே சென்று காய்தரியை ஏற்றிக்கொண்டு கிளம்பினர்.
காயத்ரி அன்றைக்கு சேலை உடுத்தவில்லை. ஜீன்ஸ் வகையிலான கால்சராயும் இடுப்பைத் தொடும் ஷார்ட் டாப்பும் அணிந்திருந்தவள் கழுத்தை சுற்றி பல வண்ணங்களால் ஆன ஸ்டோலை சுற்றியிருந்தாள். தலைக்கு எண்ணெய் வைத்து வாராமல் விரித்துவிட்டு சிறிய க்ளிப்பில் அடக்கியிருந்தாள். அன்றைக்குப் பார்த்ததைவிட முகம் தெளிவாய் இருந்தது. ஆனாலும் சற்றே உற்றுப் பார்த்தால் கண்களில் ஜீவன் குறைந்திருந்ததை அறிந்திருக்க முடியும். ஆனால் அவளை முறைத்துக் கொண்டிருந்த ரகுவிற்கு அதெல்லாம் கண்ணிற்குத் தெரியவில்லை.
கௌதமியோடு பின்னிருக்கையில் ஏறியமர்ந்தவளின் கைகளைப் பிடித்துக் கொண்டார் பெண்மணி. “எப்படிம்மா இருக்க காயத்ரி? இந்த அம்மா ரெண்டு தெரு தள்ளிதான் இருக்கேன்றது மறந்து போச்சுல்ல உனக்கு. கடைசியா போன வருஷம் அவன் பிறந்த நாளுக்கு வீட்டுக்கு வந்து தலைகாட்டுன. அதுக்கப்பறம் வரவே இல்லை?” என அவர் அன்பாய்க் குறைபடித்தார்.
“வரக்கூடாதுன்னு இல்லைமா. வேலையே சரியா இருக்கு? ராம்க்கு கல்யாணமாகிடுச்சுன்னா அப்புறம் நீங்க ஃப்ரியா எல்லாம் இருக்க முடியாதே! மாமியார் மருமக சண்டை போடுவீங்க. அதை வேடிக்கைப் பார்க்கவாது அடிக்கடி வர்றேன்!” என இவள் விளையாட்டாய்க் கூறினாள்.
“தலையை காய வைக்காம இப்படி வந்திருக்க? ஈரம் கோர்த்து தலை வலிக்க போகுது மா!” என அவள் முடியை முன்புறம் நகர்த்தி இழுபட்டையை தளர்த்தினார் பெரியவர்.
“அதெல்லாம் ஒன்னும் பண்ணாது மா. அப்படியே பழகிடுச்சு. தலை வலிச்சா உங்க வீட்டு டாக்டர் பையன் கிட்டே மாத்திரை வாங்கிப் போட்டுக்க வேண்டியதுதான்!” என்றவள், “என்ன ராம்?” என அவனையும் பேச்சில் இழுத்தாள். அவளை முறைத்தான் ஆடவன்.
“என்னவாம்மா உங்கப் பையனுக்கு. மூஞ்சியை இப்படி தூக்கி வச்சு முறைச்சுட்டே இருக்கான்?” என இவள் கௌதமியைக் கேட்க, “அவன் கிடக்குறான் மா... நீ சாப்டியா? காலைல எழுந்து அறக்கபறக்க கிளம்புனதுனால சாப்டாம வந்திருப்ப, இந்தா பனியாரம் சாப்பிடு!” என ஒரு கிண்ணத்தை அவள் முன்னே நீட்டியவரை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் புன்னகை அரும்பிற்று. இப்போது மட்டும் அல்ல எப்போது சந்திக்க நேர்ந்தாலும் காய்தரியின் வயிறை வாடவிடாது பார்த்துக் கொள்வார் கௌதமி. அதனாலே ஆன்ட்டி என்ற விளிப்பை எல்லாம் விடுத்து அம்மா என்றழைக்கப் பழகியிருந்தாள். ஆனால் தேவராஜ் எப்போதும் அங்கிள்தான். பேசும்போது அப்பா என்று விளித்தாலும் நேரில் அவரை அங்கிள் என்ற வார்த்தைக்குள்ளே அடக்கிவிடுவாள்.
“ரொம்ப நல்லா இருக்குமா. உங்க கையால சாப்ட்டு எவ்வளோ நாளாச்சு?” என்றவள் ஆசையாய் உண்டாள்.
“நீங்க சாப்டீங்களா மா?” எனக் கேட்டுக் கொண்டே பனியாரத்தை முன்னோக்கி ரகுவின் வாயிலும் திணித்தாள். முறைத்துக் கொண்டேயினும் அவன் உண்டான்.
“நான் காலைல ரெண்டு பனியாரம் சாப்ட்டுத்தான்மா வரேன். என்னமோ உன்னைப் பார்த்து நாளாச்சே. புள்ளைக்கு எதுவும் செஞ்சு எடுத்துட்டுப் போகணும்னு தோணுச்சு. அவசரத்துக்கு இட்லி மாவுல நாட்டுச் சர்க்கரையைப் போட்டு பனியாரத்தை சுட்டுட்டேன்!” என்றவரை இவள் வாஞ்சை மிகப் பார்த்திருந்தாள். மனதில் உள்ளதை எவ்வித பாசாங்கும் இன்றி கூறுவதுதான் கௌதமியின் இயல்பே. சற்றே வெள்ளந்தியான மனுஷி, அதனாலே இவளுக்கு அவரை சற்றுக் கூடுதலாக பிடிக்கும்.
பெண்கள் இருவரும் பேசிக்கொண்டே வர நேரம் போனதே தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் காயத்ரி, பேசி சிரிக்கவும் கண்ணாடி வழியே அவளது முகத்தையே பார்த்திருந்தான் ரகுராம். ஒருவேளை அவள் தன்னுடைய அண்மை இல்லாது போய்விடும் என்றெண்ணித்தான் அன்று கண்ணீர் வடித்தாளோ என்று எண்ணம் வலுப்பெற்றது. இத்தனை நாட்கள் உடனிருந்துவிட்டு சட்டென தான் திருமணம் செய்யப் போவதினால் அவளுக்கு தோன்றிய உணர்வு தவறாய் தெரியவில்லை. அவளது கலகலப்பான பேச்சும் சிரிப்பும் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதை பறை சாற்ற, நெஞ்சு முழுவதும் படர்ந்த நிம்மதியுடன் அந்த பிரபல துணிக்கடையின் முன்னே மகிழுந்தை நிறுத்தினான்.
திருமணத்திற்கு பட்டு கண்டிப்பாக காஞ்சிபுரத்தில்தான் எடுக்க வேண்டுமா என்ன என்ற கேள்வி பயணக் களைப்பில் தானாக முளைத்திருந்த போதும், எதையும் கேட்டுக் கொள்ளவில்லை ஆடவன். இவர்கள் உள்ளே செல்ல, ஏற்கனவே ஒரு கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது.
தேவராஜின் மூன்று அக்காக்கள் அவரது பிள்ளைகள், பேரன் பிள்ளைகள் என அனைவரும் குழுமியிருக்க, “ம்மா... பார்த்துமா, மொத்த குடும்பமும் ஒன்னு கூடியிருக்கு!” என ரகு முணுமுணுத்தான். கௌதமிக்கும் மூன்று நாத்தனார்களை நீண்ட நாட்கள் கழித்துப் பார்த்ததில் சந்தோஷமொல்லாம் வரவில்லை. இவர்கள் எந்தப் பிரச்சனையும் செய்துவிடக் கூடாது என்ற பயம்தான் தொற்றியது. கணவன் உடன் வந்திருந்தால் கூட இவர்களின் நடவடிக்கை கொஞ்சம் நல்லவிதமாக இருந்திருக்கலாம். இப்போது என்ன செய்வார்களோ என்ற பதற்றத்தில் புன்னகைத்துக் கொண்டே அவர்களிடம் விரைந்தார்.
தேவராஜின் மூத்த அக்காவிற்கு இரண்டு பெண்கள்,
இருவருக்குமே திருமணம் முடிந்திருந்தது. இரண்டாவது அக்காவிற்கு ஆண் பிள்ளை ஒன்றும் பெண் பிள்ளை ஒன்றும் உண்டு. பெண்ணிற்கு திருமணம் முடித்திருக்க, இளையவனுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார். இளைய பெண்ணிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இருவரும் படித்து முடித்துவிட்டு நல்ல பணியில் உள்ளனர். மூத்தவன் ரகுவைப் போலவே மருத்துவம் படித்திருக்க, இரண்டாமவன் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். இரண்டாவது பெண்மணியின் மகன் வழக்கறிஞராக இருக்கிறான்.
காயத்ரியும் ரகுவும் அவர் பின்னே சென்றனர். அனைவரது பார்வையும் இவளிடம் தான் இருந்தது. சற்றே அசௌகரியமாய் இருந்தாலும் அனைவரையும் பார்த்து பொதுவாய் புன்னகைத்து வைத்தாள்.
“வாங்க அண்ணி... எப்போ வந்தீங்க? கொஞ்சம் லேட்டாகிடுச்சு!” என கௌதமி அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, பெண்கள் பதிலளித்தனர். மூத்த பெண்கள் இருவரும் தேவராஜைப் போல கறார். ஆனால் மூன்றாவது பெண் சற்றே சாந்தமானவர். அவர்தான் கௌதமியின் கையைப் பிடித்துக்கொண்டு பேசினார். காயத்ரி எங்கே அமருவது எனத் தெரியாது தடுமாறி கௌதமிக்கு அருகேயிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததைப் பார்த்த ரகுராம், அத்தை மகன்களுடன் பேச சென்றுவிட்டான்.
“ஆமா... கௌதமி, இந்தப் பொண்ணு யாரு? உன் சொந்தமா என்ன?” என வேண்டுமென்றே மூத்தவர் கேட்க, “அண்ணி, இவ காயத்ரி. உங்களுக்கு ஞாபகம் இல்லையா? ரகுவோட ஸ்கூல்ல படிச்ச பொண்ணு. நம்ப வீட்டுப் பொண்ணு மாதிரிதான் அண்ணி!” என்றார் காயத்ரியைப் பார்த்துப் புன்னகைத்து. அவருக்கு நாத்தனாரின் பேச்சு புரியவில்லை என்றாலும் இவளுக்கு நன்றாய் புரிந்திருந்தது. வேண்டுமென்றே உறவனர் அல்லாத பெண்ணை எதற்கு தேவையில்லாமல் இங்கே அழைத்து வந்திருக்கிறாய் என அவரது பேச்சின் உட்பொருள் இவளுக்குப் புரிந்ததும் முகம் மாறாதிருக்க வெகு சிரமப்பட்டாள். அவளுக்குப் பதில் கூற இரண்டு நொடிகள் போதாது. ஆனாலும் ரகுராமிற்காகப் பொறுமை காத்தாள்.
“அப்படியா... சரி, சரி. நான் கூட ஏதோ சொந்தமோன்னு நினைச்சேன். அங்க இருந்து இவ்வளோ தூரம் பொம்பளைப் புள்ளையை எப்படி ஒரு பையனோட அனுப்புறாங்க. வீட்ல அம்மா, அப்பா இப்படி விட்ருக்காங்களே. நாங்களாம் பொம்பளை புள்ளைங்களை பக்கத்து ஊருக்கு கூட அனுப்ப மாட்டோம்!” இரண்டாவது நாத்தனார் அங்கலாய்த்தவர், “தப்பா எடுத்துக்காதம்மா. இந்த மாதிரி பொம்பளை புள்ளைங்க சகவாசம் எல்லாம் எனக்குப் புடிக்காது. எங்க வீட்ல யாரும் வீடு வரை கூடப் படிச்ச புள்ளைகளை கூட்டீட்டு வர மாட்டாங்க!” என சிரித்துக் கொண்டே வாழைப்பழத்தில் ஊசியை சொருகியவரை அமைதியாய்ப் பார்த்தவள், “அப்போ உங்களுக்கு எல்லாம் பெத்த புள்ளைங்க மேல அவ்ளோ நம்பிக்கையா ஆன்ட்டி?” என இவளும் கேட்டுவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்று சற்றே தொலைவில் அமர்ந்தாள். இவளது பதிலில் அவரது முகம் கடுகடுத்தது.
“எல்லாம் உன்னை சொல்லணும் கௌதமி. ஒத்தப் புள்ளையை எப்படி வளர்த்திருக்க நீ? பொட்டை புள்ளையோட சிநேகிதம் எல்லாம் நம்ப குடும்பத்துக்கு ஆகுமா? இவளைக் கூட்டீட்டு வந்ததைப் பார்த்தா பொண்ணு வீட்டுக்காரங்க என்ன நினைப்பாங்க. அவ போட்டிருக்க ட்ரெஸைப் பாரு. நம்ப வீட்டு பொம்பளை புள்ளைங்க சேலைக்கட்டி எவ்வளோ நாசூக்கா இருக்காங்க. குடும்பமா வந்திருக்கோம் நம்ப. இவளை எதுக்கு உம்மவன் கூட்டீட்டு வந்தான். சரியான வாய், அடங்காதவளா இருக்கா!” என அவர் அங்கலாய்க்க, கௌதமி காயத்ரியை சங்கடமாய்ப் பார்த்தார். அவளுடைய செவியும் அவரது பேச்சை உள்வாங்கத்தான் செய்தன.
கௌதமியின் தவிப்பான முகத்தைப் பார்த்த காயத்ரி மென்முறுவல் ஒன்றை சிந்தியவள், ஒன்றுமில்லை என்பதைப் போல தலையை அசைத்தாள்.
“ஃப்ரெண்டுனா கல்யாணத்துக்கு வந்து வாழ்த்திட்டு சாப்ட்டோமா, கிளம்புனோமான்னு இருக்கணும். இப்படியா எந்நேரமும் தொத்திட்டே இருக்கது. குடும்பமா வர்ற உன் மகனும் இங்கிதம் இல்லாம கண்டவளையும் ப்ரெண்டுன்னு கூட்டீட்டு வந்திருக்கான். இந்த காலத்து புள்ளைங்க நம்ப என்ன சொன்னாலும் காதுல வாங்குறது இல்ல?” என இரண்டாமவர் நொடிக்க, காயத்ரிக்கு தொண்டையைத் தாண்டி உதடுவரை வார்த்தைகள் வந்துவிட்டன.
தன்னையே பாவமாய் நோக்கும் கௌதமிக்காக வார்த்தையை இழுத்துப் பிடித்தவள், “ஆன்ட்டி... நான் க்ரவுண்ட் ப்ளோர்ல போய் கொஞ்சம் பர்சேஸ் பண்ணிட்டு வரேன்!” என விறுவிறுவென நடந்துவிட்டாள். ஏனோ கோபத்தோடு விழிகளும் கலங்கப் பார்த்தன. காயத்ரிக்கு ரகுராமின் அத்தைகளைப் பற்றி முன்பே தெரியும். அதனால்தானே வர மாட்டேன் என மறுத்தாள். இவன் கட்டாயத்தின் பேரில் வந்துவிட்டவளுக்கு எரிச்சல் படர்ந்தது. அமைதியாய் கீழ் தளத்திற்குச் சென்றாள். குழந்தைகள் உடையும் பொம்மையும் விற்கும் பகுதியாதலால் சிறுவர்கள் கூட்டம் காணப்பட்டது. கொஞ்சம் மனதை சமன்படுத்திக்கொண்டு அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
“டேய் மச்சான், உன் கூட வந்துச்சே அந்தப் பொண்ணு யாரு டா? எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே!” மூன்றாவது பெண்மணியின் மூத்த மகன் யுக்தேஷ் நடந்து சென்ற காய்தரியின் புறமிருந்த பார்வையை அகற்றாது கேட்டான்.
“ஆமா ரகு... யார் அந்த ஃபிகர், செம்மையா இருக்காளே!” என்ற இளையவன் அவ்தேஷின் தலையை ரகுவின் கை பலமாய் தட்டியது.
“பிச்சிடுவேன் டா...அது காயூதான். உங்களுக்கு அடையாளம் தெரியலையா?” என இவன் கேட்க, “ஏதே... எப்போ பார்த்தாலும் அழுதுட்டே எண்ணெய் வழிய ரெட்டை ஜடையோட உன்னோட சுத்துமே, அந்த காயத்ரியாடா இது?” என அவன் அதிர்ந்து கேட்டான். ரகு ஆமோதிப்பாய்த் தலையை அசைத்தான்.
“நம்பவே முடியலை டா. ஆள் பார்க்க அழகா மாறிட்டா போல. ஆமா, சிங்கிளா? கமிட்டெடா? நானும் ஒரு அப்ளிகேஷனைப் போட்டு வைக்கிறேன்!” என சிறியவன் கூற, “நீ நினைக்கிற மாதிரி ஆள் இல்லைடா அவ. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடுவா. அதுவும் இல்லாம அவ உனக்கு அக்கா. மூனு வயசு மூத்தவ!” என இவன் கூறியதும், சிறியவன் முகம் வாடியது.
“ஆனா எனக்கு அக்கா இல்லைல அவ?” என யுக்தேஷ் வெகு கவனமாய் வினவ, அவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தான் ரகு. சின்னவன் அவ்தேஷ் கூட கொஞ்சம் குறும்பானவன். பெண்கள் நட்பு அதிகம். ஆனால் யுக்தேஷ் யாரைப் பற்றியும் இப்படியெல்லாம் விசாரித்தது இல்லையே.
“டேய்... நோ, அவ கிட்டே வச்சுக்காதீங்க டா. சாஃப்ட் ஹேண்டில் இல்ல அவ. மேன்ஹேண்டில் பண்ணாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல!” என ரகு கூறியதைக் காதில் வாங்காத யுக்தேஷ் கீழ்தளம் நோக்கி செல்ல, “அடிவாங்கிட்டு வரப் போறான் உங்கண்ணன்!” என அவ்தேஷிடம் முணுமுணுத்தான் இவன். இது எதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல கௌரேஷ் இவர்களைக் கண்டு கொள்ளது கடை ஊழியப் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தான். ரகு அவனை முறைத்து வைத்தான்.
தொடரும்...

அடுத்த வாரமே ஒரு நல்ல நாளில் தேவராஜூம் கௌதமியும் திருப்பூருக்கு சந்தனவேல் நளினி குடும்பத்தை சந்திக்க சென்றனர். ஏற்கனவே உறவினர்கள் என்பதால் பெரிதாய் எவ்வித அறிமுகப் படலமும் தேவைப்படவில்லை. சைந்தவியை நேரில் பார்த்த கௌதமிக்கு மனம் நிறைந்து போயிருந்தது. அவளுடைய அலட்டல் இல்லாத பேச்சு, பெரியவர்களை மதிக்கும் பாங்கு என பெண்ணின் குணத்தில் எவ்வித குறையும் அவர்களால் கூற இயலவில்லை. தங்களை வசதியை விட பன்மடங்கு அதிகமிருக்கும் அவர்களின் உயரத்தைப் பார்த்த தேவராஜ் பிரம்மித்துப் போயிருந்தார். அமைச்சர் வீட்டு சம்பந்தம் என்றால் சொல்ல வேண்டுமா என்ன என்று என்னுமளவிற்கு அவர்களது செல்வாக்கும் செல்வ செழிப்பும் இருந்தது.
தேவராஜ் எதிலும் நேர்மையை எதிர்பார்க்கும் மனிதர். அரசியல்வாதி வீட்டு சம்பந்தம் வேண்டுமா என அவர் முதலில் யோசித்து மனைவியிடம் வேண்டாம் என்பது போலத்தான் பேசியிருந்தார். ஆனால் இளவேந்தனைப் பற்றி அவர் கேள்விபட்ட அனைத்து விஷயங்களும் அவனுடைய நேர்மையை, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை புடம் போட்டுக் காண்பிக்க, மனதோரம் இருந்த சிறு விருப்பமின்மையும் கரைந்திருந்தது.
தங்கை திருமணத்தை எப்படி செய்ய வேண்டும் என்பனவற்றை இளவேந்தனும் மகிழ்வேந்தனும் முன்னின்று பேச, சிறு பிராயத்தில் தன்னைக் கண்டது போலவே தேவராஜிற்கு தோன்றிற்று. குணத்திலும் பணத்திலும் தங்களைவிட உயர்ந்தவர்களை மறுக்க எந்தக் காரணமும் அந்தப் பெரியவருக்கு புலப்படவில்லை. அதைவிட சைந்தவியை சந்தித்து வந்தப் பின்னே மகனின் முகத்தில் கண்ட மகிழ்ச்சி அவரை சம்மதிக்க வைத்திருந்தது.
தன்னுடைய திருமணம்தான் விருப்பமில்லாமல் நடந்து வேறு வழியின்றி இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மகனின் வாழ்வு நன்றாய் செழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இன்முகமாகவே பெண் வீட்டாரிடம் பேசிவிட்டு வந்தார். பெண் பார்க்கும் நிகழ்வொன்றை தனியாய் வைக்க வேண்டாம், நேரடியாக நிச்சயதார்த்தத்தை நடத்திவிடலாம் என சந்தனவேல் தங்களது எண்ணத்தை முன் வைத்தார். அதைத் தொடர்ந்து ஒரே மாதத்தில் திருமணமும் வைத்துவிடலாம் என இருவீட்டு சார்பாகவும் ஒரு மனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதற்கு முக்கிய காரணம் இன்னும் சில பல மாதங்களில் வரவிருந்த தேர்தல்தான். அதுவும் இன்றி திருமணமே வேண்டாம் என இத்தனை நாட்கள் ஏதேதோ காரணங்களைக் காண்பித்து மறுத்து வந்த சைந்தவி இப்போது ரகுராமைப் பிடித்திருக்கிறது என பச்சைக் கொடியைக் காண்பித்ததில் மொத்த குடும்பமும் மகிழ்ந்து போயினர். இன்றைக்கு அவனும் பெற்றவர்களுடன் வருவதாய்தான் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு சிகிச்சையில் அவன் கட்டாயம் உடனிருக்க வேண்டிய சூழ்நிலையால் வர இயலாமல் போய்விட்டது.
இங்கே வந்ததும் கௌதமி முதல் வேலையாக கையில் வாங்கி வந்த பூவை சைந்தவியின் தலையில் வைத்துவிட்டு அவளிடம் கூறுவது போல அனைவரிடமும் மகனின் இன்மைக்கான காரணத்தை சங்கடத்துடன் உரைக்க, “பரவாயில்லை ஆன்ட்டி, ஒரு டாக்டரா அவரோட சிட்சுவேஷன் எனக்குப் புரியுது!” என்றவளின் இயல்பான அணுகுமுறையில்தான் பெரியவர் விழுந்து போனார். அவள் முகத்தைச் சுளித்திருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் நோகும்படி பேசியிருந்தாலோ இவருக்கு அவள் மீதான பிம்பம் மாறியிருக்க கூடும். ஆனால் மகனின் சூழ்நிலையை புரிந்து கொண்ட இந்தப் பெண் கண்டிப்பாய் அவனை அனுசரித்து வாழ்வாள் என பெற்றவராய் அவருக்கு மனம் நிறைந்து போயிருந்தது. இவர்கள் விடைபெற்று வீட்டிற்கு வந்திருந்தனர்.
“பொண்ணு ரொம்ப தங்கமா இருக்கால்லங்க. பணக்கார வீட்டுப் பொண்ணுன்னு ரொம்ப அலட்டல் இல்ல, பெரியவங்களை மதிச்சுப் பேசுனா. பார்க்க அழகா இருக்கா. ராம்க்குப் பொருத்தமா இருப்பால்லங்க?” என வரும் வழியிலே கௌதமி கணவரிடம் பெருமை மிகுந்து உரைக்க, வாய் வார்த்தையாக உரைக்காவிடினும் அவரும் அதை உணர்ந்திருந்தபடியால் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டார்.
மகன் மருத்துவமனையிலிருந்து வந்திருந்தான். “என்னம்மா... எல்லாம் ஓகேவா?” என அவன் கேட்டுக் கொண்டே தொலைக்காட்சியின் முன்னே அமர்ந்தான்.
“எல்லாம் நல்லபடியாக பேசி முடிச்சிட்டோம் டா. இன்னும் ரெண்டு வாரத்துல நிச்சயம் வச்சுக்கலாம், அடுத்த மாசத்துல கல்யாணமும் வச்சுக்கலாம்னு முடிவெடித்துருக்கோம் ராம். உனக்கு ஓகேதானே டா? ஹாஸ்பிடல்ல லீவ் தருவாங்க தானே? உன்னை கேட்காம நாங்களே பேசிட்டு வந்துட்டோம் டா!” இத்தனை நேரம் இறக்கையற்று பறந்து கொண்டிருந்த கௌதமி இப்போதுதான் தரையிறங்கிருக்க, நிதர்சனம் உறைத்தது.
அவரைப் பார்த்த ரகுராம் தாயை வம்பிழுக்கும் நோக்கில், “ம்மா... இன்னும் ஒரு மாசத்துக்கு லீவே கிடையாது மா. டைட் ஷெட்யூல் எனக்கு. யாரைக் கேட்டு நீங்களா முடிவெடுத்தீங்க. மாப்பிள்ளை இல்லாம நீங்க மட்டும் எங்கேஜ்மெண்டை நடத்துங்க!” என அவன் பேசவும், கௌதமி முகத்தில் பயரேகைகள் படர்ந்தது.
“டேய்...ராம், என்ன டா சொல்ற? உங்கப்பா கூட கொஞ்சம் யோசிச்சாரு. நான்தான் என் மகனுக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. அதனால் சீக்கிரம் கல்யாணம் வைக்கிறதுல பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டேன். இப்போ நீ பேசுறதைப் பார்த்தா உங்கப்பா என்னைத் திட்டி தீர்த்துடுவாரு டா. ஹாஸ்பிடல்ல எப்படியாவது லீவை கேட்டு வாங்கிடுடா மகனே!” என கணவர் அறையை எட்டிப் பார்த்துப் பயத்துடன் கௌதமி கூற, இவன் சிரித்துவிட்டான்.
“டேய் படவா... எது எதுல விளையாட்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா டா? உங்கப்பா கேட்டிருந்தா அவ்வளோதான்!” என மகன் தலையில் செல்லமாய்க் கொட்டியவரைப் பார்த்து சிரித்தான் இவன்.
“ராம்... சைந்தவி பொண்ணுகிட்டே பேசுனீயா? இல்லையா? நீ எங்களோட வருவன்னு எதிர்பார்த்திருக்க போறா டா. போன் பண்ணி சமாதானம் பண்ணு டா!” என அவர் கூறி நகர, ரகுராமுமே அவளிடம் பேச வேண்டும் நினைத்திருந்தவன் சைந்தவி இலக்கத்திற்கு அழைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான். கடந்து சென்ற ஒரு வாரத்தில் புலனத்தில் குறுஞ்செய்திகள் பரிமாறினாலும் அழைப்புகள் ஏதுமில்லை. ஒரு நொடி தயங்கியவன் பின்னே அழைத்துவிட்டான்.
சைந்தவி அப்போதுதான் உண்டுவிட்டு அறைக்குள் நுழைந்திருந்தாள். அவனது எண்ணைப் பார்த்ததும் உதடுகளில் புன்னகை பூக்க, “சொல்லுங்க மிஸ்டர் ரகுராம்!” என சின்ன சிரிப்புடன் அழைப்பை ஏற்றாள்.
“ஹம்ம்... சாரி சைந்து, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? இன்னைக்கு என்னால அங்க வர முடியலை. ஒரு எமர்ஜென்சி கேஸ், அதான்!” என இவன் மன்னிப்பைக் கேட்க,
“ச்சு... அதான் ஆன்ட்டி சொல்லிட்டாங்களே ரகு. நமக்குள்ள இந்த பார்மாலிட்டீஸ் எதுவும் வேணாம்...” என்றவள் வேறு பேச்சிற்கு தாவ பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டே அழைப்பைத் துண்டித்தனர். ரகுவிற்கு சைந்துவிடம் ஒரு நல்ல தோழமை உணர்வு உருவாகியிருந்தது. அழகான பெண் என்ற வகையில் ஈர்ப்பிருந்தாலும், சட்டென அவளிடம் உரிமை கொண்டாடவில்லை இவன். பொறுமையாய் நட்பென்ற படியிலிருந்து திருமணம் முடிந்ததும் நேசப்படியைத் தொடலாம் என்பது அவனது சித்தாந்தம். இந்த சிறிய இடைவெளியை பிடித்தங்களையும், எண்ணங்களையும் பகிர்ந்து, ஒருவரையொருவர் புரிந்து கொள்ள பயன்படுத்திக் கொண்டனர்.
அன்னிச்சையாய் அவனது விரல்கள் காயூவின் இலக்கத்திற்கு அழைப்பை விடுத்தன. இரண்டு முறை அழைப்பு சென்று துண்டாக, மூன்றாவது முறை ஏற்றிருந்தாள்.
“சொல்லு டா, என்ன பண்ற?” என வினவிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.
“ஆப்டர்நூன் ட்யூட்டியா?”
“ஆமா ராம், இப்போதான் வீட்டுக்கு வந்தேன்!”
“ஹம்ம்... இன்னைக்கு அம்மா சைந்து வீட்டுக்குப் போய்ருந்தாங்கடி!” என்றவன் பேச்சு இயல்பாக சைந்தவியின் பெயரை சுருக்கியிருந்தது.
“ஓ... என்ன எல்லாம் ஓகேவா ராம்? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க. அம்மா, அப்பாக்கு சைந்துவைப் பிடிச்சிருச்சா? அவங்க ரொம்ப பெரிய இடம் போல?” என வெகு சாதாரணமாக விசாரித்தபடியே அலைபேசியை ஒலிப் பெருக்கியில் வைத்து உடைமாற்றினாள் இவள்.
“ஆமா டி... எல்லாம் ஓகேதான்!” என்றவன் நடந்ததை அப்படியே ஒப்பித்தான்.
“சூப்பர் ராம், ரொம்ப டிலே பண்ணாம மேரேஜ் வைக்கிறது கூட பெஸ்ட்தான் டா. எல்லாம் நல்லபடியா நடந்தா சந்தோஷம்!” என்றவள் குரலில் அவன் மீதான அன்பே பிரதானமாய் இருந்தது.
“அதெல்லாம் நல்லா நடக்கும் காயூ. இந்த மாதிரி நீயும் ஒருநாள் உனக்கு மேரேஜ்னு சொல்லி, என்னைக்கு நான் சந்தோஷப்பட?” என அவன் சலிப்பாய்க் கேட்க, இவளது வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது.
“அதானே... இதுக்கும் மட்டும் பதில் சொல்லிடாத டி” என அவளை அதட்டியவன், “நெக்ஸ்ட் ப்ரைடே வீக் ஆஃப் வர்ற மாதிரி பார்த்துக்கோ காயூ. காஞ்சிபுரம் போய் அன்னைக்கு எங்கேஜ்மெண்ட் அண்ட் மூகூர்த்த சேலை எடுக்கப் போற ப்ளான்னு சைந்து சொன்னா. அம்மா கூட ஓகேன்னுட்டாங்க. அப்பா வர மாட்டார். அத்தைங்க எல்லாம் வந்துடுவாங்க.
நம்ப எல்லாரும் போய்ட்டு வரலாம்!” என அவன் அழைக்க, காயத்ரி மௌனமாய் இருந்தாள்.
“ராம்... நீங்க ஃபேமிலியா போறீங்க. சேரி எடுக்குறதுக்கு நான் எதுக்கு டா, நான் வர்றது நல்லா இருக்காது. நீங்க போய்ட்டு வாங்க!” என அவள் பேசி முடிக்கும் முன்பே, “உன்னை வர்றீயா? வரலையான்னு கேக்க ஃபோன் பண்ணலை. நீ வர்ற அவ்வளோதான். நான் முக்கியம்னு தோணுச்சுன்னா வா, இல்லைன்னா வராதே!” என அவன் கோபத்துடன் அழைப்பைத் துண்டிக்க, இவள் அலைபேசியை சில நொடிகள் வெறித்திருந்தாள். இந்த ஒரு வாரத்தில் ஒருவாறாக மனதைத் தேற்றியிருந்தாள். தனது கட்டுப்பாட்டை மீறி நடக்கும் எந்த செயலுக்கும் தான் பொறுப்பேற்க முடியாது என மூளைக்குப் புரிந்தது.
இப்படி அழுது கொண்டிருந்தால் மட்டும் எதுவும் மாறிவிடப் போகிறதா என்ன? அவள் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை. எது வந்தாலும் புன்னகையுடன் கடக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை தைரியம் மீண்டிருந்தது. அதுவும் இல்லாது இவளது சிறிய முகச்சுணக்கம் கூட ரகுராமை பாதிக்கும் என பெண்ணுக்கு நன்றாய் புரிந்தே இருந்தது. அப்படி இருக்கையில் அவனுடைய திருமணத்திற்கு எந்தவிதத்திலும் தான் தடையாய் இருக்க கூடாதென்ற எண்ணம் வலுப்பெற, நடப்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பகுவத்திற்கு வந்திருந்தாள்.
அந்த வார வெள்ளிக்கிழமை அதிகாலையிலே ரகுராமும் கௌதமியும் காஞ்சிபுரத்திற்கு கிளம்பினர். தேவராஜின் மூன்று அக்கா குடும்பமும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என சென்னையை சுற்றித்தான் வசிக்கின்றனர். அதனால் அவர்கள் அங்கிருந்து வந்துவிடுவதாக கூறிவிட, இவர்கள் இருவரும் நேரே சென்று காய்தரியை ஏற்றிக்கொண்டு கிளம்பினர்.
காயத்ரி அன்றைக்கு சேலை உடுத்தவில்லை. ஜீன்ஸ் வகையிலான கால்சராயும் இடுப்பைத் தொடும் ஷார்ட் டாப்பும் அணிந்திருந்தவள் கழுத்தை சுற்றி பல வண்ணங்களால் ஆன ஸ்டோலை சுற்றியிருந்தாள். தலைக்கு எண்ணெய் வைத்து வாராமல் விரித்துவிட்டு சிறிய க்ளிப்பில் அடக்கியிருந்தாள். அன்றைக்குப் பார்த்ததைவிட முகம் தெளிவாய் இருந்தது. ஆனாலும் சற்றே உற்றுப் பார்த்தால் கண்களில் ஜீவன் குறைந்திருந்ததை அறிந்திருக்க முடியும். ஆனால் அவளை முறைத்துக் கொண்டிருந்த ரகுவிற்கு அதெல்லாம் கண்ணிற்குத் தெரியவில்லை.
கௌதமியோடு பின்னிருக்கையில் ஏறியமர்ந்தவளின் கைகளைப் பிடித்துக் கொண்டார் பெண்மணி. “எப்படிம்மா இருக்க காயத்ரி? இந்த அம்மா ரெண்டு தெரு தள்ளிதான் இருக்கேன்றது மறந்து போச்சுல்ல உனக்கு. கடைசியா போன வருஷம் அவன் பிறந்த நாளுக்கு வீட்டுக்கு வந்து தலைகாட்டுன. அதுக்கப்பறம் வரவே இல்லை?” என அவர் அன்பாய்க் குறைபடித்தார்.
“வரக்கூடாதுன்னு இல்லைமா. வேலையே சரியா இருக்கு? ராம்க்கு கல்யாணமாகிடுச்சுன்னா அப்புறம் நீங்க ஃப்ரியா எல்லாம் இருக்க முடியாதே! மாமியார் மருமக சண்டை போடுவீங்க. அதை வேடிக்கைப் பார்க்கவாது அடிக்கடி வர்றேன்!” என இவள் விளையாட்டாய்க் கூறினாள்.
“தலையை காய வைக்காம இப்படி வந்திருக்க? ஈரம் கோர்த்து தலை வலிக்க போகுது மா!” என அவள் முடியை முன்புறம் நகர்த்தி இழுபட்டையை தளர்த்தினார் பெரியவர்.
“அதெல்லாம் ஒன்னும் பண்ணாது மா. அப்படியே பழகிடுச்சு. தலை வலிச்சா உங்க வீட்டு டாக்டர் பையன் கிட்டே மாத்திரை வாங்கிப் போட்டுக்க வேண்டியதுதான்!” என்றவள், “என்ன ராம்?” என அவனையும் பேச்சில் இழுத்தாள். அவளை முறைத்தான் ஆடவன்.
“என்னவாம்மா உங்கப் பையனுக்கு. மூஞ்சியை இப்படி தூக்கி வச்சு முறைச்சுட்டே இருக்கான்?” என இவள் கௌதமியைக் கேட்க, “அவன் கிடக்குறான் மா... நீ சாப்டியா? காலைல எழுந்து அறக்கபறக்க கிளம்புனதுனால சாப்டாம வந்திருப்ப, இந்தா பனியாரம் சாப்பிடு!” என ஒரு கிண்ணத்தை அவள் முன்னே நீட்டியவரை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் புன்னகை அரும்பிற்று. இப்போது மட்டும் அல்ல எப்போது சந்திக்க நேர்ந்தாலும் காய்தரியின் வயிறை வாடவிடாது பார்த்துக் கொள்வார் கௌதமி. அதனாலே ஆன்ட்டி என்ற விளிப்பை எல்லாம் விடுத்து அம்மா என்றழைக்கப் பழகியிருந்தாள். ஆனால் தேவராஜ் எப்போதும் அங்கிள்தான். பேசும்போது அப்பா என்று விளித்தாலும் நேரில் அவரை அங்கிள் என்ற வார்த்தைக்குள்ளே அடக்கிவிடுவாள்.
“ரொம்ப நல்லா இருக்குமா. உங்க கையால சாப்ட்டு எவ்வளோ நாளாச்சு?” என்றவள் ஆசையாய் உண்டாள்.
“நீங்க சாப்டீங்களா மா?” எனக் கேட்டுக் கொண்டே பனியாரத்தை முன்னோக்கி ரகுவின் வாயிலும் திணித்தாள். முறைத்துக் கொண்டேயினும் அவன் உண்டான்.
“நான் காலைல ரெண்டு பனியாரம் சாப்ட்டுத்தான்மா வரேன். என்னமோ உன்னைப் பார்த்து நாளாச்சே. புள்ளைக்கு எதுவும் செஞ்சு எடுத்துட்டுப் போகணும்னு தோணுச்சு. அவசரத்துக்கு இட்லி மாவுல நாட்டுச் சர்க்கரையைப் போட்டு பனியாரத்தை சுட்டுட்டேன்!” என்றவரை இவள் வாஞ்சை மிகப் பார்த்திருந்தாள். மனதில் உள்ளதை எவ்வித பாசாங்கும் இன்றி கூறுவதுதான் கௌதமியின் இயல்பே. சற்றே வெள்ளந்தியான மனுஷி, அதனாலே இவளுக்கு அவரை சற்றுக் கூடுதலாக பிடிக்கும்.
பெண்கள் இருவரும் பேசிக்கொண்டே வர நேரம் போனதே தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் காயத்ரி, பேசி சிரிக்கவும் கண்ணாடி வழியே அவளது முகத்தையே பார்த்திருந்தான் ரகுராம். ஒருவேளை அவள் தன்னுடைய அண்மை இல்லாது போய்விடும் என்றெண்ணித்தான் அன்று கண்ணீர் வடித்தாளோ என்று எண்ணம் வலுப்பெற்றது. இத்தனை நாட்கள் உடனிருந்துவிட்டு சட்டென தான் திருமணம் செய்யப் போவதினால் அவளுக்கு தோன்றிய உணர்வு தவறாய் தெரியவில்லை. அவளது கலகலப்பான பேச்சும் சிரிப்பும் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதை பறை சாற்ற, நெஞ்சு முழுவதும் படர்ந்த நிம்மதியுடன் அந்த பிரபல துணிக்கடையின் முன்னே மகிழுந்தை நிறுத்தினான்.
திருமணத்திற்கு பட்டு கண்டிப்பாக காஞ்சிபுரத்தில்தான் எடுக்க வேண்டுமா என்ன என்ற கேள்வி பயணக் களைப்பில் தானாக முளைத்திருந்த போதும், எதையும் கேட்டுக் கொள்ளவில்லை ஆடவன். இவர்கள் உள்ளே செல்ல, ஏற்கனவே ஒரு கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது.
தேவராஜின் மூன்று அக்காக்கள் அவரது பிள்ளைகள், பேரன் பிள்ளைகள் என அனைவரும் குழுமியிருக்க, “ம்மா... பார்த்துமா, மொத்த குடும்பமும் ஒன்னு கூடியிருக்கு!” என ரகு முணுமுணுத்தான். கௌதமிக்கும் மூன்று நாத்தனார்களை நீண்ட நாட்கள் கழித்துப் பார்த்ததில் சந்தோஷமொல்லாம் வரவில்லை. இவர்கள் எந்தப் பிரச்சனையும் செய்துவிடக் கூடாது என்ற பயம்தான் தொற்றியது. கணவன் உடன் வந்திருந்தால் கூட இவர்களின் நடவடிக்கை கொஞ்சம் நல்லவிதமாக இருந்திருக்கலாம். இப்போது என்ன செய்வார்களோ என்ற பதற்றத்தில் புன்னகைத்துக் கொண்டே அவர்களிடம் விரைந்தார்.
தேவராஜின் மூத்த அக்காவிற்கு இரண்டு பெண்கள்,
இருவருக்குமே திருமணம் முடிந்திருந்தது. இரண்டாவது அக்காவிற்கு ஆண் பிள்ளை ஒன்றும் பெண் பிள்ளை ஒன்றும் உண்டு. பெண்ணிற்கு திருமணம் முடித்திருக்க, இளையவனுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார். இளைய பெண்ணிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இருவரும் படித்து முடித்துவிட்டு நல்ல பணியில் உள்ளனர். மூத்தவன் ரகுவைப் போலவே மருத்துவம் படித்திருக்க, இரண்டாமவன் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். இரண்டாவது பெண்மணியின் மகன் வழக்கறிஞராக இருக்கிறான்.
காயத்ரியும் ரகுவும் அவர் பின்னே சென்றனர். அனைவரது பார்வையும் இவளிடம் தான் இருந்தது. சற்றே அசௌகரியமாய் இருந்தாலும் அனைவரையும் பார்த்து பொதுவாய் புன்னகைத்து வைத்தாள்.
“வாங்க அண்ணி... எப்போ வந்தீங்க? கொஞ்சம் லேட்டாகிடுச்சு!” என கௌதமி அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, பெண்கள் பதிலளித்தனர். மூத்த பெண்கள் இருவரும் தேவராஜைப் போல கறார். ஆனால் மூன்றாவது பெண் சற்றே சாந்தமானவர். அவர்தான் கௌதமியின் கையைப் பிடித்துக்கொண்டு பேசினார். காயத்ரி எங்கே அமருவது எனத் தெரியாது தடுமாறி கௌதமிக்கு அருகேயிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததைப் பார்த்த ரகுராம், அத்தை மகன்களுடன் பேச சென்றுவிட்டான்.
“ஆமா... கௌதமி, இந்தப் பொண்ணு யாரு? உன் சொந்தமா என்ன?” என வேண்டுமென்றே மூத்தவர் கேட்க, “அண்ணி, இவ காயத்ரி. உங்களுக்கு ஞாபகம் இல்லையா? ரகுவோட ஸ்கூல்ல படிச்ச பொண்ணு. நம்ப வீட்டுப் பொண்ணு மாதிரிதான் அண்ணி!” என்றார் காயத்ரியைப் பார்த்துப் புன்னகைத்து. அவருக்கு நாத்தனாரின் பேச்சு புரியவில்லை என்றாலும் இவளுக்கு நன்றாய் புரிந்திருந்தது. வேண்டுமென்றே உறவனர் அல்லாத பெண்ணை எதற்கு தேவையில்லாமல் இங்கே அழைத்து வந்திருக்கிறாய் என அவரது பேச்சின் உட்பொருள் இவளுக்குப் புரிந்ததும் முகம் மாறாதிருக்க வெகு சிரமப்பட்டாள். அவளுக்குப் பதில் கூற இரண்டு நொடிகள் போதாது. ஆனாலும் ரகுராமிற்காகப் பொறுமை காத்தாள்.
“அப்படியா... சரி, சரி. நான் கூட ஏதோ சொந்தமோன்னு நினைச்சேன். அங்க இருந்து இவ்வளோ தூரம் பொம்பளைப் புள்ளையை எப்படி ஒரு பையனோட அனுப்புறாங்க. வீட்ல அம்மா, அப்பா இப்படி விட்ருக்காங்களே. நாங்களாம் பொம்பளை புள்ளைங்களை பக்கத்து ஊருக்கு கூட அனுப்ப மாட்டோம்!” இரண்டாவது நாத்தனார் அங்கலாய்த்தவர், “தப்பா எடுத்துக்காதம்மா. இந்த மாதிரி பொம்பளை புள்ளைங்க சகவாசம் எல்லாம் எனக்குப் புடிக்காது. எங்க வீட்ல யாரும் வீடு வரை கூடப் படிச்ச புள்ளைகளை கூட்டீட்டு வர மாட்டாங்க!” என சிரித்துக் கொண்டே வாழைப்பழத்தில் ஊசியை சொருகியவரை அமைதியாய்ப் பார்த்தவள், “அப்போ உங்களுக்கு எல்லாம் பெத்த புள்ளைங்க மேல அவ்ளோ நம்பிக்கையா ஆன்ட்டி?” என இவளும் கேட்டுவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்று சற்றே தொலைவில் அமர்ந்தாள். இவளது பதிலில் அவரது முகம் கடுகடுத்தது.
“எல்லாம் உன்னை சொல்லணும் கௌதமி. ஒத்தப் புள்ளையை எப்படி வளர்த்திருக்க நீ? பொட்டை புள்ளையோட சிநேகிதம் எல்லாம் நம்ப குடும்பத்துக்கு ஆகுமா? இவளைக் கூட்டீட்டு வந்ததைப் பார்த்தா பொண்ணு வீட்டுக்காரங்க என்ன நினைப்பாங்க. அவ போட்டிருக்க ட்ரெஸைப் பாரு. நம்ப வீட்டு பொம்பளை புள்ளைங்க சேலைக்கட்டி எவ்வளோ நாசூக்கா இருக்காங்க. குடும்பமா வந்திருக்கோம் நம்ப. இவளை எதுக்கு உம்மவன் கூட்டீட்டு வந்தான். சரியான வாய், அடங்காதவளா இருக்கா!” என அவர் அங்கலாய்க்க, கௌதமி காயத்ரியை சங்கடமாய்ப் பார்த்தார். அவளுடைய செவியும் அவரது பேச்சை உள்வாங்கத்தான் செய்தன.
கௌதமியின் தவிப்பான முகத்தைப் பார்த்த காயத்ரி மென்முறுவல் ஒன்றை சிந்தியவள், ஒன்றுமில்லை என்பதைப் போல தலையை அசைத்தாள்.
“ஃப்ரெண்டுனா கல்யாணத்துக்கு வந்து வாழ்த்திட்டு சாப்ட்டோமா, கிளம்புனோமான்னு இருக்கணும். இப்படியா எந்நேரமும் தொத்திட்டே இருக்கது. குடும்பமா வர்ற உன் மகனும் இங்கிதம் இல்லாம கண்டவளையும் ப்ரெண்டுன்னு கூட்டீட்டு வந்திருக்கான். இந்த காலத்து புள்ளைங்க நம்ப என்ன சொன்னாலும் காதுல வாங்குறது இல்ல?” என இரண்டாமவர் நொடிக்க, காயத்ரிக்கு தொண்டையைத் தாண்டி உதடுவரை வார்த்தைகள் வந்துவிட்டன.
தன்னையே பாவமாய் நோக்கும் கௌதமிக்காக வார்த்தையை இழுத்துப் பிடித்தவள், “ஆன்ட்டி... நான் க்ரவுண்ட் ப்ளோர்ல போய் கொஞ்சம் பர்சேஸ் பண்ணிட்டு வரேன்!” என விறுவிறுவென நடந்துவிட்டாள். ஏனோ கோபத்தோடு விழிகளும் கலங்கப் பார்த்தன. காயத்ரிக்கு ரகுராமின் அத்தைகளைப் பற்றி முன்பே தெரியும். அதனால்தானே வர மாட்டேன் என மறுத்தாள். இவன் கட்டாயத்தின் பேரில் வந்துவிட்டவளுக்கு எரிச்சல் படர்ந்தது. அமைதியாய் கீழ் தளத்திற்குச் சென்றாள். குழந்தைகள் உடையும் பொம்மையும் விற்கும் பகுதியாதலால் சிறுவர்கள் கூட்டம் காணப்பட்டது. கொஞ்சம் மனதை சமன்படுத்திக்கொண்டு அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
“டேய் மச்சான், உன் கூட வந்துச்சே அந்தப் பொண்ணு யாரு டா? எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே!” மூன்றாவது பெண்மணியின் மூத்த மகன் யுக்தேஷ் நடந்து சென்ற காய்தரியின் புறமிருந்த பார்வையை அகற்றாது கேட்டான்.
“ஆமா ரகு... யார் அந்த ஃபிகர், செம்மையா இருக்காளே!” என்ற இளையவன் அவ்தேஷின் தலையை ரகுவின் கை பலமாய் தட்டியது.
“பிச்சிடுவேன் டா...அது காயூதான். உங்களுக்கு அடையாளம் தெரியலையா?” என இவன் கேட்க, “ஏதே... எப்போ பார்த்தாலும் அழுதுட்டே எண்ணெய் வழிய ரெட்டை ஜடையோட உன்னோட சுத்துமே, அந்த காயத்ரியாடா இது?” என அவன் அதிர்ந்து கேட்டான். ரகு ஆமோதிப்பாய்த் தலையை அசைத்தான்.
“நம்பவே முடியலை டா. ஆள் பார்க்க அழகா மாறிட்டா போல. ஆமா, சிங்கிளா? கமிட்டெடா? நானும் ஒரு அப்ளிகேஷனைப் போட்டு வைக்கிறேன்!” என சிறியவன் கூற, “நீ நினைக்கிற மாதிரி ஆள் இல்லைடா அவ. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடுவா. அதுவும் இல்லாம அவ உனக்கு அக்கா. மூனு வயசு மூத்தவ!” என இவன் கூறியதும், சிறியவன் முகம் வாடியது.
“ஆனா எனக்கு அக்கா இல்லைல அவ?” என யுக்தேஷ் வெகு கவனமாய் வினவ, அவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தான் ரகு. சின்னவன் அவ்தேஷ் கூட கொஞ்சம் குறும்பானவன். பெண்கள் நட்பு அதிகம். ஆனால் யுக்தேஷ் யாரைப் பற்றியும் இப்படியெல்லாம் விசாரித்தது இல்லையே.
“டேய்... நோ, அவ கிட்டே வச்சுக்காதீங்க டா. சாஃப்ட் ஹேண்டில் இல்ல அவ. மேன்ஹேண்டில் பண்ணாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல!” என ரகு கூறியதைக் காதில் வாங்காத யுக்தேஷ் கீழ்தளம் நோக்கி செல்ல, “அடிவாங்கிட்டு வரப் போறான் உங்கண்ணன்!” என அவ்தேஷிடம் முணுமுணுத்தான் இவன். இது எதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல கௌரேஷ் இவர்களைக் கண்டு கொள்ளது கடை ஊழியப் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தான். ரகு அவனை முறைத்து வைத்தான்.
தொடரும்...