• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 15 💖
“ராம்... எங்கடா போன இவ்வளோ நேரம்? வா, வந்து சாப்பிடு. சாப்பிடாம வெளிய போறளவுக்கு என்னதான் வேலையோ?” என கௌதமி கடிய, அவர் வார்த்தைகள் எல்லாம் இவன் செவியில் ஏறவே இல்லை. அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான். கட்டிலில் சென்று அமர்ந்தவன் தலையைக் கைகளில் தாங்கினான்.
தன் கண் முன்னே விழிகளில் நீர் தளும்ப புன்னகைத்த காயத்ரியின் குரலும் முகமும் அவள் பிரிவின் ஆற்றாமையில் கொடுத்த முத்தமும் இவனை மொத்தமாய் சாய்த்திருந்தன.
அவனுடைய காயத்ரிதான் அவள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவளை ஒரு போதும் காதல், திருமணம் என்ற வரையறைக்குள் எல்லாம் அவன் நிறுத்தியதே இல்லை. நட்பு என்ற கோட்டைத் தாண்டி அவனுடைய பார்வை அவளை என்றும் மேய்ந்தது இல்லை. ஏன் கல்லூரி படிக்கும் போது கூட உடன் படிக்கும் மாணவர்கள் இவர்களைக் கேலி செய்த போது கூட அவர்களை அதட்டி உருட்டினானே ஒழிய, எவ்வித எண்ணங்களும் இடமளிக்கவில்லையே.
காயத்ரி அழகானவள் என்று மற்றவர்கள் கூறும்போது அப்படியா எனக் கேட்டுக் கொள்வான். பெரிதாய் அவளது நிறம், அழகு என பிரித்துப் பார்க்க மாட்டான். ஏனென்றால் அவனைப் பொறுத்தவரை காயத்ரி என்பவள் அவர்கள் வீட்டில் ஒருத்தி. அதைத் தவிர வேறு எண்ணம் இதுவரை துளிர்க்கவில்லை. ரகுவினுடைய நண்பர்கள் கூட அவனிடம் அவளை அறிமுகம் செய்து வைக்கக் கூறி நச்சரித்த நாட்கள் ஏராளம். இவன் அதை அவளிடம் கூறி சிரிக்கும் போது காயத்ரி அதற்கெல்லாம் எதிர்வினையாற்றியது இல்லையே.
அவனைவிட படிப்பிலும் அந்தஸ்திலும் அழகிலும் உயர்ந்த எத்தனையோ பேர் அவளிடம் தன் விருப்பத்தைக் கூற முன்வந்திருக்கின்றனர். இவன் கூட ஏன் அவள் எதிலும் நாட்டமில்லாது இருக்கிறாள் என குடைந்தெடுத்திருக்கிறான். அதற்கெல்லாம் புன்னகையை மட்டுமே பரிசளிப்பாள். ஆனால், அந்தப் புன்னகையின் பொருள் இந்நிமிடம் அவனுக்கு விளங்கிற்று. நந்தேஷ் விஷயத்தில் ஏன் அத்தனை கடுமை காட்டினால் என நினைத்ததும் அவனுக்கு என்ன செய்வது என்றே புரியாத நிலை. இந்த நிமிடம் கூட இதெல்லாம் கனவாய் இருந்துவிடக் கூடாதா என மனம் ஏங்கிற்று. அந்த நாள் முழுதும் இப்படி குழப்பத்திலே கழிந்து போனது. சைந்தவி கடந்த ஒரு வாரமாக அவனிடம் சரியாய் பேசவில்லை. ஏனென்று கேட்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான். இன்றைக்கு அழைத்துக் கேட்க வேண்டும் என நினைத்ததை மொத்தமாய் இந்தப் பெண் காயத்ரி மறக்க வைத்திருந்தாள்.
மறுநாளும் விடிந்திருக்க, அன்றைக்கு மாலையே எல்லோரும் மண்டபத்திற்கு செல்வதாய் ஏற்பாடு. மண்டபத்திலே கிட்டத்தட்ட முப்பதிற்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட நவீன வசதிகள் கொண்ட அறை இருக்க, அதிலே பெண் வீட்டினரும் மாப்பிள்ளை வீட்டினரும் தங்குவதாய் ஏற்பாடாகியிருந்தது.
நாளை திருமணத்தில் என்னென்ன உடைகள், நகைகள் அணிய வேண்டும் என்ற பட்டமன்றம் பெண்கள் படை சூழ நடந்து கொண்டிருந்தது. தேவராஜ் மூத்த மச்சானுடன் மண்டபம் வரை சென்றிருந்தார். மற்ற இரண்டு மச்சான்களுக்குமே வேலை இருந்தது.
ரகுராம் மாப்பிள்ளை என்பதால் எங்கேயும் செல்ல வேண்டாம் என கௌதமி மகனைத் தன்னோடு இருத்திக் கொண்டார். அவனுக்குமே எங்கேயும் செல்லும் மனநிலை அற்றுப் போயிருந்தது. யோசித்து யோசித்து காயத்ரியின் கண்மூடித்தனமான அன்பின் மீது இவனுக்கு கோபம் பல்கிப் பெருகிற்று. இப்படியொரு சூழ்நிலையில் என்னைக் கைதியாக நிறுத்தி விட்டாளே என உள்ளம் குமுறியது. அவன் கையில் இப்போது விலங்கு மாட்டப்பட்டிருக்க, எங்கேயும் நகர முடியாத நிலை. தோழிக்காகப் பார்த்து தன்னை நம்பி சம்மதம் சொல்லி திருமணம் வரை வந்தப் பெண்ணை ஏமாற்றுவது ஆகப்பெரும் பாவம். காயத்ரியின் கண்ணீரில்தான் என் திருமணமா என மனம் தோழிக்காவும் வருந்தியது.
ஏனோ இந்தப் பெண் காயத்ரி இப்படி செய்திருக்க வேண்டாம் என நூறாவது முறையாக உள்ளுக்குள்ளே புழுங்கினான். இத்தனை வருடங்கள் உடனிருந்தானே. ஒரு வார்த்தை உரைத்திருக்கலாமே! தங்களது திருமணம் நடக்கும், நடக்காது என்பதெல்லாம் அடுத்த விஷயம். அவள் மனதை ஒருமுறை இவனிடம் கூறியிருக்கலாம். ஆனால், காயத்ரியை மனைவியாய் பார்க்கவெல்லாம் அவன் முடியவே முடியாது என மனம் நம்பியது. இதற்குப் பேசாமல் இவள் எதையும் கூறாமலே இருந்திருக்கலாம் என நொந்து போனான்.
“யுக்தா... இந்த நேரத்துல எங்கடா போற?” என யுக்தேஷின் தாய் அவனைத் தடுத்து நிறுத்த, “ம்மா...ப்ரெண்டை பார்க்க போறேன் மா. அப்புறம் அத்தை சில திங்க்ஸ் வாங்கிட்டு வர சொன்னாங்க. அப்படியே வாங்கிட்டு வரேன்!” என அவன் பொய் கூறி மழுப்பியபடியே நடையை வேகமாய் போட, “டேய் அண்ணா, நானும் உன் ப்ரெண்டைப் பார்க்கணும்‌.‌ என்னையும் கூட்டீட்டு போய் இன்ட்ரோ கொடு!” என அவ்தேஷ் அவனோடு வந்தான்.
“அவசியம் இல்ல டா. மூடிக்கிட்டு அத்தைக்கு ஹெல்ப் பண்ணு. ரகு கூட துணை மாப்பிள்ளையா இரு. அப்படியே கூட்டத்துல உனக்கேத்த மாதிரி ஒரு பொண்ணைக் கரெக்ட் பண்ணிக்கோ டா. என் பின்னாடி வந்து டைமை வேஸ்ட் பண்ணாத டா டோமேட்டோ!” என அவன் நெற்றியில் ஒரு விரலை வைத்து தள்ளிய யுக்தேஷ் ரகுவின் இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான்.
“அதெப்படி டா அண்ணா, பிகர்னு வந்தா, கூடப் பொறந்த தம்பியைக் கூட கழட்டி விட்டுட்றீங்க?” என அவன் கேட்க, “அதான் தெரியுது இல்ல. மூடீட்டு கிளம்பு டா!” என்றவாறு இவன் பறந்திருந்தான்.
காயத்ரி மயில் மாணிக்க கொடியருகே அமர்ந்திருந்தாள். அவளருகே இரண்டு காலி கோப்பைகள் இருந்தன. மேஜை மீது ஒரு எழுதுகோல், ஒரு நோட்டு சில பல இத்யாதிகள் என அலங்கோலமாகத்தான் இருந்தது. இருக்கையில் அமர்ந்து அந்தப் நோட்டை ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப் பார்த்து புன்னகைத்தாள்.
அவள் சிறுவயதில் செய்த சேட்டைகள் எல்லாம் புகைப்படமாக அந்த நோட்டு முழுவதும் படர்ந்து கிடந்தது. முதல் சில பல பக்கங்களில் எல்லாம் பற்கள் தெரிய புன்னகைத்தவாறே தாயின் இடிப்பிலும், தந்தையின் தோளிலும் ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள் இவள். அடுத்தடுத்த பக்கங்களில் எல்லாம் தாயைக் காணவில்லை. தந்தையோடு இருந்தாலும் அந்த சிரிப்பு வற்றிப் போயிருந்தது.
அதற்கடுத்த சில பக்கங்களில் அவளும் ரகுராமும் இணைந்திருந்தனர். தொலைந்து விட்டதாய் எண்ணியிருந்த அவளுடைய சிரிப்பு மீண்டும் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது. அவர்கள் பள்ளி ஆண்டு விழா, குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், கல்லூரியில் நடந்த நிகழ்வுகள் என அனைத்திலும் இருவரும் இணைந்து நிறைய புகைப்படங்கள் எடுத்திருந்தனர். இவள்தான் அத்தனையும் பத்திரப்படுத்தி இதில் ஒட்டி வைத்திருந்தாள். சில புகைப்படங்களை ஆசையாய் வருடிப் பார்த்தாள்.
யுக்தேஷ் உள்ளே நுழைந்தவன் சத்தம் செய்யாது அவள் பின்னே பூனை நடையிட்டு எட்டிப் பார்த்தான். அவள் ஒவ்வொரு புகைப்படமாய்த் திருப்ப, “அஹம்... ஹக்கும்!” எனத் தொண்டையைச் செருமினான். காயத்ரி ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போய் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“நான்தான் காயூ... டோன்ட் பியர்!” என இலகுவாக அருகே இருந்த இருக்கையில் பொத்தென அமர்ந்தவன், “என்ன மலரும் நினைவுகளா?” எனக் கேலியாகக் கேட்டான். அவள் முறுவலித்தாள் அன்றி பதில் கூறவில்லை.
“ரைட்டு... இப்போ பெயின் எப்படி இருக்கு?” எனக் கேட்டான்.
“ஹம்ம்... வலிக்கத்தான் செய்யுது யுக்தா. போக போக சரியாகிடும். நானே சரி பண்ணிப்பேன்!” என்றாள் ஏதோ நினைவில். அவளை அமைதியாய்ப் பார்த்தான் இவன்.
“உள்ளே டிவில எதையாவது பார்க்காம வெளிய என்னடி தனியா மொட்டு மொட்டுன்னு உக்கார்ந்து இருக்க?” எனக் கேட்டுக் கொண்டே ஷண்முகி சிறிய கிண்ணத்தில் கறிச்சறோடு வந்தார். யுக்தாவை எதிர்பார்க்காது திகைத்தவர், “வாங்க தம்பி, வாங்க!” என்றார் தலையை அசைத்து. அவனும் புன்னகைத்தான்.
“இந்த சாறை மிச்சம் வைக்காம குடி டி!” என்றவரை அவள் முறைத்தாள்‌.
“இப்போதானே சாப்ட்டேன் அம்மாச்சி. அதுக்குள்ளேயும் சூப்பா?” அவள் கேட்க, “ஆமா.. ரெண்டு தட்டு சோறு தின்னுட்டா. நீ சாப்ட்டா கா வயித்துச் சோறு இந்நேரம் காலியாகியிருக்கும் டி. ஒழுங்கா குடி!” என அதட்டியவர், “தம்பி, காபி தண்ணி குடிக்கிறீங்களா?” என அவனிடம் கேட்டார்.
“இல்ல பாட்டீ, இப்போதான் சாப்ட்டு வந்தேன். எனக்கு எதுவும் வேணாம்!” அவன் தன்மையாக மறுக்க, அவர் வீட்டிற்குள் செல்லத் திரும்பியவர், “மாப்பிள்ளை, மேல பரணியில இருக்க இரும்பு சட்டியை எடுத்து தரீங்களா?” என பதுவிசாய் தங்கராஜை உடனழைத்துச் செல்பவரை இவள் சந்தேகமாய்ப் பார்த்தாள்.
“ஏன் மாப்பிள்ளை, இந்த தம்பி யாரு? பார்க்க நல்லா இருக்காரு. காயத்ரிக்கு பொருத்தமா இருப்பாரு? என்ன வேலை பாரக்குறாரு? அவங்க வீட்ல பேசிப் பார்ப்போமோ?” என அவர் மெதுவாய் பேசினாலும் இவளது செவியில் விழுந்து தொலைத்தது. யுக்தாவை அவள் சங்கடமாகப் பார்த்தாள், “அம்மாச்சி, பசிக்குது. மதியத்துக்கு போய் சமைச்சு வை!” என்றாள் பல்லைக் கடித்து.
“சரிங்க மாப்பிள்ளை. உங்க மகளுக்கு பாம்பு காது. நம்ப அப்புறம் பேசுவோம்!” என அவர் நழுவி சமையலறைக்குள் செல்ல, காயத்ரி அவனைப் பார்க்கத் தயங்கியவள், “சாரி யுக்தா, டோன்ட் மைண்ட் எனிதிங்க். அவங்க கிராமத்து ஆளு. சோ, பெருசா சூதுவாது தெரியாது. எதை எங்க பேசன்னும் தெரியாது!” என்றாள்.
“ஐ மைண்ட் இட் காயூ. ஏன் அவங்க பேசுறதுல என்ன தப்பு? நீ என்னைக் கன்சிடர் பண்ணலாமே!” என்றவனின் பேச்சில் ஒரு நொடி அதிர்ந்தாலும், “யுக்தா!” என்றாள் அதட்டலாய்.
“ஐ யம் நாட் கிட்டிங். நிஜமா கேட்குறேன் காயூ. நான் ராம் மாதிரி மிஸ்டர் பெர்பெக்டூம் இல்லை. சைல்ட் ஹூட்ல இருந்து உன் பெஸ்ட் ப்ரெண்டும் இல்ல. சோ, இப்போ இருக்க காயூவை நான் அனலைஸ் பண்ண வரைக்கும் ஐ லைக் ஹெர் அண்ட் லவ் ஹெர்!” என்றான் உண்மையாய்.
காயத்ரி தலையை இடம் வலமாக முடியாது என்று அசைத்தவள், “எனக்கு மேரேஜ்ல பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல யுக்தா. என்னைவிட பெட்டரா உனக்கு லைஃப் பாட்னர் கிடைப்பாங்க!” என மூச்சை இழுத்துவிட்டவள், “நீன்றதால நான் இவ்வளோ பொறுமையா பேசுறேன். உன்கிட்டே ஒரு குட் ஃப்ரெண்ட் ஃபீல் கிடைக்குது. மறுபடியும் இந்த மாதிரி பேச்செடுத்துட்டு வந்துடாத மேன். அப்புறம் ஃப்ரெண்ட் ஷிப்பே வேணாம்னு உன்னைப் ப்ளாக் பண்ண தயங்க மாட்டேன்!” என்றவளின் கூற்றில் இவனது முகம் மலர்ந்தது. முதல் முறையாக சந்தித்த போதும் இப்படித்தானே கூறினாள். ஆனால் அன்றைக்கிருந்த காரம் குரலில் சிறிதும் இல்லை. மென்மையாய் கண்டித்தாள்‌.
“கொஞ்சம் முன்னேற்றம் தான் காயூ!” என்றவனை அவள் புரியாமல் பார்த்தாள்.
“இல்ல, ஃபர்ஸ்ட் டைமும் இதே மாதிரிதான் பேசுன. பட், அப்போ ரொம்ப டெரரா பேசுன. பட், நவ் ஸ்வீட்டா பேசுற காயூ!” என்றவனை மென்மையாய் முறைத்தவள், அந்தப் பேச்சை தவிர்த்தாள்.
“அப்புறம் ஈவ்னிங்கே எல்லாரும் மண்டபத்துக்கு கிளம்புறோம் காயூ. நீ எப்போ வர, மார்னிங் ஸ்ட்ரெய்டா வந்துடுவீயா? பாட்டி, அப்பா எல்லாம் வருவாங்க தானே?” என யுக்தா கேட்டான்.
“நான் வரலை யுக்தா. இந்தக் கையோட என்னால வர முடியாது. ஒழுங்கா ட்ரெஸ் பண்ணவும் கஷ்டம். நீங்க போங்க, நான் ராம்கிட்டே ஏற்கனவே சொல்லிட்டேன்!” என்றாள்.
“ப்ம்ச்...நீ வரலையா காயூ?” என்றவன் குரல் உள்ளே சென்றது.
“இட்ஸ் ஓகே, உன்னோட ஹெல்த் தானே முக்கியம். நீ வர வேணாம். நான் எல்லாத்தையும் லைவ் டெலிகாஸ் பண்றேன். இல்லைன்னா வீடியோ எடுத்து அனுப்புறேன்!” என அவன் விடை பெற, இவள் மென் புன்னகையுடன் தலையை அசைத்தாள்.
மாலை ரகுராமின் மொத்தக் குடும்பமும் மண்டபத்தில் சென்று இறங்கினர். பெண் வீட்டார் ஏற்கனவே வந்துவிட்டிருந்தனர். இவர்களை உபசரித்து அழைத்து இரவு உணவை உண்ணச் செய்தனர். பின்னர் பெரியவர்கள் அவரவர் அறைக்குள் சென்று முடங்க, பொண்ணும் மாப்பிள்ளையும் ஃப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் என திருமணத்திற்கு முந்திய தினத்தை நினைவு வைத்துக் கொள்வதற்காக அலங்கரித்த மேடையில் நின்று புகைப்படம் எடுத்தனர். ரகுராம் முகத்தில் முன்பு போல உற்சாகம் இல்லை. சைந்தவி கூட வெகு அமைதியாய் இருந்தாள். அவர்கள் இருவரையும் பார்த்த கௌரேஷ், “டேய் அவ்தேஷூ, ஏன் ரெண்டு பேரோட மூஞ்சியும் டல்லடிக்குது?” எனக் கேட்டான்.
“ஹம்ம்... தெரியலையே. மே பீ எதாவது மிஸ் அண்டர்ஸ்டான்டிங்-ஆ இருக்கலாம் டா. அவங்களே சரியாகிடுவாங்க. லீவ் இட்!” அவ்தேஷ் கூற, சிறியவர்களும் மேடையேறி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இரவு விளக்கில் மின்னிக் கொண்டிருந்தது மண்டபம். ரகுராம் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்தான். தூக்கம் வரவே இல்லை. காலையிலிருந்து எதிலுமே நாட்டமில்லை அவனுக்கு. ஆசை ஆசையாய் அவனுக்குப் பிடித்த பெண்ணைக் கரம் பிடிக்கப் போகிறான். ஆனால், அவனால் முழு மனதாய் சந்தோஷம் கொள்ள முடியவில்லை.
காயத்ரியின் நினைவுதான் முழுவதும். இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள் அவள்? தூங்கி இருப்பாளா? இல்லை அன்றைக்குப் போல இன்றைக்கும் கேட்பாரற்று அழுது கொண்டிருப்பாளோ என அகம் முழுவதும் அவள்தான் நிறைந்து கிடந்தாள். மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது. நேரத்தைப் பார்த்தான். இரவு பன்னிரெண்டு மணி எனக் காண்பிக்க, அலைபேசியை எடுத்துப் புலனத்திற்குள் சென்றான்.
ஒரு நொடி தயங்கியவன், அவளது இலக்கத்திற்கு, “ஹாய் காயூ!” என செய்தியை அனுப்ப, சில பல நொடிகளில் அவள் பார்த்துவிட்டாள் என இரண்டு நீளக் கோடுகள் வந்து விழுந்தன.
“ராம், இன்னும் தூங்காம என்ன பண்ற நீ? டைம் ட்வெல் ஆச்சு. காலைல சீக்கிரம் எழுந்திரிக்கணும் இல்ல? போய் தூங்கு டா!” அவளிடமிருந்து செய்தி வந்து விழுந்தது. அவளே அருகிலிருந்து அதட்டுவது போல குரல் கேட்கவும், தலையை உலுக்கிக் கொண்டான்.
“நீ தூங்கலையா காயூ?” அவன் கேட்க,
“ஹம்ம்...தூங்கணும் ராம். நான் தூங்குறது இருக்கட்டும், நீ முதல்ல போய் டேக் க குட் ஸ்லீப். நாளைக்கு மேடைல ப்ரெஷ்ஷா தெரிவ டா. இப்போ எடுத்த ப்ரீ வெட்டிங் ஷூட்லயே யு லுக் டயர்ட்!” என்றவள் யுக்தா அவளிடம் பகிர்ந்திருந்த சில பல புகைப்படங்களை இவனுக்கு அனுப்பினாள்.
“ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க டா. நீ சொன்ன மாதிரி சைந்தவி அப்சரஸ் மாதிரி இருக்காங்க. யூ போத் ஆர் குட் மேச் ஃபார் ஈச் அதர். விஷ் யூ அ வெரி வெரி ஹேப்பி மேரீட் லைப் டா!” என்று அவனுக்கு அனுப்பியவள், கண்களிலிருந்து உருண்டு விழுந்த நீரைத் துடைத்துக் கொண்டாள். ரகுராம் அந்த செய்தியை இரண்டு முறை வாசித்தவன், “சாரி காயூ, ஐ யம் ஹெல்ப்லெஸ்!” என வேதனையோடு அனுப்பி இருந்தான். அந்தச் செய்தியில் இவளுக்கு மீண்டும் கண்களில் குபுக்கென நீர் வெளியேறியது.
அதை துடைக்காதவள், “லூசாடா நீ? நான்...நான் பேசுனதை இன்னுமா நினைச்சிட்டு இருக்க நீ? ஹம்ம், அது ஏதோ நான் உளறுனது. நான்தான் அப்போவே உன்னை மறந்துடுன்னு சொன்னேன் இல்ல. நீ எதுக்கு இப்போ சாரி கேட்குற. எதையும் யோசிக்காம போய் தூங்கு டா. மேரேஜ் நல்லபடியா நடக்கணும்!” என்று அவள் விரல்கள் செய்தியை அனுப்பினாலும் விழிகளில் நீர் வழிந்த வண்ணமிருந்தது. அந்தச் செய்தியை வாசித்தவனுக்கு தொண்டையை ஏதோ அடைக்கும் உணர்வு. மறுபுறம் கண்டிப்பாக காயத்ரி அழுகிறாள் என உள்ளுணர்வு உணர்த்த, அவளுக்கு அழைத்துவிட்டான்.
அதை எதிர்பார்க்காதவள் ஒரு நொடி திடுக்கிட்டாலும் அழைப்பைத் துண்டித்துவிட்டு, “டோன்ட் கால் மீ ராம். ஐ யம் ஓகே!” என்றாள்.
“அழறீயா காயூ?” என அவன் கேட்டதும், “ப்ம்ச்...இவர் பெரிய மன்மதரு... டெய்லி இவருக்காக தூங்காம அழறாங்க?” என சூழ்நிலையை இயல்பாக்க முயன்றவள், “குட் நைட் ரகு. நான் தூங்கப்‌ போறேன் டா!” என்றவாறு அலைபேசியை அணைத்து தூரப் போட்டு விழிகளில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள். மூச்சை வெளிவிட்டு தன்னை சமாதானம் செய்தவள் சத்தம் வராது படுக்கையிலிருந்து எழுந்து வந்து நிலைபேழையைத் திறந்தாள். கடைசி அடுக்கில் இருந்த அரக்கு வண்ணப் புடவையை எடுத்தாள். சுசீலா இறக்கும் அன்று உடுத்தியிருந்த புடவை அது. தாய் இறந்த அன்று இவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அந்தப் புடவையை வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.
தாயை வெகுவாகத் தேடும் கணங்களில் அதை எடுத்து மார்போடு அணைத்துக் கொள்வாள். அந்தப் புடவையோடு அன்றைக்கு ரகுராமை அணைத்தப் போது உடுத்தியிருந்த புடவையைஞ எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தவள்,அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். கண்களில் மீண்டும் ஈரம் கசியப் பார்த்தது. புடவைகள் இரண்டையும் நெஞ்சோடு அழுத்திக் கொண்டவள், ‘இன்னைக்கு ஒருநாள் தான் காயூ. ஸ்டே ஸ்ட்ராங்க், இந்த நைட்டை க்ராஸ் பண்ணிட்டா போதும். எல்லா ப்ராப்ளமும் சரியாப் போய்டும்!’ என தனக்குள் முணுமுணுத்தவாறே கட்டிலில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடினாள். உடல்வலியோடு மனவலியும் சேர, சிறிது நேரத்திலே உறங்கிப் போனாள்.
அதிகாலை ஏழு மணிக்கே அந்த மண்டபம் முழுவதும் ஜனத்திரள் கூடிவிட்டது. அமைச்சர் வீட்டுத் திருமணம் என்பதால் வாயிலிலும் உள்ளேயும் காவல்துறை அதிகாரிகள் நின்றிருந்தனர். பகல் பொழுதிலும் மண்டபம் ஜகஜோதியாகக் காட்சியளித்தது.
தேவராஜூம் கௌதமியும் மகனுக்குத் திருமணம் முடியப் போகிறது என முகம் கொள்ளா புன்னகையுடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். தேவராஜின் மூன்று அக்காவும் முதல் வரிசையில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க, அவர்களின் கணவன்மார்கள் தேவராஜிற்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.
அவ்தேஷ், கௌரேஷ், யுக்தேஷ் மூவரும் ரகுராம் அறையில் அவனோடு அமர்ந்துவிட்டனர். பட்டு வேட்டி பட்டு சட்டை உடுத்தி மாப்பிள்ளையாய் அழகாய் இருந்தான் ரகுராம். முயன்ற அளவிற்குத் தன்னை ஈடுபாட்டுடன் காண்பிக்க முயன்றான். மனக்கண்ணில் அவ்வப்போது காயத்ரி வந்து வந்து சென்றாள். மனதிற்குள்ளே அவளிடம் மன்னிப்பை யாசித்தான். அவனால் செய்ய முடிந்தது அது மட்டும்தானே? திரைப்படத்தில் காண்பிப்பது போல திடீரென திருமணத்தை நிறுத்தவோ கலாட்டா செய்யவோ முடியாதே. அது வெறும் பத்து நிமிடக் காட்சி. ஆனால் இது அப்படியல்ல. இரண்டு குடும்பங்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கை வேறு சம்பந்தப்பட்டிருக்கிறது. அதுவும் இல்லாது இத்தனை தூரம் அவன் விருப்பத்தின் பேரில் திருமண மேடைக்கு வந்தப் பிறகு அதை நிறுத்துவது எத்தனை அபத்தம் என அவனது அறிவுக்கு எட்டியதுதான். அவனால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான். திருமணம் முடிந்ததும் காயத்ரியை பார்த்து பேசி அவளது மனதை மாற்றுவது மட்டும்தான். ஆனால் அது அத்தனை எளிதல்ல என தன் மனமே அவனுக்கு எதிராய் போர்க்கொடி தூக்கியிருந்தது.
காலையில் எழுந்ததும் காயத்ரியின் குறுஞ்செய்தியில்தான் இவன் கண்விழித்தான். இனிய திருமண வாழ்த்துக்கள் சைந்தவி அண்ட் ரகுராம் என காலையிலே வாழ்த்தைப் பகிர்ந்துவிட்டாள். எப்படி இந்தப் பெண்ணால் எதுவுமே நடக்காதது போல இப்படி இயல்பாய் இருக்க முடிகிறது என அவனுக்கு இப்போதும் ஆச்சர்யம்தான். அந்த செய்தியை வாசித்தவனுக்கு கண்டிப்பாக இதை அனுப்பும்போது அவளுடைய மனநிலை என்னவென்று கணிக்க முடிந்தது. அதை வெறித்துவிட்டே திருமணத்திற்கு ஆயத்தமாகினான்.
இளவேந்தன் ஷிவதுளசி, மகிழ்வேந்தன் தீக்ஷிதா என நால்வரும் முன்னின்று அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தனர். சாம்பவி தங்கை சைந்தவியுடன் அறையில் இருந்தாள். மணப்பெண்களுக்கான அலங்காரம் காலை நான்கு மணிக்கே தொடங்கிவிட்டது. இன்னும் அது முடிந்தபாடில்லை. குழந்தைகள் நால்வரும் அறையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். சாம்பவி தான் நால்வரையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றிருந்தாள். எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தாலி கட்டுவதாக ஏற்பாடாகியிருந்தது.
ஐயர் மேடையில் மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்க, கீழே ஆயிரக்கணக்கான உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.‌ முக்கியமான அரசியல் பிரமுகர்களை அழைத்து வந்த இளவேந்தன் முன்னிருக்கையில் அமர வைத்து அவர்களை கவனித்தான். எவ்வித இடையூறும் இன்றி எல்லாம் சரியாய் நடந்து கொண்டிருந்தது.
காலையில் எழுந்து குளித்து கடினப்பட்டு சுரிதாரை அணிந்த காயத்ரி, ஷண்முகியிடம் தலையைப் பின்னலிட்டுக் கொண்டிருந்தாள்.
“இந்தக் கையோட கோவிலுக்குப் போகணும்னு என்னடி அவசியம்? ஹம்ம்... வலியோட இந்த சுடிதாரைப் போடணுமா நீ?” என அவர் திட்டியதையெல்லாம் காயத்ரி காதில் வாங்கவே இல்லை.
“கோவிலுக்குப் போய்ட்டு வந்து சாப்பிடலாம் அம்மாச்சி!” என்றவள் பொறுமையாய் பத்து நிமிடங்கள் நடந்து அருகிலிருந்த முருகன் கோவிலுக்குச் சென்றாள். இன்றைக்கு முகூர்த்த நாள் என்பதால் ஒரு பக்கமாய் தம்பதிகள் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களையே பார்த்த காயத்ரி எதுவும் கூறாது கோவிலைச் சுற்றி முடித்து அங்கே சன்னிதானத்தில் அமர்ந்தாள். பெரிதாய் மனதில் வேண்டுதல் எதுவும் அற்ற நிலைதான். என்னவோ கடவுளிடம் பாரத்தை இறக்கி வைக்கலாம் என எண்ணி அவள் வரவில்லை. ரகுராமிற்காகத்தான் வந்தாள். அவன் எந்தக் குழப்பமும் இன்றி சைந்தவி கழுத்தில் தாலி கட்டி அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இருவரும் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வேண்டியபடியே அலங்காரத்துடன் காட்சியளித்த முருகரைக் கண்களில் நிரப்பினாள். அலைபேசியில் செய்தி வந்திருந்தது.
“மேரேஜ் ஓவர் காயூ!” என்ற யுக்தா காணொளியைப் பகிர்ந்திருக்க, இவளது விரல்கள் லேசாய் நடுங்கின. அதைத் திறந்து பார்த்தாள். விழிகள் நீர் கோர்க்கப் பார்த்தது. இமையை சிமிட்டி உள்ளிழுத்தவள், ‘மிஸஸ் சைந்தவி ரகுராம்!’ என மனதிற்குள் உச்சரித்தாள். போதும், இத்தனை நாட்கள் அவள் மனதிற்குள்ளே நடத்திக் கொண்டிருந்த போராட்டம் முடிவிற்கு வந்திருந்தது.
‘என் ராம் வாழ்க்கையில சந்தோஷத்தை மட்டும் கொடுங்க முருகா. அவன் நல்லா வாழணும். அதைப் பார்த்தாலே எனக்கு மனசு நிறைஞ்சு போய்டும்!’ என அவருக்கு நன்றியுரைத்தவளின் ஒற்றைக் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் மட்டும் வெளியேற, அதைத் துடைத்துக்கொண்டு ஷண்முகியோடு வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

தொடரும்...





























































 
Active member
Messages
155
Reaction score
117
Points
43
Ennaku indha feel ah podhum pa
Gayuva romba azha vechachu iniyaachum ava transfer vangi andha place la oru peaceful aana life ah lead pannanum
 
Top