• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 14 💖
ரகுராம் காலையில் பேசிச் சென்ற வார்த்தைகளையே மனதில் மீண்டும் மீண்டும் கேட்க, காயத்ரி கண்ணில் வழிந்த நீரோடு கட்டிலில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். காயத்ரி என்றாலே தன்னம்பிக்கையும் நிமிர்வும் கொண்ட பெண் என்று எல்லோரும் கூறும் அளவிற்கு தெளிவானவள். ஆனால் இந்தக் காதல் அவளை வெகுவாய் பலவீனப்படுத்துவிட்டதை உணர்ந்தாள். சுயமாய் எதையும் சிந்திக்க முடியாது தடுமாறினாள்.
வேண்டாம் என்று உறுதியாய் இறுகிப் போயிருந்த மனம் ஏனோ இன்றைக்கு இளகிப் போயிருந்தது. இன்னும் நான்கு நாட்கள்தான். பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டாள் போதும். ரகுராமின் திருமணம் முடிந்துவிட்டால், இவளுக்கு நிம்மதிதான். ஆம், சர்வ நிச்சயமாய் நிம்மதிதான். இந்தப் பையன் தனக்கில்லை என்பதை வலிக்க வலிக்க ஏற்றுக் கொள்ளும் நாள் அதுதானே. வேறொருத்திக்குச் சொந்தமானவனை நினைப்பது பெரும் தவறென, முப்பொழுதும் ராம் என ஜெபிக்கும் மனதை மூளை சலவை செய்ய வேண்டும் என மெதுவாய் தன்னை சமன்படுத்திக் கொண்டவள் கையிலிருந்த புகைப்படத்தை மென்னகையுடன் பார்த்தாள். அவளது தோளில் ரகுராம் கைப்போட்டு நிற்கும் புகைப்படம் அது. கல்லூரி சுற்றுலாவின் போது எடுக்கப்பட்டது. அதை சின்ன படச்சட்டமாக மாற்றி மேஜை மீது வைத்திருந்தாள். மீண்டும் அந்த நாளுக்கே திரும்பி விட்டால் எப்படி இருக்கும் என நினைத்ததும் உதடுகளில் கசந்த முறுவல் பூத்தது. நடக்காத, தனக்கு கிடைக்காத ஒரு பொருளின் மீதுதான் இந்த மனது ஆசைப்படும் போல எண்ணி விரக்தியாகப் புன்னகைத்தாள்.
தொடர் சங்கிலி போல அடுத்தடுத்த குறுஞ்செய்தி வந்து விழுந்தற்கான சத்தம் கேட்டது. அலைபேசியை பக்கத்திலே வைத்திருந்தாலும் காயத்ரி அதைத் தொடவில்லை. சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க, இணையத்தை துண்டிக்க சென்றவளின் கண்கள், ராம் என்ற பெயரைக் கண்டதும் தளும்பி நின்றன. இனிமேல் உன்னிடம் பேசவே மாட்டேன் என காலையில் சூளுரைத்துச் சென்றவனின் உறுதியெல்லாம் காயத்ரி என்ற பெண்ணிடம் உதிர்ந்துவிட்டது போலும். இவளுக்கு முகம் முழுவதும் புன்னகை பிறந்தது.
‘என்னோட ராம்!’ என முணுமுணுத்தவள், அதைத் திறந்து படித்தாள். சரியான நேரத்திற்கு உணவு உண்டாயா? மாத்திரை எடுத்துக் கொண்டாயா? வலி பரவாயில்லையா? அமர்ந்து கொண்டே தூங்குவது சிரமமாய் இருக்கிறதா என ஆங்கிலத்தில் அடுக்கியிருந்தான். இவளுக்கு முறுவல் பூத்தது. அனைத்திற்கும் பதிலளித்தாள். சரியென்றதோடு அவன் முடித்துக் கொண்டான்.
செவ்வாய் கிழமை விடிந்ததும் தெரியாது மறைந்தது தெரியாது கடந்திருக்க, புதன் காலையிலே வீடெல்லாம் கசகசவென சத்தம். ரகுராம் இரவு தாமதமாக வந்ததால் காலையில் எழவும் நேரமாகிவிட்டது. கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான்.‌ தேவராஜின் மொத்தக் குடும்பத்தோடு கௌதமியின் நெருங்கிய உறவினர்களும் ஆக்கிரமித்திருந்தனர். அந்த சத்தத்திலே இவனுக்கு உறக்கம் தூரச் சென்றிருக்க, எழுந்து குளித்துவிட்டு இலகுவான உடை ஒன்றை அணிந்து வெளியே வந்தான்.
“வாடா மாப்பிள்ளை, என்ன இவ்வளோ தூக்கம்?” கௌரேஷ் இவன் தோளில் தட்ட, புன்னகைத்தான். சமையலறையில் தடபுடலாக உணவு சமைத்துக் கொண்டிருந்தனர். இவன் வந்து வெளியே மாமாக்களுடன் அமர்ந்தான். பொதுவாய் பேச்சு சென்றது.
“ராம்... வாடா, வந்து சாப்பிடு. நேரமாச்சு பாரு!” கௌதமி சமையலறையிலிருந்து எட்டிக் குரல் கொடுத்தார்.
“ஹம்மா... வரேன்!” என இவன் எழ, “மாமா... உங்க ஃபோன் அடிச்சிட்டே இருக்குது!” என சின்னவாண்டு ஒன்று இவனது அலைபேசியைக் கையில் கொடுத்தது. தவறி அழைப்பில் காயத்ரி பெயரைத் திரையில் கண்டதும் நொடியும் தாமதிக்காமல் அவளுக்கு அழைத்துவிட்டான்.
“ராம்...” அவள் குரல் சோர்ந்து வர, “காயூ, என்னாச்சு, ஆர் யூ ஓகே?” என இவன் படபடத்தான்.
“ராம், எனக்கு ஒன்னும் இல்ல. நீ பதட்டப்படாத. சும்மாதான் கால் பண்ணேன். நீ என்ன பண்ற?” எனக் கேட்டாள்.
“வேலை எதுவும் இல்ல, நீ சொல்லு!” என்றவன் மெதுவாய் நகர்ந்து வாயிலுக்கு வந்தான்.
“நிஜமா வேலை இல்லையா ராம்? நீ பிஸியா இருப்பீயோன்னு நினைச்சு யோசிச்சுட்டே கால் பண்ணேன்!” என அவள் தயங்க, “உன்னைவிட என்னைக்கும் எனக்கு வேலை முக்கியம் இல்ல காயூ. நீ என்னென்னு சொல்லு...” என அழுத்திக் கேட்டான்.
சில நொடிகள் மறுபுறம் நீண்ட நெடிய மௌனத்தைக் கலைத்தவள், “உன்னைப் பார்க்கணும் போல இருக்கு ராம். ஃப்ரியா இருந்தா மட்டும் வீட்டுக்கு வந்துட்டு போறீயா? வேலை இருந்தா வேணாம், நீ பாரு. அப்புறம் கூட வா!” என்றாள். குரலில் அத்தனை தயக்கம். மூன்றாவது மனிதரிடம் பேசுவது போன்றொரு பாவனையில் இவனுக்கு அதிகமாய் வலித்து தொலைத்தது. நினைத்த நேரம் அழைத்து வாவென்று அழைக்கும் உரிமை எங்கே போனதென்று இருவருக்கும் தெரியவில்லை. இப்போதெல்லாம் டா என்ற உரிமையான வார்த்தைக் கூட வடிந்து போயிருந்தது. மரியாதை இல்லை, ஆனால் அந்நியமாய் தெரிந்தது அவளின் செயல்கள்.
“இப்பவே வரேன்!” என்றான் ஒற்றை வரியில்.
“ஹம்ம்... ராம், வரும்போது பன் பட்டர் ஜாம் வாங்கிட்டு வா!” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
“ஹம்ம்... வாங்கிட்டு வரேன் காயூ!” என அழைப்பைத் துண்டித்தவன், “ம்மா... கொஞ்ச நேரத்துல வந்து சாப்பிட்றேன். முக்கியமான வேலை இருக்கு...” என வண்டி சாவியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறிவிட்டான்.
அவள் கேட்டதை வாங்கிக் கொண்டு ரகுராம் உள்ளே நுழைய, காயத்ரி கூடத்தில் அமர்ந்திருந்தாள். இவனைப் பார்த்ததும் சோபையாய்‌ புன்னகைத்தாள். கண்களில் ஜீவன் குறைந்திருந்தது. இவனுக்காக முயன்று உதடுகளில் முறுவலைக் கொண்டு வந்திருக்கிறாள் எனப் பார்த்ததும் புரிந்து போனது. இரண்டு நாள் முன்பு பார்த்ததை விட இன்னுமே இந்தப் பெண் மெலிந்து விட்டாள் என மனம் அரற்றியது. இத்தனை விரைவில் எப்படி எடை குறையுமென மருத்துவராய் மனம் ஆராய்ந்தது.
“வா ராம்!” என்றாள் மெதுவாய் நிமிர்ந்து அமர்ந்து. கை வலியை கூட முதுகும் குறுக்கும் வலி பின்னியது. முழுதாய் ஆறு நாட்கள் படுக்கவே இல்லையே. உட்கார்ந்தே இருந்ததில் பின்புறம் முழுவதும் வலிதான்.
“ரகு தம்பி, நல்லா இருக்கீயா பா?” என்ற ஷண்முகியை எதிர்பாராதவன், “ஹம்ம்... நல்லா இருக்கேன் பாட்டி. நீங்க எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டான்.
“எங்கப்பா நாங்க நல்லா இருக்கது. இதோ, இவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டா, எங்களுக்கு நிம்மதி. பையன் உனக்கே உங்க வீட்ல கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க. பொட்டப் புள்ளை இது பேச்சைக் கேட்காம ஆடீட்டு திரியுது!” என அவர் தொடங்கியதும், “அம்மாச்சி,‌ ஜோசியரைப் பார்க்க கிளம்பலையா நீ? அப்புறம் கூட்டமாகிடப் போகுது!” என அவரைத் திசை திருப்ப முயன்றாள்.
ரகுராமும் அப்போது அவரைத்தான் கவனித்தான். வெளியே செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். கையில் ஒரு சிறிய மஞ்சள் பை இருந்தது. அதில் காயத்ரியின் ஜாதகம் வைத்திருந்தார்.
“என்னைக் கிளப்புறதுலயே குறியா இருடி!” என நொடித்தவர், “சாப்பிட்டு மாத்திரை போடுடி‌. நாங்க போய்ட்டு ஜோசியரைப் பார்த்துட்டு வர நேரமாகும். நான் இருக்கும்போதே சாப்பிடுன்னா, பசிக்கலைன்னுட்டா!” என்றவர், “தம்பி, கொஞ்ச நேரம் பார்த்துக்கோங்கபா. நானும் மாப்பிள்ளையும் போய்ட்டு ஒரு மணி நேரத்துல வந்துடுவோம்!” என இவனிடம் அவர் கூற, “ஒன்னும் பிரச்சனை இல்லை பாட்டீ. நீங்க போய்ட்டு பொறுமையா வாங்க. நான் காயூவைப் பார்த்துக்கிறேன்...” என அவன் தலையை அசைத்தான். தங்கராஜூம் ஷண்முகியும் காயத்ரியின் இருசக்கர வாகனத்தில்தான் கிளம்பினர்.
இவன் அவளுக்கு அருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். பின்னர் கையிலிருந்த பன்னை அவளிடம் கொடுக்க, “பிரிச்சு குடு ராம்!” என்றாள். அவன் நெகிழிப் பையை நீக்கி கொடுக்கவும், அதை இரண்டாகப் பிரித்தவள், “சாரி ராம்...” என்றாள் அவனை நோக்கி கையை நீட்டியவாறு. சமாதான உடன்படிக்கைக்கான முதல்படி இதுவென ரகுராமிற்குப் புரிந்தது. வார்த்தையேதும் உரைக்காது அதை வாங்கிவன் வாயில் வைத்ததும் இவளும் உண்டு முடித்து நேரே நிமிர்ந்து அமர்ந்தாள்.
“ராம்... முதுகு ரொம்ப வலிக்குது. போய் ஒரு பில்லோ எடுத்துட்டு வாயேன்...” என இவள் கூறியதும் அவன் எடுத்து வந்து இவளது முதுகிற்குப் பின்னே வசதியாய் வைத்தான். அதில் சாய்ந்தமர்ந்தவள், அவனைப் பார்த்து புன்னகைக்க, அவனது முகம் வந்ததிலிருந்து இறுகியே இருந்தது. ஒரு வார்த்தைக் கூட இவளிடம் உதிர்க்கவில்லை. சிறு சிரிப்பு கூட இல்லை என காயூவின் மனம் சுணங்கிப் போனது.
“சாரி ராம், நான் உன்னை ரொம்ப கஷ்டப்டுத்துறேன் இல்ல. சாரி டா! கொஞ்சமாச்சு சிரியேன். எப்பவுமே சிரிச்சு கலகலன்னு இருந்தாதான் அது ராம். இப்படி உம்முனா மூஞ்சியா இருக்காத டா. சகிக்கலை!” என அவள் கேலியாக அதட்டல் போட, அவனிடம் பெரிதாய் எதிர்வினை இல்லை.
“சரி, நீ இப்படி மூஞ்சியைத் தூக்கி உக்கார்ந்திருக்கதுக்கு வீட்டுக்கே கிளம்பிடு டா. எனக்கு கஷ்டமா இருக்கு. என்னாலதான் நீ இப்படி இருக்கன்னு. போய் மேரேஜ் வேலை இருந்தா பாரு ராம்!” என்றாள் வருத்தமும் கோபமுமாய்.
அவளது முகத்தைப் பார்த்த ரகுராம், “காயூ, உன் உடம்புக்கு வேற எதுவும் பிரச்சனையா? ரெண்டு நாள்ல வெயிட் லாஸ் ஆன மாதிரி இருக்க. முகம் டல்லாகிடுச்சு. டார்க் சர்கிள்ஸ் வந்துடுச்சு. யூ லுக் வெரி டயர்ட். ஹாஸ்பிடல் வர்றீயா? ஒரு செக் பண்ணலாமா டி?” என அக்கறையாகக் கேட்டவனை இவள் அன்பாய் பார்த்தாள்‌. எத்தனைக் கோபம் பிணக்குகள் மனஸ்தாபங்கள் இருந்தப் போதும் அவளுக்கென்று வரும்போது ரகுராமிடம் எப்போதும் அன்பு குறைந்தது இல்லையென எண்ணியமும் முகம் மலர்ந்தது.
தலையணையை நீள்விருக்கையின் ஒருமுனையில் வைத்து சாய்ந்தமர்ந்தவள், கால்களை நீள்விருக்கையில் நீட்டினாள்.
“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல ராம். நான் நல்லா இருக்கேன் டா. வெயிட் லாஸ் ஆன மாதிரி எனக்குத் தோணவே இல்லை. மூனு வேளைக்கு ஐஞ்சு வேளையா அம்மாச்சியோட கைமணத்துல சாப்பிட்டு வெயிட் கூடி தொப்பை வச்ச போல இருக்கு!” என்றாள் சிரித்து. அவன் முகம் இன்னுமே இலகுவாகவில்லை.
“ராம், சாப்டீயா நீ?” என அவள் கேட்க, இவன் இல்லையென தலையை அசைத்தான்.
“எனக்கும் பசிக்குது டா. அம்மாச்சி இட்லி சுட்டு சாம்பார் வச்சிருக்காங்க. ஒரு தட்ல ஆறு இட்லியை வச்சு எடுத்துட்டு வா, சாப்பிடலாம்...” என அவள் கூறியதும் எழுந்து சென்று தட்டில் இட்லிகளோடு வந்தமர்ந்தான்.
“ஊட்டி விடுடா...” என அவள் வாயைத் திறக்க, இவனே ஊட்டிவிட்டான். இரண்டு வாய் வாங்கிவள், “ஏன் ராம், கல்யாணத்துக்குப் பின்னாடி எனக்கு இந்த மாதிரி ஊட்டி விடுவீயா டா? உன் பொண்டாட்டிகிட்டே பர்மிஷன் வாங்கிட்டு வந்து ஊட்டுவீயா டா? அவங்க வேணாம்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ?” என அவள் கேட்க, இவன் அவளை முறைத்தபடியே உணவை வாயில் அடைத்தான்.
மூன்று இட்லிகளை உண்டு முடித்தவள், “போதும் ராம்‌. நீ சாப்பிடு. இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கோ டா. உனக்கு மூனு பத்தாதது!” என அவள் கூறுவதைக் கேட்காதவன் மூன்று இட்லியை உண்டு முடித்து கையைக் கழுவிவிட்டு வந்து அமர்ந்தான். இருவரிடமும் கனத்த மௌனம்.
“அப்புறம் கல்யாண மாப்பிள்ளை, எப்படி போகுது வேலையெல்லாம். கார்த்திகாவுக்கு இன்விடேஷன் கொடுத்தேன்னு சொன்னா. ஊர்ல இருந்து உன் அத்தைங்க எல்லாம் வந்துட்டாங்கன்னு யுக்தா சொன்னான்!” இவள் ஆர்வமாய் விசாரித்தாள்.
“ஆமா...” என அவனிடம் ஒற்றை வரி பதில்தான். அவளைப் போல அவனிடம் பெரிதாய் ஆர்வமில்லை.
“ஹம்ம்... சைந்தவி கிட்டே பேசுனீயா டா? என்ன சொல்றாங்க அவங்க. இன்னும் ரெண்டு நாள்ல மேரேஜ். நல்லா ஜாலியா இருக்க வேணாமா ராம். ஏன் முகத்தை இப்படி இறுக்கமா வச்சிருக்க நீ‌. நல்லாவே இல்லை டா...” குறைபட்டாள் பெண்.
அவளை அழுத்தமாய் பார்த்த ரகுராம், “உன்னை மாதிரி பொய்யா நடிக்கத் தெரியாது காயூ எனக்கு. நான் இப்படித்தான். நிமிஷத்துக்கு நிமிஷம் ஒரு மாதிரி பேசுற நீ. பார்க்கவே டல்லா இருக்க. உடம்பு சரியில்லை. ஏன்னு உரிமையா கேட்க கூட முடியாத இடத்துல என்னை வச்சிருக்க நீ? நீயா வரக்கூடாதுன்னு சொல்ற. இதோ, இப்ப எதுவுமே நடக்காத மாதிரி கூப்ட்டு வச்சு பேசுற? எப்படி டி என்னால சந்தோஷமா இருக்க முடியும். உன்னை இப்படி பார்த்துட்டு என்னால நிம்மதியா வேலை கூட பார்க்க முடியலை. என்ன வேலை செஞ்சாலும் உன் மூஞ்சிதான் கண்ணு முன்னாடி நிக்குது காயூ!” என அவன் ஆற்றாமையாய் முடித்ததும் காயத்ரியின் விழிகள் கலங்கப் பார்த்தன.
சிமிட்டி அதை உள்ளிழுத்தவள், “என்னை இந்தளவுக்குப் பிடிக்குமா ராம் உனக்கு?” என அவள் ஆசையாய்க் கேட்க, இவன் பதிலில்லாமல் அவளைப் பார்த்தான்.
“உன்கிட்டதான் கேட்குறேன் ராம். என்னை ரொம்ப பிடிக்குமா டா உனக்கு?” என அவள் மீண்டும் கேட்க, “ஏன் உனக்குத் தெரியாதா காயூ அது? ஒரு சைந்தவி இல்ல, நூறு சைந்தவி வந்தா கூட காயூவோட இடத்தை ரீப்ளேஸ் பண்ண முடியாது. அவ அவதான். அவளுக்கான என்னோட அன்பு எப்பவுமே ஸ்பெஷல் தான்!” என அவன் கூறி முடித்ததும் இவளது கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வடிந்தது. அதை இடது கையால் துடைத்தவள், “ராம்... இந்த இடத்துல வலிக்கிற மாதிரியே இருக்கு. என்னென்னு பார்க்குறீயா டா?” எனக் அடிபட்டக் கையைக் காண்பித்துக் கேட்டாள்.
நொடியும் தாமதிக்காமல் எழுந்து வந்து அவளுக்கு அருகே முட்டிப் போட்டு அமர்ந்தவன், அவளது கட்டை ஆராய்ந்தான். “ராம்...” என்றழைத்த காயத்ரியின் குரல் தடுமாறியது.
“ஹம்ம்...” என்றவன் வேலையில் கவனமாய் இருந்தான்.
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ராம். இப்பவிட்டா எப்பவுமே சொல்ல முடியாதுன்னு தோணுது டா!” தயங்கிபடி உரைத்தவளை அவன் நிமிர்ந்து பார்த்தான்.
“ஐ லவ் யூ ராம்!” என விழிகள் தளும்பி நிற்க ஆசையாய் அவனைப் பார்த்து உரைத்தவள், அப்படியே குனிந்து அவனது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு விலகியிருந்தாள். ரகுராம் துடித்துப் போய் அவளிடமிருந்து எழுந்து நின்றான். அவனுக்கு உடல் முழுவதும் ஒரு நொடி அதிர்ந்து போனது. அவனது முகத்தைப் பார்த்த போதுதான் காயத்ரிக்கு தன்னுடைய செயலின் வீரியம் புரிந்தது. உணர்ச்சி வேகத்தில் உரைத்துவிட்டாள். ஆனால் இந்நொடியை எப்படி கடப்பதென தெரியாது விழிகள் அணைக்கட்டி நின்றன.
கண்களில் குபுகுபுவென கண்ணீர் வடிய, “ராம்... சாரி. சாரி டா, நான்... நான் ஒரு லூசு டா. நீ வீட்டுக்கு கிளம்பு!” என்றாள் அழுகையை அடக்கிய குரலில். தொண்டை வரை வந்த ஏதோ ஒன்று அடைத்தது. அவன் அதிர்ச்சி விலகாது நின்றான்.
“ராம், ப்ளீஸ், இங்கருந்து கிளம்புடா... நம்ப அப்புறம் பேசிக்கலாம்!” என்றாள் தவிப்பாய். எத்தனை முயன்றும் வார்த்தைகள் உதடுகளைத் தாண்டிவிட்டன. இப்படியொரு சூழ்நிலையை அவளுமே எதிர்பார்க்கவில்லை. ஏனோ இன்னும் இரண்டு நாட்கள் மட்டும்தான் இவன் தன்னுடைய ராம். எப்படியாவது ஒரே ஒருமுறையேனும் தன் மனதை அவனிடம் வெளிப்படுத்திவிட வேண்டும் என காதல் கொண்ட மனம் முந்தியிருந்தது. இந்நொடியை தவறவிட்டு விட்டால் ஜென்மத்திற்கும் அவனிடம் காதலை உரைக்க முடியாது. அதனாலே என்ன வந்ததாலும் பார்த்துக் கொள்ளலாம் என காதலை அவனுக்குத் தெரியப்படுத்திவிட்டாள்.
“ராம்... உன்கிட்ட தான் சொல்றேன். காதுல விழலையா டா?” என அவனை அதட்டியவள் மீண்டிருந்தாள். அவளை மீறி நடந்த விஷயம்தான். இதனை மேலும் வளர்க்க விரும்பாது அவனை அப்புறப்படுத்த முயன்றாள். அடுத்து என்னவென சிந்திக்கும் திறனற்று மூளை மழுங்கிப் போயிருந்தது. சிறிது நேரம் அவளை அவளாக சமாதானம் செய்யத் தேவைப்பட்டது.
ரகுராம் முதற்கட்ட அதிர்ச்சி நீங்கி இருக்கையில் அமர்ந்து தலையைக் கைகளில் தாங்கினான்.‌ “என்னாச்சுன்னு எனக்கு இப்போ தெரியணும் காயூ!” என அவன் அழுத்தமாய்க் கேட்க, காயத்ரி விழிகளை சிமிட்டி கண்ணீரை அணை போட்டு தடுத்தாள்.
“ஒன்னுமே ஆகலை ராம். நான்.‌‌.. நான் ஏதோ உன் மேல இருக்க பொஸஸீவ்ல எதோ உளறிட்டேன் டா. இது ஜஸ்ட் இப்போ என்னையும் அறியாம வந்துடுச்சு ராம். இதுக்கெல்லாம் நீ இம்பார்டென்ஸ் கொடுக்கணும்னு இல்ல. லீவ் இட்?” என்றாள் தடுமாறி தவித்த குரலில். அவளை நிமிர்ந்து பார்த்த ரகுராம் இல்லையென தலையை அசைத்தான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் கண்ணுல பார்த்தது, முகத்துல தெரிஞ்ச எதுவும் பொய்னு எனக்குத் தோணலை காயூ” அவன் அவளை ஆழ்ந்து பார்த்து உரைத்ததும் இவளுக்கு மீண்டும் கண்களில் ஈரம் சுரந்தது.
இருக்கையில் தலையை சாய்த்து கண்ணை மூடியவள், “ஹம்ம்... உண்மைதான் ராம். எஸ், ஐ லவ் யூ. பட், நான் உனக்கு தகுதியானவ இல்ல ராம். யூ டிசர்வ் பெட்டர் லைஃப் பாட்னர் லைக் சைந்தவி. அவங்கதான் உனக்கு ரொம்ப பெர்பெக்ட் மேட்ச் டா. நான்.‌. எனக்கு எந்த தகுதியுமே இல்லை டா. நான் உன் மேல ஆசைப்பட்றது எல்லாம் பேராசை இல்ல ராம்?” எனக் கண்களில் வழிந்த கண்ணீரோடு அவள் நிராசையாய்க் கேட்டு விரக்தியாய் புன்னகைக்க, ரகுராம் அவளை அதிர்ந்து பார்த்தான். இந்நொடி கூட அவனால் நம்ப முடியவில்லை. கனவு கண்டு கொண்டிருக்கிறோமா என்ன என மனம் சந்தேகித்து தொலைத்தது. ஆனால் எதிரிலிருந்தவளின் கண்ணீர் பொய்யில்லை உண்மை என உரக்கக் கத்தியது. அசையாது அமர்ந்திருந்தான்.
“நானும் எத்தனை நாள்தான் டா வலிக்காத மாதிரியே நடிக்கிறது. யெஸ், ஐ லவ் யூ. இன்னைக்கு நேத்து இல்ல ராம். பத்து வருஷமா லவ் பண்றேன். விவரம் தெரிய ஆரம்பிச்சதுல இருந்து இந்த ராமை தவிர யாருக்கும் என் வாழ்க்கைல இடம் இல்லைன்னு ஸ்ட்ராங்கா நம்புனேன் டா. ஆனால், எல்லாருக்கும் ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்குதா என்ன? இந்தக் குடிகாரனோட பொண்ணை உங்கப்பா வீட்டுக்குள்ளயே சேர்க்க இஷ்டப்படலை. அப்புறம் எப்படிடா வீட்டு மருமகளா ஏத்துப்பாரு. அவரோட எதிர்பார்ப்புக்கு எல்லாம் நான் இல்லைல ராம்?” எனக் கேட்டவளிடம் மெலிதான தேம்பல். ஏனோ உண்மைதான் எனினும் அதைக் கூறும் போது அவளுக்கு அதிகமாய் வலித்தது. எங்கேயும் அவள் மீது தவறில்லை. அவள் உண்மையாய்தானே இவனைக் காதலித்தாள். ரகுராம் அவளுடைய வாழ்க்கையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனைத் தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்ள கூட காயத்ரின் காதல் கொண்ட மனம் தயாராகவில்லை. ராம் என்பவன் அவளின் ஆதியோடு அந்தமாய் பிணைந்து போயிருந்தான். காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு வரும் வரை ராம் என்ற பெயரோடு அவன் சம்பந்தப்பட்ட அனைத்தும் அவளது வாழ்வில் இன்றியமையாதவை. அப்படி இருக்கையில் அவனை விட்டுக் கொடுத்தல் என்பது அத்தனை எளிதாய் இல்லையே. தனக்குள்ளே போராடி தோற்றுப் போயிருந்தாள். மிக மகி மோசமாய் தோற்றிருந்தாள். அழுகை வெடித்துச் சிதறியது. தனக்கு வலித்ததை விட தாயிடம் சொல்லி அழும் குழந்தையாய் அவனிடம் அழுது காண்பித்து அரவணைப்பை தேடியது மனம். தவறுதான், இரண்டு நாட்களில் வேறு ஒருத்திக்குச் சொந்தமாகப் போகிறவனிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது எத்தனை தவறென மனம் கூற, சுயநல மனம் அதை தட்டிவிட்டது. அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்த முடிவெடுத்துப் பேச்சைத் தொடர்ந்தாள்.
“ப்ம்ச்... நீ என்னைக்குமே என்னை ப்ரெண்டா தானே பார்க்குற ராம். உன்கிட்ட வந்து லவ் அது இதுன்னு பினாத்திட்டு நிக்கவும் கில்டா இருந்துச்சு டா. எந்த வகையிலயுமே சாத்தியம் இல்லாத ஒருத்தன் மேல எந்த நம்பிக்கைல ஆசை வச்சேன்னு டெய்லி அழுகையா வரும் டா. அம்மா போனப்போ கூட இவ்வளோ நாள் அழுதேனான்னு தெரியலை ராம். நீ என்னை விட்டுப் போறேன்னு சொன்னதும் மொத்தமா யாரோ என்கிட்ட இருந்து எல்லாத்தையும் பறிச்சுக்கிற மாதிரி இருந்துச்சு டா. கோபம்தான், என் மேல இருக்க கோபத்துல தான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் டா!” என்றாள் தேம்பலாய். அழுகை குறைய மாட்டேன் என்றது. இத்தனை நாட்கள் மனதில் வைத்து புழுங்கியது. இப்போது வார்த்தைகளாய் வெளி வரும்போது இன்னுமே அழுகை பொங்கியது.
“நான் உனக்கு வேணாம் ராம். அதுல ஸ்ட்ராங்காதான் இருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல நீ சைந்தவிக்கு சொந்தமாகிடுவன்னு பயம் வந்ததும் மனசுல இருந்ததை உளறிட்டேன் டா. மத்தபடி தப்பா எதுவும் நினைக்காத ராம். யாரு என்னைப் பத்தி என்ன நினைச்சாலும் நான் கவலைப்பட்ற ஆள் இல்ல. ஆனால் நீ என்னை வெறுத்துடாத ராம்?” என்றாள் அழுகையை அடக்கிய குரலில். ரகுராம் பதிலுரைக்காது அவளையே பார்த்தான்.
“நீங்க நினைக்கிற மாதிரி நான் ரொம்ப ஸ்ட்ராங்க பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை டா. நீன்னு வரும்போது என்னால எதையும் தெளிவா செய்ய முடியலை டா. அழுகையா வருது. எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போய்டலாமான்னு கூட நினைச்சிருக்கேன் டா. தப்புதான்... ஆனாலும் சைந்தவியையும் உன்னையும் ஒன்னா பார்த்தா எனக்கு ரொம்ப வலிக்குது டா. எவ்வளோ சீப்பான கேரக்டர் நான்னு என்னை திட்டிப்பேன் டா. பொறாமை இல்லைன்னு சொல்ல மாட்டேன். என்னோட ராம்னு இத்தனை நாள் இருந்தவன் சட்டுன்னு இன்னொருத்திக்கு சொந்தமாகப் போறான்னதும் தூக்கமே வரலை டா. சாப்பிட முடியலை. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கேன் டா. உன் கல்யாணம் வரைக்கும் தாக்குப் பிடிச்சா போதும்‌ அப்புறம் அடுத்தவ புருஷனை நினைக்குறது பாவம்னு நானா மனசை தேத்திக்கலாம்னு நினைச்சிருந்தேன் டா!” என்றாள் கட்டிலில் சாய்ந்து முறுவலித்து. வலிக்க வலிக்க பேசினாள்.‌ அவனுக்கும் வலித்ததுதான். கண்கள் மெலிதாகக் கலங்க, அவளையே பார்த்திருந்தான் ரகுராம்.
“நான் ரொம்ப பேசுறேன்ல ராம். நீதானே என்ன என்னன்னு கேட்ட? அதான் மொத்தமா கொட்டி கவுத்திட்டேன் போல?” எனக் கேட்டு கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
“ராம்...” என அன்பாய் அழைத்தாள். குனிந்திருந்த தலையை நிமிர்த்தியவன் முகம் உணர்வுகளற்று கிடந்தது.‌
“நான் என்னைக்கும் உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு நினைச்சதே இல்லை ராம். உனக்கே தெரியும். அம்மாவுக்கு அடுத்து நீதான் எனக்குன்னு. அப்படி இருக்கும்போது உன்னை எங்கேயும் ஹேர்ட் பண்ணிடக் கூடாதுன்னு தோணிட்டே இருக்கு டா. ஹெஸ், ஐ லவ் யூ. பட், நீ என் கூட காலம் முழுக்க வாழ்ந்தாதான் அது காதல்னு இல்ல. உனக்கு சைந்தவியை எவ்வளோ பிடிக்கும்னு ஒவ்வொரு டைம் நீ சொல்லும் போது உன் முகத்துல பார்த்திருக்கேன் டா. அவங்கதான் உனக்கு சரியா இருப்பாங்க. ரொம்ப நல்ல பொண்ணு டா. நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருந்தா போதும் ராம். என் கூடவே இருன்னு என்னைக்கும் கட்டாயப்படுத்த மாட்டேன். அதே மாதிரி நீ என் மேல வச்சிருக்க அன்பையும் ஃப்ரெண்ட்ஷிப்பையும் வச்சு ப்ளாக் மெயில் எல்லாம் பண்ண மாட்டேன் டா. நான் கெட்டப் பொண்ணு எல்லாம் இல்ல டா. கொஞ்சம் நல்லவதான். என்ன ராம்னு வரும்போது மட்டும் செல்பிஷ்ஷா நடந்துக்கிறேன் இல்ல?” எனப் புன்னகையுடன் கேட்டாள். பேச பேச கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேதான் இருந்தது.
“ப்ம்ச்... இந்த கண்ணீர் வேற டா. நானே கன்ட்ரோலா இருந்தா கூட கண்ணுல தண்ணி வந்ததும் வீக்கா ஃபீல் பண்றேன் டா. இது நானே இல்லை. நான் ரொம்ப ஸ்ட்ராங்க் ராம். இதெல்லாம் என்னால க்ராஸ் பண்ண முடியும் டா. ரெண்டு நாள் அழுவேன் டா. அவ்வளோதான். அப்புறம் என் வாழ்க்கையைப் பார்த்துட்டு போய்டுவேன் நான். நீ எனக்காக எங்கேயும் வருத்தப்படக் கூடாது ராம். நான் எப்பவும் சொல்றது தான். என்னை என்னால பார்த்துக்க முடியும் ராம்!” என்றாள் முயன்று வரவழைக்கப்பட்டக் குரலில். தனக்காக கூட ரகுராம் எங்கேயும் வருந்தக் கூடாது என காதல் கொண்ட மனம் அவனுக்காக கரிசனத்தை உதிர்த்தது.
“போதும் ராம்...நீ கிளம்பு.‌ நான் எதாவது உளறிட்டே இருப்பேன். அம்மா உன்னைத் தேடப் போறாங்க!” என்றாள் புன்னகைத்து. நான் நன்றாய் இருக்கிறேன் எனக் கூற முயன்றாள். ஆனாலும் முடியாது விழிகள் கலங்கித் தளும்பி நின்றன.
“வேணும்னு கீழே விழுந்து கையை உடைச்சிட்டீயா காயூ?” அவன் கேட்டதும் இவளிடம் நொடி நேர அதிர்ச்சி. பின்னர் சின்ன சிரிப்புடன் நான்கு புறமும் தலையை ஆட்டினாள். ஆனால் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. வேண்டுமென்றே கீழே விழுந்து கையை உடைத்திருக்கிறாள் என.
“ஏன் டி?” என அவன் குரல் வேதனையை சுமந்து வர, அவனை சில நொடிகள் வார்த்தைகளற்றுப் பார்த்தாள்.
“கை தானே ராம்? போனா போகுதுன்னு தோணிடுச்சு போல. அதான் இன்னொரு கை இருக்கே. அதை வச்சு வாழ்ந்துடலாம்னுதான். ரெண்டு இருக்கதால, ஒன்னோட மதிப்பு தெரியலை போல எனக்கு” எனக் கேட்டு கேலியாகச் சிரித்தவள், “ஆனாலும் உங்கம்மா அப்படி கேட்ருக்க கூடாது டா. நாத்தனார் முடிச்சை போட சொல்லுவங்களாம். மேடைல நிக்க வச்சு உண்மையா போட சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பயமா இருந்துச்சு டா. அப்படி மட்டும் நடந்தா செத்துடுவேன் டா. அதான் கை போனா போகுதுன்னு விழுந்துட்டேன். இந்த ஜென்மத்துல உன்னை வேற எப்படியும் என்னால பார்க்க முடியாது ராம். உங்கம்மா கிட்ட போய் இதை சொன்னா, சீ-ன்னு பார்த்துடுவாங்க டா. உன்கிட்டயும் சொல்ல முடியாது.
 
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
என்னை வேற என்ன பண்ண சொல்ற. அதான் வேணும்னே விழுந்தேன் டா. ஆனாலும் கீழே விழுகும்போது உயிரே இல்லை என்கிட்ட. கை மட்டும் போச்சுன்னா பரவாயில்லை. பாவம், என்னை நம்பி ஒரு மனுஷன் இருக்காரே. அவரைப் பார்த்துக்கவாச்சும் இந்த உயிரைப் பிடிச்சு வைக்கணும்னு பயத்தோடதான் விழுந்தேன்!” என்றாள் வேதனையான குரலில். அதன் பின்னிருந்த வலியை இவனால் உணர முடிந்தது. ரகுராமிடம் பேச்சே இல்லை. இப்படியொரு சூழ்நிலையை அவன் கிஞ்சிற்றும் எதிர்பார்க்கவில்லையே. இதுவரை காயத்ரியை அவன் தோழி என்ற எண்ணத்தை தாண்டி வேறு எப்படியும் பார்த்தது இல்லை. இரண்டு நாட்களில் வேறு ஒரு பொண்ணோடு திருமணம். உயிர் தோழி காதல் என்று வந்து நிற்கிறாள். அவனது சர்வ அவையங்களும் மொத்தமாய் செயலிழந்து போலொரு எண்ணம். எவ்விதம் இதைக் கையாள்வது என அவனுக்கு சத்தியமாய் தெரியவில்லை. அத்தனை பக்குவப்பட்ட மனிதன் இல்லையே அவன். இதோ அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்திவிட்டு, நான் நன்றாய் இருக்கிறேன் என அரிதாரத்தைப் பூசிக் கொண்டிருப்பவள் போல அவனால் நடிக்க முடியாதே.
அவன் அப்படி அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் காயத்ரிக்கு மனம் பிசைந்தது. எழுந்து அவனருகே வந்து நின்றவள் ஒரு நொடி அவன் தலையைக் கோத கைகளை உயர்த்திப் பின்னர் பின்னிழுத்தாள்.
“ராம், ரொம்ப போட்டு குழப்பிக்காத டா. கல்யாணம் நல்லபடியா முடியணும். நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு டா!” என்றாள் முழுவதும் தெளிந்த குரலில். ரகுராம் அவளது முகத்தையே பார்த்தான்.
இவள் அவனை கவலையாகப் பார்த்தவள், “ராம்...” என அழைத்தாள். எதுவும் உரைக்காது அவன் எழுந்து நடந்தான்.
“ராம்...” பெண்ணின் குரல் தயங்கியது. திரும்பி பார்க்காது நின்றான்.
“நான்... நான் மேரேஜ்க்கு வரலை டா. ரொம்ப ஸ்ட்ராங்க்னு நினைச்சிட்டு இருந்தேன் ‌ நான். பட், உன்னோட எங்கேஜ்மெண்ட்லயே என்னால உனக்கு கஷ்டம்தான் வந்துச்சு. மேரேஜ்லயும் அப்படி எதுவும் நடக்க வேணாம்னு நினைக்கிறேன் டா. சந்தோஷமா இரு டா. நான் வரலைனாலும் என் மனசு அங்கதான் இருக்கும். வந்தாலும் மனசார வாழ்த்துவேனான்னு தெரியலை. என் மனசே பொறாமை பட்டு எதுவும் சாபம் கொடுத்துடும் டா. ஏன்னா, நானும் மனுஷிதானே. புத்தர் இல்லைல. அதனாலே என்னை எங்கேயும் எக்ஸ்பெக்ட் பண்ணாத டா!” என்றாள் வலி நிறைந்த குரலில். அதை அவனுக்கு காட்டாதிருக்க பிரம்மபிரயத்தனப்பட்டாள். அவன் அசையாது நின்றான்.
“அப்புறம் முக்கியமான விஷயம் ராம். சைந்தவி உன்னோட ப்யூச்சர் வொய்ப் தான். பட், நான் பேசுனதை எல்லாத்தையும் அவங்க கிட்டே சொல்லிடாத டா. எனக்கு கஷ்டமா இருக்கும். அண்ட் டோன்ட் வொர்ரீ, நான் உன்னை டிஸ்டர்ப் எல்லாம் பண்ண மாட்டேன் ராம். நீ உன் லைஃபை சைந்தவியோட நிம்மதியா லீட் பண்ணலாம். நான்.‌‌.‌. நான் ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கேன். அம்மாச்சியோடு ஊருக்கே போய்டலாம்னு இருக்கேன் ராம். உனக்காக இல்லைனாலும் எனக்காக இனிமே என்னை மீட் பண்ண வராத ராம். இதுவே லாஸ்ட் மீட்டிங்கா இருக்கட்டும். எங்க இருந்தாலும் உன்னைப் பத்தி தெரிஞ்சு உன்னோட ஒவ்வொரு வளர்ச்சிக்கும் சந்தோஷப்படுவேன் டா நான். சோ, எங்கேயும் தேங்கி நிக்காம உன் கோலை நோக்கி ஓடிட்டே இருடா!” என சிரிப்புடன் அவன் முன்னே வந்தவள், “கோபம் வந்தா ரெண்டு அறை கூட அறைஞ்சுக்கோ ராம்‌. பட், ஒரே ஒரு தடவை உன்னை ஹக் பண்ணிக்கிறேன் டா. நீ ஃப்ரெண்டா நினைச்சுக்கோ!” என கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவள், ஒரு கையை அவன் முதுகோடு சேர்த்து அணைத்து அவன் கழுத்தில் முகம் புதைத்து அவன் வாசத்தை கடைசி முறையாக உள்ளிழுத்துக் கொண்டாள். இதுதான் இந்தப் பையனை கடைசியாக ஸ்பரிசிப்பது என நினைத்ததும் நெஞ்சடைத்துக் கொண்டு வந்தது. நிறைவேறாத காதலோடு வாழ வேண்டும் என்ற விதியை இந்நொடி வெறுத்துப் போனாள். இவனில்லாமல் எப்படி வாழப் போகிறோம் என்ற கேள்வியே அவளை அச்சுறுத்தியது. அவனுள் இறுகப் புதைந்தாள்.
ரகுராம் உடல் விறைத்து போய் நின்றான். மீண்டும் அவன் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டவள் இரண்டு கண்களிலும் கன்னத்திலும் முத்தமிட்டு உதடுகளில் முத்தமிட தயங்கி, தாடையில் இதழ் பதித்து விலகினாள். அவள் கண்களில் சரசரவென இறங்கிய நீர் ரகுராம் முகத்தை தொட்டு மோட்சம் பெற்றது.
“போய்ட்டு வா ராம். நான் ஓகே ஆகிடுவேன். ஜஸ்ட் நடந்ததை ஒரு கனவா நினைச்சு மறந்துடு டா!” என கண்ணீரோடு புன்னகைத்தவளைப் பார்த்தவன், விறுவிறுவென அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்காக ஓடியிருந்தான். அவனை ஆதியும் அந்தமுமாக ஒரு முறை கண்களில் நிரப்பிக் கொண்ட காயத்ரி வேரோடிப் போயிருந்த கால்களை கடினப்பட்டு நகர்த்தி வந்து இருக்கையில் அமர்ந்து கண்களை மூடினாள். காதலை உரிடவனிடம் சேர்த்துவிட்ட நிம்மதி அவளது முகத்தில்.
ராம் இவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ, கடைசி வரை உடனிருக்க வேண்டும் என்றோ காயத்ரி காதலை உரைக்கவில்லை. இத்தனை நாட்கள் போட்டிருந்த வேலி இன்றைக்கு தகர்ந்திருந்தது. முதலில் தன் மீதே அவளுக்கு கோபம்தான். ஆனால், அதெல்லாம் கரைந்திருந்தது. ராமோடு இந்தப் பிரபஞ்சத்திற்கும் சேர்த்து தன் காதலை உரைத்துவிட்டாள். போதும், இந்த மகிழ்ச்சி ஒன்றே அவளுக்குப் போதும். இத்தனை நாட்கள் காதலித்தவனிடம் அதை செய்தியாகக் கூற கூட எனக்கு இந்த ஜென்மத்தில் வாய்ப்பு கிட்டவில்லையே என ஏங்கியழுத காதல் மனதிற்கு நியாயம் செய்துவிட்டாள். இந்த மகிழ்ச்சியோடு, ரகுராமை முத்தமிட்ட கணத்தோடு மீதி வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்றொரு எண்ணம் மனம் முழுவதும் படர்ந்தது. ராம் எங்கிருந்தாலும் சந்தோஷமாக வாழட்டும். அவன் நன்றாக இருந்தால் போதும்!’ என நெஞ்சை அடைத்த துக்கத்தை விழுங்கியிருந்தாள். ஆறாய் பெருகும் கண்ணீரோடு வலியையும் வேதனையையும் கரைக்கப் போராடியபடியே தனக்குள் சுருண்டு போனாள். பாரத்தை இறக்கி வைத்தவள் நிம்மதியாய் இருக்க, அதை வாங்கிக் கொண்டவன் சித்தம் கலங்கிப் போயிருந்தான்.

தொடரும்...









 
Active member
Messages
206
Reaction score
136
Points
43
Good proposal
Enna ipo tan unaku neram kedachuthakum
 
Top