• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 13 💖
மறுநாள் காலையில் காயத்ரி எழுந்ததும் மருத்துவர் வந்து சோதித்தார். “ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்மா. த்ரீ விக்ஸ் கழிச்சு வாங்க. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துட்டு கட்டைப் பிரிக்கலாம். எலும்பு கூடீடுச்சுன்னா நோ ப்ராப்ளம். அப்படி இல்லைன்னா மறுபடியும் கட்டுப்போடணும்மா...” என்றவர் மேலும் சில பல அறிவுரைகளைக் கூற, தலையை அசைத்து கேட்டுக் கொண்டாள். ஒரு வாரத்திற்கு வலி மாத்திரைகளும் காய்ச்சல் மாத்திரை, ஆன்டிபயாட்டிகுகளும் கொடுத்திருந்தார்கள்.
காலையிலே கார்த்திகா இங்கே வந்துவிட்டாள். கையில் ஒரு பெரிய பையுடன் வந்தாள். “காயூ, எழுந்து பிரஷ் பண்றீயா? ஹெல்ப் பண்ணவா? டிபன் எடுத்துட்டு வந்திருக்கேன்!” என்றவள் தோழிக்கு பல் துலக்க உதவினாள்.
“இந்தக் கையோட எப்படி சாப்பிடுவ? நானே ஊட்டுறேன்!” அவள் உணவைத் தட்டிலிட்டுக் கொண்டே கூற, “இல்ல கார்த்தி, நீ ட்யூட்டிக்கு கிளம்பு. நான் ஸ்பூன்ல சாப்பிட்டுக்கிறேன்...” என இவள் மறுத்தாள்.
“காயத்ரிக்குப் பணிவிடை செய்வதுதான் உன்னுடைய முதல் கடமை. கவுண்டரை நான் பார்த்துக்கிறேன்னு காலைல எழுந்ததும் மேலிடத்துல இருந்து உத்தரவு காயூ. ஞான் என்ன பண்ணும்?” என இவள் குறும்பாய்க் கேட்க, அவளுக்கும் நந்தேஷ்தான் இது போல கூறியிருப்பான் என புரிந்தது. தோழியை முறைத்துப் பார்த்தாள்.
“சரி, சரி. நோ பார்மாலிட்டீஸ். வா, நானே ஊட்டுறேன்...” என கார்த்திகா உணவை ஊட்ட, இவள் சரியென தலையை அசைத்து உண்ணத் தொடங்கினாள். வெளியே சென்றிருந்த தங்கராஜ் உள்ளே நுழைந்தார். காயத்ரிக்கு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை வீட்டிற்கு சென்று எடுத்து வந்தார்.
“வாம்மா...” என அவர் கார்த்திகாவைப் பார்த்து தலையை அசைக்க, “ப்பா... நீங்களும் வாங்க. உங்களுக்கும் சேர்த்துதான் சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வந்தேன். சாப்பிடலாம் வாங்க...” என அவரை அழைத்தாள்.
“இல்லமா... நான் கேண்டீன்ல சாப்ட்டுக்கிறேன் மா. நீங்க சாப்பிடுங்க...” அவர் மறுக்க, “ப்பா... வாங்க!” என அவரைக் கட்டாயப்படுத்தி உண்ண வைத்தப் பின்னரே அவள் விடை பெற்றாள்.
“ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணும்போது நான் வரேன் காயூ...” என அவள் அகல, “வேணாம் கார்த்தி, வீட்டுக்குப் போய்ட்டு அகைன் நீ ஏன் அலையணும். அப்பாவும் நானும் போய்க்கிறோம். நீ ரெஸ்ட் எடு...” என இவள் கூறிவிட, அவளும் சரியென தலையை அசைத்து அகன்றாள்.
நேரம் மாலையானது. மீண்டும் ஒருமுறை மருத்துவர் வந்து பார்த்ததும் இவர்கள் வீட்டிற்கு கிளம்பினர். காயத்ரி மகிழுந்தை முன்பதிவு செய்ய, இருவரும் வீடு சென்று இறங்கினர்.
இவர்கள் உள்ளே நுழைந்ததும், “காலகாலத்துல பொம்பளை புள்ளையை கட்டிக் கொடுக்காம இப்படி வேலைக்கு அனுப்புனா, இப்படித்தான் கீழே விழுந்து வாரிக்குவா!” என்ற ஷண்முகியின் குரல்தான் இவர்களை வரவேற்றது. காயத்ரி நிமிர்ந்து தந்தையை முறைத்துப் பார்த்தாள்.
“நான் வர சொல்லலைம்மா. ஃபோன் பண்ணாங்க, இப்படி அடிபட்டிருக்குன்னு சொன்னதும் கிளம்பி வந்துட்டாங்க. நான் அவங்களை பஸ் ஸ்டாண்ட்ல இருந்து வீட்டுக்கு கூட்டீட்டு வந்து விட்டுட்டுதான் ஹாஸ்பிடல் வந்தேன்...” என அவர் கூற, காயத்ரி சோர்வாய் உள்ளே நுழைந்தாள்.
“அம்மாச்சி, ஆல்ரெடி கை வலியா இருக்கு. நீயும் உன் புராணத்தை பாடாதே!” என இவள் சென்று நீள்விருக்கையில் பொத்தென அமர்ந்தாள்.
“ஆமாடி... நான் நல்லதை சொன்னா உனக்கு புராணம் பாட்ற மாதிரித்தான் இருக்கும். நல்ல நல்ல பையனா எத்தனை பேர் சொந்தத்துல கை காட்டுனேன். வேணாம், வேணாம்னு தள்ளிவிட்டுட்டே இருந்தீயே. இப்படி கீழே விழுந்து கையை உடைச்சிட்டிருக்க. இனிமே யார் உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவா. அப்படி பண்ணாலும் வரதட்சணை அதிகமா கேட்பானே டி. என் பொண்ணு இருந்திருந்தா உன்னை இப்படியெல்லாம் விட்டிருப்பாளா? கையைக் காலை கட்டிப் போட்டாவது கல்யாணத்தை முடிச்சி வச்சிருப்பா!” என அவர் தன் மனத்தாங்கலை வாய் வார்த்தையாகக் கொட்டத் துவங்க, காயத்ரி எழுந்து அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். ஷண்முகி அப்படித்தான். வாயைத் திறந்தால் அத்தனை எளிதில் எல்லாம் நிறுத்த மாட்டார். அவர் மனம் ஆறும்வரை பேசிவிட்டுத்தான் ஓய்வார்.
இவள் கழிவறைக்குச் சென்று வந்து அமைதியாய் கட்டிலில் அமர்ந்தவாறே சாய்ந்து கொண்டாள். சில பல நிமிடங்களில் அவரது குரல் தேயவும் இவளுக்கு முறுவல் பூத்தது‌. ஷண்முகி காயத்ரியின் தாய் சுசீலாவின் சித்தி. சுசீலாவின் அம்மா மகள் இறந்த துக்கத்திலே சில பல வருடங்களில் இறைவனிடம் சேர்ந்திருந்தார். அவரது கணவர் வைத்தியநாதன் நான்கு வருடங்களுக்கு முன்புதான் இயற்கை எய்தினார். அவர் இருக்கும் வரையிலுமே மாதம் ஒருமுறை பேத்தியை வந்து பார்த்துவிட்டு செல்வார். சுசீலாவிற்கு இரண்டு உடன்பிறந்த சகோதரர்கள் உண்டு. தங்கை இறந்தக் கையோடு அவளது மகளின் பொறுப்பு எங்கே தங்களது தலையில் விழுந்து விடுமோ என அஞ்சியே உறவை அப்போதே முறித்துக் கொண்டனர்.
காயத்ரிக்கு சிறு வயதில் அதெல்லாம் புரியவே இல்லை. அவ்வப்போது மாமா ஏன் பேச மாட்டேன் என்கிறார், மாமன் பிள்ளைகளும் பேசவில்லையே என அம்மாச்சியிடம் கேட்பாள். என்னதான் இருந்தாலும் பெற்ற மகனாகிற்றே. அதனாலே அவர் மகன்களை விட்டுக் கொடுக்காது எதாவது மழுப்பி விடுவார். பின்பு வளர வளர அவளுக்குப் புரிந்தது. அவர்கள் என்ன என்னை ஒதுக்கி வைப்பது, நானே விலகிக் கொள்கிறேன் என இவளே அவர்களை அறவே ஒதுக்கித் தள்ளிவிட்டாள்.
அம்மாச்சியும் தாத்தாவும் இறந்துவிட, தாய் வழி உறவு முற்றிலும் அறுந்து போயிருந்தது. ஆனால் ஷண்முகிதான் அதை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தார். இவள் பெரிதாக அவரிடம் ஒட்ட மாட்டாள். ஆனால் தாயில்லாத பிள்ளை என அவருக்கு இவள் மேல் பாசம் அதிகம். ஆனாலும் உடன் வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை. அதனாலே தூர நின்று உறவை வளர்த்துக் கொள்வார். இப்போது இவளுக்கு விபத்து என்று கேள்விப்பட்டதும் உடனே இங்கு வந்துவிட்டார். சொந்த தாய் மாமன்களே உறவை வெட்டிவிட்டுச் சென்றிருக்க, இவர் பாசம் காண்பித்ததில் காயத்ரியின் குறுகிய வட்டத்திற்குள் ஷண்முகியும் இணைந்திருந்தார். அவரை இவளுக்குப் பிடிக்கும் தான். ஆனால் அவரது செல்லரித்துப் போன கொள்கைகளை அறவே வெறுத்தாள். இவள் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்ற நாளில் இருந்தே திருமணப் பேச்சால் நச்சரித்துக் கொண்டிருந்தார். தூரத்தில் இருந்ததால் அதை இவளால் தட்டிக் கழிக்க முடிந்தது. இப்போது அருகில் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என ஆயாசமாய் வந்தது. அப்படியே நேரம் கண்ணை மூடி அமர்ந்துவிட்டாள்‌.
சிறிது நேரத்திலே அவளது அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. காயூ யாரென பார்க்க, ஷண்முகி உள்ளே வந்தார்.
“இந்தா காயத்ரி, காலைல அங்க இருந்து வரும்போதே ஆட்டுக் கால் வாங்கிட்டு வந்தேன். இந்த சூப்பைக் குடி. உடைஞ்ச எலும்பு சீக்கிரம் ஒட்டிடும்!” என அவள் முன்னே குவளையை நீட்டியவரைப் புன்னகையுடன் பார்த்தவாறே வாங்கி அருந்தினாள்.
ஆட்டுக்கால் குழம்பு வைத்து தோசை ஊற்றி எடுத்து வந்தவர், அவளுக்கு ஊட்டியும் விட்டார்.
“இப்படி ஒடிசலா இருந்தா எப்படி டி கல்யாணம் பண்ணி பேறுகாலம் பார்க்க முடியும். நல்லா சாப்பிட வேணாமா?” என வசைபாடிக் கொண்டே ஊட்டியவரை முறைத்தவள் குனிந்து தன்னை ஒருமுறை பார்த்தாள். உயரத்திற்கு ஏற்ற சரியான எடையில் இருந்தாள். இன்னும் கொஞ்சம் எடை கூடினால் கண்டிப்பாக குண்டாகத் தோன்றும்.
“மாத்திரை கவரு இந்தாடி... எனக்கு இதெல்லாம் தெரியாது. உனக்குத்தான் தெரியுமே. போட்டுட்டு படுத்து தூங்கு. நான் மாப்பிள்ளை சாப்ட்டதும் வரேன்!” என அவர் அகல, “நீ சாப்பிடலையா அம்மாச்சி?” எனக் கேட்டாள்.
“நான் கறி சாப்பிட்றதை விட்டுட்டேன் டி. பிரஷர் அதிகமாகிடுச்சு. டாக்டர் பையன் சாப்பிட கூடாதுன்னுட்டாரு. அதான் சர்க்கரையை வச்சு ரெண்டு தோசையை சாப்ட்டு வரேன்...” என அவர் அகல, இவள் தலையை அசைத்துவிட்டு எட்டி அலைபேசியை எடுத்தாள். இடது கையில் அதை உபயோகிப்பது சற்றே சிரமமாக இருந்தது. இணையத்தை இணைத்ததும் ரகுராமின் செய்தி வந்து விழுந்தது. அதற்குப் பதிலளிக்காமல் முகநூலில் சற்று நேரம் உலாவியவள், உடல் சோர்வில் அப்படியே சாய்ந்தவாறு உறங்கத் தொடங்கினாள். வேலைகளை எல்லாம் முடித்த ஷண்முகி அவளது கட்டிலுக்கு அருகே ஒரு பாயை விரித்துப்படுத்துக் கொண்டார்.
மறுநாள் காலையில் காயத்ரி குளிக்க ஷண்முகிதான் உதவினார். வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்ள, இவளுக்கு சற்றே நிம்மதிதான். ஆனாலும் சுற்றி சுற்றி இவளது திருமணத்தைப் பற்றித்தான் அவரது பேச்சின் சாராம்சம் முழுவதும் இருக்கும். காயத்ரி அதற்குப் பதிலளிக்கவில்லை. இவள் எதாவது கூறினால் அவரது கொள்கைகள் மதிக்கப்படவில்லை என அதற்குமே இன்னும் பேசுவார் என அறிந்தபடியால் உதடுகளை இறுகப் பூட்டிக் கொண்டாள்.
ரகுராம் இரண்டு நாட்களும் திருமண மண்டபத்தில்தான் இருந்தான். ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அலங்கார வேலைகள் எல்லாம் தொடங்கிவிட்டது. இவன் அருகே இருந்து பொறுப்பாய் கவனித்துக் கொண்டான். இன்னும் ஒரு சிலருக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கவில்லை என நினைத்தவன், திங்கட்கிழமை சென்று கொடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். அதில் கார்த்திகா, நந்தேஷ் இருவரும் அடக்கம்.
ஏனோ இரண்டு நாட்களாக இவனுக்கு மனதிற்குள் சொல்ல முடியாத நெருடல். காரணம் என்னவோ தெரியவில்லை. காயத்ரியின் நினைவுதான். தன்னைப் பார்க்க வீட்டிற்கு வரக் கூடாது என்று உரைத்துவிட்டாளே என எண்ணியவன் பத்திரிக்கையை வைத்துவிட்டு அப்படியே அவளையும் பார்த்து வரலாம் என எண்ணியபடியே புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை அடைந்தான்.
அப்போதுதான் கார்த்திகாவும் நந்தேஷூம் தேநீரைப் பருகிக் கொண்டிருந்தனர். அவர்களது இடைவேளை நேரம் தெரிந்து கொண்டுதான் இவன் வந்தான்.
“ஹே கார்த்திக் சார், வாங்க, வாங்க. மேரேஜ் வொர்க் எல்லாம் எப்படி போகுது?” எனப் புன்னகையுடன் அவனை வரவேற்றாள் கார்த்திகா.
“யெஸ், இன்னும் நாலுநாள்தான் இருக்கு கார்த்திகா. சாரி கொஞ்சம் லேட் இன்விடேஷன்தான்!” என்றவனின் விழிகள் காயத்ரியைத் தேடி சுழன்றன.
“என்ன தேடுறீங்க கார்த்திக்? வழக்கம் போல மறந்துட்டு உங்க ஃப்ரெண்டை தேட்றீங்களா? ரெண்டு நாள்தான் அவ வரலை. நானுமே ரொம்ப மிஸ் பண்றேன். உங்களோட பங்க்சன் டைம்ல மேடம் சரியா விழுந்து வாரி வச்சிருக்காங்க!” என அவள் பேசியது இவனுக்குப் புரியவில்லை.
“என்ன விழுந்து கார்த்திகா? புரியலை?” என்றவனுக்குள்ளே மெதுவாய் பதற்றம் படர்ந்தது.
“ஓ... அவ உங்ககிட்டே சொல்லலையா? நான்தான் உளறிட்டேனா?” என நாக்கை கடித்தவள், “அது ரெண்டு நாளைக்கு முன்னாடி ஸ்கூட்டில இருந்து ஸ்கிப் ஆகிட்டா போல. ரைட் சைட் ஷோல்டர்ல எலும்பு விலகிடுச்சுன்னு நம்ப ஹாஸ்பிடல்லதான் அட்மிட் பண்ணி கட்டுப் போட்டோம். சனிக்கிழமை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குப் போய்ட்டா!” என அவள் விளக்க, இவன் முகம் இறுக அதைக் கேட்டான்.
“ஓ... அப்படியா கார்த்தகா?” எனக் கேட்டவனுக்குள் பெரும் கோபம் வெடித்து சிதறக் காத்திருந்தது. அதைவிட ஆற்றாமை பொங்கி வழிந்தது. இந்த அளவிற்கு தன்னை அவள் தூர நிறுத்திவிட்டாள் எனப் புரிந்ததும் மனமெல்லாம் பாரமேறியது. இந்தப் பெண்ணை என்ன செய்தால் தகும் என மனம் தகிக்கத் தொடங்க, அவர்கள் முன்னே எதையும் வெளிப்படுத்தாதவன் இழுத்துப் பிடித்த புன்னகையுடன் பத்திரிக்கையை மட்டும் வைத்துவிட்டு விறுவிறுவென அவளின் வீட்டை நோக்கிச் சென்றான்.
இவன் உள்ளே நுழைய, காயத்ரியின் குரலைத் தொடர்ந்து ஒரு ஆண்குரலும் கேட்டது‌. “இந்த சூடு போதுமா காயூ?” எனக் கேட்டு மிதமான சூட்டில் அவளுக்கு அருகே குளம்பியைத் தள்ளி வைத்தான் யுக்தா.
“போதும் யுக்தா, நான் என்ன குழந்தையா?” என்ற அதட்டலுடன் அவள் ஒற்றைக் கையை நீட்டி அந்தக் குவளையை எடுத்து உதட்டுக்கு கொடுத்தாள். இவன் அவள் முகத்தையே ஆர்வமாய்ப் பார்ப்பது தெரிய, “நாட் பேட்!” என்றாள் முறுவலுடன்.
“ஓ... வாவ், அழகான பொண்ணுட்ட இருந்து அழகான காம்ப்ளிமெண்ட்!” என அவன் கேலியாகக் கூற, அவனை முறைத்தாள் பெண். ரகுராம் கண்களில் அனல் பறக்க இருவரையும் முறைத்துக் கொண்டே வந்து நின்றான்.
தங்களருகே அரவம் கேட்டதும் இருவரும் திரும்பினர். “ஹாய் மச்சான், வாடா... வாடா!” என யுக்தா புன்னகைக்க, காயத்ரி அவனைத் திரும்பிப் பார்த்தாள். நொடி நேர அதிர்ச்சிதான். அதை சின்ன புன்னகையில் மறைத்தவள், “வா ராம்!” என்றாள் இயல்பான குரலில். அவனிடம் பதிலேதும் இல்லை.
அமைதியாய் காயத்ரியைத்தான் பார்த்தான். பழைய நைட்டி ஒன்றை அணிந்திருந்தாள். வலது கை கழுத்தோடு சேர்த்து கட்டிட்டப்பட்டிருக்க, முகம் களையிழந்து காணப்பட்டது. கண்ணை சுற்றி கருவளையம் சூழ்நதிருக்க, உடல் இளைத்திருந்தாள். ஒழுங்காக வாரப்படாத தலையும் அவனைப் பார்த்து சோபையாய் புன்னகைக்கும் முகமும் அவனை வெகுவாய் தாக்கின. இந்தப் பெண் கூறினால் என்று இங்கு வராமல் இருந்தது தன்னுடைய தவறு என மனதிற்குள்ளே தன்னை நிந்தித்தான். இவளை விட்டுவிட்டோமே என மனம் அரற்றியது.
“மச்சான், இருடா... உனக்கொரு சேர் எடுத்துட்டு வரேன்!” என யுக்தா எழ, இவன் அவன் அமர்ந்திருந்த இருக்கையை ஆக்கிரமித்தான்.
“அப்புறம் காயத்ரி, சொல்லுங்க!” என்றான் அவளை அழுத்தமாய் பார்த்து‌‌. அந்தப் பார்வை அவளைக் குற்றம் சுமத்தின. காயத்ரி அவன் முகம் காணத் தயங்கியது எல்லாம் ஒரு நொடிதான். இருக்கையின் பின்னால் சாய்ந்தமர்ந்தவள் முகத்தில் சின்ன புன்னகை அமர்ந்தது‌. மனதிலிருந்த திடத்தை மீட்டெடுத்தாள்.
“ஹம்ம்... என்ன சொல்ல ராம்? சொல்ற அளவுக்கு பெருசா ஒன்னும் இல்ல. நீ சொல்லு, மேரேஜ் வொர்க் எல்லாம் எப்படி போகுது‌. சைந்தவியை மீட் பண்ணீயா? அவங்க எப்படி இருக்காங்க?” என இயல்பாய்க் கேட்டாள். எதுவுமே நடக்காதது போன்ற பாவனை அவள் முகத்தில். இவனுக்கு ஏதோ பெரிதாய் அடிவாங்கிய உணர்வு.
“என்கிட்ட சொல்ல எதுவுமே இல்லையா காயூ?” வெற்றுப் பார்வை பார்த்தான். காயத்ரிக்கு உள்ளே பிசைந்தது. இந்தக் குரலை புறக்கணிக்க முடியாது தொண்டை அடைத்தது. இதையெல்லாம் சந்தித்து ஆக வேண்டும் என்று முன்பே தெரிந்ததால் எப்படி அவனை அணுக வேண்டும் என்று உருப்போட்டு வைத்திருந்தாள்தான். ஆனாலும் இந்தப் பையனை நேரில் காண்கையில் வார்த்தைகள் பஞ்சமாகிப் போயின. எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டிக் கொள்ள கூடாது என இதயத்தை இறுக்கிப் பூட்டினாள்.
“ப்ம்ச்... ராம், சொல்லக் கூடாதுன்னு இல்ல. ஒன் வீக்ல மேரேஜ் உனக்கு. தேவையில்லாம உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான் சொல்லலை. அதுவும் இல்லாம இந்த நேரத்துல உன் மைண்ட் அப்செட் ஆகுறதுல எனக்கு விருப்பம் இல்ல. இது ரொம்ப சின்ன அடிதான் ராம். மூனு வாரத்துல கட்டைப் பிரிச்சுடலாம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. அதான் சொல்லலை!” அவள் குரல் அவனை சமாதானம் செய்ய முயன்றது. தலையை இடம் வலமாக அசைத்தவன் அதை நம்பவில்லை என்றான்.
“ச்சு... நீ நம்பலைனாலும் அதான் நிஜம்!” என்றவள், “அந்தப் பேச்சை விடு. மத்த வொர்க் எல்லாம் எப்படி போகுது ராம்?” எனத் தன்னை உற்சாகமாகக் காட்டிக் கொள்ள முயன்றாள். ஆனாலும் குரல் வெகுவாய் சோர்ந்துதான் வந்தது.
ரகுராம் பதிலுரைக்காது அவளை மட்டுமே பார்த்திருந்தான். அந்தப் பார்வையில் இவள் லேசாய் தடுமாறினாள்.
“ராம்...” என்றாள் அதட்டலாய்.
“ஃபைன் காயூ, உனக்கா எப்போ தோணுதோ அப்ப வந்து உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு. அதுவரைக்கும் நான் உன்னைப் பார்க்க ட்ரை பண்ண மாட்டேன். அதானே உனக்கும் வேணும்?” என ரகுராம் கேட்டதும், காயத்ரி அதிர்ந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள். இவளாய் அவனைத் தூர நிறுத்தும்போது வலித்ததுதான். ஆனால் அவன் வாய் வார்த்தையாகக் கேட்கும்போது நெஞ்சடைத்துக் கொண்டு வந்தது. உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கி தன்னை சமன்படுத்தினாள்.
“யூ க்நோ காயூ, நீ என்னை வேண்டாமனு விலக்கி வைக்க டிசைட் பண்ணிட்ட. சோ, எங்க அடிச்சா எனக்கு வலிக்கும்னு தெரிஞ்சு என்னைக் கஷ்டப்படுத்துற. இத்தனை வருஷம் கூட இருந்து இந்தளவுக்காது நான் உன்னைப் புரிஞ்சு வச்சிருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கிறேன். நீ கூப்பிட்ற வரை நானா உன் வாழ்க்கைகுள்ள வர மாட்டேன். நான் மட்டுமே இந்த ரிலேஷன்ஷிப் வேணும்னு நினைச்சா போதாது காயூ. நீயும் நினைக்கணும் இல்ல. நினைப்பீயா? இல்லை அவ்வளோதானா?” என அவன் உணர்வற்று கேட்கவும், இவளது விழிகள் தளும்ப பார்த்தன. இறுக்கிப் பிடித்து வைத்திருந்தாள்.
“ஏன் கேட்குறேன்னா, பொய்யான ஹோப்போட நான் என் காயூ என்கிட்ட வருவான்னு வெயிட் பண்ண கூடாது இல்ல. பிகாஸ் ஐ நீட் ஹெர் ஃப்ரெண்ட்ஷிப். பட் அவளுக்கு நான் வேணாம் போல. இட்ஸ் ஓகே, உன் விருப்பத்தை நான் மதிக்கிறேன் காயூ. எப்படியும் கையை காரணம் காட்டி மேரேஜ்க்கு வர மாட்டல்ல?” எனப் பெருமூச்சுவிட்டவன், எழுந்து நின்றான். காயத்ரி தனக்குள் எழுந்த தவிப்பை மறைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
“ராம், நீயா கற்பனை பண்ணிக்காத டா!” என அவள் பேச வரும் முன்னே, “வாயை மூடு டி!” என்றான் சீறலாய். இவள் அதிர்ந்து பார்த்தாள்.
“வந்தக் கோபத்துக்கு நுழைஞ்சதும் கன்னத்துலயே நாலு விடலாம்னு நினைச்சேன். ஆனால் ஏற்கனவே அரை உசுறாகிட்ட மாதிரி இருக்கவகிட்டே என்னால கோபப்பட முடியலை. நீ சொல்ற பொய்யெல்லாம் குழந்தை கூட நம்பாது டி. பட், நான் நம்பணும்னு எதிர்பார்க்குற இல்ல. நீ எந்த ரீசனும் சொல்ல தேவையில்லை. இதோ, நேத்து வந்தவனுக்கு கூட தெரிஞ்சிருக்கு. அவன்கிட்டே நீ சொல்லி இருக்க. பட் நான் யாரோவா போய்ட்டேன் இல்லை? வலிக்குது டி. இதுக்கு நீ என்னை நாலு அடி கூட அடிச்சிருக்கலாம். இப்படி என் பீலிக்ங்ஸோட விளையாடிருக்க வேணாம் டி!” என்றவன் குரலில் இருந்த வேதனையில் காயத்ரி துடித்துப் போனாள்.
“இனி நீயா கூப்பிட்ற வரை உன் முகத்துல நான் முழிக்க மாட்டேன் காயூ!” என்றவன் விறுவிறுவென நடக்க, இவளது விழிகளில் குபுகுபுவென நீர் இறங்கியது. விழிகளை சிமிட்டி நீரை உள்ளிழுத்துக் கொண்டு அவனையே பார்த்திருந்தாள்.
வெளியே நின்று முக்கியமான அழைப்பொன்றை பேசி முடித்த யுக்தா, “மச்சான், என்ன அதுக்குள்ள கிளம்பிட்டீயா?” எனக் கேட்டான்.
அவனை அனல் தெறிக்கப் பார்த்தவன், “எல்லாரும் புதன்கிழமை தானே வர்றதா இருந்தது? நீ எப்போ இங்க வந்த? வந்ததும் நம்ப வீட்டுக்கு வராம இங்க என்ன வேலை உனக்கு?” எனப் பல்லைக் கடித்தான்.
“மச்சான்... லவ்வு டா. அவளுக்கு இப்படியாகிடுச்சுன்னதும் என்னால எப்படி அங்க இருக்க முடியும். நைட் பஸ்ஸை புடிச்சு வந்தேன் டா. காயூவைப் பார்த்துட்டு வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன். நீயே வந்துட்ட!” என்றான்.
“பார்த்துட்டல்ல... கிளம்பு போகலாம்!” ரகு அழுத்தமாய்க் கூற,
“டேய்... நான் இன்னும் கொஞ்ச நேரம் அவ கூட இருந்துட்டு வரேன் டா. பாவம் அவ, யாரும் இல்லாம லோன்லியா ஃபீல் பண்ண போறா!” இவனது வார்த்தைகள் கரிசனம் மிகுந்து வந்து விழவும், அவனது முகத்தில் எரிச்சல் படர்ந்தது.
“இப்ப நீ மட்டும் பைக்ல ஏறலை, கன்னத்தை சேர்த்து ஒன்னு விடுவேன் யுக்தா!” என அவன் கூறியதும் இவனுக்கு எரிச்சலாய் வந்தது.

“பேக்கை எடுத்துட்டு வரேன் ‌இரு!” என முனங்கியவன் உள்ளே சென்று காயத்ரியிடம் கூறிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வந்து இவனுக்குப் பின்னே ஏறி அமர்ந்தான். இருவரும் வீட்டை நோக்கி நகர்ந்தனர்.
“மச்சான், சாரி டா. உன்னைப் போய் நான் தப்பா நினைச்சிட்டேன் டா!” என யுக்தா கூறியதும், புருவங்களை நெறித்து அவனைக் கண்ணாடி வழியே பார்த்தான் ரகுராம்.
“இல்லடா... அத்தைப் பேசும்போது சொன்னாங்க. நாத்தனார் முடிச்சை காயூதான் போடணும்னு. அவளை நீ தங்கச்சியாதான் பார்த்திருக்க போல. அப்போ உண்மையிலே எனக்கு நீ மச்சான் ஆகிட்டடா!” என அவன் சிரிப்புடன் கூற, “மூடிக்கிட்டு வாடா!” என்ற ரகு எரிச்சலுடன் வீட்டிற்குச் சென்றான்.

தொடரும்...





























































 
Well-known member
Messages
924
Reaction score
677
Points
93
Where is the proposal maa
 
Top