• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அன்பு - 30 💖 (இறுதி அத்தியாயம்)

Administrator
Staff member
Messages
1,247
Reaction score
3,666
Points
113
வேதம் – 30
மார்கழி மாத்தின் திங்கள் கிழமை அது. விழிகளுக்கு அகப்பட்ட தூரமெல்லாம் வெள்ளைப் பூப்போல பனித்துளிகள் எங்கும் வியாப்பித்திருக்க, ஏனோ பரபரப்பின்றி மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்தனர் மக்கள். ஆங்காங்கு தென்பட்ட கடைகளும் வணிக வளாகாங்களும் கூட கொஞ்சம் மந்தமாய்தான்
செயல்பட்டன.
காலை ஏழு மணி என்று அறுதியிட்டு கூற முடியாத அளவுக்கு லேசாக வானம் இருட்டிக்கொண்டிருந்தது. மெத்தையில் மறுபுறம் புரண்டுப் படுத்த அன்பழகனின் மேலே அவர்களது செல்ல மகள் ஸ்ருதி துயில்கொண்டிருக்க, வேதாவின் கரத்தை எடுத்து அதைத் தன் முகத்தில் வைத்தவாறு படுத்திருந்தான் கணவன். குளிர் உடலை ஊசியாய்த் துளைக்க, இடை வரை தளர்ந்திருந்த போர்வையை விழிகளை மூடியவாறே கைகளை வைத்து ஒருவாறு துழாவி எடுத்து கழுத்து வரை போர்த்தியவளின் நித்திரையை கலைக்க ஒருவருக்கும் கண்டிப்பாய் மனதிருக்காது. அத்தனை சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தாள் வேதவள்ளி.
தலையைச் சிலுப்பி அப்படியே தன் கணவனின் தோளில் தலைவைத்தவள், விட்ட உறக்கத்தைத் தொடர, அன்பழகன் இதழ்களில் மெல்லிய புன்னகை.
“ப்ம்ச்... இந்த மார்கழி மாசம் மட்டும் ஏன்தான் வருதோ? காலையில எழும்போது தூக்கம் சொக்குது. குளிருக்கு இதமா பெட்ஷீட்டை எடுத்துப் போர்த்தித் தூங்கும்போது ரொம்ப சுகமா இருக்குங்க...” சிணுங்கிக்கொண்டே நேற்றிரவு உரைத்தவளின் முகம் அகத்தில் நிறைய, உதட்டில் புன்னகை ஜனித்தது.
“குளிருச்சுன்னா என்னை நல்லா கட்டிக்கோ வேதா...” மனைவியை வம்பிழுத்தான் அன்பழகன்.
“ஆமா! ஆமா. உங்க செல்ல மக விட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பா...” என்று உதட்டை சுழித்து முறைத்தவளின் முகத்தில் கோபம் படர்ந்திருந்தது. ஆம் ஐந்து வயது நிரம்பியிருந்த ஸ்ருதிக்குத் தந்தை அன்பழகனைத் தவிர ஒருவரும் கண்ணிற்குத் தெரிய மாட்டார்கள். தந்தையைச் சுற்றியே ஓடிக்கொண்டிருப்பாள்.

அப்படியே தாயை உரித்து வைத்துப் பிறந்திருந்தாள் குட்டி. குணத்தில் மட்டுமல்ல செய்கையிலும் கூட. தாய்க்கும் மகளுக்கும் இடையில் நிகழும் செல்ல சண்டைகளில் அன்பழகன் தான் திகைத்து விழி பிதுங்கி நிற்பான். கடைசியில் கணவன் முகம் பார்த்து வேதாதான் சற்று இறங்கி வருவாள். ஸ்ருதி ஒருநாளும் இறங்கி வந்ததில்லை. பிடிவாதம் தாயைப் போல அதிகம் அவளுக்கு.
நாட்கள் விரைவாய் பறந்திருந்தன. வேதவள்ளி முதுகலை முடித்து பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியில் அமர்திருந்தாள். ஸ்ருதியும் இப்போதுதான் பள்ளிச் செல்ல துவங்கியிருந்தாள். அன்பழகன் தனது சிறிய கடையை வங்கியில் கடன் பெற்று சற்றே பெரிதுபடுத்தியிருக்க, வேலை குவிந்த வண்ணமிருந்தன. வாழ்க்கை ஓரளவுக்கு சீராகத்தான் சென்று கொண்டிருந்தது. அங்காங்கே தென்பட்ட திடுக்கிடும் வளைவுகளையும் மேடு பள்ளங்களையும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே கடந்து வந்தனர்.
மகள் வந்தப் பின்பு அன்பழகனிடமிருந்த ஆடவடித்தனம் முற்றிலும் மறைந்து போயிருக்க, நல்லத் தந்தையாக, நல்ல கணவனாக, அதை விட சிறந்த மகனாகப் மாறிப்போனதுதான் காலத்தின் விந்தை. முன்பு எப்போதும் முட்டிக்கொள்ளும் தந்தை மகனுக்கு இடையில் இப்போதெல்லாம் அரிதாகத்தான் வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.
அவர்கள் இருவரும் அதை கவனித்தார்களோ என்னவோ? இரண்டு மனைவிமார்களும் அதையெல்லாம் கவனித்து மகிழ்ந்துதான் போயினர்.
முத்துக்கிருஷ்ணன் வயோதிகம் காரணமாக விருப்ப ஓய்வு பெற்று இப்போது வீட்டிலிருக்க, இரண்டு மகன்களும் பொறுப்பாய் வீட்டை கவனித்துக்கொள்ள துவங்கினர்.
அறிவழகனுக்கு ஒரு வருடம் முன்புதான் திருமணம் முடிந்திருந்தது. உடன் வேலை பார்க்கும் பெண் மருத்துவர் ஒருவரின் மேல் காதல் கொண்டவன், முறையாய் தாய் தந்தை விருப்பத்துடன் அவளை மணம் முடிக்க, இப்போது அவனின் மனைவி நிஷா ஏழு மாத கர்ப்பவதியாக இருக்கிறாள்.
வேதாவை கவனித்துக்கொண்டது போல பெரிய மருமகளையும் அன்பாகப் பார்த்துக்
கொண்டார் வத்சலா. வேதாவும் நிஷாவிடம் அனுசரணையாக நடந்து கொள்ள, இருவருக்கும் நன்றாய் ஒத்துப் போனது. அவர்கள் இருவரும் சேர்ந்து வத்சலாவை சில சமயம் கலாய்த்துத் தள்ளுவார்கள். மகன் இப்போது பொறுப்பாய் இருப்பதால், அவனில்லாத குறையை மருமகள்கள் அவ்வப்போது சேட்டை செய்து நிரப்பினர். அதை விட குட்டி இளவரசியாய் ஸ்ருதி வீட்டில் வளம் வந்தாள். நினைத்ததை சாதித்துக் கொள்ளும் கெட்டிக்காரி அவள்.
தனக்கு என்ன வேண்டுமென்றாலும் முதலில் அன்பழகனிடம் தான் செல்லம் கொஞ்சுவாள். அவள் கேட்டவற்றை மறுக்காது வாங்கித் தருபவன், ஒரு சில நேரங்களில் மனைவிக்குப் பயந்து ‘இல்லை...’ என தலையை ஆட்டுவான். முயல் குட்டி அழுதுகொண்டே பெரியப்பாவிடம் ஓடுவாள்.
அவனிடம் அழுது, கன்னத்தில் முத்தமிட்டு திக்கித் திணறி தன் மதுரமொழியில் அவனிடம் முறையிட, அறிவுக்கு உருகிவிடும். அன்பழகனையும் வேதவள்ளியையும் முறைத்துவிட்டு, சின்னவளை கடைக்கு அழைத்துச் சென்றுவிடுவான்.
தான் ஒருத்தி மட்டுமே இளவரசியாக வாழ்ந்த வீட்டில் இப்போது மற்றொரு குட்டி இளவரசனோ இளவரசியோ வரப்போகிறார்கள் எனத் தெரிந்ததும் குஷியாகி, “நிஷாம்மா... நிஷாம்மா...” என நிஷாவின் பின்னே ஓட ஆரம்பித்து இருந்தாள். நிஷாவிற்கும் முட்டைக் கண்களை விரித்து, சற்றே முடியை சிலுப்பி தன்னைச் சுற்றிவரும் ஸ்ருதியை அத்தனைப் பிடிக்கும். மொத்தத்தில் தாயைத் தவிர அனைவரிடமும் அவள் செல்லம் கொஞ்சுவது நீளும்.
எல்லோரும் அவளுக்கு கேட்டவற்றை வாங்கிக்கொடுக்க, மகள் தவறாக வளர்ந்து விடப்போகிறாளோ? என்ற பயமே வேதாவை மகளிடம் கடுமைக்காட்ட வைத்தது. அதுவுமின்றி தனக்கு மட்டுமேயான கணவனை மகள் பங்கு கொள்ள, இல்லையில்லை மொத்தமாய் சுருட்டிக்கொள்ள வெகுண்டு போனாள். இப்படித்தான் அவர்களது நாட்கள் கொஞ்சம் இனிப்பு, கசப்பு என நகர்ந்துகொண்டிருந்தது.
செல்ல மகள் உறக்கம் கெட்டுவிடாதவாறு மனைவிக்கு அருகில் சென்ற அன்பழகன், “வேதா...” கிசுகிசுப்பான குரலில் அழைத்தான்.
“ப்ம்ச்... போங்க...” உதட்டை அசைத்தவள் தூக்கத்தைத் தொடர, “ஏய், மணி ஏழாச்சு டி. எழுந்திரி...” என்றவனின் விரல்கள் மனைவியின் பட்டுக் கன்னத்தில் வட்டமிட்டு, புதிதாய் முளைத்திருந்த பருவைச் சுற்றின. அவன் கூறியது மூளையை அடையவும், அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் வேதவள்ளி. அன்பழகன் உதட்டில் சிரிப்பு அவளது செய்கையைப் பார்த்து.
விரிந்திருந்த கூந்தலைத் தூக்கிக் கொண்டையிட்டவள், “நைட் க்ளிப்பை எங்க வச்சீங்க?” என அவனை முறைத்துக்கொண்டே கொண்டை ஊசியை எடுத்து தலையில் சொருகி எழுந்து நின்றாள். அவளை அர்த்தச் சிரிப்புடன் பார்த்தவனை முறைத்தவாறு சிலுப்பியிருந்த முடியை எடுத்துக் கொண்டையில் சொருகிவிட்டவாறே கொட்டாவி விட்டாள். அறையே அத்தனை இருட்டாக இருந்தது. அப்போதும் குளிர் எங்கும் பரவி இருக்க, “ப்ம்ச்...” என சலித்தவாறே உடையை எடுத்துக்கொண்டு குளியலைறைக்குள் நுழைந்துவிட்டாள்.
சிறிது நேரத்திலே ஸ்ருதி எழுந்து கண்ணைக் கசக்கவும், “முயல் குட்டி...” என அவளைக் கைகளில் அள்ளியவன் சமையலறைக்குள் நுழைய, வத்சலா காலை சமையலில் பரபரப்பாக இருந்தார். நிஷா அருகே நின்று அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே காய்கறிகளை நறுக்கினாள்.‌ ஏழாம் மாதம் துவங்கவும், அவளை வேலைக்குச் செல்லக் கூடாது என அன்பு கட்டளையிட்டிருந்தனர் கணவனும் மாமியாரும்.
குழந்தையோடு அன்பழகன் வரவும், பாலைக் காய்ச்சி சத்துமாவை அதில் கலந்து சூடு போக ஆற்றி மகனின் கையில் கொடுத்தார் வத்சலா. அதை சின்னவளுக்குப் புகட்டியவாறே கோணல் சிரிப்பை உதிர்த்தவன், “ஏன் மா, நிஷாவும் நீயும் காலையில் எழுந்து கஷ்டப்பட்டு சமைச்சு வேலை பார்க்குறீங்க இல்ல?” உதட்டில் மறைத்த சிரிப்புடன் உச்சுக் கொட்டியவனை சந்தேகமாகப் பார்த்தார் வத்சலா.
“எலி எதுக்கு இப்போ அம்மணமா ஓடுது...” தாய்க் கேட்கவும், அன்பழகன் சிரித்துவிட, நிஷாவிற்கும் சிரிப்புதான்.
“ம்மா, முத்த மருமகளா நிஷாவை எப்படி வேலை வாங்குற. ஆனால் பாரு, அதுக்கு முன்னாடியே இந்த வீட்டுக்கு மருமகளா வந்த என் பொண்டாட்டி ஜம்முன்னு தூங்கி எழுந்து இப்போதான் குளிக்கப் போறா. என்னம்மா அநியாயம் இது? பொங்கி எழுந்து இரண்டு பேரும் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேணாமா?” என்றவன், “என்ன நிஷாம்மா, நான் சொல்றது சரிதானே?” என அவளிடமும் கேட்டான்.

அவனது முக பாவனையைக் கவனித்த சின்னக்குட்டியும், “ஆமா நிஷாம்மா, அம்மா பேட் கேர்ள். ஃபைட் பண்ணுங்க அவங்களோட...” என முட்டைக் கண்ணை விரித்துக் கூற, மூவருக்கும் புன்னகை அரும்பியது. தன்னைவிட வயது குறைவாக இருந்த நிஷாவை முதலில் அண்ணி என அழைக்கப் பழகியிருந்தவனின் அழைப்பு காலப்போக்கில் அருகி, ‘நிஷா, நிஷாம்மா..’ என்றாகிப்போனது.
“கொழுந்தனாரே, இதெல்லாம் எங்க நலத்துக்கு சொல்ற மாதிரி தோணலையே...” நிஷா இழுக்க,
“அது ஒன்னுதான் டா குறை. நான் உன் பொண்டாட்டியை எதாவது சொன்னா, நீ வால் புடிச்சுக்கிட்டு பின்னாடியே வந்துடுவ..” வத்சலா சடைத்துக் கொண்டார்.
அவர்களது உரையாடலைக் கேட்டுக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்த வேதா, கணவனையும் மகளையும் ஏகத்துக்கும் முறைத்துவைத்தாள்.
“ஸ்கூலுக்கு டைமாச்சு, போய் அவளைக் குளிக்க வைங்க...” இடுங்கிய கண்களுடன் தன்னை முறைத்த மனைவியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தவன், குழந்தையோடு வெளியேறிவிட்டான்.
திரும்பி வத்சலாவையும் நிஷாவைப் பார்த்த வேதா, அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து, “அத்தை, நான் உங்களுக்கு எதுவும் ஹெல்ப் பண்ணவா?” என வினவினாள்.
நிஷா, “அட வேதா... எல்லா வேலையும் முடிஞ்சது. உனக்காக நானும் அத்தையும் ஒரு வேலையை மட்டும் மீதம் வச்சிருக்கோம்‌‌...” என்று இழுக்கவும், வத்சலா முகத்தில் புன்னகை.
“என்ன வேலை நிஷாக்கா?” வேதா கேள்வியாகப் பார்க்க, “சாப்பிட்ற வேலைதான் வேதா...” என அவள் கூறிச் சிரிக்க, வத்சலாவும் சிரித்துவிட்டார். அவர்கள் இருவரையும் பார்த்து முறைக்க முயன்று தோற்றவள், “அத்தை, நிஷாக்காவைப் பாருங்க...” என சிணுங்க, அவர்கள் இருவர் முகத்திலும் புன்னகை மேலும் பெரிதாய் படர்ந்தன.
“சாரி அத்தை, கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்‌...” அசடு வழிந்தாள் வேதவள்ளி. மற்ற இருவர்களை விட இவள் சிறியவள் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவளுக்கு மட்டும் சற்றே சலுகைகள் அதிகமாக வழங்கப்பட்டிருந்தது.
“சரி போய் கிளம்பு...” என்ற வத்சலா, “நீ போய் பெரியவனை கவனி நிஷா...” என இரண்டு மருமகள்களையும் அனுப்பி வைத்தவர் மீதமிருந்த பாத்திரங்களைக் கழுவி அடுக்க ஆரம்பித்தார்.
கணவன் மகளுடன் போராடி ஒருவழியாய் இருவரையும் கிளப்பி, தானும் கிளம்பினாள் வேதவள்ளி. அனைவரும் உண்டு முடிய, மகளின் பையை எடுத்து அவளது இரண்டு கரத்திலும் மாட்டிவிட்டு கைகளில் தூக்கினான் அன்பழகன். அவர்களை முறைத்தவாறே வேதா வெளியே வர, “நிஷாம்மா பாய், பாட்டீ பாய், தாத்தா பாய், அறிப்பா பாய்...” அனைவருக்கும் ஒரு ‘பாய்-ஐ’ ஏலம் விட்டவாறு ஸ்ருதி விடைபெற, அனைவர் முகத்திலும் புன்னகை ஜனித்தது.
மகளைத் தூக்கித் தன் இருசக்கர வாகனத்தின் முன்புறம் அமர வைத்தவன், வண்டியை இயக்கவும் வேதவள்ளியும் ஏறி அமர, அவர்கள் கிளம்பினர். அறிவழகனும் வேலைக்கு கிளம்பி விட, முத்துக்கிருஷ்ணன் அறைக்குள் நுழைந்து தான் பாதியில் படிக்காமல் விட்ட புத்தகத்தைத் தொடர ஆரம்பித்திருந்தார்.
பள்ளி வாயில் வந்ததும் தந்தையைத் திரும்பிப் பார்த்து முட்டைக் கண்ணை விரித்த அந்த முயல் குட்டியை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்ட அன்பழகன், தன் கால்சராயில் கையை நுழைத்து ஒரு மிட்டாயை எடுத்து நீட்டவும், “தேங்க் யூ ப்பா...” என அவன் கன்னத்தில் பதில் முத்தமிட்டாள் ஸ்ருதி.

சிரிப்புடன் அதைப் பெற்றுக்கொண்ட அன்பு அவளை இறக்கிவிடவும், தன் இரட்டை ஜடையை ஆட்டியவாறே ஸ்ருதி குடுகுடுவென உள்ளே ஓட, “ஒழுங்கா சேட்டை பண்ணாம இரு ஸ்ருதி. யார்க்கிட்டேயும் வம்பிழுக்குற வேலை வச்சுக்காத...” வேதவள்ளி சற்று உரக்கக் கூற, தாயைத் திரும்பிப் பார்த்த சின்னசிட்டு, நாக்கைத் துருத்திவிட்டு ஓடிவிட, அன்பழகன் முகம் முழுவதும் புன்னகை.
“என்ன சிரிப்பு, வண்டியை எடுங்க...” சிடுசிடுத்தாள் வேதா. தந்தைக்கும் மகளுக்கும் அவளைக் கேலி செய்வதென்றால் கூடை கூடையாய்ப் பனிக்கூழ் சாப்பிடும் அளவிற்கு இஷ்டமான விடயம்.
அன்பழகன் வேதாவை அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இறக்கிவிடவும், “வரேன்...” முணுமுணுத்தவாறே பெண் இரண்டெட்டு வைக்க, “ஈவ்னிங் எத்தனை மணிக்கு வரணும் வேதா?” என வினவினான்‌ கணவன்.
“இதென்னங்க கேள்வி, எப்போதும் போல ஐஞ்சு மணி...” என்றவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது. உடன் வேலை பார்க்கும் சக ஊழியர் ஒருவரின் வீட்டு விசேஷத்திற்கு மாலை செல்ல வேண்டும் என அவனை விரைவில் தன்னை அழைக்க வருமாறு பணித்தது நினைவு வர, நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“ச்சு... சாரி. நாலு மணிக்கு வாங்க...” பதட்டத்துடன் கூறிய மனைவியைப் பார்த்த அன்பழகன் முகத்தில் மென்னகை படர்ந்தது.
‘இங்க வா...’ என கண்களாலே அழைத்தவனின் அருகே சென்றவளின் கைகளைப் பிடித்தவன், “நெவர்ஸ் ஆகாத. மீட்டிங்கை நல்லா கைட் பண்ணு. ட்ரெய்னீயா இருந்து, ஹெட்டா மாறும்போது இப்படித்தான் பதட்டம் இருக்கும். ரிலாக்ஸடா எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணு...” வாஞ்சையுடன் கூறிய கணவனைப் பார்த்தவளின் பார்வையில் அநியாயக் காதல். நேசப்பார்வைப் பார்த்து தலையை அசைத்தவள், விடைபெற்றாள். இத்தனை நேரமிருந்த அலைப்புறுதல்கள் எல்லாம் கணவன் கரத்தின் கதகதப்பில், அதன் மென்மையில், அவனுடைய அன்பான வார்த்தைகளில் கரைந்து காணாமல் போயிருக்க, முகத்தில் லேசான கர்வப்
புன்னகையொன்று அழையா விருந்தாளியாக குடியேறியது.
இதோ இப்போது அவளிடமிருக்கும் அடையாளம் எல்லாம் கணவன் கொடுத்தது. மனைவிக்கென்று சில ஆசைகள், கனவுகள் இருக்கும் என எண்ணி தன் முகம் பார்த்து தன்னை வழிநடத்தியவனை நினைத்தால் மனமெங்கும் அத்தனை மகிழ்ச்சி ஊற்றுப் பெருகும். ஏனோ, இந்த நேசம் தனக்கு மட்டுமே காலம் முழுவதும் வேண்டும், தன்னை அந்தப் போதையில் அடிமையாக வைத்திருக்கும் கணவனும் வேண்டும் எனத் தோன்றியது அவளுக்கு.
சுயம் தொலைத்து நிற்க வைக்கும் அன்பிற்கு மத்தியில் தன் சிறகுகளை ஒடித்துவிடாது தன்னை சுதந்திரமாய் வானில் பறக்கச் செய்த இந்த அன்பை, அதை அள்ள அள்ளக் குறையாது கொடுத்த அன்பழகனை வாழ்நாள் முழுவதும் திகட்ட திகட்ட காதல் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் கணவன் காதலில் திளைத்து அவனையும் திளைக்க வைத்துக்கொண்டிருந்தாள் மனைவி.
அன்றைய சந்திப்பை வெற்றிகரமாக முடித்து ஆசையாய்க் கணவனுக்காக மாலையில் காத்திருந்தாள் வேதவள்ளி. சரியாய் நாலு மணிக்கு அவளை அழைத்துச் செல்ல வந்த அன்பழகனின் பின்னே ஏறியமர்ந்தவளின் மலர்ந்த முகத்தை வைத்தே அகத்தைப் படித்தவனின் உதட்டிலும் மெல்லிய கோடாய்ப் புன்னகை படர்ந்தது. மகளையும் சேர்த்து அழைத்துக்கொண்டு குடும்பமாக விசேஷத்திற்கு கிளம்பினர் மூவரும்.
“அத்தை, நைட் சாப்பிட்டுதான் வருவோம். எங்களுக்காக சேர்த்து சமைச்சுடாதீங்க...” என்று மாமியாரிடம் கூறிய வேதா கிளம்பி வெளியே வந்தாள். அடர் காயாம்பூ நிறத்தில் பருத்திப் புடவை அணிந்திருந்தவள் மடிப்பை சரிசெய்தவாறே நிமிர, பளிச்சென்ற புன்னகையுடன் கணவனும் மகளும் அதே நிறத்தில் உடை உடுத்தியிருக்க, மனைவி புருவம் கேள்வியாய் உயர்ந்தது. எப்போதும் போல அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான் அன்பழகன்.
மூவரும் விசேஷத்திற்கு கிளம்பினர். அதோ இதோ என விழா முடிந்து வீடு வர நேரம் இரவு ஒன்பதைத் தொட்டு விட்டிருந்தது. வரும் வழியில் பனிக்கூழ் கேட்டு அடம்பிடித்த குழந்தையை அரட்டி உருட்டி மிரட்டிதான் வேதா வீட்டிற்கு அழைத்துவர வேண்டியதாகப் போயிற்று. கண்களில் குளம் கட்டிய நீருடன் தந்தை தோளில் சாய்ந்து தேம்பிக்கொண்டே வந்தவள் வத்சலாவைப் பார்த்ததும் அழுகையைப் பெரிதாக்கி அவரிடம் தாவிவிட்டாள்.
“குழந்தையை ஏன் டா அழ விடுறீங்க?” என முறைத்துக்கொண்டே அவளை சமாதானம் செய்து தன்னறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டார் வத்சலா.
காலையிலிருந்து அலைந்த அலைச்சல் உடலை அசத்த, சோர்வாக அறைக்குள் நுழைந்தாள் வேதா. சேலையின் மடிப்பெல்லாம் லேசாக தளர்ந்திருக்க, தலையில் சூடியிருந்த மல்லிகைப்பூ சற்றே வாடியிருந்தது. கலைந்தாலும் அழகான ஓவியமாகத் தெரிந்த மனைவியைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டன அன்பழகனின் கரங்கள். அதில் நெகிழ்ந்த வேதாவின் இதழ்களில் சோபையான புன்னகை.
“ப்ம்ச்... உங்க அருமை மககிட்டே போக வேண்டியதுதானே? என்கிட்ட ஏன் வர்றீங்க?” முனைத்துக்கொண்டவளைப் பார்த்து அன்பழகன் முகத்தின் புன்னகை பெரிதாய் நீள, “அவதான் அம்மா ரூமுக்குப் போய்ட்டா இல்ல? அதான் உன்னைக் கட்டிகிட்டேன்...” என்றான் மனைவியை வம்பிழுக்கும் நோக்கோடு.
“ஓ... அப்படியா...” அவனைத் தன்னிடமிருந்து பிரித்து கைளைத் தன்முன்னே ஆட்டியவளின் மருதாணி பூசிய விரல்களைப் பார்த்து கணவன் கேலியாய் சிரித்தான். எதற்கு சிரிக்கிறான் என யோசித்தவள் பின் தன் விரல்களைப் பார்த்ததும் புரிந்தது. நிஷா ஆசையாகக் கேட்டாள் என அவளது தாய் மருதாணி எடுத்து வந்திருந்தார். அதில் வேதாவிற்கும் பங்கு கிடைக்க, தானும் கையில் பூசிக்கொண்டாள்.
அவனின் சிரிப்பில் என்ன கூறப்போகிறான் என்பதை உணர்ந்து சிவந்தவளின் கரத்தை எடுத்து நுகர்ந்து முத்தமிட்டவன், அவளைத் தன்னோடு இறுக அணைத்துக்கொள்ளவும், கணவன் மார்பில் முகத்தை அழுத்திய வேதவள்ளிக்கும் மனம் நிறைந்திருந்தது. காலையில் நடந்த சந்திப்பை நன்றாக வழிநடத்தியதற்காக குழுவில் உள்ள அனைவரும் அவளுக்கு புகழாரம் சூட்ட, கணவன் முகம்தான் மனதில் நின்றது.
“இன்னைக்கு மீட்டிங்கை ரொம்ப நல்லா கைட் பண்ணேன்னு எம்.டி பாராட்டித் தள்ளிட்டாரு... ஹ்ம்ம். ஆல் பிகாஸ் ஆஃப் யூ...” என்று அவன் கன்னத்தைப் பிடித்து செல்லம் கொஞ்சிய வேதாவின் விழிகள் முழுவதும் லட்சம் லட்சமாய் கணவன் மீதான காதல் மிளிர்ந்தது.
தலையை இடம் வலமாக அசைத்தவன், “நோ, நான் என்ன டி பண்ணேன். உனக்கு சப்போர்ட்டா இருந்தேன் அவ்வளோதான். இதெல்லாம் என் பொண்டாட்டி அவளா செஞ்சிருக்கா...” எனக்கூறி அவள் நுனி மூக்கில் முத்தமிட்டான் அன்பழகன். கணவனின் இந்த பரிமாணத்திலும் மயங்கியவளின் மனம் கோடி கோடியாய் காதலை அவனிடம் கொட்ட விழைய, வார்த்தையாய் இல்லாது செயலாக அவனை இறுக அணைத்துக்கொண்டாள் வேதவள்ளி. மனம் இருவருக்கும் நிறைந்து போயிருந்தது அந்தக் கணத்தில்.
“பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீர்ந்ததே
உன் காதல் சூட்டில் என் காதல் பூக்கும்
நம் தேடல் தீருமே!”
சுபம்






















































 
Well-known member
Messages
1,058
Reaction score
763
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr anbu♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Well-known member
Messages
551
Reaction score
389
Points
63
வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர்👌👌👌👌, : இருவர் காதலும்💞💞💞💞💞💞
 
Top