• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,070
Reaction score
3,059
Points
113
இஷ்டம் – 11 💖
நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் கடந்துவிட, அடுத்ததாய் திருமணத்திற்கு மண்டபம் பார்ப்பது, பத்திரிகை அடிப்பது என வேலைகள் துரிதகதியில் நடந்தன. இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் அனைத்தையும் திருப்தியாய் செய்து முடித்துவிட வேண்டும் என்று இரு வீட்டாட்களும் வெகு கவனமாய் செயல்பட்டனர்.
ஒற்றை மகன் திருமணத்தை எவ்வித குறையும் அற்று செய்துவிட வேண்டும் என்று தேவராஜூம் கௌதமியும் பணம் என்ற வஸ்துவைப் பற்றிக் கவலைக் கொள்ளவில்லை. இத்தனை நாட்கள் அவர் சேர்த்து வைத்த சொத்து முழுவதும் மகனுக்காகத்தானே. வங்கியில் ரகுராம் பெயரில் சேமித்து வைத்திருந்த பணத்தை அவனுடைய திருமண செலவிற்கு எடுத்துக் கொண்டார் தந்தை. அதற்காக வீண் செலவு எல்லாம் அவர் செய்யவில்லை. பெண் வீட்டாரின் செல்வ செழிப்பில் எந்த வகையிலும் நாங்களும் குறைந்தவர்கள் இல்லை என்பதைக் காண்பிக்க வேண்டும் என்ற தன்முனைப்பு முன்னே வந்து நின்றது. எப்போதும் எண்ணி எண்ணி செலவும் செய்யும் மனிதர் மகனின் திருமண விஷயத்தில் அதைத் தளர்த்தியிருந்தார்.
மருத்துவமனைக்கும் சென்றுவிட்டு அடிக்கடி திருப்பூரும் சென்றுவர பெரியவர்கள் இருவருக்கும் உடல் ஒத்துழைக்கவில்லை. திருமணம் புதுக்கோட்டையில் தான் என்றாலும் மறுநாள் திருப்பூரில் வரவேற்பு என்பதால் அங்கேயும் சென்றுவர வேண்டியிருந்தது. அதனால் தேவராஜ் ஒரு மாத மருத்துவிடுப்பு கேட்டு வாங்கிவிட்டார். அவரும் மனைவியுமாக ரகுவின் திருமண ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர்.
ரகுராமிற்கும் வேலை வரிசைக்கட்டி நின்றன. வாரத்தில் கிடைக்கும் விடுமுறை ஒருநாள் கூட அவனால் ஓய்வெடுக்க முடியவில்லை. பெற்றவர்களால் பெரிதாக அலைய முடியாது என்பதால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய பயணங்கள், சற்றே கடினமான வேலைகளை இவனே செய்தான்.
கடந்து சென்ற நாட்களில் அவனுக்கும் காயத்ரிக்குமான தொடர்பு சற்றே குறைந்திருந்தது. ரகுவால் அவளிடம் சரியாகப் பேச முடியவில்லை. ஏன் அன்றைக்கு பேருந்து ஏற்ற வந்ததோடு இருவரும் இன்னும் சந்தித்துக் கொள்ளவில்லை. இவன் நேரமில்லாமல் அலைய, காயத்ரிக்கு இவனைக் காண மனமற்றுப் போயிருந்தது. அதானலே அவனை எந்த வகையிலும் அவளாகத் தொடர்பு கொள்ளவில்லை. ரகுராமிற்கு அவளை எப்படி சரிபடுத்துவது என்ற கவலை மனதோரம் அரித்துக் கொண்டேதான் இருந்தது. வேலைகளுக்கு நடுவே அவளது நினைவுகள் அடிக்கடி முகிழ்க்கும். திருமணம் முடிந்தப் பிறகு அவளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டான்.

அவனாலும் இந்தப் பெண்ணிடம் போராட முடியவில்லை. தான் எது செய்தாலும் விதண்டாவாதம் செய்யும் பெண்ணிடம் அவனால் எதையும் சரியாய் பேச கூட முடியவில்லை. அவள் மனதில் எதையோ வைத்துப் புழுங்குகிறாள் என்றதுவரை புரிந்தாலும் என்னவென அத்தனை எளிதில் இனம் காண முடியவில்லை‌. திருமண நேரத்தில் இருவருக்கும் இடையே பிணக்குகள் வேண்டாம் என இவன் அமைதியாகிப் போனான். அவளுக்காய்த் தோன்றும் போதும் தன்னைத் தேடி வரட்டும். எப்போதும் காயூவிற்கான இடம் அப்படியேதான் இருக்கும். அதில் மாற்றுக் கருத்தெல்லாம் அவனுக்கு இல்லை.
பள்ளியில் தொடங்கிய நட்பு எங்கேயும் தேங்காது கல்லூரியிலும் தொடர்ந்து இத்தனை வருடங்கள் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கிறதே. அந்த நட்பின் மீது அவனுக்கு ஏக நம்பிக்கை இருந்தது. கண்டிப்பாக காயத்ரி தன்னைப் புரிந்து கொள்வாள். அவளாகத் தன்னிடம் பேசுவாள் என இவன் எண்ணி மனதை சுயசமாதானம் செய்து கொண்டான்.
அன்றைக்கு வார விடுமுறை இல்லையெனினும் ரகுராம் விடுப்பெடுத்துக் கொண்டு காலை ஐந்து மணிக்கே மகிழுந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிருந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பே பத்திரிகை அடித்து வந்துவிட்டது. கௌதமியும் தேவராஜூம் முதல்நாள் ரகுவோடு சென்று அவர்கள் குலதெய்வத்தை வழிபட்டு முதல் பத்திரிகையை சாமிக்கு வைத்துவிட்டு மறுநாள் செங்கல்பட்டு சென்றுவிட்டனர். தேவராஜின் மூன்று அக்காக்களுக்கும் பத்திரிகை வைத்து முடித்துவிட்டு அப்படியே அங்கிருந்த உறவினர்களுக்கும் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வந்தனர்.‌
இரண்டு நாட்கள் அலைச்சலில் கௌதமிக்கு முதுகுவலி வந்திருந்தது. அதனாலே திருப்பூரில் இருக்கும் உறவினர்களுக்கு ரகுராம் சென்று அழைத்துவிடுவதாக உரைத்துவிட்டான். அதுவும் இல்லாமல் சைந்தவி தன்னுடைய நண்பர்களுக்கு அழைப்பிதழ் வைக்க இவனை வருமாறு கேட்டிருக்க, ஒருநாள் விடுப்பெடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
இவன் கிளம்பியதும் அவளுக்கு குறுஞ்செய்தி ஒன்றை இவன் தட்டிவிட, சைந்தவி அழைத்துவிட்டாள். “ஓகே ரகு... பார்த்து வாங்க. சாப்பிடாம வராதீங்க. ஏதாவது சாப்ட்டு வாங்க. அவசரம் இல்ல!” என அவள் கூற, இவன் புன்னகைத்துக் கேட்டுக் கொண்டான். காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் சற்றே குறைவாய் இருக்க, பத்து மணிக்கு முன்பே திருப்பூரை அடைந்திருந்தான்.
இவன் இளவேந்தன் வீட்டிற்கு சென்றதும், “மாப்பிளை, முதல்ல வந்து சாப்பிடுங்க!” என நளினி அவனை அமர வைத்து போதும் போதும் என்றளவிற்கு வயிற்றை நிரப்பிவிட, இவன் சகஜமாய் அவர்களுடன் கலந்திருந்தான். ஆரண்யாவும் ரித்விக்கும் மாமாவென அவனைச் சுற்றி வந்தனர். வீட்டிற்கு வரும்போதே அவர்களுக்கென்று பொம்மைகள், இன்னெட்டுகள் என இவன் வாங்கி வந்திருக்க, குழந்தைகள் இருவருக்கும் இன்னுமே ரகுவைப் பிடித்துப் போனது.
இளவேந்தனும் உணவுண்ண அமர்ந்தவன், அங்கே புதுக்கோட்டையில் வேலை எப்படி நடக்கிறது எனத் தெரிந்து கொண்டான். கட்சியிலும் சில பல வேலைகள் அவனுக்கு நிலுவையில் இருந்தன. ஈவன் மேனேஜ்மென்ட் ஆட்களிடம் தான் மண்டப வேலைகளைப் பகிர்ந்தளித்திருந்தான். மகிழ் வேந்தன் அவர்களை மேற்பார்வை பார்க்க, இங்கே வரவேற்புக்கான வேலையை இளவேந்தனோடு துளசியும் பகிர்ந்து கொண்டாள். அதியமான் இடையிடையே வந்து தன்னால் இயன்ற உதவியை மூத்த மருமகனாகச் செய்திருந்தான்.
“சரி மாப்பிள்ளை, நீங்க சைந்துவோட போங்க. எனக்கும் வேலை இருக்கு!” என இளவேந்தன் அகன்றிருக்க, சந்தனவேலிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியவன் சைந்தவியை அழைத்துக் கொண்டு கிளம்பினான். முதலில் அவன் வீட்டு சொந்தங்கள் மூன்று பேருடைய வீட்டிற்கு இவர்கள் சென்று முறையாய்ப் பத்திரிகை வைத்து அழைத்தனர்.
***
காலை ஒன்பது மணியைத் தொட்டிருந்தது. காயத்ரி தலையணையில் முகம் புதைத்திருந்தாள். உறக்கம் எப்போதோ தூரச் சென்றிருந்தது. இன்றைக்கு அவளுக்கு மதிய நேரத்துப் பணி. ஒரு மணிக்கு சென்றால் போதும். சோம்பேறித்தனம் சுருட்டிக் கொண்டு விட்டது என்று பொய்யெல்லாம் உரைக்க முடியாது. வேண்டுமென்றே எழாது படுத்திருந்தாள். பார்வையை சற்றே உயர்த்தி தலைக்கு மேலே புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த தாயைப் பார்த்தாள்.
அவள் தாயைப் பிரிந்து முழுதாய் பதினான்கு முடிந்து பதினைந்து வருடங்களாகியிருந்தது. அவரைப் பார்த்து கசப்பாய் முறுவலித்தபடியே எழுந்தமர்ந்தாள். இன்றோடு அவளுக்கு இருபத்து ஆறு ஆகிறது. கைக்கெட்டும் தூரத்திலிருந்த அலைபேசியைப் பார்த்தாலும் அவள் எடுக்க விழையவில்லை. அதை சில நொடிகள் வெறித்திருந்தவள் எழுந்து தலைக்கு குளித்து முடித்து தாயின் புடவை ஒன்றை அணிந்து கொண்டாள். அதை நுகர்ந்து பார்த்தாள். எத்தனை வருடங்கள் கடந்தும் இன்னுமே அதில் அவரது சுகந்தம் இருப்பதாய் மனம் நம்ப, புன்னகைத்துக் கொண்டாள்.
நேரே பூஜையறை நோக்கிச் சென்றாள். பெரிதாய் எல்லாம் இல்லை. மிக மகி சிறியதாய் நேர்த்தியாய் இருந்தது அந்த பூஜை அறை. ஒருவர் மட்டுமே உள்ளே செல்ல முடியும். கடவுள் புகைப்படத்தோடு காயத்ரியினுடைய தாயின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. விளக்கேற்றி சில நொடிகள் மௌனமாய் கண்களை மூடி நின்றாள். வேண்டுதல் என எதுவுமே அற்ற நிலை அவளுடையது.
‘நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். என்னால் எந்த அளவிற்குத் தாங்க முடியும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அந்த அளவிற்கு மட்டும் கஷ்டத்தை தாருங்கள். தாங்க முடியாத பாரத்தை எல்லாம் என் மீது சுமத்தி விடாதீர்கள். நான் வலிமையானவள் என்ற போர்வையில் இருக்கும் வெகு வெகு சாதாரணமான எல்லா உணர்வுகளும் உடையப் பெண்தான்!’ என மனம் கூற, இவளது உதடுகளில் மென்னகை படர்ந்தது.
‘தாங்கிடுவா இவன்னு தோணுனாலதான் இப்படியெல்லாம் கொடுத்திருக்காரு போல இந்த கடவுள்!’ என்ற எண்ணத்தோடு வெளியே எட்டிப் பார்த்தாள். தங்கராஜ் எழுந்து அமர்ந்திருந்தார். தேநீர் விடுதிக்குச் சென்று வந்திருப்பார் போல. அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார்‌.
இவளைப் பார்த்தவர், “எழுந்திட்டீயா காயூ?” எனக் கேட்டார்.
“ஆமப்பா... எழுந்துட்டேன். பத்து நிமிஷத்துல சமைச்சிடுவேன். நீங்க குளிச்சிட்டு வாங்கப்பா!” என்றவள் நூற்றில் ஒரு பங்கு கூட அவரிடம் பிறந்தநாள் வாழ்த்தை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. தங்கராஜிற்கு காயத்ரியின் பிறந்தாள் எல்லாம் நினைவிலே இருக்காது. இன்றைக்கு மட்டும் அல்ல, விவரம் தெரிந்த நாளில் இருந்தே அவர் இவளுக்கு வாழ்த்து சொன்னதாகவோ அல்லது பரிசு வாங்கி கொடுத்ததாகவோ நினைவில் இல்லை. இவளாகச் சென்று நின்றாலும், “அப்படியாம்மா... நல்லா இரு!” என்பார். அவரது எதிர்வினை அவ்வுளவுதான். புரியாத வயதில் அழுதிருக்கிறாள். புரிந்து பக்குவம் வந்தப் பிறகு அழுததை நினைத்து சிரித்தும் இருக்கிறாள்.
பிறந்தநாள் என்று சிறப்பாய் எதுவும் சமைக்கவில்லை. வெண்பொங்கல் வைத்து சாம்பார் செய்தாள். மதியத்திற்கு சாதம் வடித்து உருளைக் கிழங்கை பொரித்து எடுத்தாள். அவ்வளவுதான் அன்றைக்கான உணவு. தந்தையும் மகளும் உண்டு முடித்தனர். இவள் மதியத்திற்கு டப்பாவில் அடைத்து வைத்துவிட்டு வந்து கூடத்தில் அமர்ந்தாள்.
மேஜை விசிறியை நகர்த்தி அதன் முன்னே அமர்ந்தவள் சரியாய் காயாத தலையை உலர்த்தினாள். தொலைக்காட்சியில் ஏதோ பாடல் ஒன்று ஒலி பரப்பானது. அசிரத்தையாய் அதை கவனித்தவளின் விரல்கள் வேண்டாம் எனத் தடுத்தும் அலைபேசியை எடுத்து இணையத்தை இணைத்தன. உடன் வேலை பார்க்கும் தோழர் தோழிகள், உறவினர்கள் சிலர் என இவளுக்குப் பிறந்தாள் வாழ்த்தை தெரிவித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியை நவில்ந்தவளின் விழிகள் ராம் என்ற பெயரின் செய்தி பெட்டியைத் திறந்து உள்ளே சென்றது.
கடைசியாய் பத்து நாட்களுக்கு முன்னே அனுப்பியிருந்த செய்தி மட்டும்தான். அதையும் இப்போதுதான் இவள் திறந்து பார்த்தாள். வேறு அழைப்போ வாழ்த்தோ என எதுவுமே பகிரப்படவில்லை‌. சர்வ நிச்சயமாய் விழிகள் கலங்க, மனம் சுணங்கத்தான் செய்தன.
‘அறிவிருக்கா காயூ? அவனே கல்யாண பிசியில இருப்பான். ஹாஸ்பிடல் வொர்க் டென்ஷன் இருக்கும். இதுல உன் பெர்த் டே ஞாபகம் வச்சு விஷ் பண்றதுதான் முத வேலையா? ஹம்ம்... இதெல்லாம் அவனுக்கு இப்போ ரெண்டாம் பட்சம்தான். எழுந்து வேலைக்கு கிளம்பு!’ எனத் தன்னை தானே அதட்டி கலங்கிய மனதை சரி செய்து கொண்டவள் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டாள்.
சைந்தவி ரகுராமை அவளுடைய கல்லூரியில் படித்த தோழன் ஒருவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அவர்கள் சென்று அழைப்பு மணியை அழுத்த, “யாரும்மா நீங்க?” என்றவாறு முதிய பெண்மணி ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.
“ம்மா... நான் சித்தார்த் ஃப்ரெண்ட். என்னோட மேரேஜ்க்கு அவரை இன்வைட் பண்ணலாம்னு வந்தேன் மா!” என்றாள்.
“அப்படியாமா... வாங்க, உள்ள வாப்பா!” என இருவரையும் புன்னகை முகமாக அழைத்து அமர வைத்து உபசரித்தார்.
“சித்தார்த் சீனியர் இல்லையாமா? அவரை நேர்ல பார்த்து கொடுக்கணும்னுதான் இவரையும் கூட்டீட்டு வந்தேன்!” என்றாள் விழிகளை சுழற்றி வீட்டை நோட்டமிட்டபடி.
“சித்தார்த் வீட்ல இல்லம்மா. அவன் ஏதோ மெடிகல் கான்ப்ரென்ஸ்னு டெல்லிக்குப் போய்ருக்கான்மா. வர பத்து நாளாகும்னு சொல்லி இருக்கான் மா!” என அவர் கூற, சைந்தவி முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது.
“ஓ...” என்றாள் இறங்கிய குரலில்.
“நீ பத்திரிகையைக் கொடுத்துட்டு போம்மா. அவன்கிட்ட நான் ஃபோன் போட்டு சொல்றேன். வந்ததும் நேர்லயும் ஞாபகப்படுத்துறேன்!” என அவர் கூற, இவளும் தலையை அசைத்துப் அழைப்பிதழை நீட்டினாள்.
“ரெண்டு பேரும் தீர்க்க ஆயுசோட ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும்மா. பார்க்க நல்ல பொருத்தமான ஜோடி. என் கண்ணே பட்டுடுச்சு!” என அவர் வெகுளியாய்க் கூறி சைந்தவி முகத்தை நெட்டி முறிக்க, அவள் வலியப் புன்னகைத்தாள். ரகுராம் அவரிடம் நன்றியுரைத்தான். இருவரும் விடை பெற்றனர்.
இவ்வளவு நேரம் கலகலவென்றிருந்த சைந்தவி அமைதியாய் வர, ரகுராம் அவளைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான். “சைந்து, வாட் ஹேப்பண்ட்? அந்த சீனியரை அவ்வளோ பிடிக்குமா?” எனக் கேட்டான்.
அவன் முகத்தைப் பார்க்காதவள், “உங்களுக்கு காயூ எப்படியோ அப்படித்தான் அவரும் எனக்கு முக்கியம், பிடிக்கும் ரகு. நேர்ல பார்த்து இன்வைட் பண்ண முடியலைன்னு சின்ன அப்செட்!” என்றாள்.
“இட்ஸ் ஓகே சைந்து, அவர் டெல்லில இருந்து வந்ததும் இன்னொரு நாள் நீயும் நானும் சேர்ந்து போய் இன்வைட் பண்ணலாம்...” அவளை சமாதானம் செய்ய விழைந்தான்.
“நோ... நோ நீட் ரகு. அதெல்லாம் கண்டிப்பா கல்யாணத்துக்கு வருவாரு. அதெப்படி வராம போவாரு? முதல் ஆளா அவர்தான் வந்து நிப்பாரு!”
“ஓகே, ஃபோன் பண்ணி அவர்கிட்டே வந்துட்டுப் போனதை நீயும் இன்பார்ம் பண்ணிடு!” என இவன் இலகுவாகக் கூறினான்.
“இல்ல ரகு, அவர் நம்பரைப் ப்ளாக் பண்ணிட்டேன். அவருக்கும் எனக்கும் ஒரு சின்ன க்ளாஷ்!” என்றவள் அவன் மேலும் வேறு ஏதும் கேட்கும் முன்னே பேச்சை மாற்றி இருந்தாள். சிறிது நேரத்திலே அவர்கள் ஒரு கேலிக்கை உணவு விடுதியை அடைந்தனர். அங்குதான் சைந்தவி நெருங்கிய நண்பரை அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தாள். அப்படியே அனைவருக்கும் அழைப்பிதழையும் வைத்துவிடலாம் எண்ணி அனைவரையும் அங்கே குழும செய்தாள். ரகுராமை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
இளம் பிராயத்தினர் என்பதால் சிரிப்பும் கேலியுமாக நேரம் நகர்ந்தது. மதிய உணவை முடித்து அப்படியே அதனை ஒட்டியிருந்த செயற்கை கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
சைந்தவியின் தோழி ஒருத்தி அவளருகே வந்து காதில் எதையோ முணுமுணுக்க, “ச்சு... எப்படி டி மறந்தோம். போச்சு போ. காலைல இருந்து ஏன் முகத்தை தூக்கி வச்சிருக்கான்னு யோசிச்சேன். சரி, சரி. அப்படியே வினோத்தை எழுந்து போய் கேக் வாங்கிட்டு வர சொல்லு. சமாதானப்படுத்தி கேக்கை வெட்ட வச்சிடலாம்!” என்றாள். ரகுராம் அவர்களை யோசனையுடன் பார்த்தான்.
அவன் புறம் திரும்பிய சைந்தவி, “ரகு, இன்னைக்கு லிஷாவோட பெர்த்டே. நாங்க மறந்துட்டோம். சரி, அதான் கேக் வாங்கிட்டு வர சொன்னேன்‌. கேக் கட் பண்ணா மேடம் சமாதானமாகிடுவாங்க!” என அவள் கூற, ராம் அமர்ந்த இடத்திலிருந்து படக்கென எழுந்துவிட்டான். மே இருபத்து மூன்று காயத்ரியின் பிறந்தாள். அவளைத் தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை அவன்தான் முடிந்தளவிற்கு முதல் வாழ்த்தை பகிர்வான். காலையிலே வாழ்த்து செய்தியோடு அவள் வீட்டிலிருப்பான். ஆனால் இன்றைக்கு மொத்தமாய் மறந்திருந்தான். எப்படி மறந்தான் என்பதே நினைவில் இல்லை. கடந்த வாரம் கூட அவளுடைய பிறந்தாள் நினைவிருந்தது. ஆனால் இன்றைக்குத்தான் என்பதை வசதியாய் மறந்திருந்தான்.
அவன் அப்படி திடீரென எழவும், “ரகு, என்னாச்சு. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என சைந்தவியும் அவனருகே எழுந்து வந்தாள்.
“அது... ஒரு இம்பார்டெண்ட் வொர்க் சைந்து. செய்ய மறந்துட்டேன்!” அவளிடம் உண்மையை உரைக்க மனதில்லாது பொய் கூறினான்.
“ஓ...” என யோசித்தவள், “ஓக ரகு, நீங்க இப்படியே கூட கிளம்புங்க. நான் கேப் புக் பண்ணி வீட்டுக்குப் போய்க்கிறேன்...” என்றாள் அவனுக்காகப் பாரத்து. ரகுவிற்கு அது சரிவரும் என்று தோன்றவில்லை. இவன்தானே அழைத்து வந்தது. முறையாய் அவர்கள் வீட்டில் சென்று விடுவதுதான் உத்மமாய் பட்டது.
“நோப் சைந்து, நான் கேக் கட் பண்ணி முடிஞ்சதும் உன்னை வீட்டுல விட்டுட்டுப் போறேன். நத்திங் வொர்ரீ?” என்றான்.
“ஓஹோ... அந்த இம்பார்டெண்ட் வொர்க்கை விட நான் முக்கியமா போய்ட்டேன் இல்ல ரகு?” என அவள் கேலியாகக் கேட்க, ரகுவுக்கு சுருக்கென்றுவிட்டது.
“பொண்டாட்டியா? நானான்னு வரும்போது கண்டிப்பா நான் ரெண்டாம் பட்சமாத்தான் போய்டுவேன் ராம். இதான் ரியாலிட்டி!” என்ற காயூவின் வார்த்தைகள் காதில் மீண்டும் ஒலிக்க, இவனுக்கு முகமும் உடலும் சோர்ந்து போனது. தவறிழைத்து விட்டோம் என வெகுவாய் வருந்தினான். கண்டிப்பாக காலையிலிருந்து தான் ஒரு வாழ்த்தாவது பகிர்வோம் என அவள் எதிர்பார்த்திருப்பாள். தன்னுடைய வருகையை எதிர் நோக்கி இருந்திருப்பாள். அவளை ஏமாற்றி விட்டோம் என மனம் வருந்திற்று.
சிறு வயதில் தந்தை தன்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்து வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று இவனிடம் தான் வந்து வருத்தமாகக் கூறிவாள் காயத்ரி. “காயூ... இனிமே யார் மறந்தாலும் நான் உன்னோட பெர்த் டேவை மறக்காம விஷ் பண்ணுவேன். கிஃப்ட் வாங்கித் தருவேன்!” என ரகுராம் அவளை சமாதானம் செய்திருந்தான்.
அப்போது கூட அவள், “யாராலையும் அப்படியெல்லாம் முடியாது ராம். நீயூம் என்னைக்காவது ஒருநாள் மறந்துடுவ. அப்போ பாரு, நான் எப்படி உன்கிட்ட சண்டை போட்றேன்னு!” என அவள் கூறியது இன்னுமே பசுமையாய் நினைவில் நின்றது. அணிச்சலை வெட்டி முடித்து சைந்தவியை வீட்டில் இறக்கிவிட்டான்.
உள்ளே சென்றவனை இரவு தங்கிவிட்டு செல்லுமாறு வற்புறுத்திய நளினியிடம் நாசூக்காக மறுத்துவிட்டு கிளம்பினான். மணி அப்போதே ஆறாகியிருந்தது. எப்படியும் இவன் ஆலம்பட்டியை அடைய பதினொன்றாகிவிடும் என மனம் கணக்கிட்டது. ஒருவித குற்றவுணர்விலே வீட்டை நோக்கிப் பயணித்தான்.
கௌதமி அழைத்து அவன் எப்போது வருவான் எனக் கேட்க, “ம்மா... இப்போதான் கிளம்புறேன். வர லேட்டாகும். நீங்க வெயிட் பண்ணாம தூங்குங்க!” என்றுவிட்டான்.
“சரிடா, நைட்டு நேரம். காரை பொறுமையா ஓட்டீட்டு வா. நைட்டு எங்கயாவது ஓட்டல்ல சாப்ட்டு வாடா!” என அவர் அழைப்பைத் துண்டித்திருந்தார்.
இரவு நேர போக்குவரத்து சற்றே அதிகமாக இருந்தது. ஊர்ந்து செல்லும் வாகனங்களை காண்கையில் இவனுக்கு எரிச்சல் படர்ந்தது‌. அப்படியே பக்கவாட்டில் பார்த்தான். சாரதாஸ் துணிக்கடை பெரிதாய் அந்த தெருவையே ஜொலிக்க செய்ய, மகிழுந்தை ஓரமாய் நிறுத்தினான். காயத்ரிக்கு எதுவும் வாங்காது செல்வதில் இவனுக்கு விருப்பம் இல்லை.‌ உள்ளே சென்று பத்து நிமிடங்கள் அலசினான். ஒரு புடவை கூட அவனுக்குத் திருப்தி படவில்லை.
ஏற்கனவே இருந்த மனநிலைக்கு இன்னுமே எரிச்சல் கூடியது. திரும்ப சென்றவன் அப்படியே அந்தப்‌ புடவையில் கண்கள் பதிய, “அது என்ன சாரீ?” எனக் கடை சிப்பந்தியிடம் வினவினான்.
“சார், அது காதி சாரீ சார். இப்போ ட்ரெண்டிங்க்ல இருக்க சன்ப்ளவர் டிசைன்!” என அவர் விரித்துக் காண்பிக்க, அதிலிருந்து அடர் நீல வண்ணப் புடவையைத் தேர்வு செய்து வாங்கிவிட்டு வந்து மகிழுந்தை உயிர்ப்பித்தான். இந்தப் போக்குவரத்து நெரிசலில் கண்டிப்பாக வீடடைய பன்னிரெண்டு மணியைத் தொட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என மூளை குறுக்கிட்டது.
நேரம் பதினொன்று நாற்பத்து ஐந்தாகியிருந்தது. வீட்டிலிருந்த அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு ஒன்றை மட்டும் கூடத்தில் எரியவிட்டு அந்த நீள்விருக்கையில் அமர்ந்திருந்தாள் காயத்ரி. தொலைக்காட்சியில், “உன்னை அள்ளியெடுத்து, உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்!” என அலைபாயுதே ஷாலினி பாவனையாய் மாதவனை காதல் செய்வதை இவள் அமைதியாய் பார்த்திருந்தாள். விழிகள் நிமிடத்திற்கு ஒருமுறை மேஜையிலிருந்த அலைபேசியைத் தொட்டு தொட்டு மீண்டன.
எதிர்பார்க்காதே என எத்தனை அதட்டியும் ஒரே ஒரு அழைப்போ ஒரு குறுஞ்செய்தியோ ராமிடமிருந்து வந்து விடாதா என மனம் எதிர்பார்த்தது. மூளைக்கு உறைத்தது மனதிற்கு புரியவில்லை போல. எங்கோ ஒரு ஓரத்தில், ‘என் ராம் கடைசியா கூட விஷ் பண்ணிடுவான். ஐ க்நோ ஹிம்!’ என அவன் மீது கொண்ட அளவற்ற நம்பிக்கையை எவ்வித தளர்வும் அற்று இழுத்துப் பிடித்திருந்தது. நேரமுள் நகர நகர, இவள் மனம் பிசையத் தொடங்கியது.
கண்டிப்பாக வேலை அசதியில் மறந்திருப்பான். மற்றபடி அவன் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை என ஏமாற்றத்தை சுமக்கத் தயாராகும் மனதிடம் பசப்பு வார்த்தைகளை உதிர்த்தாள். நேரம் பன்னிரெண்டு மணியைத் தொட்டதும் கடிகாரத்திலிருந்து மெலிதாய் ஓசை வர, அப்படியே இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடிக் கொண்டாள்.
இனி தான் வாழப் போகும் வாழ்க்கைக்கான நிதர்சனம் இன்றைக்கு மீண்டும் ஒரு முறை வலிக்க வலிக்க கடவுள் உணர வைத்திருந்தார். அழவெல்லாம் இல்லை காயத்ரி. திடமாய்தான் இருந்தாள். அவனிடம் பேசாது அவனைக் காணாது கடந்த பன்னிரெண்டு நாட்களைக் கடத்தியிருந்தாள். அப்போது மிச்சமிருக்கும் வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாதா என்ன? எல்லோரும் நம்மோடு கடைசிவரை வாழ்க்கையில் பயணம் செய்தெல்லாம் வர முடியாது என்று அவளுக்கும் புரிந்தது‌. என்ன புரிந்த உண்மையை மனம் அத்தனை சுலபத்தில் ஏற்கத் தயாராக இல்லை.
‘ப்ம்ச்... பாவம், அவன் வொர்க் டென்ஷன்ல இருப்பான்‌. வேலை அதிகமாக இருக்க கூடும்!’ என்ற கரிசனம்தான் எழுந்ததே தவிர அவன் மீது கோபம் பொங்கவில்லை. ஆற்றாமை அரிக்கவில்லை. இது இப்படித்தான் என மனம் ஒரு பக்குவத்திற்கு வந்திருக்க, கண்கள் உவர்நீர் உற்பத்தி செய்வதை நிறுத்தியிருந்தன.
அவன் வாழ்த்தவில்லை என்றால் இன்றைக்கு நாள் நகராது உறைந்து விடுமா என்ன? இல்லை அவன் உன்னோடு கடைசி வரை இருக்கப் போகிறானா என்ன?’ என மூளை சாட்டையை சுழற்றி வீச, இவளது உதடுகளில் விரக்தி புன்னகை. யார் வந்தாலும் போனாலும் இவளுக்கான வாழ்க்கையை வாழ்ந்து தானே ஆக வேண்டும். என்ன பிடித்தது போல வாழ்வது வேறு. கடமைக்கென வாழ்வது வேறு. எப்படியோ நீண்டு கிடக்கும் காலத்தை வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என முதுமைக்கும் சேர்த்து தன்னை சுயமாய் மீட்டெடுத்தாள்.
‘போகட்டும்... என்னோட ராம் அவன். கோபமெல்லாம் அவன் மேல பட முடியாது. அவன் சந்தோஷமா இருந்தாலே எனக்கு நிம்மதிதான். என்னைப் பத்தின சிந்தனை அவனுக்கு இல்லாம இருக்கது எனக்குமே நிம்மதிதான் கடவுளே. இல்லைன்னா அப்போ அப்போ நான் இருக்கேன் நான் இருக்கேன்னு சொல்லி அழ வைப்பான். அவனைப் பார்க்காம நான் சந்தோஷமா இல்லைதான். ஆனால், அழது வடியாம நிம்மதியா இருக்கேன் இல்ல. இதுவே எனக்குப் போதும்!’ என மென்முறுவலோடு எழுந்து தொலைக்காட்சியை அணைத்தாள்.
“காயூ” மெதுவாய் ரகுவின் குரல் இவளது செவியை அடைய, “ப்ச்...” என்றாள் சலிப்பாய். பிரம்மையாகத்தான் இருக்க கூடுமென மனம் நம்பிற்று.
அதைப் புறந்தள்ளி நடந்தாள்.
“காயூ!” மீண்டும் மீண்டும் குரல் கேட்கவும் கால்கள் அவசர அவசரமாய் வாயிலை நோக்கி ஓடின. உட்புற கதவை பூட்டாமல் வைத்திருந்தாள். வெளியே சென்று பார்க்க, ரகுராம் வரிவடிவமாய்த் தெரிந்தான். அவனைக் கண்டதும் இவளது விழிகள் மெதுவாய் தளும்பத் தொடங்க, “என் ராம் வந்துட்டான்!” என மென்மையாய் தனக்குத் தானே முணுமுணுத்தாள்.

தொடரும்...

இது நேத்து அப்டேட்தான் கைய்ஸ். இன்னைக்கு இன்னொரு அப்டேட் வேணும்னா கண்டிப்பா நிறைய கமெண்ட் வேணும். அப்போதான் நெக்ஸ்ட் அப்டேட். இல்லன்னா நாளைக்குத்தான் 🏃‍♀️🏃‍♀️



































































 
Active member
Messages
200
Reaction score
131
Points
43
Lovely
Synthu vera track irukum pola ye
Antha senior enna matter ma
 
Well-known member
Messages
919
Reaction score
673
Points
93
Vanthittan paa

Sainthu ethuvum maraikkiraa polaye
 
Top