• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
நேரம் – 23 💜

வேலை முடிந்து அப்போதுதான் பரிதி வீட்டிற்குள்ளே நுழைந்தான். “வாடா...” என சிந்தாமணி அவனைப் பார்த்து தலையை அசைக்க, இவன் சென்று உடை மாற்றி முகம் கழுவி வந்தான்.

அவன் கையில் தேநீரைக் கொடுத்தவர், “ஏன்டா... உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஏதாச்சும் சண்டையா?” எனக் கேட்ட தாயை யோசனையுடன் பார்த்துக் கொண்டே தேநீரைப் பருகினான் இவன்.

“உன்கிட்ட தானே டா கேட்குறேன்?” அவர் மீண்டுமொரு அழுத்திக் கேட்க,

“அதெல்லாம் இல்லையேமா. ஏன் அவ உன்கிட்ட எதுவும் மூஞ்சியைத் திருப்புறாளா?” என யோசனையுடன் கேட்டான்.

“என்கிட்டே பேசுனாதானே டா மூஞ்சியைத் திருப்ப? எப்பவும் காலைல எழுந்திரிச்சதும் அவளா வந்து பேசுவா. கூட மாட வேலை செய்வா. லீவ் நாள்னா பாதி வேலையை அவளே பார்த்திடுவா. எனக்கும் கொஞ்சம் உதவியா இருந்துச்சு. இப்ப என்னடான்னா மசக்காரியாட்டும் ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடக்குறா. கேட்டா, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றா. ஒரு வேலை கூட பார்க்குறது இல்ல. சரியா சாப்பாடு கூட சாப்பிட மாட்டுறா. அது கூட பரவாயில்லை, மாமியார்னு மதிச்சு ஒரு வார்த்தைப் பேச மாட்றா. ஓயாம அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வராளே, அவுக அம்மா ஏதும் ஓதுதோ?” என அங்கலயாத்தார் அவர்.

அதில் கடுப்பானவன், “ஏம்மா... அவளை நான் கல்யாணம் பண்ணித்தான் கூட்டிட்டு வந்திருக்கேன். உனக்கு வேலை செய்ய இல்லை. நான்தான் வீட்டு வேலையெதுவும் செய்ய வேணாம்னு சொன்னேன். ஆபிஸ்ல வேலை பார்த்துட்டு இங்கேயும் அவளால ஹெல்ப் பண்ண முடியலை. டையர்டாகுறாம்மா... இன்னும் ஒரு மாசத்துல லண்டன் கிளம்பி போய்டுவா. எதுக்கு அவ கஷ்டப்பட்டுட்டுன்னு நான்தான் சொன்னேன்!” என்றான் அவளுக்கு ஆதரவாக பேசும் பாணியில்.

“ஏன்டா டேய்! வருஷம் முழுசும் வேலை பார்க்குறேனே. அம்மா மேல என்னைக்காவது இப்படி அக்கறைப்பட்டிருக்கியா? அதெப்படிடா உங்களுக்கெல்லாம் நேத்து வந்த பொண்டாட்டி தங்கம், பெத்து இத்தனை வருஷம் வளர்த்த ஆத்தா தகரமா போய்டுறோமா?” மகனை முறைத்தார் பெண்மணி.

“ம்மா... ஏற்கனவே வொர்க் டென்ஷன். இதுல நீயும் உன் பங்குக்கு ஏதாவது பேசி என்னைக் கோபப்படுத்தாத. நான் கடைக்குப் போறேன்!” என்றவன், மேலும் சிந்தாமணி ஏதும் பேசும் முன்னே விறுவிறுவென வெளியேற, சரியாய் அந்நேரம் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினாள் இசைவாணி. இவனிருந்த பக்கம் அவள் விழிகள் அரை மீட்டர் கூட நகரவில்லை. யாரோ எவரோ என்பது போல உள்ளே சென்றாள்.

தன்னைக் கடந்து செல்பவளை ஊன்றிப் பார்த்துவிட்டு நடந்தான் பரிதி. அவள் முகத்திலிருந்து இவனால் எதையும் கண்டறிய முடியவில்லை. அவனிடம் மட்டும்தான் அவள் தள்ளி நின்றாள். ஆனால் மற்றவர்களிடம் முயன்று இயல்பாக இருப்பது போலொரு தோற்றத்தை தருவித்தாள். அப்படியிருந்தும் சிந்தாமணிக்கு எப்படி தங்களுக்கிடையே உள்ள பிணக்கு தெரிய வந்திருக்கும் என்ற யோசனையுடன் நடந்தான்.

உபரியாக இசைவாணியின் வற்றிப் போயிருந்த கன்னம், பொலிவிழந்த முகம் என மனம் எடுத்துக் கொடுத்தது. உடல் இளைத்திருந்ததோ? தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன், அது உனக்குத் தேவையில்லாதது. அவ எப்படி போனா உனக்கென்ன? உனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, என மனத்திற்கு கடிவாளமிட்டான். பின்னர் மார்த்தாண்டத்திற்கு உதவியாக கடையில் அமர்ந்துவிட்டான். நான்கைந்து பேர் பொருட்கள் வாங்க நிற்க, தந்தை கேட்க கேட்க அனைத்தையும் எடுத்துக் கொடுத்தான். அன்றைக்கு என்னவோ அடுத்தடுத்து ஆட்கள் வந்து கொண்டேயிருக்க, இவனுக்கு அவளைப் பற்றி யோசிக்க நேரம் வாய்க்கவில்லை.

நேரம் இரவு எட்டு மணியைத் தொடவும், “வா மார்த்தாண்டம், போய் மகாராஜனைப் பார்த்துட்டு வருவோம்!” என்று மார்த்தாண்டத்தின் வயதையொத்த நபர் ஒருவர் வந்து நின்றார்.

“பரிதி, கடையைப் பார்த்துக்கோ. நான் கவர்மெண்ட் ஆஸ்பத்திரி வரைப் போய்ட்டு வரேன். நான் வர நேரமாச்சுன்னா கடையடைச்சிட்டு வீட்டுக்குப் போ. சீக்கிரமா வரப் பார்க்குறேன்!” மார்த்தாண்டம், தனது நீண்ட கால நண்பர் ஒருவர் உடல்நிலை முடியாது மருத்துவமனையில் சேர்ந்திருக்க, அவரைப் பார்க்க கிளம்பினார். இவர் தனது இருசக்கர வாகனத்தை உயிர்ப்பிக்கவும், புதியவர் பின்னே ஏறியமர, இருவரும் அகன்றனர்.

பரிதி ஓரமாய் இருந்த முந்திரியை எடுத்து வாயில் போட்டு மென்றான். நேரம் செல்ல செல்ல, கடையில் கூட்டமில்லாது வெறிச்சோடி போனது. எதிர் வீட்டிலிருந்து கமலா இவனை நோக்கி வந்தார். இவன் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

“தம்பி... மிளகு பொடி இருந்தா கொடுங்க!” என்றவர், பணத்தைக் கொடுக்க, இவன் வாங்கினான்.‌ முதலில் பரிதியும் மார்த்தாண்டமும் கமலாவிடம் பணம் வாங்க மறுத்தனர். ஆனால் அவர் விடவில்லை. தொழில் வேறு, உறவு வேறு என ஒவ்வொரு முறையும் காசைக் கட்டாயப்படுத்திக் கொடுக்க, பின்னர் இவர்களும் அவர் வழிக்கே செல்ல வேண்டியதாயிற்று.

சில நொடிகள் நகராமல் தேங்கி நின்ற பெண்மணியைப் பார்த்த பரிதி, “என்ன கமலாக்கா... வேற எதுவும் வேணுமா?” எனக் கேட்டான்.

“தம்பி... நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசணும். உங்க சொந்த விஷயத்துல தலையிட்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்கப்பா!” எனத் தயங்கியவர்,

“ஒரு வாரமா வாணி முகமே சரியில்லை. புள்ளை இங்க வந்தாலும் பத்து நிமிஷத்துல கிளம்பி போய்டுறா. உங்களுக்குள்ள எதுவும் சண்டையா? அம்மா பாப்பாவை நினைச்சு வருத்தப்படுறாங்க. எங்களுக்காக அவ நல்லாருக்க மாதிரி காட்டிக்கிறா. ஆனால் பெத்தவங்களுக்குத் தெரியாதா? புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ளே மூனாவது மனுஷங்க வர்றது நாகரீகம் கிடையாதுன்னு அம்மா அவகிட்டே எதுவும் கேட்டுக்கலைப்பா!” எங்கே அவன் கோவித்துக் கொள்வானோ என யோசித்து யோசித்துப் பேசினார். அவனுக்குத்தான் சங்கடமாகப் போயிற்று.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லக்கா!” என்றான் சின்ன குரலில்.

“இல்லைன்னா ரொம்ப சந்தோஷம் தம்பி. வாணி நான் பார்க்க வளர்ந்த புள்ளை. பதினைஞ்சு வருஷத்துக்கும் மேல இங்க வேலை பார்க்குறேன். ஒருநாள் கூட என்னை வேலைக்காரியா அவங்க நினைச்சது இல்ல. வீட்டுல ஒரு மனுஷியாத்தான் பார்க்குறாங்க. சுந்தரி அம்மா கூட எப்போவாது ஏதாவது ரெண்டு வார்த்தை கூடப் பேசிடுவாங்க. ஆனால் வாணி ஒருநாள் கூட என் மனசு நோக பேச மாட்டா. தங்கமான புள்ளைப்பா அது. எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கும். ஒருவேளை அவ மேல தப்பேதும் இருந்தா பெருசு பண்ணாம அனுசரிச்சு வாழுங்கப்பா. நீங்க சந்தோஷமா வாழ்ந்தாதான் பெத்தவங்க நிம்மதியா இருப்பாங்க!” என்றவரிடம் வெறுமனே தலையை அசைத்தவனுக்கு, இசைவாணியின் மீது மெல்லிய சினம் உண்டாகிற்று.

‘என்னமோ நமக்குள்ள பிரச்சனை வந்தா வெளியே தெரியக் கூடாது. நார்மலா ஆக்ட் பண்ணணும்னு எனக்கு க்ளாஸ் எடுத்தா. ஆனால் இப்போ அவதான் ரூல்ஸை மீறுறா. அவ பண்ணது தப்பு, அதைக் கேட்டு ரெண்டு வார்த்தை நான் பேசுனதும் ரொம்ப பண்றா!’ என மனதிற்குள் சலித்தான் இவன்.

அவர்களுடையேயான பேச்சு வார்த்தை ஒரு வார்த்திற்கு முன்பே முறிந்து போனது. அன்றைக்குப் பின்னே இவன் முகத்தைத் கூட அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. காலையிலே இவன் எழுவதற்கு முன்பே குளித்து முடித்து தயராகி விடுகிறாள்.

வேலையிருக்கிறதென காலை உணவைத் தவிர்த்துவிட்டுக் கிளம்பினாள். மாலையில் இவன் கடைக்கு வந்துவிடுவதால் இருவரும் இணைந்திருக்கும் நேரம் வெகுசொற்பமாய் அருகிப் போய்விட்டது. பரிதி கூட உறங்க மட்டும்தான் அந்த அறையைப் பயன்படுத்தினான். அவள் விலகள் அவனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஆனால் இரு குடும்பத்தாரையும் பாதித்திருக்கிறது என நெற்றியைச் சுருக்கி யோசித்தான்.

அன்றைக்கு அலுவலக வேலையெதுவும் பெரிதாக இல்லை என்பதால் சிந்தாமணிக்கு சமைக்க உதவலாம் என சமையலறைக்குச் சென்றாள் இசைவாணி.

“அத்தை... என்ன குக் பண்றீங்க? நான் ஹெல்ப் பண்ணவா?” என சின்ன குரலில் கேட்டாள்.

“வேணாம்டியம்மா... நானே பார்த்துக்கிறேன். இங்க வந்து எனக்கு உதவி செய்ற மாதிரி செஞ்சுட்டு உன் புருஷன்கிட்டே போய் நான் வேலை வாங்குறேன்னு குறை சொல்றதுக்கா?” என அவர் நொடிக்க, இவளிடம் மெல்லிய அதிர்ச்சி.

“ஐயோ அத்தை... அப்படியெல்லாம் நான் எதுவும் சொல்லலை. இந்த ஒரு வாரமா ஆஃபிஸ் வொர்க் அதிகம். அதான் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலை!” என்றாள் சங்கடத்துடன்.

“என்னமோ ஒன்னு... நீ பெரிய இடத்துல நிறைய சம்பளத்துல வேலை பார்க்குற. உனக்கெதுக்கும்மா இந்த சிரமமெல்லாம். உங்க வீட்லயே அந்தக் கமலாவை வீட்டு வேலை செய்யத் தானே வச்சிருக்கீங்க? அப்படி இருக்கப்போ நீ கஷ்டப்படாத. உன் ஒராளுக்கு நான் சேர்த்து சமைக்கப் போறேன். அதொன்னும் எனக்குப் பெரிய கஷ்டமெல்லாம் இல்ல!” சிந்தாமணி பட்டும்
படாமலும் அவளைப் பேச்சிலே எட்ட நிறுத்த, இவளது முகம் வாடியது. எதுவும் பேசாமல் அறைக்கு வந்துவிட்டாள்.

எப்படியும் ஒரு மாதம்தான் இந்த வீட்டில் இருக்கப் போகிறாள். எப்படியும் லண்டனில் இரண்டு வருடமாவது அவளது இருப்பு அவசியப்படும். அதன்பின்னே அவளுக்கும் பரிதிக்குமான ஒப்பந்தமும் முடிந்துவிடும் என்பதால் இங்கிருக்கும் காலம் வெகுகுறைவே. இருக்கும்வரை அனைவருடனும் சுமூகமாக இருக்கலாம் என அவள் எண்ண, பரிதி தன்னைப் பற்றி ஏதோ தவறாக அவரிடம் கூறி அதற்கு வழியில்லாமல் செய்துவிட்டான் என அவன் மீது கோபம் வந்தது. இதைப் பற்றிக் கேட்பதற்காக கூட அவனிடம் பேச விரும்பவில்லை இவள். உண்மையில் அவன் மீதிருந்த கோபமெல்லம் இப்போது தன் மீது திருப்பியிருந்தாள்.

வெறும் ஓரிரு மாத பழக்கத்திலே எப்படி ஒருவனை நல்லவன் என நம்பி வாழ்க்கையில் இத்தனைப் பெரிய முடிவெடுக்கத் துணிந்தேன் நான்? அவன் எப்போதும்போல தான் இருக்கிறான்.

இவள்தான் ஒவ்வொரு முறையும் மாறும் அவனது குணத்தில் வெகுவாக காயம்படுகிறாள். தவறு முழுக்க அவள் மீது‌ மட்டும்தான். அவனது சூழ்நிலையைக் கைக்காண்பித்து இவளேதான் ஒப்பந்த திருமணத்திற்கு அடித்தளமிட்டாள். இல்லையெனில் அவனுக்கும் அவளுக்கும் இடையில் என்ன இருக்கிறது? அவன் தன்னைப் பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது முட்டாள்தனத்தின் உச்சம். தன்னுடைய செயலின் விளைவை தான்தான் ஏற்க வேண்டுமென ஒருவாரமாக சரியாக உண்ணாமல், உறங்காமல் தன்னையே வருத்திக் கொண்டாள். அப்போதாவது இந்தப் புத்திக்கு உறைக்கட்டும்.

எல்லா ஆண்களும் ஒரே போலத்தான். சுயநலவாதிக் கூட்டம். பெற்ற மகள், கட்டிய மனைவியை கடனில் தள்ளிவிட்டு தங்களை இந்நிலையில் தவிக்கச் செய்த தந்தை ஒரு சுயநலவாதி. இதோ இப்போது நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பரிதி பெரிய சுயநலவாதி. இவனை நேர்மையானவன் என்றெண்ணி தாயைப் பற்றி யோசிக்காமல் முடிவெடுத்த தானும் ஒரு சுயநலவாதி என நினைத்து கசப்பாய் சிரித்தாள்.

“அண்ணி... சாப்பிட வருவீங்களாம். அம்மா கூப்பிட்டாங்க!” அறை வாயிலில் நின்ற கீர்த்தனா அழைக்க,

“எனக்கு பசிக்கலைம்மா. நான் அப்புறம் சாப்பிட்றேன்னு சொல்லு!” சிந்தாமணி பேச்சிலிருந்த குத்தலில் அவளுக்குப் பசி மரத்துப் போனது.

“ஏன் வாணி... குடும்பம்னா ஆயிரம் இருக்கும். உங்கம்மா உன்னை ஒரு வார்த்தை சொல்ல மாட்டங்களா என்ன. கூட குறையா ஒரு சொல்லு சொன்னா சாப்பிட மாட்டேன்னு ரூம்க்குள்ள அடைஞ்சு கிடப்பியா? எனக்கு இதெல்லாம் பிடிக்காது. ஒழுங்கா வந்து சாப்பிடு!” சிந்தாமணி மருமகளை அதட்டினார்.

என்னதான் அவள் மீது மனத்தாங்கல் இருந்தப் போதும் தங்கள் வீட்டிற்கு வந்தப் பெண்ணிற்கு தான்தானே பொறுப்பு என்ற எண்ணம். அதையும் தாண்டி தன் வீட்டு மூத்த மருமகள் அவள்‌. ஓரிரு நாட்களில் முறிந்து போகும் உறவா இது? தங்களது கடைசி காலம் வரை இவளோடுதானே வாழ வேண்டும் என்றெண்ணி தானே இறங்கி வந்தார் பெரியவர்.

அவரது அதட்டிலின் பின்னிருந்த அன்பைக் கண்டு புன்னகைத்தவள், எழுந்து சென்று மாமியாரின் கைகளைப் பிடித்தாள். “உங்க மகன் உங்ககிட்டே என்ன சொன்னாருன்னு எனக்குத் தெரியாது அத்தை. ஆனால் உங்களைப் பத்தி தப்பா ஒரு வார்த்தை கூட நான் சொல்லலை. எனக்கு வேலை டென்ஷன். அதான் ஒரு வாரமா உங்க முகத்தைக் கூடப் பார்க்க முடியலை. சாரி அத்தை!” என்றாள் முறுவலித்து. அவள் இறங்கிய குரலில் மன்னிப்பு கேட்கவும், சிந்தாமணிக்குத் தன் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

“சரி... சரி. எம்மவன்தான் ஏதோ இடையில விளையாட்றான் போல. நீ வா... வெண்பொங்கல் சூடா இருக்கு. சாப்பிடு!” என அழைத்துச்‌ சென்றார். கீர்த்தனா சாப்பிட, அவளருகே அமர்ந்து இவளும் உண்டாள்.

“நல்லா சட்னில தொட்டு சாப்பிடு வாணி. கல்யாணமானதும் எல்லாரும் குண்டாவாங்க. நீ ஏன் மெலிஞ்சிட்ட?” எனக் கேட்டு அவள் தட்டில் கொஞ்சம் சட்னியும், சாம்பாரையும் ஊற்றினார் சிந்தாமணி.

அவர் குரலைக் கேட்டுக் கொண்டே வந்த பரிதி, ‘போகும்போது அவளை விரோதி மாதிரி என்கிட்ட போட்ரெய்ட் பண்ணுச்சு இந்தம்மா. இப்போ என்னடான்னா அவளைக் கொஞ்சிட்டு கிடக்கு. இரண்டு மணிநேரம்தான் நான் வீட்ல இல்ல. அதுக்குள்ளேயும் என்ன சொல்லி எங்கம்மாவை மயக்குனாளோ? எமகாதகி!’ என மனதில் கறுவிக் கொண்டே அவனும் சாப்பிட்டான்.

உண்டு முடித்ததும் இவள் மெத்தையை விரித்துப் படுக்கச் செல்ல, உள்ளே கோபத்தோடு நுழைந்தவன், “இசைவாணி!” என்றான் அழுத்தமானக் குரலில். அவள் கண்டு கொள்ளவில்லை.

படக்கென அவள் கையிலிருந்த மெத்தையை உருவியவன், “உன்னைத்தான் நான் கூப்பிட்டேன்!” குரலை லேசாக உயர்த்தினான். அவள் எரிச்சலோடு அவனைப் பார்த்தாள்‌.

“இப்போ எதுக்கு சாப்பிடாம, சோகமா இருக்க மாதிரி சீன் போட்டுட்டு இருக்க? பார்க்குற எல்லாரும் நான் என்னமோ உன்னைக் கொடுமைப்படுத்துற மாதிரி கேள்வி கேட்குறாங்க. நீ தப்பு செஞ்ச. நான் கேள்வி கேட்டேன். எல்லாமே நமக்குள்ளதானே? அப்புறம் ஏன் உன் மொத்த சொத்தையும் எழுதி வாங்குன மாதிரி முகத்தை வச்சிருக்க?” என சுள்ளென கேட்டான்.

இப்போது அவனை நிமிர்ந்து பார்த்து நெற்றியைச் சுருக்கியவள், “யார் உன்னை என்ன சொன்னா?” எனக் கேட்டாள்.

“வந்ததும் வராததுமா எங்கம்மா உங்களுக்குள்ள என்ன சண்டைன்னு கேட்குறாங்க. அவங்ககிட்டே பதில் சொல்ல முடியாம கடைக்குப் போனா கமலாக்கா வந்து கேட்குறாங்க. வாணி ரொம்ப நல்ல புள்ளை. அவளை செல்லமா வளர்த்தோம். அது இதுன்னு சினிமா டையலாக் எல்லாம் சொல்றாங்க!” அவன் மேலும் பேசும் முன்னே கையைக் காண்பித்து இடைமறித்தவள்,

“இனிமே யாரும் எதுவும் உன்னைக் கேட்க மாட்டாங்க!” என்றாள் ஒரே வார்த்தையில். போதும் இதற்கு மேலே பேசாத என்பது போலிருந்தது அவளது பாவனை. அவளை முறைத்துப் பார்த்து, மெத்தையை கீழே போட்டவன், கட்டிலில் பொத்தென விழுந்தான்.

இசைவாணியும் கீழே படுத்தாள். அவன் படுத்ததும் உறங்கிவிட, இவளுக்கு கமலாவும் சுந்தரியும் நினைவை நிறைக்க, தூக்கம் எளிதில் வரவில்லை. பதினோரு மணிக்கு அலைபேசி இசைக்க, படக்கென எடுத்துப் பார்த்தாள். வினோத் அழைத்திருந்தான்.

“என்ன வினோத்... இந்த டைம்ல கால் பண்ணிருக்க? ஏதாவது எமர்ஜென்சியா?” இவள் கேட்டதும், அவனிடமிருந்து என்னவோ பதில் வந்தது போல.

“ஐயோ... அப்படியா. என் அக்கவுண்ட்ல சேலரி அப்படியேதான் இருக்கு. நான் உனக்கு அனுப்புறேன். நீ அப்பாவை பார்த்துக்கோ. மத்ததை அப்புறம் யோசிக்கலாம்!” என இவள் கூற, அவன் சங்கடத்துடன் மறுத்தான்.

“ப்ம்ச்... என்கிட்டே என்ன சங்கடம் வினோத்? நான் அமௌண்ட் அனுப்பிட்டேன்‌‌. நீ தைரியமா இரு. இன்னும் மணி வேணும்னா சொல்லு. அம்மா ஆப்ரேஷனுக்குப் போக எக்ஸ்ட்ரா காசை அப்படியேதான் வச்சிருக்கேன். அதையும் தரேன்!” இவள் சின்ன குரலில் பேசினாலும் பரிதியை அது தொந்தரவு செய்தது போல.

“ப்ம்ச்...” உச்சுக் கொட்டியபடி அவன் திரும்ப, இவள் பேச்சை முடித்துக் கொண்டாள். எப்போதாடா இவனைவிட்டுத் தூரம் செல்வோமென மனம் ஏங்க ஆரம்பித்தது.

***

மறுநாள் வேலை முடிந்ததும் தெளிந்த முகத்தோடு தாய் வீடு சென்றாள் இசைவாணி. தன் முகச்சுணக்கம் அவர்களை வெகுவாய் பாதிக்கும் என யோசித்து, பரிதியின் வார்த்தைகளிலிருந்து வெளி வந்திருந்தாள். அவன் என்னைப் பாதிக்குமளவு அவனுக்கு நான் முக்கியத்துவம் தரவில்லை என தன்னையே தேற்றிக் கொண்டாள்.

அவள் உள்ளே நுழைய, கமலா சுடசுட வாழைக்காய் பஜ்ஜியை எடுத்து வந்து சுந்தரியிடம் கொடுத்தார். இவள் வீட்டு வாயிலில் நின்று இருவரையும் உக்கிரமாய் பார்க்க, இருவரும் அகப்பட்டுக் கொண்ட திருடனைப் போல விழித்தனர்.

“ஒரு வாரம் நான் ஆஃபிஸ் வொர்க்ல பிசியாகி இந்தப் பக்கம் வரலைன்னதும் ரெண்டு பேரும் சேர்ந்து ஆயில் ஃபுட்டை சாப்பிடுறீங்களா?” எனக் கண்டிப்புடன் கேட்டாள். அவள் முகத்தில் பழைய கண்டிப்பும் அன்பும் திரும்பியிருந்ததில் பெரியவர்களுக்கு நிம்மதி பிறந்தது.

“நான் வேணாம்னு சொன்னேன் வாணி. இதோ... கமலாதான் ரெண்டு பஜ்ஜி மட்டும் சாப்பிட்டா எதுவும் ஆகாதுன்னு சொன்னா!” சுந்தரி கமலாவை மாட்டிவிட்டார்.

“ஐயயே... நான் இல்ல வாணிம்மா. அம்மாதான் பஜ்ஜி கேட்டாங்க!” அவர் பதறி மறுத்தார்.

“சின்ன புள்ளைங்க மாதிரி ஒருத்தரையொருத்தர் கம்ப்ளைண்ட் பண்ணீட்டிருக்கீங்க ஆன்ட்டி!” பரிதியின் குரல் தூரத்திலிருந்து மெதுவாய் செவிக்கருகே நகர்ந்ததும், இசைவாணி உள்ளே நுழைந்து வழியைவிட்டாள். அவன் வருகையை அவள் எதிர்பார்த்திருந்தாள். இவள் இங்கே வந்ததைப் பார்த்துவிட்டு பரிதி பின்னோடே வந்துவிட்டான். மருமகன் முன்னே இப்படியா நிற்பது என சுந்தரி சங்கடப்பட்டுப் போனார்.

“என்ன கமலாக்கா... உங்களை நம்பி ஆன்ட்டியை இரண்டு வருஷம் விட்டுட்டுப் போகலாம்னு என் பொண்டாட்டி முடிவுல இருக்கா. ஆனால் நீங்க என்னடான்னா அவங்க உடம்பை பத்திக் கவலைப்படாம பஜ்ஜியெல்லாம் சுட்டுக் கொடுக்குறீங்க. பேசாம அவங்களையும் எங்களோடவே பேக் பண்ணிட்டு போய்டவா?” எனக் கேலி பேசியபடியே சுந்தரி கையிலிருந்த பஜ்ஜியை எடுத்து சுவைத்தான்‌.

“ஐயோ... தம்பி வெளிநாடு எல்லாம் நமக்கு ஒத்து வராது. நம்ம ஊர் ஆளுங்க சுத்தி இருந்தாதான் எனக்கு நேரமே ஓடும். அங்க நீங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போய்டுவீங்க. நான் வீட்டுக்குள்ள சுவத்தை வெறிச்சுட்டு உக்கார முடியாதுப்பா!” சுந்தரி உடனே பதறி மறுத்தார். இவனுக்கு சிரிப்பு வரப் பார்த்தது.

“நாட் பேட் கமலாக்கா!” என பஜ்ஜியைக் கடித்து புன்னகையை அடக்கியவன், “அப்போ இனிமேல் எண்ணெய்ல பொரிச்சதை சாப்பிடாதீங்க‌ ஆன்ட்டி. இப்போ ஆசைக்கு ஒன்னு சாப்பிட்டுக்கோங்க!” என அவரருகில் இயல்பாய் அமர்ந்தான் பரிதி. அவர் கூச்சத்துடன் வேண்டாமென மறுக்க, இசைவாணி அவர்களைத்தான் பார்த்தாள். அவனது பொண்டாட்டி என்ற விளிப்பு இவளுக்கு வேப்பங்காயாய் கசந்து வழிந்தது.

“ஆன்ட்டி!” என்றவன் அவரிடம் ஒரு பஜ்ஜியைக் கொடுத்துவிட்டு, “நாங்க எல்லாரும் உங்க ஹெல்த் நல்லா இருக்கணும்னு நினைக்கிறோம். அதனாலதான் ஆயில் ஃபுட் சாப்பிட வேணாம்னு சொல்றோம். உங்க பொண்ணைப் பாருங்க. உங்களுக்கு ஏதாவதுன்னா கண்ணுல டேங்கைத் தொறந்து விட்ருவா. அவளுக்காகவாது உங்களை நீங்கப் பார்த்துக்க வேணாமா?” என பரிவாய் கேட்டான்.

“இல்ல தம்பி... டீ குடிச்சிட்டே பஜ்ஜி சாப்பிட்டா நல்லா இருக்கும்னு சும்மா ஒரு வார்த்தை சொன்னேன். உடனே கமலா அதைப் பிடிச்சுக்கிட்டா. அடிக்கடி சாப்பிட மாட்டேன்பா. எனக்கும் பேரக் குழந்தைகளைப் பார்க்க ஆசை இருக்குப்பா!” என்றார் புன்னகையுடன். அவர் பேச்சின் சாராம்சத்தில் இவன் முயன்று சிரித்து வைத்தவன், அப்படியே பேச்சை மாற்றிவிட்டான். சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு இவர்கள் விடைபெற, பெரியவர்களின் மனத்திலிருந்த சங்கடம் முழுவதும் அகன்றது.

இசைவாணி சிந்தாமணியிடம் கொஞ்சம் இணக்கமாக நடந்தாலும், முன்பு போல முழு மனதாக அவருடன் ஒன்ற முடியவில்லை. தனக்கென ஒரு எல்லையை வகுத்துக் கொண்டாள். ஆனால் அது மற்றவர்கள் கண்ணுத் தெரியாதவாறு பார்த்துக் கொண்டாள். மற்றபடி பரிதி என்ற மனிதனை அவள் மருந்துக்கும் மதிக்கவில்லை. அவனொருவன் இருக்கிறான் என்பதாகவே நினைவில் இல்லாதது போல நடந்து கொண்டாள்.

நாட்களும் நகர, சரியாய் ஆறாவது வாரத்தில் அவளுக்கு நுழைவு இசைவு கிடைத்துவிட்டது. அடுத்த வாரத்திலே லண்டனில் அவள் தங்குவதற்கான இடமும் கிடைத்துவிட, அப்போதே அவளது அலுவலகத்திலிருந்து விமான பயணச்சீட்டைப் பதிந்து கொடுத்துவிட்டனர். இசைவாணி இதை முன்பே எதிர்பார்த்திருந்ததால், என்னென்ன வேண்டுமென யோசித்துக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி பையில் அடுக்கி முடித்துவிட்டாள்.

சிந்தாமணி வேறு அவர் பங்கிற்கு அதிரசம், முறுக்கு, ஊறுகாய் என செய்து கொடுத்தார். “அத்தை... எல்லாத்தையும் எடுத்துட்டுப் போக முடியாது. ஒரு கிலோ எக்ஸ்ட்ரா எடுத்துட்டுப் போனா கூட ரெண்டாயிரம் ரூபா கேட்பாங்க!” என்றாள்.

“ஆத்தி... முறுக்கு சீடைக்குப் போய் ரெண்டாயிரம் கேட்பாங்களா?” என அவர் அதிர்ச்சியடைய, இவள் சிரித்து விட்டாள். அனைத்திலும் கொஞ்சமாய் எடுத்துக் கொண்டாள். கமலாவும் சுந்தரியும் கூட இவளுக்காவென எளிதில் கெட்டுப் போகாத உணவுகளை சமைத்துக் கொடுத்தனர். பரிதி இதையெல்லாம் பார்த்தாலும் கண்டு கொள்ளவில்லை. வெறும் பார்வையாளராக இருந்து கொண்டான். அவள் கிளம்புவதில் இவனுக்கும் மகிழ்ச்சியே. இன்னும் சில மாதங்களில் இவனுக்கும் நுழைவு இசைவு கிடைத்துவிடும் என்ற ஆசுவாசம் பிறந்தது.

“அண்ணி.‌. நீங்க வரும்போது எனக்கு ஸ்மார்ட் வாட்ச் வாங்கித் தரீங்களா?” என கீர்த்தனா இவளிடம் ரகசியமாகக் கேட்க, “கண்டிப்பா வாங்கிட்டு வரேன் கீர்த்தனா. வேற என்ன வேணும்?” என அவளிடம் கேட்டுக் கொண்டாள். கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தாய் வீட்டில்தான் தங்கினாள். பரிதியும் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாதென அவளுடன் சென்றான்.

ஆயிரம் பத்திரங்களைத் தாயிடமும் கமலாவிடமும் கூறினாள். இனிப்பு உண்ண கூடாது. எண்ணெய் பொருட்களை உணவில் சேர்க்க கூடாது என ஒன்றுக்கு பத்து முறை வலியுறுத்திவிட்டாள்.

“வாணிம்மா... நீ கிளம்பு. அம்மாவை எப்படி பார்த்துக்கணும்னு உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும்!” என கமலா அலறியதும்தான் இவள் பிரசங்கத்தை நிறுத்தினாள். காமராஜ் குடும்பமும் முதல் நாளே வந்து இவளை வழியனுப்பினர்.

கிளம்பும்போது சுந்தரியை அணைத்துக் கொண்டவளின் கண்களில் சரசரவென கண்ணீர் இறங்கிற்று. பிறந்ததிலிருந்து இப்போதுதான் தாயைப் பிரிந்திருக்கப் போகிறாள். அவரது உடல்நிலை இப்படியிருக்கும் பட்சத்தில் அவரை விட்டுப் போக மனதே இல்லை. ஆனால் சூழ்நிலை அவளை உந்தி தள்ள, அரைமனதாக கிளம்பினாள்.

“என்ன வாணி நீ... கமலா இருக்கா. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர மாப்பிள்ளை இருக்காரு. அப்புறம் ஏன் அழுகை?” எனக் கேட்டவருக்கும் மகள் அங்கு சென்று எப்படி தனியாக சமாளிப்பாள் என்ற பயமில்லாமல் இல்லை. இருந்தும் இன்னும் சில மாதங்களில் பரிதியும் அங்கு சென்றுவிடுவான் என்பதால், மனத்தை தேற்றிக் கொண்டார்.

“அத்தை உங்கப் பொண்ணு உன்னைப் பிரியுறதுக்காக அழலை. அவ ஆளைவிட்டுப் போறோம்னு அழறா!” என சரவணன் கூற, இவள் கண்ணீரோடு அவனை முறைத்து மாமியார், மாமனாரிடமும் விடை பெற்றாள்.
சென்னையில்தான் அவளுக்கான விமானம் என்பதால், பரிதியும் உடன் வந்தான். இருவருக்குமே விருப்பம் இல்லையெனினும் வீட்டு ஆட்களின் கட்டாயத்தின் பேரில் சேர்ந்து பயணித்தனர்.

இவர்கள் சரியான நேரத்திற்கு விமான நிலையம் செல்ல, இசைவாணி அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காது உள்ளே சென்றுவிட, “சீ... இவளுக்காக இவ்வளோ தூரம் வந்தேன்ல. என்னை சொல்லணும்... போடீ கருவாச்சி!” என முணுமுணுத்து இவன் பொள்ளாச்சிப் பேருந்தை பிடித்தான்.

இருவரும் இருவேறு பாதையில் செல்ல, விதி இவர்களை ஒன்றிணைக்க முடிச்சுப் போட்டுவிட்டது. உலகின் கடைசி ஆணாக இருந்தாலும் நீ எனக்கு வேண்டாமென வார்த்தைக்கு வார்த்தை கூறிய இசைவாணிக்கு அவனைப் பிடித்துப் போகு
ம் அதிசயமும், வேண்டாமென உதறிச் சென்ற அவன் இவள்தான் வேண்டுமென ஒற்றைக் காலில் தவமிருக்கும் காலமும் வெகு அருகிலேயே காத்திருந்தது.

தொடரும்...




 
Well-known member
Messages
525
Reaction score
380
Points
63
Vani kum parithi mudichi ellam.podurathu irukattum first indha parithi vai ku oru periya zip ah podanum.over ah pesuran ya athuvum karuvachi ah lam.la sir periya aanazhagan poda thagara dappa thalaiya ah
 
Top