• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,285
Reaction score
3,781
Points
113
நேரம் – 10 💜

இரண்டு நாட்களாக பரிதி கடைக்குச் செல்லவில்லை. அன்றைக்கு காலையிலே அவனுக்கு அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பு ஒன்றிருந்தது. அதை இவன்தான் பொறுப்பேற்று நடத்துகிறான்.

அதனாலே இரண்டு நாட்களாக கணினி முன்னே அமர்ந்து தேவையான தகவல்களைத் திரட்டி, பிரசன்டேஷன் தயாரித்தான். இரவு தாமதமாகத் தூங்கி காலையில் அரக்கப்பறக்க எழுந்து அலுவலகம் கிளம்பினான்.

அவசரமாய் காலணியை மாட்டியவன் தடுக்கி கீழே விழச் செல்ல, “ஏன்யா பரிதி... பார்த்துப் போக வேண்டியது தானே? போகும்போதே தடுக்குது. உள்ள வந்து ஒரு ஐஞ்சு நிமிஷம் உக்காந்துட்டு போ!” என்ற சிந்தாமணி அவனுக்குத் தண்ணீர் கொடுத்தார்.

அதை வாங்கி மடமடவெனக் குடித்தவன், “அதெல்லாம் வேணாம்மா. நான்தான் பார்க்காம கால் தடுக்கிட்டேன். டைமாச்சு!” எனப்‌ பறந்துவிட்டான்.

அலுவலகம் சென்றதும் காலையிலே சந்திப்பு தொடங்கியது. வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவருக்கு இணையதளக் காணொளி வாயிலாகத், தான் இரண்டு நாட்களாக செய்து வைத்திருந்த திட்டத்தை விளக்கிக் கூறினான் பரிதி. அவன் தமிழ் வழிக் கல்வியில் பயின்றதால் ஆங்கிலப் புலமை அவனிடம் அறவே இருக்காது. ஆனாலும் முயன்று பிழைகள் இல்லாமல் பேசி முடித்திருந்தான். வெளிநாடு சென்று முதுநிலை படித்துவிட்டு வந்தப் பிறகு இவனுடைய மொழிப் புலமை கொஞ்சமே கொஞ்சம் மேம்பட்டிருந்தது.

“குட் பிரசன்டேஷன் பரிதி. பட் அங்கங்க கிராமர் மிஸ்டேக் இருக்கு. லண்டன்ல போய் படிச்சா மட்டும் பத்தாதது. லேங்குவேஜ் ப்ளூயன்சி வேணும்!” அனைவரும் கலைந்து சொல்லும் முன்னே வேண்டுமென்ற அவனது மேலாளர் இவனைக் கேலி செய்தபடி அகல, அவன் மூக்கை உடைக்கும் ஆத்திரம் இவனுக்கு கிளம்பிற்று.

ஆனால், நினைத்ததை செய்ய முடியாத இடத்தில் இருக்கிறான். தற்போதைக்கு இந்த வேலை அவனுக்கு மிக மிக முக்கியம். நுழைவு இசைவு கிடைத்ததும் இவனைத் தனியே அழைத்துச் சென்று, மனம் ஆறும்வரை ஏதாவது செய்ய வேண்டும் என மனதில் வஞ்சம் வளர்த்தான்.

“மச்சான்... அவன் கிடக்குறான் சொட்டை. நீ ஏன் அப்செட்டாகுற. நீ நல்லா ப்ரசென்ட் பண்ணடா. வா... போய் ஏதாவது ஜூஸ் குடிச்சிட்டு வருவோம்!” என பரிதியின் தோழன் அவனை சிற்றுண்டி சாலைக்கு அழைத்துச் சென்றான்.

“இவனுக்கு என் மேல அப்படி என்னடா காண்டு. அப்பப்போ அசிங்கப்படுத்திட்டே இருக்கான்!” பரிதி பல்லைக் கடித்தான்.

“நீ ஃபாரின் போய் படிச்சுட்டு வந்திருக்க. எப்படியும் திரும்ப அங்கயே போய்டுவ. அதான் பொறாமைப்படுறான் அவன். அதெல்லாம் கண்டுக்காத. உன் விசா என்னாச்சு?” என அவன் கேட்டதும், இவனுக்கும் அப்போதுதான் நினைவு வந்தது. இரண்டு நாட்கள் முன்புதான் இவனும் அந்த தனியார் நிறுவனத்திற்கு அழைத்துப் பேசியிருந்தான்.

“பரிதி... மோஸ்ட் ப்ராபப்லி இந்த வீக்குள்ளே உங்களுக்கு விசா வந்துடும். சோ டோன்ட் வொர்ரீ!” அவர்கள் பதிலில் இவனும் ஒருவாரம் கழித்து கேட்கலாம் என்று விட்டான். அதை நண்பனிடமும் பகிர்ந்து கொண்டான்.

மாலை பெரிதாய் வேலை இல்லை. அவன் பணிபுரிவது ஒரு மத்திய தர நிறுவனம்‌. பரிதி இளங்கலை முடித்துவிட்டு இங்குதான் முதன்முதலில் பணியில் சேர்ந்தான். முதுகலை முடித்துவிட்டு வந்தும் இங்கு அவனது இடம் இன்னும் நிரப்பப்படாமல் இருந்ததை அறிந்து, மீண்டும் சேர்ந்து கொண்டான்.

மாலை அலுவலகத்திலிருந்து அவன் கிளம்ப, அந்த தனியார் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. நுழைவு இசைவு கிடைத்துவிட்டது போல என்றெண்ணி உற்சாகத்துடன் அழைப்பை ஏற்றான்.

“சாரி பரிதி. வீ டிட் அவர் பெஸ்ட். பட் உங்க விசா ரிஜெக்டாகிடுச்சு!” அவர் ஒரு நாகரீகமான மன்னிப்பு படலத்துடன் அழைப்பைத் துண்டிக்க, இவன் அதே இடத்திலேயே நின்றுவிட்டான். இந்த முறை எந்த சொதப்பலும் இல்லாமல் கண்டிப்பாக நுழைவு இசைவு கிடைத்துவிடும் என உறுதியாக நம்பினான். ஆனால் கடைசி வழியும் அடைப்பட்டு போனதை எண்ணி மனம் கலங்கிற்று. வீட்டின் மேல் வாங்கிய கடன், தங்கை, தம்பியின் படிப்பு என அடுத்தடுத்த பொறுப்புகள் கண்முன்னே வர, தலைச் சுற்றியது அவனுக்கு.

‘என்ன செய்து கடனை அடைக்கப் போகிறோம்? அவன் வெளிநாடு சென்று படித்தான், இவன் சென்று படித்தான் என அடுத்தவர்களைக் காரணம் காண்பித்து தான் செய்தது மீப்பெரு முட்டாள்தனம் என்ற உண்மை இப்போதுதான் நெற்றியில் அறைந்தது போல. அதிவேகத்தில் துடிக்கும் இதயத்தை அனிச்சையாய் கைகள் தொட்டன. ஒருமாதிரி பித்துப் பிடித்தது போல வாகனத்தில் ஏறியமர்ந்தான். வாகனத்தை நேரே வீட்டிற்கு சென்று செலுத்தாமல், இலக்கில்லாது எங்கெங்கோ பயணித்தான்.

மூச்சு முட்டும் இந்த சூழ்நிலையிலிருந்து எப்படி தப்பிப்பது என அவனுக்குத் தெரியவில்லை. எதிலோ அடைபட்டுக் கொண்ட மனநிலை. எல்லா விஷயத்திலும் விளையாட்டுத் தனமாக இருந்ததால் இப்படியாகிவிட்டதோ என மூளை அவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கேள்வி கேட்க, இவனிடம் பதில் இல்லை. எதிர்கால வாழ்க்கைப் பற்றிய பயம் மட்டுமே அந்நொடி நெஞ்சைப் போட்டு அழுத்திற்று.

இன்னும் சில மாதங்களில் வங்கி கடனுக்கு வட்டி கட்டத் தொடங்க வேண்டும். சம்பளத்தில் பாதியை வட்டியாகக் கட்டினால் கூட, கடனை அடைக்கும் வழி கிட்டவில்லை. பைத்தியம் பிடித்தது போல சாலையில் சுற்றித் திரிந்தான். எப்போதும் வரும் நேரத்தையும் கடந்து மகன் இன்னும் வீடு வரவில்லை எனப்‌ பதறிய சிந்தாமணி அவனுக்கு அழைத்துவிட்டார்.

“பரிதி... என்னடா இன்னும் வேலை முடியலையா? வீட்டுக்கு வரக் காணோம்?” அவர் கேட்க,

“ப்ம்ச்... நான் என்ன சின்ன புள்ளையாம்மா. சும்மா கால் பண்ணி நொய்நொய்னுட்டு இருக்க. வேலையா இருக்கேன். வர நேரமாகும். நீ சாப்பிட்டு படு!” எனக் கடுப்போடு அழைப்பைத் துண்டித்தான்.

இரவு நன்றாய் கவிழ்ந்து சாலையில் ஆட்கள் நடமாட்டம் குறையத் தொடங்க, இவன் பெருமூச்சுடன் வீடு நுழைந்தான். கூடத்தில் தந்தை, தங்கை, தம்பி வரிசையாய் உறங்க, சிந்தாமணி மட்டும் இவனுக்காக விழித்திருந்தார்.

“ஏன்யா... என்னாச்சு? முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு. கண்ணு சிவந்திருக்கு?” அவர் பதறிப் போய் கேட்டு இவன் கன்னத்தைத் தொட வந்தார்‌. அவர் குரலில் அதிலிருந்த வாஞ்சையில் மகனுக்கு உள்ளம் கலங்கியது போல. அனிச்சை செயலாக இரண்டடி பின்னே நகர்ந்தான்.

“ஒன்னும் இல்லைமா. நீ போய் தூங்கு...” என்றான் சின்ன குரலில்.

“எப்பவும் நேரத்துக்கே வந்துடுவ. இன்னைக்கு வரக் காணோமேன்னு பயந்துட்டேன் டா!” அவன் சுள்ளென பேசியும் இந்தப் பெண்மணி தனக்காக விழித்திருந்ததில் குற்றவுணர்வு படர்ந்தது போல. அவர் முகம் பார்ப்பதை தவிர்த்தான் மகன்.

“சரி... மூஞ்சி கைகால் கழுவிட்டு, ட்ரெஸ் மாத்திட்டு வா‌. அம்மா சூடா தோசை ஊத்தி தரேன். சாப்பிட்டு படுப்ப!” அவர் கனிவாய் கூறவும், இவனுக்கு கண்கள் மேலும் கலங்கின.

“நான் சாப்பிட்டேன் மா. நீ போய் படு!” என்றவன் நடந்து சென்று வீட்டுக் கதவை சாற்றிவிட்டு வந்தான். சிந்தாமணி மகனின் முகத்தையே பார்த்தார்.

அவரருகே வந்து அணைத்துக் கொண்டவன், “நான் நிஜமா சாப்பிட்டேன். நீ தூங்கு!” என அவருக்குப் பாயை விரித்தான். சிந்தாமணி மகனைக் கவலையாகப் பார்த்தார். அவன் வேறெதுவும் சொல்லாமல் அறைக்குச் சென்று கதவை சாற்றினான். அப்படியே சென்று படுக்கையில் விழுந்தான்.

அடுத்து வந்த இரண்டு நாட்களுமே அவனுக்கு யோசனையுடன் கழிந்தது. என்ன செய்வதெனத் திக்கற்ற நிலையில்தான் இருந்தான். இசைவாணி கடைக்கு வரும்போது அவனைக் கண்டும் காணாமலும் கவனித்தாள். அவள் வந்ததும் அவனிடமிருக்கும் ஆராய்ச்சி பார்வை, இடக்கான பேச்சு, கேலிகள் என எதையும் காணவில்லை.

பரிதி முகத்திலிருந்த அமைதியில் இவளுக்கு யோசனையானது. ஆனால் வாய் திறந்து கேட்கவில்லை. அந்தளவுக்கு அவர்கள் நட்பு இன்னும் பலப்படவில்லையே. அவனுக்கும் தனக்கும் இடையில் என்ன இருக்கிறது என மனம் கேட்க, அதை விட்டுவிட்டாள். அடுத்து வந்த நாட்களும் அவன் இயல்புக்கு திரும்பவில்லை என்றுணர்ந்தவளுக்கு அவனுக்கு ஏதேனும் பிரச்சினையாக இருக்குமோ என சிந்தனை சென்றது.

அன்றைக்கு கடைக்குச் சென்றவள் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, எப்போதும் போல ஐநூறு ரூபாய் தாளைக் கொடுக்க, பரிதி ஏதோ யோசனையுடன் அதே தாளைத் திருப்பிக் கொடுத்தான். அவன் செய்கையில் இவளது நெற்றி சுருங்கியது.

இதற்கு மேலும் தள்ளி நிற்காமல் என்னவெனக் கேட்டறியும் உந்துதலில், “என்னாச்சு?” எனக் கேட்டாள்.

அவள் குரலில் சிந்தனைக் கலைந்தவன், “என்ன என்னாச்சு?” என்றான் புரியாமல்.

“உனக்கு என்னாச்சுன்னு கேட்டேன்!” இவள் அழுத்தமாக கேட்டாள்.

“எனக்கென்ன... நான் நல்லாதானே இருக்கேன்” அவன் சின்ன குரலில் கூறினான். இவள் தலையை இடம் வலமாக அசைத்தாள்.

“ஃபைவ் ஹண்ட்ரட் கொடுத்தேன் நான். வாங்குன திங்க்ஸ்க்கு காசு எடுக்காம அதையே திருப்பிக் கொடுத்திருக்க? அதான் என்ன ப்ராப்ளம்னு கேட்டேன்!” அவன் முகம் பார்த்தாள் இசைவாணி.

அவள் கேள்விக்குப் பதிலளிக்காதவன், தன் முன்னே நீண்ட கரத்திலிருந்த தாளை வாங்கிக்கொண்டு மீதச் சில்லறையைக் கொடுத்தான்.

“என்ன ப்ராப்ளம்னு கேட்டேன் பரிதி. ரொம்ப அப்செட்டா இருக்க மாதிரி தெரியுது!” இவள் அக்கறையாகக் கேட்டதும் அவனுக்கு எரிச்சலானது.

“ஏன்... என்ன பிரச்சனைன்னு சொன்னா வந்து தீர்த்து வைக்கப் போறீயா? உன் வேலை எதுவோ அதைப் பார்த்துட்டு போ!” என சினந்தான். இவள் பாவம் பார்த்து அவனிடம் கேட்பது போன்ற எண்ணம் சினத்தை ஏற்படுத்தியது. அவனது சுடுசொல்லில் இவளது முகம் மாறியது.

‘உன்னிடம் கேட்டது என் தவறு!’ எனக் கடுப்பானவள், இனிமேல் அவனிடம் பேச்சே வைத்துக்கொள்ள கூடாது என அகன்றாள். அதன்பின்னே அவனைப் பார்ப்பதை முடிந்தவரை தவிர்த்தாள். ஒருவாரம் கடந்து போயிருந்தது.

அன்றைக்கு அலுவலகம் முடிந்து அவள் வீட்டிற்கு வரும் வழியில் பரிதியைக் கண்டாள். இருசக்கர வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு சாலையோரம் அமர்ந்திருந்த முதியவர் அருகே உட்கார்ந்திருந்தான். அவரிடம் ஏதோ பேசினான்.

அவன்‌ முகத்தில் ஜீவனில்லை. தாடியை மழிக்காது விட்டிருந்தான். ஏதோ ஒரு நாடோடிக் கூட்டத்திலிருந்து வந்ததைப் போலிருந்தான்.
அவனை அப்படி பார்த்ததும் இவளுக்கு மனம் கேட்கவில்லை. சிரித்த முகமும் கேலியும் கிண்டலுமாய்ப் பார்த்தவனின் அதீத அமைதியில் இவளுக்குத் துணுக்குற்றது.

வீட்டிற்குள் நுழைந்ததும் முதல் வேலையாக அற்புதாவிற்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்து அவனிடம் அப்போதே பேச உந்தினாள்.

“சரி... நான் அவன்கிட்டே பேசிட்டு உனக்கு கூப்பிட்றேன் வாணி. நீ காலைக் கட் பண்ணு!” என்ற அற்புதா அவனுக்கு அழைத்து முதலில் நலம் விசாரித்தாள். பின்னர் மெதுவாக விஷயத்திற்கு வந்தாள்.

“என்ன உன் அத்தை மக அவ கேட்டு நான் சொல்லலைன்னதும் உன்னை தூது அனுப்பி விட்டாளா?” கேலியாக கேட்டவன், அந்த முதியவரிடம் தலையை அசைத்துவிட்டு, அலைபேசியை தோள்பட்டையில் வைத்துப் பிடித்தபடியே தன் வாகனத்தை இயக்கினான்.

“ப்ம்ச்... அதெல்லாம் இல்ல பரிதி. உன் குரலே சொல்லுதே. முதல்ல என்னென்னு சொல்லு. நீயா உனக்குள்ளே வச்சுட்டே இருந்தா ப்ராப்ளம் சால்வாகிடுமா. எங்ககிட்டே ஷேர் பண்ணா ஏதாவது சொல்யூஷன் கிடைக்கும் இல்ல?” இவள் உரிமையாகக் கேட்டதும், அவனால் மறுக்க முடியவில்லை. சுருக்கமாகத் தன்னிலையை விளக்கினான்.

“உன் சிட்சுவேஷன் எனக்குப் புரியுது. நான் என் வீட்டுக்காரர்கிட்டே ஏதாவது ஐடியா கேட்டுப் பார்க்குறேன் டா...” என்றவள், சில பல நிமிடங்கள் அவனுக்கு ஆறுதல் கூறி அழைப்பைத் துண்டித்தவிட்டு, இசைவாணியிடமும் விஷயத்தைப் பகிர்ந்தாள். தனக்கு உதவியவனுக்கு பிரதியுபகாரமாக ஏதாவது செய்ய எண்ணித்தான் வாணி அற்புதாவைப் பேச சொன்னாள். ஆனால், இந்த விஷயத்தில் அவளால் எதுவும் செய்ய முடியாதே என எண்ணி பெருமூச்சுவிட்டாள்.

அந்த வாரயிறுதி மதிய உணவை உண்ண வராமல் பரிதி படுக்கையிலே புரண்டு கொண்டிருந்தான். மார்த்தாண்டம் சாப்பிட்டுவிட்டு கூடத்திலே படுத்துவிட, அஜித் புத்தக்கதோடு அமர்ந்துவிட்டான். கீர்த்தனா பக்கத்து வீட்டிலிருக்கும் தன் தோழியுடன் படம் பார்க்கிறேன் என அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட, சிந்தாமணி மட்டும் வெறுமனே உட்கார்ந்திருந்தார். அஜித் விடுமுறை நாட்களில் வீட்டில் படிக்கும்போது அவர் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க மாட்டார். எப்படியாவது மகன் மருத்துவராகிவிட வேண்டும் என்று இயன்றவரை அவனுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறார் பெண்மணி.

அவருக்குப் பரிதியைப் பற்றிய கவலையே மனதைப் போட்டு அழுத்தியது. அன்றைக்கு வீட்டிற்கு வரத் தாமதமான நாள் தொட்டு, இன்றுவரை அவன் அவனாகவே இல்லை. எப்போதும் அறைக்குள்ளே சென்று அடைந்து கொள்கிறான். பெரிதாய் அவனிடம் கலகலப்பு இல்லை.

எதையோ தொலைத்ததைப் போல நடந்து கொள்கிறான். ஏன் என்னவாகிற்று என இவர் இருமுறை அழுத்திக் கேட்டும், அவன் வாயில் பெரிதாய் பூட்டுப் போட்டிருக்கிறான் போல, ஒரு வார்த்தையைப் பெற்றவரால் வாங்க முடியவில்லை. விளையாட்டு பையன், ஏதோ பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டுவிட்டானோ என ஏதேதோ எண்ணங்கள் சிந்தனையைப் போட்டு அழுத்திற்று.

சரியாய் சாப்பிட கூட வரவில்லை அவன். அவன் உடல் மெலிந்ததை இவரால் உணர முடிந்தது. மார்த்தாண்டம் கூட, “உன் மகன் ஏன் இப்படியிருக்கான்? என்னென்னு கேளு? ஏதாவது பாஞ்சாயத்தை இழுத்துவிட்டிருக்கப் போறான்!” என மகனைக் கவனித்து மனைவியிடம் கேட்கச் சொல்லி அறிவுறுத்தினார்.

‘நான்தான் சொல்றேன்ல. உன் மகனுக்கு கிரகம் சரியில்லை. பேசாம கல்யாணத்தைப் பண்ணி வச்சிடு. எல்லாம் சரியாப் போய்டும்!’ இவரது நாத்தனார் ஒருவர் ஓதிவிட்டுச் சென்றது பெண்மணியின் காதில் இன்னமும் ஒலித்தது. இவரது ஒன்றுவிட்ட அண்ணன் மகளுக்குப் பரிதியைத் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டு இரண்டுமுறை சிந்தாமணியிடம் கேட்டுவிட்டார் அண்ணன் முறையானவர்.

“இல்லண்ணே! அவன் வெளிநாடு போகப் போறான். இப்போதைக்கு கல்யாணம் வேணாம். போய்ட்டு ரெண்டு வருஷம் கழிச்சு வரட்டும். அப்போ கல்யாணத்தைப் பத்தி பேசலாம்!” இவர் நாகரீகமாக மறுக்க முயன்றார். ஆனால் அவர்கள் விடவில்லை. வெளிநாடு சென்று படித்தவன், மீண்டும் அங்குதான் வேலை பார்க்க போகிறான். அதனாலே பரிதியை மருமகனாக்கிக்கொள்ள முனைப்புடனிருந்தனர்.

“நீ ஒருவார்த்தை பரிதிகிட்டே கேளுத்தா... அவன் வேணாம்னு சொன்னா நான் அடுத்துப் பேச்சே எடுக்க மாட்டேன். இப்போ சும்மா ரெண்டு வீட்டை வச்சு பரிசம் போட்டுக்கலாம். அப்புறம் அவன் வெளிநாடு போய்ட்டு வந்தப் பின்னாடி கல்யாணம் பண்ணிக்கலாம்.‌ என் மகளும் மேல படிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருக்கா!” அவர் மீண்டும் வற்புறுத்திக் கூற, இவரால் மறுக்க முடியவில்லை.

“பரிதி அப்பாகிட்டே ஒரு வார்த்தை நீங்களே பேசுனா நல்லா இருக்கும்!” இவர் கணவனை முன்னிறுத்திப் பேச,

“அட... மாப்பிள்ளைகிட்டே பேசாமலா சிந்தாமணி. நீ முதல்ல உன் புள்ளைகிட்டே கேளு. அவன் சரின்னு சொன்னா நான் உடனே மாப்பிள்ளைகிட்டே பேசி முறையா எல்லாத்தையும் செய்வோம். அவன் வேண்டாம்னு சொல்லிட்டா அப்புறம் பெரியவங்களுக்குள்ள மனஸ்தாபம் வந்துடும். இந்தக் காலத்து புள்ளைகளை நம்பி நம்பளா எதுவும் செய்ய முடியாது. அவங்க மனசுல என்ன இருக்குன்னு கேட்குறதுதான் சரி!” என அவர் பேச்சை முடித்துக்கொள்ள, இவர் அந்த வாரம் முழுவதும் அதைப் பற்றி மகனிடம் பேசவில்லை.

ஒருவேளை உண்மையில் திருமணம் செய்து வைத்தால் அவன் ராசிக்கு நன்றாக இருக்குமோ என இவர் யோசனையுடன் தன் நாத்தனாரிடம் கேட்க, அவர், “என் பேச்சை நீ கேட்க வேணாம். பேசாம உன் மகன் ஜாதகத்தை எடுத்துட்டு போய் பார்த்துட்டு வா. கிரகம் எதுவும் சரியில்லையான்னு ஜோசியர் சொல்லிடுவாரு. கடக ராசிக்கு இப்போ நல்லாயில்லைன்னு யூட்யூப்ல பார்த்தேன். என் மவன் எடுத்துக் கொடுத்தான்!” என அவர் யோசனை சொல்ல, ஒரு மனதாக அதை ஏற்றவர், ஜோதிடரிடம் சென்றார்.

“வியாழ நோக்கம் வந்துடுச்சும்மா உங்கப் பையனுக்கு. கண்டிப்பா இன்னும் மூனு மாசத்துல கல்யாணம் நடந்திடும். நீ எதுவும் மெனக்கெட தேவையில்லை. கல்யாணம் முடிஞ்சதும் உன் பையன் பெரிய உச்சத்துக்குப் போவான். இவன் ராசிப்படி வர்ற மருமகத்தான் உன் மகனை உயர்த்துவா. விளையாட்டு பிள்ளையா இருந்தாலும் பொறுப்பானவன்தான். நல்லா வருவான்மா. கிரகம் எல்லாம் நல்லா இருக்கு!” என ஜோதிடர் கூறியதும்,

இருமனதாய் தவித்துக் கொண்டிருந்த சிந்தாமணி பேசாமல் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என முடிவெடுத்தார். கணவரிடம் அவர் இதுபற்றி கலந்தாலோசிக்கவில்லை. முதலில் மகனிடம் பேசி அவன் மனத்தை தெரிந்து கொண்ட பின்னர், மார்த்தாண்டத்திடம் பேசலாம் என எண்ணி அமைதிக் காத்தார் பெண்மணி.

மணி நான்கானதும் மார்த்தாண்டம் எழுந்து கடையைத் திறக்கச் சென்றார். படித்தது போதுமென புத்தகத்தை மூடி வைத்த அஜித், “ம்மா... நான் ரோஹித் வீட்டுக்குப் போறேன். நைட்டுதான் வருவேன்!” என இவனும் அகன்றான்.

அவன் சென்றதுதான் தாமதம். அவர் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அமர்ந்தார். சில நிமிடங்களில் அறையில் பரிதி நடமாடும் சப்தம் கேட்டது. அவன் தூங்கி எழுந்துவிட்டான் என்பதை உணர்ந்தவர், “பரிதி... வாயா. வந்து சாப்பிடு. மத்திய சாப்பாட்டை சாப்பிடாம கூட தூங்குற? அப்படியென்ன தூக்கம் உனக்கு?” என இவர் குரல் கொடுக்கவும், முகத்தை துண்டால் துடைத்தபடியே வந்து தரையில் அமர்ந்தான்.

குழம்பை சூடு செய்து எடுத்து வந்தவர், மகனுக்குப் பரிமாறவும் அவன் அமைதியாய் உண்டான்.
இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் எப்போது தனிமை வாய்க்கும் எனத் தெரியாது என்பதால் இப்போதே அவனிடம் கேட்டுவிடலாம் என யோசித்தவர், “பரிதி... அம்மா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்!” என்றார் சின்ன குரலில்.

குனிந்திருந்த தலை நிமிர, “என்ன பேசணும்மா?” எனக் கேட்டுவிட்டு சோற்றைப் பிசைந்தான் பரிதி.

“இல்ல... வெளிநாடு போய் வேலை பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்தீயே. எப்போ போறதா இருக்க?” அவர் கேட்டதும் வாயருகே கொண்டுசென்ற கை அவனுக்கு நடுங்கியது.

அதை சாமாளித்து உணவை வாயில் அடைத்தவன், “ஏன்... எப்போ போனா என்ன?” என மெல்லிய எரிச்சல் படரக் கேட்டான்.

“இல்ல... போறேன் சொல்லியே நாலு மாசமாகப் போகுது!” எப்படியாவது மகன் வெளி நாட்டுக்குச் செல்லும் தேதியை அறிந்து அதற்குமுன்னே அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிடலாம் என சிந்தாமணி மனதிலே திட்டம் தீட்டியிருந்தார்‌. அவர் அதை எண்ணித்தான் அவனது வேலை பற்றிக் கேட்டார்.

“ப்ம்ச்...” என்றவாறே கையிலிருந்த சோற்றைத் தட்டில் போட்டவன், “ஏன்... இப்போ நான் சம்பாரிக்கிறது பத்தலையா உனக்கு? வெளிநாடு போய் காசு அனுப்புனாதான் சோறு போடுவியா? போகலைன்னா வீட்டைவிட்டு அனுப்பிடுவீயா என்ன?” அவன் வார்த்தைகளை திராவகமாய் வீச, பெரியவர் முகம் அதிர்ந்தது.

“டேய் பரிதி... என்ன பேச்சு பேசுற நீ? அப்படி நினைக்கிற ஆளா நான்? என் புள்ளை என் கைக்குள்ளே இருக்கணும்னு நினைச்சவ நான். ஆனால் நீ வெளிநாடு போகணும்னு சொன்னப்ப, நம்மளால பையன் வாழ்க்கை கெட்டுறக் கூடாதுன்னு நான்தானே டா அவர்கிட்டே பேசுனேன்?” அவர் குரல் சிறுத்துப் போக, சற்றே நிதானித்தான் மகன்.

“ச்சு... சரி விடும்மா. எதுக்கு இப்போ இந்தக் கேள்வி கேட்ட நீ? அதுக்குப் பதில் சொல்லு!” என்றான் அழுத்தமாக.

அவனை முறைத்த சிந்தாமணி, “என் அண்ணன் பொண்ணு கவியை உனக்கு கட்டி வைக்கலாம்னு அவுக கேட்டுட்டே இருந்தாங்க. நீ போற தேதி தெரிஞ்சா பரிசம் போட்டுக்கலாம். இல்ல லேட்டாகும்னா, கல்யாணத்தை முடிச்சிடலாம்னுதான் டா நான் கேட்டேன்!” அவர் பேச்சில் இவனுக்கு கொலைவெறியானது.

“இப்போ உன்கிட்ட நான் எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு கேட்டேனாம்மா?” எனக் கடுப்போடு காய்ந்தான் மகன். ஏற்கனவே த்ன வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனை. அத்தோடு அடுத்து இதுவா என அவனுக்கு சினம் மூண்டெழுந்தது.

“இதெல்லாம் பெத்தவங்களா பார்த்து பண்றதுடா. நீயா வந்து கேட்பீயா எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு. எந்த புள்ளையும் அம்மாகிட்டே வந்து கேட்காது டா. எங்களோட கடமையை நாங்க செய்ய வேணாமா?” என்றவரை எரிச்சலாகப் பார்த்து கையை உதறி எழுந்தவன்,

“இன்னும் மூனு வருஷத்துக்கு கல்யாணம் அது இதுன்னு பேச்செடுத்த நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்மா. அதுவும் செத்தாலும் உன் சொந்தத்துல பொண்ணைக் கட்ட மாட்டேன். உன் அண்ணன் மக அழகு ரதியை வெறெங்கேயாவது கல்யாணம் பண்ணி வைக்க சொல்லு. உன் நொண்ணன் என்கிட்ட இதைப் பத்திப் பேசுனாரு, வயசுக்கு கூட அந்தாளுக்கு மரியாதை கொடுக்க மாட்டேன்!” பேசிக்கொண்டே பட்டென அறைக்கதவை அறைந்து சாத்தினான் பரிதி.

“வரவர உனக்கு ஏத்தம் ரொம்ப கூடிப் போச்சு டா. இன்னும் மூனு வருஷம் என்ன, நீயா வந்து கேட்டா கூட உனக்கு கல்யாணம் நான் பண்ணி வைக்க மாட்டேன். உன்னைப் பெத்தாருல்ல உங்கப்பன், அவர் பண்ணி வைப்பாரு. என்கிட்ட வந்து எதுக்கும் நிக்காத நீ!” என்ற சிந்தாமணி கோபத்தோடு முடியை உதறிக் கொண்டையிட்டார்.

கதவைத் திறந்தவன், “ரொம்ப சந்தோஷம்... இருக்க பிரச்சனைல ஆட் ஆன் மாதிரி உங்க சொந்தக்காரங்க எங்க படையெடுத்து வந்துடுவாங்களோன்னு பயந்துட்டேன். ஒரு பையன் பார்க்க அழகா இருந்தா அவுங்க எல்லாருக்கும் கண்ணை உறுத்தும் போல!” என முணுமுணுத்து அகன்றவனை சிந்தாமணி நெற்றிக்கணைத் திறந்து முறைத்தார்.

“உனக்கெல்லாம் என் அண்ணன் குடும்பத்தை பத்தி என்னடா தெரியும். அவர் பொண்ணைக் கட்டிக்க உனக்கு கொடுத்து வைக்கலை. அவ இருக்க அழகுக்கு உன்னைவிட நல்ல பையனா பார்த்து என் அண்ணன் கல்யாணம் பண்ணி வைப்பாரு!” என்ற சிந்தாமணி, ‘இவன்.. இவங்கப்பன்காரனுக்கெல்லாம் என் வீட்டு சொந்தம்னா எளக்காரம் தானே? இருக்கட்டும். எனக்கு ஒரு காலம் வராமலா போய்டும். அப்போ பார்த்துக்கிறேன்!’ என இவர் மனதிற்குள்ளே முனகினார். பரிதி அவர் அடுத்துப் பேசிய பேச்சுக்களை
காதிலே வாங்கவில்லை.

ஆனால் அடுத்த வாரமே வந்து இசைவாணியை திருமணம் செய்து வையுங்கள் என்ற மகனை சிந்தாமணி பழி தீர்த்திருந்தார்.


தொடரும்...
 
Well-known member
Messages
502
Reaction score
361
Points
63
Parithi sindhamani kita ipadi sattunu marriage panni vaiga solluran athuvum isaivani ah athu than surprising yae actually ivanga rendu perum.than jodi aavaga nu theriyum but sir ore varathula eppudi sidusidu pesuna isai ah kalyanam pannikiren nu solla vachathu
 
Top