• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,285
Reaction score
3,781
Points
113
நேரம் – 7 💜

சுந்தரியை மருத்துவமனை அழைத்து வந்து பத்து நிமிடங்களாகியிருந்தது. மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு உங்களை அழைப்பார் என செவிலியர் உரைத்துவிட்டு அகல, இவள் அங்கிருந்த நாற்காலியில் அமைதியாய் அமர்ந்தாள். தாயிற்கு எதுவும் ஆகியிருக்காது என்பதை மட்டும் ஜெபம் போல மனதிற்குள் கூறினாள்.

அவருக்கு ஒன்றுமில்லை என்பதை மட்டும் மனத்தில் அழுந்த பதிய வைக்க முயன்றாள். ஆனாலும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தாயும், தந்தையும் அற்று அனாதையாகி விடுவோமோ எனப் பயந்தாள்.
இளம்பரிதியும் அவளருகேதான் அமர்ந்திருந்தான். இவளது தொடர் அழுகையில் அவனுக்கு தலை வலித்தது.

“அழறதை தவிர உனக்கு எதுவும் தெரியாதா?” எரிச்சலாக அவன் கேட்டதும், இவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.

“முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. ஒருத்தவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா முதல்ல என்ன பண்ணணும்? கேப் புக் பண்ணிட்டு அது வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுவாங்களா? ஒன்னு யார்கிட்டேயாவது ஹெல்ப் கேட்கணும். இல்லைன்னா மெயின் ரோட்டுக்குப் போய் ஆட்டோ இல்ல காரை நிறுத்தி அழைச்சுட்டு வரணும். அழுதுட்டே வாசலுக்கும் வீட்டுக்கும் நடந்தா உங்கம்மா எழுந்து உக்காந்துடுவாங்களா?” அவன் சிடுசிடுப்புடன் கேட்டதும், இசைவாணி கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்து நிமிர்ந்து அமர்ந்தாள். அந்நேரம் அவளுக்கு என்ன செய்வது என்ற பிரஞை இல்லை என்பதே உண்மை.

“நான்... அது இப்படியாகும்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை. நல்லா பேசிட்டு இருந்தாங்க. திடீர்னு மயங்கவும் அடுத்து என்னென்னு யோசிக்க முடியலை!” என உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கினாள். இசைவாணி அனைத்திலும் நேர்த்தியாகவும் பொறுமையுடனும் இருப்பாள். எப்போதும் அவளது செய்கையில் விவேகமும் ஒருவித முதிர்ச்சியும் அதிகமாய் தென்படும். ஆனால் சுந்தரி என்று வருகையில் மட்டும் அவளது மூளை வேலை நிறுத்தம் செய்துவிட, மனம் அவளை அலைக்கழிக்கிறது. அவள் முகத்தைப் பார்த்து என்ன நினைத்தானோ பரிதி. திட்ட வந்த வார்த்தைகளை எல்லாம் விழுங்கினான்.

“சரி அழாத. உங்கம்மாவுக்கு ஒன்னும் ஆகாது. எனக்கு இந்த ஹாஸ்பிடல் ஸ்மெல்னால தலைவலியே வந்துடுச்சு. நான் போய் டீ குடிச்சிட்டு உனக்கும் வாங்கிட்டு வரேன். நீ மறுபடியும் டேங்கைத் திறக்காம இரு!” என்றுவிட்டுப் போனவனை சலனமில்லாமல் பார்த்தாள் இவள்.

மருத்துவமனை சிற்றுண்டி சாலையில் தேநீரை வாங்கிப் பருகியவன், தம்பிக்கும் தந்தைக்கும் அழைத்து தான் வந்த நோக்கத்தைக் கூறி வரத் தாமதமாகும் என்று வைத்துவிட்டு இவளுக்கும் ஒரு கோப்பை தேநீரோடு சென்றான்.

“இந்தா... டீயைக் குடி!” சூடாய் தன் முன்னே தேநீரை நீட்டியவனை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு எதுவும் வேணாம்!” என்றாள் தீனமான குரலில்.

“ஷ்யூரா?” அவன் உறுதிப்படுத்த கேட்க, இவளது தலை ஆமாமென அசைந்தது.

“ஓகே... நானே குடிச்சிடுறேன்!” என்றவன் தேநீரைக் குடித்து முடித்து காகிதக் கோப்பையைக் கசக்கி அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசினான். செவிலியர் வந்து இவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

“உக்காருங்க இசைவாணி...” அவளுக்கு இருக்கையைக் கை காண்பித்தவர், அவளுக்குப் பின்னே வால்பிடித்து வந்த பரிதியைக் கேள்வியாகப்‌ பார்த்தார்.

அவரது பார்வையை உணர்ந்தவள், “என் ஃப்ரெண்ட்தான் டாக்டர்!” என்றாள் சின்ன குரலில்.

“ஓகே... நீங்களும் உக்காருங்க!” அவனை அமரப் பணித்தவர்,

“உங்கம்மாவுக்கு வந்திருக்கது ஹைப்பர்டென்சீவ் க்ரைசிஸ்!” என்றார் ஏதோ அவர்களுக்குப் புரியாத வார்த்தையாக. ஏற்கனவே பயந்து போயிருந்த இசைவாணி இன்னும் பயத்தோடு நெஞ்சம் திடுக்கிட்டுப் போக, அவரைப் பார்த்தாள்.

பக்கவாட்டாக திரும்பி அவள் முகத்திலிருந்த உணர்வை உணர்ந்த பரிதி, “டாக்டர்... புரியாத டெர்ம்ல எதுவும் சொல்லாம என்னென்னு உடைச்சு சொல்லிடுங்க. அப்பதானே எங்களுக்குப் புரியும்!” என்றான் கடுப்பான குரலில். என்னவோ இந்த திரைப்படம், நாடகங்களில் எல்லாம் இறுதிக் காட்சியில் தொடரும் போடுவதைப் போல அவர் முகம் வெகுதீவிரமாக இருந்தது. அதைவிட அருகிலிருப்பவள் நிரம்ப பயந்துவிட்டாள் என அவள் முகத்தை வைத்தே அகத்தை அறிந்திருந்தான்.

“ம்ப்ச்... நார்மலா நமக்கு ப்ளட் ப்ரஷர் ஒன் ட்வென்டி பை எய்ட்டிதான் இருக்கும். உங்கம்மாவுக்கு டூ ஹண்ட்ரட் பை ஒன் ட்வென்டி இருந்துச்சு. தட் மீன்ஸ் டபுளா இருந்திருக்கு. இவ்வளோ பிரஷர் அதிகமான என்னென்ன ப்ராப்ளம் வரும்னு உங்களுக்குத் தெரியுமா?” இவனைப் பார்த்து அவர் கண்டிப்புடன் கேட்டார்.

“சாரி டாக்டர்... நீங்கதான் அதையும் சொல்லணும். சோ ப்ளீஸ்!” குரலை தழைத்தான் இவன்.

அதில் இறங்கிய மருத்துவர், “இவ்வளோ அதிகமா பிரஷர் ஏறுனதால அவங்களுக்கு சிவியர் ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம். கண்ணு, கிட்னின்னு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். முக்கியமா ஸ்ட்ரோக் வந்து அவங்க படுத்தப் படுக்கையாகி இருக்கலாம். எல்லாத்தையும் விட அவங்களுக்கு ஏற்கனவே ஹார்ட் ப்ளாக் வேற இருக்கு. அது உங்களுக்கே தெரியும் இல்ல இசைவாணி?” அவர் கேட்டதும் வேலை நிறுத்தம் செய்திருந்த இவளது கண் இரைப்பைகள் மீண்டும் அதீத வேகத்தில் இயங்கின. இமையை சிலுப்பினாள். அதில் தொக்கி‌ நின்ற உவர் நீர் கீழே சிதறியது.

“கொஞ்ச நேரம் அழாம இருக்கீயா நீ?” அவன் எறிந்து விழ, இசைவாணி அவனை சலனமற்றுப் பார்த்தாள்.

“உங்களோட ஹெல்ப் போதும். நீங்க கிளம்புங்க. என் அம்மாவை நான் பார்த்துக்கிறேன்!” அவள் சுள்ளென கூறிவிட, அவன் படக்கென எழுந்துவிட்டான்.

‘இவளுக்குப் போய் ஹெல்ப் பண்ண வந்தேன் இல்ல... என்னைத்தான் சொல்லணும். சரித்தான் போடீ!’ மனதிற்குள்ளே கருவியவன் விறுவிறுவென வெளியேறினான்.

“இப்போ அம்மாவுக்கு எப்படி இருக்கு டாக்டர்?” இவள் பரிதவிப்புடன் கேட்டாள்.

“இப்போதைக்கு பீபி லோ பண்ண இன்ஜெக்ஷன் போட்டுட்டோம். இன்னும் சில டெஸ்ட் எடுக்க வேண்டியது இருக்கு இசைவாணி. இப்போ எதையும் கன்பார்மா சொல்ல முடியாது. பட் ஐ ஹோப், டில் நவ் ஷீ இஸ் ஓகே. ரிப்போர்ட்ஸ் வந்ததும் அதை கன்பார்ம் பண்ணிடலாம்...” அவருக்கும் இவளது அழுத முகத்தைப் பார்த்து கடினமாகப் பேச வரவில்லை.

“திடீர்னு இப்படியாகுற அளவுக்கு என்னாச்சு?” யோசனையுடன் அவர் கேட்க,

“எனக்கு மேரேஜ் பிக்ஸாகி இருந்துச்சு டாக்டர். பட் சம் இஷ்ஷூஸ்னால அது நின்னுப் போச்சு. செகண்ட் டைம் இப்படியாகுறது. சோ அம்மா டென்ஷனாகிட்டாங்க!” என்றாள் தேம்பலாய்.

“இசைவாணி... இது அழுறதுக்கான நேரம் இல்ல. உங்க்மமாவை எப்படி குணப்படுத்தணும்னுதான் யோசிக்கணும். சோ நீங்க மென்டலி ஸ்ட்ராங்கா இருந்தாதான் அடுத்தடுத்து என்னென்னு பார்க்க முடியும்!” அவர் சூழ்நிலையின் விபரீதத்தைக் கூற, இவள் விழிகளைத் துடைத்து நிமிர்ந்து அமர்ந்தாள். ஆனாலும் கண்ணில் ஈரம் கசிந்தது.

“நீங்க ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடுங்க டாக்டர். பணத்தைப் பத்தி யோசிக்காதீங்க. நான் எப்படியாவது ரெடி பண்ணிடுறேன். என் அம்மா நல்லபடியா திரும்பி வந்தா போதும்!” என்றாள் தெளிவான குரலில்.

“வீ வில் டூ அவர் பெஸ்ட்...” என்றவர், “டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் பார்த்துட்டு ஆப்ரேஷன் டேட் பிக்ஸ் பண்ணிடலாம் இசைவாணி. டிலே பண்றது ரிஸ்க்னு தோணுது. ஹாஸ்பிடல்ல வச்சே அவங்க உடம்பை ஸ்டேபிளாக்கி ஆப்ரேஷனுக்கு ப்ரிபேர் பண்ணலாம்!” என்றவர் அடுத்தடுத்து என்னென்ன சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என விளக்க, இவள் தெளிவாகக் கேட்டுக் கொண்டாள்.

“ஓகே... நீங்க வெயிட் பண்ணுங்க இசைவாணி” மருத்துவர் உரைத்ததும் வெளியே எழுந்து சென்று இருக்கையில் அமர்ந்தாள். சில நொடிகளில் அவள் முன்னே அரவம் தென்பட்டது. தலையை மட்டும் நிமிர்த்தினாள். பரிதி இன்னும் செல்லாது நின்றிருக்க, இவளுக்கு அவனிடம் முகத்தில் அடித்தாற் போல பேசியிருக்க கூடாதோ என இப்போது தோன்றிற்று. கேட்காமலே தன்னிலைப் புரிந்து உதவ வந்தவனிடம் கடுமையாகப் பேசிவிட்டோம் என வருந்தியவள், எழுந்து நின்றாள்.

“சாரி.... நான்!” விளக்க முற்பட்டவளின் முன்னே கரத்தை நீட்டியவன், “உன் சாரி எனக்குத் தேவையில்ல!” என்றான் முகத்தில் அடித்தாற் போல கடினக் குரலில். இவளது முகம் கசங்கியது. அவன் சுடுசொல்லில் அங்கிருக்கப் பிடிக்காது அகல முயன்றாள் அவள்.

“ம்ப்ச்... எங்கப் போற நீ? ஒரு ரெண்டு நிமிஷம் நிக்க முடியாதா?” அவன் எரிச்சலாக கேட்டு இவளுக்கு நிழல்போல பின்னே வர, இசைவாணி நிதானித்தாள்.

“உன் பேர் என்ன?” சற்றே குனிந்து அவள் காதருகே இவன் கேட்டதும், பக்கவாட்டாக திரும்பி அவனைப் பார்த்தாள். இருவரது முகமும் அருகருகே இருக்க, பதறிப் போய் விலகினாள்.

அவள் கையைப் பிடித்திழுத்தவன், “உன் பேர் என்ன?” என அழுத்திக் கேட்டான்.

அவனிடமிருந்து கையை உதறியவள், “என் பேர் இசைவாணி... உங்களுக்கு இப்போ என்ன வேணும்?” எனக் கண்டிப்பான குரலில் கேட்டாள். அவன் கையைப் பிடித்திழுத்ததில் எரிச்சலாக வந்தது. இரண்டு கரத்தையும் முன்புறமாகக் கட்டிக்கொண்டு அவனை நிமிர்ந்து முறைத்தாள்.

“எனக்கு ஒன்னும் வேணாம் இசைவாணி. உனக்குத்தான் என் ஹெல்ப் தேவைப்படும்!” அவளை உறுத்து விழித்தவன், “உன் ட்ரெஸ்ல ஸ்ட்ரெய்னா இருக்கு!” என்றான் சின்ன குரலில்.

என்ன சொல்கிறான் இவன் என சில நொடிகள் புரியாது விழித்துப் பின்னர் உணர்ந்தவள், கழுத்தை வளைத்து பின்புற உடையைப் பார்த்தாள். சிவப்பு நிறத்தில் ஆங்காங்கே திட்டுகள் தெரிந்தன.

‘இதுவேறா?’ என நெற்றியைச் சுருக்கியவள், “நான் பார்த்துக்குறேன்!” என்றாள் அவனிடம் முகத்தை திருப்பாது தன்மையாக. அப்படியே நகர்ந்து சுவரில் சாய்ந்து நின்றாள்.

“உனக்கு எதாவது வேணுமா?” அவன் தயங்கியபடியே கேட்டான். இவள் இல்லையென தலையசைத்தாள்.

“ஷ்யூரா... நீயே மேனேஜ் பண்ணிப்பியா?” அவன் முணுமுணுக்கவும், இவளிடம் சின்னதாய் ஒரு புன்னகை.

“தேங்க்ஸ் அண்ட் சாரி. அப்போ நான் இருந்த மைண்ட் செட்ல அப்படி பேசிட்டேன். நானே கேட்காம நீங்களா வந்து ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. தேங்க் யூ சோ மச்!” அவள் உணர்ந்து நன்றி நவில, இவன் ஒற்றைத் தலையசைப்பில் அதை ஏற்றுக் கொண்டான்.

“ஓகே... நீ பார்த்துக்கோ. நான் கிளம்புறேன்!” அவன் விடைபெற, வாயில்வரை அவன் செல்வதையே பார்த்திருந்தவள் இப்போது சுவரில் தலையை சாய்த்தாள். கண்களை மூடி மூச்சை இழுத்து கண்ணீரை தடை செய்தவள், விழிகளைத் திறந்து கழிவறை எங்கே இருக்கிறது எனப் பார்வையைச் சுழற்றினாள். கண்ணுக்குத் தெரிந்தவரை கழிவறை எங்கேயும் தென்படவில்லை.

அவளைக் கடந்த செவிலியரிடம், “சிஸ்டர், ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?” எனக் கேட்டாள்.

“ஃபர்ஸ்ட் ப்ளோர், ரைட் சைட்ல!” அவர் கூறியதும் நன்றியுரைத்தவள், கழுத்தைச் சுற்றியிருந்த துப்பட்டாவை உருவி இடுப்பில் கட்டினாள். அவளுக்கு இப்போது மாதவிடாய் சுழற்சியே இல்லை. ஆனால் பதற்றத்திலும் பயத்திலும் சில நாட்கள் முன்பே மாதவிடாய் வந்துவிட்டது. மெதுவாய் மாடியேறி கழிவறைச் சென்று உடையைக் கழுவியவள், மீண்டும் துப்பட்டாவை இடையைச் சுற்றிக் கட்டினாள்.

அவள் இறங்கி வரும்போது பரிதி உள்ளே நுழைவது தெரிந்தது. இவளைப் பார்த்துவிட்டு அவனும் நிற்க, கடைசி படியில் கால் வைத்தவள், “நீங்க கிளம்பலையா?” எனக் கேட்டாள். பதிலளிக்காதவன் கையை அவள் முன்னே நீட்டினான். செய்த தாளில் சுற்றப்பட்ட அணையாடையின் ஒருமுனை மட்டும் வெளியே தெரிந்தது. இவளிடம் ஒரு ஆசுவாசம் பிறந்தது.

“தேங்க்ஸ்!” என்று அதை வாங்கிக்கொண்டு சென்றவள், திரும்பி வரும்வரை அவன் அங்கேயே நின்றான்.

“உன் ஃப்ரெண்ட்ஸ் இல்லைன்னா அன்னைக்கு வீட்டுக்கு வந்தாங்களே... அவங்க உன் ரிலேட்டீவ்தானே? கால் பண்ணி வரச் சொல்லு. அவங்க வந்ததும் நான் கிளம்புறேன்!” என்றவனிடம் தலையை அசைத்தாள். தன்னைத் தனியே விட்டுச் செல்ல அவன் விரும்பவில்லை என உணர்ந்தவள், மாமாவிற்கு அழைக்கச் சென்று பின்னர் அற்புதாவிற்கு அழைத்து தாயிற்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டும் கூறி அவளை வரப் பணித்தாள்.

காமராஜ் வீட்டிலிருந்து வர எப்படியும் ஒருமணி நேரமாகும். ஆனால் அற்புதாவின் மாமியார் வீடு இங்கு பக்கத்தில்தான் இருக்கிறது. அவள் தாய் வீட்டில் பாதி நாட்கள் இருந்தால், இங்கு சில நாட்கள் இருப்பாள். கடைசியாய் பேசும்போது இங்கிருக்கிறேன் என அவள் குறிப்பிட்டது நினைவு வர, அதனாலே அவளைத் தொடர்பு கொண்டாள்.

இருபது நிமிடத்தில் அரக்கப்பறக்க மருத்துவமனைக்குள் நுழைந்த அற்புதா, “வாணி... அத்தைக்கு என்னாச்சு?” எனப் படபடப்புடன் கேட்டாள்.

“பீபி ரொம்ப அதிகமாகி மயங்கி விழுந்துட்டாங்க!” இவள் மெல்லிய குரலில் கூற,

“ஏன்.. நேத்து பேசும்போது கூட நல்லாதானே இருந்தாங்க. திடீர்னு என்னாச்சு?” என இவள் அடுக்கினாள். இசைவாணி பதில் சொல்லத் தயங்கினாள். அருகே பரிதி நின்றிருக்க, அவன் முன்னே தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தைப் பகிர அவளுக்கு விருப்பமில்லை.

அதை உணர்ந்தவனும், “ஓகே நீங்கப் பாருங்க... நான் கிளம்புறேன்!” என்றான் அவன்.

அந்தக் குரலில் அவன் புறம் திரும்பிய அற்புதா, அவனைப் பார்த்து புருவத்தைச் சுருக்கி, “ஏ... பரிதி. நீங்க எங்கடா இங்க?” எனக் கேட்டாள். அவன் யாரிவள் எனப் புரியாது விழித்து நின்றான்.

“பரிதி... என்னை அடையாளம் தெரியலையா? நான் அற்புதா... போர்த் பெஞ்ச் நான்!” உனது பள்ளிக்காலத் தோழி நான் என அவள் கூற, இவன் அவளை உற்றுப்‌ பார்த்தான்.ஏதோ கொஞ்சமாய் நினைவு வந்தாள். ஆனாலும் முதிர்ந்த முகம், சற்றே மெலிந்திருந்த உடல் என அவளை அடையாளம் காணத் திணறிப் போனான்.

“அற்புதா... ஹம்ம்... ஆமா, அடையாளமே தெரியாம மாறி போய்ட்ட!” அவன் முகத்தில் ஆச்சரியம் நிரம்பி வழிந்தது. பத்தாம் வகுப்போடு இருவரும் வெவ்வேறு பாடக் குறிப்பைத் தேர்ந்தெடுத்ததால், மொத்தமாய் நட்பிற்கு மூடுவிழா நடத்தியிருந்தனர். இத்தனை நாட்கள் கழித்தும் அவனை சரியாய் அடையாளம் கண்டு விட்டாள் அற்புதா. ஆண்களிடம் பெரிதாய் தோற்ற மாற்றம் இருக்காது‌. பெண்கள் மட்டுமே மொத்தமாய் மாறிப் போய் விடுகின்றனர்.

“இசைவாணி... ஈ.ஸி.ஜி எடுக்கணும் உங்கமமாவுக்கு. அமௌண்ட் பே பண்ணி ரெசிப்ட் எடுத்துட்டு வாங்க!” செவிலியர் வந்து இவர்களது உரையாடலை முடித்து வைத்தார்.

“அற்புதா... இவர்தான் அம்மாவை ஹாஸ்பிடல் கொண்டு வர ஹெல்ப் பண்ணாரு. சேம் ஏரியாதான் இவர்!” இசைவாணி பரிதியைக் கைகாண்பித்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் டா, இப்போ நான் அத்தையைப் பார்க்கணும். கண்டிப்பா ஒருநாள் மீட் பண்ணலாம். நீயும் அதே ஏரியா தானே?” என உறுதிப்படுத்தி அவனது இலக்கத்தைப் பெற்றுக்கொண்டாள். அவனும் விடைபெறும் விதமாக பெண்கள் இருவரிடமும் தலையசைத்து அகன்றான்.

இசைவாணி சென்று பணம் செலுத்தி வந்ததும், சுந்தரிக்குத் தேவையான மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குள்ளே அற்புதா என்ன நடந்தது என இவளிடம் அறிந்து கொண்டு தந்தைக்கு அழைத்து விட்டாள்.

அவர்களுக்கு நடந்த எதுவும் தெரியாது. பிரதீப் வீட்டிலிருந்து முறையாக அழைத்து அவர்கள் நடந்ததைப் பகிரவும் இல்லை, மன்னிப்பும் கேட்கவில்லை.
காமராஜ் உடனே தனது நண்பருக்கு அழைத்து நிகழ்வின் உண்மைத்தன்மையை அறிந்து அவரிடம் சண்டையிட்ட கையோடு மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.

“என்னை மன்னிச்சிடு டா வாணிம்மா.... நான் நல்லவன்னு நினைச்சுத்தான் பிரதீப்பை உனக்கு பார்த்தேன். ஆனால் அந்த ராஸ்கல் இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்ல நான்!” அவர் தன்மீது தான் தவறு என இவளிடம் மன்னிப்பை யாசித்தார்.

“ஐயோ மாமா... அம்மாவும் இதே மாதிரித்தான் பேசுறாங்க. யாரும் பிரதீப் இப்படி பண்ணுவாருன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை. அவர் பண்ண தப்புக்கு நீங்க ஏன் உங்க மேல பழியைத் தூக்கிப் போடுறீங்க?” என இவள்தான் அவரை சமாதானம் செய்ய வேண்டியதாகப் போயிற்று.

மறுநாள் காலையில்தான் அனைத்து சோதனை முடிவுகளும் வந்தன. காமராஜும் இசைவாணியும் மருத்துவரைப் பார்க்கச் சென்றனர்.

“பை காட்ஸ் கிரேஸ்... உங்கம்மாவுக்கு வேற எந்தப் ப்ராப்ளமும் ஏற்படலை இசைவாணி. அவங்க இப்போ சேஃப் சோன்தான். ரெண்டு நாள் இங்கயே வச்சு அப்சர்வ் பண்ணிட்டு டிஸ்சார்ஜ் பண்றோம். நெக்ஸ்ட் மந்த் ஆப்ரேஷனுக்கு டேட் இருக்குதான்னு நான் பார்த்து சொல்றேன். டேட் அவைலபிளா இருந்தா சீக்கிரம் பண்ணிடலாம்!” அவர் கூறவும், இவளுக்கு சந்தோஷத்தில் கண்ணீர் பெருகிற்று. கடவுளாக மாறிப் போன தந்தையிடம் மனதார நன்றியுரைத்தாள்.

இரண்டு நாட்கள் ஆள் மாற்றி ஆள் என சுந்தரியைப் பார்த்துக் கொண்டனர். மூன்றாம் நாள் மாலை அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
காமராஜ் குடும்பத்தோடு அன்றைக்கு இரவு தங்கிவிட்டு காலை விடை பெற்றார்.

சரவணனும் அற்புதாவும் மேலும் இரண்டு நாட்கள் அங்கே இருந்துவிட்டு வருவதாய் உரைக்க, இசைவாணிக்கும் அவர்கள் இருப்பு தேவைப்பட்டது போல. மனதள
வில் அவள் நொடிந்து போயிருக்க, இவர்கள் இருந்தால் தாயையும் நன்றாய் பார்த்துக் கொள்ளலாம் என இருவரையும் இருத்திவிட்டாள்.

தொடரும்...

 
Well-known member
Messages
502
Reaction score
361
Points
63
Sundari amma ku nalla vela udambu normal aagiduthu .parithi sidusidu nu pesunalum avaluku oru moral support ah irundhu irukan
 
Top