• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,275
Reaction score
3,734
Points
113
எண்ணம் – 15

கல்லூரியிலிருந்து தானியில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் மலர்விழி. கருத்து இளைத்திருந்த உடலும் விழிகளைச் சூழ்ந்திருந்த கருவளையமும் அவளின் உடல்நிலையைப் பறைசாற்றின. இன்னும் பத்து நாட்கள் கல்லூரிக்குச் செல்லத் தேவையில்லை. தேர்வு முடிந்ததால் விடுமுறை அளித்திருந்தனர்.

‘கண்டிப்பாக இந்தப் பத்து நாட்களும் ஓய்விலிருந்து உடலை சரி செய்ய வேண்டும். அதைவிட வீட்டிற்குச் சென்றதும் குட்டித் தூக்கம் போட வேண்டும்’ சற்றெ இலகுவான மனநிலையிலே வீடு சென்றாள்.

தனஞ்செயனின் மகிழுந்து வெளியே நிற்கவும், ‘இந்த நேரத்துல இவர் எதுக்கு வந்தாரு?’ என்ற யோசனையுடன் மேலே ஏறி வீட்டிற்குள் நுழைந்தாள்.

கூடத்திலிருந்த நீள்விருக்கையில் அமர்ந்திருந்த தனஞ்செயன் ஒரு கையை சற்றே தெனாவெட்டாக சாய்ந்து அமர்ந்து மற்றொரு கையில் தொலைவியக்கியை வைத்திருந்தான். இவள் வருகைக்காகத்தான் காத்திருந்தேன் என்பதை போலொரு பாவனை அவன் முகத்தில்.

மலர்விழி அவனைப் பார்த்து எந்த எதிர்வினையும் ஆற்றாது எப்போதும் போல கடந்து செல்ல, “விழி, டிட் யூ லவ் மீ?” என்ற அவனது வார்த்தையில் ஆணியடித்தது போல நின்றுவிட்டாள்.

அந்தக் கேள்வியில் மலர்விழியின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. கையிலிருந்த பையை இறுக்கிப் பிடித்தவள், சில கணங்களில் தன்னை சுதாரித்து இருந்தாள். தனஞ்செயன் விழியகற்றாமல் அவளது செய்கைகளைப் பார்த்தான். அவள் முக மாற்றமும், நெற்றியோரம் கண நேரத்தில் அரும்பிய வியர்வைத் துளியும் அவளது அட்ரீனலின் அளவைப் பறைச் சற்றின. இவனது இதழ்கள் கேலியாக வளைந்தன.

தனாவைத் திரும்பிப் பார்த்து உதட்டைச் சுழித்தவள், பையை கழட்டி தூரப் போட்டுவிட்டு உணவு மேஜையிலிருந்த நீரை எடுத்துப் பருகி தன்னை ஆசுவாசம் செய்ய முயன்றாள். என்னதான் வெளியே அவன் கேள்வி தன்னைப் பாதிக்கவில்லை என்ற பாவனையோடு இருந்தாலும், மனம் என்னவோ இந்தக் கேள்வியை இந்நொடி சந்திக்க தடுமாறிப் போனது. அவள் எதிர்பார்க்கவில்லை இதை. உடல் முழுவதும் ஏதோ ஓர் நடுக்கத்தை மீறிய உணர்வு. நெற்றியோரம் வழிந்த வியர்வை துளிகள் கைகளில் பட்டுத்தெறித்தன.

அவளது முகத்தையேப் பார்த்திருந்த தனா, “கல்யாணத்துக்கு முன்னாடியே நீ என்னை லவ் பண்ணி இருக்க. உனக்கு என்னைப் பிடிச்சிருந்திருக்கு. ஆம் ஐ ரைட்?” ஒவ்வொரு வார்த்தையும் அவன் அழுத்திக் கேட்க, இவள் இதயம் படபடவென அடித்துத் தொலைத்தது.

கண்டிப்பாய் மாறன் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. தன்னிடம் செய்து கொடுத்த சத்தியத்தை அவன் காப்பாற்றுவான் என தங்கையின் மனது தமையன் மீதான நம்பிக்கையில் துளி கூட அவனை சந்தேகிக்கவில்லை. தானும் இவனிடம் கூறாத போது கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனஞ்செயன்
அவனாக போட்டு வாங்குகிறானோ? என மனம் நொடியில் கணக்கிட்டது. அப்படித்தான் இருக்கும் என ஊகித்தவளின் உடலில் இப்போது பழைய அலட்சிய பாவனை வந்திருந்தது. வெகு இயல்பாய் அவனைக் கையாள முடிவெடுத்திருந்தாள்.

எப்போதும் போல அசட்டையாய் அவனைத் திரும்பிப் பார்த்தவள், “உங்களோட கற்பனைக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது!” என்றாள் உதட்டை கோணலாய் வளைத்து‌.

“ஓஹோ... அப்போ உனக்கு என்னைப் பிடிக்காது, அப்படியா?” தனா தீர்க்கமாக வினவியபடியே அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து துள்ளி குதித்து எழுந்தான். கொஞ்சம் கொஞ்சமாய் அவனது கோபத்தின் அளவு கூடிக்கொண்டே சென்றது. எவ்வளவு அழுத்தம் இந்தப் பெண்ணிற்கு. அதைவிட திமிரும் தெனவெட்டுமாய் அவள் நின்றிருந்த தோற்றம் இவனை சீண்டியது.

மலர்விழி வருவதற்கு முன்னே ஒருவராய் தன்னை சமன்செய்து கோபத்தைக் கட்டுக்குள்கொண்டு வந்திருந்தான். பொறுமையாய் மனைவியிடம் விசாரிக்கலாம் என மனது நிதானத்தைக் கடை பிடிக்கச் சொல்ல, இந்தப் பெண் அவனது பொறுமையை உடைத்துக் கொண்டிருந்தாள்.

அவன் கேள்வியில் அதன் சாரம்சத்தில் சற்றுத் திணறியவள் அவனை முறைத்து, “நீங்க சண்டை போட நான் ஆள் இல்லை...” எனத் தப்பித்து அறைக்குள்ளே நுழையப் போனாள்.

ஒரெட்டில் அவளது கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்த தனஞ்செயன், அவளது இரண்டு கன்னத்தையும் ஒரே கையில் பிடித்தான். “எவ்வளோ அழுத்தம் டி உனக்கு. நான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதில் இருக்கு. ஆனால், சொல்ல முடியலை... நோ நோ சொல்ல மாட்ட.‌.. அப்படித்தானே?” எனப் பொறுமையிழந்து வினவினான்.

அவன் பிடித்திருந்த கன்னம் வலியைக் கொடுக்க, முகத்தைச் சுளித்து கணவன் கையை விளக்க முயன்றாள் மலர். “கையை எடுங்க முதல்ல. சும்மா நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டு எதையும் பேசுனா, அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது!” என அவனைத் தள்ளி நிறுத்தினாள்.

“கற்பனையா? சரி, அந்தக் கற்பனை எங்க இருந்து வந்ததுன்னு காட்டுறேன்!” என்றவன் அறைக்குள் நுழைந்து மலரின் நாட்குறிப்பேட்டை எடுத்து வெளியே தூக்கி வீசினான்.

அதைப் பார்த்ததும் அவள் விக்கித்துப் போய் நின்றுவிட்டாள். நிச்சயமாய் அவன் தனது நாட்குறிப்பேட்டை படித்திருக்க வாய்ப்பேயில்லை என நம்பினாள் விழி. ஏனென்றால் அதை அத்தனை பத்திரமாய் பூட்டி வைத்திருந்தாளே. இவனிடம் எப்படி வந்தது? மனம் படபடவென கேள்விக் கணைகளைத் தொடுத்தது. எதிரில் ரௌத்திரமாய் நின்றவனிடம் என்ன பதிலுரைப்பது எனத் தெரியாது மலர் திகைத்து விழித்து நின்றாள்.

“சொல்லு டி... இப்போ வாயைத் தொறந்து சொல்லு. பக்கம் பக்கமா எழுதி, வரைஞ்சு வச்சா போதுமா? உசுரோட இங்க நிக்கிறவன் கிட்டே சொல்லு. என்னைப் பிடிக்கும்னு சொல்லுடி” என தனஞ்செயன் கோபத்தில் கத்தி அவளது தோள்பட்டையைப் போட்டு உலுக்கினான்‌.

வலியில் மலர்விழி பல்லைக் கடித்தாள். “ஹவ் டேர் யூ டூ ரீட் மை பெர்சனல் டைரி வித்தவுட் மை பெர்மிஷன்?” என இவளும் கத்திக்கொண்டே அவனை உதறிவிட்டு நாட்குறிப்பேட்டை கையில் எடுத்தாள்.

“நான் கேட்ட கேள்விக்குப் உன்னால பதில் சொல்ல முடியாது. இப்போ நான் டைரியைப் படிச்சதுதான் உனக்குப் பெருசா இருக்குல்ல?” என்றவன் கொதித்துப் போனான்.

‘எத்தனை நெஞ்சழுத்தம் இவளுக்கு. உள்ளே வைத்து குமுறிக் கொண்டிருப்பாள். உரியவன் கேட்டால் வாயைத் திறக்கமாட்டாள்’

“என்ன... என்ன பதில் சொல்லணும். இருந்தா தானே சொல்ல. அப்படியெதுவும் இல்லையே!” உண்மை தெரிந்தப் பின்னும் அதை ஒப்புக் கொள்ள மனதில்லாது அலட்சியமாய் பேசியவள் இவனது கோபத்தை அதிகரித்திருந்தாள்.

அவளது கையைப் பிடித்து முதுகோடு மடக்கி சுவற்றில் சாய்த்திருந்தான் தனஞ்செயன்.
“இப்போ கூட ஒத்துக்க மாட்டல்ல டி‌. ஹவ் சாடிஸ்ட் யூ ஆர்?” என்றவனிடம் பதில் உரைக்காதவள், உதட்டைப் பூட்டுப் போட்டது போல ஒட்டிக் கொண்டாள்.

“சீ... சரியான ஈகோ பிடிச்சவ டி. காதலிச்சதை காதலிச்சவன் கிட்ட சொல்ற அளவுக்கு கூட உன் காதல்ல பொறுமையும் இல்லை. சகிப்புத் தன்மையும் இல்லை. அப்புறம் ஏன் டி என் உசுரை வாங்குற? பக்கமா அழுதழுது எழுதி வச்சிருந்தீயே, அதெல்லாம் வெறும் பொய் தானே! ச்சு போடி..” என்றவன் விரக்தியாய் அவளை உதறினான். இவள் மனதில் என்ன இருக்கிறது என அவனால் கண்டறியவே முடியாதென அந்த நொடி தோன்றியது.

அவனது பேச்சில் மலர்விழிக்கு சுருக்கென்றது. லேசாய் விழிகள் பனிக்க, “ஆமா... என்னால சொல்ல முடியாது. அப்பவும் முடியலை, இப்பவும் முடியலை. நான் ஈகோ பிடிச்சவதான்... போதுமா உங்களுக்கு, நானே ஒத்துக்கிட்டேன்!” எனத் தொண்டை அடைக்கக் கூறியவளின் நெஞ்சம் விம்மித் துடித்தது. விழிகளிலிருந்து சரசரவென நீர் அவளை அறியாமலே இறங்கியது.

‘என்னுடைய காதலைப் பற்றி குறை கூற இவனுக்கென்ன உரிமை இருக்கிறது?’ என மனம் குமிறியது. மறுபுறம் திரும்பி நின்றிவளுக்கு அன்றைய நினைவில் மீண்டும் அழுகைப் பொங்கியது. மெல்லிய உடல் அழுகையில் குலுங்க, தனஞ்செயன் சற்று நிதானித்தான்.

“விழி...” எனக் கையைப் பிடிக்க வந்தவனை உதறித் தள்ளியவள்,
“தொடாதீங்க! நான் தான் சாட்டிஸ்ட், க்ருயல் ஆச்சே. என்னை ஏன் தொட்றீங்க... என் காதல்தான் முக்கியம்னு பெத்த அம்மா, அப்பா, அண்ணனை தூக்கிப் போட முடியாத சுயநலவாதி நான்...” என்றவள் பொங்கிய அழுகையை உதட்டைக் கடித்து அடக்கினாள். மலர்விழியின் கண்களில் வழிந்த நீர் இவனை படுத்தித் தொலைத்தது.

“ஏன் டி...?” என்றவன் கண்ணை மூடித் திறந்து நிதானத்தைக் கையிலெடுத்தான்.

“ஏன் டி இப்படி பேசுற?” என்று கேட்டவனின் குரலும் கரகரத்துப் போயிருந்தது. இந்தப் பெண்ணின் அழுகை ஆடவனை நிலை குலையச் செய்தது.

விழிகளில் வழிந்த நீரைத் துடைத்து நிமிர்ந்தவள், “நான் ரொம்ப சுயநலவாதி. என்னால என் காதல் பெருசுன்னு என் அம்மா, அப்பாவை காலம் முழுக்க இழக்க விரும்பாத சுயநலவாதிதான். என் காதலுக்கு என்னால உண்மையா இருக்க முடியலை. என் சுயமரியாதை தடுத்துடுச்சு. காதலிச்சவன் கிட்ட கூட காதலை சொல்ல முடியாத துர்பாக்கியசாலி நான்!” என்றவளின் குரல் முழுவதும் வலியும் வேதனையும்தான் நிரம்பியிருந்தன.

அவளை வேதனையுடன் பார்த்த தனா, “என்னதான் டி உன் பிரச்சனை? ஏன் விழி நீயும் செத்து என்னையும் சாகடிக்கிற. டைரியைப் படிச்ச பத்து நாளா எவ்வளோ தவிச்சுப் போனேன்னு உனக்குத் தெரியுமா? ஏன் டி முன்னாடியே சொல்லலை...” என லேசான கோபத்துடன் வினவினான்.

விழிகளில் நீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “வெறும் பத்து நாள் உங்களால தாங்கிக்க முடியலை‌. ஆறு வருஷமா எனக்குள்ளே வச்சு செத்துட்டு இருந்தேன். இந்த தனா எனக்கு வேணாம் வேணாம்னு ஒவ்வொரு நாளும் ஜெபம் போல சொல்லி சொல்லியே உங்களை மட்டும்தான் நினைச்சுட்டு இருந்தேன். அவ்வளவு வலியும் வேதனையும் யார்கிட்டேயும் சொல்லி கூட அழ முடியலை! மறக்கவும் முடியலை... இப்போ மட்டும் இல்லை. எப்பவுமே உங்களை என்னால மறக்க முடியலை. இந்த தனா எனக்கு வேணாம்னா, யாருமே என் வாழ்க்கையில வேணாம்னுதான் நினைச்சேன்!” என்றவளின் பதிலில் தனஞ்செயன் லேசாய் அதிர்ந்துதான் போனான். கோபமாய் வந்தது இவள் மீது.

‘சுமித்ரா திருமணத்தன்று ஓடிப் போகாமல் இருந்திருந்தால், அட்சதை தூவி வாழ்த்திவிட்டு ஔவையாராய் சென்றிருப்பாளா இவள்?’ மனம் குமைந்தது.

“உன் காதலுக்காக என்ன டி செஞ்ச நீ?” என்று கோபத்துடன் கத்தினான் தனஞ்செயன்.

அந்த ஒரு கேள்வி இவளை உடைக்கப் போதுமானதாய் இருந்தது. அப்படியே அமர்ந்துவிட்டவளின் கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிந்தது. “என்ன செய்ய... ஹம்ம் என்ன செய்ய சொல்றீங்க? எதுவுமே செய்ய முடியாது. என் சூழ்நிலை அப்படி. பணம், அந்தஸ்து!” எனக் கூறி விரக்தியாகப் புன்னகைத்தவள், “இதெல்லாம் ஒரு காரணமான்னு நீங்க கேட்கலாம். ஆனால், அதான் காரணம். நீங்க சொல்லலாம், அது வெறும் தாள்னு. இருக்கவனுக்கு அது தாள், இல்லாதவனுக்கு அது பணம். இதான் இந்த சொசைட்டியோட கசப்பான உண்மை. உங்களுக்கு நான் எந்த வகையிலும் பொருத்தம் இல்லையே! எதை வச்சு உங்ககிட்ட வந்து நான் காதல்னு நிப்பேன்?” என்றவள் இத்தனை நாட்கள் மனதில் வைத்து அழுத்திக்கொண்டிருந்த காதலின் வலியையும் வேதனையும் அவனிடம் இறக்கி வைத்தாள்.

அவளை இயலாமையுடன் பார்த்தான் தனஞ்செயன். என்ன சொல்லி புரிய வைப்பது இந்தப் பெண்ணுக்கு என வேதனையுடன் உடையவளைப் பார்த்தான்.
“விழி, நீ காதலிச்சது இந்த தனஞ்செயனை தானே டி? என்கிட்ட இருக்க பணத்தையும் சொத்தையுமா? அப்படி இருக்கும்போது பணம் எப்படி நமக்குள்ளே வரும். முட்டாளா டி நீ” ஆற்றாமையுடன் இரைந்தான்.
அந்தக் கேள்வியில் அவனை நிமிர்ந்து முறைத்தாள் விழி.

“முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் அறிவே கிடையாது. பெரிய தியாகி பட்டம் வாங்கப் போறீங்களோ ரெண்டு பேரும்?” எனக் கெட்ட வார்த்தையில் திட்டியவனை தீப்பார்வை பார்த்தாள்.

“சரி, நான் இந்தப் பணம் சொத்து எல்லாத்தையும் இழந்துட்டு நடுரோட்ல நின்னா, என்னை நீ விட்டுட்டுப் போய்டுவீயா?” தனஞ்செயன் கேள்வியில் அருகில் எதாவது கிடைக்கிறதா என தேடினாள், அவன் மீது எறிந்து மண்டையை உடைக்கும் நோக்கில்.

“நான் இங்க பேசீட்டு இருக்கேன். அங்க என்ன டி தேட்ற?” தனா எரிச்சலாய் கேட்க, கையிலிருந்த குவளையை அவன் மீதெறிந்தாள்.

நொடியில் தன்னை சுதாரித்து விலகியவன், “ராங்கி... ராங்கி‌...” என்று அவளது கையை இழுத்து அணைத்துக் கொண்டான் தனா. அதை எதிர்பாராத மலர், “விடுங்க என்னை...” அவனிடமிருந்து துள்ளி விலகப் பார்த்தாள்.

“இனிமே உன்னை விடுற ஐடியா எதுவும் இல்லை டி!” என்றவன் அவளின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட, நொடியில் மலர்விழியின் கண்களிலிருந்து நீர் பொலபொலவென வடிந்தது.

அதில் எரிச்சலானவன், “ப்ம்ச்... இப்போ என்னடி உன்னைத் தொடக் கூடாது. அதானே?” என பட்டென அவளை உதறினான்.

நொடியில் தன்னை சுதாரித்தவள், “இன்னும் நமக்குள்ள எதுவும் மாறலை!” என்றாள் அழுது சிவந்திருந்த கோபமான விழிகளுடன்.

“என்ன மாறணும்னு எதிர்பார்க்குற நீ? ஆறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே தனஞ்செயன்தான் நான்!” இவன் குரலில் காரம் கூடியிருந்தது‌.

அவனை முறைத்தவள், “நமக்குள்ள இருக்க வேறுபாடு, பணம், அந்தஸ்து!” என்றவளை என்ன செய்தால் தகும் எனப் பார்த்திருந்தான் தனா.

“பேசாம எங்க வீட்டு சொத்தெல்லாம் அநாதை ஆஸ்ரமத்துக்கு எழுதி வச்சிடவா?” குரலில் எரிச்சல் மண்டி கிடந்தது.

“ஆமா, எழுதி வச்சிட்டு, ரோட்ல கூட நில்லுங்க. கூடவே ஒரு தட்டைக் கூட வச்சுக்கோங்க...” ரோஷமாய்க் கூறிய விழி அறைக்குள் நுழையப் போனாள்.

“எங்க டி போற. முதல்ல பிரச்னையை பேஸ் பண்ண பழகு. ஓடி ஒளியாத...” தனா கூறவும், திரும்பி அவனை உறுத்து விழித்தாள்.

“ஃபைனலா கேட்குறேன். இந்த தனா உனக்கு வேணுமா? வேணாமா?” அவன் சினத்துடன் கேட்க, கையைக் கட்டிக்கொண்டு நின்ற மலர் அவன் முகத்தைப் பாரக்கவில்லை‌.

“ப்ம்ச்... முதல்ல என் முகத்தைப் பாரு டி. சுவத்தைப் பார்த்துட்டு நிக்கிறா!” அவன் பொரிய, மீண்டும் இவளிடம் முறைப்புதான்.

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு டி. கோபத்துல அறைஞ்சுடப் போறேன்!” தனா கோபத்தில் பல்லைக் கடித்தான். என்னிடமிருந்து வார்த்தையை வாங்கிவிடுவாயா? என்ற வகையில் நின்றிருந்தாள் மலர்.

“அடிப்பீங்களா? ஓ... எங்க கையை வச்சுதான் பாருங்களேன்!” சூடாய் மலர் பேச, “ஏன், அடிக்க மாட்டேன்னு நினைக்கிறீயா?” அவளை நோக்கி நடந்தவன், தங்களுக்கு இடையே இருந்த இடைவெளியைக் குறைத்திருந்தான்.

‘என்னை அடித்து விடுவாயா நீ?’ என மலர்விழி கோபமாய் நின்றிருந்த இடத்தைவிட்டு அசையாது நிற்க, பட்டென அவளது இருபக்க கன்னத்தையும் ஒருகையில் அடக்கி அவள் உதட்டுடன் தன் உதட்டை அழுந்தப்பதித்திருந்தான் தனஞ்செயன்.

அவனது செயலை விழி சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. அடித்து விடுவானோ என எண்ணி திமிராக நின்றிருந்தவள் கணவன் செய்கையில் ஒரு நொடி திகைத்துத் தடுமாறி அவனிடமிருந்து விலகப் பார்க்க, தனஞ்செயன் விடுவதாய் இல்லை.

தன்னைப் பேசிய சாகடித்த உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான் கணவன். முதல் முத்தம் இருவருக்குமே. உள்ளங்கால் முதல் உச்சி வரை மின்னல் பாய்ந்ததை போல சிலிர்த்துப் போனவள், அவனை ஒரே தள்ளில் எட்ட நிறுத்தி இருந்தாள்.

“யூ... யூ...” என்ன சொல்வது எனத் தெரியாது தடுமாறி தயங்கி கோபமாய் நிற்பவளைப் பார்த்து இவனுக்கு மீசைக்கு கீழே சிரிப்பு முளைத்து தொலைத்தது‌.

“நீ... நீங்க... சிரிக்காதீங்க!” கையில் எதாவது கிடைக்குமா அவனை அடிக்க என மலர்விழி திரும்பி நின்று தேட, அவள் காதருகே குனிந்த தனா, “தைரியம் இருந்தா, பதிலுக்கு நான் அடிச்ச மாதிரி அடி டி...” என்றான் கிசுகிசுப்பான குரலில். பட்டென விழியின் வயிற்றில் ஏதோ ஒரு உணர்வு அவளை திகைக்கச் செய்தது. அப்படியே நின்றுவிட்டாள்.

அதில் தனஞ்செயன் இதழ்களில் இளம் புன்னகை பூத்தது. “ஹக்கும்... க்கும்...” கரகரத்தத் தொண்டையை சரிசெய்தவன் என்ன பேசப் போகிறானோ? என மலர்விழியின் இதயம் தாறுமாறாய்த் துடிக்க, திடீரென அழைப்புமணி ஒலிக்கும் சத்தம் கேட்டது.

இதுதான் சமயமென அவனிடமிருந்து விலகி ஓடிவிட்டாள் மலர்விழி. மாறன்தான் நின்றிருந்தான். வியர்த்து விறுவிறுத்து மூச்சு வாங்க நின்றிருந்தவன், மலர்விழி முகத்தைப் பார்த்தான்‌. கண்டிப்பாய்த் தேர்வு முடிந்தப் பிறகு தனா தங்கையை அடித்துவிடுவானோ? என எண்ணித்தான் ஓடி வந்திருந்தான். கீழே அவனின் மகிழுந்தை கண்டதும் தன் எண்ணம் உறுதிதான் என அடித்துப் பிடித்து மேலே வந்திருந்தான்.

கன்னங்களில் கண்ணீர் தடயங்களும் விழிகள் முழுவதும் சிவந்து நின்றவளைப் பார்த்து பதறிய மாறன், “மலர், என்னாச்சு?” எனக் கேட்டு அவள் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

மலர் அவனைக் கேள்வியாகப் பார்க்க, “என்னாச்சு மலர், ஏன் அழுதிருக்க. இவன் உன்னை அடிச்சானா?” எனத் தனாவைப் பார்த்து கோபமாய்க் கேட்டான்.

மலர்விழியும் அவனைப் பார்த்து முறைத்தவள், தமையனிடம் திரும்பி, “ஆமா மாறா. அடிச்சுட்டாரு!” என்றாள்.

தங்கையின் கையைவிட்ட மாறன் தனாவின் சட்டையைப் பிடித்திருந்தான். “டேய், அப்போவே நான் என்ன சொன்னேன் உன்கிட்ட. என் தங்கச்சி மேல கையை வைக்க கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?” ஆத்திரமாய் வினவ, அவனை முறைத்தான் தனஞ்செயன்.

‘சிவ பூஜைல கரடி மாதிரி வந்துட்டு, இவன் வேற!’ என மனதில் மாறனை அர்ச்சித்துவிட்டு, “ச்சு... போடா!” என அவன் கையைத் தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

“எவ்வளவு திமிரு இவனுக்கு. என் தங்கச்சியை கை நீட்டி அடிச்சிருக்கான்...” மாறன் பல்லைக் கடிக்க, “நீதானே இவனை எனக்கு கட்டி வச்ச. அப்போ நீதான் இந்த அநியாயத்தைக் கேட்கணும்!” முகத்தைக் கோணிய மலருக்கு இன்னுமே படபடப்பு அடங்கவில்லை. அவன் கொடுத்த முத்தம் பெண்ணின் சித்தத்தையே கலங்க வைத்திருந்தது.

“ஆமா, கேட்டா என்னையும் அடிப்பான் உன் புருஷன்!” மாறன் முணுமுணுக்க, இவள் காதில் தெளிவாய் விழுந்துவிட்டது.

“உன்னை அடிச்சாரா?” மாறனைப் பார்த்து மலர் அழுத்தமாய் வினவினாள். இத்தனை நேரமிருந்த இலகுத்தன்மை அவளிடமிருந்து விடைபெற்றிருந்தது.

“அது... அது...” மாறன் திக்க, மலர் அவனை தீயாய் முறைத்தாள்.

“நீயா என்ன நடந்ததுன்னு சொல்லிடு மாறா!” இவள் குரலின் டெசிபல் உயர்ந்தது.

“ப்ம்ச்... மலர், எனக்கும் தனாவுக்கும் ஆயிரம் இருக்கும்.
அவன் என் ஃப்ரெண்ட், நீ இடையில வராத!” என்றான் நெற்றியில் கையை வைத்து தேய்த்தவாறு. இந்தப் பெண்ணுக்கு தெரிந்தால் சண்டையிடுவாள் என்று தான் மறைத்து வைத்திருந்தான். ஆனால், மெல்லிய முணுமுணுப்பிலும் இவள் செவியில் நன்றாய் கேட்டுவிட்டது.

“மாறா, என்ன நடந்துச்சுன்னு நீ சொல்றீயா? இல்லை கேட்க வேண்டிய இடத்துல கேட்கவா?” என்றவள் கேள்வியில் அவள் சண்டைக்கு தயாராகிவிட்டாள் என உணர்ந்த மாறன், தங்களுக்கு இடையே நடந்ததை விவரித்திருந்தான்.

 
Well-known member
Messages
573
Reaction score
390
Points
63
இன்னா அடி 🤪🤪🤪🤪
 
Top