• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 16

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் - 16

அருள் சென்ற பின்பு சில நிமிடங்கள் தேவைப்பட்டது சாஹிக்கு அங்கு நடந்ததை கிரகித்துக் கொள்ள.


அவன் பேசியது செய்தது என ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தவளுக்கு இதழோரம் குறுநகை தோன்ற சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள்.

இன்னும் அவனது கை தன்னை சுற்றியிருப்பது போலவே உணர்ந்தவளின் கைகள் தன்னையறியாமலே அது உண்மையா என இருமுறை தனது இடையை சுற்றி ஆராய்ந்தது.


அவளுக்கும் அருளை பிடித்திருந்தது. அவன் பார்ப்பது முதலில் இருந்தே அவளுக்கும் தெரியும் ஆனாலும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

இப்போழுது அருளின் நேரடியான தாக்குதலை எதிர் கொள்ள இயலவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகே சுயநினைவு பெற்றவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

மீண்டும் அழைத்த வீரபாண்டி, "எத்தனை மணிக்கும்மா கிளம்புற. சொன்னா தான் உன்னை கூட்டி வர கார் அனுப்ப முடியும்" என்றிட சாஹி என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திணறினாள்.

"என்னம்மா, பதில் சொல்ல மாட்ற. கிளம்பீட்ட இல்ல" என மீண்டும் கேட்க,

"ம்ம்...ப்பா.. கிளம்பிட்டேன். நைட் வந்திடுவேன்" என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டாள்.


அவளுக்கு எவ்வாறு வீரபாண்டியிடம் கூறுவது என்ற தயக்கம் எழுந்தது. அருளை தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் வைத்து பார்க்க கூட மனம் ஒப்பவில்லை.


ஆனால் வெகு நாட்களுக்கு பிறகு மிகுந்த சிரமத்திற்கிடையிலே அவர் திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது அவளுக்கு நன்கு புரிந்தது.


இந்த ஏற்பாட்டிற்கு முன் அருள் தன்னிடம் பேசியிருந்தால் வீரபாண்டியிடம் தைரியமாக கூறியிருப்பாள். இப்பொழுது அவர் திருமணத்தை ஏற்பாடு செய்த பின் எவ்வாறு நிறுத்துவது என்று பல்வேறு எண்ணங்கள் அவளை போட்டு குழப்ப வேறு வழியின்றி அருளின் மொபைலுக்கு அழைக்க சுவிட்ச் ஆப் என்று வந்தது.

"இருக்கிறவங்களை எல்லாரையும் குழப்பி விட்டு போனை சுவிட்ச் பண்ணிட்டான்" என புலம்பியவள் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.


ஆனால் அவளது மனது முழுவதும் அருளையே சுற்ற சாஹி தான் தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

நேகாவிடம் பேசி சமாதானம் செய்தவன் சாஹியை சந்தித்திலிருந்து இன்று வரை நடந்ததை கூறி முடித்தான்.

"இருக்கட்டும் அவகிட்ட பேசிக்கிறேன். ஒரு வார்த்தையாவது வாயை திறந்து பேசினாளா?" என்று அவளை வசைப்பாட அருள் சிரித்துக் கொண்டிருந்தான்.

அருள் தன்னை தவிர்ப்பதற்காக பொய் கூறுவதாக நினைத்தவள் அவனது கதையை கேட்டு, "சரி, பொண்ணு சாஹி அப்படின்றதுனால உன்னை மன்னிச்சிட்டேன்" என்றவள் அவனுக்கு வாழ்த்து கூறி பழைய படி பேச ஆரம்பித்து விட்டாள்.



வீட்டிற்கு வந்த சாஹிக்கு இருப்பு கொள்ள முடியவில்லை. திருமணத்திற்காக எல்லா ஏற்பாடும் சுறுசுறுப்பாக நடை பெற்று கொண்டிருக்க அவளுக்கு தான் மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது.


அருள் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் சமர்ப்பிக்கும் வேலையின் காரணமாக இரவு பகலாக வேலை பார்த்துக் கொண்டிருக்க அவனும் சாஹியை தொடர்பு கொள்ளவில்லை. அவளது அழைப்பையும் ஏற்கும் நிலையிலும் இல்லை.

வீரபாண்டி சிவகாமி முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்த சாஹிக்கு தான் அருளை விரும்பும் விஷயத்தை கூற மனம் வரவில்லை. பலமுறை முயன்றும் தோற்று விட்டவளுக்கு ஆயாசமாக இருந்தது.

அவனிடம் பேசினாளாவது ஏதாவது ஆதரவு கிடைக்கும் என நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


அவளது முகம் பதற்றமாகவே இருக்க அதை கவனித்த காமாட்சி, "என்ன சாஹிம்மா, முகம் ஒரு மாதிரியா இருக்கு. ஏதாவது செய்யுதா? நீ பயப்படாத, இந்த தடவை பங்கஜத்தால எதுவுமே செய்ய முடியாது. கண்டிப்பா கல்யாணம் நடக்கும். அப்பா அதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணீட்டார். மாப்பிள்ளை வீட்டுகாரங்க ரொம்ப உறுதியா இருக்காங்க. பையனுக்கு உன் போட்டோவை பார்த்து ரொம்ப பிடிச்சுருச்சு. என்ன நடந்தாலும் இந்த கல்யாணம் நடக்கும்னு அப்பாகிட்ட வாக்கு கொடுத்திருக்கார்" என்று கூற சாஹிக்கு இப்போது பயத்தில் அதிகமாக வேர்க்க ஆரம்பித்தது.



பங்கஜத்தின் மூலமாக திருமணம் நிற்கும் என நினைத்திருந்தவளுக்கு இந்த செய்தி பெரும் ஏமாற்றமாக இருக்க ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.



இரண்டு நாட்களில் திருமணம் உறுதியாக நடந்து விடும் என்ற நிலையில் இருக்க அன்று இரவு எல்லோரும் உறங்கியவுடன் கிளம்பி விட்டாள் பெங்களூரை நோக்கி.

நிறைய சிந்தித்த பிறகு வேறு வழியே இன்றி இந்த முடிவை எடுத்தாள். இப்பொழுது அவளது நினைவில் இருந்தது அருள் மட்டுமே.


அவனை இழந்து விடக் கூடாது என்று மனது தவிக்க மற்றவை எல்லாம் அவளுக்கு இரண்டாம் பட்சமாகி போனது.


இரவே மொபைல் மூலம் ஃப்ளைட் டிக்கெட் பதிவு செய்தவள் பல வித சிரமங்களுக்கு மத்தியில் வெகு கடினபட்டே விமானம் ஏறினாள்.


அருள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க காலிங்பெல் ஒலித்தது.

'இவ்ளோ காலையில யார் வந்திருப்பா?' என்று நினைத்தவன் சிரமபட்டே கண்களை திறந்து எழுந்து சென்றான்.

ஒரு வாரமாக சரியாக உறங்காததால் அவன் கண்கள் முழுதும் நன்றாக சிவந்து இருந்தது. அதிகாலை மூன்று மணியளவில் தான் உறங்க ஆரம்பித்தான்.

கதவை திறக்க அங்கு சாஹி நின்று கொண்டிருந்தாள்.

கண்களை கசக்கியவன் மீண்டும் நன்றாக பார்க்க அவளே தான்.

வேர்க்க விறுவிறுக்க முகத்தில் பயத்துடன் நின்று கொண்டிருந்தாள். எப்பொழுதுமே அவளை அவ்வாறு அவன் கண்டதில்லை.

"சாஹி, நீ எப்படி இங்க?" எனக் கேட்க அவனை தள்ளி விட்டு உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள்.

கதவை மூடி விட்டு அவளருகில் அமர்ந்தவன், "என்னடி ஆச்சு? நீ எப்படி இங்க வந்த?" என்றிட முகத்தை மூடி அழுக ஆரம்பித்தாள்.

ஒரு நிமிடம் பதறியவன், "சாஹி" என அவளை நெருங்கி அமர்ந்து முகத்தை நிமிர்த்த அவனது கைகளை தள்ளி விட்டு தன் கையில் முகத்தை ஆழ புதைத்தவளுக்கு கண்ணீர் அதிகமாகியது.


அவனுக்கு என்ன செய்வதென்று ஒரு நிமிடம் புரியவில்லை. அதிகாலையில் வந்திருக்கிறாள். அதுவும் என்னவென்று கேட்டாள் அழுது கொண்டிருக்கிறாள்.

மூச்சை இழுத்து தன்னை சமன் செய்தவன், "என்ன பிரச்சனைனு சொல்லு டி, பயமா இருக்கு. நீ இப்படி அழுகுற ஆள் இல்லையே" என்று அதட்டி அவளது முகத்தை வலுகட்டாயமாக தன்னை நோக்கி நிமிர்த்த கண்களை துடைத்தவள்,

"என்னோட பிரச்சனை நீங்க தான். என்னை கொஞ்சம் இல்லை ரொம்பவே டிஸ்டர்ப் பண்றீங்க" என்றாள்.

"புரியுற மாதிரி பேச மாட்டீயா டி."


"எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. பட் எங்க வீட்டில் நாளைக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணீட்டாங்க. எனக்கு என்ன பண்றதுனே தெரியலை. அதான் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாம கிளம்பி வந்துட்டேன்" என்றாள் கண்ணீரை உள் இழுத்துக் கொண்டு.

"ஏய் ஏன்டி இப்படி பண்ண?" என்று சற்று கோபம் கலந்த குரலில் கேட்க,


"அப்புறம் என்ன பண்ண சொல்றீங்க? உங்களுக்கு எத்தனை தடவை போன் பண்றது. எனக்கு அங்க இருக்கவே மூச்சு முட்டற மாதிரி இருந்துச்சு. எங்கப்பாகிட்ட சொல்ற அளவுக்கு தைரியம் வரலை. அவர் முகத்தை பார்த்தாலே வார்த்தை வர மாட்டுது" என்றவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

"அதுக்கு இப்படி பண்ணுவியா? இப்ப உன்னை காணோம்னு பதற போறாங்க."

"எல்லாம் உங்களால தான். நல்லா இருந்த என்னை லவ் பண்றேன்னு குழப்பி விட்டு ஜாலியா இங்க வந்து தூக்கிட்டு இருக்கீங்க. அங்க இருக்க ஒவ்வொரு நிமிஷமும் நான் கொஞ்சம் கொஞ்சமா துடிச்சிட்டு இருந்தேன். என்னோட கஷ்டம் உங்களுக்கு எங்க தெரிய போகுது" என்று புலம்ப,

"ஏன்டி என்னை பார்த்தா ஜாலியா இருக்க மாதிரியா தெரியுது. ஒரு வாரமாக ப்ராஜெக்ட் சம்மிட் பண்ற வேலை பார்த்திட்டு இருந்தேன். அதான் போனை கூட எடுக்கலை" என்று கூற அருகிலிருந்த அவனது மொபைலை வேகமாக தூக்கி சுவற்றில் எறிந்தாள்.

"ஹேய் என்னடி பைத்தியம் மாதிரி பண்ற? இப்ப எதுக்கு அதை தூக்கி போட்ட" என்று கேட்டவன் தன் நெற்றியை நீவ,

எழுந்து அவனது சட்டையின் காலரை பிடித்தவள், "என்னை விட உனக்கு ப்ராஜெக்ட் முக்கியமா? ஒரு தடவை போன் பேசுறதுக்குள்ள நீ வேலை பார்த்து கிழிச்சுடுவ பார். என்னோட கால்லை அட்டென்ட் பண்ணாத உனக்கு எதுக்கு டா போன்?" என்று கோபத்தில் மூக்கு சிவக்க பேசியவளை பார்த்து அவனுக்கு சிரிப்பே தோன்றியது.

அவன் சிரிப்பதை பார்த்து மேலும் கடுப்பானவள் அருகிலிருந்த ஒவ்வொரு பொருட்களாக அவன் மீது எறிந்து,

"சிரிக்காதடா, கடுப்பாகுது. நான் டென்ஷனா பேசினா உனக்கு சிரிப்பு வருதா? நொந்து நூடூல்ஸ் ஆகிட்டேன் யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு வரதுக்குள்ள" என்று கூறி அவனை தாக்கிக் கொண்டிருக்க,

கவனமாக அவளது தாக்குதலில் இருந்து தப்பித்து அவளை நெருங்கியவன் அவளது கையை பிடித்துக் கொண்டான்.

பல்லை கடித்தவள், "கையை விடு டா" எனக் கத்த வேகமாக பின்புறமிருந்து அவளை அணைத்தவன் வாயை இரு கைகளாலும் மூடி,

"பிசாசே, காலையில நீ இப்படி கத்துனா அக்கம் பக்கத்தில் இருக்கவங்க என்ன நினைப்பாங்க" என்று கூறிக் கொண்டிருக்க வேகமாக அவனது கையை கடித்து விட்டாள்.

வலி பொறுக்க முடியாமல் துள்ளி விலகியவன் கையை உதற,

"கிட்ட வந்த கொன்னுடுவேன்" என விரல் நீட்டி எச்சரித்தவள் சோபாவில் அசந்து அமர்ந்து விட அவனும் அவளருகில் சற்று இடைவெளி‌ விட்டு அமர்ந்தான்.

அருள் அவளையே பார்த்துக் கொண்டிருக்க கண் மூடி சாய்ந்து கொண்டாள்.

ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அருளின் மீதிருந்த காதலில் வீட்டை விட்டு வந்து விட்டாள். காலையில் அவளை காணாமல் தேடுவார்கள், வீரபாண்டியையும் தன் அண்ணன்களையும் நினைக்க அவள் உடல் அச்சத்தில் நடுங்குவதை அவளால் தவிர்க்க இயலவில்லை.


நம் மனது எப்போதும் இரண்டும் கெட்டான் தான். அங்கிருந்த வரை அருளையே நினைத்தவள் இங்கு வந்த பின் வீட்டை நினைக்க ஆரம்பித்தாள். இது தானே மனித மனதின் இயல்பே!


சிறிது நேரத்திற்கு பிறகு அருள், "சாஹி" என குரல் கொடுத்த பின்பே கண்களை திறந்தாள்.

அவள் முன் காபி கப்பை வைத்தவன், "ரொம்ப டயர்டா இருக்க. போய் ப்ரெஷாகிட்டு வந்து காபி குடி" என்று கூற எழுந்து குளியலறை‌ புகுந்து முகத்தை நன்கு குளிர்ந்த நீரில் கழுவினாள்.

அவளும் இரவு முழுவதும் துங்காததன் விளைவாக கண்கள் நன்றாக சிவந்து இருந்தது.

சில நிமிடங்களில் வெளியே வர அவளுக்காக கையில் துண்டுடன் காத்திருந்தவன் அவளை கண்டவுடன் நெருங்கி நின்று முகத்தை துடைத்து விட அவனது கைகளை பற்றியவள்,

"நானே துடைச்சிக்கிறேன், டவலை கொடுங்க" என்று கூற சிரித்தவன்,


"ப்யூசர்ல நான் தானா பண்ண போறேன்" என்று கூற அவனை முறைத்தவள்,


"இந்த பேச்சுக்கு ஒன்னும் குறையில்லை, ஆனா போன் பண்ணா மட்டும் எடுக்கிறது இல்லை" என்றவள் அவனிடமிருந்து துண்டை பிடுங்கி கொண்டு நகர்ந்து விட சிரித்துக் கொண்டே அவள் பின் சென்றான்.


காபியை குடித்து முடித்தவள் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க அருள் எதிரில் அமர்ந்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் பொறுத்து பார்த்தவள், "என் முகத்தில் ஏதாவது தெரியுதா..? இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டில என்னை காணானோம்னு தேட ஆரம்பிச்சுடு வாங்க" என்று கூற,

"ஏய், அதுக்கு நான் என்னடி பண்ண முடியும்.‌"

"உனக்காக நான் கிளம்பி வந்தேன்ல்ல இதுவும் பேசுவ, இதுக்கு மேலயும் பேசுவ" என்று கோபமாக கூறியவள் எழுந்து கதவை திறந்து வெளியே செல்ல,

வேகமாக பின்னாலே சென்றவன், "ஏய் எங்க டி போற?" என்றான் அவளின் கைகளை பிடித்து நிறுத்தி.

அவனது கைகளை உதறியவள் வேகமாக நடக்க பின்னாலே ஓடியவன், "சாஹி, உள்ள வா. எல்லாரும் பார்க்கிறாங்க" என தங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு சிலரை கவனித்து கூற,

கண்ணீரை துடைத்தவள், "நான் எதுக்கு வரனும். நான் என்ன பண்ணா எப்படி போனா உங்களுக்கு என்ன? போய் உங்க ப்ராஜெக்ட் பார்ங்க. இல்லை போய் கதவை பூட்டி தூங்குங்க" என்று கூற அவளை முறைத்தவன் அவள் கைகளை இறுக்கமாக பிடித்து இழுத்து வீட்டிற்குள் நுழைந்து கதவை தாழிட அவனது கையை உதறி விட்டு மீண்டும் சோபாவில் அமர்ந்தாள்.


அவளருகில் அமர்ந்தவன், "என்ன செய்யனும்னு சொல்லு டி. வா இப்பவே உங்கப்பா கிட்ட போய் பேசலாமா? நான் ரெடி தான்" என்று கூற அவனது மார்பில் சாய்ந்து அழுக ஆரம்பித்தாள்.

சில நிமிடம் அமைதியாக இருந்தவன் அவளது முகத்தை நிமிர்த்தி, "அழுதுட்டே இருந்தா என்ன பண்றது. சரி நீ வந்துட்ட. தெரிஞ்சோ தெரியாமலே இதுக்கு நானும் பொறுப்பு தான். வா ஊர்க்கு போய் எல்லார் முன்னாடியும் பேசிக்கலாம். நான் ரெடியாகி வரேன்" என எழுந்து கொள்ள அவனது கையை பற்றி இழுத்தவள்,


"கல்யாணம் பண்ணீட்டு போகலாமா? எனக்கு எங்கத்தைய நினைச்சா பயமா இருக்கு. அவங்க கண்டிப்பா யார்க்குமே என்னை கல்யாணம் பண்ணி கொடுக்க விட மாட்டாங்க" என்றாள்.


அவளருகில் அமர்ந்தவன், "வேண்டாண்டி, கண்டிப்பா அந்த தப்பை மட்டும் நான் செய்ய மாட்டேன். எங்கக்கா பண்ணப்பவே அம்மா எல்லார் முன்னாடியும் தலை குனிஞ்சு நின்டுடாங்க. நம்ம அந்த மாதிரி பண்ண இரண்டு பேர் வீட்டுக்குமே அசிங்கம் தான். நாங்க கேட்ட வார்த்தையெல்லாம் கண்டிப்பா உங்கப்பாவும் கேட்க கூடாது. அதுவும் என்னால நடக்கவே கூடாது. வா வீட்டில போய் பேசலாம். கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க. என்னை மீறி உங்கத்தை எதுவும் பண்ண முடியாது" என்று கூறியவன் வேகமாக சென்று உடை மாற்றி வந்து அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.


சாஹிக்கு காபி கொடுப்பதற்காக உள்ளே நுழைந்த சிவகாமி அவளை காணாது பதறி வீரபாண்டியிடம் விஷயத்தை கூற வீடு முழுவதும் தேடியவர் காமாட்சி வீட்டில் தேட என விஷயம் பரவ ஆரம்பிக்க எழிலும் அவனது அண்ணன்களும் பங்கஜம் வீட்டை படையெடுத்து விட்டனர்.


கல்யாணம் நல்ல படியாக முடிய வேண்டும் என்பதற்காக சிவராமை தனது அரசியல் பலத்தின் மூலம் தற்காலிகமாக சிறையில் அடைந்திருந்தார் வீரபாண்டி.


பங்கஜம், "தனக்கு தெரியாது" என உறுதியாக மறுத்து விட,

"நீங்க மட்டும் அவ காணாம போனதுக்கு காரணமா இருந்தா சும்மாவே விட மாட்டோம்" என எச்சரித்து விட்டே கிளம்பியவர்கள் ஊர் முழுவதும் தேட ஆரம்பித்தனர்.





தொடரும்...
 
Well-known member
Messages
572
Reaction score
416
Points
63
Achacho Enna nadakka pogutho
Shaahi enna ipdi pannitta
 
Top